Wednesday, June 29, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 10 - அறன்வரையான் அல்ல செயினும்

திருக்குறள் - பிறனில் விழையாமை - 10 -  அறன்வரையான் அல்ல செயினும் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html


குறள் 144 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html


குறள் 145 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_19.html


குறள் 146 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_21.html


குறள் 147 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7_23.html


குறள் 148 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/8_24.html


குறள் 149 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/9.html


)


எத்தனையோ விதமான பாவங்கள் இருக்கின்றன. ஒருவன் அத்தனை பாவத்தையும் நீக்கி இந்த உலகில் வாழ முடியுமா? 


சின்ன சின்ன பொய்கள்,  சில உண்மைகளை மறைத்தல், சில பல ஆசார குறைபாடுகள், கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் கோபம், இவ்வளவு வரி கட்ட வேண்டுமா ? கொஞ்சம் குறைத்து கட்டுவோமே என்று தோணாதா? இதெல்லாம் வரும் தானே. இதில் ஒன்று கூட எனக்கு இல்லை என்று யாராலாவது கூற முடியுமா? 


சரி, ஒன்றிரண்டு மீறினால் பரவாயில்லை என்றால், இரண்டு மூணு செய்யலாமா, நாலைந்து செய்யலாமா என்று கேள்வி வரும். சில குற்றங்கள் நடந்தாலும் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம் என்றால் அவை என்னென்ன குற்றங்கள் ? அவற்றை யார் முடிவு செய்வது என்றெல்லாம் நடைமுறை சிக்கல்கள் எழும். 


வள்ளுவர் இதை உணர்கிறார். நடைமுறைக்கு ஒவ்வாத அறிவுரைகளை அவர் கூற மாட்டார். 


வள்ளுவர் கூறுகிறார் "...இங்க பாரு,  எனக்குத் தெரியும், ஏதோ அங்கொன்றும், இங்கொன்றும் சில தவறுகள் நீ செய்வாய். தவறு செய்யாத மனிதனே இல்லை. நீ எந்தத் தவறு செய்தாலும், ஒரு தவற்றை மற்றும் செய்து விடாதே, மாற்றான் மனைவியை விரும்பும் அந்த ஒரு குற்றத்தை மட்டும் செய்து விடாதே"  என்கிறார். 



பாடல் 


அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்

பெண்மை நயவாமை நன்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/10.html



(pl click the above link to continue reading)


அறன்வரையான் = அறத்தின் வரையறைக்குள் உள்ளவற்றை 


அல்ல செயினும் =  மறுத்து, அதற்கு வெளியில் உள்ளதை  செய்தாலும் 


பிறன்வரையாள் = மற்றவன் இல்லற வரைவுக்குள் இருக்கும் பெண்ணை 


பெண்மை நயவாமை நன்று = அந்தப் பெண்ணை விரும்பாமல் இருப்பது நல்லது 


ஆஹா வள்ளுவரே சொல்லிவிட்டார், பிறன் மனை நோக்கும் அந்த ஒரு தவறைத் தவிர மற்ற குற்றங்களை செய்யலாம் என்று, எனவே நான் நாளை முதல் மற்ற குற்றங்கள் எல்லாம் செய்யப் போகிறேன் என்று ஆரம்பித்து விடக் கூடாது. 


"அல்ல செயினும்" என்றால், செய்யக் கூடாது, ஒரு வேளை செய்து விட்டால் கூட, இந்த ஒரு தவறை செய்யக் கூடாது என்று அர்த்தம். 


"நீ ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் படித்தால், மாநிலத்திலேயே முதலாவதாக வருவாய்" என்றால், "படித்தால்" என்பதில் படிக்க முடியாது என்பது தொக்கி நிற்கிறது. 


இல்லறத்தில் இருப்பவன் சில சமயம் தவிர்க்க முடியாமல் சில தவறுகளை செய்ய நேரிடலாம். அந்த மாதிரி சமயத்தில் கூட, பிறன் மனை நோக்கும் தவறை செய்துவிடக் கூடாது என்கிறார். 


நிற்க.


பத்து குறளும் படித்து விட்டோம் இந்த அதிகாரத்தில். 


ஒவ்வொரு குறள் பற்றி எழுதும் போதும், அதற்கு முன்னால் உள்ள குறள் பற்றி எழுதிய வலை தளங்களின் முகவரியை பகிர்ந்து வந்திருக்கிறேன். 


தொகுப்புரை என்று தனியாகத் தேவையா? 



Tuesday, June 28, 2022

கம்ப இராமாயணம் - இராமன் என்றொரு மானுடன் - 5 - திருஇலி வலிக்கு

    

கம்ப  இராமாயணம் - இராமன் என்றொரு மானுடன்  - 5  -  திருஇலி வலிக்கு


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_25.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_23.html


)

 இனித் தொடர்வோம். 


தயரதன் தனக்கு ஒரு வாரிசு இல்லை என்று தன் குல குருவான வசிட்டரிடம் கூறினான். உடனே வசிட்டர் தன் ஞானக் கண்ணால் மேலுலகத்தில் நடந்தவற்றை பார்கிறார். 


