Friday, June 10, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 1 - அறம் பொருள் கண்டார்

 

 திருக்குறள் - பிறனில் விழையாமை - 1 - அறம் பொருள் கண்டார் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


)


இனி அதிகாரத்துக்குள் செல்வோம். 


இன்னொருவன் மனைவியை விரும்பவதில் என்ன தவறு. அவளுக்கும் பிடித்து இருக்கிறது. அவனுக்கும் பிடித்து இருக்கிறது. இருவர் மனமும் ஒத்துப் போகிறது என்றால் அதில் என்ன தவறு? 


ஒரு  வேளை அந்தப் பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றால் அது தவறு. அவளும் அதற்கு உடன் படுகிறாள் என்றால் என்ன தவறு என்று கேள்வி கேட்கும் காலம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.


இப்படி எல்லாம் கேட்பார்கள் என்று அன்றே வள்ளுவருக்குத் தெரிந்து இருக்கிறது. அதற்கும் பதில் சொல்லி இருக்கிறார். 


அதை வள்ளுவர் சொல்லி இருக்கும் விதம் இருக்கிறதே, அது மிக அருமை. எப்படி ஒரு மனிதனால் சிந்திக்க முடிகிறது என்று வியப்பாக இருக்கிறது. 


"இன்னொருவன் மனைவியை விரும்பும் பேதைமை (மடத்தனம் அறம் பொருள் கண்டவர்களிடம் இருக்காது" 


என்று இரத்தின சுருக்கமாகச் சொல்கிறார். 


பாடல் 



பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


(pl click the above link to continue reading)


பிறன் = மற்றவன் 


பொருளாள் = உடைமையான பெண்ணை, மனைவியை 


பெட்டொழுகும் = காதலித்து வாழும் 


பேதைமை = அறிவீனம் 


ஞாலத்து = உலகில் 


அறம் பொருள் = அறம் பொருள் 


கண்டார்கண் = கண்டவர்களிடம்


இல் = இல்லை 



இதில் என்ன அவ்வளவு பெரிய ஆழமான கருத்து இருக்கிறது என்று கேட்கிறீர்களா. 


பரிமேலழகர் உரை செய்கிறார். 


"அறம் பொருள் கண்டார்" என்றால் என்ன. அறத்தையும், பொருளையும் போய் பார்த்து விட்டு வருவதா? "நேற்று வங்கியில் ஒரு கோடி ரூபாய் இருப்பதைக் கண்டேன்" என்றால் பொருளை கண்டுவிட்டேன் என்று அர்த்தமா?


இல்லை. 


அறம் பொருள் கண்டார் என்றால் அற நூல்களையும், பொருள் நூல்களையும் படித்து அறிந்தவர்கள் என்று அர்த்தம். 


சரி. 


ஆனால், வாழ்க்கை என்பது அறம், பொருள், இன்பம் என்ற மூன்று கூறுகளை உடையது. வள்ளுவர் அறம், பொருள் மட்டும்தானே சொல்லி இருக்கிறார். ஏன் இன்பம் பற்றிச் சொல்லவில்லை? 


ஏன் என்றால், இன்ப நூல்களில் இன்பம் அனுபவிப்பது மட்டும் தான் இருக்கும். அது யாரிடம் என்றெல்லாம் இருக்காது. அறம், பொருள், இன்பம் கண்டார் கண் இல் என்று போட்டிருந்தால், நான் படித்த பாலுணர்வு சார்ந்த புத்தகத்தில் விரும்பும் எந்தப் பெண்ணையும் அனுபவிக்கலாம் என்று போட்டு இருக்கிறதே என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். எனவே, வள்ளுவர் அறம் பொருள் கண்டார் இல் என்று இன்பத்தை சொல்லாமல் விட்டுவிட்டார். 


அவர் சொல்லாமல் விட்டதில் எவ்வளவு பொருள் இருக்கிறது பாருங்கள். 


இன்று பாலுணர்வு சார்ந்த (Pornography)  புத்தகங்கள், வீடியோக்கள், வலை தளங்கள் என்று எவ்வளவோ வந்துவிட்டன. அதில் அனைத்து வக்கிரங்களும் இருக்கின்றன. அதையெல்லாம் படித்து/பார்த்து விட்டு அதில் உள்ளது போல் நடக்கிறேன் என்று ஆரம்பித்து விடக் கூடாது. 


இன்னும் ஒரு படி மேலே போகிறார் பரிமேலழகர். 


"அறம் பொருள் கண்டார் கண் இல் " என்பதில், அற நூல்களையும், பொருள் நூல்களையும் அறிந்தவர்கள் என்று சொன்னார் அல்லவா. அதைப் படிக்காதவனுக்கு அறம் என்றால் என்ன என்று தெரியாது. பொருள் என்றால் என்ன என்று தெரியாது. அப்படிப்பட்டவனிடம் அறமும் பொருளும் நிற்காது. அறமும் பொருளும் நில்லாத இடத்தில் இன்பம் எப்படி நிற்கும்?


பிறன் மனை விழைந்து, அது எல்லோருக்கும் தெரிய வர, அவன் மனைவி அவனை வெறுத்து ஒதுக்குவாள். சட்ட சிக்கல்கள் பல வரும். பொருள் விரயம் ஆகும். வேலையை சரி வர செய்ய முடியாது. வருமான இழப்பு வரும். இருக்கின்ற சேமிப்பு குறையும். இறுதியில் துன்பம் வந்து சேரும். 


அறமும் பொருளும் இல்லாத இடத்தில் இன்பம் நில்லாது. இன்பம் வரலாம், ஆனால் அது எல்லாவற்றையும் கொண்டு போய் விடும். .


புகழ்,பொருள், உறவு, சுற்றம் என்று எதுவும் இருக்காது. .


ஒருவன் மற்றவனுடைய மனைவியை விரும்புகிறான் என்பது வெளியே தெரிய வந்தால், அவனை நம்பி யார் வீட்டினுள் விடுவார்கள். மற்றவன் மனைவியை விரும்பிய மாதிரி என் வீட்டு பெண்கள் மேலும் கை விட்டால் என்ன செய்வது என்று பயந்து அவனை சேர்க்க மாட்டார்கள். தனித்து விடப் படுவான். அவனுக்கு என்ன இன்பம் இருக்கும்? 


அது மட்டும் அல்ல, ஒழுக்கக் குறைவு ஏன் வருகிறது? கல்வி அறிவு இன்மையால். எது சரி, எது தவறு என்று அறியும் அறிவு இன்மையால். 


பரிமேலழகரில் இருந்து சற்று விலகி நாம் கொஞ்சம் வேறு கோணத்தில் சிந்திப்போம். 


"அறம் பொருள்" என்பதை அறத்தின் பொருளை என்று கொண்டால் வெறுமனே அற நூல்களை படித்தால் மட்டும் போதாது. அதன் பொருள் தெரிய வேண்டும். 


