Monday, October 24, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வென்றி தரும்பத்தும்

         

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   வென்றி தரும்பத்தும் 


உங்களுக்கு இனி வெற்றிதான் போங்கள். நீங்கள் எடுத்த காரியம் எல்லாவற்றிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். 


நான் சொல்லவில்லை. நம்மாழ்வார் சொல்கிறார். 



ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்....



அந்தக் காலத்தில்..கண்ணன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருந்தால் எப்படி இருக்கும் என்று...அதே ஆயர்பாடியில், மற்ற ஆயர் குல மக்களோடு கண்ணன் கூட ஆடிப் பாடி இருந்திருந்தால் எப்படி இருக்கும்? 



நம்மால் அதை நினைத்து பெருமூச்சுதான் விட முடியும். 


நம்மாழ்வாருக்கு அந்தப் பிரச்னை இல்லை. அவர் நினைத்துப் பார்ப்பது மட்டும் அல்ல. அங்கேயே போய்விட்டார். நான் அங்கே இருந்தேன் என்கிறார். அந்த ஆயர் குல மக்களோடு ஒன்றாக இருந்தேன் என்கிறார். 


அவர்களோடு இருந்த இந்த சடகோபன் சொல்லிய பத்துப் பாட்டையும் கற்பவர்கள் என்றும் வெற்றி அடைவார்கள் என்று இந்த நூலின் பயனை கூறுகிறார். 


பாடல் 




குன்ற மெடுத்த பிரானடி யாரொடும்,

ஒன்றிநின் றசட கோப னுரைசெயல்,

நன்றி புனைந்த ஓராயிரத் துள்ளிவை

வென்றி தரும்பத்தும் மேவிக்கற் பார்க்கே.



சீர் பிரித்த பின் 


குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் 

ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல் 

நன்றி புனைந்த ஓராயிரத்துள் இவை 

வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே



பொருள் 



(pl click the above link to continue reading)



குன்றம் எடுத்த  = மலையை கையில் எடுத்த 


பிரான்  = பிரியாதவன் (அன்பர்களை விட்டு)  


அடியாரோடும்  = அடியார்களோடு 


ஒன்றி நின்ற  = ஒன்றாக நின்ற 


சடகோபன்  = சடகோபன் 


உரை செயல்  = உரைத்த 


நன்றி புனைந்த = சிறந்த பாடல்களுள் 


ஓராயிரத்துள் இவை  = ஆயிரம் பாடல்களில் இந்த 


வென்றி தரும்  = வெற்றியைத் தரும் 


பத்தும் = பத்துப் பாடல்களையும் 


மேவிக் கற்பார்க்கே = விரும்பி கற்பவர்க்கே 



இதுவரை விருப்பமாக இந்த வெற்றி பாசுரங்களை படித்து வந்தீர்கள்தானே ? இந்த ப்ளாக்கின் முதல் பத்தியை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். 



(முந்தைய பதிவுகள்


பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்


பாசுரம் 3599  - மெலிந்த பொழுது 



பாசுரம் 3600  -  நீறு பட இலங்கை 



பாசுரம் 3602 - அன்று செய்தது 



பாசுரம் 3603 - குன்ற மெடுத் தானே


)


Sunday, October 23, 2022

திருக்குறள் - பொல்லாத சூழக் கெடும்

     

 திருக்குறள் - பொல்லாத சூழக் கெடும்




இன்று நாம் காண இருக்கும் குறள் மிக நீண்ட தொலை நோக்குப் பார்வை கொண்ட ஆழமான, விரிவான குறள். 



எப்படி இப்படி எல்லாம் சிந்திக்க முடிந்தது என்று நினைக்க நினைக்க ஒரு பிரமிப்புதான் மிஞ்சுகிறது. 


எதற்காக இல்லறம்? 


மனைவி மக்களோடு இன்பம் துய்கவா? பொருள் ஈட்டவா ?  எதற்காக திருமணம்?  கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் இருந்தால் என்ன ஆகிவிடும்? பிள்ளை பெறாமல் இருந்தால் என்ன ஆகிவிடும்?


இன்றைய சமுதாயத்தில் இது போன்ற கேள்விகள் எழுகின்றன.  ஆணும் ஆணும் திருமணம் செய்து கொண்டால் என்ன? பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் என்ன?  திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக இருந்தால் என்ன?  அதாவது, உடல் சார்ந்த இன்பம் அனுபவிப்போம் ஆனால் பிள்ளைகள் வேண்டாம் என்கிறார்கள். அதில் என்ன தவறு?  என் இஷ்டம்...மற்றவர் புகுந்து கருத்துச் சொல்ல இதில் இடம் இல்லை என்கிறார்கள். 


என்ன பதில் சொல்வது?  கலாச்சாரம், பண்பாடு என்று சொல்லலாம்...அதில் இருந்து ஆயிரம் கேள்வி எழும்.  


