Monday, January 9, 2023

திருவாசகம் - திரு அம்மானை - என்வினையை ஓட்டுகந்து

              

திருவாசகம் - திரு அம்மானை  -   என்வினையை ஓட்டுகந்து




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


நேற்று மதியம் என்ன சாப்பிட்டாய் என்று கேட்டால் ஞாபகம் இருக்கும். அதற்கு முந்தைய தினம்? போன வாரம், போன மாதம், போன வருடம் ? கட்டாயம் ஞாபகம் இருக்காது. 


நாம் உண்டது, ஒரு சில நாட்களில் மறந்து போகிறது.


அது நல்லதுதான். அது முக்கியமான விடயம் இல்லை என்பதால் நம் மூளை அவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது இல்லை. 


நம் போன பிறப்பு என்ன என்று கேட்டால் ஞாபகம் இருக்குமா?  


மணிவாசகர் சொல்கிறார், "யானையாக, புழுவாக, மனிதராய், தேவராய் மற்றும் வேற பிறவிகளாக பிறந்து இறந்து இருப்பவனை, அவன் என் பிறவித் தொடரை நிறுத்தி, என்னையும் தன் குழுவில் சேர்த்துக் கொண்ட அவன் திருவடிகளை போற்றி பாடுவோம்"




பாடல் 


ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய்

ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த்தேனை

ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஓட்டுகந்து

தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய

கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும்

வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_9.html


(pl click the above link to continue reading)


ஆனையாய்க் = உருவத்தில் பெரிய யானையாய் 


கீடமாய் = உருவத்தில் சிறிய புழுவாய் 


மானுடராய்த் = மனிதராய் 


தேவராய் = தேவராய் 


ஏனைப் = மற்ற 


பிறவாய்ப் = பிறவிகளாக 


பிறந்திறந் தெய்த்தேனை = பிறந்து, இறந்து இருப்பவனை 


ஊனையும் = என் ஊனையும் 


நின்றுருக்கி = நின்று உருக்கி 


என்வினையை = என்னுடைய வினைகளை 


ஓட்டுகந்து = உகந்து (உவந்து = விரும்பி) ஓட விட்டு. அதாவது, என் வினைகளை விருப்போடு விலக்கி 


தேனையும் = தேனையும் 


 பாலையுங் = பாலையும் 


கன்னலையும் = கரும்புச் சாரையும் 


ஒத்தினிய = ஒத்து, இனிய 


கோனவன்போல் = அரசன் போல் 


வந்தென்னைத் = வந்து என்னை 


தன் = தன்னுடைய 


தொழும்பிற் = அடியார் கூட்டத்தில் 


கொண்டருளும் = சேர்த்துக் கொண்டு அருளும் 


வானவன் = வானில் உறைபவன் 


பூங்கழலே = பூ போன்ற திருவடிகளை 


பாடுதுங்காண் அம்மானாய்.  = பாடிடுவோம் அம்மானாய் 


"

எழுகடல் மணலை அளவிடி னதிக

     மெனதிடர் பிறவி ...... அவதாரம்"


ஏழு கடலில் உள்ள மணலை கூட எண்ணி விடலாம், அதை விட அதிகம் எனது முற்பிறவிகளின் எண்ணிக்கை என்பார் அருணகிரிநாதர். 


"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்பார் மனிவாசகர்.


பிறவிகள் இருக்கிறதா என்று நமக்குத் தெரியவில்லை. பிறவிகளின் தொடர்பு புரியவில்லை. 


இன்றைய அறிவியல் பரிணாம வளர்ச்சி பற்றி கூறுகிறது. ஒன்றில் இருந்து ஒன்று வந்தது என்று சொல்கிறது. 


குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று சொல்கிறது. 


ஆனால் நம் ஆன்மீகம், மனிதன் குரங்காகவும் ஆகலாம் என்கிறது. நம் அறிவுக்கு அது எட்டவில்லை. 


"ஊனை உருக்கி" என்று பல இடங்களில் மணிவாசகர் சொல்கிறார். 