அப்படி உரை சொல்ல வழி இருக்கிறதா என்று கேட்டால்....


இன்று உலகில் தவறு செய்பவர்கள் பெரும்பாலானோர் படித்தவர்களாகவே இருக்கிறார்கள். படிக்காத பாமரன் "அது தவறு, பாவம்" என்று ஒதுங்கி ஒழுங்காக வாழ்கிறான். படித்தவன் எப்படி மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்வது என்று சிந்திக்கிறான். 


இராவணன் படிக்காத படிப்பா. "நாரத முனிவருக்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவை" உடையவன், பிறன் மனை விழைந்தான் அல்லவா? அற நூல்களை படித்து இருக்கிறான். திருப்பி அழகாக சொல்கிறான். ஆனால், அதன் பொருளை புரிந்து கொள்ளவில்லை. 


"அறம் என்று ஒன்று உண்டு, அது அமரர்க்கும் அறிய ஒண்ணாதது" என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார். 


"ஈறில் அறம்" என்பான் கம்பன். எல்லை இல்லாது 


படித்தால் மட்டும் போதாது, அதன் பொருள் தெரிந்து நடக்க வேண்டும். 


"அறம் பொருள் கண்டார் கண் இல்" என்பதை அறத்தின் பொருளை கண்டவர்களிடம் இல்லை என்று கொள்ளல்லாம். 


இலக்கண முறைப்படி அது சரியா என்று தெரியவில்லை. எனக்குத் தோன்றியதை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான். சரி இல்லை என்றால் விட்டுவிடலாம். 


மேலும் சிந்திப்போம். .





Thursday, June 9, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - இறுதிப் பாகம்

       

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - இறுதிப் பாகம் 


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 


பாகம் 1 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html


பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html


பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html


பாகம்  4:  https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html


பாகம்  5: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5.html


பாகம்  6: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6.html


பாகம்  7: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7.html


பாகம்  8: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/8.html


)


அசோகவனத்தில் சீதையை சந்தித்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் பேசிய பேச்சைக் கேட்டு அவன் நல்லவன் என்று முடிவு செய்கிறாள் சீதை. 


முதன் முதலாக சீதை அனுமனிடம் "வீரனே, நீ யார்" என்று கேட்டாள்.


மூன்று பாடல்களில் பதில் தருகிறான். 


முதல் பாடலில் 


"அன்னையே, உன்னை இராமன் பிரிந்தபின், அவனுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்து இருக்கிறான்.அந்த நண்பன் குற்றம் அற்றவன். சூரிய குமாரன். குரங்கு குலத்துக்கு அரசன்"


இரண்டாவது பாடலில் 


"அப்படிப்பட்ட சுக்ரீவனுக்கு அண்ணன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் வாலி. அவன் மிகுந்த பலம் பொருந்தியவன். இந்த இராவணன் இருக்கிறானே அவனை இந்த வாலி தன் வாலில் கட்டி எட்டுத் திசையும் பாய்ந்து செல்லும் வலிமை மிக்கவன். அது மட்டும் அல்ல தேவர்கள் வேண்டிக் கொள்ள, அவர்கள் அமுதம் கடைந்த போது அவர்களுக்கு உதவி செய்தவன்"

என்கிறான். 


இறுதியாக மூன்றாவது பாடலில் தான் யார் என்று சொல்ல வருகிறான். அது கூட எப்படி ?


"அவ்வளவு பலம் பொருந்திய வாலியை, உன் கணவன் இராமன் ஒரே அம்பில் வீழ்த்தி, சுக்ரீவனுக்கு அரசைத் தந்தான். அந்த சுக்ரீவனுக்கு நான் மந்திரியாக உள்ளேன்.  வாயு பகவானின் பிள்ளையான என் பெயர் அனுமன்"


என்று சொல்லி முடிக்கிறான். 





பாடல் 


அன்னவன் தன்னை உம்கோன்

    அம்பு ஒன்றால் ஆவி வாங்கிப்,

பின்னவற்கு அரசு நல்கித்

    துணை எனப் பிடித்தான்; எங்கள்

மன்னவன் தனக்கு நாயேன்

    மந்திரத்து உள்ளேன், வானின்

நல்நெடும் காலின் மைந்தன்,

    நாமமும் அநுமன் என்பேன்.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_9.html


(pl click the above link to continue reading) 




அன்னவன் தன்னை = அப்படிப்பட்ட வாலியை 


உம்கோன் = உன் தலைவன்  (இராமன்) 


அம்பு ஒன்றால் = ஒரே ஒரு அம்பினால் 


ஆவி வாங்கிப், = உயிரைப் போக்கி 


பின்னவற்கு = சுக்ரீவனுக்கு 


அரசு நல்கித் =அரசைத் தந்து 


துணை எனப் பிடித்தான் = துணையாகக் கொண்டான் 


எங்கள்  மன்னவன் = எங்கள் மன்னவனான 


தனக்கு = சுக்ரீவனுக்கு 


நாயேன் = அடியவன் 



மந்திரத்து உள்ளேன் = ஆலோசனை செய்யும் தொழிலை செய்கிறேன். மந்திரியாக உள்ளேன் 


வானின் = வானுலகில் 


நல்நெடும் காலின் = நல்ல நெடிய காற்றின் 


மைந்தன், = மகன் 


நாமமும் அநுமன் என்பேன். = பெயரும் அனுமன் என்று சொல்லுவேன் 


என்று தன்னைப் பற்றி இறுதியில் சொல்லி முடிக்கிறான். 


நீ யார் என்று கேட்டதற்கு "என் பெயர் அனுமன்" என்று சொல்லி நிறுத்திக் கொண்டிருக்கலாம். 


அனுமன் சிந்திக்கிறான். எதைச் சொன்னநல் சீதையின் மனம் மகிழும், அவள் மனம் ஆறுதல் அடையும் என்று எண்ணி, அவளுக்கு நன்மை தரும் சொற்களைக் கூறுகிறான். 


அவன் சொன்னதில் உள்ள உட்பொருள் என்ன?


"நீ இந்த இராவணனைப் பற்றிக் கவலைப் படுகிறாய்.  கவலைப் படத் தேவையில்லை. இந்த இராவணனை ஒரு பூச்சி போல வாலில் கட்டி எட்டுத் திக்கும் பறந்தவன் வாலி. அப்பேற்பட்ட வாலியை ஒரே அம்பில் கொன்றவன் இராமன். அவனுக்கு இந்த இராவணன் எம்மாத்திரம். கவலையை விடு. அது மட்டும் அல்ல, சூரிய குமாரனான சுக்ரீவனும், வாயு குமாரனான நானும் இராமனுக்கு துணை இருக்கிறோம். எங்கள் குரங்கு கூட்டம் முழுவதும் இராமனின் பின்னால் நிற்கிறது"


என்று அவளுக்கு தெம்பு ஊட்டும் வகையில் கூறுகிறான். 


