Saturday, November 5, 2022

தேவாரம் - திரு ஆனைக்காவில் - சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்

 தேவாரம் - திரு ஆனைக்காவில் - சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்


ஒரு மனிதனுக்கு வரும் மிகப் பெரிய ஏமாற்றம் எது என்று கேட்டால் வயதான காலத்தில் யாரும் துணைக்கு இல்லாமல் இருப்பது. 


பிள்ளைகள், கணவன், மனைவி, சுற்றம், நட்பு எல்லாம் ஏதோ கொஞ்ச நாள் வரும் போகும். எந்நேரமும் நம் கூடவே இருக்க முடியுமா. 


காது சரியா கேட்காது, கண் பார்வை மங்கும், ஞாபகம் தப்பும், உடல் வலி குன்றும், உலகில் என்ன நடக்கிறது என்று தெரியாது. மிக மிக தனிமையாக உணர்வோம் 


அப்படி எல்லாம், என் பிள்ளை என் கூடவே இருப்பான், என் மனைவி என்னை அன்போடு பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை உள்ளவர்கள், சுத்தி  முத்தி பார்க்க வேண்டும். எது எதார்த்தம் என்று புரியும். 


திருநாவுக்கரசர் சொல்கிறார்: 


"தாய், தந்தை, சுற்றம், செல்வம் இதில் எது நமக்கு நல்லது செய்யும்? நாம் இறந்த பின் நமக்கு யார் உதவுவார்கள்?  ஒருவரும் இல்லை. இடுகாட்டில் நம் உடலை தீ மூட்டி விட்டு, அது முழுவதும் எரிந்து முடிவதற்கு முன்பே வீட்டுக்குப் போய் விடுவார்கள். திரு ஆனைக்காவில் உள்ள சிவ பெருமானே,  உன் திருவடிகளைப் பற்றினால், நான் துன்பம் அற்ற நிலையை அடைவேன்" 


என்கிறார். 


பாடல் 


எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்

எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்


செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை

சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்


சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்

திருவானைக் காவுடைய செல்வா என்றன்


அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்

அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_5.html


(Pl click the above link to continue reading)



எத்தாயர் = எப்படிப்பட்ட உயர்ந்த தாயார் 


எத்தந்தை = எப்பேற்பட்ட தந்தை 


எச்சுற்றத்தார்  = எவ்வளவு உயர்ந்த சுற்றத்தார் 


எம்மாடு = எத்தனை செல்வங்கள் 


சும்மாடாம் = இவை எல்லாம் நம்மைத் தாங்குமா ?


எல்லாம்  ஏவர் நல்லார் = எதில் யாரெல்லாம் நல்லவர்கள் 


செத்தால் = நாம் இறந்தால் 


வந்து உதவுவார் ஒருவ ரில்லை  = வந்து உதவி செய்பவர் ஒருவரும் இல்லை 


சிறுவிறகால்= சிறு சிறு விறகுகளால் 


தீமூட்டிச் = நம் உடலுக்கு தீ மூட்டி 


செல்லா நிற்பர் = சென்று விடுவர் 




சித்தாய வேடத்தாய் = ஞானமே வடிவானவனே 


நீடு பொன்னித் = நீண்ட பொன்னி நதிக் கரையில் உள்ள 


திருவானைக் காவுடைய  = திரு ஆனைக்கா என்ற தலத்தில் உறைபவனே 


செல்வா = செல்வா 


என்றன் = என் 


அத்தா = தலைவனே 


உன் = உன் 


பொற்பாதம் அடையப் பெற்றால்  = திருவடிகளை அடையப் பெற்றால் 


அல்லகண்டங் கொண்ட = அல்லல் (துன்பம்) தரும் அந்த நிலையினை விட்டு அகல 


அடியேன் என்செய் கேனே. = நான் என்ன செய்வேன். ஒன்றும் செய்ய மாட்டேன்.


யார் இருந்து, என்ன இருந்து என்ன பயன். இறைவா உன் திருவடிகள் ஒன்றே துணை என்கிறார். 


"சிறு விறகால் தீ மூட்டி செல்லா நிற்பர்"  என்ற வரி விளங்க கொஞ்சம் இலக்கணம் வேண்டும். 


செல்லா நிற்பர் என்றால் செல்லாமல் நிற்பார்கள் என்று அர்த்தம் தோன்றும். சிதைக்கு நெருப்பு மூட்டிவிட்டு வீட்டுக்குப் போகாமல் அங்கேயே நிற்பார்கள் என்ற அர்த்தம் தொனிக்கிறது. அப்படி ஒன்றும் நடப்பது இல்லை. 


"செல்லா" என்பது செய்யா எனும் வாய்பாடு. 


வாய்பாடு என்றால் template 


சொற்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். 


பெயர்ச் சொல், வினைச் சொல் என்று. 


வினைச் சொல் என்றால் செயலை குறிக்கும் சொல். 


ஒரு வினைச் சொல்லுக்கு மூன்று பெரும் பகுதிகள் உண்டு. 


பகுதி + இடை நிலை + விகுதி என்பன அவை. 


முதலில் வருவது பகுதி. இது எந்த செயல் என்று காட்டும். 


நடுவில் வரும் இடை நிலை அந்த செயல் நிகழ்ந்த காலத்தைக் காட்டும் 


இறுதியில் வரும் விகுதி யார் அந்த செயலை செய்தார்கள் என்று சொல்லும். 


உதாரணமாக:


வந்தான் என்ற வினைச் சொல்லை 


வா + த் + ஆன் 

என்று பிரிக்கலாம். 


வா என்பது வருகின்ற செயலை குறிக்கும். அது வ என குறுகியது விகாரம். 