ஏதோ ஒன்றில் மனம் இலயித்து விட்டால் பசி மறந்து போகும். ஒரு வேலையும் இல்லாமல் சும்மா இருந்தால், எதையாவது சாப்பிடுவோமா என்று தோன்றும். அறிவுப் பசி, ஆன்மத் தேடல் இருந்து விட்டால் பசி தூக்கம் போய் விடும். உடல் தானே இளைக்கும். 


மூன்று வேளையும் மூக்கு பிடிக்க உண்டால் தூக்கம்தான் வரும். 


தேடுவோம். 





முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 


)


Sunday, January 8, 2023

கந்தரனுபூதி - அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

              

 கந்தரனுபூதி - அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ 



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


இறைவனை அடைய பல மார்கங்கள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் என்று பல இருக்கின்றன. எது சிறந்தது, எது எளிதானது, எது யாருக்குச் ஏற்றது என்று அறிந்து கொள்வது சிக்கலாகவே இருக்கிறது. 


ஞான மார்க்கதின் உச்சம் தொட்ட மணிவாசகரும் 


"அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து 

சிந்தை மகிழ சிவா புராணம் தன்னை..."


என்பார். 


அது ஒருபுறம் இருக்கட்டும். 


இந்த உலகில் எவ்வளவோ துன்பங்கள் நிகழ்கின்றன. உயிருக்கு உயிரானவர்கள் அகாலத்தில் பிரிந்து போய் விடுகிறார்கள், நோய், வறுமை, வலி, பாலியல் வன் கொடுமைகள், போர், பெற்றோரை இழப்பது, பசி, உடல் ஊனம், ...இத்தனை துன்பதுக்கும் இறைவன்தானே பொறுப்பு ஏற்க வேண்டும்?  நல்லதுக்கும் மட்டும் அவன் அருள் என்று சொன்னால், துன்பதுக்கு யார் பொறுப்பு ஏற்பது?  துன்பதுக்கு அவன் பொறுப்பு இல்லை என்றால், இன்பதுக்கும் அவன் பொறுப்பு ஏற்க முடியாது அல்லவா? 


இதை எப்படி விளங்கிக் கொள்வது ?


இன்பம், துன்பம், 

பாவம், புண்ணியம்,

வறுமை, செல்வம்,

இரவு, பகல், 

என்ற இருமைகள் எல்லாம் நம் அறிவின் ஆக்கம். இறைவனுக்கு எல்லாம் ஒன்றுதான். 


நம்மிடம் பணம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் அவனுக்கு என்ன?


நம்மிடம் ஓரிரு பட்டங்கள் இருந்தால் என்ன, அல்லது நாம் கை நாட்டாக இருந்தால் அவனுக்கு என்ன? 


இந்தப் பிரிவுகள் எல்லாம் அவனை ஒன்றும் செய்வது இல்லை. 


இன்பமும், துன்பமும் நாம் செய்த வினையால் வருகிறது. அதில் இறைவனின் பங்கு ஒன்றும் இல்லை. 


இந்த இருவினை பிரிவுகள் கடந்த இடத்தில் அவன் இருக்கிறான். 


இறைவனை அறிந்தவர்கள், அவன் இந்த பிரிவுகளை கடந்தவன் என்று சொல்கிறார்கள். 


"தனிச் சிறப்பு கொண்ட வேலை  கையில் கொண்ட முருகன், முனிவன், நமது ஞான குரு, என்று அவன் அருள் அன்றி அவனை அறிய முடியுமா? (முடியாது). அவன் உருவம் உள்ளவன் அல்ல, உருவம் இல்லாமலும் இல்லை, இருப்பவன் அல்ல, இல்லாமல் இருப்பவன் அல்ல, அவன் இருள் அல்ல, ஒளி அல்ல, என்று இருப்பவன்"


பாடல் 


முருகன் தனி வேல் முனிநங் குருவென் 

றருள் கொண்டறியா ரறியும் தரமோ 

வுருவன் றருவன் றுளதன்று இலதன்று 

இருளன்று ஒளியன்று என நின்றதுவே . 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


(pl click the above link to continue reading)


முருகன் = முருகன் 


தனி = தனிச் சிறப்பு வாய்ந்த 


வேல் = வேலாயுதத்தை கொண்ட அவன் 


முனி = முனிவன் 


நங்  = நம், நமது 


குருவென் றருள்  = குரு வென்று அருள் 


கொண்டறியா ரறியும்  = கொண்டு  அறியார், அறியும் 


தரமோ  = தரமோ? முடியுமா? 


