Friday, January 31, 2025

திருக்குறள் - வாய்மை

 திருக்குறள் - வாய்மை 


வாய்மை என்றால் உண்மை. 


உண்மை என்றால் உண்மையைக் கூறுவது அல்ல. உண்மையின் தன்மை பற்றிக் கூறுவது. 


குழப்பமாக இருக்கிறதா?


இரண்டும் இரண்டும் நாலு என்பது உண்மை. 


தீ சுடும் என்பது உண்மை. 


இங்கே உண்மைகளைப் பற்றிக் கூறவில்லை. 


உண்மையின் தன்மை பற்றிக் கூறுகிறார். உண்மை என்றால் என்ன. எந்த மாதிரியான சொல்லும், செயலும் வாய்மையின் பாற்படும் என்பது பற்றி கூற இருக்கிறார். 


மக்கள் ஏன் உண்மை சொல்லுவது இல்லை? ஏன் பொய் சொல்கிறார்கள்?


பெரும்பாலும் இரண்டு காரணங்கள் பற்றி வாய்மை தவிர்க்கப் படுகிறது. 


ஒன்று காமம். இரண்டாவது பொருள் பற்றியது. 


பொருள் சேகரிக்க, பொருளை பாதுகாக்க, பொருளை அனுபவிக்க என்று பல சமயங்களில் பொய் சொல்ல வேண்டி வருகிறது. காமமும் அப்படித்தான். 


எனவே, வள்ளுவர் "கூடா ஒழுக்கம் (காமம்), கள்ளாமை (பொருளை கவர்ந்து கொள்ளுதல்)" என்ற இரண்டு அதிகாரத்தின் பின், வாய்மை என்ற அதிகாரத்தை வைத்து இருக்கிறார். 


வாய்மை என்றால் என்ன என்று நம்மிடம் கேட்டால் என்ன சொல்லுவோம்?


உள்ளதை உள்ளபடி மறைக்காமல் சொல்லுவது வாய்மை என்று சொல்லுவோம். 


வள்ளுவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 


வாய்மைக்கு அவர் ஒரு புது விளக்கம் தருகிறார். 


வாய்மை என்றால் என்ன என்று கேட்டால், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாத சொற்களே வாய்மை என்கிறார். 


பாடல் 


வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.


பொருள் 


வாய்மை  = உண்மை 


எனப்படுவது = என்று சொல்லப்படுவது 


யாதெனின் = எது என்றால் கேட்டால் 


யாதொன்றும் = எந்த ஒரு 


தீமை = தீமையும் 


இலாத சொலல் = இல்லாத சொற்கள்



மூன்று விடயங்களை நாம் கவனிக்க வேண்டும். 


முதலாவது, உள்ளதை உள்ளபடியே கூறுவது வாய்மை அல்ல. 


இரண்டாவது, எந்த ஒரு தீமையும் இல்லாத சொற்களே வாய்மையான சொற்கள். 


மூன்றாவது, தீமை பயக்குமானால், உள்ளதை உள்ளபடியே சொல்லுவது கூட பொய்தான். அல்லது அது வாய்மையாகாது.


நடைமுறையில் சில விடயங்களை பற்றிச் சிந்திப்போம். 


கணவனோ மனைவியோ ஏதோ சொன்னார்கள் செய்தார்கள் என்பதற்காக மற்றவர் அவரை கடிந்து ஒரு வார்த்தை சொல்கிறார் என்றால் அது வாய்மை அல்ல. ஏன் என்றால் அந்த கடுமையான சொற்கள் "தீமை" பயப்பன. 


பிள்ளைகளை கண்டிக்கிறோம் என்று சுடு சொற்களை சொன்னால், அது வாய்மை அல்ல. 


கீழே வேலை பார்ப்பவரை சொல்லால் சுட்டால், அது வாய்மையான ஒன்று அல்ல. 


இங்கே "தீது" என்றால் யாருக்கு என்ற கேள்வி வரும். 


வள்ளுவர் அதை மிக விரிவாக கொள்கிறார். 


"யாதொன்றும் தீமை இல்லாத" என்கிறார். 


அப்படி என்றால மற்ற மனிதர்களுக்கு மட்டும் அல்ல, பிராணிகளுக்கும், மரம் செடி கொடிகளுக்கும், மலை, ஆறு போன்றவற்றிற்கும் தீங்கு வராத சொற்களை சொல்ல வேண்டும். 


இப்போது மட்டும் அல்ல, இனி வரும் காலத்துக்கும் தீமை பயக்கக் கூடாது. 


எந்த விதத்திலும், யாருக்கும், எப்போதும் தீங்கு தரக் கூடாது. 


எவ்வளவு கடினமான செயல். 


மனைவிக்கு ஆதரவாக ஏதாவது கூறினால், சில சமயம் அம்மாவுக்குப் பிடிக்காது. அம்மா வருந்துவாள். அம்மாவும் வருந்தக் கூடாது, மனைவியின் முகமும் வாடக் கூடாது. அப்படி பேச வேண்டும். எவ்வளவு கடினம். 


பிள்ளையை இப்போது கண்டிக்கவில்லை என்றால் பின்னால் துன்பப்படும். தீமை பின்னால் வரலாம். "யாதொன்றும் தீமை இல்லாத சொலல்" என்றால் வருங்காலத்திலும் தீமை வரக் கூடாது. 


மனம் வருந்தாமல் கண்டிக்க வேண்டும். கடினமான காரியம். 


ஒவ்வொரு சொல்லையும் நிறுத்தி, நிதானமாக யோசித்து, ஆராய்ந்து பின் பேச வேணும். 


"தீமை" என்றால் உடல் வருத்தம் மட்டும் அல்ல. மன வருத்தமும் வருத்தமும் தான். 