தேவர்கள் எல்லோரும் சிவனிடம் சென்று முறையிடுகிறார்கள்.  சிவ பெருமானோ "நான் அரக்கர்களோடு போரிடுவது இல்லை என்று ஒரு வரத்தை அவர்ககளுக்கு கொடுத்து இருக்கிறேன். எனவே நான் அவர்களை எதிர்த்து போரிட முடியாது" என்று கூறிவிட்டு, அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு நான்முகனிடம் போனார். பிரமனும் தன்னால் முடியாது என்று கூறி அனைவரையும் அழைத்துக் கொண்டு பாற்கடல் சென்றனர், திருமாலிடம் முறையிட. 


"பத்துத் தலையும், இருபது கரங்களும் உள்ள அந்த அருள் இல்லாத இராவணனின் கொடுமையை எங்களால் தடுக்க முடியவில்லை. கருணைக் கடலான திருமாலே, நீர் அவனோடு சண்டையிட்டு எங்களை காத்தால் உண்டு" என்று திருமாலிடம் சரண் அடைந்தார்கள். 


பாடல் 



‘இருபது கரம். தலை ஈர்-ஐந்து. என்னும் அத்

திருஇலி வலிக்கு. ஒரு செயல் இன்று. எங்களால்.

கரு முகில் என வளர் கருணைஅம் கடல்

பொருது. இடர் தணிக்கின் உண்டு. எனும் புணர்ப்பினால்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_28.html


(pl click the above link to continue reading)




‘இருபது கரம் = இருபது கரங்கள் 


தலை ஈர்-ஐந்து = பத்துத் தலைகள் 


என்னும் = என்று இருக்கும் 


அத் திருஇலி  = அருள் இல்லதா, கருணை இல்லாத 


வலிக்கு = வலிமை மிக்க இராவணனை அடக்க 


ஒரு செயல் இன்று  = ஒரு செயலையும் செய்ய முடியவில்லை 


எங்களால். = தேவர்களாகிய எங்களால் 


கரு முகில் = கரிய மேகம் 


என  = போல 


வளர் கருணைஅம் கடல் = நாளும் வளரும் கருணைக் கடலே 


பொருது = அவனோடு சண்டையிட்டு 


இடர் தணிக்கின் உண்டு = எங்கள் துன்பத்தை தணித்தால் தான் உண்டு 


எனும் புணர்ப்பினால். = என்ற கருதினால். அந்தக் கருத்தைச் சொன்னார்கள் 


இராவணன் உட்பட எல்லா அரக்கர்களுக்கும் ஒரு சிக்கல் இருக்கிறது. 


மிக மிக கடுமையாக தவம் செய்வார்கள். இறைவனே நேரில் வருவான். கேட்கின்ற வரத்தை எல்லாம் தருவான். நீண்ட ஆயுள், செல்வம், புகழ், பெருமை, வீரம், அனைத்து வித இன்பங்களும் கிடைக்கும். 


வேறு என்ன வேண்டும்? அதை வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டியதுதானே? 


ஆணவம் இருக்க விடுவதில்லை. 


தேவர்களை அடிமைப் படுத்தத் தூண்டும். சரி, அவர்களை வென்று சிறையில் அடைத்து விட்டால் அது அடங்குமா என்றால் இல்லை. அவர்களை துன்புறுத்த வேண்டும். அல்லது தான் தான் கடவுள், தன்னைத் தான் எல்லோரும் வணங்க வேண்டும் என்று ஆணவம் தலை தூக்கும். 


தேவர்களை துன்பப்படுத்தினால் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது? 


அது அரக்கர்களின் சிக்கல் மட்டும் அல்ல. 


நம் சிக்கலும் தான்.


எவ்வளவோ இருக்கிறது. இருக்கிறதை வைத்துக் கொண்டு இன்பமாக இருக்கத் தெரிவதில்லை. இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் அலைவது. பின் முட்டி மோதி அழிவது. இருப்பதையும் அனுபவிக்காமல், ஓடி ஆடி சம்பாதித்தையும் அனுபவிக்காமல், வாழ்வை இழந்து நிற்பது. 


இராவணன் அடுத்தவன் மனைவியை ஆசைப்பட்டான். 


நாம் அடுத்தவன் வைத்திருக்கும் காருக்கு, அவன் போல் பெரிய வீட்டுக்கு, அவன் செல்வத்திற்கு, புகழுக்கு ஆசைப் படுகிறோம். 


இலக்கியம் கொஞ்சம் மிகைப் படுத்தித்தான் கூறும். அடிப்படை என்ன என்றால், இருப்பதைக் கொண்டு இன்பமாக வாழத் தெரியாதவன், மேலும் கொஞ்சம் வந்து விட்டால் மட்டும் இன்பமாக வாழ்ந்து விடுவானா? 


ஒருக்காலும் முடியாது. 


இராவணனின் அழிவு எங்கே ஆரம்பிக்கிறது என்று இராமாயணம் காட்டுகிறது. 


இராம அவதாரம் நிகழவில்லை. சீதை இன்னும் பிறக்கவில்லை. ஆனால், அவனின் அழிவு தீர்மானிக்கப் பட்டு விட்டது. 