வுருவன் றருவன் றுளதன்று இலதன்று  = உருவன்று, அருவன்று, உளதன்று, இலதன்று 


இருளன்று = இருள் அன்று 


ஒளியன்று = ஒளியும் அன்று 


என நின்றதுவே .  = என்று நின்றதுவே 


நாம் இந்த உலகை நமது விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி பிரித்து வைத்துக் கொண்டு துன்பப்படுகிறோம்.


அழகானது (பிடிக்கும்), அழகற்றது (பிடிக்காது), அறிவு, அறிவீனம், செல்வம், ஏழ்மை, வெள்ளை, கறுப்பு, உயரம், குட்டை,பருமன், மெலிந்து இருப்பது, என்று உலகை பிரித்துப் போட்டுவிட்டு, அல்லாடுகிறோம். 


இந்த இருமைகள் மறையும் போது, இறை உணர்வு மேலிடும். 


"ஒன்றாக காண்பதுவே காட்சி"  என்பார் ஔவையார்.


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே

என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே. 


என்பார் வள்ளல் பெருமான். 


சிந்திப்போம். 




 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html





]




Thursday, January 5, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - அறனழீஇ

 

 திருக்குறள் - புறங்கூறாமை -  அறனழீஇ 


(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


அறம் அழிந்து வருகிறது என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன?


பாவம், புண்ணியம் என்பது என்று ஒன்று இல்லை.  பாவம் புண்ணியம் என்பதெல்லாம் நமக்கு நாமே வகுத்துக் கொண்ட வேலிகள். நமக்கு இடையூறு என்றால் நாம் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்று விதாண்டாவாதம் பேசுவது.


வினை, விதி, கர்மா என்பதெல்லாம் பொய். பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பது.


இது போன்ற சிந்தனைகள் பரவலாக பரவி வருகிறது. எங்கோ ஓரிருவர் சொன்னால் பரவாயில்லை. ஒரு தலைமுறையே இப்படி சிந்திக்கத் தொடங்கி விட்டது.


வள்ளுவர் சொல்கிறார், அறத்தில் இருந்து விலகி, அறம் அல்லாதவ்றை செய்தால் கூட பரவாயில்லை, அதை விட கொடுமையானது ஒருவன் இல்லாத போது அவனை பழித்துக் கூறி, பின் அவனை நேரில் பார்க்கும் போது அவனை புகழ்வது என்கிறார். 


அற வழுவலை விட புறம் கூறுதல் பெரிய பாவம்.


பாடல் 


அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறனழீஇப் பொய்த்து நகை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html

(pl click the above link to continue reading)


அறனழீஇ = அறத்தில் இருந்து நழுவி, விலகி, அறம் இல்லை என்று சொல்லி


அல்லவை = அறம் அல்லாதவ்றை 


செய்தலின் தீதே = செய்வதை விட தீமையானது 


புறனழீஇப் = ஒருவனை காணாத போது அவனைப் பற்றி பழித்துப் பேசி 


பொய்த்து நகை = அவனைக் கண்ட போது பொய்யாக நகை செய்வது 


இந்தக் குறளில் பரிமேலழகர் இரண்டு நுண்ணிய விடையங்களை விரித்துச் சொல்கிறார். 


உறழ்ச்சி என்று இலக்கணத்தில் ஒன்று உண்டு. அதற்கு மாறுபாடு, திரிதல், வேறுபடுதல் என்று பொருள்.


இந்தக் குறளில் உறழ்ச்சி இருக்கிறது என்கிறார். 


எங்கே என்று பார்ப்போம்.


நாம் நடை முறையில் உதாரணம், உவமைகளை பயன் படுத்துகிறோம். 