த் இறந்த காலம் காட்டும் இடைநிலை 


ஆன் = ஆண் பால், படர்கை, விகுதி 


தமிழில் சிறப்பு என்ன என்றால் இந்த மூன்று பகுதிகளையும் தனித் தனியாக நாம் மாற்றலாம். 


உதாரணமாக

வா + த் + ஆள் என்று விகுதியை மட்டும் மாற்றினால் அது வந்தாள் என்று பெண் பாலாகிவிடும் 


வா + த் + ஆர் = என்று விகுதியை மீண்டும் மாற்றினால் அது வந்தார் என்று பலர் பாலாகிவிடும். 


வா + த் + அது = வந்தது என்றால் ஒன்றன் பாலாகிவிடும்.


இங்கே நாம் கவனிக்க வேண்டியது காலம் காட்டும் இடை நிலை. 


நிகழ் காலத்தை காட்டுவதற்கு மூன்று இடை நிலைகள் உள்ளது. 


கிறு 

கின்று 

ஆநின்று 


அது என்ன கிறு, கின்று 


வருகிறான் = வா + கிரு + ஆன் எனப் பிரியும். நடுவில் உள்ள கிரு நிகழ் காலத்தை குறிக்கும். 


வருகின்றான் = வா + கின்று + ஆன் 


இந்த இரண்டு இடை நிலைகளையும் நாம் இப்போதும் பயன் படுத்துகிறோம். 


அந்த "ஆநின்று" என்ற ஒரு இடை நிலை இருக்கிறது. 


அதை நாம் இப்போது பயன் படுத்துவது இல்லை. 


முன்பு பயன் படுத்தினார்கள். 


வருகிறான் 

வருகின்றான் 

வாராநின்றான்  = வா + ஆநின்று + ஆன் 


வராநின்றான் என்றால் வராமல் நின்றான் என்று பொருள் அல்ல. வருகிறான் என்றுதான் பொருள். கொஞ்சம் குழப்பமாக இருப்பதால் அதை நாம் இப்போது தவிர்த்து வருகிறோம். 


சிறுவிறகால் தீ மூட்டி செல்லா நிற்பர் 


என்பதில் உள்ள செல்லா என்ற சொல் செல்வர் என்று குறிக்கும். 


உடல் முழுவதும் எரியும் வரை கூட இருக்க மாட்டார்களாம். அவரவர் வேலையை பார்க்க போய் விடுவார்கள். 


அவ்வளவுதான் சொந்தம். பாசம். எல்லாம். 


இதற்கா இந்தப் பாடு. ஓடி ஓடி உழைத்து, இரவு பகல் கண் விழித்து...யோசிக்க வேண்டும். 


 




Thursday, November 3, 2022

திருக்குறள் - அஃகாமை செல்வத்திற்கு யாதெனின்

       

 திருக்குறள் - அஃகாமை செல்வத்திற்கு யாதெனின்



செல்வம் - நிறைய வேண்டும். எவ்வளவு வந்தாலும் போதாது என்று தோன்றுகிறது. 


அதற்கு என்ன செய்ய வேண்டும்?


முதலில் இருக்கின்ற செல்வத்தை பாதுகாக்க வேண்டும்.

அடுத்தது அதை மேலும் பெருக்க வேண்டும். 

அடுத்தது மேலும் செல்வத்தை சம்பாதிக்க வேண்டும். 


எவ்வளவுதான் சம்பாதித்தாலும், சம்பாதித்த பணத்தை பாதுகாக்க முடியாவிட்டால் என்ன பயன்?


யோசித்துப் பாருங்கள் - கஷ்டப்பட்டு, முயற்சி செய்து பணம் சேர்த்து ஒரு இடம் வாங்குறீர்கள். பின்னால் வீடு கட்டலாம் என்று. அந்த இடத்தில் ஒருவன் குடிசை போட்டுக்கொண்டு தன் இடம் என்கிறான். என்ன செய்வது?


அறிவு, திறமை, உழைப்பு எல்லாம் இருக்கிறது. சம்பாதித்த பணத்தை பாதுகாக்க முடியாவிட்டால் என்ன செய்வது? 

எல்லாம் வீண்தானே ?

இருக்கின்ற செல்வத்தை எப்படி பாதுகாப்பது என்று வள்ளுவர் சொல்கிறார். 



"உன்னிடம் இருக்கின்ற செல்வத்தை பாதுகாக்க வேண்டுமா? மற்றவன் பொருள் மேல் ஆசைப் படாமல் இரு"


பாடல் 



அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்



பொருள் 



(please click the above link to continue reading)



அஃகாமை = குறையாமல் இருக்கும் தன்மை 



செல்வத்திற்கு  = செல்வத்துக்கு 


யாதெனின் = எது என்றால் 


வெஃகாமை = பிறன் பொருளை தவறான முறையில் அடைய 


வேண்டும் = (நினைக்காமல்  இருக்க) வேண்டும் 


பிறன்கைப் பொருள் = மற்றவரின் செல்வம் 



மற்றவன் பொருளை அபகரிக்க நினைக்காமல் இருந்தால் எப்படி நம் செல்வம் குறையாமல் இருக்கும்? 

அது பற்றி வள்ளுவர் சொல்லவில்லை. பரிமேலழகரும் கூறவில்லை. 


நாம் தான் சிந்திக்க வேண்டும். 


முதலாவது, நம் உழைப்பால் செல்வம் சேர்க்க வேண்டுமே அல்லாமால் மற்றவன் பொருளை அபகரிக்க நினைத்தால், நம் உழைப்பு கெடும். மற்றவன் பொருளை அபகரிக்க முடியாமலும் போகலாம். 


