Friday, October 14, 2022

கந்தரனுபூதி - நின்று தயங்குவதே

       

 கந்தரனுபூதி - நின்று தயங்குவதே 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


இந்தப் பாடலுக்குத்தான் அவ்வளவு பெரிய முன்னுரை. அந்த முன்னுரை இன்னும் வர இருக்கும் பாடல்களுக்கும் தேவைப்படும்.


இரண்டுவிதமான மாயைகள் பற்றி சிந்தித்தோம். ஏதோ வாசித்து விட்டதால் புரிந்து விட்டது என்றோ, அல்லது எழுதிய எனக்கு புரிந்து எழுதினேன் என்று கொள்ளக் கூடாது. 


புராணங்கள் சொல்கின்றன அந்த மாயை என்பது நாரதருக்கும் புரியவில்லை என்றும், அவர் அதை திருமாலிடம் கேட்டார் என்றும்.. அந்தக் கதை பற்றி பின்னொருநாள் சிந்திப்போம். 


ஒன்று சுத்த மாயை, இன்னொன்று அசுத்த மாயை.


இந்த சுத்தம், அசுத்தம் என்பதெலாம் ஏதோ அழுக்கு, குப்பை என்று நினைக்கக் கூடாது. சுத்தம் என்றால் துன்பக் கலப்பு இல்லாதது. அசுத்தம் என்றால் அதில் இன்பமும் துன்பமும் கலந்து இருக்கும். 


இறைவன் இரண்டுவிதமான மாயைகளால் உயிர்கள் பாசத்தில் இருந்து விடுபட்டு தன்னைச் சேர வழி செய்வான். 


மகா மாயை, சுத்த மாயை, பிரகிருதி மாயை, சக மாயை என்றெல்லாம் அவற்றிற்கு பெயர் சொல்கிறார்கள். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


என்னதான் படித்தாலும், எவ்வளவுதான் படித்தாலும் மனம் அதன் பாட்டுக்குப் போகிறதே தவிர படித்ததால் ஒரு பயனும் விளைவது இல்லை. 


நிறைய தூரம் போக வேண்டாம்....தினம் உடற் பயிற்சி செய்வது, கண்டதையும் உண்ணாமல் இருப்பது என்று எத்தனை தரம் முடிவு செய்து இருப்போம். செய்கிறோமா?  மனம் சோம்புகிறது, இனிப்பை நாடுகிறது. அறிவு வேலை செய்வது இல்லை. 


இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  படித்துக் கொண்டே இருப்பதில் அர்த்தம் இல்லை. 


உடற் பயிற்சி செய்வது எப்படி, அதனால் விளையும் நன்மைகள் பற்றி ஆயிரம் நூல் படித்து என்ன பலன், உடற் பயிற்சி செய்யாவிட்டால்? 


ஆஹா என்னமா சொல்லி இருக்கிறார்கள், என்ன ஒரு ஆராய்ச்சி என்று வியந்து மகிழலாமே தவிர ஒரு பலனும் இருக்காது. 


இதை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். 


இந்தச் சிக்கல் நமக்கு மட்டும் அல்ல.


"மகா மாயையை களைந்திட வல்ல முருகன், தன் ஆறு முகங்களாலும் உபதேசம் செய்தும், இந்த உடல், ஆடை, பெண்கள் என்று இந்த உலக மாயையில் இருந்து வெளி வர முடியாமல் தயக்கம் அடைகிறேனே" என்கிறார் அருணகிரிநாதர். 


பாடல் 


மகமாயை களைந்திட வல்லபிரான் 

முகமாறு மொழிந்து மொழிந்திலனே 

அகமாடை மடந்தைய ரென்றயரும் 

சகமாயை யுணின்று தயங்குவதே



சீர் பிரித்த பின் 


மகமாயை களைந்திட வல்ல பிரான் 

முகம் ஆறும் மொழிந்தும்  ஒழிந்திலனே 

அகம் ஆடை மடந்தையர் என்று அயரும்  

சகமாயையுள் நின்று தயங்குவதே



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


(pl click the above link to continue reading)



மகமாயை = மகா மாயையை 


களைந்திட = விலக்க 


வல்ல பிரான்  = வலிமையுள்ள முருகன் 


முகம் ஆறும் = ஆறு முகங்களாலும் 


மொழிந்தும் = உததேசம் செய்தும் 


ஒழிந்திலனே  = விட முடியவில்லையே 


அகம் = உடம்பு 


ஆடை  = ஆடை, அணிகலன்கள் 


மடந்தையர் = பெண்கள் 


என்று அயரும்   = என்று அயரும், தளரும், தவிக்கும் 


சகமாயையுள் = இந்த உலக மாயையில் 


நின்று = மூழ்கி 


தயங்குவதே = தயங்கி நிற்கிறேனே 


விட வேண்டும் என்று தெரிகிறது. விடவும் மனம் வர மாட்டேன் என்கிறது. 


உபதேசம் அறிவுக்கு எட்டுகிறது. பாசம் மனதைப் பற்றிக் கொண்டு உலக பந்தங்களை விட முடியாமல் தவிக்கிறது. 


விட்டு விடலாமா என்று ஒரு என்னணம்.


இவ்வளவு இன்பத்தை எப்படி விடுவது என்று ஒரு தயக்கம். 


"சக மாயையுள் நின்று தயங்குவதே" என்கிறார். 


