Wednesday, October 19, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - குன்ற மெடுத் தானே

        

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   குன்ற மெடுத் தானே


ஆயர்பாடியில் உள்ள ஆயர்கள் இந்திரன் முதலிய சிறு தெய்வங்களை வழிபட்டு வந்தனர். கண்ணன் அவர்களிடம் "சிறு தெய்வங்களை வழிபட வேண்டாம், இனி என்னை வழிபடுங்கள்" என்றான். அவர்களும் இந்திர வழிபாட்டை நிறுத்தினார்கள். அதனால் கோபம் கொண்ட இந்திரன் ஆயர்பாடியின் மேல் பெரு மழை பெய்ய வைத்தான். அப்போது கண்ணன் கோவர்தணகிரி என்ற மலையை குடை போல் பிடித்து அந்த மழையில் இருந்து ஆயர்பாடி மக்களை காத்தான். 


இது கதை. 



கேட்டிருக்கிறோம். வண்ண ஓவியமாக பார்த்தும் இருக்கிறோம். 



அந்தக் காட்சியை நம்மாழ்வார் போல் நம்மால் சிந்திக்கக் கூட முடியாது. 


அவர் காட்டும் அந்த பிரமாண்ட காட்சியைக் காண்போம். 


இப்போது நாம் ஆயர்பாடியில் இருக்கிறோம். 



மழை அடித்து ஊத்துகிறது. நிற்காத மழை. எங்கும் வெள்ளம். மக்கள் தவிக்கிறார்கள். ஒண்ட இடம் இல்லை. குளிர் நடுங்குகிறது. ஆடு மாடுகள் எல்லாம் நீரில் நடுங்குகின்றன. தின்ன புல் பூண்டு இல்லை. முன்பு தின்றதை அசை போடுகின்றன. 



கண்ணன் வருகிறான்.கோவர்தன மலையை தன் கைகளால் தூக்குகிறான். 



மலையை தூக்குவது என்றால் சாதரணமா?


தூக்கும் போது ஒரு பக்கம் உயர்கிறது. மறுபக்கம் தாழ்ந்து இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கையை உள்ளே தள்ளி மேலும் தூக்குகிறான். மலை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று அசைகிறது. 



அப்போது அந்த மலையில் உள்ள குளங்களில் உள்ள நீர் வழிந்து ஓடுகிறது. மலையை விட்டு கீழே அருவி போல் கொட்டுகிறது. அது மலை நீரை உமிழ்வது போல இருக்கிறது. 


அந்த மலையில் உள்ள விலங்குகள் தட்டு தடுமாறி விழுந்து புரள்கின்றன. 



மலையை தூக்கிய பின், அதன் அடியில் ஆடு மாடுகள் ஓடி வந்து தங்கிக் கொள்கின்றன. 


பின் மக்களும் வந்து அதன் கீழ் நின்று கொள்கிறார்கள்.




பாடல் 




மேய்நிரை கீழ்புக மாபுர ள,சுனை

வாய்நிறை நீர்பிளி றிச்சொரி ய,இன

ஆநிரை பாடியங் கேயொடுங் க,அப்பன்

தீமழை காத்துக் குன்ற மெடுத் தானே.



பொருள் 




(pl click the above link to continue reading)




மேய் நிரை கீழ்புக = ஆடு மாடுகள் கீழே புகுந்து கொள்ள 


மாபுரள  = மலையில் உள்ள விலங்குகள் தட்டுத் தடுமாறி புரண்டு விழ 


சுனை = குளம் 


வாய் நிறை நீர்பிளிறிச் சொரிய = வாயில் நீரை கொண்டு யானை பிளிறி உமிழ்வது போல நீரை அருவி போல் கொட்ட 



இன ஆநிரை  = பசுக்களை மேய்க்கும் இனமான ஆயர்கள் 


பாடியங் கேயொடுங்க  = பாடி அங்கே ஒடுங்க 


அப்பன் = திருமால் 


தீமழை காத்துக் = தீமை தரும் பெருமழையில் இருந்து காக்க 


குன்ற மெடுத் தானே. = குன்றை கையில் எடுத்த்தானே 


வைணவர்கள் "பெருமாளை அனுபவிப்பது" என்பார்கள். 


அப்படி அணு அணுவாக இரசித்து அனுபவிக்கிறார்கள். 


தாங்கள் அனுபவித்ததை பாசுரமாக நமக்கு தந்துவிட்டு போய் இருக்கிறார்கள். 


படித்தால் புரிய வேண்டும். புரிந்த பின் அந்தக் காட்சி மனதில் ஓட வேண்டும். பின், அதை இலயித்து இரசிக்க வேண்டும். 


முடியும் என்றே நினைக்கிறேன். 




(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்


பாசுரம் 3599  - மெலிந்த பொழுது 



பாசுரம் 3600  -  நீறு பட இலங்கை 



பாசுரம் 3602 - அன்று செய்தது 




)


Monday, October 17, 2022

திருக்குறள் - அகன்ற அறிவுஎன்னாம்

    

 திருக்குறள் - அகன்ற அறிவுஎன்னாம்



பிறன் பொருளுக்கு ஆசைப் படாதே என்று கூறினால் போதுமா? 