இரண்டாவது, மற்றவன் பொருளை அபகரித்தால் என்றாவத் ஒரு நாள் சட்டத்தின் பிடியில் சிக்க வேண்டி இருக்கும். அப்போது அபகரித்த பொருள் மட்டும் அல்ல, முன்பு இருந்த பொருளும் போய் விடும். 


மூன்றாவது, பிறன் பொருளை அபகரிக்க சில தீயவர்களோடு சேர வேண்டி வரும். அது பல தீமைகளுக்கு வழி வகுக்கும்.  இருக்கிற பொருளும் போகும். 


நான்காவது, நாம் மற்றவர் பொருளை அபகரித்தால், பறி கொடுத்தவன் சும்மா இருப்பானா?  அவன் நம் பொருளை அபகரிக்க நினைப்பான். நமக்கு தொல்லை தந்து கொண்டே இருப்பான். அதை சமாளிக்க நீதிமன்றம், காவல் நிலையம் என்று அலைய வேண்டி வரும்.  பொருள் விரயம் ஆகும். 


ஐந்தாவது, தவறான வழியில் பொருள் சேர்த்தால், நிம்மதி போகும். பயம் வரும். மன அழுத்தம் வரும். உடல் நிலை கெடும். மருந்து, மாத்திரை என்று நோயோடு போராட வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அந்த குறைவற்ற செல்வம் குறைந்து போகும். 


இப்படி பல விதங்களில் அது இருக்கின்ற பொருளையும் அழித்து விடும். 


"கைப் பொருள்" என்று ஏன் சொன்னார் என்று தெரியவில்லை. ஏதாவது காரணம் இருக்கும். ஆராய வேண்டும். 


எப்படி ஆயினும், தவறான வழியில் பொருள் சேர்க்க நினைக்காமல் இருப்பதே இருக்கின்ற செல்வத்தை காக்கும் வழி என்கிறார். 


எவ்வளவு ஆழமான அறிவுரை. 





[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


அகன்ற அறிவுஎன்னாம்




பொல்லாத சூழக் கெடும்



Wednesday, November 2, 2022

கந்தரனுபூதி - மெய்ப் பொருள் பேசியவா

         

 கந்தரனுபூதி - மெய்ப் பொருள் பேசியவா


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


நீங்கள் எந்த ஊரைச் சார்ந்தவர்கள் என்று கேட்டால் "என் சொந்த ஊர் இன்னது" என்று சொல்லுவார்கள். 


சொந்த வீடு இருக்கலாம், சொந்த கார் இருக்கலாம், சொந்த ஊர்? ஊரை வாங்கி வாங்க முடியுமா? 


ஊரின் மேல் அவ்வளவு பற்று. அது சொந்த ஊராகி விடுகிறது. 


அது போல், என் மனைவி, என் கணவன், என் பிள்ளை, என் சுற்றம் என்று நாம் சொந்தம் கொண்டாடுகிறோம்.  அவை நமதா?  நம் சொல்படி கேட்குமா? நம் விருப்பப்படி நடக்குமா? பாதியில் வந்த உறவுகள். போகிற வழியில் விட்டு விட்டுப் போய் விடும். அதை எல்லாம் நம் சொந்தம், நமது என்று நாம் நினைத்து துன்பப் படுகிறோம். 


இவை எல்லாம் நமது என்று நினைப்பதற்கு காரணம் ஒரு பிரமை. ஒரு தோற்றம். அவ்வளவுதான். 


அதெப்படி பிரமை ஆகும்? என் பிள்ளை என் சொந்தம் இல்லையா? என் கணவன் என் உரிமை இல்லையா? என்று கேட்கத் தோன்றும். இல்லை, இவை உனது இல்லை என்று யார் சொன்னாலும் புரியாது.  அதற்கு இறை அருள் இருந்தால்தான் முடியும். 


அருணகிரிநாதர் சொல்கிறார், இந்த பிரமை விலகும்படி முருகன் அவருக்கு உபதேசம் செய்தான் என்று. 


"ஊர், உறவு, இந்த உடம்பு என்ற இவை என்னது என்ற பிரமை போயகல எனக்கு உண்மையை விளக்கியவன் முருகன். அவன் யார் தெரியுமா, மலை அரசனின் மகளான பார்வதியின் மகன். எதிரிகளை போரில் வென்றவன்"



பாடல் 


அமரும் பதிகேள் அகமாமெனுமிப் 

பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா  

குமரன் கிரிராச குமாரி மகன் 

சமரம் பொரு தானவ நாசகனே . 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


(pl click the above link to continue reading)



அமரும் பதி = இருக்கின்ற ஊர். 


கேள்  = உறவினர் 


அகமாமெனுமிப்  = அகம் ஆம் எனும் = இந்த உடல் என்ற இவை 


பிமரம் = பிரமை 


கெட = அழிய 


மெய்ப் பொருள் = உண்மையான,நிலையான பொருளை 


பேசியவா   = உபேதேசம் செய்தவன் 


குமரன் = இளைஞன் 


கிரி = மலை 


ராச = அரசன் 


குமாரி  = மகள் 


மகன்  = மகன் 


சமரம் = சண்டை, போர் 


பொரு = புரிந்து 


தானவ நாசகனே .  = தானவர்கள் என்றால் அசுரர்கள். அவர்களை நாசம் செய்தவன். 