எங்கே அறம் பிறழ ஆரம்பிக்கிறதோ, அன்றே அழிவின் விதை ஊன்றப் பட்டுவிட்டது என்று அர்த்தம். விதை வளரும். 


அதை நீங்கள் கடவுள் என்று நம்பினாலும் சரி, இயற்கை என்று கொண்டாலும் சரி, விதி என்று நினைத்தாலும் சரி, எப்படி என்றாலும் அறம் பிறழத் தலைப்பட்டால் அழிவின் தொடக்கம் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


அறம் ஒன்றும் அவசரப்படாது.  நின்று, நிதானமாக வேலை செய்யும். நமக்குத்தான் என்பது வருடம், நூறு வருடம் என்று ஆயுள் கணக்கு இருக்கிறது. அறத்திற்கு காலம் ஒரு பொருட்டு அல்ல. அது என்றும் நிலைத்து நிற்பது. அது தன் பாட்டுக்கு தன் வேலையைத் தொடரும். 






Monday, June 27, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 9 - தோன்தோயா தார்

திருக்குறள் - பிறனில் விழையாமை - 9 -  தோன்தோயா தார்


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html


குறள் 144 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html


குறள் 145 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_19.html


குறள் 146 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_21.html


குறள் 147 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7_23.html


குறள் 148 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/8_24.html


)


நாம் வாழும் இந்த பூமி என்பது சதவீதம் நீரால் சூழப்பட்டது. நீர் என்றால் ஏதோ சின்ன குளம், குட்டை அல்ல. என்னவென்று தெரியாத ஆழம், அகலம் கொண்ட பிரமாண்டமான நீர் பரப்பு. கடல் அவ்வளவு பெரியது. 


அந்தக் கடல் சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் நிலப் பரப்பு முழுவதும் ஒரு நொடியில் மூழ்கிப் போய் விடும். 


அவ்வளவு பெரிய ஆபத்துக்கு மத்தியில் நாம் இருக்கிறோம். எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நிகழலாம். 


இருந்தும், இந்த ஆபத்துக்கு நடுவில் எல்லா நலன்களும் பெற்று வாழ்பவர் யார் என்றால், பிறன் மனைவியை தோளோடு தோள் சேர அனைக்காதவன் என்கிறார் வள்ளுவர். 



பாடல் 


நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்

பிறற்குரியாள் தோன்தோயா தார்.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/9.html


(pl click the above link to continue reading)


நலக்குரியார் = நலத்துக்கு உரியவர் 


யாரெனின் = யார் என்று கேட்டால் 


நாமநீர் = கடல் நீர் 


வைப்பின் = சூழ்ந்து இருக்கும் இந்த உலகில் 


பிறற்குரியாள் = மற்றவனுக்கு  உரியவள் 


தோன்தோயா தார். = தோளில் தோயாதவர், அணைத்துக் கொள்ளாதவர் 


கடல் சீற்றம் கொண்டால், "இவன் நல்லவன், பிறன் மனை நோக்கா பேராண்மையாளன் , எனவே இவனை விட்டு விடுவோம்"  என்றா நினைக்கும்? அவனும் சேர்ந்து தானே மூழ்கிப் போவான்?


அங்குதான் பரிமேலழகர் வருகிறார். 


"ஆம். அவனும் தான் இறப்பான். ஆனால், அவனுக்கு மறு பிறப்பில், அல்லது மேல் உலகில் நல்ல கதி கிடைக்கும். மறுமையில் இன்பம் கிடைக்கும். பிறன் மனை நோக்கியவனுக்கோ இம்மையிலும் மறுமையிலும் இன்பம் இல்லை" என்று உரை எழுதுகிறார். 


பிறன் மனை நோக்கியவன் இந்தப் பிறவியிலும் பயந்து பயந்து வாழ வேண்டும். மறு பிறவியிலும் நல்லது நடக்காது. 


எவ்வளவு ஆழமாக எழுதி இருக்கிறார்கள். அதை எவ்வளவு உன்னிப்பாக படித்து  இருக்கிறார்கள். 


திருக்குறள் தாண்டி இன்னொரு புத்தகம் வேண்டுமா? 







Saturday, June 25, 2022

கந்தரலங்காரம் - 60 - கிலேசம்

 கந்தரலங்காரம் - 60 - கிலேசம் 


நமக்கு எவ்வளவோ துன்பங்கள் வந்து இருக்கிறன்றன. இனியும் வரலாம். 


அருணகிரிநாதர் மனிதனுக்கு வரும் துன்பங்களை எல்லாம் இரண்டாகப் பிரிக்கிறார். மொத்தமே இரண்டு வகையான துன்பங்கள்தான் உண்டு. 


ஒன்று உடலுக்கு வரும் துன்பம். 


மற்றது மனதுக்கு வரும் துன்பம். 


இதில், மனதுக்கு வரும் துன்பம்தான் மிக மிக அதிகமானது. தலைவலி, கால்வலி, வயிற்று வலி போன்ற உடல் சார்ந்த துன்பங்கள் வரும் போகும். காய்ச்சல், சளி, போன்றவை வந்து போகும் தன்மை கொண்டவை. ஏதோ விபத்தில் கை கால் முறிந்து விட்டால் கூட கட்டுப் போட்டு சரியாகி விடும். 