மற்றவர் பொருளை ஒருவன் எவ்வாறு எடுக்க நினைக்க முடியும்? அப்படி வரும் எண்ணத்தை எப்படித் தடுப்பது என்று அடுத்து கூறுகிறார். 


இன்று நாம் காணவிருக்கும் குறளுக்கு பரிமேலழகர் உரை இல்லை என்றால் நமக்கு ஒன்றும் புரிந்திருக்காது. 


குறளின் பொருள் "நுண்ணிய அறிவினால் என்ன பயன், மற்றவன் பொருளை தகாத முறையில் அடைய நினைத்தால்" என்பதுதான். 



பாடல் 



அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்


பொருள் 





(Please click the above link to continue reading)


அஃகி = அஃகுதல்  என்ற சொல்லுக்கு நுணுகுதல் என்று பொருள். நுண்மையான 


அகன்ற = விரிந்த 


அறிவுஎன்னாம் = அறிவினால் என்ன பயன் 


யார்மாட்டும் = மற்றவர் இடத்து 


வெஃகி = அவர் பொருளை தவறான வழியில் அடைய எண்ணி 


வெறிய செயின் = தகாத காரியங்களை செய்தால் 




யார்மாட்டும் வெறிய செயின் என்பதற்கு பரிமேலழகர் உரை செய்யும் நுணுக்கம் அபாரம். 


"யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல்."


என்ன அர்த்தம்?


உலகில் உள்ள மக்களை இரண்டு கூறுகளாகப் பிரித்துக் கொள்கிறார். தக்கார், தகாதார் என்று. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று கொள்ளலாம்.


இங்கே, நம்மை விட வலிமை மிக்கவர்கள், நம்மை விட வலிமை குறைந்தவர்கள் என்று கொள்ளலாம். 


நம்மைவிட வலிமை மிக்கவர்களிடம் இழிந்தன செய்தல்

நம்மைவிட வலிமை குன்றியவர்களிடம் கடுமையான செயல்களைச் செய்தல்.


அது என்ன இழிந்தன, கடுமையான செயல்கள்?



இழிந்தன என்றால் திருடுதல், ஏமாற்றுதல், நயவஞ்சகம் செய்தல், போன்ற செயல்கள். நம்மைவிட வலியவர்களிடம் இருந்து அவர்களுக்குத் தெரியாமல் தவறான வழியில் அவர்கள் பொருளை எடுத்துக் கொள்ளுதல்.


நம்மைவிட வலிமை குன்றியவர்களிடம் கடியன செய்தல் என்றால் மிரட்டி வாங்குதல். அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், பெரிய பதவியில், அதிகாரத்தில் இருப்பவர்கள், எளிய மக்களை மிரட்டி இலஞ்சம் பெறுவது போல. மிரட்டி சொத்தை எழுதி வாங்கிக் கொள்வது.  அலுவலகத்தில் மேலதிகாரி தனக்கு கீழே இருப்பவரை கசக்கி பிழிந்து வேலை வாங்கி, அதற்கு உரிய ஊதியத்தை தர மறுப்பது. முனைவர் (PhD) படிக்கும் மாணவனின் முயற்சியை, உழைப்பை அவனின் guide எடுத்துக் கொள்வது. இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம். 



இந்த இரண்டையும் எப்போது ஒருவன் நீக்க முடியும் என்றால் "அஃகி அகன்ற அறிவு" இருந்தால்.  



நுண்ணிய, அகன்ற அறிவு இருந்தால் பொருள் என்பது இன்பம் அல்ல, தன் முயற்சி மட்டும் பொருளை தந்துவிடாது, தவறான வழியில் பொருள் ஈட்டுவது பாவம் போன்றவை தெரியவரும். எனவே, அறிவு உள்ளவன் இவற்றைச் செய்ய மாட்டான். 


"வெறிய செயின்" என்றார். செயின் என்றால் செய்தால் என்று பொருள். அறிவுள்ளவன் அப்படிச் செய்ய மாட்டான் என்பது குறிப்பு. அறிவினால் என்ன பயன் இப்படிச் செய்தால் என்றால் ஏதோ அறிவு உள்ளவன் இதைச் செய்வான் என்ற பொருள் வந்து விடும். எனவே "செயின்" என்றார். 




"நீ நாய் வாலை நேராகச் செயின் உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன்" என்றால், அது முடியாது, நடக்காது என்று பொருள். 


ஆழ்ந்த அறிவு 
அகன்ற அறிவு 
பிறன் பொருளை வெஃகுதல் 
தக்கார்
தகவிலார் 
இழிந்தன செய்தல் 
கடியன செய்தல் 



எத்தனை செய்திகள்,ஒரு குறளுக்குள் !