கும்பகர்ணன் போல தூங்குகிறான், எருமை மாதிரி நடு ரோட்டில் நடக்கிறான் என்றெல்லாம் சொல்கிறோம். 


உவமையை இரண்டு இடத்தில் நாம் பயன் படுத்துவோம். 

ஒன்று, தெரிந்த ஒன்றை உதாரணமாகக் கூறி, தெரியாத ஒன்றை விளக்குவது. 


ஒருவன் புலியை பார்த்ததே இல்லை என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு புலி எப்படி இருக்கும் என்று விளக்க வேண்டும். 


"நீ பூனை பார்த்து இருக்கிறாய் அல்லவா? புலி என்பது பூனை மாதிரி இருக்கும். கொஞ்சம் பெரிய பூனையை கற்பனை செய்து கொள்" 


என்று சொல்லி விளங்க வைக்கலாம். 


மற்றொன்று, ஒன்றை உயர்வாக, சிறப்பாகக் கூற பயன்படுத்தலாம். 


அவள் முகம் நிலவு மாதிரி இருக்கிறது என்றால் குளிர்ந்து, ஒளி வீசும் நிலவு போல சிறப்பாக இருக்கிறது என்று அர்த்தம். 


முகம் நிலவு மாதிரி இருக்கிறது என்பது நேரடி உவமை. 


இதை கொஞ்சம் மாற்றி,, முகம் நிலவை விட அழகாக இருக்கிறது என்றும் சொல்லலாம். தவறு இல்லை. அப்படிச் சொல்வது உறழ்ச்சி என்று அழைக்கப்படும். 


இந்தக் குறளில், 


அறம் விலகி, அல்லன செய்வதுதான் மிகப் பெரிய பாவம். ஆனால், வள்ளுவர், அதை விட பாவம் புறம் சொல்லுவது என்கிறார். அதனால் அது உறழ்ச்சி.


இரண்டாவது, மனிதனுக்கு உள்ள சிறப்பை நம் முன்னோர் இரண்டு விதமாக பிரித்தார்கள். 


ஒன்று ஒளி, இன்னொன்று புகழ். 


ஒளி என்பது இந்தப் பிறவியில், ஒரு குறிப்பிட்ட காலத்தில் வரும் சிறப்பு. 


புகழ் என்பது இந்த பிறவி தாண்டியும் நிற்கும் சிறப்பு.


வள்ளுவர், கம்பர் என்பவர்கள் புகழ் பெற்ற புலவர்கள். 


இன்று நடிக்கும் நடிகர்கள், எழுதாளர்களுக்கு இருப்பது ஒளி. அதுவே காலம் கடந்து நின்றால் அது புகழ். 


புறம் சொல்பவன், மற்றவனின் ஒளியை அழிக்க முடியும். புகழை அழிக்க முடியாது. 


உதாரணமாக, ஒரு பெரிய தலைவரின் வாழ்வில் ஏதோ ஒரு களங்கம் இருந்திருக்கலாம். அவர் வாழ்ந்த காலத்தில் அது பெரிதாக பேசப் பட்டு இருக்கல்லாம். நாளடைவில், உலகம் அதை மறந்து விடும். அவர் செய்த தொண்டு, அவர் எழுதிய புத்தகம், அவர் உலகுக்குச் செய்த நன்மை எதுவோ அதுவே பெரிதாகப் பேசப் படும். 


புறம் சொல்பவன், மற்றவனின் ஒளியை குறைக்கலாம். புகழ் அழியாது என்கிறார். 


இலக்கணம் படிக்க படிக்க இலக்கியத்தை ஆழ்ந்து இரசிக்க முடியும். 










(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html




Tuesday, January 3, 2023

திருவாசகம் - திரு அம்மானை - சேர்ந்து அறியாக் கையானை

             

திருவாசகம் - திரு அம்மானை  -    சேர்ந்து அறியாக் கையானை




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


இறைவனால் எல்லாம் முடியும். ஆனால் அவனுக்கும் ஒன்று தெரியாது. அது, இன்னொருவர் முன்னால் கை கூப்புவது. இறைவன் யார் முன்னால் எதற்காக கை கூப்பப் போகிறான். 