மிக மிக சிறிய அளவிலான உடல் சார்ந்த துன்பங்கள்தான் தீர்க்க முடியாமல் நீண்ட நாள் இழுத்துக் கொண்டு இருக்கும். பெரும்பாலான உடல் சார்ந்த துன்பங்கள் அப்படி அல்ல.


ஆனால், இந்த மனம் சார்ந்த துன்பங்கள் இருக்கிறதே, அதற்கு ஒரு எல்லை கிடையாது. 


பயம், பொறாமை, வெறுமை, படபடப்பு, மன அழுத்தம், வெறுப்பு, கோபம், ஏக்கம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். 


எவ்வளவு செல்வம் இருந்தாலும், மற்றவன் என்னை விட அதிகம் வைத்து இருக்கிறானே என்ற எண்ணம் வந்து விட்டால், அந்த மனத் துயருக்கு ஏது மருந்து? 


கிலேசம் என்றால் துன்பம். 


உடல் கிலேசம், மனக் கிலேசம் என்கிறார் அருணகிரிநாதர். 


உடலை சரியாக வைத்துக் கொள்ள உடல் பயிற்சி, உணவு கட்டுப் பாடு, அதையும் மீறி ஏதாவது வந்து விட்டால் மருத்துவரை நாடி பரிசோதனைகள் செய்து, மருந்து உண்டு உடல் துன்பத்தைப் போக்கிக் கொள்கிறோம். 


மனத் துன்பத்தை என்ன செய்வது? சிக்கல் என்ன என்றால், பல நேரம், மன துன்பம் இருக்கிறது என்று கூடத் தெரியாது. 


அருணகிரிநாதர் இரண்டு துன்பங்களும் ஏன் வந்தன, அவை வராமல் எப்படி தடுப்பது என்று கூறுகிறார். 


பாடல் 


சிந்திக்கிலேனின்று சேவிக்கிலேன் றண்டைச் சிற்றடியை

வந்திக்கிலேனொன்றும் வாழ்த்துகிலேன் மயில்வாகனனைச்

சந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேனுண்மை சாதிக்கிலேன்

புந்திக்கிலேசமுங் காயக்கிலேசமும் போக்குதற்கே.


சீர் பிரித்த பின் 


சிந்திக்கிலேன் நின்று  சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை

வந்திக்கிலேன் ஒன்றும்  வாழ்த்துகிலேன் மயில்வாகனனைச்

சந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன்

புந்திக்கிலேசம்  காயக்கிலேசமும் போக்குதற்கே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/60.html



(click the above link to continue reading)



சிந்திக்கிலேன் = சிந்திக்க மாட்டேன், மனதில் நினைக்க மாட்டேன் 


நின்று  சேவிக்கிலேன் = நின்று வணங்க மாட்டேன் 


தண்டைச் சிற்றடியை =  தண்டை அணிந்த சிறிய திருவடியை 


வந்திக்கிலேன் = வணங்க மாட்டேன் 


ஒன்றும்  வாழ்த்துகிலேன் = ஒரு வாழ்த்தும் சொல்ல மாட்டேன் 


மயில்வாகனனைச் = மயில் வாகனனை, முருகனை 


சந்திக்கிலேன் = சந்திக்க மாட்டேன் 


பொய்யை நிந்திக்கிலேன் = பொய்யை வெறுக்க மாட்டேன் 


உண்மை சாதிக்கிலேன் = உண்மையை நிலை நிறுத்த முயல மாட்டேன் 


புந்திக்கிலேசம் = புத்தியில், ,மனதில் வரும் துன்பத்தையும் 


காயக்கிலேசமும் =உடலுக்கு வரும் துன்பத்தையும் 


போக்குதற்கே. = போக்குவதற்கு 


இவை ஒன்றும் செய்யாமல் "ஐயோ, எனக்கு உடல் துன்பம் வந்து விட்டதே, மன உளைச்சலில் கிடந்து உழல்கின்றேனே" என்று வருந்துவதில் பயன் இல்லை. 


இதில் ஓரிரண்டு செய்திகளை நாம் ஆழ்ந்து சிந்திக்கலாம்.



"பொய்யை நிந்திக்கிலேன்". பொய் என்றால் தவறானவை என்று பொருள் கொள்ள வேண்டும். இன்று என்ன நடக்கிறது? தவறுகள் போற்றப் படுகின்றன. இலஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பவர்கள் பெரிய திறமைசாலிகள் என்று வியக்கப்படுகிரார்கள். 


"அவர் பணம் வாங்கிட்டார்ணா, எப்படியாவது காரியத்தை முடித்து கொடுத்து விடுவார் " என்று பணம் வாங்குபவரை புகழும் காலம் வந்து விட்டது. 


"சட்டத்தின் ஓட்டைக்குள் புகுந்து வெளியில் வந்து விடுவார்...பெரிய கில்லாடி" என்று சட்டத்தை மீறுபவர்களுக்கு புகழாரம். 