[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html

]


Saturday, October 15, 2022

திருவாசகம் - திரு அம்மானை - வியப்புருமாறு

          

திருவாசகம் - திரு அம்மானை  -   வியப்புருமாறு 


மிக நீண்ட காலமாக ஏதோ ஒரு தீவில் வாழ்ந்த ஒரு மனிதன் ஒரு பெரிய நகரத்துக்கு வருகிறான். அவனுக்கு ஊர் சுற்றி காட்டியவர்கள் அவனை அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு அவனை அழைத்துச் செல்கிறார்கள். 


அவனுக்கு ஆச்சரியமான ஆச்சரியம். ஒருவன் பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறான். அவனை சுற்றி கொஞ்சம் பேர் முகத்தில் முக மூடி அணிந்து கொண்டு அவனை கத்தியால் குத்தி கிழிக்கிறார்கள். பின் ஊசியால் தைக்கிறார்கள். நினைவு தெளிந்த அவன் அந்த முகமூடி மனிதர்களுக்கு பணமும் கொடுத்து, அவர்கள் கையைப் பிடித்து கொண்டு நன்றியும் சொல்கிறான். துன்பம் தந்தவர்களுக்கு நன்றியா? இது என்ன அதிசயம் என்று வியக்கிறான். 



அது ஒரு புறம் இருக்கட்டும். 



ஒரு சில நாட்களுக்கு முன் மெய்யியல் பற்றி படித்தோம். அதன் அடிப்படை, உயிர்கள் (பசு) பதியை விட்டுவிட்டு பாசத்தில் அகப்பட்டு தவிக்கின்றன என்றும், இறைவன் அவ்வுயிர்கள் மேல் கருணை கொண்டு அவை மீண்டும் தன்னிடம் வர வழி செய்வான் என்றும் பார்த்தோம். 


அதுவும் ஒரு புறம் இருக்கட்டும். 


இனி பாடலுக்குள் செல்வோம். 



பாடல் 




துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்
கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான்
கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான்
அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம்
பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும்
அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய் 


பொருள் 




(pl click the above link to continue reading)





துண்டப் பிறையான்  = துண்டான பிறை நிலவை தலையில் சூடியவன் 


மறையான் = மறை நூல்களில் சொல்லப் பட்டவன், மறைந்து இருப்பவன் 


பெருந்துறையான் = திருப்பெருந்துறை என்ற தலத்தில் உறைபவன் 


கொண்ட புரிநூலான்  = பூணூல் அணிந்தவன் 


கோலமா = அழகான பெரிய எருதினை 


 ஊர்தியான் = வாகனமாகக் கொண்டவன் 


கண்டங் கரியான் = கரிய கழுத்தைக் கொண்டவன் 



செம் மேனியான் = சிவந்த மேனியைக் கொண்டவன் 


வெண்ணீற்றான் = உடல் எல்லாம் திரு வெண்ணீற்றை புனைந்தவன் 


அண்டமுத லாயினான்  = அனைத்து அண்டங்களுக்கும் முன்பாக உள்ளவன் 


அந்தமிலா ஆனந்தம் = முடிவற்ற ஆனந்தத்தைத் 



பண்டைப் பரிசே  = பழைய பரிசினை 


பழவடியார்க்  கீந்தருளும் = பழைய அடியார்களுக்கு கொடுத்து அருள் செய்யும் 


அண்டம் வியப்புறுமா  = உலகமே வியக்கும் படி 


பாடுதுங்காண் = பாடுவோம் 


அம்மானாய்  = அம்மானாய் 




அது என்ன "பண்டே பரிசு": முதலில் ஆன்மாக்கள் பதியிடமும் சேராமல், பாசத்திடமும் சேராமல் தனித்து நின்றன. பின், அவை ஆணவ வயப்பட்டு பாசத்தில் விழுந்தன. அப்படி பாசத்தில் சிக்கிய உயிர்களை மீண்டும் தன்னோடு சேர்த்துக் கொள்ளும் செயலே "பழைய பரிசு". 



யோக சூத்திரத்தின் எல்லை "சமாதி".  சமம் + ஆதி. ஆதியில் எப்படி சமமாக இருந்ததோ அப்படி அந்த நிலையை அடைவது சமாதி. 



"பழ அடியார்"....இறைவனால் ஆட்கொள்ளப் பட்டவர்கள். முதலில் ஆட்கொள்ளுவான். பின் "பரிசைத்" தருவான். அந்தப் பரிசு பெற்றால் 


"அந்தமில் ஆனந்தம்" தரும். 



இதில் வியப்படைய என்ன இருக்கிறது?



அந்தமில் ஆனந்தம் தருபவன், ஏன் இவ்வளவு துன்பம் தருகிறான். 



உலகில் எவ்வளவோ துன்பங்கள் நிகழ்கின்றன. அதை எல்லாம் பார்க்கும் போது, இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா என்ற சந்தேகம் எழுகிறது.



அத்தனை துன்பமும், "அந்தமில் ஆனந்தம்" அருளவே என்று அறியும்  போதும்  பெரிய வியப்பு ஏற்படுகிறது. 