மணிவாசகர் சொல்கிறார் "சேர்ந்தறியா கையானை" என்று. 


இறைவன் இருக்கின்றானா இல்லையா என்ற கேள்வி அன்று தொட்டு இன்று வரை நடந்து கொண்டே இருக்கிறது. 


அவன் இருக்கிறான், இல்லாமலும் இருக்கிறான். 


உள்ளதில் அன்பு இருந்தால் அவன் இருப்பது தெரியும். அன்பு இல்லாவிட்டால் இறையை உணர முடியாது. 


அன்பே சிவம். 


அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே


என்பார் திருமூலர். 


அன்புதான் சிவம். 



பாடல் 


கைஆர் வளை சிலம்பக் காதுஆர் குழை ஆட

மைஆர் குழல் புரழத் தேன் பாய வண்டு ஒலிப்பச்

செய்யானை வெண் நீறு அணிந்தானைச் சேர்ந்து அறியாக்

கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு

மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை

ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானை!


பாடல் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post.html


(pl click the above link to continue reading)


கைஆர் வளை சிலம்பக் = கைகளில் அணிந்த வளையல்கள் ஒலிக்க 


 காதுஆர் குழை ஆட = காதில் அணிந்த குழை ஆட 


மைஆர் குழல் புரழத் = மை போல் கறுத்த குழல் அலை பாய 



தேன் பாய = அந்தக் குழலில் சூடிய மலர்களில் இருந்து தேன் பாய்ந்து வர 


வண்டு ஒலிப்பச் = அந்தத் தேனை உருசிக்க வண்டுகள் ரீங்காரம் இட்டு வர 


செய்யானை = சிவந்த மேனி கொண்டவனை 


வெண் நீறு அணிந்தானைச் = திரு வெண்நீறு அணிந்தவனை 



சேர்ந்து அறியாக் கையானை  = இரண்டு கைகளை கூப்பி அறியாதவனை 



எங்கும் செறிந்தானை = எங்கும் நீக்கம் அற நிறைந்து இருப்பவனை 


அன்பர்க்கு மெய்யானை  = உள்ளதில் அன்பு உள்ளவர்களுக்கு உண்மையானவனை 



அல்லாதார்க்கு அல்லாத வேதியனை = உள்ளதில் அன்பு இல்லாதவர்களுக்கு அவனும் இல்லாமல் இருப்பவனை 


ஐயாறு அமர்ந்தானைப் = திருவையாற்றில் இருப்பவனை 


 பாடுதும் காண் அம்மானை! = பாடுவோம் அம்மானாய் 







முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 


)


Friday, December 30, 2022

கந்தரனுபூதி - சும்மா இரு

             

 கந்தரனுபூதி - சும்மா இரு 



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


கந்தரனுபூதியில் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட பாடல் என்று இன்று நாம் காண இருக்கும் பாடலைச் சொல்லலாம். 


அருணகிரிநாதர் அழகில், பெண்கள் பால் நாட்டம் உள்ளவர். பல பெண்களின் தொடர்பு இருந்தது. அதனால் உடலில் நோய் வந்து சேர்ந்தது. அழகு அழிந்தது. 

அழகும் போனதால், பெண்கள் அவரை வெறுக்கத் தொடங்கினார்கள். நோய் செய்யும் வருத்தம் ஒரு புறம். வாழ்க்கை வெறுத்துப் போய், தற்கொலை செய்ய நினைத்து, திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் ஏறி குதித்து விட்டார். 


விழும் போது, முருகன் அவரை கையில் ஏந்திக் கொண்டான்.


"முருகா, என்னை காத்தாய். எனக்கு உபதேசம் தந்தருள்வாய்" என்று வேண்டினார்.


முருகனும் உபதேசம் செய்தான். 


நாம் நினைப்போம், ஒரு நாலைந்து நாள் செய்திருப்பார் என்று. எவ்வளவு இருக்கிறது சொல்ல.