இறைவனே வந்து சொன்னாலும் மனித மனம் (பசு) பாசத்தில் இருந்து எளிதில் விடுபடுவது இல்லை. 


சிவ பெருமான் நேரில் வந்து உபதேசம் செய்தும், மணிவாசகர் புரிந்து கொள்ளவில்லை. 


கண்ணபிரான் நேரில் உபதேசம் செய்தும், அர்ஜுனன் புரிந்து கொள்ளவில்லை. 


இதுதான் மாயையின் வலை. 


உண்மையை மறைக்கும். பொய்யை, உண்மை போல் காட்டும். 


"பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி"


என்பார் மணிவாசகர். 


பொய்யை மெய் என்று நம்பி அதன் பின் போய்க் கொண்டிருக்கிறோம். 


நீண்ட, ஆழமான முயற்சி வேண்டும். 







[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html




]




Thursday, October 13, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - 3602 - அன்று செய்தது

       

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   3602 - அன்று செய்தது 



திருமாலின் மிகப் பெரிய செயல்களை சொல்லிக் கொண்டே வருகிறார் நம்மாழ்வார். 


பாற்கடல் கடைந்தது, இராவணனை அழித்தது,  ஈரடியால் உலகம் அளந்தது, குருஷேத்திர யுத்தம் நடத்தியது என்று சொல்லிக் கொண்டு வந்த அவர், இதெல்லாம் என்ன பெரிய விடயம், அரக்கர்களை அழிப்பது, மனிதர்களோடு (கௌரவர்கள் ) சண்டை போட்டு வெல்வது இதெல்லாம் ஒரு பெரிய காரியமா? 

மிகப் பெரிய காரியம் என்று எதைச் சொல்லலாம் என்று யோசிக்கிறார். 


இந்த உலகை எல்லாம் படைப்பது என்பது சாதாரண காரியமா? இந்த உலகம் எவ்வளவு பெரியது என்று நம்மால் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு பெரிய உலகை படைப்பது என்றால்?


" அன்று மண், நீர், தீ, காற்று, விண்வெளி , மலைகள் சூரியன், சந்திரன் போன்ற நட்சத்திரங்களும், கோள்களும், மழை, போன்றவற்றின் தேவர்களும், மீதி உள்ள உலகம் அனைத்தும் செய்த போது"



பாடல் 



அன்று மண்நீரெரி கால்விண் மலைமுதல்,

அன்று சுடரிரண் டும்பிற வும்,பின்னும்

அன்று மழையுயிர் தேவும்மற் றும்,அப்பன்

அன்று முதலுல கம்செய் ததுமே.



சீர் பிரித்த பின் 


அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்,

அன்று சுடர் இரண்டும் பிறவும், பின்னும்

அன்று மழை உயிர்  தேவும் மற்றும், அப்பன்

அன்று முதல் உலகம் செய்ததுமே.




பொருள் 



(pl click the above link to continue reading)




அன்று = முன்பொருநாள் 

மண் = மண் 

நீர்  = நீர் 


எரி = தீ 

கால்  = காற்று 


விண் = விண்வெளி 


மலை = மலைகள் 

முதல் = முதலியவற்றைப் படைத்ததுவும் 


அன்று  = முன்பொருநாள் 


சுடர் = வெளிச்சம் தரும் 


இரண்டும் = சூரியன், சந்திரன் என்ற இரண்டையும் 


பிறவும் = மற்ற நட்சத்திரங்களையும், கோள்களையும் படைத்ததுவும் 


பின்னும் = மேலும் 


அன்று = முன்பொருநாள் 


மழை = மழையையும் 


உயிர்  = அனைத்து உயிர்களையும் 


தேவும் = அவற்றிற்கு உரிய தேவர்களையும்  


மற்றும் = மேலும் 


அப்பன் = திருமால் 


அன்று = முன்பொருநாள் 


முதல் உலகம் செய்ததுமே. = முதன் முதலாக உலகம் செய்ததுதும் 



இந்த உலகம் எப்படி தோன்றியது, என்று தோன்றியது என்று அறிவியல் விளக்கம் சொல்லிக் கொண்டு போகிறது. ஒவ்வொரு நாளும் அறிவியலின் பரப்பு விரிந்து கொண்டே போகிறது. 


அது ஒரு புறம் இருக்க, உலகத்தை இறைவன் தோற்றிவித்தான் என்று பக்தி இலக்கியங்கள் பேசிக் கொண்டிருக்கின்றன. 


இவற்றை எப்படி பார்ப்பது? அறிவியலின் கூற்றுப் படி பக்தி இலக்கியங்கள் சொல்வது எல்லாம் தவறு. 


பக்திமான்களை கேட்டால் "அதெல்லாம் நம்பிக்கையின் பாற்பட்டது. கேள்வி கேட்கக் கூடாது"  என்று ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்கள். 


தெரியாதவற்றை நம்பலாம். தெரிந்தவற்றை எப்படி நம்புவது? இரண்டும் இரண்டும் ஐந்து என்று நம்ப முடியுமா?


இந்தச் சிக்கல் தொடர்கிறது. 


எதற்காக இவற்றைப் படிக்க வேண்டும்?