எவ்வளவு அழகாக, ஆழமாக, நுண்ணியமாகப் பேசுகிறான். கேட்பவர் மனம் அறிந்து பேச வேண்டும். அவர்கள் மனம் மகிழும் படி பேச வேண்டும். நம்பிக்கையை விதைக்கும் சொற்களை பேச வேண்டும். 


கம்ப இராமாயணத்தில் இது ஒரு அருமையான இடம். 


மீண்டும் மீண்டும் படித்து இன்புறத் தக்க இடம். 


இதுவரை பொறுமையுடன் படித்ததற்கு நன்றி. 


Wednesday, June 8, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - ஒரு முன்னுரை

 திருக்குறள் - பிறனில் விழையாமை - ஒரு முன்னுரை 


இல்லறம் பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம். 


இல்வாழ்க்கை - வாழ்க்கைத் துணைநலம் - புதல்வர்களைப் பெறுதல் - அன்புடைமை - விருந்தோம்பல் - இனியவை கூறல் -  செய்நன்றி அறிதல் - நடுவு நிலைமை - அடக்கமுடைமை - ஒழுக்கமுடைமை 


என்பது வரை ஒரு ஆற்றொழுக்காக சிந்தித்து வந்தோம்.


அடுத்த அதிகாரமாக 'பிறனில் விழையாமை' பற்றிக் கூறுகிறார். 


அதாவது ஒருவனுக்கு  சொந்தமான மனைவியை மற்றவன் விரும்பும் தீமை பற்றிக் கூறுகிறார். 


பிறனில் விழையாமை = பிறன் + இல் + விழையாமை. பிறருடைய இல்லத்தை விரும்பாமை. இல்லம் என்பது மனைவியை குறித்து நின்றது. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


(Pl click the above link to continue reading)


ஒரு சமுதாயம், ஒரு நாடு சிறக்க வேண்டும் என்றால் வீடு சிறக்க வேண்டும். வீடுதான் அடிப்படை. வீட்டைச் சிதைத்தால் நாடு சிதைந்து போகும். 


கணவன் மனனவி உறவு என்பது வீட்டுக்கு அடிப்படை. அது சிதியுமானால் வீடு பிளவு படும். வீடு பிளவு பட்டால் குழந்தைகள் தவிக்க விடப்படுவார்கள். இப்படி பல சிக்கல்கள் வந்து சேரும். 


கணவன் மனைவி உறவுக்குள் இன்னொரு சக்தி நுழையுமானால் அந்த உறவு பலவீனப்படும். 


இந்த உறவுக்குள் பல சக்திகள் உள்ளே நுழைய முற்படுகின்றன. 


முதலாவது பெரிய சக்தி, அரசாங்கம். குடும்பத்துக்குள் அரசாங்கம் நுழைந்தால் அது பலவீனப்படும். 


அது எப்படி ஒரு குடும்பத்துக்குள் அரசு நுழைய முடியும்? என்று கேட்டால் நேரடியாக நுழைய முடியாது. சட்டங்கள் மூலம் அரசு நுழையும். .


கணவன் மனைவிக்குள் ஏதோ சண்டை. பேச்சு முற்றிப் போய் கணவன் கோபத்தில் கை நீட்டி விடுகிறான். அது தவறுதான். மன்னிக்க முடியாத குற்றம்தான். அந்தத் தவறை உணர்ந்து, அவன் அவளிடம் மன்னிப்பு கேட்டு, அவளை சமாதனப்படுத்த எவ்வளவு கீழே வர முடியுமோ அவ்வளவு வருவான். அதுதான் குடும்பம். இப்போது என்ன ஆகிறது என்றால், கணவன் அடித்து விட்டால் உடனே காவல் துறைக்கு தெரிவித்து, Domestic Violence, Human Rights Violence, Dowry Harassment, என்று பல சட்ட்டங்களில் அவனை கைது செய்து உள்ளே தள்ளி அவனை தண்டிக்க அரசு வழி செய்கிறது. பெண்களை பாதுகாக்க இப்படி பல வழிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். என்ன ஆகும். அவன் சிறை செல்வான். வெளியே வந்து ?


பெற்றோர் பிள்ளைகளை அடித்தால் பெற்றோரை சிறை செய்யும் சட்டங்கள் வந்து விட்டன.


ஆசிரியர் பிள்ளைகளை தண்டித்தால் ஆசிரியரை கைது செய்ய சிறையில் தள்ளும் சட்டங்கள் வந்துவிட்டன. 


இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். வள்ளுவர் இதைப் பற்றி பேசவில்லை. 


வள்ளுவர் சொல்லுவது இன்னொரு தீமை பற்றி. 


ஒருவனின் மனைவியை இன்னொருவன் விரும்பும் தீய ஒழுக்கம் பற்றி இங்கே கூறுகிறார். 


ஒரு கணவன் அழகு இல்லாதவனாக இருக்கலாம், வீரம் இல்லாதவனாக இருக்கலாம், நிறைய சம்பாதிக்கும் திறன் இல்லாதவனாக இருக்கலாம், அல்லது அவனிடம் கோபம் போன்ற தீய குணங்கள் இருக்கலாம்...


அவற்றை சாக்காக வைத்துக் கொண்டு இன்னொருவன் அவனுடைய மனைவியை அடைய நினைப்பது தவறு என்று சொல்ல வருகிறார். 


ஒருவன் பலசாலியாக இருக்கிறன் என்பதற்காக பலவீனமாக உள்ள ஒருவனின் மனைவியை பறிக்க நினைத்தால் சமுதாயம் வலுவிழந்து போய்விடும். 


"உன் கணவன் சரியான முரடன். அன்பு செலுத்த தெரியாதவன், நீயும் பாவம் எத்தனை நாள் தான் அவனை சகித்துக் கொண்டு இருப்பாய் " என்று ஒரு பெண்ணின் மனதை மயக்கி அவளை அடைய நினைக்கும் தீய ஒழுக்கத்தை இந்த அதிகாரத்தில் கண்டிக்கிறார். .


ஒவ்வொரு ஆடவனும் மாற்றான் மனைவி மேல் ஆசை வைத்தால் ஒரு சமுதாயம், ஒரு நாடு என்ன ஆகும்? 


இது ஒரு மிகப் பெரிய தீமை என்பதால், அதற்காக ஒரு அதிகாரமே செய்கிறார் வள்ளுவர். 


தகாத காமம் ஒரு மனிதனை மிக எளிதாக தவறு செய்யத் தூண்டும். புத்தியை மயக்கும். காமம் சாம்ராஜியங்களை புரட்டிப் போட்டு இருக்கிறது. நாட்டை மண்ணோடு மண்ணாக்கி இருக்கிறது. குலத்தை வேரறுத்து இருக்கிறது. 