வேதம், இதிகாசம், புராணம், ஆகமம், என்று எவ்வளவு இருக்கிறது.


அதெல்லாம் இல்லை. 


முருகன் இரண்டே இரண்டு வரி உபதேசம் செய்தான். 


"சும்மா இரு"

"சொல் அற"


அவ்வளவுதான். 


மிக எளிதாக இருக்கிறதே என்று நினைப்போம். 


சும்மா இருக்கணும். அவ்வளவு தானே. இது என்ன பெரிய விடயமா என்று நினைப்போம். 


உடம்பு சும்மா இருந்தால் கூட, எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும். என்னணம் என்றால் வார்த்தைகள். நம் சிந்தனை எல்லாம் வார்த்தைகள் தான். 


வார்தைகள் இல்லாமல் சிந்திக்க முடியுமா?


சும்மா இரு. சொல் அற என்றால் சொல்லை அறவே விட்டு விட வேண்டும். மனதில் கூட சொல் ஓடக் கூடாது.


தனக்கு தானேயும் பேசிக் கொள்ள கூடாது. 


நடக்கிற காரியமா?


ஒரு நாள் WA பார்க்காமல் இருக்க முடியுமா? அரட்டை அடிக்காமல் இருக்க முடியுமா? 


பாடல் 


செம்மான் மகளைத் திருடுந் திருடன் 

பெம்மான் முருகன் பிறவான் இறவான் 

சும்மா இரு சொல்லற வென்றலுமே 

அம்மா பொரு ளொன்று மறிந்திலனே


பொருள் 



(pl click the above link to continue reading)



செம்மான் மகளைத் = சிவந்த மானின் வயிற்றில் இருந்து பிறந்த மகளான வள்ளியை 


 திருடுந் திருடன்  = அவளுடைய தாய் தந்தைக்குத் தெரியாமல் திருடிய திருடன் 


பெம்மான் = பெரியவனான 


முருகன் = முருகன் 


பிறவான் இறவான்  = பிறப்பும், இறப்பும் இல்லாதவன். முருக ஜெயந்தி உண்டா? 


சும்மா இரு = சும்மா இரு 


சொல்லற = சொல் அற 


வென்றலுமே  = என்று சொன்னவுடன் 


அம்மா = வியப்பு. இது எப்படி முடியும் என்ற வியப்பு 


பொரு ளொன்று மறிந்திலனே = அதன் பொருள் ஒன்றும் அறியாமல் இருக்கிறேனே 


அம் + மா + பொருள் = அந்தப் பெரிய பொருள் என்று உரை செய்வாரும் உண்டு. 


ஆன்மீக பாதையின் முதல் அடி பேச்சைக் குறைப்பது. எதற்கு எடுத்தாலும் ஒரு தர்க்கம், மறு பேச்சு, எதிர்ப்பு, என்று மனம் சதா காலமும் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தால், அது எங்கே வளவது. 


சத்தத்தை, இரைச்சலை குறைக்க வேண்டும். 


செயல் மாண்டு அடங்க வேண்டும். 


பின்னால் ஒரு பாடலில் "செயல் மாண்டு அடங்க" என்று சொல்ல இருக்கிறார்: 


பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்

தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்

புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்

தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.


மனதை, வாக்கை சலனம் அற்று இருக்க பழக்குங்கள். 



"சித்த விருத நிரோதம்" - சித்ததில் வரும் சலனங்களை நிறுத்துவது தான் யோகாவின் நோக்கம் என்பார் பதஞ்சலி 









 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


]




Friday, December 23, 2022

திருக்குறள் - புறங்கூறாமை - அறன் அல்ல

 திருக்குறள் - புறங்கூறாமை - அறன் அல்ல 


நல்ல புதுத் துணி உடுத்திக் கொண்டால் நமக்கு ஒரு புத்துணர்ச்சி வந்தது போல இருக்கும் அல்லவா? மனதுக்குள் ஒரு சந்தோஷம் வரும் தானே? 


ஒரு அழுக்கான, கிழிந்த, iron செய்யாமல், கசங்கி இருக்கும் ஒரு ஆடையை உடுத்தினால் எப்படி இருக்கும்? 