பணம் கொடுத்து பிள்ளைக்கு கல்லூரியில் இடம் வாங்கிய தகப்பன் காலரை தூக்கி விட்டுக் கொள்கிறார். தலை குனிவதை விட்டு விட்டு. 


மனக் கிலேசம் வராமல் என்ன செய்யும் ?


"சிந்திக்கிலேன்". காலையில் எழுந்தவுடன் youtube இல்  அல்லது ஏதோ ஒரு mp3 இல் பக்திப் பாடலை ஓட விட்டுக் கொண்டு, அடுப்படி வேலை எல்லாம் நடக்கும். கேட்டால் பக்தி என்பது. அந்த ஒரு குறிப்பிட்ட பாடலை கேட்காமல் காப்பி கூட குடிப்பது இல்லை என்று பெருமை வேறு. தவறு இல்லை. ஆனால், அது பக்தி இல்லை. மனம் ஒன்ற வேண்டும். ஒரு வரி, ஒரு சொல் ...அது பற்றி சிந்திக்க வேண்டும். 


"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே" என்ற ஒரு வாக்கியத்தைப் படித்த பட்டினத்தார் அத்தைனையும் துறந்தார். 


நாமும் இந்த வரியை எத்தனையோ முறை படித்து இருக்கிறோம். ஒன்றையும் விட முடியவில்லை. காரணம்,  "சிந்தனை இல்லை". ஏதோ இரண்டும் இரண்டும் நாலு என்று வாய்ப்பாடு போல படித்துவிட்டு மேலே போய் விடுகிறோம். 


சிந்தனை இல்லை, 

பணிவு இல்லை,

பொய்யின் மேல் வெறுப்பு இல்லை, 

உண்மை மேல் நாட்டம் இல்லை, 

இறை தேடல் இல்லை, 

வாழ்த்தும் மனம் இல்லை, 


துன்பம் எப்படிப் போகும் என்று கேட்கிறார். 










Friday, June 24, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 8 - பேராண்மை

   

  

திருக்குறள் - பிறனில் விழையாமை - 8 -  பேராண்மை  


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html


குறள் 144 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html


குறள் 145 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_19.html


குறள் 146 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_21.html


குறள் 147 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7_23.html


குறள் 148 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/8_24.html


)


ஆண்மை என்றால் வீரம், கம்பீரம், துணிவு, வலிமை என்று பொதுவாக பொருள் சொல்லலாம். 


வீரம் என்றால் பகைவர்களை வெல்வது, அவர்கள் வலிமையை ஒடுக்குவது என்று கொள்ளலாம். 


வெளியில் உள்ள பகையை வெல்வது எளிது. உள்ளே உள்ள பகையாகிய காமத்தை வெல்வது மிகக் கடினம். 


எனவே வள்ளுவர் வெளிப் பகையை வெல்வதை ஆண்மை என்றும், உள் பகையான காமத்தை வெல்வதை பேராண்மை என்றும் கூறுகிறார். 


இராவணன் ஆண்மை மிக்கவன்தான். வெளிப் பகை எல்லாம் வென்று , அடக்கி ஒடுக்கினான். ஆனால், உட்பகையான காமத்தை வெல்ல முடியவில்லை. 


சீதையிடம் மண்டியிடுகிறான், காலில் விழுகிறான். கெஞ்சுகிறான்.  எங்கே போயிற்று ஆண்மை? 


'இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்"  தந்த இராமன் பேராண்மையால் உயர்ந்து நிற்கிறான். 


பாடல் 


 

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு



பொருள் 



(pl click the above link to continue reading)


பிறன்மனை = மாற்றான் மனைவியை 


நோக்காத = நோக்காத 


பேராண்மை = பேராண்மை, பெரிய ஆண்மை 


சான்றோர்க்கு = சான்றோருக்கு 


அறனொன்றோ = அறன், காவல் 


ஆன்ற ஒழுக்கு = நிறைந்த ஒழுக்கமும் 


சான்றோருக்கு, மற்றவன் மனைவியை நோக்கமல் இருப்பது காவலும், அறமும் ஆகும் என்கிறார். 


இதில் பரிமேலழகர் செய்யும் நுணுக்கங்கள் சுவையானவை. 


ஒவ்வொன்றாகப் பார்ப்போம். 


"நோக்கா".  மற்றவன் மனைவியை பார்க்காமல் இருப்பது என்று அர்த்தமா? அது முடியுமா? வேலைக்குப் போகிறோம். எவ்வளவோ திருமணம் ஆன பெண்கள் உடன் வேலை செய்கிரார்கள். அவர்களை எல்லாம் பார்க்கக் கூடாது என்றால் ஒன்று நாம் வேலைக்குப் போகக் கூடாது, அல்லது அவர்கள் வேலைக்கு வரக் கூடாது. அது முடியாத காரியம். 


நோக்குதல் என்றால் "உள்வாங்குதல்" என்று உரை செய்கிறார்.  இந்த இடத்தில் காமக் கண்ணோட்டத்தோடு பார்ப்பது என்று பொருள். ஆசையோடு பார்த்தல்.  ஒரு அர்த்தத்தோடு பார்த்தல்.


"அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்" என்பான் கம்பன். அங்கே காதல் இருந்தது. 


மாற்றான் மனைவி மேல் வைப்பது காதல் அல்ல, காமம். 


"சான்றோருக்கு" அது என்ன குறிப்பாக சான்றோற்கு என்கிறார்?  சான்றோர் என்றால் யார்? அனைத்து நல்ல குணங்களும் நிறைந்தவர்கள். குறை ஒன்றும் இல்லாதவர்கள். அவர்களைப் பார்த்து நாம் படிக்க வேண்டும். 


"அறனொன்றோ". அறன் புரிகிறது. அது என்ன "ஒன்றோ" ? 


கொஞ்சம் இலக்கணம் படிப்போம். அப்போதுதான் அது புரியும். 


தமிழ் இலக்கணத்தில் "எண்ணிடை" என்று ஒன்று உண்டு. 


அதற்கு முன் உருபு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். 


எழுத்து, சொல், வரி அல்லது வாக்கியம், பத்தி (para), கதை/கட்டுரை என்று விரிந்து கொண்டே போகிறது அல்லவா?


வீடு கட்டும் போது செங்கல் மேல் செங்கல் அடுக்கிக் கொண்டே போக முடியாது. இரண்டு செங்கல் ஒன்றை ஒன்று இறுக பற்றிக் கொள்ள வேண்டும் என்றால் நடுவில் கொஞ்சம் சாந்து வேண்டும். சிமென்ட் அல்லது காரை என்று சொல்லுவார்கள். அதை இரண்டு செங்கலுக்கு நடுவில் வைத்து கட்டினால் தான் கட்டிடம் உறுதியாக இருக்கும். 


அது போல இரண்டு சொற்களை கட்டுவதற்கு 'உருபு'  என்ற ஒன்றைப் பயன் படுத்துகிறோம். து ஒரு இடைச் சொல். அது பற்றி ஒரு தனி புத்தகமே எழுதலாம். 


மிகவும் சுவையான பகுதி. 


அவள் முகம் நிலவு  இருந்தது 


என்றால் ஏதோ சரியாக இல்லை என்று தோன்றுகிறது அல்லவா? 


அவள் முகம் நிலவு போல இருந்தது 


என்றால் சரியாக இருக்கிறது அல்லவா? இங்கே போல என்பது ஒரு உருபு. 


இராமன் இராவணன் கொன்றான் 


என்றால் சரியாக இருக்கிறதா? இல்லையே 


இராமன் இராவணனைக் கொன்றான் 


இப்போது சரியாக இருக்கிறது அல்லவா? இங்கே இராவணனை என்பதில் உள்ள  'ஐ' என்பது ஒரு உருபு. 


அது பற்றி பின்னர் விரிவாக காண்போம். 


குறளுக்கு வருவோம். 



"அறனொன்றோ " என்பதில் 'ஒன்றோ' என்பது 'எண்ணிடை உருபு என்கிறார் பரிமேலழகர். 


ஒரு பட்டியல் இருக்கிறது என்றால், அது முழுமையாக தெரிந்து விட்டால் அதற்கு எண்ணிடை உருபை பயன் படுத்தலாம். 


உதாரணமாக 


மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் சுவையானவை. 


இதில் 'ஆகிய' என்பது எண்ணிடை உருபு. 


கண், வாய், செவி, மூக்கு, தோல் ஆகிய ஐந்து புலன்களும் 

இயல் , இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் 


என்று கூறும் போது அந்த பட்டியல் முடிந்து விடுகிறது. மொத்தமும் அவ்வளவுதான். அதற்கு மேல் ஒன்றும் இல்லை. 


எனவே, அங்கு எண்ணிடை உருபை பயன்படுத்தலாம். 


இங்கே 


"அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு" என்பதில் அறமும், ஒழுக்கமும் ஆகிய இரண்டும் இந்த ஒன்றைச் செய்யாமையால் வரும் என்கிறார். 


ஒன்றோ என்பது எண்ணிடை உருபு. 


இறுதியாக, அறம் செய்வது கடினமான காரியம். அறத்தின் வழி வாழ்வது என்பது கத்தி மேல் நடப்பது போல. மிக மிக எச்சரிகையாக இருக்க வேண்டும். 


ஆனால், சில சமயம் ஒன்றும் செய்யாமலேயே அற வழியில் நாம் செல்ல முடியும். சும்மா இருந்தால் போதும். 


உதாரணமாக, மற்றவன் பொருளை களவாடாமல் இருந்தால் அது ஒரு அறம். 


எடுக்காமல் இருந்தால் போதுமே. 


பொய் சொல்லமால் இருந்தால் அது ஒரு அறம். 


அது போல, பிறன் மனை நோக்காமல் இருந்தால் அதுவே ஒரு அறம். 


எவ்வளவு எளிது !


" செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்" 


என்று பரிமேலழகர் முடிக்கிறார். 




Thursday, June 23, 2022

கம்ப இராமாயணம் - இராமன் என்றொரு மானுடன் - 5 - யான் இனி அடுகிலேன்

   

கம்ப  இராமாயணம் - இராமன் என்றொரு மானுடன்  - 5  -  யான் இனி அடுகிலேன்


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_25.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4_22.html


)

 இனித் தொடர்வோம். 