ஆசிரியர் அந்தத் தேர்வு,இந்தத் தேர்வு என்று படுத்தி எடுக்கிறார். முடிவில் உயர்ந்த மதிப்பெண் பெற்று நல்ல வேலை கிடைக்கிறது. அத்தனை வருத்தமும் சுகமாக மாறி விடுகிறது. அப்படி பாடாய் படுத்திய ஆசிரியரைக் கண்டதும் எழுந்து நின்று வணங்குகிறான். வியப்பாக இல்லையா? 




"வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன்" போல  இறைவன் அவ்வளவு துன்பம் தந்தாலும், அது அனைத்தும் "அந்தமில்லா ஆனந்தம் காணவே"  என்ற அறிவு பிறக்கும் போது இந்த உலகே வியக்கிறது.  




"அண்டம் வியப்புருகிறது" 


திருவாசகத்துக்கு எத்தனை உரை படித்தாலும், அந்த உரைகளை எல்லாம் ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு, நீங்களே நேரடியாக அதைப் படித்து "உணர்வதே" 
சாலச் சிறந்தது. 






(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 







முன்னுரை:பா

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2


)


Friday, October 14, 2022

கந்தரனுபூதி - நின்று தயங்குவதே

       

 கந்தரனுபூதி - நின்று தயங்குவதே 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


இந்தப் பாடலுக்குத்தான் அவ்வளவு பெரிய முன்னுரை. அந்த முன்னுரை இன்னும் வர இருக்கும் பாடல்களுக்கும் தேவைப்படும்.


இரண்டுவிதமான மாயைகள் பற்றி சிந்தித்தோம். ஏதோ வாசித்து விட்டதால் புரிந்து விட்டது என்றோ, அல்லது எழுதிய எனக்கு புரிந்து எழுதினேன் என்று கொள்ளக் கூடாது. 


புராணங்கள் சொல்கின்றன அந்த மாயை என்பது நாரதருக்கும் புரியவில்லை என்றும், அவர் அதை திருமாலிடம் கேட்டார் என்றும்.. அந்தக் கதை பற்றி பின்னொருநாள் சிந்திப்போம். 


ஒன்று சுத்த மாயை, இன்னொன்று அசுத்த மாயை.


இந்த சுத்தம், அசுத்தம் என்பதெலாம் ஏதோ அழுக்கு, குப்பை என்று நினைக்கக் கூடாது. சுத்தம் என்றால் துன்பக் கலப்பு இல்லாதது. அசுத்தம் என்றால் அதில் இன்பமும் துன்பமும் கலந்து இருக்கும். 


இறைவன் இரண்டுவிதமான மாயைகளால் உயிர்கள் பாசத்தில் இருந்து விடுபட்டு தன்னைச் சேர வழி செய்வான். 


மகா மாயை, சுத்த மாயை, பிரகிருதி மாயை, சக மாயை என்றெல்லாம் அவற்றிற்கு பெயர் சொல்கிறார்கள். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


என்னதான் படித்தாலும், எவ்வளவுதான் படித்தாலும் மனம் அதன் பாட்டுக்குப் போகிறதே தவிர படித்ததால் ஒரு பயனும் விளைவது இல்லை. 


நிறைய தூரம் போக வேண்டாம்....தினம் உடற் பயிற்சி செய்வது, கண்டதையும் உண்ணாமல் இருப்பது என்று எத்தனை தரம் முடிவு செய்து இருப்போம். செய்கிறோமா?  மனம் சோம்புகிறது, இனிப்பை நாடுகிறது. அறிவு வேலை செய்வது இல்லை. 


இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  படித்துக் கொண்டே இருப்பதில் அர்த்தம் இல்லை. 


உடற் பயிற்சி செய்வது எப்படி, அதனால் விளையும் நன்மைகள் பற்றி ஆயிரம் நூல் படித்து என்ன பலன், உடற் பயிற்சி செய்யாவிட்டால்? 


ஆஹா என்னமா சொல்லி இருக்கிறார்கள், என்ன ஒரு ஆராய்ச்சி என்று வியந்து மகிழலாமே தவிர ஒரு பலனும் இருக்காது. 


இதை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். 


இந்தச் சிக்கல் நமக்கு மட்டும் அல்ல.


"மகா மாயையை களைந்திட வல்ல முருகன், தன் ஆறு முகங்களாலும் உபதேசம் செய்தும், இந்த உடல், ஆடை, பெண்கள் என்று இந்த உலக மாயையில் இருந்து வெளி வர முடியாமல் தயக்கம் அடைகிறேனே" என்கிறார் அருணகிரிநாதர். 