விரிவுரை 


பதி = பதி என்றால் ஊர். "பதி எழு அறியா பழங்குடி" என்று பேசும் சிலப்பதிகாரம்.  மக்கள் இருக்கின்ற ஊரை விட்டு அயல் நாடுகளுக்குச் செல்கிறார்கள். காரணம் அங்கே நல்ல வேலை வாய்ப்பு, சம்பளம், நல்ல வாழ்க்கைக்கு ஏற்ற சூழ்நிலை நிலவுவதால். பூம்புகார் மக்கள் வேறு ஊருக்கு குடி பெயர்ந்து போக மாட்டார்களாம். காரணம், அந்த ஊர் அவ்வளவு சிறப்பான ஊர். 


கேள் = உறவினர். 


இராமன், குகனிடம் இருந்து விடை பெறும் போது சொல்லுவான், "அன்புள்ளவனே, இனி நாம் ஐவரானோம்" என்றான். 


இராமன் அதோடு நின்றிருந்தால் ஏதோ சமாதனம் சொல்கிறான் என்று ஆகி இருக்கும்.  இன்னும் ஒரு படி மேலே போகிறான். இந்த இலக்குவன் உனக்கு இளைய தம்பி என்கிறான். அது கூட பெரிய விடயம் இல்லை. 


"இந்த சீதை இருக்கிறாளே அவள் உன் உறவு" என்கிறான். 


"நன்னுதல் அவள் நின் கேள்" - அழகான நெற்றியை உடைய இவள் உன் உறவுக் காரி என்கிறான். அந்த அளவுக்கு அந்த சகோதர வாஞ்சையை அழுத்தமாகச் சொல்கிறான் இராமன். 


‘துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்

பின்பு உளது; “இடை, மன்னும் பிரிவு உளது” என, உன்னேல்;

முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா

அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; 


அன்னவள் உரை கேளா அமலனும் உரை நேர்வான்

என்னுயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இந்

நன்னுதல் அவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம்

உன்னுடையது நான் உன் தொழில் உரிமையில் உள்ளேன்


மெய்ப் பொருள் = மெய் பொருள் என்றால் உண்மையான பொருள். நிலையான பொருள். என்றும் நிலைத்து இருக்கும் பொருள். அப்படி என்றால் இந்த ஊர், உறவு, உடம்பு என்பதெல்லாம் நிலையானவை அல்ல, உண்மையானவை அல்ல என்று புரிந்து கொள்ளல்லாம். 


"பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி 

மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே"


என்பார் மணிவாசகர். 


இறைவன் தான் மெய் ஞானம். 


கிரிராச குமாரி மகன் = முருகன் பார்வதி வயிற்றில் பிறக்கவில்லை. பின் எப்படி கிரிராச குமாரி மகன் என்று சொல்கிறார். ஆண் எவ்வளவுதான் பலம் பொருந்தியவனாக இருந்தாலும், அவனை செயலாற்றும் சக்தி பெண்ணிடம்தான் உள்ளது என்பதை உணர்த்த பார்வதி மகன் என்றார். 


சமரம் பொரு தானவ நாசகனே = தானவர்கள் என்றால் அரக்கர்கள். 


வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,

சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே

பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்

சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே


என்பார் அபிராமி பட்டர். 


"வானவர் தானவர்" என்றால் தேவர்களும், அசுரர்களும். 


அசுரர்களோடு சண்டை போட்டதை ஏன் இங்கே சொல்ல வேண்டும்?  


நமக்குத் துன்பம் தரும் பல அசுரர்கள் உண்டு. எல்லாம் ஏதோ பெரிய உருவமாய், கறுப்பாய், மண்டை ஓட்டு மாலை அணிந்து கொண்டு இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். 


ஆணவம், பாசம், பற்று, பொறாமை, பேராசை, அதீத காமம், களவு, பொய் பேசுதல், என்று நமக்குள் ஆயிரம் அசுரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை விடாமல் துன்பம் செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்லது செய்வது போலத் தெரியும். அந்த இனிப்பைச் சாப்பிடு, இந்த காப்பியைக் குடி, ஐந்து மணி நேரம் டிவி பார், மதியம் உறங்கு, அரட்டை அடி, என்று நம்மை துன்பத்தில் ஆழ்த்தும் அசுரர்கள் ஆயிரம். அவர்களோடு நாம் தனித்துப் போரிட முடியாது. 


அசுரர்களை அழித்தது ஒரு குறியீடு. 

 

நம் மன மாசுக்கள்தான் அசுரர்கள். நம் போர் அவற்றோடுதான். வெல்ல முடியாமல் தவிக்கிறோம். முருகா, அருள் புரி என்று வேண்டுகிறார். 


மேலும் சிந்திப்போம். 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html




]




Tuesday, November 1, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக்குறுந்தாண்டகம் -2௦32 - நெறிமையால் நினைய வல்லார்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக்குறுந்தாண்டகம் -2௦32 - நெறிமையால் நினைய வல்லார்


தாண்டகம் என்று ஒரு செய்யுள் வடிவம். அது பற்றிய சர்ச்சைகள் நிறைய இருக்கின்றன. அது எத்தனை சீர், எத்தனை எழுத்து என்றெல்லாம் விவாதங்கள் நடந்தபடி இருக்கின்றன. 


தாண்டுதல் என்பதால் தாண்டகம் என்று பெயர் வந்தது என்று ஒரு ஒரு குறிப்பு உண்டு. பாடல், முடியாமல் தொடர்ந்து கொண்டே போய், இறுதிச் சொல்லில் முடியும். 


திருமங்கையாழ்வார் இருபது பாடல்கள் அருளி இருக்கிறார். 


அவற்றைப் பற்றி சிந்திக்க இருக்கிறோம். 


கற்கண்டு பற்றி எவ்வளவு விளக்கிச் சொன்னாலும் அது புரியாது. ஒரு கட்டியை எடுத்து வாயில் போட்டால் பின் விளக்கம் ஒன்றும் தேவையில்லை. எல்லாம் தானே விளங்கி விடும்.