வள்ளுவர் மிகத் தெளிவாக சிந்தித்து எழுதி வைத்து இருக்கிறார். 


வாழ்வின் நோக்கம் வீடு பேறு. வீடு பேறு என்பதை வேண்டும் என்றால் தன்னைத் தான் உணர்தல் என்று வைத்துக் கொள்ளலாம் அதை அடைய வேண்டும் என்றால் பற்று விட வேண்டும். 



பற்றை விட யாருக்கு ஆசை? ஒருவரும் தயாராக இருக்க மாட்டார்கள். பின் எப்படி ?  



அன்பு பெருகினால் கொடுப்பது எளிதாகும். பிள்ளை மேல் அன்பு இருந்தால், தான் பசித்து இருந்தாலும் பிள்ளைக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எழும்.  அது எப்படி சாத்தியமானது? அன்பினால். 



அந்த அன்பு விரியும் போது, அருளாகும். அருள் உண்டானால் பிள்ளைக்கு கொடுக்கும் அதே இன்பம் எல்லோருக்கும் கொடுக்கும் போதும் வரும். 


பிள்ளை எப்படி வரும்?  மனைவியின் மூலம் வரும். 


முதலில் மனைவி. அவள் மேல் அன்பு. அந்த அன்பில் பிறப்பது பிள்ளை. அன்பு இன்னும் விரிகிறது. பின் சுற்றம், நட்பு என்று அன்பின் எல்லைகள் விரிகிறது. 



பின் குடும்பத்தைத் தாண்டி, அது சமுதாயத்தில் படர்கிறது. அப்போது அருள் பிறக்கிறது. அருள் வரும் போது துறவு எளிதாகிறது. துறவு எளிதானால் வீடு பேறு தானே வரும். 


மனைவி மேல் அன்பு செய்யாதவன், பிள்ளை மேல் எங்கே அன்பு செய்வான். பிள்ளை மேல் அன்பு செய்யாதவன், நட்பின் மேல், சுற்றத்தின் மேல் எப்படி அன்பு செய்வான்....



அடிப்படை அன்பு. அதன் தளம்  இல்லறம். இல்லறத்தின் வழியாகத்தான் துறவை எட்டிப் பிடிக்க முடியும். 


மற்றவன் பொருளை தவறான வழியில் அடைய நினைப்பவன் மனதில் எங்கே அன்பும், அருளும் இருக்கும்? அவன் எங்கே துறவை அடைவது, வீடு பேற்றை அடைவது?


இத்தனையும் ஒண்ணே முக்கால் அடியில். 


பாடல் 


அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்


பொருள் 




(Please click the above link to continue reading)



அருள்வெஃகி  = அன்பு, அருள் இரண்டுக்கும் அடிப்படியான அறத்தை விரும்பி 


ஆற்றின்கண்  = வழியில் 


நின்றான்  = செல்பவன் 


பொருள்வெஃகிப் = மற்றவன் பொருளை  அடையக் கருதி 


பொல்லாத சூழக் = தவறான வழியில் செல்ல நினைத்தால் 


 கெடும் = கெடும் 


மேலே கூறியது எல்லாம் இந்தக் குறளில் எங்கே இருக்கிறது?


இருக்கிறது.  ஒவ்வொன்றாகப் பார்ப்போம். 


அருள்வெஃகி  = அன்பில் இருந்து அருள் வரும் என்று பார்த்தோம். இல்லறத்துக்கு அடிப்படை அன்பு. துறவுக்கு அடிப்படை அருள்.  இல்லறம், துறவறம் இரண்டின் அடிப்படை "அறம்". .இல் + அறம், துறவு + அறம். 



எனவே அருளை விரும்புதல் என்பது அறத்தை விரும்புவதுதான். 




ஆற்றின்கண் நின்றான்  = ஆறு என்றால் வழி. ஆற்றின்கண் நின்றான் என்றால் அந்த வழியில் நின்றவன், செல்பவன். எந்த வழி  துறவுக்குப் போகும் இல்லறத்தின் வழியில் நின்றவன். இல்லறத்தில் உள்ளவன் என்று பொருள். 




பொருள்வெஃகிப் = இல்லறத்துக்குப் பொருள் வேண்டும். கட்டாயம் வேண்டும். 



பொல்லாத சூழக் கெடும் = அதை நேர்மையான வழியில் அடைய வேண்டும். பொல்லாத என்ற தீய வழியில். 



சூழ என்றால் நினைக்க. நினைத்தாலே போதும். செய்ய வேண்டும் என்று இல்லை. 


கெடும் = எது கெடும்?  எல்லாம் கெடும். இல்லறம் கெடும். துறவறம் கெடும். அதனால் வீடு பேறு அடைவது கெடும். 



ஒரு சில நாள் கழித்து மீண்டும் இதைப் படித்துப் பாருங்கள். 


அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய குறள்களில் ஒன்று. 