பேச்சிலே எவ்வளவு நிதானம் வேண்டும் என்று பாருங்கள். 


எந்த தீமையும் இல்லாத சொற்களை பேசி பழகினால், நாளடைவில் வாழ்க்கை அவ்வளவு இனிமையாக இருக்கும். 





Wednesday, January 22, 2025

குண்டலகேசி - எது நடக்க வேண்டுமோ

 குண்டலகேசி - எது நடக்க வேண்டுமோ 


நிறைய பலசரக்கு கடைகளில், உணவு விடுதிகளில் பார்த்து இருக்கலாம், கண்ணன் படம் போட்டு, அவன் முன்னால் அர்ஜுனன் மண்டியிட்டு உபதேசம் கேட்பது போல் ஒரு படம் இருக்கும். 


அந்த படத்திற்கு பக்கத்தில் 


"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது 

எது  நடக்கின்றதோ, அது நன்றாகவே நடக்கிறது 

எது நடக்குமோ, அது நன்றாகவே நடக்கும்"


- ஸ்ரீ கிருஷணர், பகவத் கீதை 


என்று போட்டு இருக்கும். 


கீதையில் எந்த அத்யாயம், எத்தனாவது சுலோகம் என்று போட்டு இருக்காது. 


காரணம் என்ன?


கீதையில் அப்படி ஒரு சுலோகம் இல்லை. 


எதையாவது போட்டுவிட்டு, அடியில் கிருஷ்ணர், இராமர் விவேகானந்தர் என்று எழுதிவிடுவது. 


மேற்கண்ட வாசகத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் சொன்னதாகவும் சில இடங்களில் பார்த்து இருக்கிறேன். 


சரி, அது போகட்டும். யார் சொன்னார்கள் என்பது முக்கியம் அல்ல. 


சொன்னது சரிதானா என்று பார்ப்போம். 


நடந்தது எல்லாமே நன்றாகவே நடந்ததா?  


உங்கள் வாழ்வில் நடந்த அனைத்தும் நல்லவையாகவே நடந்ததா?  


யாருக்குமே அப்படி ஒரு வாழ்க்கை இருந்திருக்க வாய்ப்பில்லை. 


வாழ்க்கை என்றால் நல்லதும் இருக்கும், அல்லதும் இருக்கும். 


குண்டலகேசி சொல்கிறது 


"எது இறக்க வேண்டுமோ, அது இறக்கும் (அல்லது அழியும்). எது பிறக்க வேண்டுமோ, அது பிறக்கும். யார் எதைப் பெற வேண்டுமோ, அதை அவர்கள் பெறுவார்கள். யார் எதை இழக்க வேண்டுமோ, அதை அவர்கள் இழப்பார்கள். இதை அறிந்து கொண்டவர்கள், அழவும் மாட்டார்கள், சிரிக்கவும் மாட்டார்கள். எது நடக்க வேண்டுமோ, அது நடந்தே தீரும் என்று இருப்பது நல்லது"


என்று. 


பாடல் 


மறிப மறியும் மலிர்ப மலிரும்

பெறுப பெறும் இழப்பை இழக்கும்

அறிவார் அழுங்கார் உவவார்

உறுவது உறும்என்று உரைப்பது நன்று.


பொருள் 


மறிப = அழிய வேண்டியது 


மறியும் = அழியும் 


மலிர்ப  = மலர வேண்டியது 


மலிரும் = மலரும் 


பெறுப பெறும் = பெற வேண்டியவர்கள் பெறுவார்கள் 


இழப்பை இழக்கும் = இழக்க வேண்டியவர்கள், இழப்பார்கள் 


அறிவார் = அதை அறிந்தவர் 


அழுங்கார்  = துன்பத்தில் மூழ்கி விட மாட்டார்கள் 


உவவார் = இன்பத்தில் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள் 


உறுவது உறும்என்று = எது நடக்கணுமோ, அது நடக்கும் என்று 


உரைப்பது நன்று = சொல்லுவது சிறந்தது 


வாழ்க்கையில் நிறைய எதிர்பார்ப்புகள் கூடாது.


Tuesday, January 21, 2025

திருக் குறள் - கள்ளாமை - தள்ளாது

 திருக் குறள் - கள்ளாமை - தள்ளாது 


களவு செய்வார்க்கும், களவு செய்யாதாருக்கும் என்ன வேறுபாடு?  


இந்த உயிர் எங்கே தங்கி இருக்கிறது?


உயிர் உடம்பில் தங்கி இருக்கிறது. 


களவு செய்பவர்களுக்கும், அவர்கள் உடம்பு அவர்கள் உயிரை தள்ளி விடுமாம். அதாவது உடம்பு உயிரை விட்டுவிடும் என்கிறார் வள்ளுவர். 


சரி, களவு செய்யாதவர்களுக்கு மரணமே கிடையாதா? அவர்கள் சாகவே மாட்டார்களா? அப்படி என்றால் இதுவரை களவு செய்யாதவர் யாருமே இல்லையா? என்று கேட்டால், அதற்கும் வள்ளுவர் விடை தருகிறார். 


களவு செய்யாமல் இருப்பவர்கள், உயிரை விட்டாலும், அது விண்ணுலகம் சென்று தேவர்களில் ஒருவராக மாறி சாகா நிலை அடையும் என்கிறார். 


பாடல் 


கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்

தள்ளாது புத்தேள் உலகு


பொருள் 


கள்வார்க்குத் = களவு செய்பவர்களுக்கு 


தள்ளும் = வெளியே தள்ளி விடும் 


உயிர்நிலை = உயிர் நிலைத்து நிற்கும் உடல்.  அதாவது, உடல் உயிரை விட்டு விடும். 


கள்ளார்க்குத் = களவு செய்யாதவர்களுக்கு 


தள்ளாது = வெளியே தள்ளாது. அதாவது உள்ளே ஏற்றுக் கொள்ளும். எது?