அது போல, முதலில் பாசுரத்தைப் படித்து விடுவோம். பின் சிந்திப்போம். .



பாடல் 


 நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்,

கதியினைக் கஞ்சன் மாளக் கண்டுமுன் ஆண்ட மாளும்,

மதியினை மாலை வாழ்த்தி வணங்கியென் மனத்து வந்த,

விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே!



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/232.html


(Please click the above link to continue reading)


நிதியினைப் = செல்வத்தை 


பவளத் தூணை = பவள பாறையால் ஆன தூணை 


நெறிமையால் = ஒழுக்க நெறியில் நின்று 


நினைய வல்லார், = நினைக்க முடிந்தவர்களின் 


கதியினைக் = விதியினை 


கஞ்சன் = கம்சன் 


மாளக் கண்டு = இறந்த பின் 


முன் ஆண்ட மாளும், = அண்டத்தை ஆளும் 


மதியினை  = நிலவு போன்றவனை 


மாலை = திருமாலை 


வாழ்த்தி = வாழ்த்தி 


வணங்கி = வணங்கி 


யென் = என்னுடைய 


மனத்து வந்த = மனதில் வந்து அமர்ந்த 


விதியினைக் = விதியினை 


கண்டு கொண்ட  = கண்டு கொண்ட 


தொண்டனேன் = தொண்டனாகிய நான் 


விடுகி லேனே! = விட மாட்டேன் 


பாசுரம் எப்படி போகிறது என்று பாருங்கள். 


 நிதியினை

பவளத் தூணை

நெறிமையால் நினைய வல்லார், கதியினைக் 

ஆண்ட மாளும் மதியினை

மாலை 

மனத்து வந்த  விதியினைக்


என்று நீண்டு கொண்டே போய், இறுதியில் விடுகிலேனே என்று முடிகிறது. 



இரண்டாவது, 


"நிதியினைப்" - நிதியை என்ன செய்வோம்? முன்பெல்லாம் புதைத்து வைப்பார்கள். அது போல இறை நினைவை மனதுக்குள் புதைத்து வைக்க வேண்டும். வெளியே தெரியும்படி காட்டிக் கொண்டு திரியக் கூடாது. மனதின் ஆழத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பக்தி செய்வதே பெரிய விளம்பரமாகப் போய் விட்டது. 


"பவளத் தூணை": தூண் என்ன செய்யும். பெரிய பாரத்தை தான் தாங்கிக் கொண்டு, தனக்கு அருகில் இருப்பவர்களுக்கு நிழல் தரும், பாதுகாப்பு தரும். அது போல இறைவன் தன்னை அண்டியவர்களை காப்பான். 


"நெறிமையால் நினைய வல்லார்" =  சும்மா நினைய வல்லார் என்று சொல்லி இருக்கலாம். நெறிமையால் என்றால் ஒரு வழி, முறைப் படி வழிபட வேண்டும் என்கிறார். மனம் ஒப்பி, மனம் ஒன்றி நினைக்க வேண்டும். அது கடினம் என்பதால், "வல்லார்" என்றார். 



கதியினைக் = கதி என்றால் வழி. அவன் தான் சென்று சேரும் இடம். சேர்க்கும் வழியும் அவன் தான். 



மனத்து வந்த விதியினைக் = அவன் மனதுக்குள் வர வேண்டும் என்பது விதி. நெறிமையால் நினைக்க வல்லார் மனத்துள் அவன் வந்தே தீர்வான். சந்தேகம் வேண்டாம். அதுதான் விதி. 


 கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே! = கண்டு கொண்டேன், விட மாட்டேன் என்கிறார். நல்ல விடயங்களைக் கூட, நாம் விட்டு விடுகிறோம். முதலில் தொடங்குவோம். பின் விட்டு விடுவோம். "விட மாட்டேன்" என்கிறார் ஆழ்வார். அப்படி ஒரு உறுதி வேண்டும். வைராக்கியம் வேண்டும் 


மேலும் சிந்திப்போம். 








Saturday, October 29, 2022

திருக்குறள் - வேண்டற்க வெஃகியாம்

      

 திருக்குறள் - வேண்டற்க வெஃகியாம் 


வாழ்க்கையை அனுபவிக்க பொருள் தேவை. பொருள், செல்வம் இருந்து விட்டால் எல்லா இன்பங்களும் வந்து விடும் என்று நினைத்து எப்படியாவது பொருள் சேர்த்துவிட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.


நாய் விற்ற காசு குறைக்காது  என்று நினைத்து எந்த வழியிலாவது பணம் சேர்க்க முயல்கிறார்கள். 


எப்படியெல்லாமோ பணம் சேர்த்தவன் நன்றாகத்தானே இருக்கிறான். வாழ்கையை அனுபவிக்கிறான். சும்மா இந்த அறம், நியாயம், தர்மம் என்றெல்லாம் சொல்லி என்ன பயன்...என்று சிலர் நினைக்கலாம். 


வள்ளுவர் சொல்கிறார் 


"நீ தவறான வழியில் பணம் சேர்த்து விடலாம். ஆனால், அதை உன்னால் நிம்மதியாக அனுபவிக்க முடியாது...எனவே அப்படி சேர்க்காதே" என்கிறார்.




பாடல் 


வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன்



பொருள் 




(Please click the above link to continue reading)


வேண்டற்க = வேண்டாம் என்று ஒதுக்கி விடு. எதை?