தயரதன் தனக்கு ஒரு வாரிசு இல்லை என்று தன் குல குருவான வசிட்டரிடம் கூறினான். உடனே வசிட்டர் தன் ஞானக் கண்ணால் மேலுலகத்தில் நடந்தவற்றை பார்கிறார். 


தேவர்கள் எல்லோரும் சிவனிடம் சென்று முறையிடுகிறார்கள்.  சிவ பெருமானோ "நான் அரக்கர்களோடு போரிடுவது இல்லை என்று ஒரு வரத்தை அவர்ககளுக்கு கொடுத்து இருக்கிறேன். எனவே நான் அவர்களை எதிர்த்து போரிட முடியாது" என்று கூறிவிட்டு, அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு 



பாடல்  


சுடு தொழில் அரக்கரால் தொலைந்து. வான் உளோர்.

கடு அமர் களன் அடி கலந்து கூறலும்.

படு பொருள் உணர்ந்த அப் பரமன். ‘யான் இனி

அடுகிலேன்’ என மறுத்து. அவரொடு ஏகினான்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_23.html


(pl click the above link to continue reading)


சுடு தொழில் = தீய தொழில்களை செய்யக் கூடிய 


அரக்கரால் = அரக்கர்களால் 


தொலைந்து = வாழ்வை தொலைத்து 


வான் உளோர். = வானில் உள்ள தேவர்கள் 


கடு = கசப்பு, நஞ்சு 


அமர் = அமர்ந்த, இருந்த, தங்கிய 


களன் = கழுத்து (நஞ்சு கழுத்தில் தங்கிய = சிவன்) 


 அடி கலந்து கூறலும் = திருவடிகளை பணிந்து கூறிய பின் 


படு பொருள் = இனி வரப் போவதை 


 உணர்ந்த = உணர்ந்த 


அப் பரமன் = அப்பரமன், பெரிய கடவுள் 


 ‘யான் இனி = நான் இனி 


அடுகிலேன்’ = (அரக்கர்களோடு) போர் புரிய மாட்டேன்  (தந்த வரம் காரணமாக) 


என மறுத்து = என்று மறுத்து 


அவரொடு ஏகினான் = அவர்களை (தேவர்களை) கூட்டிக் கொண்டு போனான் 


எங்கே போனான் என்பதை அடுத்த பாட்டில் சொல்கிறார் கம்பர். 


இதெல்லாம் திருமால் இராமன் என்ற மானுட அவதாரம் எடுப்பதற்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகள். 


இராமாயணம் எப்படி உருவானது, அதன் கதைக் கரு எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்வோம்.  

திருக்குறள் - பிறனில் விழையாமை - 7 - பிற பெண் நயவாமை

  

  

திருக்குறள் - பிறனில் விழையாமை - 7 -   பிற பெண் நயவாமை 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html


குறள் 144 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html


குறள் 145 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_19.html


குறள் 146 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_21.html


)

வாழ்வின் நோக்கம் என்ன? எதற்காக வாழ்கிறோம்? முடிவில் எதை சாதிக்க நினைக்கிறோம்? 


ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இருந்து விட்டு போவதா வாழ்க்கை?


வாழ்வின் நோக்கம் வீடு பேறு. முக்தி. இறைவன் திருவடி. தன்னைத் தான் அறிதல். உண்மையை அறிதல். துன்பத்தில் இருந்து விடுபடுதல். பிறவித் துயர் நீங்கல் என்று எது வேண்டுமானாலும் உங்கள் குறிக்கோளாக இருந்துவிட்டுப் போகட்டும். ஏதோ ஒன்றைப் பற்றிக் கொண்டால், அதை அடைய முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா? 


பலபேருக்கு குறிக்கோளே இருப்பதில்லை. ஏதோ நாட்கள் ஓடிக் கொண்டு இருக்கிறது. 


சிலருக்கு குறிக்கோள் இருக்கும், அதை அடைய என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது. 


இன்னும் சிலருக்கு, குறிக்கோள் இருக்கும், என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியும். ஆனால் செய்ய மனம் இருக்காது. சோம்பேறித்தனம் மேலோங்கி நிற்கும். அவர்கள் என்ன செய்வார்கள், மேலும் மேலும் படித்துக் கொண்டே இருப்பார்கள். எதற்கு என்று தெரியாது. இதுவரை படித்ததில் எத்தனை நடைமுறையில் செய்து இருக்கிறார்கள் என்று கேட்டால் ஒன்றும் இருக்காது. சும்மா ஒரு சுவைக்காக படிப்பது. நல்லா இருக்கு, very nice என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவது. 


வள்ளுவர் தன் நூலை பொழுது போக்குக்காக எழுதவில்லை. 


வீடு பேறு அடைய வேண்டும் என்ற குறிக்கோளை மனதில் கொண்டு எழுதுகிறார். 


வீடு பேறு அடைய வேண்டும் என்றால், பற்று விட வேண்டும். 