துணிக்கும், மனதுக்கும் என்ன சம்பந்தம்? 


நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் மறைமுக தொடர்பு இருக்கிறது அல்லவா? 


நம் மனம் இவைகளால் பாதிக்கப் படுகிறது என்று நாம் புரிந்து கொள்கிறோம். மனதை நேரடியாக நம்மால் கட்டுப்படுத்த முடியாது. உடம்பு, உடை, உணவு, மூச்சுப் பழக்கம் இவைகள் மூலம் அதை நாம் நம் வசப்படுத்த முடியும்.


சரி, அதற்கும் இந்த அதிகாரத்துக்கும் என்ன சம்பந்தம்?


நாம் நம் மன, வாக்கு, செயல்களை குற்றம் அற்றவையாக செய்ய வேண்டும். 


செயலை நாம் கட்டுப் படுத்த முடியும். 


வாக்கை நாம் கட்டுப் படுத்த முடியும்.


மனதை? 


வாக்கையும், செயலையும் சுத்தம் செய்தால் மனம் சுத்தமாகும். 


இதற்கு முந்தைய அதிகாரங்களில் மனச் சுத்தம் பற்றி கூறினார் (பிறனில் விழையாமை, வெக்காமை).


இனி வாக்கு சுத்தம் பற்றி கூற இருக்கிறார். 


இனிய சொற்களை கூறிப் பழகினால் மனமும் இனிமையாக மாறும். 


பிள்ளைகளை கூட "இராசா, தங்கம், செல்லம்,..." என்று சொல்லும் போது நம் மனமும் மென்மையாகிறது அல்லவா.


மாறாக "எருமை, சனியனே " என்று கடிந்து கூறினால் நம் மனமும், முகமும் விகாரப் படுகிறது அல்லவா. 


வாக்கில் உள்ள குற்றங்களை நீக்கினால் மனமும், செயலும் குற்றம் அற்றதாகி விடும். எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை. 


வாக்கு என்பது மிகப் பெரிய விடயம். அது பற்றி நிறைய சிந்திக்க இருக்கிறோம். 


பேச்சில் என்ன பெரிய குற்றம் வந்து விடும்? அதை எப்படி நீக்குவது, அதனால் வரும் நன்மை தீமைகள் என்ன என்று சிந்திப்போம். 


சொல்லில் வரும் முதல் குற்றமாக வள்ளுவர் புறம் கூறுதலைப் பற்றி கூறுகிறார். 


வள்ளுவர் எது முக்கியயமானதோ அதை முதலில் கூறுவார். 


"அறம் என்ற வார்தையைக் கூட ஒருவன் சொல்லாமல், அறம் அல்லாதவற்றை செய்து கொண்டிருந்தாலும், அவன் புறம் கூறாமல் இருப்பானாயின் அது நல்லது" என்கிறார். 



பாடல் 



அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறம்கூறான் என்றல் இனிது


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html


(pl click the above link to continue reading)



அறம்கூறான் = அறம் என்ற வார்தையை கூட வாயால் சொல்ல மாட்டான் 


அல்ல செயினும் = அறம் அல்லாதவற்றை ஒருவன் செய்தாலும் 


ஒருவன் = ஒருவன் 


புறம்கூறான் = புறம் கூறமாட்டான் 


என்றல் இனிது = என்ற பெயர் எடுப்பானாயின் அது மிக நல்லது 


அது எப்படி அறம் அல்லாதவற்றை செய்வது மிக இனிது என்று கூறலாம்?  அப்படி என்றால் வள்ளுவர் அதை எல்லாம் செய்யலாம் என்று கூறுகிறாரா?


இல்லை....


ஒருவனிடம் பல தீய குணங்கள் இருக்கலாம். 


மது அருந்தலாம், புகை பிடிக்கலாம், வேலை செய்யாமல் சோம்பித் திரியலாம், பெண்கள் பின்னால் சுற்றலாம் ...இப்படி பலஅறம் அல்லாத குணங்கள் இருந்தாலும் "ஒருத்தரைப் பற்றி தப்பா அவங்க இல்லாதப்ப பேச மாட்டான்" என்ற ஒரு நல்ல குணம் இருந்தால் உலகம் அவனது ஏனைய தீய குணங்களை பெரிது படுத்தாது. 