[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


அகன்ற அறிவுஎன்னாம்







]


Saturday, October 22, 2022

திருவாசகம் - திரு அம்மானை - கண்ணார் கழல்காட்டி

           

திருவாசகம் - திரு அம்மானை  -   கண்ணார் கழல்காட்டி




விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்



மிக எளிமையான, இனிமையான பாடல். 


"விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை"

வேதியன் என்றால் உயர்ந்தவன்,சிறந்தவன் என்று பொருள். விண்ணில் உள்ள அனைத்து தேவர்களையும் விட உயர்வானவன். 


"மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்"


மாண்பு என்றால் பெருமை, சிறப்பு, மதிப்பு, மரியாதை.  மாண்புமிகு மந்திரி என்று சொல்கிறோம் அல்லவா? சரி, "மன்னவர்க்கு மாண்பு" என்றால் என்ன? அரசர்களுக்கு மதிப்பைத் தருவது எது? அவர்களுடைய கருணை, குடிகள்பால் அவர்கள் கொண்ட அக்கறை, நடுநிலை, குடிகளை பாதுகாத்தல் போன்ற நற்குணங்கள் அவர்களுக்கு சிறப்புத் தரும். அத்தகைய சிறப்பாக இருப்பவன் இறைவன். நற்குணங்களின் உறைவிடம் அவன். 


"தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்"

தண்மை என்றால் குளிர்ச்சி. இனிமையான தமிழை அளித்த சிறந்த பாண்டி நாடு. ஏன்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாடு பாண்டிய நாடு. அந்த சங்கத்தில் சிவ பெருமானும், முருகனும் இருந்தார்கள். அவர்கள் இருந்து தமிழ் வளர்த்தார்கள் என்பது புராணம். எனவே "தமிழ் அளிக்கும்" தண்பாண்டி நாட்டை உடையவன். 


"பெண்ணாளும் பாகனைப்"


தமிழ் இலக்கணத்தில் வேற்றுமை உருபு என்று ஒன்று உண்டு.....





(pl click the above link to continue reading)



இரண்டு பெயர் பொருள்களை வேற்றுமைப் படுத்துவது வேற்றுமை உருபு. மேலும், அந்த பெயர் பொருகளின் தொடர்பு, செயல்பாடு இவற்றையும் வேற்றுமைப் படுத்தும். 



எப்படி என்று பார்ப்போம். 


மரம் அறுத்தான் என்று சொல்லலாம். அதில் ஒரு வேற்றுமை உருபு தொக்கிக் (மறைந்து) இருக்கிறது. .

மரத்தை அறுத்தான் என்று நாம் உணர்ந்து கொள்கிறோம். இதில் "ஐ" என்பது இரண்டாம் வேற்றுமை உருபு. மரம் என்ற பெயர் சொல்லுக்கும், அறுத்தவன் என்ற பெயர் சொல்லுக்கும் இடையில் உள்ள அறுத்தல் என்ற வினையின் மூலம் வேறுபடுத்திக் காட்டுகிறது. 


"கண் கண்டதே காட்சி என்று இருக்கக் கூடாது. எதையும் தீர விசாரிக்க வேண்டும்"   என்று சொல்லும் போது "கண்ணைக் கண்டதே" என்று சொல்லுவது பொருந்தாது 


"கண்ணால் கண்டதே காட்சி" என்று கூறினால் பொருள் சரியாக இருக்கும். இங்கே "ஆல்" என்பது மூன்றாம் வேற்றுமை உருபு. சில சமயம் எந்த வேற்றுமை உருபைப் போடுவது என்ன்று சந்தேகம் வரும், உருபு மாறினால் பொருள் மாறிவிடும். 




இங்கே, "பெண்ணாளும் பாகனை" 


பெண்ணை ஆளும் பாகனை என்று இரண்டாம் வேற்றுமை உருபைப் போட்டால் என்றால் பார்வதியை சிவன் ஆளுகிறான் என்று பொருள் வரும். 



"பெண்ணால் ஆளப்படும் பாகன்" என்று ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபைப் போட்டால் பார்வதியால் ஆளப்படும் சிவன் என்ற பொருள் வரும். 



இந்தக் குழப்பம் தான் கவிதையின் உயிர். படிப்பவன் சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். 


முன்பு ஒரு திருஅம்மானைப் பாடலில் "பண் சுமந்த பாடல்"  என்று வந்தது. 



'பண்' ஐ சுமந்த பாடலா,'பண்'னால் சுமக்கப்பட்ட பாடலா? இரண்டாம் வேற்றுமை உருபா, மூன்றாம் வேற்றுமை உருபா? 




இலக்கணம் அறிந்தால் இலக்கியத்தை மேலும் சுவைக்க முடியும். 



இராகம் தெரிந்தால் பாடலை மேலும் இரசிக்க முடிவது போல 



"பேணு பெருந்துறையிற்" - பேணுதல் என்றால் போற்றுதல், சிறப்பித்தல். 