புத்தேள் உலகு = விண்ணுலகு. 



அவர்களை விண்ணுலகம் தள்ளிவிடாமல் ஏற்றுக் கொள்ளும். 


சரி, களவு செய்பவர்களை ஏன் அவர்கள் உடல் அவர்களின் உயிரை தள்ளிவிடும் என்பதற்கு பரிமேலழகர் விளக்கம் செய்கிறார். களவு செய்பவர்களை அரசன் தண்டிப்பான். சிறையில் போடுவான். உடல் நலியும். சீக்கிரம் உயிரை விடும். 


களவு செய்தால் இந்தப் பிறவியிலேயே உடலும் உயிரும் பிரிந்து நிற்கும். களவு செய்யாவிட்டால், உயிர் பிரிந்த பின்னும், தேவர் உலகில் நீங்கா இடம் பெறலாம். 


இத்துடன் இந்த அதிகாரம் நிறைவு பெறுகிறது. 


அடுத்து என்ன அதிகாரம் என்றால்.....



Monday, January 20, 2025

நள வெண்பா - யான் பாடல் உற்ற இது

நள வெண்பா - யான் பாடல் உற்ற இது 

https://interestingtamilpoems.blogspot.com/2025/01/blog-post_20.html


அடக்கம் நல்லதா?  


நம் அறநெறி இலக்கியங்கள் எல்லாம் அடக்கமாக இருக்க வேண்டும், ஆணவம் கூடாது என்று தான் சொல்லித் தருகின்றன. 


இருந்தும், சிலர் இதில் இருந்து மாறுபடுகிறார்கள். 


அவை அடக்கம், அடக்கம், பணிவு என்று சொல்லிச் சொல்லி, நம் மக்கள் ஒரு மன உறுதி இல்லாமலலேயே வளர்ந்து விடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். 


என்ன செய்தாலும், அது பத்தாது, இன்னும் நல்லா செய்யணும், இதெல்லாம் பெரிசா, இதை விட எவ்வளவோ பேர் எவ்வளவோ அதிகமாகச் செய்து இருக்கிறார்கள் என்று தோன்றுமே அல்லாமல், நாம் நன்றாகச் செய்தோம் என்ற எண்ணமே வராது. 


அது மட்டும் அல்ல, வேறு யார் நன்றாகச் செய்தாலும் பாராட்ட மனம் வராது. தான் செய்ததையே பாராட்டாத ஒரு ஆள் மற்றவர் செய்வதை எப்படி பாராட்டுவார்.


மனைவி வேலை மெனக்கெட்டு ஏதாவது உணவு தயாரித்து இருப்பாள். மாடு வைக்கோல் தின்பது மாதிரி தின்று விட்டுப் போய் விடுவார் கணவன். ஒரு வார்த்தை அதைப் பற்றி பேசுவது கிடையாது. அப்படியே வலிந்து "எப்படி இருக்கு " என்று கேட்டால் "எங்க அம்மா செய்வது போல இல்லை " என்று குற்றம் வேறு சொல்வது. 


காரணம் என்ன?  


தன் பெருமையை தானே சொல்லிக் கொள்ளக் கூடாது. அடக்கமாக இருக்க வேண்டும் என்று மூளைச் சலவை செய்து விடுவதால் வரும் வினை என்று ஒரு சாரார் இந்த அடக்க உணர்வை ஏற்றுக் கொள்வது இல்லை. 


உன்னை நீயே உயர்த்திப் பிடிக்காவிட்டால் உலகில் வேறு யார் உன்னைப் பாராட்டுவார்கள் என்பது அவர்கள் வாதம். 


நளவெண்பா பாட வந்த புகழேந்திப் புலவர் அவையடக்கம் பாடுகிறார். 


"நள மகாராஜாவின் வரலாற்றை நான் கூறுவது என்பது சினம் கொண்ட பலமான யானையை ஒரு தாமரை நூலினால் கட்டுவது போல...எப்படி அது முடியாதோ இதுவும் முடியாது. எனவே என் இந்தச் செயலை ஆன்றோர் பொறுத்து அருள வேண்டும்" என்று பணிவோடு கூறுகிறார். 


பாடல் 



வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தன்

தந்துவினால் கட்டச் சமைவதொக்கும்-பைந்தொடையில்

தேன்பாடும் தார்நளன்தன் தெய்வத் திருக்கதையை

யான்பாடல் உற்ற இது.


பொருள் 



வெந்தறுகண் = கோபம் கொண்ட வலிமையான  

வேழத்தை = யானையை


வேரிக் = மணம் நிறைந்த 


கமலத்தன் = தாமரை மலரின் 


தந்துவினால் = நூலினால் 


கட்டச் சமைவதொக்கும் = கட்டி வைப்பதற்கு ஒப்பாகும் 


பைந்தொடையில் = மலர்களில்  (மணம் நிறைந்த மலர்க் கொடி)


தேன்பாடும் = தேனை உண்டு பாட்டுப் பாடும் 


தார் = மாலை அணிந்த 


நளன்தன் = நள மகாராஜாவின் 


 தெய்வத் திருக்கதையை = தெய்வத் தன்மை வாய்ந்த உயர்ந்த கதையை 


யான்பாடல் உற்ற இது = நான் பாட நினைத்தது 


யாராவது கேட்டால் நான் நல்லவன், திறமை உள்ளவன், அறிவாளி என்று சொல்ல வேண்டுமா அல்லது அடக்கமாக எனக்கு ஒண்ணும் தெரியாது, நான் கற்றது கை மண் அளவு அடக்கமாக பதில் சொல்ல வேண்டுமா? எதைச் சொன்னால் வாழ்வில் முன்னேற முடியும்?