வெஃகியாம்  = தவறான வழியில் வரும் 


ஆக்கம்  = செல்வத்தை. ஏன் என்றால் 


விளைவயின் = அதை அனுபவிக்கும் போது 



மாண்டற்கு  = மாண்பு உடைய ஆதல், சிறப்பாக ஆதல், 



அரிதாம் பயன் = அரிதாக நடக்கும். 



வெளியில் இருந்து பார்பதற்கு தவறான வழியில் பணம் சேர்த்தவன் ஏதோ மகிழ்ச்சியாக இருப்பது போலத் தெரியும். அவன் சட்டத்தை ஏமாற்றலாம். இறுதிவரை  சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவும் செய்யலாம். 



ஆனால், அந்த செல்வதை அவன் ஒரு நாளும் நிம்மதியாக அனுபவிக்க முடியாது. 



எப்போது, என்ன வருமோ என்று பயந்து கொண்டே இருக்க வேண்டும். தவறான வழியில் வந்த செல்வத்தை முதலீடு செய்ய முடியாது. மறைத்து மறைத்து வைக்க வேண்டும். மறைத்து வைத்தாலும் ஏதோ சில பேருக்கு தெரியத்தான் செய்யும். அவர்களை கண்டால் பயப்பட வேண்டும். அவர்களையும், மற்றவர்களையும் அடக்கி வைக்க ஆள் பலம் வேண்டும். அப்படி வைக்கும் ஆட்கள் ஏதேனும் செய்தால், எங்கே அவர்கள் தன்னை காட்டி கொடுத்துவிடுவார்களோ என்று பயப்பட வேண்டும். 


பயத்திலும், மன அழுத்தம், மற்றும் உளைச்சலில் உடல் நலம் கெடும். 



எங்கே பணத்தை பிடுங்கிக் கொண்டு போய் விடுவார்களோ என்று அவசரம் அவசரமாக அனுபவிக்கத் தோன்றும். 


தவறான வழிகளில் பணத்தை செலவழித்து அனுபவங்களைத் தேடத் தோன்றும். 


மது, போதை பொருட்கள், பெண்கள், சூது என்று மனம் ஓடும். 


எங்கே நிம்மதி வரும். 


அப்படிப்பட்ட செல்வம் தேவையா?   வேண்டாம் என்று ஒதுக்கி விடு என்கிறார்.


பொருளைத்தான் தவறான முறையில் எடுக்க நினைக்க வேண்டும் என்று இல்லை. 



வள்ளுவர் "ஆக்கம்" என்றார். ஆகி வருவது ஆக்கம். அது செல்வமாக மட்டும் இருக்க வேண்டியது இல்லை. 


பதவி, பட்டம், செல்வாக்கு, அதிகாரம், பேர், புகழ் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 


மற்றவன் உழைப்பை திருடிக் கொள்வது, அவனுக்கு வர வேண்டிய புகழை தனதாக்கிக் கொள்வது, மற்றவனுக்கு வர வேண்டிய பதவி உயர்வை தட்டிப் பறித்துக் கொள்வது, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 


ஏன் மாற்றான் மனைவியை அடைய நினைப்பது கூட இதில் அடங்கும். 


தவறான வழியில் அடைந்த எதுவும் அதை நிம்மதியாக அனுபவிக்க விடாது. 



இதெல்லாம் சிறு வயதில் சொல்லிக் கொடுத்து இருந்தால் பல பேர் இலஞ்சம் போன்ற வழிகளில் செல்வது தவிர்க்கப்பட்டு இருக்கலாம். 


நல்லவற்றை எப்போது படித்தாலும் நல்லதுதான். 



[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


அகன்ற அறிவுஎன்னாம்




பொல்லாத சூழக் கெடும்


]


Friday, October 28, 2022

திருவாசகம் - திரு அம்மானை - அப்பாலைக்கு அப்பாலை

            

திருவாசகம் - திரு அம்மானை  -   அப்பாலைக்கு அப்பாலை 


வாரியார் சுவாமிகளுக்கு ஒரு முறை உடல் நலக் குறைவு ஏற்பட்டது. காலில் மிக அதிகமான வலி. மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்துவிட்டு, காலை எடுக்க வேண்டும் என்று கூறி விட்டார்கள். காலை வெட்டி எடுப்பதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்றும் கூறினார்கள். 


அவர் சிந்தித்தார். இருக்கிற காலை வெட்டி எடுக்க இவ்வளவு செலவு ஆகும் என்றால், அதை பெற எவ்வளவு செலவு செய்ய வேண்டி இருக்கும் என்று.


கால் மட்டுமா?  


கால், கை, கண், மூளை, இதயம், நுரையீரல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனையும் நமக்கு இலவசமாக கிடைத்து இருக்கிறது. விலை கொடுத்தா வாங்கினோம்?


சரி இல்லாத காலை வெட்டி எடுக்கும் மருத்துவருக்கு பணம் கொடுப்பது மட்டும் அல்ல, அவருக்கு நன்றியும் சொல்கிறோம். அப்படி என்றால் நமக்கு இவ்வளவு அவயன்களைக் கொடுத்த இறைவனுக்கு எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும். 



நினைத்துப் பார்க்கிறார் மணிவாசகர். 


அவர் உள்ளம் உருகுகிறது. 


உடல் மட்டுமா தந்தான் இறைவன்?  அன்பான கணவன்/மனைவி, பிள்ளைகள், சுற்றம், நட்பு, சுகமான சூழ்நிலை, ஆரோக்கியம், அறிவு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனையும் இறைவன் அருளி இருக்கிறான். நம் மேல் எவ்வளவு அன்பு இருந்தால் இத்தனையும் இறைவன் அருளி இருப்பான் என்று நினைத்து நினைத்து உருகுகிறார். 