"தந்தை தாய் பேண்" - ஆத்திசூடி 


பெண் என்ற சொல்லே பேண் என்ற வேர்ச் சொல்லில் இருந்து வந்தது. பெருமைக்கு உரியவள், போற்றுதலுக்கு உரியவள் என்று அர்த்தம். 



"பேணு பெருந்துறையிற்" - சிறப்புக்கு உரிய திருப் பெருந்துறை என்ற திருத்தலத்தில் 



கண்ணார் கழல்காட்டி = காண்பதற்கு அழகான திருவடிகளை காட்டி 


பக்தி இலக்கியத்தில் எங்கெல்லாம் திருவடி என்று வருகிறதோ அங்கெல்லாம் அது ஞானத்தை குறிப்பதாகக் கொள்ள வேண்டும். இரண்டு திருவடிகள் - பர ஞானம், அபர ஞானம் என்ற இரண்டு ஞானங்கள். 


கழல் காட்டி ஆட்கொண்டது எவ்வாறு என்றால் ஞானத்தைத் தந்து ஆட்கொள்வது. 



நாயேனை ஆட்கொண்ட = கீழான என்னை ஆட்கொண்ட 



மணிவாசகர் அடிக்கடி தன்னை நாய் என்று சொல்லிக் கொள்வார். நாய் நன்றியுள்ள, அன்புள்ள பிராணிதானே. அதை ஏன் கீழாகச் சொல்ல வேண்டும்?



நாயிடம் ஒரு கெட்ட குணம் உண்டு.  எவ்வளவுதான் அதை சீராட்டி, பாராட்டி வளர்த்தாலும், என்றேனும் ஒரு சந்தர்பம் கிடைத்தால் அது கண்டதையும் தின்றுவிடும். ஒரு தயக்கம் இல்லாமல், அதைத் தின்னும். 


எனக்கு பாலும், சோறும் தருகிறார்களே, இதைப் போய் தின்னலாமா என்று நினைக்காது.   


மனிதரிலும் பலர் அந்த மாதிரித் தான். எவ்வளவு உயர்ந்த நூல்களைப் படித்தாலும், "அதெல்லாம் நடை முறைக்கு சரி வராது "  என்று தள்ளிவிட்டு தகாதன செய்யக் கிளம்பி விடுவார்கள். 


அது நாய்க் குணம். 



அண்ணா மலையானைப் = அண்ணாமலையில் உள்ளவனை 


பாடுதுங்காண் அம்மானாய் = பாடுவோம் அம்மானை 



திருவாசகம் படித்து அறிந்து கொள்ளக் கூடிய நூல் அல்ல. 



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:பா

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 


)


Thursday, October 20, 2022

கந்தரனுபூதி - வள்ளி பதம் பணியும்

       

 கந்தரனுபூதி - வள்ளி பதம் பணியும் 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


பக்தி இலக்கியம் என்றால் ஏதோ இறைவன் புகழ் பாடுவதும், எனக்கு அதைத் தா, இதைத் தா என்று வேண்டுவதும் உன்னால் முடியாதா, நீ எவ்வளவு பெரிய ஆள் என்று இறைவனுக்கு ஐஸ் வைப்பதும் என்று எண்ணி விடக் கூடாது. 


காதல், குழைவு, அன்பு, பாசம், மெய்யியல் சிந்தனைகள், மனிதாபிமானம், உலகியல் சிந்தனைகள், மனோ தத்துவம், வாழ்க்கை நெறி முறை என்று எல்லாம் அதில் உண்டு. 



நமக்குத் தெரிந்து எத்தனை கணவன்மார் மனைவியின் கால் பிடித்து விடுவார்கள்?  மனைவியின் காலைப் பிடிப்பதா? நினைத்துக் கூட பார்க்க முடியாது. 


அவளும் ஒரு உயிர்தானே. நாளெல்லாம் ஓடி ஆடி வேலை செய்கிறாள். அவளுக்கும் கால் வலிக்கும்தானே. காலை மெல்ல பிடித்துவிட்டால் சுகமாக இருக்கும்தானே. அதெல்லாம் பெரும்பாலான கணவன்மார் நினைப்பதே இல்லை. 


முருகன் அப்படி அல்ல. நாளெல்லாம் தினைப்புனம் காக்க காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து சோர்ந்து இருப்பவளின் பாதங்களை முருகன் பிடித்து விடுவானாம். அது மட்டும் அல்ல, "வேற என்ன செய்யணும் சொல்லு" என்று பணிவோடு கேட்பானாம். 


வீட்டில் கணவன்மார் மனைவியிடம் கேட்பார்கள். அது கூட ஒரு அதிகாரத் தோரணையில் இருக்கும். "அப்புறம், வேற என்ன வாங்கணும் சொல்லு" என்று அதட்டுவது போல இருக்கும். மென்மை என்பதே கிடையாது. 