எனக்குத் தெரிந்து சில காரணங்கள்:


முதலாவது, மனம் விரியும். கற்பனை விரியும். அப்படி ஒரு பிரமாண்டமான ஒரு விடயத்தை மனம் பற்றும். ஒவ்வொரு நாளும் அது பற்றி சிந்திக்க சிந்திக்க மனம் அதை உள்வாங்கும். அப்படி ஒரு பிரமாண்டத்தை சிந்திக்க சிந்திக்க நாம் ஒன்றும் பெரிய ஆள் இல்லை, நம் துன்பங்கள் ஒன்றும் பெரிய துன்பம் இல்லை, நம் சிக்கல்கள், பிரச்சனைகள் பெரிய விடயம் அல்ல, அதற்காக சண்டை போட்டுக் கொள்வது, போட்டி போடுவது, பொறாமை கொள்வது என்பதெல்லாம் நகைப்பு இடமானது என்ற விரிந்த நோக்கம் வரும். 


இரண்டாவது,  இந்த உலகை ஒருவன் படைத்தான் என்று நம்பும் போது, அந்த நம்பிக்கை ஒரு பலம் தரும். அப்படி ஒருவன் இருக்கிறான், அவன் நமக்கு துணை செய்வான் என்ற நம்பிக்கை ஒரு தைரியம் தரும், அதனால் பதற்றம் குறையும், மன அழுத்தம் குறையும், பயம் விலகும். "எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்" என்று அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு வேலையை பார்க்க போது, மனம் லேசாகிவிடும். அது உண்மையோ பொய்யோ, அந்த நம்பிக்கை ஒரு நன்மை தருகிறது.  அதை ஏன் மறுக்க வேண்டும்


மூன்றாவது, அழகான தமிழ். கவிதை. சொற் சுருக்கம். சொல்லும் விதம். அதனையும் அள்ளிக் கொண்டு போய் விடுகிறது நம் மனதை. 


இறுதியாக, எவ்வளவோ இலயித்து, அனுபவித்து எழுதி இருக்கிறார்கள். அது பொய்யாக இருக்குமா? அந்தப் பாடல்களில் ஏதேனும் உண்மை இருக்குமா? இருக்கும் என்றால் அது என்ன என்ற தேடல் தொடர்கிறது. அதுவும் ஒரு சுவாரசியம்தான். 


படிப்போம். 






(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்


பாசுரம் 3599  - மெலிந்த பொழுது 


Tuesday, October 11, 2022

திருக்குறள் - வெஃகுதல் செய்யார்

   

 திருக்குறள் - வெஃகுதல் செய்யார்



வெற்றி பெற்று விட்டால் எல்லாம் என் திறமை, என் சாமர்த்தியம், என் உழைப்பு என்று நினைப்பதும், தோல்வி வந்தால் மற்றவர்கள் செய்த சதி, விதி, நேரம் சரியில்லை என்று பழியை வேறு இடத்தில் போடுவதும் மனித இயல்பு. 



தோல்வி அடையும் போது, எல்லாம் என் முட்டாள்தனம், என் சோம்பேறித்தனம், என் கையாலாகத்தனம் என்று சொல்லக் கேட்டு இருக்கிறோமா? இல்லை. 


மனிதர்கள் நினைக்கிறார்கள் முயற்சி செய்தால் எந்த வெற்றியையும் பெற்று விடலாம் என்று. 


இரண்டாவது, வாழ்கையின் வெற்றி தோல்வி என்பது எவ்வளவு சொத்து சேர்த்தோம் என்பதில் அடங்கி இருக்கிறது என்றும் நினைகிறார்கள். எப்படியாவது நிறைய பொருள் சேர்த்து விட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். 


நேர் வழியில் முடியாவிட்டால், குறுக்கு வழியில். 


பாடல் 



இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


(Please click the above link to continue reading)



இலம்என்று = நம்மிடம் பொருள் இல்லை என்று 


வெஃகுதல் = பிறர் பொருளை தவறான வழியில் அடைய நினைக்கும் செயலை 


செய்யார் = செய்ய மாட்டார்கள் 


புலம்வென்ற = புலன்களை வென்று 


புன்மையில் =  குற்றமற்ற 


காட்சி யவர். = நோக்கு உடையவர்கள் 


பிறன் பொருளை அடைய ஏன் நினைக்கிறார்கள்?


முதலாவது, ஆசை. புலன் இன்பம். கார், வீடு, டிவி என்று மேலும் மேலும் ஆசைப் படுவதால், நேரான வழியில் அவற்றை எல்லாம் அடைய முடியாத போது, பிறன் பொருளை தவறான வழியில் அடைய மனம் நினைக்கிறது. 


இரண்டாவது, பொருள் இல்லாவிட்டால் இன்பம் இல்லை என்ற ஏக்கம், பயம். இருப்பது போதும் என்ற திருப்தி இல்லாமை. 


மூன்றாவது, நமக்கு கிடைத்தது, நம் விதிப் பயன் என்று நினைக்காமல், எப்படியாவது பொருள் ஈட்ட நினைப்பது.  மற்றவனுக்கு கிடைத்தது அவன் விதிப் பயன். நமக்கு கிடைத்தது நம் விதிப் பயன் என்ற எண்ணம் வந்து விட்டால் மனம் பறக்காது. இதைத் தான் "புன்மை இல் காட்சியவர்" என்றார். குற்றமற்ற பார்வை. பொறாமை, பேராசை போன்ற குற்றங்கள் இல்லாத பார்வை. 