 

Friday, January 17, 2025

புறநானுறு - வாழ்வின் போக்கு

புறநானுறு - வாழ்வின் போக்கு 



வாழும் போது பல இன்னல்கள், இடையூறுகள், துன்பங்கள், தடைகள் வரும். வந்தால் என்ன செய்வது ?


கோவிலுக்குப் போய் இறைவன வழிபட்டால் அந்தத் துன்பங்கள் விலகிவிடுமா?  


யாகம், வேள்வி செய்தால் போகுமா?  


தான, தர்மம் செய்தால் போய் விடுமா? 


என்ன செய்தால் வந்த துன்பம் போகும்?  


என்ன செய்தாலும் போகாது?  துன்பம் வாழ்வின் ஒரு பகுதி. அது வரும், இருக்கும். போகும். தனி மனித முயற்சியால் விலகும் என்பது ஒரு தோற்றமே அல்லாது அது உண்மையா?


மலையின் மேல் பெரிய மழை பெய்கிறது. அது ஒன்று சேர்ந்து காட்டாற்று வெள்ளமாக வருகிறது. அதில் சில மரக் கட்டைகள் அடித்து வரப்படுகின்றன.  அந்தக் கட்டைகள் அங்கும் இங்கும் அலைகின்றன. அப்போது அந்த கட்டைகள் நினைக்கும், எப்படியாவது இந்த ஆர்பரிக்கும் ஆற்றின் ஓட்டத்தில் இருந்து எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று நினைக்கும். இப்படியே போனால் அங்கே ஒரு பாறையில் மோத வேண்டும், இங்கே ஒரு கரையில் இடிக்க வேண்டும், மலை மேல் இருந்து கீழே விழ வேண்டும், இறுதியில் துண்டு துண்டாக உடைந்து கடலில் உருத் தெரியாமல் அழிய வேண்டும். 


முடியுமா?  அந்த மரக் கட்டைகள் என்ன நினைத்தாலும், எத்தனை அழுதாலும், எத்தனை பிரார்த்தனை செய்தாலும், தன் முயற்சியால் கரை ஏறி வர முடியுமா?


வாழ்வில் துன்பம் ஒரு பகுதி. அதை நீக்கி வாழ முடியாது. வாழ்வின் போக்கில் போக வேண்டியது தான். இன்பம், வரும். துன்பம் வரும். எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டியது தான். 


இதைத்தான் கணியன் பூங்குன்றனார் புறத்தொகையில் கூறுகிறார். 


பாடல் 


கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்

முறைவழிப் படூஉ மென்பது திறவோர்

காட்சியிற் றெளிந்தன மாகலின் 


பொருள் 


கல் = கற்கள் 


பொரு = பொருந்திய, அல்லது கற்களில் பொருதி (மோதி) 


திரங்கு = இறங்கி வரும் 


மல்லற் பேர்யாற்று = பெரிய ஆற்றின் 


நீர்வழிப் = நீரின் வழியில், ஆற்றின் ஓட்டத்தில் 


படூஉம் = மிதந்து வரும் 


புணைபோல் = மரக்கட்டை போல் 


ஆருயிர் = அருமையான உயிர் 


முறைவழிப் படூஉ = அதன் வழியில் போகும் 


மென்பது = என்பது 


திறவோர் = அறிஞர் 


காட்சியிற் = அறிவில் 


றெளிந்தன மாகலின் = அறிந்தோம் என்பதால் 

 

பெரியவர்கள் கண்டு உணர்ந்த சொன்னதை நாம் அறிந்து கொண்டதால். 


ஆறு, வாழ்க்கை.


மரக் கட்டை, நம் வாழ்க்கை 


ஆறு அலைக்கழிப்பது - வாழ்வில் அங்கும் இங்கும் அலைவது. 


மரக் கட்டையின் கையில் என்ன இருக்கிறது?  


ஆறு அமைதியாக இருந்தால் - வாழ்வு சுகம் என்று நினைப்பது. 


ஆற்று சுழலில் அகப்பட்டுக் கொண்டால் - ஐயோ, முறையோ என்று அழுவது. 


வேறு என்ன செய்ய முடியும் ?


 

Sunday, January 12, 2025

திருக்குறள் - கள்ளாமை - ஆங்கே வீழ்வார்

திருக்குறள் - கள்ளாமை - ஆங்கே வீழ்வார் 


பிறர் பொருளை அடைய வேண்டும் என்று ஏன் தோன்றுகிறது. அந்த மாதிரி கார் வேண்டும், அது போல ஒரு வீடு வேண்டும், அந்த மாதிரி நகை வேண்டும் என்றெல்லாம் ஏன் தோன்றுகிறது?  


உள்ளதைக் கொண்டு திருப்தி அடையாமல் இருப்பதால், இல்லாததைக் கொண்டு வா என்கிறது மனம். 


சரி, ஆசைப் பட்டதை அடைந்து விட்டால் போதும் என்று நிற்குமா என்றால் இல்லை. ஒன்றை அடைந்தால் அதை விட பெரியதற்கு ஆசைப் படுகிறது. இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று பறக்கிறது. 


ஒரு கட்டத்தில் தன் சொந்த உழைப்பினால் வேண்டியதை எல்லாம் அடைய முடியாது என்ற நிலை வரும் போது, ஒன்று தவறான வழியில் செல்லலாமா என்று மனம் சிந்திக்கிறது. அல்லது, நம்மால் முடியாது என்று அயர்ந்து, துவண்டு விடுகிறது. இரண்டுமே நல்லது இல்லை. 


வள்ளுவர் சொல்கிறார் 


அளவு அல்லாத தீய செயல்களை செய்தவர் உடனே வீழ்வார், அழிவர். யார் என்றால் களவைத் தவிர பிற ஒன்றை அறியாதவர்கள். 


பாடல் 


அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல

மற்றைய தேற்றா தவர்.