அதெல்லாம் எதனால்?  வள்ளியின் மேல் உள்ள தணியாத அன்பினால். அன்பு வந்துவிட்டால் ஆண் என்ன, பெண் என்ன, கணவன் என்ன, மனைவி என்ன, ஒரு பாகுபாடும் கிடையாது. மற்றவரின் இன்பம் மட்டுமே முக்கியம் என்று ஆகிவிடும். 


பாடல் 


திணியான மனோசிலை மீதுனதாள் 

அணியா ரரவிந்த மரும்புமதோ 

பணியா வென வள்ளி பதம் பணியும் 

தணியா அதிமோக தயாபரனே . 



சீர் பிரித்த பின் 


திணியான மனோ சிலை மீது உனது தாள்  

அணியார் அரவிந்தம் அரும்புமதோ 

பணியாய் என வள்ளி பதம் பணியும் 

தணியா அதிமோக தயாபரனே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html

(pl click the above link to continue reading)



திணியான = திண்ணமான, கடினமான


மனோ சிலை = கல் போன்ற மனதின் 


மீது = மேல் 


உனது தாள்   = உனது திருவடிகள் 


அணியார் = அழகான 


அரவிந்தம் = தாமரை மலர் 


அரும்புமதோ  = முளைக்குமா, அரும்பு விடுமா 


பணியாய் = எனக்கு என்ன வேலை, என்ன பணி 


என = என்று 


வள்ளி  = வள்ளியின் 


பதம் பணியும்  = பாதங்களைப் பணியும் 


தணியா = தீராத 


அதி = மிக அதிகமான 


மோக == மோகம் கொண்ட 


தயாபரனே = தயை உள்ளவனே 



நீண்ட நாள் வராத ஒருவர் நம் வீட்டுக்கு வந்தால், "எங்க வீட்டுக்கு வர்ற உங்களுக்கு வழி தெரியுமா?...இப்பவாவது வந்தீங்களே " என்று ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கலந்து கூறுவோம் அல்லவா, அது போல அருணகிரிநாதர் சொல்கிறார் 


"கல் போன்ற என் மனத்திலும் எப்படி தாமரை மொட்டு போன்ற உன் திருவடிகள் முளைதனவோ" என்று ஆச்சரியத்துடன் கூறுகிறார். 


"அரும்புமதோ" என்றால் அரும்புமா என்ற சந்தேகக் கேள்வி அல்ல. எப்படி அரும்பியது என்று ஆச்சரியக் கேள்வி.


இந்தப் பாடலுக்கு ஆன்மீகமாக பல உரைகள் சொல்கிறார்கள். 


அதாவது, உயிர்கள் இறைவனைத் தேடுவதைப் போல, இறைவனும் பக்குவப்பட்ட ஆன்மாகளை தேடி அலைவானாம்.  அவார்கள் மேல் அவனுக்கு அவ்வளவு அன்பாம். அவர்களுக்காக பிரம்படி படுகிறான், கால் தேய ஓலை கொண்டு நடக்கிறான், வில்லால் அடி வாங்குகிறான்....என்ன வேண்டுமானாலும் செய்வானாம். 


பாதம் பணிவதுதானா பிரமாதம்? 


அதெல்லாம் ஏதோ வலிந்து திணிக்கும் உரை போலத் தோன்றுகிறது. 


அன்பால், வள்ளியின் பதம் பணிந்து அவள் சொல்வதைக் கேட்டான் என்பதில் ஒரு சுகம் இருக்கத்தான்செய்கிறது. 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 



https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html





]




Wednesday, October 19, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - குன்ற மெடுத் தானே

        

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   குன்ற மெடுத் தானே


ஆயர்பாடியில் உள்ள ஆயர்கள் இந்திரன் முதலிய சிறு தெய்வங்களை வழிபட்டு வந்தனர். கண்ணன் அவர்களிடம் "சிறு தெய்வங்களை வழிபட வேண்டாம், இனி என்னை வழிபடுங்கள்" என்றான். அவர்களும் இந்திர வழிபாட்டை நிறுத்தினார்கள். அதனால் கோபம் கொண்ட இந்திரன் ஆயர்பாடியின் மேல் பெரு மழை பெய்ய வைத்தான். அப்போது கண்ணன் கோவர்தணகிரி என்ற மலையை குடை போல் பிடித்து அந்த மழையில் இருந்து ஆயர்பாடி மக்களை காத்தான். 


இது கதை. 



கேட்டிருக்கிறோம். வண்ண ஓவியமாக பார்த்தும் இருக்கிறோம். 



அந்தக் காட்சியை நம்மாழ்வார் போல் நம்மால் சிந்திக்கக் கூட முடியாது. 


அவர் காட்டும் அந்த பிரமாண்ட காட்சியைக் காண்போம். 


இப்போது நாம் ஆயர்பாடியில் இருக்கிறோம். 