பாடல் 


மகமாயை களைந்திட வல்லபிரான் 

முகமாறு மொழிந்து மொழிந்திலனே 

அகமாடை மடந்தைய ரென்றயரும் 

சகமாயை யுணின்று தயங்குவதே



சீர் பிரித்த பின் 


மகமாயை களைந்திட வல்ல பிரான் 

முகம் ஆறும் மொழிந்தும்  ஒழிந்திலனே 

அகம் ஆடை மடந்தையர் என்று அயரும்  

சகமாயையுள் நின்று தயங்குவதே



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


(pl click the above link to continue reading)



மகமாயை = மகா மாயையை 


களைந்திட = விலக்க 


வல்ல பிரான்  = வலிமையுள்ள முருகன் 


முகம் ஆறும் = ஆறு முகங்களாலும் 


மொழிந்தும் = உததேசம் செய்தும் 


ஒழிந்திலனே  = விட முடியவில்லையே 


அகம் = உடம்பு 


ஆடை  = ஆடை, அணிகலன்கள் 


மடந்தையர் = பெண்கள் 


என்று அயரும்   = என்று அயரும், தளரும், தவிக்கும் 


சகமாயையுள் = இந்த உலக மாயையில் 


நின்று = மூழ்கி 


தயங்குவதே = தயங்கி நிற்கிறேனே 


விட வேண்டும் என்று தெரிகிறது. விடவும் மனம் வர மாட்டேன் என்கிறது. 


உபதேசம் அறிவுக்கு எட்டுகிறது. பாசம் மனதைப் பற்றிக் கொண்டு உலக பந்தங்களை விட முடியாமல் தவிக்கிறது. 


விட்டு விடலாமா என்று ஒரு என்னணம்.


இவ்வளவு இன்பத்தை எப்படி விடுவது என்று ஒரு தயக்கம். 


"சக மாயையுள் நின்று தயங்குவதே" என்கிறார். 


இறைவனே வந்து சொன்னாலும் மனித மனம் (பசு) பாசத்தில் இருந்து எளிதில் விடுபடுவது இல்லை. 


சிவ பெருமான் நேரில் வந்து உபதேசம் செய்தும், மணிவாசகர் புரிந்து கொள்ளவில்லை. 


கண்ணபிரான் நேரில் உபதேசம் செய்தும், அர்ஜுனன் புரிந்து கொள்ளவில்லை. 


இதுதான் மாயையின் வலை. 


உண்மையை மறைக்கும். பொய்யை, உண்மை போல் காட்டும். 


"பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி"


என்பார் மணிவாசகர். 


பொய்யை மெய் என்று நம்பி அதன் பின் போய்க் கொண்டிருக்கிறோம். 


நீண்ட, ஆழமான முயற்சி வேண்டும். 







[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html




]




Thursday, October 13, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - 3602 - அன்று செய்தது

       

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   3602 - அன்று செய்தது 



திருமாலின் மிகப் பெரிய செயல்களை சொல்லிக் கொண்டே வருகிறார் நம்மாழ்வார். 


பாற்கடல் கடைந்தது, இராவணனை அழித்தது,  ஈரடியால் உலகம் அளந்தது, குருஷேத்திர யுத்தம் நடத்தியது என்று சொல்லிக் கொண்டு வந்த அவர், இதெல்லாம் என்ன பெரிய விடயம், அரக்கர்களை அழிப்பது, மனிதர்களோடு (கௌரவர்கள் ) சண்டை போட்டு வெல்வது இதெல்லாம் ஒரு பெரிய காரியமா? 

மிகப் பெரிய காரியம் என்று எதைச் சொல்லலாம் என்று யோசிக்கிறார். 


இந்த உலகை எல்லாம் படைப்பது என்பது சாதாரண காரியமா? இந்த உலகம் எவ்வளவு பெரியது என்று நம்மால் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு பெரிய உலகை படைப்பது என்றால்?


" அன்று மண், நீர், தீ, காற்று, விண்வெளி , மலைகள் சூரியன், சந்திரன் போன்ற நட்சத்திரங்களும், கோள்களும், மழை, போன்றவற்றின் தேவர்களும், மீதி உள்ள உலகம் அனைத்தும் செய்த போது"



பாடல் 



அன்று மண்நீரெரி கால்விண் மலைமுதல்,

அன்று சுடரிரண் டும்பிற வும்,பின்னும்

அன்று மழையுயிர் தேவும்மற் றும்,அப்பன்

அன்று முதலுல கம்செய் ததுமே.



சீர் பிரித்த பின் 


அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்,

அன்று சுடர் இரண்டும் பிறவும், பின்னும்

அன்று மழை உயிர்  தேவும் மற்றும், அப்பன்

அன்று முதல் உலகம் செய்ததுமே.




