Saturday, August 15, 2020

திருக்குறள் - காலத்தினால் செய்த நன்றி

திருக்குறள் - காலத்தினால் செய்த நன்றி 


ஒருவர் நமக்கு உதவி செய்கிறார். அந்த உதவி எவ்வளவு பெரியது என்று நாம் கொள்வது? உதவியை பணத்தின் மதிப்பு கொண்டு அளக்க முடியுமா? அவர் செய்த உதவி ஒரு பத்தாயிரம் ரூபாய் மதிப்பு பெறும் என்று அளந்து சொல்லலாமா? உலகத்தில் எதைத்தான் அளக்க முடியாது? எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படை அளவுகோல் பணம் என்று ஆகி விட்டபடியால், உதவியை பண மதிப்பீடு செய்ய முடியுமா?

முடியாது என்கிறார் வள்ளுவர்.

முதலில் குறளைப் பார்ப்போம்.

பாடல்

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது


பொருள்

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_15.html

காலத்தி னால் = சரியான காலத்தில்

செய்த நன்றி = செய்த நன்றி

சிறிதுஎனினும் = சிறிது என்றாலும்

ஞாலத்தின் = உலகில்

மாணப் பெரிது = மிகவும் பெரியது

சரி, அது என்ன காலத்தினால் செய்த உதவி?

அதற்கு பரிமேல் அழகர் உரை எழுதுகிறார் எப்படி என்றால்

"ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண்"

அதாவது,  இனி முடியாது. எல்லா இடத்திலும் முயற்சி செய்து பார்த்தாகி விட்டது.  என்று ஒரு கடைசி கட்டத்திற்கு வந்த பின், அங்கு ஒருவன் நமக்குச் செய்த உதவி, இந்த உலகை விட மிகப் பெரியது என்கிறார்.

அப்படி என்ன பெரிய உதவி இருக்க முடியும்?

யோசித்துப் பார்ப்போம்.

நமக்கோ , நம் நெருங்கிய உறவுக்கோ ஒரு அவசர சிகிச்சைக்காக  இரண்டு பாட்டில்  இரத்தம் தேவைப் படுகிறது. அந்த இரத்தம் இருந்தால் தான் பிழைக்க முடியும்  என்ற நிலை.

சாதாரணமாக ஒரு பாட்டில் இரத்தம் ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கலாம்.  இந்த நேரத்தில், ஒருவர் நமக்கு அந்த இரத்தத்தை தந்து உயிர் காப்பார் என்றால், அந்த இரத்தத்துக்கு என்ன விலை போட முடியும்?  சிகிச்சை முடிந்து நல்லபடியாக திரும்பி வந்த பின், "அது என்ன பெரிய உதவி. ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இரண்டு பாட்டில் இரத்தம் கிடைத்து விடும்" என்று சொல்வது முறையா?


பெண்ணுக்கு நிச்சயம் பண்ணி ஆகிவிட்டது.  திருமண நாளும் வந்து விட்டது.  கையில் கொஞ்சம் காசு தட்டுப் பாடு. அவசரமாக பணம் வேண்டும்.  தொகை பெரிது இல்லை என்றாலும் அந்த நேரத்தில் வேண்டும். இல்லை என்றால்  எல்லோர் முன்னாலும் அவமானப் பட நேரிடும்.

அந்த நேரத்தில் பணம் கொடுத்து நம் மானம் காப்பாற்றிய உதவியை அந்த பணத்தின் அளவு கொண்டு  நிர்ணயம் பண்ணக் கூடாது. அதன் மதிப்பே தனி.

கொடுத்தவர் பெரிய கோடீஸ்வரராக இருக்கலாம். அந்தப் பணம் அவருக்கு ஒரு பெரிய  விஷயமாக இல்லாமல் இருக்கலாம்.  ஆனால், அது நமக்கு பெரியது. எனவே, அந்த  உதவி, உலகை விடப் பெரியது என்கிறார்.

இப்படி ஆயிரம் உதாரணம் நம்மால் சிந்திக்க முடியும்.

உதவி என்பது பெறுபவனை பற்றி அல்ல, கொடுப்பவனைப் பற்றி அல்ல, கொடுத்த  உதவியின் தன்மை பற்றி அல்ல, எந்த நேரத்தில் கொடுக்கப்பட்டது  என்பது தான் முக்கியம்.

ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தரப்பட்ட உதவி இந்த உலகை விட பெரியது என்கிறார்.

முந்தைய குறளில்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

கேட்காமல் செய்த உதவி இந்த உலகம் மற்றும் வானத்தை விடப் பெரியது என்றார்.

கேட்காமல் செய்த உதவி

காலத்தில் செய்த உதவி.

இந்தக் குறளில் பரிமேல் அழகர் ஒரு இலக்கணப்  பிழையை சுட்டிக் காட்டுகிறார்.

அது என்ன?

1 comment: