Tuesday, September 17, 2024

திரிகடுகம் - துயரம் வரும் வழி

 திரிகடுகம் - துயரம் வரும் வழி 


திரிகடுகம் என்ற நூலில், ஒவ்வொரு பாடலும் மூன்று கருத்துகளை கொண்டு இருக்கும். 


துயரம் வரும் வழி எது? மூன்று விடயங்கள் துயரம் தரும் என்கிறது. 


ஏதோ ஒரு புது ஊருக்குப் போய் இருப்போம். சுற்றுலா என்று வைத்துக் கொள்ளுங்களேன். போன இடத்தில் ஒரு அருமையான நீர் ஓடும் ஒரு இடம். அது ஓடையாக இருக்கலாம், ஆறாக இருக்கலாம், செயற்கை நீரோட்டமாக இருக்கலாம். நமக்கு பழக்கம் இல்லாத நீரோட்டம். அதில் சென்று மட மட என்று இறங்குவது துயர் தரும். ஆழம் தெரியாது, நீரின் வேகம் தெரியாது. அதில் சுழல் இருக்குமா, உள்ளே இழுக்குமா என்று தெரியாது. அதில் இறங்குவது துன்பம் தரும். 


அன்பு இல்லாத பெண்களைச் சேர்வது. பொதுவாக விலை மகளிரை குறித்தாலும், கட்டிய மனைவியாகவே இருந்தாலும், அன்பு இல்லாத பெண்ணிடம் சேர்ந்து வாழ்வது துன்பம் தரும். 


சில பேர் ஏதோ ஒரு காரணத்துக்காக வேறு ஊர் செல்வார்கள். வேலை நிமித்தம், அல்லது திருமணம் போன்ற சடங்குகளை காண என்று ஏதோ ஒரு காரணம் இருக்கும்.  அந்த ஊரில் எங்கே தங்குவது என்ற கேள்வி வரும். நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து, அவர்கள் வீட்டில் அழையா விருந்தாளியாக போய் தங்குவது. அவர்களின் சங்கடம், வீட்டுச் சிக்கல்கள் இது பற்றியெல்லாம் கவலைப் படாமல், அவர்கள் வீட்டுக்குப் போய் தங்குவது துயரம் தரும் என்கிறது திரிகடுகம். 


பாடல்   



வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், ஒப்ப

வீழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்து

விருந்தினனாய் வேற்றூர் புகலும், - இம் மூன்றும்

அருந் துயரம் காட்டும் நெறி. . . . 


பொருள்


வழங்காத் = போய் வந்து பழக்க வழக்கம் இல்லாத 


துறை = நீர் துறை, ஆற்றங்கரை 


இழிந்து = இறங்கி 


நீர்ப் போக்கும் = நீர் ஓடும் இடமும் , 


ஒப்ப = ஒன்றாக, ஒரு மனதாக 


விழைவு = விருப்பம், அன்பு 


இலாப் பெண்டிர்  = இல்லாத பெண்கள் 


தோள் சேர்வும் = அவர்கள் தோளைச் சேர்வதும், கட்டி அணைப்பதும், 


உழந்து = கஷ்டப்பட்டு 


விருந்தினனாய்  = விருந்தினனாய் 


வேற்றூர் புகலும் = வெளி ஊரில் ஒருவர் வீட்டுக்குச் செல்வதும் 


இம் மூன்றும் = இந்த மூன்றும் 


அருந் துயரம் = பெரிய துன்பத்தைக் 


காட்டும் நெறி = கொடுக்கும் வழிகளாகும் 


 


Thursday, September 12, 2024

திருக்குறள் - தோற்றமும், செயலும்

திருக்குறள் - தோற்றமும், செயலும் 


நல்லவர் யார், தீயவர் யார் என்று எப்படி அடையாளம் கண்டு கொள்வது?


வெளியில் பார்த்தால் துறவிகளுக்கான உடை, நாக்கில் எப்போதும் இறைவன் நாமம், பழைய நூல்களில் இருந்து எப்போதும் மேற்கோள், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் பாண்டித்தியம், புராண, இதிகாசங்களில் இருந்து மேற்கோள்...என்று ஒரு துறவிக்கு உண்டான அனைத்து இலட்சணங்களும் இருக்கும். 


ஆனால், செயலோ மிக மிக கீழ்த்தரமாக இருக்கும். 


நமக்குத் தெரிவது எல்லாம் வெளி வேடம் தானே. உள்ளுக்குள் போய் நாம் எப்படி ஒருவரை இனம் காண முடியும்?


வள்ளுவர் அதற்கும் ஒரு வழி சொல்கிறார். 


ஒருவன் நல்லவனா, கெட்டவனா என்பதை அவன் வெளித் தோற்றத்தை வைத்து முடிவு செய்யாதே. அவன் செய்த செயலை வைத்து முடிவு செய், என்கிறார்.


அம்பு பார்பதற்கு நேர்த்தியாக, கூறாக அழகாக இருக்கும். ஆனால், அதன் தொழில் உயிரை பறிப்பது. 


யாழ் என்பது பார்பதற்கு வளைந்து நெளிந்து ஒரு அழகான வடிவம் இல்லாமல் இருக்கும். ஆனால் அதில் இருந்து இனிமையான நாதம் வரும். 


அழகாக இருப்பது எல்லாம் நல்லதும் அல்ல. அழகு இல்லாமல் இருப்பது எல்லாம் தீமையானதும் அல்ல. 


பாடல் 

 


கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல்


பொருள் 


கணை = அம்பு 


கொடிது = கொடுமையானது (உயிர்களைப் பறிப்பதால்) 


யாழ் = யாழ் என்ற இசை வாத்தியம் 


கோடு  = வளைவு உள்ளது 


செவ்விது = செம்மையானது 


ஆங்கு அன்ன - அது போல 


வினைபடு பாலால் = வினையால் விளையும் பலனால் 


கொளல் = ஏற்றுக் கொள்க 


கலர் கலரான உடையும், நளினமான சொல்லும், உடம்பு பூராவும் சமயச் சின்னங்களும்...வெளித் தோற்றத்தை வைத்து எடை போடாதே. 


கடந்த சில வருடங்களில் அவன் என்ன செய்திருக்கிறான் என்று பார். அதில் எவ்வளவு வருமானம் நோக்கி, எவ்வளவு பொது நல சேவை நோக்கி என்று பார். 


பின் முடிவு செய். 


அவன் என்ன செய்திருக்கிறான் என்று தெரியவில்லையா, அவன் நல்லவன் என்று முடிவு செய்யாதே. அப்படி ஒரு முடிவு எடுத்தால் அது புறத் தோற்றத்தை பார்த்து எடுத்த முடிவாகவே அமையும். 





Tuesday, September 10, 2024

திருமந்திரம் - களிம்பு அறுத்தானே

 திருமந்திரம் - களிம்பு அறுத்தானே 



சில சமயம், நம் கண் கண்ணாடியில் அழுக்கு படிந்து இருக்கும். விரல் பட்டு கொஞ்சம் எண்ணெய் பிசுக்கு இருக்கும். அந்தக் கண்ணாடி மூலம் பார்த்தால் எல்லாம் மங்கலாகத் தெரியும். சரிவரத் தெரியாது. 


கண்ணாடி என்றால் சுத்தம் செய்து போட்டுக் கொள்ளலாம். கண்ணில் குறை இருந்தால்?  முதலில் குறை இருக்கிறது என்று தெரிய வேண்டும். பல பேருக்கு அவர்கள் கண்ணில் குறை இருப்பதே தெரியாது. தெரிந்த பின் அதை மருத்துவரிடம் காண்பித்து சரி செய்ய வேண்டும். 


சரி, கண்ணாடியை சரி செய்யலாம், கண்ணைக் கூட சரி செய்து விடலாம். மூளையில் கோளாறு என்றால் என்ன செய்வது?  


ஒருவருக்கு மூளையில் உள்ள ஒரு குறையினால் நீல நிறம் தெரியாது என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பொறுத்தவரை நீலம் என்ற ஒன்றே கிடையாது. எத்தனை பேர், எத்தனை முறை சொன்னாலும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியாது. 


அது போல, நம் மனதில், சித்தத்தில் சில அழுக்குகள், கறைகள் படிந்து விடுகின்றன. அவற்றின் மூலம் நாம் உலகைப் பார்க்கும் போது அது சரியாகத் தெரியாது. 


சிக்கல் என்ன என்றால், நம் அறிவில் அப்படி ஒரு குறை இருக்கிறது என்றே நமக்குத் தெரியாது. நாம் பார்பதுதான் சரி என்று நாம் நினைத்துக் கொண்டு இருப்போம். வெளியில் இருந்து ஒரு ஆள் வந்து சொன்னால் தான் அது தவறு என்று புரியும். 


ஆன்மாவானது ஆணவம், கன்மம் போன்ற கறைகளால் (மலங்களால்) சூழப் பட்டிருக்கிறது. அதற்கு அது தெரியாது. குழம்பிய அறிவின் மூலம் அது உலகை புரிந்து கொள்ள நினைக்கிறது. அது தவறான பார்வையாகத்தான் முடியும். இறைவன், உயிர்கள் மேல் அன்பு கொண்டு, கீழிறங்கி வந்து, அவற்றின் மலங்களைப் போக்கி, ஒப்பில்லாத ஆனந்தத்தைத் தருவான் என்கிறார் திருமூலர். 


பாடல் 


விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு

தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து

உண்ணின் றுருக்கயொ ரொப்பிலா ஆனந்தக்

கண்ணின்று காட்டிக் களிம்பறுத்1 தானே.


சீர் பிரித்தபின் 


விண்ணில் இருந்து இழிந்து  வினைக்கு ஈடாக மெய் கொண்டு 

தண் என்ற  தாளைத் தலைக்காவல் முன் வைத்து

உள் நின்று உருக்க ஓர் ஒப்பிலா ஆனந்தக்

கண்ணில் இன்று காட்டிக் களிம்பு அறுத்தானே.


பொருள் 


விண்ணில் இருந்து = வானில் இருந்து 


இழிந்து = இறங்கி வந்து 


வினைக்கு ஈடாக = அவரவர் செய்த வினைகளுக்கு ஈடாக 


மெய் கொண்டு = திருமேனி கொண்டு 

 

தண் என்ற = குளிர்ச்சியான 


 தாளைத் = திருவடிகளை 


தலைக்காவல் = தலையான காவலாக 


முன் வைத்து = முன்னே வைத்து 


உள் நின்று = உள்ளத்தினுள்ளே நின்று 


உருக்க = அதை உருக்கி 


ஓர் ஒப்பிலா = ஒரு ஒப்பிட முடியாத 


ஆனந்தக் = ஆனந்தத்தை 



கண்ணில் இன்று காட்டிக் = கண்முன் காட்டி 


களிம்பு அறுத்தானே. = மனதில் ஒட்டி இருக்கும் அழுக்குகளை அறவே துடைத்தானே 


புலியை பார்த்தே இல்லாத ஒருவனுக்கு புலி எப்படி இருக்கும் என்று எப்படி விளக்குவது?  அவனுக்குத் தெரிந்தது பூனை ஒன்றுதான். எனவே, அவனுக்கு "புலி எப்படி இருக்கும் தெரியுமா? பெரிய பூனை மாதிரி இருக்கும்" என்றால் அவன் புரிந்து கொள்வான். 


அவரவர் வினை, அவர்கள் பெற்ற ஞானம், அனுபவம் இவற்றிற்கு தகுந்த மாதிரி இறைவன் காட்சி தருவான். 


சின்ன பிள்ளைக்கு ஒரு பந்தைக் காட்டி சூரியன் இப்படி இருக்கும் என்று சொல்லி விளக்குவதைப் போல. 


உயிர்கள் ஆண்டவனைப் போய் அடைய முடியாது. அவன் இறங்கி வந்தால் தான் உண்டு. அவன் வருவான். உயிர்கள் மேல் அன்பு கொண்டு அவர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம், புரிந்து கொள்ளும் வண்ணம் வருவான். 


நமக்கு எல்லாவற்றிலும் பயம். எனக்கு பயம் ஒன்றும் கிடையாது என்று யாரும் சொல்ல முடியாது. 


அப்படி நடந்து விட்டால், இது நடக்காவிட்டால், பிள்ளைகளுக்கு ஏதும் வந்து விடுவோமோ, போட்ட பணம் நட்டமாகி விடுமோ, உடம்புக்கு ஏதாவது வந்து விடுமோ, விசா கிடைக்குமோ, வேலை கிடைக்குமோ, வரன் அமையுமோ அமையாதோ என்று ஆயிரம் கவலை. கவலையில் இருந்து பயம். 


இப்படி மனம் பயத்தில் தவிக்கும் போது, அந்த பயத்தை போக்கி, கவலைப் படாதே, நான் இருக்கிறேன் என்று தன் திருவடிகளை காவலாக வைத்து காப்பான் அவன். 


பயம் போய் விட்டால், சந்தோஷம்தானே. இருந்தாலும் ஒரு குழப்பம் இருக்கும். 


நமக்கும், நம்முடைய சந்தோஷத்துக்கும் இடையில் நிற்பது நான், எனது என்ற ஆணவ மலம், மற்றும் கன்ம மலம், மாயா மலம். 


இந்தக் களிம்புகளை நீக்கி அறிவை ஒளி பெறச் செய்து, இன்பத்தை தருபவன் இறைவன் என்கிறார் திருமூலர். 


