Wednesday, November 16, 2016

திருக்குறள் - உடுப்பதும் உண்பதும் இன்றி கெடும்

திருக்குறள் - உடுப்பதும் உண்பதும் இன்றி கெடும் 


சிலர் யாருக்குமே உதவி செய்ய மாட்டார்கள். அது கூட பரவாயில்லை, மற்றவர்கள் உதவி செய்தாலும், உதவி பெறுபவர்களை கண்டு பொறாமை படுவார்கள். அந்த உதவியை தடுக்க நினைப்பார்கள். மற்றவர்களின் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத தன்மையை அழுக்காறு என்பார்கள்.

அப்படி ஒருவன் மற்றவனுக்கு செய்யும் உதவியை கண்டு பொறுக்க மாட்டாதவன் சுற்றத்தார் உண்ண உணவும், உடுக்க உடையும் இல்லாமல் கெட்டுப் போவார்கள் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் 
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

பொருள்

கொடுப்பது = ஒருவன் மற்றவருக்கு கொடுக்கும் உதைவியை

அழுக்கறுப்பான் = பொறுத்துக் கொள்ள மாட்டாதவன்; அல்லது அதை தடுக்க நினைப்பவன்

சுற்றம் = அவனது சுற்றத்தார்

 உடுப்பதூஉம் = உடுக்க உடையும்

உண்பதூஉம் = உண்பதற்கு உணவும்

இன்றிக் கெடும் = இல்லாமல் கெட்டுப்  போவார்கள் , அல்லது துன்பப் படுவார்கள்.

எளிமையான குறள் தான். இருந்தாலும் மிகுந்த ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டது.

முதலாவது, கொடுப்பது கண்டு பொறாமை படுவது என்பது மிக மிக கேவலமான செயல். அப்படி பொறாமை படுபவன் ரொம்ப துன்பப் படுவான் என்று சொல்ல வந்தார் வள்ளுவர்.

துன்பத்தில் பெரிய துன்பம் எது ? பசிக்கு உணவு இல்லாததும், மானத்தை காக்க உடை இல்லாததும் தான். உணவு இல்லாமல் கூட சில நாட்கள் இருந்து விடலாம். உடை இல்லாமால் இருக்க முடியுமா ? உடையும் உணவும் இல்லாவிட்டால் எவ்வளவு துன்பமாக இருக்கும். அவ்வளவு துன்பப் படுவான் என்று சொல்ல வந்தார்.

சரி, பொறாமை படுபவன் துன்பப் பட்டால் சரி. எதற்காக அவன் சுற்றத்தார் உணவும் உடையும்  இன்றி துன்பப் பட வேண்டும் ?

இரண்டாவது,  ஒருவன் துன்பத்தில் இருக்கிறான் என்றால், உதவி என்று தன் சுற்றத்தாரிடம் போவான்.  அவர்களே உணவும் உடையும் இல்லாமல் இருந்தால், இவன் எங்கே போவான். சுற்றம் கெடும் என்றால், இவனும் கெடுவான் என்பது சொல்லாமல் சொன்னது. மேலும், தான் கெட்டு , சுற்றமும் கெட்டால் , உதவிக்கு கூட யாரும் இல்லாமல் தனித்துப் போவான் என்பது பொருள்.

சிந்தித்துப் பாருங்கள். துன்பம் யாருக்கும் வரும். அப்படி துன்பம் வந்த காலத்து, அதில் இருந்து விடுபட மற்றவர்களின் உதவி வேண்டும். உதவி செய்யவும்  யாரும் இல்லை என்றால் அது எவ்வளவு பெரிய துன்பம் ?


மூன்றாவது, சுற்றம் என்றால் ஏதோ தூரத்து சொந்தம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. தூரத்து  சொந்தக் காரன் எப்படி போனால் நமக்கு என்ன என்று பல பேர் நினைப்பார்கள். சுற்றம் என்றால் பெற்றோர், உடன் பிறந்தோர், மனைவி, மக்கள் என்று  நெருங்கிய சொந்தம்.  பெற்ற பிள்ளை சாப்பாட்டுக்கும் , துணி மணிக்கும்  வழி இல்லாமல் தவிக்கிறான் அல்லது தவிக்கிறாள்  என்று கேட்டால் அந்த பெற்றோரின் மனம்  எவ்வளவு துன்பப் படும்.  அது மட்டும் அல்ல  பிள்ளைக்கு உதவி செய்யக் கூட முடியவில்லை என்றால் அது இன்னும் எவ்வளவு துன்பம்.


நான்காவது, அப்படி நம்முடைய பிள்ளைகளோ, பெற்றோரோ, உடன் பிறப்புகளோ உணவும் உடையும் இன்றி தவிக்க நாமே காரணம் என்று இருந்தால் அந்த நினைப்பு எவ்வளவு துன்பத்தைத் தரும். நம் பிள்ளைகளின் துன்பத்திற்கு நாமே காரணமாகி விட்டோமே என்று நினைத்தால் ஒரு பெற்றோர் எவ்வளவு  வருந்துவார்கள்.

இவ்வளவு பெரிய துன்பம் தேவையா ? மற்றவர்கள் செய்யும் உதவியைக் கண்டு  பொறாமை கொண்டால் இப்படிப் பட்ட துன்பங்கள் நிகழும் என்கிறார் வள்ளுவர்.