ஐயோ, அவனுக்கு அது கிடைத்து விட்டதே, இவனுக்கு இது கிடைத்து விட்டதே என்று அலையாமல் எல்லாம் வினைப் பயன் என்ற இருப்பது. .



வெஃகாமையின் தீமை மட்டும் அல்ல, அதை எப்படி விலக்குவது என்றும் சொல்லித் தருகிறார். 






[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html

]


Monday, October 10, 2022

திருவாசகம் - திரு அம்மானை - பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2

         

திருவாசகம் - திரு அம்மானை  -   பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2




பாடலுக்கு முன்னுரை சொல்வதைவிட நேரடியாக பாடலையே வாசித்து விடலாம். 


பாடல் 



பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,
கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை
மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்!



பண்கள் அமைந்த பாடல்களால் தன்னை துதிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டும் பரிசுகளை தந்து அருள் செய்பவன். பெண்ணை பாகமாகக் கொண்டவன். பெரியவன். திருபெருந்துறையில் உறைபவன். வானாளாவிய புகழ் கொண்டவன். நெற்றிக் கண் உடையவன். மதுரையில் மண் சுமந்து, பாண்டிய மன்னனால் அடிபட்டு உடம்பில் புண் கொண்டவன். பொன் போன்ற நிறத்தை உடையவன். 





சுமந்த என்ற வார்த்தையின் ஆழத்தை எண்ணிப் பார்ப்போம். 






(pl click the above link to continue reading)



"பண் சுமந்த பாடல்" - பாடல் தனக்குள் அர்த்தத்தை மட்டும் அல்ல, இசையையும் சேர்ந்து சுமந்து கொண்டு வருகிறது.  திருவாசகம் போன்ற பாடல்களை இசையோடு பாடும் போது உள்ளம் உருகும். சிலர், காலையில் எழுந்து வீட்டு வேலைகள் செய்து கொண்டே தேவாரம், திருவாசகம், பிரபந்தம், சுப்ரபாதம், என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள். கை ஒரு வேலை பார்க்கும், கண் அடுப்பில் உள்ள சாமானை பார்க்கும், காது குக்கர் எத்தனை விசில் அடித்தது என்று கேட்டுக் கொண்டிருக்கும், கால் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும், இதற்கிடையில் வாய் பக்திப் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருக்கும்.  உணர்ச்சியே இல்லாமல், அது என்ன பக்தியோ?

  
பாடல்களை வசனம் போல படிக்கக் கூடாது. 


அப்படி பாடல்களை இசையோடு உள்ளம் உருகி பாடுபவர்களுக்கு வேண்டிய பரிசுகளைத் தருவான். இமய மலையின் அடியில் மாட்டிக் கொண்ட இராவணன் சாம கானம் பாட, சிவன் அதில் மயங்கி, அவனை விடுவித்தது மட்டும் அல்ல சந்ந்தரகாந்தம் என்ற தன் வாளினையும் கொடுத்தார் என்பது புராணம். 


"பெண் சுமந்த பாகத்தன்":  பெண் ஆயிரம் பாரம் சுமப்பாள். அவளை யார் சுமப்பது? அவளுக்கும் அன்பு, ஆதரவு, அரவணைப்பு எல்லாம் தேவைப்ப்படும்தானே? 


கம்ப இராமாயணத்தில், தயரதன், விழுந்து கிடக்கும் கைகேயியை ஒரு யானை, மான் குட்டியை தூக்குவது போலத் தூக்கினான் என்பான். சுமக்கத்தான் வேண்டும். சுகமான சுமை. 


"கலி மதுரை" - ஆராவாரம் மிகுந்த மதுரை.  எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் மதுரை. தூங்கா நகரம் என்று சொல்லுவார்கள். 



"மதுரை மண் சுமந்த" -  மதுரை மண்ணுக்கு அவ்வளவு பெருமை. அந்த மண்ணை சிவ பெருமான் தூக்கிச் சுமந்தார். வேறு எந்த ஊர் மண்ணையும் தூக்கிச் சுமக்கவில்லை. 


கதைகளில் சிவன் முதலில் புட்டு வாங்கி உண்டு விட்டு, வேலை செய்யாமல் நீரில் மூழ்கி விளையாடிக் கொண்டிருந்ததாகவும், பாண்டியன் வந்து அடித்ததாகவும் வரும். மாணிக்க வாசகர் அதை திருத்துகிறார். 


"மண் சுமந்த கூலி கொண்டு" - முதலில் சுமந்தார், பின் கூலி கொண்டார். சுமந்த கூலி.  கூலி கொண்டு மண் சுமந்த அல்ல, மண் சுமந்த கூலி கொண்ட.


மணிவாசகரை பாண்டிய மன்னன் இரண்டு முறை தண்டித்தான். முதலில் குதிரை வாங்க பணத்தில் கோவில் கட்டியதற்காக, அதாவது அரசாங்க பணத்தை சொன்ன விதத்தில் செலவழிக்காததால் ஒரு தண்டனை.  


பின் குதிரை வந்து விட்டது. மணி வாசகரை விடுதலை செய்து விட்டான். அன்று இரவே குதிரைகள் எல்லாம் நரிகளாகி ஓடி விட்டன. எனவே, மீண்டும் அவருக்கு தண்டனை கொடுத்தான். 