மழை அடித்து ஊத்துகிறது. நிற்காத மழை. எங்கும் வெள்ளம். மக்கள் தவிக்கிறார்கள். ஒண்ட இடம் இல்லை. குளிர் நடுங்குகிறது. ஆடு மாடுகள் எல்லாம் நீரில் நடுங்குகின்றன. தின்ன புல் பூண்டு இல்லை. முன்பு தின்றதை அசை போடுகின்றன. 



கண்ணன் வருகிறான்.கோவர்தன மலையை தன் கைகளால் தூக்குகிறான். 



மலையை தூக்குவது என்றால் சாதரணமா?


தூக்கும் போது ஒரு பக்கம் உயர்கிறது. மறுபக்கம் தாழ்ந்து இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கையை உள்ளே தள்ளி மேலும் தூக்குகிறான். மலை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று அசைகிறது. 



அப்போது அந்த மலையில் உள்ள குளங்களில் உள்ள நீர் வழிந்து ஓடுகிறது. மலையை விட்டு கீழே அருவி போல் கொட்டுகிறது. அது மலை நீரை உமிழ்வது போல இருக்கிறது. 


அந்த மலையில் உள்ள விலங்குகள் தட்டு தடுமாறி விழுந்து புரள்கின்றன. 



மலையை தூக்கிய பின், அதன் அடியில் ஆடு மாடுகள் ஓடி வந்து தங்கிக் கொள்கின்றன. 


பின் மக்களும் வந்து அதன் கீழ் நின்று கொள்கிறார்கள்.




பாடல் 




மேய்நிரை கீழ்புக மாபுர ள,சுனை

வாய்நிறை நீர்பிளி றிச்சொரி ய,இன

ஆநிரை பாடியங் கேயொடுங் க,அப்பன்

தீமழை காத்துக் குன்ற மெடுத் தானே.



பொருள் 




(pl click the above link to continue reading)




மேய் நிரை கீழ்புக = ஆடு மாடுகள் கீழே புகுந்து கொள்ள 


மாபுரள  = மலையில் உள்ள விலங்குகள் தட்டுத் தடுமாறி புரண்டு விழ 


சுனை = குளம் 


வாய் நிறை நீர்பிளிறிச் சொரிய = வாயில் நீரை கொண்டு யானை பிளிறி உமிழ்வது போல நீரை அருவி போல் கொட்ட 



இன ஆநிரை  = பசுக்களை மேய்க்கும் இனமான ஆயர்கள் 


பாடியங் கேயொடுங்க  = பாடி அங்கே ஒடுங்க 


அப்பன் = திருமால் 


தீமழை காத்துக் = தீமை தரும் பெருமழையில் இருந்து காக்க 


குன்ற மெடுத் தானே. = குன்றை கையில் எடுத்த்தானே 


வைணவர்கள் "பெருமாளை அனுபவிப்பது" என்பார்கள். 


அப்படி அணு அணுவாக இரசித்து அனுபவிக்கிறார்கள். 


தாங்கள் அனுபவித்ததை பாசுரமாக நமக்கு தந்துவிட்டு போய் இருக்கிறார்கள். 


படித்தால் புரிய வேண்டும். புரிந்த பின் அந்தக் காட்சி மனதில் ஓட வேண்டும். பின், அதை இலயித்து இரசிக்க வேண்டும். 


முடியும் என்றே நினைக்கிறேன். 




(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்


பாசுரம் 3599  - மெலிந்த பொழுது 



பாசுரம் 3600  -  நீறு பட இலங்கை 



பாசுரம் 3602 - அன்று செய்தது 




)


Monday, October 17, 2022

திருக்குறள் - அகன்ற அறிவுஎன்னாம்

    

 திருக்குறள் - அகன்ற அறிவுஎன்னாம்



பிறன் பொருளுக்கு ஆசைப் படாதே என்று கூறினால் போதுமா? 


மற்றவர் பொருளை ஒருவன் எவ்வாறு எடுக்க நினைக்க முடியும்? அப்படி வரும் எண்ணத்தை எப்படித் தடுப்பது என்று அடுத்து கூறுகிறார். 


இன்று நாம் காணவிருக்கும் குறளுக்கு பரிமேலழகர் உரை இல்லை என்றால் நமக்கு ஒன்றும் புரிந்திருக்காது. 


குறளின் பொருள் "நுண்ணிய அறிவினால் என்ன பயன், மற்றவன் பொருளை தகாத முறையில் அடைய நினைத்தால்" என்பதுதான். 



பாடல் 



அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்


பொருள் 





(Please click the above link to continue reading)


அஃகி = அஃகுதல்  என்ற சொல்லுக்கு நுணுகுதல் என்று பொருள். நுண்மையான 


அகன்ற = விரிந்த 


அறிவுஎன்னாம் = அறிவினால் என்ன பயன் 


யார்மாட்டும் = மற்றவர் இடத்து 


வெஃகி = அவர் பொருளை தவறான வழியில் அடைய எண்ணி 


வெறிய செயின் = தகாத காரியங்களை செய்தால் 




யார்மாட்டும் வெறிய செயின் என்பதற்கு பரிமேலழகர் உரை செய்யும் நுணுக்கம் அபாரம். 


"யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல்."


என்ன அர்த்தம்?


உலகில் உள்ள மக்களை இரண்டு கூறுகளாகப் பிரித்துக் கொள்கிறார். தக்கார், தகாதார் என்று. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று கொள்ளலாம்.


இங்கே, நம்மை விட வலிமை மிக்கவர்கள், நம்மை விட வலிமை குறைந்தவர்கள் என்று கொள்ளலாம். 


நம்மைவிட வலிமை மிக்கவர்களிடம் இழிந்தன செய்தல்

நம்மைவிட வலிமை குன்றியவர்களிடம் கடுமையான செயல்களைச் செய்தல்.


அது என்ன இழிந்தன, கடுமையான செயல்கள்?



இழிந்தன என்றால் திருடுதல், ஏமாற்றுதல், நயவஞ்சகம் செய்தல், போன்ற செயல்கள். நம்மைவிட வலியவர்களிடம் இருந்து அவர்களுக்குத் தெரியாமல் தவறான வழியில் அவர்கள் பொருளை எடுத்துக் கொள்ளுதல்.


நம்மைவிட வலிமை குன்றியவர்களிடம் கடியன செய்தல் என்றால் மிரட்டி வாங்குதல். அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், பெரிய பதவியில், அதிகாரத்தில் இருப்பவர்கள், எளிய மக்களை மிரட்டி இலஞ்சம் பெறுவது போல. மிரட்டி சொத்தை எழுதி வாங்கிக் கொள்வது.  அலுவலகத்தில் மேலதிகாரி தனக்கு கீழே இருப்பவரை கசக்கி பிழிந்து வேலை வாங்கி, அதற்கு உரிய ஊதியத்தை தர மறுப்பது. முனைவர் (PhD) படிக்கும் மாணவனின் முயற்சியை, உழைப்பை அவனின் guide எடுத்துக் கொள்வது. இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம். 



இந்த இரண்டையும் எப்போது ஒருவன் நீக்க முடியும் என்றால் "அஃகி அகன்ற அறிவு" இருந்தால்.  



நுண்ணிய, அகன்ற அறிவு இருந்தால் பொருள் என்பது இன்பம் அல்ல, தன் முயற்சி மட்டும் பொருளை தந்துவிடாது, தவறான வழியில் பொருள் ஈட்டுவது பாவம் போன்றவை தெரியவரும். எனவே, அறிவு உள்ளவன் இவற்றைச் செய்ய மாட்டான். 


"வெறிய செயின்" என்றார். செயின் என்றால் செய்தால் என்று பொருள். அறிவுள்ளவன் அப்படிச் செய்ய மாட்டான் என்பது குறிப்பு. அறிவினால் என்ன பயன் இப்படிச் செய்தால் என்றால் ஏதோ அறிவு உள்ளவன் இதைச் செய்வான் என்ற பொருள் வந்து விடும். எனவே "செயின்" என்றார். 




"நீ நாய் வாலை நேராகச் செயின் உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன்" என்றால், அது முடியாது, நடக்காது என்று பொருள். 


ஆழ்ந்த அறிவு 
அகன்ற அறிவு 
பிறன் பொருளை வெஃகுதல் 
தக்கார்
தகவிலார் 
இழிந்தன செய்தல் 
கடியன செய்தல் 



எத்தனை செய்திகள்,ஒரு குறளுக்குள் !


[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html

]


Saturday, October 15, 2022

திருவாசகம் - திரு அம்மானை - வியப்புருமாறு

          

திருவாசகம் - திரு அம்மானை  -   வியப்புருமாறு 


மிக நீண்ட காலமாக ஏதோ ஒரு தீவில் வாழ்ந்த ஒரு மனிதன் ஒரு பெரிய நகரத்துக்கு வருகிறான். அவனுக்கு ஊர் சுற்றி காட்டியவர்கள் அவனை அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு அவனை அழைத்துச் செல்கிறார்கள். 


அவனுக்கு ஆச்சரியமான ஆச்சரியம். ஒருவன் பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறான். அவனை சுற்றி கொஞ்சம் பேர் முகத்தில் முக மூடி அணிந்து கொண்டு அவனை கத்தியால் குத்தி கிழிக்கிறார்கள். பின் ஊசியால் தைக்கிறார்கள். நினைவு தெளிந்த அவன் அந்த முகமூடி மனிதர்களுக்கு பணமும் கொடுத்து, அவர்கள் கையைப் பிடித்து கொண்டு நன்றியும் சொல்கிறான். துன்பம் தந்தவர்களுக்கு நன்றியா? இது என்ன அதிசயம் என்று வியக்கிறான். 



அது ஒரு புறம் இருக்கட்டும். 