பொருள் 


அளவல்ல = அளவு அல்லாதது. 


செய்தாங்கே  = செய்து உடனே 


வீவர் = வீழ்வார், அழிவார் 


களவல்ல = களவைத் தவிர 


மற்றைய = பிற ஒன்றை 


தேற்றா தவர் = அறியாதவர் 


அது என்ன அளவு அல்லாதது ?


நல்லது எது, கெட்டது எது என்று அளந்து அறியும் அறிவு. அந்த அறிவு இல்லாதவர் செய்து உடனே கெடுவர். 

எதைச் செய்து?


களவைச் செய்து உடனே கெடுவர்.


பரிமேலழகர் சொல்கிறார், களவு செய்வோம் என்று நினைப்பதும் செயல் தான். நினைக்கும் செயல். நினைத்தவுடனே வீழ்வர், "ஆங்கே" வீழ்வர் என்றால் உடனே. 


நாம் நிஜ வாழ்வில் அப்படி நிகழ்வதாக காண்பதில்லை. கையும் களவுமாக பிடிபட்டால் கூட, நீதி மன்றம், வழக்கு, வக்கீல், வாய்தா, சாட்சி, என்று இழுத்துக் கொண்டே போகும். எங்கே உடனே தண்டனை கிடைக்கிறது?


முன்பே வள்ளுவர் சொல்லி இருக்கிறார், "தன்நெஞ்சு அறிவது பொய்யற்க, பொய்ப்பின், தன்நெஞ்சே தன்னைச் சுடும்" என்று. அதற்கு ரொம்ப நேரம் ஆகாது. 


சரி, இது எதற்கு இந்த களவைப் பற்றி நாம் இவ்வளவு சிந்திக்க வேண்டும்?  நாம் களவு செய்வதே இல்லை. களவு செய்யும் எண்ணமும் இல்லை. எதற்கு இதைப் போட்டு படிக்க வேண்டும். 


நாம் நேரடியாக களவு செய்வது இல்லைதான். 


இருந்தும், பல விதங்களில் நாம் களவு செய்கிறோம். 


உதாரணமாக, 


நாம் பெறும் ஊதியத்துக்கு ஒவ்வொரு நாளும் அதற்கு உரிய வேலை செய்கிறோமா?  வேலை செய்தாலும், வாங்கிய பணத்துக்கு உரிய பலனை முதலாளிக்களுக்கு தருகிறோமா?  நூறு ரூபாய் பெற்றுக் கொண்டு என்பது ரூபாய் அளவு வேலை செய்தால், மீதி இருபது ரூபாய் களவுதான். 


வீட்டில் வேலை செய்பவர்கள், அவர்கள் செய்யும் வேலைக்கு உரிய ஊதியம் தருகிறோமா? இல்லை என்றால், எவ்வளவு குறைத்துக் கொடுக்கிறோமோ அவ்வளவு களவுதான். 


நம்மிடம் பணம் இருக்கிறது என்பதற்காக, பிறருக்கு கிடைக்க வேண்டிய ஒன்றை இலஞ்சம் கொடுத்து நாம் தட்டிப் பறித்தால் அதுவும் களவுதான். 


உறவில் கூட, பெறுவது அதிகமாகவும், கொடுப்பது குறைவாகவும் இருந்தால், அந்த இடைவெளி களவுதான். 


களவு என்றால் ஏதோ ஓட்டைப் பிரித்து இரவில் உள்ளே இறங்கி, திருடுவது மாத்திரம் அல்ல. 


நமக்குச் சொந்தம் இல்லாத எதை எடுத்துக் கொண்டாலும் அது களவுதான். 


எவ்வளவு களவு செய்கிறோம். 


கள்ளாமை துறவிக்கு மட்டும் அல்ல,  இல்லறத்தில் உள்ளவற்கும்தான். 






Thursday, January 9, 2025

கம்ப இராமாயணம் - சடாயு புலம்பல் - நெஞ்சின் நலம் காண

 கம்ப இராமாயணம் - சடாயு புலம்பல் - நெஞ்சின் நலம் காண 

https://interestingtamilpoems.blogspot.com/2025/01/blog-post_9.html

தயரதன் இறந்த செய்தியைக் கேட்ட சடாயு புலம்புகிறான். 


அவன் புலம்புவது ஒரு புறம் இருக்கட்டும். 


ஒரு பட்சிக்கும், ஒரு சக்ரவத்திக்கும் எப்படி இப்படி ஒரு நட்பு இருக்க முடியும் என்று வியப்பாக இருக்கிறது. 


நண்பர்களுக்குள்ளேயே ஒருவன் விரைவில் பெரிய இடத்தை அடைந்து விட்டால், மற்றவர்கள் மெல்ல மெல்ல விலகி விடுவார்கள். "அவன் பெரிய ஆள் .." என்று அவனிடம் உள்ள பழைய நெருக்கம் குறைந்துவிடும். 


அப்படி இருக்க ஒரு பறவைக்கும், ஒரு பெரிய சக்ரவத்திக்கும் இடையே இப்படி ஒரு நட்பா என்று நம்மை வியக்க வைக்கிறது.  


உண்மையான நட்பில் உயர்வு தாழ்வு இல்லை. 


இப்போது சடாயுவின் புலம்பலுக்கு வருவோம். 


சடாயு 


"தயரதா, என் நண்பனே, நீ ஏன் என்னை விட்டுப் போனாய் என்று எனக்குத் தெரியும். நீ இறந்து போனால் நானும் இறப்பேனா என்று என் நட்பின் ஆழத்தை அறியவே நீ என்னை விட்டுப் போய் விட்டாய். என்ன செய்ய. நான் இன்னும் உயிரை வைத்துக் கொண்டு இருக்கிறேனே. காரணம், நான் ஒரு விலங்கு என்பதலா? ஒரு வேளை நான் ஒரு மனிதப் பிறவியாய் இருந்திருந்தால் நீ உயிர் துறந்த போது நானும் உயிரை துறந்து இருப்பேன் என்று நினைக்கிறேன்"  


புலம்புகிறார். 