அப்படி காம வசப்பட்டு இன்னொருவன் மனைவியை விரும்பும் தீ ஒழுக்கம் பற்றி இந்த அதிகாரத்தில் கூற இருக்கிறார். 


என்ன என்று சிந்திப்போம். 




Tuesday, June 7, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 8

      

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 8


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 


பாகம் 1 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html


பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html


பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html


பாகம்  4:  https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html


பாகம்  5: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5.html


பாகம்  6: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6.html


பாகம்  7: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7.html


)


அசோகவனத்தில் சீதையை சந்தித்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் பேசிய பேச்சைக் கேட்டு அவன் நல்லவன் என்று முடிவு செய்கிறாள் சீதை. 


முதன் முதலாக சீதை அனுமனிடம் "வீரனே, நீ யார்" என்று கேட்டாள்.


மூன்று பாடல்களில் பதில் தருகிறான். 


முதல் பாடலில் 


"அன்னையே, உன்னை இராமன் பிரிந்தபின், அவனுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்து இருக்கிறான்.அந்த நண்பன் குற்றம் அற்றவன். சூரிய குமாரன். குரங்கு குலத்துக்கு அரசன்"


என்றான் என்ற செய்தியை முந்தைய பதிவில் சிந்தித்தோம். 


மேலும் அனுமன் தொடர்கிறான். 


இப்போதாவது "வீர நீ யார்" என்ற கேள்விக்கு தன்னைப் பற்றிக் கூறினானா ?


அனுமன் என்ன சொல்கிறான் என்று காண்போம்.


"அப்படிப்பட்ட சுக்ரீவனுக்கு அண்ணன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் வாலி. அவன் மிகுந்த பலம் பொருந்தியவன். இந்த இராவணன் இருக்கிறானே அவனை இந்த வாலி தன் வாலில் கட்டி எட்டுத் திசையும் பாய்ந்து செல்லும் வலிமை மிக்கவன். அது மட்டும் அல்ல தேவர்கள் வேண்டிக் கொள்ள, அவர்கள் அமுதம் கடைந்த போது அவர்களுக்கு உதவி செய்தவன்"

என்கிறான். 


நீ யார் என்று கேட்ட கேள்விக்கு முதலில் சுக்ரீவன் பற்றிச் சொன்னான். இப்போது வாலி பற்றிச் சொல்கிறான். 



பாடல் 


மற்றவன் முன்னோன் வாலி,

    இராவணன் வலி தன் வாலின்

இற்று உகக் கட்டி, எட்டுத்

    திசையினும் எழுந்து பாய்ந்த

வெற்றியன், தேவர் வேண்ட,

    வேலையை விலங்கல் மத்தில்

சுற்றிய நாகம் தேய

    அமுது எழக் கடைந்த தோளான்.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/8.html


(pl click the above link to continue reading) 


மற்றவன் = மற்று + அவன் = சுக்ரீவன் 


முன்னோன் = முன் பிறந்தவன், அண்ணன், 


வாலி, = வாலி என்பவன் 


இராவணன் = இராவணனின் 


வலி = வலிமை எல்லாம் 


தன் வாலின் = தன்னுடைய (வாலியின் வாலில்) 


இற்று = நொறுங்கும் படி 


உகக் கட்டி = இறுகக் கட்டி 


எட்டுத்  திசையினும் = எட்டு திசையிலும் 


எழுந்து பாய்ந்த வெற்றியன் = எழுந்து, பாய்ந்து செல்லும் வெற்றி உடையவன் 


தேவர் வேண்ட = தேவர்கள் வேண்டிக் கொள்ள 


வேலையை = கடலை 


விலங்கல் = மலையை (மேரு மலையை) 


மத்தில்  = மத்தாக 


சுற்றிய நாகம் தேய = சுற்றய நாகம் வருந்த 


அமுது எழக் கடைந்த தோளான். = அமுது எழ கடைந்த தோள் வலிமை உடையவன் 


இங்கே இரண்டு வாலி பற்றிய  கதைகளை நாம் தெரிந்து கொள்வோம்.


முதலாவது, 


நாம் எல்லாம் இறைவனை எட்டு திக்கிலும் நோக்கித் தொழுவோம். வாலி அப்படி அல்ல, அவன் ஒவ்வொரு நாளும் எட்டு திசைக்கும் சென்று தொழுவான். ஒரு பாய்ச்சல் கிழக்கு. அங்கிருந்து ஒரு பாய்ச்சல் வட கிழக்குத் திசை. அங்கிருந்து ஒரு பாய்ச்சல் வட திசை என்று ஒவ்வொரு நாளும் எட்டு திசைக்கும் சென்று இறைவனை தொழுவான். அது கூட பெரிய காரியம் இல்லை. இப்படி எட்டு திசைக்கும் போய் கொண்டிருந்தால் எவ்வளவு நேரம் ஆகும். மத்த வேலைகளை யார் கவனிப்பது? எனவே அவன் என்ன செய்வான் என்றால், கிட்கிந்தாவில் இருந்து ஒரு தாவு, கிழக்கு திசை. பூசைகளை முடித்து விட்டு அங்கிருந்து ஒரு தாவல். கிட்கிந்தா. பின் வேறு ஒரு திசை. இப்படி ஒவ்வொரு திசைக்கும் செல்வானாம். அதற்கு நேரம் வேண்டாமா என்றால், யோசித்துக் கொள்ளுங்கள். எட்டு திசை என்றால் பதினாறு முறை பயணம் செய்ய வேண்டும். அப்புறம் பூஜை, அப்புறம் அரசை கவனிக்க வேண்டும். அப்படி என்றால் எவ்வளவு வேகமாக அவன் போய் இருக்க வேண்டும். ஒரு நொடியில் என்று செல்வோமே அது போல. அப்படி என்றால் எவ்வளவு பலம் வாய்ந்தவனாக இருக்க வேண்டும்.


அப்படி தாவி தாவிச் செல்லும் போது, தன் வாலில் இராவணனை கட்டிக் கொண்டு தாவுவானாம். இராவணனுக்கு எப்படி இருந்து இருக்கும். வாலில் கட்டிக் கொண்டு அவ்வளவு வேகமாக தாவும் போது இராவணன் என்ன பாடு பட்டிருப்பான். இராவணனே பெரிய பலம் வாய்ந்தவன் என்று எண்ணிக் கொண்டிருந்தால், அந்த இராவணனை ஒரு பூச்சி மாதிரி வாலில் கட்டி வேடிக்கை காட்டும் வாலி எவ்வளவு பலசாலியாக இருக்க வேண்டும் 


அது மட்டும் அல்ல, 


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மேரு மலையை மத்தாக, வாசுகி என்ற பாம்பை கயிறாக கொண்டு கடைந்தார்கள். அவர்கள் கடையும் போது, அந்த பாம்புக்கு உடல் வலி ஏற்பட்டு அது தளர்ந்து போனது. அதனால், மேரு மலை சரியத் தொடங்கிவிட்டது. சரியும் மலையை யார் தூக்கிப் பிடித்து நிறுத்துவது?  அவ்வளவு பலம் யாரிடம் இருக்கிறது? தேவர்கள் எல்லாம் சென்று வாலியிடம் வேண்டினார்கள். அனைத்து தேவர்களும், அனைத்து அசுரர்களும் சேர்ந்து செய்ய முடியாத ஒன்றை வாலி ஒருவனால் செய்ய முடியும் என்று அவனிடம் வேண்டினார்கள். 