ஒரு சில நாட்களுக்கு முன் மெய்யியல் பற்றி படித்தோம். அதன் அடிப்படை, உயிர்கள் (பசு) பதியை விட்டுவிட்டு பாசத்தில் அகப்பட்டு தவிக்கின்றன என்றும், இறைவன் அவ்வுயிர்கள் மேல் கருணை கொண்டு அவை மீண்டும் தன்னிடம் வர வழி செய்வான் என்றும் பார்த்தோம். 


அதுவும் ஒரு புறம் இருக்கட்டும். 


இனி பாடலுக்குள் செல்வோம். 



பாடல் 




துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்
கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான்
கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான்
அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம்
பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும்
அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய் 


பொருள் 




(pl click the above link to continue reading)





துண்டப் பிறையான்  = துண்டான பிறை நிலவை தலையில் சூடியவன் 


மறையான் = மறை நூல்களில் சொல்லப் பட்டவன், மறைந்து இருப்பவன் 


பெருந்துறையான் = திருப்பெருந்துறை என்ற தலத்தில் உறைபவன் 


கொண்ட புரிநூலான்  = பூணூல் அணிந்தவன் 


கோலமா = அழகான பெரிய எருதினை 


 ஊர்தியான் = வாகனமாகக் கொண்டவன் 


கண்டங் கரியான் = கரிய கழுத்தைக் கொண்டவன் 



செம் மேனியான் = சிவந்த மேனியைக் கொண்டவன் 


வெண்ணீற்றான் = உடல் எல்லாம் திரு வெண்ணீற்றை புனைந்தவன் 


அண்டமுத லாயினான்  = அனைத்து அண்டங்களுக்கும் முன்பாக உள்ளவன் 


அந்தமிலா ஆனந்தம் = முடிவற்ற ஆனந்தத்தைத் 



பண்டைப் பரிசே  = பழைய பரிசினை 


பழவடியார்க்  கீந்தருளும் = பழைய அடியார்களுக்கு கொடுத்து அருள் செய்யும் 


அண்டம் வியப்புறுமா  = உலகமே வியக்கும் படி 


பாடுதுங்காண் = பாடுவோம் 


அம்மானாய்  = அம்மானாய் 




அது என்ன "பண்டே பரிசு": முதலில் ஆன்மாக்கள் பதியிடமும் சேராமல், பாசத்திடமும் சேராமல் தனித்து நின்றன. பின், அவை ஆணவ வயப்பட்டு பாசத்தில் விழுந்தன. அப்படி பாசத்தில் சிக்கிய உயிர்களை மீண்டும் தன்னோடு சேர்த்துக் கொள்ளும் செயலே "பழைய பரிசு". 



யோக சூத்திரத்தின் எல்லை "சமாதி".  சமம் + ஆதி. ஆதியில் எப்படி சமமாக இருந்ததோ அப்படி அந்த நிலையை அடைவது சமாதி. 



"பழ அடியார்"....இறைவனால் ஆட்கொள்ளப் பட்டவர்கள். முதலில் ஆட்கொள்ளுவான். பின் "பரிசைத்" தருவான். அந்தப் பரிசு பெற்றால் 


"அந்தமில் ஆனந்தம்" தரும். 



இதில் வியப்படைய என்ன இருக்கிறது?



அந்தமில் ஆனந்தம் தருபவன், ஏன் இவ்வளவு துன்பம் தருகிறான். 



உலகில் எவ்வளவோ துன்பங்கள் நிகழ்கின்றன. அதை எல்லாம் பார்க்கும் போது, இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா என்ற சந்தேகம் எழுகிறது.



அத்தனை துன்பமும், "அந்தமில் ஆனந்தம்" அருளவே என்று அறியும்  போதும்  பெரிய வியப்பு ஏற்படுகிறது. 



ஆசிரியர் அந்தத் தேர்வு,இந்தத் தேர்வு என்று படுத்தி எடுக்கிறார். முடிவில் உயர்ந்த மதிப்பெண் பெற்று நல்ல வேலை கிடைக்கிறது. அத்தனை வருத்தமும் சுகமாக மாறி விடுகிறது. அப்படி பாடாய் படுத்திய ஆசிரியரைக் கண்டதும் எழுந்து நின்று வணங்குகிறான். வியப்பாக இல்லையா? 




"வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன்" போல  இறைவன் அவ்வளவு துன்பம் தந்தாலும், அது அனைத்தும் "அந்தமில்லா ஆனந்தம் காணவே"  என்ற அறிவு பிறக்கும் போது இந்த உலகே வியக்கிறது.  




"அண்டம் வியப்புருகிறது" 


திருவாசகத்துக்கு எத்தனை உரை படித்தாலும், அந்த உரைகளை எல்லாம் ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு, நீங்களே நேரடியாக அதைப் படித்து "உணர்வதே" 
சாலச் சிறந்தது. 






(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 







முன்னுரை:பா

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2


)