முதல் குற்றம் மணி வாசகருடையது. குதிரை வந்த பின், அதை சரி பார்த்து வாங்க வேண்டியது பாண்டிய மன்னனின் கடமை.  பெற்றுக் கொண்ட பின் இனி அது அவன் பொறுப்பு. பரிகள் நரிகளானால் அது பாண்டிய மன்னனின் நிர்வாகப் பிழை. அதற்கு மணி வாசகர் என்ன செய்வார்? அவரைத் தண்டித்தது பிழை. அதை உணர்த்த, அரசன் தவறு செய்தால் அது குடிகள் எல்லோரையும் பாதிக்கும் என்று  காட்ட வைகையில் வெள்ளம் வர வைத்தார் சிவ பெருமான். 



என்னதான் மணிவாசகர் செய்தாலும், அவருக்குள் இருந்து அப்படி பொதுப் பணத்தில் கோவில் கட்ட வைத்தது இறைவன் தானே. கோவில் கட்டியது தவறு என்றால், மணி வாசகரை மட்டும் எப்படி தண்டிப்பது? எனவே, இறைவனும் தண்டனை பெற்றுக் கொண்டான் என்று காட்டவே அந்த 


"கோலால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனி" ஆனாரோ ?


உயிர்கள் வாடினால் இறைவனும் வாடுவான் என்று உணர்த்தவோ? 


"ஆயர் தம் கொழுந்தே" என்று பேசும் பிரபந்தம்.  வேர் வாடினால் கொழுந்து வாடும். பக்தன் வாடினால், இறைவன் வாடுவான். 


சிவ பெருமான் என்ன நிறம்?


பொன் நிறம்.  படத்தில் வரைபவர்கள் கறுப்பாக வரைந்து விடுகிறார்கள். 

"பொன்னார் மேனியனே"

"பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்"

"புண் சுமந்த பொன் மேனி" 

"சோதியே, சுடரே சூழ் ஒளி விளக்கே"


திருவாசகத்தில் ஒரு பாடலை ஒரு முறை படித்துவிட்டால் மேலே போக மனம் வராது. மனம் அதிலேயே சுத்திக் கொண்டு இருக்கும். 


சொல்லிக் கொண்டே போகலாம். படிக்கப் படிக்க, ,சிந்திக்க சிந்திக்க ஊற்றெடுக்கும் பாடல்கள் திருவாசகப் பாடல்கள். 



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:பா

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


)


Friday, October 7, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நீறு பட இலங்கை

      

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   நீறு பட இலங்கை 



குருஷேத்திர யுத்தத்தில் கண்ணன் பற்றிக் கூறினார். 


பின்னர் நரசிம்ம அவதாரம் பற்றிக் கூறினார். 


அடுத்து இராம அவதாரம் பற்றி கூற இருக்கிறார். 



இலங்கையில் போர் நடக்கிறது.  நாம் இப்போது அங்கே போய் விட வேண்டும். தொலைவில், ஒரு மலை மேல் நின்று அந்தப் போரைப் பார்க்கிறோம். 



இரண்டு பக்கமும் மிக உக்கிரமாக போர் புரிகிறார்கள். 



ஆயிரக்கணக்கான அம்புகள் பறக்கின்றன. அந்த அம்புகள்சில சமயம் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்கின்றன. அப்படி அவைஇடை விடாமல் மோதிக் கொள்ளும் ஒலி பயங்கரமாக ஒலிக்கிறது. 


இராம இலக்குவனர் அம்புகளால் அரக்கர்கள் கூட்டம் கூட்டமாக மடிகிறார்கள். அவர்கள் உடலில் இருந்து இரத்தம் பீறிட்டு எழுகிறது. அந்த இரத்தம் எல்லாம் ஒன்று சேர்ந்து சிறு ஓடையாகி, பின் அந்த ஓடைகள் ஒன்று சேர்ந்து பெரிய ஆறாகி கடலில் சென்று சேர்கிறது. 



ஏற்கனவே உள்ள ஆற்று நீரோடு, இந்த இரத்த ஆறும் கலப்பதால் கடல் நீர் பொங்கி எதிர் வருகிறது. 


சாதாரண ஆற்று நீரும் இரத்தம் கலந்து நிறைகிறது. 


பாடல் 



மாறு நிரைத்திரைக் கும்சரங் கள்,இன

நூறு பிணம்மலை போல்புர ள,கடல்

ஆறு மடுத்துதி ரப்புன லா,அப்பன்

நீறு படவிலங் கைசெற்ற நேரே.



சீர் பிரித்தபின் 



மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள், இன

நூறு பிணம் மலை போல் புரள, கடல்

ஆறு மடுத்து உ திரப்புனலால்,  அப்பன்

நீறுபட இலங்கை செற்ற நேரே.


பொருள் 




(pl click the above link to continue reading)







மாறு  = இரு புறமும் மாறி மாறி 

நிரைத்து =  வான் வெளியே நிறைந்து போகும் படி 

இரைக்கும் = இரைச்சல் உண்டாக்கும் 

சரங்கள் = அம்புகள் 


இன = இனம் இனமாய், கொத்து கொத்தாக 


நூறு = நூற்றுக் கணக்கில் 


பிணம் மலை போல் புரள = பிணங்கள் மலை போல் புரண்டு கிடக்க 


கடல் = கடலானது 


ஆறு மடுத்து = ஆற்று நீர் எதிர்த்து வர 


உ திரப்புனலால் = இரத்த ஆற்றால் 


அப்பன் = இராம பிரான் 


நீறுபட = சாம்பலாகும்படி  


இலங்கை  = இலங்கையை 


செற்ற நேரே  = போர் செய்த போது 




இராவணன் எவ்வளவு பெரிய பலம் பொருந்தியவன். 