பாடல் 


அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும்

    தனிக் குடையாய்! ஆழி சூழ்ந்த

நிலம் காவல் அது கிடக்க, நிலையாத

    நிலை உடையேன் நேய நெஞ்சின்

நலம் காண நடந்தனையோ? நாயகனே!

    தீவினையேன், நண்பின் நின்றும்

விலங்கு ஆனேன் ஆகலினால், விலங்கினேன்;

    இன்னும் உயிர் விட்டிலேனால்.


பொருள் 

அலங்காரம் = அழகானது 


என = என்று 


உலகுக்கு = இந்த உலகத்துக்கு 


அமுது அளிக்கும் = அமுதை வழங்கும் 


தனிக் குடையாய்! = சிறந்த வெண் கொற்ற குடையை உடையவனே 


ஆழி சூழ்ந்த = கடல் சூழ்ந்த 


நிலம் = இந்த உலகம் 


காவல் அது கிடக்க = காவல் இன்றி கிடக்க (நீ இல்லாததால்) 


நிலையாத = ஒரு நிலையில் நிற்காத 


நிலை உடையேன் = மனதை உடைய என் 


நேய நெஞ்சின் = அன்பு கொண்ட மனத்தின் 


நலம் காண = பெருமையை, உறுதியைக் காண 


நடந்தனையோ? = என்னை விட்டு பிரிந்து போனாயோ ?


நாயகனே! = தலைவனே 


தீவினையேன், = தீய வினை உடையவனான நான் 


நண்பின் நின்றும் = நட்பு இருந்தாலும் 


விலங்கு ஆனேன் = விலங்காக இருக்கின்றேன் 


ஆகலினால் = ஆதலினால், எனவே 


விலங்கினேன் = விலகி இருக்கிறேன் 


இன்னும் உயிர் விட்டிலேனால் = இன்னும் உயிரை விடாமல் இருக்கிறேன் 


தன்னைத் தானே நொந்து கொள்கிறார். 


அலுவலக வேலைக்கு செல்பவர்கள் கூட, வீட்டில் கணவன்/மனைவி/பிள்ளைகள் என்று உறவாட நேரம் இல்லமால் தவிக்கிறார்கள். 


ஒரு சக்கரவர்த்தி எப்படி நேரம் ஒதுக்கி ஒரு பறவையோடு நட்பு பாராட்டி இருக்க முடியும். 


நேரம் இல்லை என்று நாம் சொல்லுவது எல்லாம் ஒரு சாக்கு. 


அன்பிருந்தால், நேரம் இருக்கும். 



Wednesday, January 8, 2025

தேவாரம் - பித்தரைப்போலப் பிதற்றுவார்

 தேவாரம் - பித்தரைப்போலப் பிதற்றுவார்


அப்பர் அருளிச் செய்த திருவாதிரைப் பதிகம். 


பெற்றோர்கள் குழந்தையை கொஞ்சும் போது, "என்னைப் பெத்த இராசா, செல்லக் கிளி, பப்புலு, ஜில்லுக் குட்டி, குட்டிக் கண்ணா.." என்றெல்லாம் கூறுவார்கள். அவர்களிடம் போய், "இராசாவா?, கண்ணனா?, கிளியா? ன்னு முடிவு பண்ணுங்க. ஒரே பிள்ளை எப்படி எல்லாமாக இருக்க முடியும். சும்மா உளறக் கூடாது" என்று சொல்ல முடியுமா?  


அன்பு மேலிட்டால் என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்கள். அதை அறிவுக் கண் கொண்டு பார்க்கக் கூடாது. 


காதலன், காதலியை கொஞ்சும் போது, "மானே, தேனே, மல்லிகையே, நிலவே,..."என்றெல்லாம் கொஞ்சுவான். ஒரே பெண் எப்படி மானாகவும், மயிலாகவும் இருக்க முடியும்?  


அதெல்லாம் கேட்க்கக் கூடாது. அன்பு, காதல் என்று வந்து விட்டால் கொஞ்சம் அறிவு விடை பெற்றுக் கொள்ளும். 


பக்தர்கள் பாடும் அப்படித்தான் என்கிறார் திருநாவுகரசு சுவாமிகள்.



இறைவன் முன் பக்தர்கள் இறைவனின் குண நலன்களைப் பாடி பரவசம் அடைகிறார்கள். ஆளாளுக்கு ஒரு குணத்தை சொல்கிறார்கள். ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தம் இல்லாமல் இருக்கும். 


வெளியில் இருந்து பார்பவர்களுக்கு ஏதோ பித்து பிடித்து உளறுவதைப் போல் இருக்கும். பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை பிடிப்பது போல் இருக்கும்.  


என்ன செய்வது. பக்தி மேலிட்டால் என்ன சொல்கிறோம், என்ன செய்கிறோம் என்று தெரிவதில்லை. 


பாடல் 


குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள்

பிணங்கித்தம்மிற் பித்தரைப்போலப் பிதற்றுவார்

வணங்கிநின்று வானவர்வந்து வைகலும்

அணங்கனாரூ ராதிரை நாளா லதுவண்ணம் .