இதெல்லாம் இறைவன் அருளியது என்று நினைப்பவர்களுக்கு அந்த நன்றி உணர்வு பெருகும். உள்ளம் உருகும். 

அது ஒரு புறம். 


இன்னொரு புறம், மணிவாசகர் மதுரையை சுற்றி முற்றி பார்க்கிறார். 


சிவன் கோவில், திருவிளையாடல் நடந்த இடங்கள், பக்தர்கள் என்று மதுரையம்பதியே ஏதோ சிவலோகம் போல இருக்கிறது. சிவன் இருக்கும் இடம்தானே சிவ லோகம். சிவனுக்கு மதுரை மேல் ஒரு ஈர்ப்பு இருக்கும் போல இருக்கிறது. 


இறைவனின் தன்மையை நினைத்துப் பார்க்கிறார் அவர். எவ்வளவு சிந்தித்தாலும் அவர் சிந்தனைக்கு எட்ட முடியாமல் விரிந்து கொண்டே போகிறது. முடிவு இல்லாமல், விரிந்து கொண்டே போகிறது. 


பாடல் 



செப்பு ஆர் முலை பங்கன், தென்னன், பெருந்துறையான்,
தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான்,
அப் பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பு ஆர் சடை அப்பன், ஆனந்த வார் கழலே
ஒப்பு ஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும்
அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண்; அம்மானாய்!


பொருள் 





(pl click the above link to continue reading)



செப்பு ஆர் முலை பங்கன் = செம்பால் செய்யப்பட்ட கிண்ணம் போல் தனங்களை உடைய உமா தேவியை உடலின் பாதியாகக் கொண்டவனை 


தென்னன் = தென்னாடு உடையவன் 

பெருந்துறையான், = திருப் பெருந்துறையில் உறைபவன் 


தப்பாமே = தவறாமல் 


தாள் அடைந்தார் = தன்னுடைய திருவடிகளை அடைந்தவர்களின் 


நெஞ்சு உருக்கும்  = மனதை உருக்கும் 


தன்மையினான் = தன்மை உடையவன் 


அப் பாண்டி  நாட்டைச் = பாண்டிய நாட்டை 


சிவலோகம் ஆக்குவித்த = சிவ லோகம் போல செய்த 


அப்பு = நீர், கங்கை 


ஆர் சடை அப்பன் = உடைய சடை முடி உடையவனை 


ஆனந்த= ஆனந்தத்தை அள்ளித் தருகின்ற 


வார் கழலே = சிறந்த திருவடிகளில் 


ஒப்பு ஆக ஒப்புவித்த = தங்களை ஒப்படைத்துக் கொண்ட 


உள்ளத்தார் = உள்ளம் உடையவர்களின் 


உள் இருக்கும் = உள்ளத்தில் இருப்பவனை 


அப்பாலைக்கு அப்பாலை = அனைத்துக்கும் மேலே, வெளியே இருப்பவனை 


பாடுதும் காண்; அம்மானாய்! = பாடுவோம் அம்மானாய் 


அவன் அறிவுக்கு புலப்படமட்டான். அப்பாலுக்கு அப்பால் போய்க் கொண்டே இருப்பான். ஆனால், அவன் திருவடிகளை சரண் அடைந்தவர்களின் உள்ளத்துக்குள் இருப்பான். 


இறைவனை அறிவால் அறிய முடியாது. அன்பால் அவனே நம் உள்ளத்துக்குள் வந்து இருப்பான். 


அப்படி அவன் உள்ளத்துக்குள் வந்து விட்டால், இருக்கும் இடமே சிவ லோகம். வேறு எங்கும் போக வேண்டாம். 


"உள்ளத்தார் உள் இருக்கும் அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண் அம்மானாய்"




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:பா

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி


)


Wednesday, October 26, 2022

கந்தரனுபூதி - விடுவாய் வினையா வையுமே

        

 கந்தரனுபூதி - விடுவாய் வினையா வையுமே 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


சும்மா சும்மா இறைவனைப் பற்றி "நீ யார், எவ்வளவு பெரிய ஆள், என்னவெல்லாம் செஞ்சிருக்க, எனக்கு அருள் செய்ய மாட்டாயா" என்று புலம்புவதில் யாருக்கு என்ன பயன். 


இறைவன் யார் என்று அவருக்குத் தெரியாதா? அவர் என்ன செய்தார் என்று அவருக்குத் தெரியாதா? சரி, அப்படியே தெரியாது என்று வைத்துக் கொண்டாலும், ஒரு தரம் சொன்னால் போதாதா? 


அருணகிரிநாதர் அதில் இருந்து பெரிதும் வேறுபடுகிறார். மனித நேயம், வாழ்வின் நோக்கம், அதை அடையும் வழி என்பன பற்றி பேசுவார். 


"தவறான வழியில் சென்று கெடும் என் மனமே, உனக்கு சில நல்ல வழிகளை  சொல்கிறேன் கேள். மறைக்காமல் கொடு. முருகனின் திருவடிகளை நினை. உன்னுடைய நீண்ட துன்பங்களை எரித்து சாம்பலாக்கு. வினைகளை விடு"


மேலோட்டமாக இதுதான் அவர் சொல்ல வந்த செய்தி. 