அவன், "நீங்கள் எல்லாம் விலகுங்கள்" என்று அவர்களை விலக்கி விட்டு, தான் ஒருவனே அந்த மலையை நிலை நிறுத்தி, தான் ஒருவனே கடைந்து, அமுதை எடுத்து அவர்களுக்கு கொடுத்தானாம். அப்படி என்றால் அவன் வலிமை எவ்வளவு இருக்கும். 


இதை கம்பன் இன்னொரு இடத்திலும் சொல்லுவான். 


வாலி இறந்து கிடக்கிறான். அவன் மேல் அவன் மனைவி விழுந்து அழுகிறாள். 


"ஐயா நீ அமுதம் தந்ததால் நாங்கள் எல்லாம் உயிர் பிழைத்தோம் என்று நீ செய்த உதவியை நினைத்து நீ இன்று வானுலகம் போகும் போது அவர்கள் எல்லாம் உன்னை வரவேற்க அன்று பூத்த மலர்களைத் வாசலில் வந்து நின்றார்களா" என்று புலம்புவாள்


‘எந்தாய்! நீ அமிழ்து ஈய யாம் எலாம்

உய்ந்தாம் “ என்று உபகாரம் உன்னுவார்

நந்தா நாள் மலர் சிந்தி நண்பொடும்

வந்தாரோ எதிர்? வான் உளார் எலாம்."


இனி நாம் தொடங்கிய பாடலுக்குப் போவோம். 


கேட்ட கேள்வி என்ன?  "வீரனே நீ யார்" என்று 


சொன்ன பதில் - முதலில் சுக்ரீவன் பற்றி, அடுத்தது வாலி பற்றி. 


இன்னும் தன்னைப் பற்றி அனுமன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. 


காரணம் என்ன? 


நாளையும் சிந்திப்போம். 



Monday, June 6, 2022

திருக்குறள் - ஒழுக்கம் உடைமை - ஒரு தொகுப்புரை

 திருக்குறள் - ஒழுக்கம் உடைமை - ஒரு தொகுப்புரை 


அறம் சொல்ல வந்த வள்ளுவர் அறத்தை இல்லறம், துறவறம் என இரண்டாகப் பிரித்துக் கொள்கிறார்.


அறம் என்பது வேதம் முதலிய உயரிய நூல்களில் கூறிய சொன்னவை செய்தாலும், விலக்கியன ஒழித்தலும் என்று வரையறை செய்கிறார் பரிமேலழகர். 


கடவுள் வாழ்த்தோடு நூலைத் தொடங்குகிறார் வள்ளுவர். .



https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_6.html


(pl click the above link to continue reading)


அறத்துக்கு அடிப்படையான மழை பற்றி  "வான்சிறப்பில்" கூறினார். 


மக்களால் அனைத்தையும் படிக்க முடியாது. .அப்படியே படித்தாலும் புரியாது. அப்படியே புரிந்தாலும் ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துகளை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் குழப்பம் வரும். எனவே, எது அறம், எது அறம் அல்லாதது என்று தெளிவுபட கூறக் கூடிய "நீத்தார் பெருமை" பற்றி அடுத்து கூறினார். 


அறம் பற்றி நீத்தார் கூறினாலும், அதன் வலிமை என்ன, அதை ஏன் கடைபிடிக்க வேண்டும். கடை பிடிக்காவிட்டால் என்ன ஆகும் என்று சொல்வதற்கு "அறன் வலியுறுத்தல்" என்ற அதிகாரம் செய்தார். 


அடிப்படை அமைத்த பின், இல்லறதுக்குள் நுழைகிறார். முதலில் இல்வாழ்கையின் கடமைகளைக் கூறும் "இல்வாழ்க்கை" என்ற அதிகாரத்தை தருகிறார். 


அந்த கடமைகள் அனைத்தையும் ஒரு தலைவன் தானே செய்ய முடியாது என்பதால், அவனுக்கு ஒரு பெண்ணின் துணை அவசியம் என்று அறிந்து "வாழ்க்கை துணை நலம்" என்று ஒரு அதிகாரம் அமைத்து அதில் மனைவியின் சிறப்பு, அவளின் பெருமை, கடமை இவற்றைப் பற்றி கூறினார். 


அப்படி கணவனும், மனைவியும் ஒன்றாக இல்லறம் நடத்தும் போது, அவர்கள் அன்பின் விளைவால் பிறக்கும் குழந்தை பற்றி கூற "புதல்வர்களைப் பெறுதல்" என்று ஒரு அதிகாரம் செய்தார். 


கணவன், மனைவி, ,பிள்ளைகள் என்று ஒரு குடும்பம் ஆன பின், அங்கு விளையும் அன்பு பற்றி கூறுவதற்காக "அன்புடைமை" என்ற அதிகாரத்தை அடுத்து வைத்தார். 


அன்போடு குடும்பம் நடத்தும் போது, உற்றார் உறவினர் எல்லோரும் வந்து போவார்கள். அவர்களை உபசரிக்கும் முறை பற்றி "விருந்தோம்பல்" என்ற அடுத்த அதிகாரத்தை தந்தார். 


விருந்து என்று வரும்போது அவர்களோடு எப்படி பேசி பழக வேண்டும் என்பதை கூற "இனியவை கூறல்" என்ற அதிகாரத்தை வைத்தார். 


இனியவை கூறி, விருந்தோம்பி இருந்தாலும்,  வாழ்கையில் சில நடைமுறை சிக்கல்கள் வரும். அதை சரியான படி கையாள "நடுவு நிலைமை" என்ற அதிகாரம் வைத்தார். 


நடுவு நிலையில் இருக்க முடிந்த ஒருவனால் தான் புலன்களை அடக்க முடியும் என்பதால், அதை அடுத்து அடக்கம் உடைமை என்ற அதிகாரம் வைத்தார். 


புலன்களை அடக்கினால்தான் ஒழுக்கமாக வாழ முடியும் என்பதால் அடுத்து நாம் இறுதியில் சிந்தித்த அடக்கம் உடைமை என்ற அதிகாரம் வைத்தார். 