பொருள் 



(pl click the above link to continue reading)




அன்று = முன்பொருநாள் 

மண் = மண் 

நீர்  = நீர் 


எரி = தீ 

கால்  = காற்று 


விண் = விண்வெளி 


மலை = மலைகள் 

முதல் = முதலியவற்றைப் படைத்ததுவும் 


அன்று  = முன்பொருநாள் 


சுடர் = வெளிச்சம் தரும் 


இரண்டும் = சூரியன், சந்திரன் என்ற இரண்டையும் 


பிறவும் = மற்ற நட்சத்திரங்களையும், கோள்களையும் படைத்ததுவும் 


பின்னும் = மேலும் 


அன்று = முன்பொருநாள் 


மழை = மழையையும் 


உயிர்  = அனைத்து உயிர்களையும் 


தேவும் = அவற்றிற்கு உரிய தேவர்களையும்  


மற்றும் = மேலும் 


அப்பன் = திருமால் 


அன்று = முன்பொருநாள் 


முதல் உலகம் செய்ததுமே. = முதன் முதலாக உலகம் செய்ததுதும் 



இந்த உலகம் எப்படி தோன்றியது, என்று தோன்றியது என்று அறிவியல் விளக்கம் சொல்லிக் கொண்டு போகிறது. ஒவ்வொரு நாளும் அறிவியலின் பரப்பு விரிந்து கொண்டே போகிறது. 


அது ஒரு புறம் இருக்க, உலகத்தை இறைவன் தோற்றிவித்தான் என்று பக்தி இலக்கியங்கள் பேசிக் கொண்டிருக்கின்றன. 


இவற்றை எப்படி பார்ப்பது? அறிவியலின் கூற்றுப் படி பக்தி இலக்கியங்கள் சொல்வது எல்லாம் தவறு. 


பக்திமான்களை கேட்டால் "அதெல்லாம் நம்பிக்கையின் பாற்பட்டது. கேள்வி கேட்கக் கூடாது"  என்று ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்கள். 


தெரியாதவற்றை நம்பலாம். தெரிந்தவற்றை எப்படி நம்புவது? இரண்டும் இரண்டும் ஐந்து என்று நம்ப முடியுமா?


இந்தச் சிக்கல் தொடர்கிறது. 


எதற்காக இவற்றைப் படிக்க வேண்டும்?


எனக்குத் தெரிந்து சில காரணங்கள்:


முதலாவது, மனம் விரியும். கற்பனை விரியும். அப்படி ஒரு பிரமாண்டமான ஒரு விடயத்தை மனம் பற்றும். ஒவ்வொரு நாளும் அது பற்றி சிந்திக்க சிந்திக்க மனம் அதை உள்வாங்கும். அப்படி ஒரு பிரமாண்டத்தை சிந்திக்க சிந்திக்க நாம் ஒன்றும் பெரிய ஆள் இல்லை, நம் துன்பங்கள் ஒன்றும் பெரிய துன்பம் இல்லை, நம் சிக்கல்கள், பிரச்சனைகள் பெரிய விடயம் அல்ல, அதற்காக சண்டை போட்டுக் கொள்வது, போட்டி போடுவது, பொறாமை கொள்வது என்பதெல்லாம் நகைப்பு இடமானது என்ற விரிந்த நோக்கம் வரும். 


இரண்டாவது,  இந்த உலகை ஒருவன் படைத்தான் என்று நம்பும் போது, அந்த நம்பிக்கை ஒரு பலம் தரும். அப்படி ஒருவன் இருக்கிறான், அவன் நமக்கு துணை செய்வான் என்ற நம்பிக்கை ஒரு தைரியம் தரும், அதனால் பதற்றம் குறையும், மன அழுத்தம் குறையும், பயம் விலகும். "எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்" என்று அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு வேலையை பார்க்க போது, மனம் லேசாகிவிடும். அது உண்மையோ பொய்யோ, அந்த நம்பிக்கை ஒரு நன்மை தருகிறது.  அதை ஏன் மறுக்க வேண்டும்


மூன்றாவது, அழகான தமிழ். கவிதை. சொற் சுருக்கம். சொல்லும் விதம். அதனையும் அள்ளிக் கொண்டு போய் விடுகிறது நம் மனதை. 


இறுதியாக, எவ்வளவோ இலயித்து, அனுபவித்து எழுதி இருக்கிறார்கள். அது பொய்யாக இருக்குமா? அந்தப் பாடல்களில் ஏதேனும் உண்மை இருக்குமா? இருக்கும் என்றால் அது என்ன என்ற தேடல் தொடர்கிறது. அதுவும் ஒரு சுவாரசியம்தான். 


படிப்போம். 






(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்


பாசுரம் 3599  - மெலிந்த பொழுது 


Tuesday, October 11, 2022

திருக்குறள் - வெஃகுதல் செய்யார்

   

 திருக்குறள் - வெஃகுதல் செய்யார்



வெற்றி பெற்று விட்டால் எல்லாம் என் திறமை, என் சாமர்த்தியம், என் உழைப்பு என்று நினைப்பதும், தோல்வி வந்தால் மற்றவர்கள் செய்த சதி, விதி, நேரம் சரியில்லை என்று பழியை வேறு இடத்தில் போடுவதும் மனித இயல்பு. 



தோல்வி அடையும் போது, எல்லாம் என் முட்டாள்தனம், என் சோம்பேறித்தனம், என் கையாலாகத்தனம் என்று சொல்லக் கேட்டு இருக்கிறோமா? இல்லை. 