முக்கோடி வாழ் நாள், எக்கோடி யாராலும் வெல்லப்படாய் என்ற வரம், திக்கோடு உலகு அனைத்தும் வென்று அடக்கிய புய வலம், சங்கரன் கொடுத்த வாள், என்று மிகுந்த பராகிரமம் உடையவன். 


அப்பேற்பட்ட இராவணனின் படைகளை கொன்று குவித்து இரத்த ஆறு ஓட விட்டவன் இராமன். 


நம் துன்பம் எல்லாம் அவனுக்கு என்ன பெரிய விடயமா?  அவனைப் பற்றினால் வெற்றி நிச்சயம் என்று இந்த வெற்றிப் பாசுரத்தில் நம்மாழ்வார் கூறுகிறார். 










பொருள் 



(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்


பாசுரம் 3599  - மெலிந்த பொழுது 


Wednesday, October 5, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 7

      

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 7 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம். 


ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம். 


அப்படி வெளிவர நினைத்து தவிக்கும் உயிர்களுக்கு இரங்கி இறைவன் தன் நிலையில் இருந்து கீழிறங்கி வரும் முதல் ஐந்து நிலைகளான சிவ தத்துவத்தைப் பார்த்தோம். அவையாவன 


1. நாதம் , 2. விந்து .  3. சதாக்கியம்,  4. ஈஸ்வரம்,  5. சுத்த வித்தை.


அதை அடுத்து, இறைவன் உயிர்களை செயப்பட ஆயதம் செய்வான்.  அவை முறையே 

6. காலம்,  7. நியதி, 8. கலை, 9. வித்தை , 10. இராகம்/அராகம் , 11. மாயை 12 . புருடன் 


(இதில் மாயை என்ற தத்துவம் விடுபட்டு போய் விட்டது. மன்னிக்க.).


முதல் 5 தத்துவங்கள் சிவ தத்துவங்கள் என்றும் அடுத்த 7  தத்துவங்கள் வித்யா தத்துவங்கள் என்றும்  அழைக்கப்படுகின்றன. 


 13  சித்தம்; 14 அகங்காரம் ; 15. புத்தி;  16  மனம் 


இந்த சித்தம், அகங்காரம், புத்தி, மனம் என்ற நான்கு கரணங்களும் அந்தக் கரணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

எனவே, 16  தத்துவங்கள் பார்த்து விட்டோம். 


இறைவன் இறங்கி வந்தாகிவிட்டது, உயிர்கள் செயல்பட தயார், அவை செயல்பட அந்தக் கரணங்கள் வந்து விட்டன. 


இன்னும் 2௦ தத்துவங்கள் பாக்கி இருக்கின்றன. 


உயிர்கள் செயல்பட தணு  - கரண - புவன - போகங்கள் வேண்டும் என்று பார்த்தோம். அதன் விரிவை இங்கே காண இருக்கிறோம்.



உயிர்கள் செயல் பட புவனம், அதாவது இடம் வேண்டும். இடம் என்றால் சூழ்நிலை. வெறும் தரை மட்டும் போதாது. 


எனவே இறைவன் ஐந்து பூதங்களைப் படைக்கிறான். அவை மாபூதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 


17. ஆகாயம்;  18. தீ;   19. நீர்  20. காற்று;  21 நிலம் 


என்று ஐந்து தத்துவங்களாகப் பிரிகின்றன. 


இந்த பூதங்கள இருந்தாலும், இந்தப் பூதங்களை உணரும் புலன்கள் வேண்டும் அல்லவா?


இந்த ஐந்து பூதங்களையும் அறிந்து கொள்ள ஐந்து புலன்களைத் படைக்கிறான் இறைவன். அவை ஞான இந்திரியங்கள் (ஞானேந்திரியம்) என்று அழைக்கப் படுகின்றன. 


22. மெய்   23  வாய்   24 மூக்கு   25 செவி   26 கண்   


ஐந்து பூதங்கள் ஒரு புறம்; ஐந்து புலன்கள் ஒரு புறம். இந்த இரண்டையும் எப்படி இணைப்பது? எது இணைக்கும்? 


அதற்கு அடுத்த பத்து தத்துவங்கள் வருகின்றன 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html

(pl click the above link to continue reading)



27. சுவை  28. ஒளி  29 ஊறு  30 ஓசை  31 நாற்றம் 


என்ற இந்த ஐந்தும் தன்மாத்திரைகள் என்று அழைக்கப் படுகின்றன.  


இவை இருந்தால் மட்டும் போதாது, உடல் இருக்கிறது, அதில் அவயங்கள் இருக்கின்றன, அந்த அவயங்கள் (புலன்கள்) அறியும் அறிவு இருக்கிறது. இருந்தாலும் உயிர்கள் இயங்க முடியாது. 