இனி அதிகார தொகுப்பை பார்ப்போம்:



1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_79.html


ஒழுக்கம் உயர்வைத் தருவதால் அது உயிரைவிட உயர்ந்ததாக எண்ணி போற்றப் படும் என்றார். 



2. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_19.html


சிரமப்பட்டாவது ஒழுக்கத்தை காக்க வேண்டும். தவறாமல் ஆராய்ந்து பார்த்ததில் அனைத்து அற நூல்கள் சொல்வதும் இதுவே

என்று இந்த முதல் இரண்டு குறள்களில் ஒழுக்கத்தின் சிறப்பு பற்றி கூறினார். 



3. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்




ஒருவன் ஒழுக்கத்தை கடைப் பிடித்தால் உயர் நிலையை அடைவான். இல்லை என்றால் தாழ்வான்.


4. மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்




ஒருவன் தன் தொழில் சார்ந்த விடயங்களை மறந்து விட்டால் கூட பின்னால் கற்றுக் கொள்ள முடியும். ஆனால், ஒழுக்கத்தை ஒரு முறை தவற விட்டாலும் தீரா பழி வந்து சேரும். 



5. அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்கம் இலான்கண் உயர்வு.




பொறமை கொண்டவனிடம் செல்வம் எப்படி தாங்காதோ அது போல ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு தங்காது. 


6. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக்கு அறிந்து


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_26.html



ஒழுக்கத்தை கடைபிடிப்பது கடினம் என்றால், ஒழுக்கம் இல்லாமல் வாழ்வது அதைவிடக் கடினம் என்பதால் குறைந்த துன்பம் தரக்கூடிய ஒழுக்கமான வாழ்வையே மேற் கொள்ள வேண்டும். 


7. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_28.html


ஒழுக்கம் உடையார் உயர்வினை அடைவார்கள். ஒழுக்கம் இல்லாதவர்கள் அவர்கள் செய்யாத பழியையும் ஏற்க வேண்டி வரும். 


மேற்சொன்ன ஐந்து பாடல்கள் மூலமும் ஒழுக்கத்தினால் வரும் பெருமையும், அதை தவற விடுவதால் வரும் சிறுமையும் கூறினார். 


8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_30.html


எப்படி ஒரு விதை பல்கி பெருகி பலவிதங்களில் நன்மை தருகிறதோ அது போல நல்ல ஒழுக்கம் இம்மைக்கும் மறுமைக்கும் நலம் பயக்கும். அதே போல் தீய ஒழுக்கம் இம்மைக்கும் மறுமைக்கும் தீமை பயக்கும். 


இந்த குறளின் மூலம் நல்ல மற்று தீய ஒழுக்கத்தின் பின் விளைவுகள் பற்றிக் கூறினார். 


9. ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயால் சொலல்

https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post.html


ஒழுக்கம் உடையவர்கள் தவறிக் கூட பிறருக்கு நன்மை தராத சொற்களை கூற மாட்டார்கள். 


10. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_4.html


உயர்ந்தவர்கள்,  மற்றும் உயர்ந்தவைகளை கைகொள்ளாதவர்கள் எவ்வளவு படித்து இருந்தாலும், படிக்காத அறிவிலிகளாகவே கருதப்படுவர். 



Sunday, June 5, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 7

     

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 7


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 


பாகம் 1 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html


பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html


பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html


பாகம்  4:  https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html


பாகம்  5: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5.html


பாகம்  6: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6.html

)


அசோகவனத்தில் சீதையை சந்தித்து தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் பேசிய பேச்சைக் கேட்டு அவன் நல்லவன் என்று முடிவு செய்கிறாள் சீதை. 


முதன் முதலாக சீதை அனுமனிடம் "வீரனே, நீ யார்" என்று கேட்டாள்.


அனுமன் என்ன சொன்னான் என்பது ஒரு புறம் இருக்கட்டும். நம்மிடம் யாராவது "நீ யார்" என்று கேட்டால் என்ன சொல்லுவோம்?


நம் பெயர், படிப்பு, தொழில், திருமணம் ஆகி விட்டதா இல்லையா, எத்தனை பிள்ளைகள், அவர்கள் என்ன செய்கிரார்கள், சொந்த ஊர் என்று அடுக்கிக் கொண்டே போவோம் அல்லவா?


அனுமன் இது எதையுமே சொல்லவில்லை. சொல்லவில்லை என்றால் முதலில் சொல்லவில்லை. பின்னால் சொல்கிறான். அப்படியானால் என்னதான் சொன்னான்?


மூன்று பாடல்களில் பதில் தருகிறான். 


இங்கே முதல் பாடலில் 


"அன்னையே, உன்னை இராமன் பிரிந்தபின், அவனுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்து இருக்கிறான்.அந்த நண்பன் குற்றம் அற்றவன். சூரிய குமாரன். குரங்கு குலத்துக்கு அரசன்"


என்றான். 


பாடல் 


ஆயசொல் தலைமேல் கொண்ட

    அம் கையன், ‘அன்னை! நின்னைத்

தூயவன் பிரிந்த பின்பு, தேடிய

    துணைவன், தொல்லைக்

காய்கதிர்ச் செல்வன் மைந்தன்,

    கவிக் குலம் அவற்றுக்கு எல்லாம்

நாயகன், சுக்கிரீவன்

    என்று உளன், நவையில் தீர்ந்தான். ‘



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7.html


(pl click the above link to continue reading) 


ஆயசொல் = அந்த சொல்லை. "வீர நீ யார்" என்று சீதை கேட்ட அந்தச் சொல்லை 


தலைமேல் கொண்ட =தலைமேல் கொண்ட 


அம் கையன் = அழகிய கைகளை உடைய அனுமன் 


‘அன்னை!  = அன்னையே 


நின்னைத் = உங்களைப் 


தூயவன் = இராமன் 


பிரிந்த பின்பு = பிரிந்த பின் 


தேடிய  துணைவன் = தேடி அடைந்த நண்பன் 


தொல்லைக் = பழமையான 


காய்கதிர்ச் செல்வன் = காய்கின்ற கதிர்களை உடைய சூரியன் 


மைந்தன் = பிள்ளை 


கவிக் குலம்  = குரங்கு கூட்டம் 


அவற்றுக்கு எல்லாம் = அவை அனைத்துக்கும் 


நாயகன் = தலைவன், அரசன் 


சுக்கிரீவன் = அவன் பெயர் சுக்ரீவன் 


என்று உளன் = என்று ஒருவன் இருக்கிறான் 


நவையில் தீர்ந்தான்.  = குற்றம் இல்லாதவன் 



கேட்டது "நீ யார்" என்று



இங்கே என்ன பதில் சொல்கிறான் என்று பாருங்கள். 