பாடல் 


கெடுவாய் மனனே கதிகேள் கரவா 

திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் 

சுடுவாய் நெடுவே தனை தூள் படவே 

விடு வாய் விடுவாய் வினையா வையுமே 


சீர் பிரித்த பின் 


கெடுவாய் மனனே கதிகேள் கரவாது  

இடுவாய் வடிவேல்  இறை தாள் நினைவாய் 

சுடுவாய் நெடு வேதனை தூள் படவே 

விடுவாய் விடுவாய் வினை யாவையுமே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


(pl click the above link to continue reading)




கெடுவாய்  = கெட்டுப் போகும் 


மனனே  = என் மனமே 


கதி = கதி என்றால் வழி. நல்ல வழியை 


கேள்  = சொல்கிறேன், கேட்டுக் கொள் 


கரவாது   = மறைக்காமல் 


இடுவாய் = ஏழை எளியவர்களுக்கு கொடு 


வடிவேல் = வடிவான, அழகான வேலை உடைய 


இறை  = இறைவன், முருகன் 


தாள்  = திருவடிகளை 


நினைவாய்  = மனதில் நினை 


சுடுவாய்  = சுட்டு எரிப்பாய் 


நெடு வேதனை  = நீண்ட வேதனை 


தூள் படவே  = தூள் தூளாகும்படி, சாம்பலாகும்படி 


விடுவாய் விடுவாய் = விட்டு விடுவாய் 


வினை யாவையுமே  = எல்லா வினைகளையும் 


இனி விரிவான பொருள் பற்றி சிந்திப்போம். 


"கரவாது இடுவாய்" - யாரோ ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்கிறான். சில்லறை இல்லை, ஒண்ணும் இல்லை வேற இடம் பாரு என்று அவனை அனுப்பி விடுகிறோம். நம்மிடம் பணம் இல்லாமல் இல்லை. வைத்துக் கொண்டே இல்லை என்கிறோம். கொடுக்கும் மனம் இல்லை. மறைக்காமல் கொடு என்கிறார். 


இதையே ஔவையும் "இயல்வது கரவேல்" என்றாள். எது முடியுமோ அதைச் மறைக்காமல் கொடு/செய். 


பசி என்று ஒருவன் வருகிறான். ஒரு வேளை உணவு அவனுக்குத் தர முடியாதா? பசி எவ்வளவு கொடுமையானது என்று அனுபவித்தால்தான் தெரியும். 


ஏன் கொடுக்கும் மனம் வருவது இல்லை? 


நான் கஷ்டப்பட்டு சம்பாதித்தது, இருக்குறதை எல்லாம் தானம் பண்ணிட்டு நான் என்ன பண்ணுவது என்ற பயம். 


அருணகிரிநாதர் சொல்கிறார், நீ ஒண்ணும் பெரிதாக சேர்த்துவிடவில்லை. இதே நீ, உன் திறமை, அறிவு எல்லாம் இருந்தும், காலம் மாறினால் எல்லாம் மாறும். கம்பெனி மூடப்படலாம், நட்டத்தில் இயங்கலாம், வேலை போகலாம், வேறு நல்ல வேலை கிடைக்காமல் போகலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லாம் என் சாமர்த்தியம் என்று நினைப்பது தவறு. 


ஏதோ, இறை அருளால் எல்லாம் வந்தது. வந்ததில் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம் என்று நினைக்க வேண்டும். 


"வடிவேல்  இறை தாள் நினைவாய்"    - உனக்கு வந்த செல்வம், வாழ்வு எல்லாம் அவன் தந்தது என்று நினை. கொடுப்பது எளிதாகும். கொடுத்தால் இன்னும் அவன் தருவான் என்ற நம்பிக்கை பிறக்கும். 



"சுடுவாய் நெடு வேதனை தூள் படவே"  - எது நெடிய வேதனை? நமக்கு வரும் பெரும்பாலான வேதனைகள் சிறிது காலத்தில் போய் விடும் அல்லது நாம் அதற்கு பழகிக் கொள்வோம். தீராத வேதனை ஒன்று இருக்கிறது. பழகவும் முடியாது. அது இந்த பிறவியில் பிறந்து, இறந்து, ,பிறந்து உழல்வது. அது நீண்ட வேதனை.  அந்த வேதனையில் இருந்து விடுபட வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? அடுத்து சொல்கிறார். 


"விடுவாய் விடுவாய் வினை யாவையுமே " வினை யாவையும் விடுவாய் என்கிறார். தீவினை, நல்வினை என்று இரண்டு இருக்கிறது.  அறம் பாவம் என்று சொல்கிறார்கள். 


தீவினையை விட்டு விடலாம். நல் வினையையும் விட வேண்டுமா?  அப்புறம் ஏன் "கரவாது இடுவாய்" என்று முதல் வரியில் சொன்னார்? அது நல்வினைதானே?


"விடுவாய் விடுவாய் வினை யாவையுமே" என்பதில் விடுவாய் விடுவாய் என்று இரண்டு முறை கூறுகிறார்.  ஏன்?


தீவினைகளை விடுவாய். விட்டு விடு. செய்யாதே. 


நல்வினைகளை செய்யும் போது அதன் மேல் உள்ள பற்றினை, பலனை எதிர்பார்பதை விட்டு விடு. நல்லதைச் செய் ஆனால் அதற்கு உரிய பலனை எதிர்பார்பதை விட்டு விடு. நிஷ் காமிய கர்மம் என்று சொல்லுவார்கள். பலனை எதிர்பார்க்காத கர்மங்கள் நம்மைச் சேர்வது இல்லை. 


அதை எப்படிச் செய்வது ? 


இறைவன் இரு தாள் நினைத்து செய். பலன் அவனுக்குப் போகட்டும். எனக்கு வேண்டாம் என்று அதை விடுவாய். 


மறைக்காமல் கொடு 

அவன் தந்தது என்று நினைத்துக் கொடு 

தீ வினையை விட்டு ஒழி 

நல் வினையில் இருந்து வரும் பலனை எதிர்பார்க்காதே. 


இதுவே நற்கதி. கதி கேள். 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


]