பொருள் 


குணங்கள்பேசிக் = இறைவனின் குணங்களைப் பேசி 


கூடிப் = பக்தர்கள் ஒன்றாகக் கூடி 


பாடித் = பாட்டுப் பாடி 


தொண்டர்கள் = பக்தர்கள் 


பிணங்கித் = இறைவனை புகழ்வதில் ஒருவருக்கு ஒருவர் மாற்றிச் சொல்லி 


தம்மிற்  = தங்களுக்குள் 


பித்தரைப்போலப் பிதற்றுவார் = பித்தர்களைப் போல் பிதற்றுவார்கள் 


வணங்கி நின்று = வணங்கி நின்று 


வானவர்வந்து = தேவர்கள் வந்து 


வைகலும் = தினமும் 


அணங்கனாரூ ராதிரை நாளா லதுவண்ணம் = அணங்கன் + ஆரூர் + ஆதிரை + நாள் + அது + வண்ணம் = அணங்கு என்றால் பெண். பெண்ணை பாதியாகக் கொண்டவன். திருவாரூர், திருவாதிரைத் நல்ல நாளில்.


தேவர்கள், திருவாரூர் வந்து தினமும் வணங்கிச் செல்வார்கள். 


உன் பக்தி சிறந்ததா, என் பக்தி சிறந்தாத என்பதல்ல போட்டி. அவரவருக்குத் தோன்றியதைச்  சொல்லி வணங்குகிறார்கள். 


தேவாரம் தெரியவில்லையா, பரவாயில்லை. 


திருவாசகம், பிரபந்தம் தெரியவில்லையா - ஒரு பிழையும் இல்லை. 


பக்தி மனதில் இருந்தால் போது. அந்த பக்தியில் என்ன தோன்றுகிறதோ, அதுதான் வழிபாடு. 


இறைவனை இப்படித்தான் வழிபட வேண்டும் என்று ஒரு நியதி இல்லை. 


சூடிக் கொடுத்தவள் = ஆண்டாள் 


சூடிக் கொடுத்தவன் = கண்ணப்பன் 





 


Monday, January 6, 2025

திருவருட்பா - வாலிலேன்

திருவருட்பா - வாலிலேன் 


உணவு வாழ்வதற்கு எவ்வளவு தேவையோ, அதுவே அளவு அதிகமானால் பல துன்பங்களுக்கு இடமாகிப் போகிறது. 


உணவில் நாட்டம் அதிகமாக அதிகமாக, மற்றவற்றில் புத்தி போவது இல்லை. 


உணவில் சிறு பற்று வந்துவிட்டால் கூட போதும், அது நாளடைவில் பெரிதாக வளர்ந்து விடும். 


"காலையில் எழுந்தவுடன் ஒரு வாய் காப்பி குடிக்காமல் எனக்கு ஒரு வேலையும் ஓடாது" என்று பெரிய சாதனை போல் சொல்லுபவர்களை கேட்டு இருக்கிறேன். 


சில நாள் வீட்டில் செய்த உணவு மிகுந்து விடும். அதைக் கூட மற்றவர்களுக்கு பகிர்ந்து உண்ணும் எண்ணம் வராது. அதை குளிர் சாதன பெட்டியில் (fridge) வைத்து இரண்டு மூணு நாளைக்கு சூடு பண்ணி சூடு பண்ணி உண்பவர்களும் உண்டு. 


வள்ளலார் சொல்கிறார்,


"நெல் குதிர் போல் என் வயிற்றில் சோற்றை அள்ளிப் போடுகிறேன். பழங்களை உண்டு அதன் தோலில் ஒரு துளியைக் கூட மற்றவர்களுக்குத் தர மாட்டேன். எனக்கு ஒரு வால் இல்லை. இருந்து இருந்தால் நான் காட்டில் வாழும் விலங்கோடு ஒன்றாக இருக்கத் தகுந்தவன். இப்படி ஆகி விட்டேனே, இறைவா நான் என்ன செய்வேன்" என்று. 


பாடல் 


 பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே

          பத்தியால் ஒருபெரு வயிற்றுச்

     சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை

          தகுபலா மாமுதற் பழத்தின்

     தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும்

          சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்

     வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க

          வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.



பொருள் 


 பாலிலே கலந்த சோறெனில் = பாலில் கலந்த சோறு என்றா 


விரைந்தே = வேகமாகச் சென்று 


  பத்தியால் = மிகுந்த ஆர்வத்துடன் 


ஒருபெரு வயிற்றுச் = பெரிய வயிறு 


சாலிலே = பெரிய வாயகன்ற பாத்திரம். நெல்லு போட்டு வைப்பார்கள். 


அடைக்கத் தடைபடேன் =  அள்ளி அள்ளிப் போட்டு, ஒரு அளவில்லாமல் உள்ளே போடுவேன் 


வாழை,  தகுபலா மா = வாழை, பலா, மாம் பழம் 


முதற் பழத்தின் = போன்ற பழங்களை தின்று விட்டு, 


தோலிலே எனினும் = அவற்றின் தோலில் 


கிள்ளிஓர் சிறிதும் = நகத்தால் கிள்ளி ஒரு சிறிய துணுக்கைக் கூட 


சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் = அருகில் இருப்பவர்களுக்கு கொடுக்க மனம் வராது எனக்கு 


வாலிலேன் = எனக்கு வால் இல்லை 


இருக்கில் = இருந்திருந்தால் 


வனத்திலே இருக்க வாய்ப்புளேன் = காட்டில் இருக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. வால் இல்லாத ஒரே காரணத்தால் நாட்டில் இருக்கிறேன். நான் ஒரு வால் இல்லாத வன விலங்கு 


என்செய்வேன் எந்தாய் = நான் என்ன செய்வது இறைவா 


முதலில் வேறு சோறு. அப்புறம் அதில் கொஞ்சம் பால் விட்டு உண்பது. பின் சோற்றில் பாலை விடுவதற்கு பதில் பாலில் சோற்றை விடுவது என்று ஆகி விடுகிறது. 


" பாலிலே கலந்த சோறெனில்"....பாலில் கலந்த சோறு என்கிறார். 