அனுமனுக்குத்  தெரிகிறது.  சீதைக்கு வேண்டியது அவன் பெயர் அல்ல. அவன் பெயர் எதுவாக இருந்தால் என்ன?  அவளுக்கு வேண்டியது இந்த சிறையில் இருந்து விடுபட்டு எப்போது இராமனிடம் சேரலாம் என்பதுதான். 


அதை அறிந்து அனுமன் பதில் சொல்கிறான். 


அவன் கூறிய ஒவ்வொரு வரியிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. 


முதலாவது, இராமனுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்து இருக்கிறான். அவன் தனியாக காட்டில் இருந்தால் எப்படி இராவணனை வென்று சிறை மீட்க முடியும். எனவே, இராமனுக்கு ஒரு துணைவன் இருக்கிறான் என்று முதல் செய்தியை கூறுகிறான். 


இரண்டாவது, நண்பன் சரி, அவன் யார் ? சும்மா காட்டில போற ஒரு வேடனை பிடித்துக் கொண்டு வந்து நண்பன் என்றால் என்ன பலன். எனவே, அனுமன் சொல்கிறான் "சூரிய குமாரன்" என்று. தெய்வாம்சம் பொருந்தியவன் என்று. 


மூன்றாவது, சரி நண்பன் பெரிய ஆள் தான். அவனுக்கு பின் பலம் ஏதாவது இருக்கிறதா? அல்லது அவன் தனி ஆளா என்ற கேள்விக்கு "குரங்கு குலம் அனைத்துக்கும் அவன் தலைவன்" என்றான். அவன் தனி ஆள் இல்லை. அவன் பின்னால் ஒரு பெரிய படையே இருக்கிறது என்றான். 


நான்காவது, சரி ஆள் பெரிய இடம் தான்.அரசன் தான். பெரிய படை இருக்கிறது. ஆனால், அவன் நல்லவனா? அல்லது அவனும் இராவணன் மாதிரி ஆளா? இராமனுக்கு உதவி செய்வானா? என்ற கேள்விக்கு "குற்றமற்றவன்" என்கிறான் அனுமன். 


அனைத்துக்கும் மேலாக, இவன் பழைய ஆள்.உங்களுக்குத் தெரியாது. உங்களைப் பிரிந்த பின் கிடைத்த நட்பு என்றும் சொல்கிறான். 


அதைச் சொன்ன விதம் அதை விடச் சிறப்பு....சீதை சொன்னதை தலைமேல் கொண்டு, அது ஏதோ கட்டளை போல சிரமேற்கொண்டு பணிவாக பதில் சொல்கிறான். 


இப்படி பேசிப் பழகினால் யாருக்குத்தான் பிடிக்காது?


சொக்கிப் போய் விட மாட்டோமா?


இன்னும் அனுமன் தான் யார் என்று சொல்லவில்லை என்பதை குறித்துக் கொள்ளுங்கள். 


அடுத்த பாட்டிலாவது சொல்கிறானா என்று பார்ப்போம். 



Saturday, June 4, 2022

திருக்குறள் - ஒட்ட ஒழுகல்

திருக்குறள் - ஒட்ட ஒழுகல் 


திருக்குறளை படிக்கும் போது, அடேயப்பா, எவ்வளவு இருக்கிறது இந்த ஒரு குறளில் என்று தோன்றும். இதற்கும் மேல் என்ன சொல்லிவிட முடியும் என்று அடுத்த குறளுக்குள் போனால், அது முன்னதைவிட பல மடங்கு ஆழமாகவும், விரிவாகவும் இருக்கும். 


அப்படிப்பட்ட ஒரு குறள்தான் நாம் இன்று காண இருப்பது. 


ஒழுக்கம், ஒழுக்கம் என்று சொல்கிறோமே...யார் ஒழுக்கமாக இருக்கிறார்கள்? எங்கு பார்த்தாலும் இலஞ்சம், பொய், புரட்டு, ஏமாற்று, ,கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல், என்று ஒழுக்கமின்மை தான் தலைவிரித்து ஆடுகிறது. 


யாரையும் நம்ப முடியவில்லை. தலைவர்கள், நீதி சொல்பவர்கள், ஆசிரியர்கள், துறவிகள், படித்தவர்கள் என்று யாரையும் முழுவதுமாக நம்ப முடியவில்லை. இவன் என்ன தவறு செய்து விட்டு வந்து இங்கு உக்கார்ந்து இருக்கிறானோ என்றுதான் நினைக்க முடிகிறது. 


இந்த ஒழுக்கம் இன்மை நிறைந்த உலகில் நாம் மட்டும் ஒழுக்கமாக இருந்து என்ன பலன். அல்லது இருக்கத்தான் முடியுமா?


வள்ளுவர் சொல்கிறார் 


"உலகத்தோடு ஒன்றி வாழத் தெரியாதவர்கள், பல கற்றும் அறிவில்லாதவர்கள்" என்று. 


இந்த உலகத்தோடு ஒட்டி வாழ்ந்தால், நாமும் ஒழுக்கம் அற்றவர்களாகி விட மாட்டோமா? வள்ளுவர் ஏன் அப்படி சொல்கிறார். 


பரிமேலழகர் இல்லாவிட்டால் இந்தக் குறளை தவறாக புரிந்து கொண்டு, சரி தான் கலி காலத்தில் உலகம் இப்படிதான் இருக்கும்ம், நாமும் அதே போல் இருக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார் என்று எண்ணிக் கொண்டு தவறான வழியில் செல்ல முற்பட்டு விடுவோம். 


பரிமேலழகர் வள்ளுவருக்கு ஞாயம் செய்கிறார். 


எப்படி என்று பார்ப்போம். 


பாடல் 



உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_4.html


(pl click the above link to continue reading)


உலகத்தோடு = இந்த உலகத்தோடு 


ஒட்ட ஒழுகல் = சேர்ந்து வாழ்வதை 


பலகற்றும் = நிறைய படித்தாலும் 


கல்லார் = படிக்காதவர்கள் 


அறிவிலா தார் = அறிவில்லாதவர் 


சொற்களை கொஞ்சம் இடம் மாற்றினால், சரியாக விளங்கும். 




உலகத்தோடு ஒட்ட ஒழுகல்  கல்லார்


பலகற்றும்  அறிவிலா தார்


என்று வாசித்தால் பொருள் நேராக விளங்கும். 


இருந்தும், நாம் முதலில் கேட்ட கேள்விவ்க்கு இன்னும் விடை வரவில்லை. 


பரிமேலழகரின் உரை, நாம் எண்ணியும் பார்க்க முடியாத உயரத்தில் இருக்கிறது. 


இங்கே, உலகம் என்பது நல்லவர்களை, சான்றோரை.  அயோக்கியர்களை அல்ல. எந்த காலகட்டத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், தீயவர்களும் இருப்பார்கள். நாம் யாரைப் பார்த்து படிக்க வேண்டும் என்றால் நல்லவர்களை பார்த்து. ஆனால், பெரும்பாலும் என்ன நடக்கிறது என்றால், கல்வி அறிவு இல்லாதவன், ,ஒழுகக் குறைவு உள்ளவன், அனுபவம் இல்லாதவன் சொல்வதைக் கேட்டு நடப்பது தான் நடக்கிறது. 