வாய் இருக்கிறது. நீர் இருக்கிறது. அந்த நீர் எப்படி வாய்க்குள் போகும்? நீர் இங்கே வர வேண்டும் அல்லது உடம்பு அங்கே போக வேண்டும்.  நீர் வராது. உடம்புதான் போக வேண்டும். எப்படி போகும்? அது நடந்து போக வேண்டும்.  போனால் மட்டும் போதுமா? தண்ணீருக்கு அருகில் சென்றால் போதுமா? அதை எடுத்து வாயில் ஊற்ற வேண்டாமா?  சரி, ஊற்றினால் போதுமா? முதலில் ஊற்றிய நீர் வெளியேற வேண்டாமா? ஊற்றிக் கொண்டே இருக்க முடியுமா?


இந்த சிக்கலை விடுவிப்பது அடுத்து வரும் ஐந்து கன்மேந்திரியங்கள் 


அவை:


32 - கை, பற்றுதல், பாணி 


33 - கால், பதித்தல், பாதம் 


 34. பிறப்பு உறுப்புகள் - உபத்தம் 


35.  நாக்கு - பேசுதல் - பலுக்கல் - வாக்கு 


36. கழிவை வெளியேற்றும் உறுப்புகள் - கழித்தல், பாயு 


பாணி, பாதம், உபத்தம்,, வாக்கு, பாயு  என்பன. 


இனி, இவை ஒன்றோடு ஒன்று எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்று பார்ப்போம். 


உதாரணமாக 


பஞ்ச மாபூதங்களில் உள்ள - நீர் 


ஞானேந்திரியத்தில் - வாய் 


தன்மாதிரையில் - சுவை 


இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை. 


சுவை அறிய வேண்டும் என்றால் நீர் வேண்டும். எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும், வாயில் உமிழ் நீர் இல்லாவிட்டால் சுவை தெரியாது. 


நாலைந்து நாள் காய்ச்சலில் கிடந்து, நாக்கெல்லாம் உலர்ந்து போய் கிடக்கும் ஒருவனிடம் ஒரு இலட்டை கொடுத்துப் பாருங்கள்.  "வேண்டாம், வாயெல்லாம் கசக்குது" என்பான்.   ஏன், வாயில் நீர் இல்லை. உலர்ந்து போய் விட்டது. 


சுவை அறிய வேண்டும் என்றுதான் இறைவன் நாவை எந்நேரமும் ஈரமாக வைத்து இருக்கிறான். வாயில் போட்டது கரைய வேண்டும். 


அது போல, 


நிலம் - மூக்கு - நாற்றம் (மணம், வாசம்). 


ஐந்து பூதங்களில் நிலத்தைத் தவிர மற்றதற்கு வாசம் கிடையாது.  மண்ணுக்குத் தான் வாசம் உண்டு. மண் வாசனை என்று சொல்கிறோம் அல்லவா?


ஆகாயம் - செவி - ஓசை 


ஓசை வர வேண்டும் என்றால் வெளி வேண்டும்.பொருள்கள் அசைய வேண்டும். அதிர வேண்டும். பொருள்கள் அசையும் போது காற்று அசைந்து, அது காதில் வந்து மோதும் போது ஓசையாகக் கேட்கிறது. 


தீ - கண் - ஒளி 


கண் காண வேண்டும் என்றால் வெளிச்சம் வேண்டும். இருட்டுக்குள் ஒன்றும் தெரியாது. ஒளி என்றால் வெப்பம். தீ.  எந்த விளக்கைப் போட்டாலும் அது சூடு ஏறும். 


காற்று - மெய் - ஊறு (தொடு உணர்ச்சி). 


காற்று இருந்தால்தான் தோலில் தொடு உணர்ச்சி இருக்கும். 


சிவ தத்துவம் ஐந்து  (5)

வித்யா தத்துவம் ஆறு  (6, 5+6 = 11)

அந்தக் கரணங்கள் ஐந்து (5, 11+5 = 16)

பூதங்கள் ஐந்து  (5, 16 + 5 = 21)

தன்மாத்திரை ஐந்து  (5, 21 + 5 = 26)

ஞானேந்திரியங்கள் ஐந்து  (5, 26 + 5 = 31)

கன்மேந்திரியங்கள் ஐந்து (5, 31 + 5 = 36).


ஆக மொத்தம் 36 தத்துவங்கள். இது சைவ சமயத்தின் அடிப்படை. 


இந்த 36 தத்துவங்களும் இரண்டு விதமான மாயையில் இருந்து தோன்றுகின்றன. 


சுத்த மாயை, அசுத்த மாயை என்று இரண்டு பிரிவுகள். அதை முன்னமேயே பார்த்தோம் (குன்றி மணி,  வெளி ).


இந்த இரண்டு மாயைகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 


இனி, கந்தர் அனுபூதிக்குள் செல்வோம். 






[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html



]




Monday, October 3, 2022

திருக்குறள் - நாணுபவர்

  

 திருக்குறள் -  நாணுபவர்


மக்கள் ஏன் தவறு செய்யாமால் இருக்கிறார்கள்?


முதலில், தவறு செய்தால் சட்டம் தண்டிக்கும் என்ற பயம்.  காவலர்கள் பிடித்துச் சென்று விடுவார்கள். சிறையில் போடுவார்கள்.தண்டனை கிடைக்கும் என்ற பயம்.  இது மிக அடிப்படையான ஒன்று. சட்டத்துக்கு பயந்து தவறு செய்யாமல் இருப்பது. 