மனிதர்கள் நினைக்கிறார்கள் முயற்சி செய்தால் எந்த வெற்றியையும் பெற்று விடலாம் என்று. 


இரண்டாவது, வாழ்கையின் வெற்றி தோல்வி என்பது எவ்வளவு சொத்து சேர்த்தோம் என்பதில் அடங்கி இருக்கிறது என்றும் நினைகிறார்கள். எப்படியாவது நிறைய பொருள் சேர்த்து விட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். 


நேர் வழியில் முடியாவிட்டால், குறுக்கு வழியில். 


பாடல் 



இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


(Please click the above link to continue reading)



இலம்என்று = நம்மிடம் பொருள் இல்லை என்று 


வெஃகுதல் = பிறர் பொருளை தவறான வழியில் அடைய நினைக்கும் செயலை 


செய்யார் = செய்ய மாட்டார்கள் 


புலம்வென்ற = புலன்களை வென்று 


புன்மையில் =  குற்றமற்ற 


காட்சி யவர். = நோக்கு உடையவர்கள் 


பிறன் பொருளை அடைய ஏன் நினைக்கிறார்கள்?


முதலாவது, ஆசை. புலன் இன்பம். கார், வீடு, டிவி என்று மேலும் மேலும் ஆசைப் படுவதால், நேரான வழியில் அவற்றை எல்லாம் அடைய முடியாத போது, பிறன் பொருளை தவறான வழியில் அடைய மனம் நினைக்கிறது. 


இரண்டாவது, பொருள் இல்லாவிட்டால் இன்பம் இல்லை என்ற ஏக்கம், பயம். இருப்பது போதும் என்ற திருப்தி இல்லாமை. 


மூன்றாவது, நமக்கு கிடைத்தது, நம் விதிப் பயன் என்று நினைக்காமல், எப்படியாவது பொருள் ஈட்ட நினைப்பது.  மற்றவனுக்கு கிடைத்தது அவன் விதிப் பயன். நமக்கு கிடைத்தது நம் விதிப் பயன் என்ற எண்ணம் வந்து விட்டால் மனம் பறக்காது. இதைத் தான் "புன்மை இல் காட்சியவர்" என்றார். குற்றமற்ற பார்வை. பொறாமை, பேராசை போன்ற குற்றங்கள் இல்லாத பார்வை. 


ஐயோ, அவனுக்கு அது கிடைத்து விட்டதே, இவனுக்கு இது கிடைத்து விட்டதே என்று அலையாமல் எல்லாம் வினைப் பயன் என்ற இருப்பது. .



வெஃகாமையின் தீமை மட்டும் அல்ல, அதை எப்படி விலக்குவது என்றும் சொல்லித் தருகிறார். 






[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html

]


Monday, October 10, 2022

திருவாசகம் - திரு அம்மானை - பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2

         

திருவாசகம் - திரு அம்மானை  -   பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2




பாடலுக்கு முன்னுரை சொல்வதைவிட நேரடியாக பாடலையே வாசித்து விடலாம். 


பாடல் 



பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,
கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை
மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்!



பண்கள் அமைந்த பாடல்களால் தன்னை துதிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டும் பரிசுகளை தந்து அருள் செய்பவன். பெண்ணை பாகமாகக் கொண்டவன். பெரியவன். திருபெருந்துறையில் உறைபவன். வானாளாவிய புகழ் கொண்டவன். நெற்றிக் கண் உடையவன். மதுரையில் மண் சுமந்து, பாண்டிய மன்னனால் அடிபட்டு உடம்பில் புண் கொண்டவன். பொன் போன்ற நிறத்தை உடையவன். 





சுமந்த என்ற வார்த்தையின் ஆழத்தை எண்ணிப் பார்ப்போம். 






(pl click the above link to continue reading)



"பண் சுமந்த பாடல்" - பாடல் தனக்குள் அர்த்தத்தை மட்டும் அல்ல, இசையையும் சேர்ந்து சுமந்து கொண்டு வருகிறது.  திருவாசகம் போன்ற பாடல்களை இசையோடு பாடும் போது உள்ளம் உருகும். சிலர், காலையில் எழுந்து வீட்டு வேலைகள் செய்து கொண்டே தேவாரம், திருவாசகம், பிரபந்தம், சுப்ரபாதம், என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள். கை ஒரு வேலை பார்க்கும், கண் அடுப்பில் உள்ள சாமானை பார்க்கும், காது குக்கர் எத்தனை விசில் அடித்தது என்று கேட்டுக் கொண்டிருக்கும், கால் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும், இதற்கிடையில் வாய் பக்திப் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருக்கும்.  உணர்ச்சியே இல்லாமல், அது என்ன பக்தியோ?

  
பாடல்களை வசனம் போல படிக்கக் கூடாது. 


அப்படி பாடல்களை இசையோடு உள்ளம் உருகி பாடுபவர்களுக்கு வேண்டிய பரிசுகளைத் தருவான். இமய மலையின் அடியில் மாட்டிக் கொண்ட இராவணன் சாம கானம் பாட, சிவன் அதில் மயங்கி, அவனை விடுவித்தது மட்டும் அல்ல சந்ந்தரகாந்தம் என்ற தன் வாளினையும் கொடுத்தார் என்பது புராணம். 