காரணம், கற்றவர்கள், அறிஞர்கள் அவ்வளவாக பேசுவது இல்லை. முட்டாள்கள் மேடை போட்டு பேசுகிறார்கள். அதனால் அவர்கள் பேசுவது தான் சத்தமாக கேட்கிறது. 


இரண்டாவது, நல்லவன் யார், சான்றோன் யார் என்று இனம் காண முடியாமல் உலகம் தவிக்கிறது. யாரைக் கை காட்டுவது? அவரைப் போல் வாழ் என்று யாரைக் காட்ட முடியும்? 


மூன்றாவது சிக்கல் என்ன என்றால், நல்லவர்கள், உயர்ந்தவர்கள் என்று உலகம் கொண்டாடியவர்களை எல்லாம் அவன் அப்படி ஒன்றும் நல்லவன் இல்லை, அவன் செய்த தவறுகள் என்னென்ன தெரியுமா என்று அவர்களை கீழே இறக்குவதில் ஒரு கூட்டம் முயன்று கொண்டு இருக்கிறது. என்னால் அந்த உயரத்துக்குப் போக முடியாது என்பதால், அவர்களை என் நிலைக்கு தாழ்த்துகிறேன் என்று கிளம்பி விட்டார்கள். 


இந்த சோகம் நல்லவர்களுக்கு மட்டும் அல்ல, ,உயர்ந்து நூல்களுக்கும் நிகழ்கிறது. 


அடுத்தது, "ஒழுகல்" என்றார். ஒழுகல் வாழ்தல், கடைபிடித்தல் என்று அர்த்தம். "உலகோடு ஒழுகல்" என்றால் நல்லவர்களை பின்பற்றி வாழ்வது என்று அர்த்தம். 


அடுத்தது, நல்லவர்கள் கண்ணிலேயே காணோம். எங்கு பார்த்தாலும் அயோக்கியர்கள் கூட்டமாகத் தான் இருக்கிறது. எங்கே ஒரு நல்லவனை காண்பியுங்கள் என்றால் சங்கடம் தான். அப்படியே கண்டு பிடித்தாலும், அவருடைய வாழ்கை முறை வேறாக இருக்கும். நம்மால் அவர் வாழ்கை முறையை கையாள முடியாது. 


உதாரணமாக, ஒரு சிறந்த மருத்துவர் இருக்கிறார். அவர் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்கிறார். ஆனால், நான் மருத்துவன் இல்லையே. நான் எப்படி இலவச மருத்துவம் செய்ய முடியும் என்று கேட்டால் வள்ளுவர் சொல்கிறார் "ஒட்ட" ஒழுகல் என்கிறார். அதாவது, பொருந்தும்படி வாழ்வது. அவர், அவர் சார்ந்த துறையில் பலருக்கு உதவி செய்கிறார் என்றால், நாம், நம் துறையில் அது போல செய்ய வேண்டும் என்கிறார். 


சரி சார், அப்படி ஒரு நல்லவன் யாரும் இல்லையே. எங்க ஊரில் அப்படி யாரும் இல்லை. இதுக்காக நான் ஊர் ஊராக சுற்றி நல்லவனை கண்டு பிடிக்க முடியுமா என்றால், வேண்டாம், அதுக்கும் ஒரு வழி சொல்கிறார் வள்ளுவர். 


"பல கற்றும்" , "கல்லார்", "அறிவிலாதவர்" என்று மூன்று சொற்களை வைக்கிறார். 


அதாவது, நல்லவன் என்று யாரும் உன் கண்ணுக்குப் படவில்லையா, கவலை வேண்டாம். புத்தகங்களை எடு. அதில் எவ்வளவு நல்லவர்கள் பற்றி இருக்கிறது. நம் நாட்டில் மட்டும் அல்ல, உலகில் உள்ள அத்தனை நாட்டிலும் உள்ள நல்லவர்களைப் பற்றி நூல்களில் இருந்து அறிந்து கொள்ள முடியும் தானே?


புத்தர், ஆதி சங்கரர், ,மகா வீரர், இயேசு பிரான், இராமானுஜர், இராமர், தர்மர், விதுரர், அரிச்சந்திரன், சிபி சக்கரவர்த்தி, மார்டின் லூதர் கிங்  என்று அடுக்கிக் கொண்டே போகலாம் அல்லவா? அவர்களைப் பற்றி "கற்று" அதன்படி "ஒட்ட ஒழுகு" என்கிறார். 


இங்கும், ஒட்ட என்பதில் நம் காலத்துக்கு ஏற்ப அதை நாம் அனுசரித்து நடக்க வேண்டும். 


அது மட்டும் அல்ல, கற்பது என்பது நல்லவர்களைப் பற்றி மட்டும் அல்ல. நல்லதையும் கற்க வேண்டும்.  திருக்குறளில் எந்த ஒரு பெயரும் இல்ல. நல்லவன் என்று யாரையும் அடயாளப் படுத்தவில்ல. அதற்காக அதை விட்டுவிடுவதா? இல்லை, திருக்குறளில் "நல்லது" நிறைய இருக்கிறது.  அதை கற்றுக் கொள்ள வேண்டும். 


இதை எல்லாம் கற்றுக் கொண்டாலும், நடைமுறையோடு சேர நடக்கத் தெரிய வேண்டும். இல்லை என்றால், என்ன படித்தும், அவன் முட்டாள்தான் என்கிறார் வள்ளுவர். 


சரிதானே, படித்ததை வாழ்வில் நடைமுறை படுத்தாவிட்டால், படித்தவனுக்கும், படிக்காத முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்? இரண்டு பேரும் ஒரே மாதிரி செயல் பட்டால் இருவருமே முட்டாள்தானே. 


நல்லவர்களைப் பார்த்து, 

நல்ல நூல்களைப் படித்து, ,


அதில் உள்ளவற்றை நடைமுறைக்கு ஏற்றவாறு அமைத்து, அதன் படி நடக்க வேண்டும். 


இதை படித்து முடித்துவிட்டு, கண் மூடி சிந்தித்துப் பாருங்கள். இன்னும் பல அர்த்தங்கள் தோன்றும். 


இந்தக் குறளோடு இந்த அதிகாரம் நிறைவு பெறுகிறது. 


நாளை,ஒரு தொகுப்புரை பார்ப்போம். அதன் பின் அடுத்த அதிகாரத்துக்குள் செல்வோம். 


காலம் அதிகம் இல்லாமையால், நீங்கள் நேரடியாகவே குறளையும், அதன் உரையையும் படித்து விடுங்கள்.