இரண்டாவது, நியாயம் தர்மத்துக்கு கட்டுப்பட்டவர்கள் தவறு செய்ய மாட்டார்கள்.  இது தர்மம் அல்ல, அறம் அல்ல. சரி அல்ல என்று நினைத்து தவறான ஒன்றைச் செய்யாமல் இருப்பது. பல சமயங்களில் சட்டம் ஒன்றும் சொல்லாது. ஒரு செயலை தண்டிக்க சட்டப் பிரிவு இருக்காது. சட்டத்தில் உள்ள ஓட்டைகள் என்பார்கள். Loophole. அப்படி வழி இருந்தும், தவறு செய்யாமல் இருப்பது.  பழி பாவத்துக்கு அஞ்சி,தெய்வத்துக்கு பயந்து செய்யாமல் இருப்பது.  இது ஒரு படி மேலே.  


உதாரணமாக மாமிசம் உண்பது. மாமிசம் உண்டால் சட்டம் தண்டிக்காது.  இருந்தும், உயிர் கொலை பாவம் என்று எண்ணி மாமிசம் சாப்பிடாமல் இருப்பது. இதிலும் ஒரு படி மேலே போய் பால் , தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றைக் கூட சிலர் சாப்பிடமாட்டார்கள்.  கன்றுக் குட்டிக்கு உள்ள பாலை நாம் எடுத்துக் கொண்டால், கன்று என்ன செய்யும் என்று நினைத்து அவற்றை ஒதுக்கி விடுவார்கள். 


இதில் கூட பாவம்,  புண்ணியம். சுவர்க்கம் நரகம் என்ற ஆசை, பயம் எல்லாம் உண்டு. 


இதற்கு மேலே ஒரு படி போய் வள்ளுவர் இன்னொரு பாதையைக் காட்டுகிறார். 


தவறு செய்ய நாணுவது.  வெட்கப் படுவது. 


சட்டம், நீதி, நேர்மை, பழி, பாவம், புண்ணியம் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். 


சிலருக்கு, அறம் அல்லாத செயல்களை செய்ய வெட்கம் வருமாம். 


மனைவியை கட்டி அணைப்பது, முத்தம் கொடுப்பது ஒன்றும் சட்ட விரோதம் அல்ல. அதில் பாவம் ஒன்றும் இல்லை. சாத்திரங்களும், தர்மங்களும் அனுமதிக்கிறது. இருந்தும்,  பொது இடத்தில் யாராவது மனைவியை கட்டி அணைத்து முத்தம் தருவார்களா? மாட்டார்கள். ஏன்? நாணம், வெட்கம். 


செய்ய அனுமதித்தாலும், செய்வது குற்றம் அல்ல என்றாலும், செய்ய முடியாது.  


"தனக்கு ஒரு பலன் கிடைக்கிறது என்று எண்ணி, பழி தரும் செயல்களை செய்ய மாட்டார்கள், நடு நிலைமையில் இருந்து விலக நாணம் கொண்டவர்கள்" 


பாடல் 


படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


(Please click the above link to continue reading)


படுபயன் = பெரிய பயன், நன்மை 


வெஃகிப் = ஆசைப் பட்டு 


பழிப்படுவ = பழிதரும் செயல்களை 


செய்யார் = செய்ய மாட்டார்கள் 


நடுவன்மை = நடுவு + அன்மை = நடுவு நிலையில் இருந்து  விலகி இருப்பதற்கு 


நாணு பவர் = நாணம் கொள்பவர்கள் 


தொலைக் காட்சியில் பார்க்கிறோம். பெரிய பதவியில் உள்ளவர்களை கைது செய்து அழைத்துக் கொண்டு செல்லும் போது, சிரித்துக் கொண்டே கை அசைக்கிறார்கள். கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல். 


சாதாரண திருடன் கூட முகத்தை மறைத்துக் கொள்கிறான், துணியால் முகத்தை மூடிக் கொள்கிறான், காமிராவை கையால் மறைக்கிறான், தலை குனிந்து முகம் காட்ட மறுக்கிறான். 


"நான் எப்படி இதைச் செய்வேன்...என்னால் முடியவே முடியாது" என்ற நாணம் வர வேண்டும். 


நாணம் தரும் செயலைச் செய்யும் போது உடல் கூசும், கூனி குறுகிவிடும். 


மாவலி சக்ரவர்த்தியிடம் ஏமாற்றி மூன்று அடி நிலம் யாசகம் கேட்க வந்த போது உலகளந்த பெருமாள் கூட கூனி குறுகி மூன்றடி உள்ள வாமனனாக வந்தார் என்று சொல்லுவார்கள். 


நடுவன்மை அஞ்சுபவர்/வேண்டாதவர்/பழிப்பவர் என்று சொல்லி இருக்கலாம். 


"நாணுபவர்" என்று சொல்கிறார். 


நாணம் என்ற உணர்ச்சி கொஞ்சம் தேய்ந்து போய்க் கொண்டிருக்கிறது. எதெல்லாம் ஒரு காலத்தில் மறைவாக செய்யக் கூட நாணம் கொண்டார்களோ, அவற்றை எல்லாம் பொது வெளியில் கூச்சம் இல்லாமல் செய்கிறார்கள். கால ஓட்டத்தின் மாற்றங்கள். 


இருந்தும் அந்த உணர்ச்சி முற்றும் மறைந்து விடவில்லை. 


பழிச் செயல் செய்ய நாணம் அடைவது என்பது ஒரு புதிய சிந்தனை. 


சிந்திப்போம். 


[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html

]