"பெண் சுமந்த பாகத்தன்":  பெண் ஆயிரம் பாரம் சுமப்பாள். அவளை யார் சுமப்பது? அவளுக்கும் அன்பு, ஆதரவு, அரவணைப்பு எல்லாம் தேவைப்ப்படும்தானே? 


கம்ப இராமாயணத்தில், தயரதன், விழுந்து கிடக்கும் கைகேயியை ஒரு யானை, மான் குட்டியை தூக்குவது போலத் தூக்கினான் என்பான். சுமக்கத்தான் வேண்டும். சுகமான சுமை. 


"கலி மதுரை" - ஆராவாரம் மிகுந்த மதுரை.  எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் மதுரை. தூங்கா நகரம் என்று சொல்லுவார்கள். 



"மதுரை மண் சுமந்த" -  மதுரை மண்ணுக்கு அவ்வளவு பெருமை. அந்த மண்ணை சிவ பெருமான் தூக்கிச் சுமந்தார். வேறு எந்த ஊர் மண்ணையும் தூக்கிச் சுமக்கவில்லை. 


கதைகளில் சிவன் முதலில் புட்டு வாங்கி உண்டு விட்டு, வேலை செய்யாமல் நீரில் மூழ்கி விளையாடிக் கொண்டிருந்ததாகவும், பாண்டியன் வந்து அடித்ததாகவும் வரும். மாணிக்க வாசகர் அதை திருத்துகிறார். 


"மண் சுமந்த கூலி கொண்டு" - முதலில் சுமந்தார், பின் கூலி கொண்டார். சுமந்த கூலி.  கூலி கொண்டு மண் சுமந்த அல்ல, மண் சுமந்த கூலி கொண்ட.


மணிவாசகரை பாண்டிய மன்னன் இரண்டு முறை தண்டித்தான். முதலில் குதிரை வாங்க பணத்தில் கோவில் கட்டியதற்காக, அதாவது அரசாங்க பணத்தை சொன்ன விதத்தில் செலவழிக்காததால் ஒரு தண்டனை.  


பின் குதிரை வந்து விட்டது. மணி வாசகரை விடுதலை செய்து விட்டான். அன்று இரவே குதிரைகள் எல்லாம் நரிகளாகி ஓடி விட்டன. எனவே, மீண்டும் அவருக்கு தண்டனை கொடுத்தான். 


முதல் குற்றம் மணி வாசகருடையது. குதிரை வந்த பின், அதை சரி பார்த்து வாங்க வேண்டியது பாண்டிய மன்னனின் கடமை.  பெற்றுக் கொண்ட பின் இனி அது அவன் பொறுப்பு. பரிகள் நரிகளானால் அது பாண்டிய மன்னனின் நிர்வாகப் பிழை. அதற்கு மணி வாசகர் என்ன செய்வார்? அவரைத் தண்டித்தது பிழை. அதை உணர்த்த, அரசன் தவறு செய்தால் அது குடிகள் எல்லோரையும் பாதிக்கும் என்று  காட்ட வைகையில் வெள்ளம் வர வைத்தார் சிவ பெருமான். 



என்னதான் மணிவாசகர் செய்தாலும், அவருக்குள் இருந்து அப்படி பொதுப் பணத்தில் கோவில் கட்ட வைத்தது இறைவன் தானே. கோவில் கட்டியது தவறு என்றால், மணி வாசகரை மட்டும் எப்படி தண்டிப்பது? எனவே, இறைவனும் தண்டனை பெற்றுக் கொண்டான் என்று காட்டவே அந்த 


"கோலால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனி" ஆனாரோ ?


உயிர்கள் வாடினால் இறைவனும் வாடுவான் என்று உணர்த்தவோ? 


"ஆயர் தம் கொழுந்தே" என்று பேசும் பிரபந்தம்.  வேர் வாடினால் கொழுந்து வாடும். பக்தன் வாடினால், இறைவன் வாடுவான். 


சிவ பெருமான் என்ன நிறம்?


பொன் நிறம்.  படத்தில் வரைபவர்கள் கறுப்பாக வரைந்து விடுகிறார்கள். 

"பொன்னார் மேனியனே"

"பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்"

"புண் சுமந்த பொன் மேனி" 

"சோதியே, சுடரே சூழ் ஒளி விளக்கே"


திருவாசகத்தில் ஒரு பாடலை ஒரு முறை படித்துவிட்டால் மேலே போக மனம் வராது. மனம் அதிலேயே சுத்திக் கொண்டு இருக்கும். 


சொல்லிக் கொண்டே போகலாம். படிக்கப் படிக்க, ,சிந்திக்க சிந்திக்க ஊற்றெடுக்கும் பாடல்கள் திருவாசகப் பாடல்கள். 



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:பா

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


)