இப்படி மூவாயிரம் பாடல் திருமந்திரத்தில் 

நாளொன்றிற்கு ஒரு பாடல் என்று வைத்துக் கொண்டால் கூட கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகும் முழுவதும் படித்து முடிக்க. 







Friday, September 6, 2024

திருக்குறள் - கூடாவொழுக்கம் - மனத்தது மாசாக

 திருக்குறள் - கூடாவொழுக்கம் - மனத்தது மாசாக 


வள்ளுவர் கூடாவொழுக்கம் என்பது மனதளவில் துறவறம் கொள்ளாமல், வெளி வேடம் போடும் போலிச் சாமியார்களைப் பற்றித்தான் கூறுகிறார் என்றாலும், அதை சாதாரண மக்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். 


சாதாரண மக்கள் என்ன செய்கிறார்கள்?  கோவில், பூஜை, வீட்டில் தினம் இரண்டு வேளை சாமி கும்பிடுவது, நாள் கிழமை என்றால் அந்தந்த கடவுளுக்கு சிறப்பான பூஜை செய்வது, பலகாரம் செய்து படைப்பது என்று இருக்கிறார்கள். தினம் குளித்துவிட்டு, சாமி கும்பிட்டுவிட்டுதான் ஒரு வாய் காப்பி கூட குடிப்பேன் என்று சொல்லுவார்கள். 


இதெல்லாம் வெளி வேடம். 


உள்ளுக்குள் பொறாமை, பேராசை, அழுக்காறு, பொய் , வஞ்சனை, பயம், வெறுப்பு, கோபம், தகாத காமம், புறம் சொல்லுதல் என்று எல்லாம் இருக்கும். 


இதை எல்லாம் உள்ளே வைத்துக் கொண்டு, சாமி கும்பிடுகிறேன், கோவிலுக்குப் போகிறேன், பூஜை செய்கிறேன் என்று கூறுவதால் ஏதாவது பயன் உண்டா?


"மனதுக்குள் ஆயிரம் அழுக்கை வைத்துக் கொண்டு, பெரிய பக்திமான் போல் வேடம் போடுபவர்கள் பலர்" 


என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி

மறைந்தொழுகும் மாந்தர் பலர்


பொருள் 


மனத்தது = மனதுக்குள் 


மாசாக = அழுக்குகள் மண்டி கிடக்க 


மாண்டார் = மாட்சிமை பொருந்தியவர்களைப் போல 


நீர்  ஆடி = குளித்து, சமய சின்னங்களை உடல் எல்லாம் பூசிக் கொண்டு, வித விதமாக உடை உடுத்து....


மறைந்தொழுகும் = தங்கள் உள்ளத்தில் உள்ள மலங்களை மறைத்து வாழும் 


மாந்தர் பலர் - மக்கள் பலர் 


"புறம் சுவர் கோலம் செய்து" என்ன பயன்?  


வீட்டுக்கு வெளியே வெள்ளை அடித்து விட்டு, உள்ளே குப்பையும் கூளமுமாக இருந்தால் நன்றாகவா இருக்கும்?  


மறைந்தொழுகும் - ஏன் மறைக்க வேண்டும்? வெளியே தெரிந்தால் அசிங்கம். எனவே, அதை மூடி மறைக்க வேண்டும். 



"பலர்" - ஏதோ ஒரு சில பேர் அல்ல. பெரும்பாலானோர் அப்படித்தான் என்கிறார் வள்ளுவர். அவர் காலத்திலேயே அப்படி என்றால், இன்று எப்படி இருக்கும்?


போலிச் சாமியார்களை விட்டு விடுவோம். போலியான நம் வாழ்வை சரி செய்ய முயல்வோம். 



Thursday, September 5, 2024

கம்ப இராமாயணம் - பெண்கள் காட்டிய வழி

 கம்ப இராமாயணம் - பெண்கள் காட்டிய வழி


இராமாயணம் என்றால் இராமன் காட்டிய வழி. அல்லது இராமனின் வழி என்று சொல்லலாம். 


உண்மையிலேயே இராமாயணம் முழுவதும் பெண்களால் நடத்தப்பட்ட ஒரு காப்பியமாகவே தெரிகிறது. 


எப்படி என்று பார்ப்போம். 


முதல் காய் நகர்த்தல் கூனி என்ற பெண்ணால் நிகழ்கிறது. அதுவரை ஆற்றோட்டமாக சென்று கொண்டிருந்த கதை கூனியால் மடை மாற்றம் செய்யப்படுகிறது. நமக்குத் தெரியும் கூனியின் பேச்சு சாதுரியம், அவள் எப்படி கைகேயின் மனதை மாற்றினாள் என்று. 