பற்று விட வேண்டும் என்ன்றால் துறவறம் வேண்டும். 


துறவறம் வேண்டும் என்றால் இல்லறம் வேண்டும். .


இல்லறம் வேண்டும் என்றால் அதற்கு சில ஒழுக்க விதிமுறைகள் வேண்டும். கட்டுப் பாடு வேண்டும். 


இல்லறம் என்பது ஏதோ கல்யாணம் பண்ணி, பிள்ளைகள் பெற்றுக் கொள்வது அல்ல. 


அறத்தோடு இல்லதில் வாழ்வது.  


அந்த அறத்தில் ஒரு கூறு "மாற்றான் மனைவியை விரும்பாமல் இருப்பது". 


அந்தத் தவறு நிகழுமானால், இல்லறம் சிதையும். இல்லறம் சிதைந்தால் துறவறம் சிதையும். வீடு பேறு என்பது நிகழாது. 


எனவே, இல்லறத்தை சரி செய்ய வேண்டும், அதில் தவறு நிகழ்ந்து விடக் கூடாது என்று இந்த அதிகாரத்தை எழுதிக் கொண்டு போகிறார் வள்ளுவர். 


அடுத்த குறளில் 


"அற இயல்போடு இல்லறத்தில் ஈடுபட்டவன் என்பவன் யார் என்றால், மற்றவன் மனைவியை விரும்பாதவன்"


என்கிறார். 


பாடல் 


அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறஇயலாள்

பெண்மை நயவா தவன்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7_23.html


(pl click the above link to continue reading)



அறன்இயலான் = அறமாகிய இயல்போடு கூடி 


இல்வாழ்வான் என்பான் = இல்லறத்தில் வாழ்பவன் என்று கூறப்படுபவன் யார் என்றால் 


பிறஇயலாள் = பிறன் இயல்பை அறிந்து அவனோடு ஒன்றி வாழும் 


பெண்மை நயவா தவன் = பெண்ணை விரும்பாதவன் 


இல்லறத்தான் என்றால் ஏதோ திருமணம் ஆகி, பெண்ட்டாடி பிள்ளைகள், உறவு, சுற்றம் என்று இருப்பவன் அல்ல. 


எவன் ஒருவன் மாற்றான் மனைவியை விரும்பாமல் இருக்கிறானோ, அவனே இல்லறத்தில் உள்ளவன் என்று கூரப்படுவான் என்கிறார். 


மேலும், 


இங்கே இல்லறத்தின் ஒரு முக்கிய தன்மையை குறிப்பிடுகிறார். 


மனைவி என்பவள், கணவன் இயல்பை அறிந்து அவனோடு ஒன்றி வாழ்பவள் என்று கூறுகிறார். "ஆஹா, அது என்ன மனைவிக்கு மட்டும் அப்படி ஒரு கட்டுப்பாடு. கணவன் என்பவன் மனைவியின் இயல்பை அறிந்து ஒட்டி வாழ்பவன் என்று ஏன் கூறவில்லை. பெண்ணடிமைத்தனம். பிற்போக்கு வாதிகள்" என்று கொடி பிடிப்பவர்கள் பிடிக்கட்டும். 


யாரோ ஒருவர் மற்றவர் இயல்போடு ஒன்றித்தான் ஆக வேண்டும். ஆளுக்கு ஒரு இயல்பு என்று இழுத்துக் கொண்டிருந்தால் இல்லறம் பழுதுபடும். 


ஆளுக்கு ஒரு பக்கம் என்றால், திருமணம் ஏன் செய்ய வேண்டும்? தனித்தனியே இருந்து விட்டுப் போகலாமே? யார் தடுத்தது? 


ஒரு வண்டி ஓடுகிறது என்றால் ஒவ்வொரு பாகமும் அதன் கடமையைச் செய்ய வேண்டும். நான் ஏன் வண்டியை நிறுத்த வேண்டும், நான் வண்டியை நிறுத்த மாட்டேன், வேகமாக ஓடச் செய்வேன் என்று பிரேக் அடம் பிடித்தால் என்ன செய்வது? ஒரே நாளில் வண்டி காயலான் கடைக்குப் போய்விடும். 


யாரவது ஒருவர் ஒத்துப் போங்கள் என்று சொன்னால், யார் என்று சண்டை வரும். 


எனவே, ஒரு விதி செய்தார்கள். பெண் ஒத்துப் போக வேண்டும் என்று. ஒரு சில வீட்டில் விதி விலக்காக பெண் முன் எடுத்துச் செல்வாள். ஆண் அடங்கிப் போவான். விதி விலக்குகள் இருக்கின்றன என்பதற்காக அதை விதியாக்க முடியாது. 


இங்கொன்றும் அங்கொன்றும் அப்படி இருக்கும். இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான். 


அவருக்காக என்று பெண் தன்னை மாற்றிக் கொள்வது, அவளின் காதல். 


எனக்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்து இருக்கிறாள் என்று கணவன் உருகுவது, அவனின் காதல். 


அது இல்லறம். 


நான் என்ன விட்டுக் கொடுப்பது என்று குஸ்தி போடுவது, மல்யுத்த மைதானம்.