ஐந்தாவது, உணவும் உடையும் இல்லை என்றால் மற்றவைகள் இருக்குமா ? வீடு, நிலைக்கு, நகை, வண்டி , வாகனம் என்று எல்லாம் இருக்குமா ? ஒன்றும் இருக்காது அல்லவா ? எல்லாம் இழந்து நடுத் தெருவில் நிற்க வேண்டும். ஆனால், தெருவில் நின்று பிச்சை கூட கேட்க முடியாது காரணம், உடை இல்லை.  உடை இல்லாமல், தெருவில் சென்று பிச்சை கேட்பது எவ்வளவு அவமானம்.

ஆறாவது, துன்பத்தில் இருக்கும் சுற்றத்தார், "இவன் கொண்ட பொறாமையினால் தான், நமக்கு இந்த துன்பம் வந்தது " என்று எண்ணி இவனை வெறுத்து ஒதுக்குவார்கள். ஒண்ட இடம் இன்றி, உடுத்த உடை இன்றி, உண்ண உணவு இன்றி ....எவ்வளவு துன்பம் பாருங்கள்.

ஏழாவது, சரி இவ்வளவுதானா ? தானும், சுற்றமும் உணவும் உடையும் இல்லாமல்  போவோம் அவ்வளவுதானா என்றால் இல்லை. அதற்கு மேலும் சொல்கிறார்  "கெடும்" என்று. இதற்கு மேல் கெடுவதற்கு என்ன இருக்கிறது  ?

இருக்கிறது.

உணவும் உடையும் இல்லாத ஒருவன், தன் பிள்ளைகள் உணவும் உடையும் இல்லாமல் தவிப்பதை பார்க்கும்  ஒருவன் எப்படியாவது அவர்களுக்கு உணவும் உடையும்  பெற்றுத் தர வேண்டும் என்று ஏதாவது தவறான வழியில் முயல்வான். திருடுவான், மற்ற குறுக்கு வழியில் செல்ல நினைப்பான். அதனால் மேலும் பழி  வந்து சேரும்.  சிறைக்குப் போவான். குடும்பத்தை அனாதையாக விட்டு விட்டு சிறை செல்ல நேரிடும்.

மீண்டும் தலை எடுக்கவே முடியாத அளவு  தீராத துன்பத்தில் கிடந்து கெடுவான் என்ற பொருள் பட "கெடும்" என்றார் .

எவ்வளவு கோபமும், வெறுப்பும் இருந்தால் வள்ளுவர் இப்படி ஒரு குறளை எழுதி இருப்பார் ?

கொடுப்பதைக் கண்டு அழுக்காறு கொள்ளக் கூடாது என்பதை இதை விட அழுத்தமாக சொல்ல முடியாது.

சரி, யாரோ யாருக்கோ கொடுத்து விட்டுப் போகிறார்கள். நாம் ஏன் அதை தடுக்கப் போகிறோம். அப்படி எல்லாம் யாரும் செய்வார்களா என்று கேட்டால், சில உதாரணங்கள் காட்டலாம்.

உணவு விடுதியில் , உணவு சாப்பிட்டபின் பில் வரும். நண்பர் , அந்த பில்லோடு சேர்த்து கொஞ்சம் டிப்ஸ் வைப்பார். "எதுக்கு எவ்வளவு டிப்ஸ், கொஞ்சம் குறைத்து வை. இல்லைனா எல்லோரிடமும் இப்படியே எதிர் பார்ப்பார்கள் " என்று நண்பன் கொடுப்பதை குறைப்பவன் , இந்த பட்டியலில் வருவான்.

அலுவலகத்தில், ஒருவனுக்கு பதவி உயர்வோ, அல்லது சம்பள உயர்வோ கொடுக்கும் முன், அவனுடைய மேலதிகாரி நம்மிடம் அபிப்பிராயம் கேட்கலாம். "அவனுக்கா, இப்ப எதுக்கு, அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் " அவனுக்கு வரும் நன்மையை தடுப்பவன் இந்த பட்டியலில் வருவான்.

வீட்டில் மனைவியோ கணவனோ , ஒரு அனாதை ஆசிரமத்துக்கோ அல்லது வேறு ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்துக்கோ நன்கொடை அளிக்கும் போது , எதுக்கு இவ்வளவு நன்கொடை என்று தடுப்பவன் இந்த பட்டியலில் வருவான்.

இப்படி நடை முறையில் எவ்வளவோ விதங்களில் நாம் பிறருக்கு வரும் நன்மைகளை  தடுத்து விடுகிறோம்.

அது தவறு.

கொடுப்பவர்களை வாழ்த்துவோம்.

பெறுபவர்களை , இன்னும் சிறந்து வரட்டும் என்று வாழ்த்துவோம்.



1 comment:

  1. வள்ளுவர் மனதில் இவ்வளவு எண்ணங்கள் இருந்ததோ இல்லையோ ,நீங்கள் பட்டியலிட்டு பயமுறுத்தி விட்டீர்கள்.பொறாமை, அதனால் வரும் கெட்ட எண்ணங்கள் எவ்வளவு கீழ்த்தரமானது என்பதை அழகாக காட்டி இருக்கிறீர்கள் கடைசியில் சொன்ன சில உதாரணங்கள் எனக்கு முன்னெச்சரிக்கையாக அமையும் என நம்புகிறேன்.

    ReplyDelete