அடுத்த நகர்வு, கைகேயி என்ற பெண். கூனியால் மனம் மாற்றம் செய்யப்பட்ட கைகேயி ஒரு படி மேலே போய் தசரதனின் மனதை மாற்றுகிறாள். இராமனை காட்டுக்கு அனுப்பி, பரதனை முடி சூட வைக்கிறாள். 


சரி. இராமன் கானகம் போனான். போன இடத்தில் என்ன நடந்தது?


சூர்பனகை என்ற பெண்ணால் பகை மூண்டது. அவள் இராமன் மற்றும் இலக்குவர்கள் மேல் ஆசைப்பட்டது, மூக்கு அறுபட்டது வரை சரி. காப்பியம் அங்கேயே நின்றிருக்கும். ஆனால், சூர்பனகை , அவளுடைய அண்ணனான இராவணனிடம் சென்று அவனுக்கு சீதை மேல் ஆசையை ஏற்றுகிறாள். இராவணன் தடுமாறுகிறான். கதையை மேலே நகர்த்துகிறாள் சூர்பனகை. 


சரி, அப்புறம் என்ன நடந்தது? இராவணன் நேரே வந்து இராமனிடம் சண்டை போட்டானா என்றால் இல்லை. பொன் மான் வந்தது. அங்கே சீதை என்ற பெண் காப்பியத்தை நகர்த்துகிறாள். "நீயே எனக்கு அந்த பொன் மானை பிடித்துத் தர மாட்டாயா" என்று கொஞ்சுகிறாள். இராமன் மான் பின் போகிறான். இராவணன், சீதையை தூக்கிக் கொண்டு போகிறான். 


இராமன் நேரே வாலியைப் பார்த்து அவன் உதவியை நாடி இருந்தால், வாலியின் பலத்துக்கு பயந்து இராவணன் சீதையை விடுவித்து இருக்கலாம். அதற்கு முன் சபரி என்ற பெண் வருகிறாள். அவள், இராமனை சுக்ரீவன் பால் போ என்று இராமனின் போக்கை மாற்றுகிறாள். 


இராமன், சுக்ரீவனை பார்த்து, நட்பு கொண்டு, சீதையைத் தேடத் தொடங்குகிறான். 


அசோகவனத்தில் சீதை தனிமையில் வாடுகிறாள். அவள் மனம் சோர்ந்த போதெல்லாம் அவளுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லி அவளை திரிசடை என்ற பெண் தேற்றுகிறாள். அவள் இல்லை என்றால் சீதையின் கதி என்ன என்று அனுமானிப்பது கடினம். 


அனுமன் இலங்கைக்கு வருகிறான். இலங்கையை இலங்கினி என்ற பெண் பாதுகாவல் செய்கிறாள். அனுமன் அவளை சண்டையில் வெல்கிறான். அவள் அவனுக்கு வழி விடுகிறாள். 


சண்டை நடக்கிறது, இராமன் வென்று சீதையை சிறை மீட்கிறான். 


இந்த மொத்த காப்பியத்தில் தோற்றுப் போன பெண் என்று சொல்லுவது என்றால் வாலியின் மனைவி தாரையைச் சொல்லலாம். வாலி சண்டைக்கு செல்வதை தடுக்க நினைத்து தோல்வியுருகிறாள்.


அவளைத் தவிர்த்து, இராமாணயம் முழுக்க முழுக்க பெண்களாலேயே நடத்தப்பட்டு இருக்கிறது. 


இராமனின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவனை முன்னோக்கி செலுத்தியதில் ஒரு பெண்ணின் பங்கு இருந்து இருக்கிறது. 


கதையின் நாயகன், திருமாலின் அவதாரம், சக்ரவர்த்தித் திருமகன் ...பெண் சொல்லி நான் கேட்பதா என்று சொல்லாமல், ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண்களால் நடத்தப்படுவதை அனுமதிக்கிறான் இராமன். 


அவன் நினைத்து இருந்தால் கைகேயி சொன்னதை கேட்க மாட்டேன் என்று சொல்லி இருக்கலாம். சீதை பொன் மான் வேண்டும் என்றபோது, அதெல்லாம் முடியாது என்று மறுத்து இருக்கலாம். 


தாய், தாரம், பக்தை என்ற அனைத்து பெண்களின் கருத்துகளுக்கும் இடம் கொடுக்கிறான். அதனால் துன்பம் வரும், சிக்கல் வரும் என்று தெரிந்து இருந்தாலும் அவர்கள் கருத்தை அவன் உதாசீனம் செய்யவில்லை.