வீட்டில் நல்ல பண்டங்கள் செய்தால், நாலு பேருக்குக் கொடுத்து உண்ண வேண்டும். எல்லாம் எனக்கே என்று தீபாவளி, பொங்கலுக்கு செய்த தின் பண்டங்களை பத்து நாள் வைத்து உண்ணக் கூடாது. 


பசித்தவர்க்கு கொஞ்சம் உணவு கொடுத்து உண்டால் அவர்கள் பசி தீர்வது மட்டும் அல்ல, நாம் உண்பதும் குறையும். 

Wednesday, January 1, 2025

திருக்குறள் - எது எங்கு நிற்கும்

 திருக்குறள் - எது எங்கு நிற்கும் 

https://interestingtamilpoems.blogspot.com/2025/01/blog-post.html


எவ்வளவோ படிக்கிறோம், எவ்வளவோ கேட்கிறோம். 


படிக்கும் போதும், கேட்கும் போதும் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அதை அப்படியே கடை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். 


ஆனால் முடிவதில்லை. 


மனம் பழைய வழியிலேயே போகிறது.  


ஏன்?


ஒன்றைச் செய்வதினால் வரும் நன்மை, செய்யாமல் விடுவதினால் வரும் தீமை என்ற இரண்டு மட்டும் புரிந்தால் போதாது. 


நன்மையின் அளவு என்ன, தீமையின் அளவு என்ன என்று தெரிய வேண்டும்.  அளவு தெரிந்தால், கடைபிடிப்பது எளிது. 


ஒரு உதாரணம் பார்ப்போம்.


ஐஸ் கிரீம் சாப்பிடுவது இன்பமாக இருக்கிறது. அதில் உள்ள துன்பம் தெரிகிறதா என்றால் இல்லை. அதில் என்ன துன்பம் இருக்கிறது என்று சொல்லுவோம். 


அதுவே, ஒரு சர்க்கரை நோயாளியிடம் அந்த ஐஸ் கிரீமை கொடுத்தால் காத தூரம் ஓடுவார். ஏன்? அதனால் வரும் தீமை அவருக்கு நன்றாகத் தெரியும். இரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு கூடும் என்று துல்லியமாகத் தெரியும். எத்தனை கிராம் மாத்திரை சாப்பிட வேண்டி வரும் என்று தெரியும். தலை சுற்றல், வியர்வை, படபடப்பு போன்ற உடல் உபாதைகள் அவருக்குத் தெரியும். எனவே, அதை உண்ணாமல் இருப்பது சுகம் என்று இருப்பார். 


தவறு செய்வதின் விளைவு முழுமையாகத் தெரிந்தால், அளந்து, அது என்ன அளவு என்று தெரிந்தால் தவறு செய்வதில் நாட்டமே வராது. அதை செய்யாமல் இருப்பது எவ்வளவு சுகம் என்று தெரியும். 


அந்த அளவு இல்லை என்றால், "செய்தால் என்ன, ஒரு முறைதானே" என்று மனம் ஓடும். 


வள்ளுவர் சொல்கிறார் 


"எதையும் ஆராய்ந்து, விளைவுகளை அளந்து அறிந்தவன் மனதில் எப்படி அறம் நிலைத்து நிற்குமோ, அது போல் களவையும், அதன் சுவையையும் அறிந்தவர் மனதில் வஞ்சனை நிலைத்து நிற்கும்" 


பாடல் 


அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்

களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு


பொருள் 


அளவுஅறிந்தார் = எதையும் ஆராய்ந்து, அளந்து அறிந்தவர் 


நெஞ்சத்து = மனதில் 


அறம்போல  நிற்கும் = அறம் எப்படி நிலைத்து நிற்குமோ அது போல 


களவுஅறிந்தார் = களவு செய்வதை மேற்கொண்டவர் 


நெஞ்சில் = மனதில் 


கரவு = வஞ்சனை 


களவு எண்ணம் மனதில் வந்து விட்டால்,யாரை எப்படி ஏமாற்றலாம், எப்படி அவர்கள் பொருளை அவர்கள் அறியாமல் பறித்துக் கொள்ளலாம் என்றெல்லாம் மனம் ஓடும். அதில் சந்தேகமே இல்லை. அது எந்த அளவுக்கு உறுதியானது என்றால் அளவு அறிந்தவர் மனதில் அறம் எவ்வாறு நிலைத்து நிற்குமோ அந்த அளவு என்கிறார். 


நாம் இரண்டாம் பகுதியை சற்று விட்டு விடுவோம். நமக்கு களவில் நாட்டம் இல்லை. களவினால் வரும் பொருள் நல்லது செய்யாது என்று நாம் நம்புபவர்கள். 


முதலாவது பகுதி நமக்கு முக்கியமானது. 


அற வழியில் நிற்க மனம் ஆசைப் பட்டாலும், பெரும்பாலும் முடிவது இல்லை. ஒரு விரதம் இருக்க முடிகிறதா?  ஒரு வேளை காப்பியை விட முடிகிறதா?  


காரணம், விளைவின் ஆழம் தெரியாமை. மேலோட்டமாகத் தெரியும். அல்லது, அது பற்றிய சிந்தனை கிடையாது. முன்னோர்கள் சொன்னார்கள், புத்தகத்தில் எழுதி இருக்கிறது, பரம்பரையாக இப்படித்தான் செய்து வருகிறார்கள் என்ற அளவில் தெரியுமே தவிர செயலின் உண்மையான நீள அகலம் தெரியாது. 


தெரிந்தால், அறத்தை கடை பிடிப்பது அவ்வளவு எளிது. 


துறவறத்தின் இன்ப எல்லைகள் புரியாமையால் இல்லறத்தில் மனிதன் கிடந்து உழல்கிறான். 


புரிந்தவன், துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விடுகிறான்.