மாறாக, எல்லா நல்ல குணங்களும் இருந்தாலும், "அவன் பயங்கரமான ஆளு சார். எல்லாரையும் பத்தி இல்லாததும் பொல்லாததும் பேசுவான். அவனோடு ரொம்ப தொடர்பு வச்சுக்காதீங்க " என்ற அவனைப் பற்றி மற்றவர்கள் எச்சரிப்பார்கள். அவனுக்கு நெருங்கிய சுற்றமும் நட்பும் இருக்காது. 



ஏனைய அறம் அல்லாத குணங்கள் இருந்தாலும், புறம் கூறமாட்டான் என்ற ஒரு நல்ல குணம் மற்ற தீய குணங்களை மறைந்து விடும் அல்லது மழுங்கச் செய்து விடும்.


இது புறம் கூறாமல் இருப்பதின் நன்மை. 

Thursday, December 22, 2022

திருவாசகம் - திரு அம்மானை - எப்பொருட்கும் தானே ஆய்

             

திருவாசகம் - திரு அம்மானை  -   எப்பொருட்கும் தானே ஆய்



ஆட் கொள்ளுதல், ஆட் கொள்ளுதல் என்று சொல்லுகிறார்களே, ஆட் கொள்ளுதல் என்றால் என்ன?



நாம் பல பிறவிகளில் செய்த வினைகளின் தொகுப்பில் இருந்து ஒரு சிறு பகுதியை அனுபவிக்க இந்தப் பிறவி எடுத்து இருக்கிறோம். அந்த வினைகளை கழிக்கும் போது மேலும் வினை செய்து பழைய வினைகளோடு புதியதும் சேர்ந்து கொண்டால், என்று அதை தீர்ப்பது?


நல்லது செய்தால் புண்ணியம் வரும்.

தீயது செய்தால் பாவம் வரும். 


அந்த பாவ புண்ணியங்களை அனுபவிகக் இன்னொரு பிறவி வேண்டுமே. இது என்று முடியும்?


அவ்வாறு நாம் செய்த வினைகளையும், இப்போது செய்யும் வினைகளின் தொகுதி அனைத்தையும் நீக்கி நமக்கு மேலும் பிறவி வராமல் செய்வதைத் தான் ஆட் கொள்ளுதல் என்கிறார்கள். 


இறைவன் ஒருவனால் தான் அது முடியும். 


இறைவனடி சேர்ந்தால் தான் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரை சேர முடியும் என்பது நம் மத நம்பிக்கை. 


"நாம் இறைவனை தேடி அடைவதை விட, இறைவன் நம்மை அடைவது எளிது அல்லவா? தேவர்களும் காண முடியாத அவன், நம் மேல் அருள் கொண்டு இங்கு வந்து நம்மை ஆட் கொண்டு, இனி பிறவி வரமால் காக்கின்றான். அவன் மெய்யான பொருள்களின் தோற்றம் ஆகி, அந்த மெய் பொருள்களில் நிலைத்து நின்று, அவனே அந்த மெய் பொருளாகி, அனைத்து உயிர்களுக்கும் வீடு பேறு சிவனை நாம் பாடுவோம். "


பாடல் 

 


மைப்பொலியும் கண்ணி! கேள்; மால், அயனோடு, இந்திரனும்,
எப் பிறவியும் தேட, என்னையும் தன் இன் அருளால்
இப் பிறவி ஆட்கொண்டு, இனிப் பிறவாமே காத்து
மெய்ப்பொருள்கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய்
எப்பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும்
அப்பொருள் ஆம் நம் சிவனைப் பாடுதும் காண் அம்மானாய்!



பொருள் 





(pl click the above link to continue reading)




மைப்பொலியும் கண்ணி!  = கண் மையினால் அழகு கொண்ட கண்களை உடைய பெண்ணே 


கேள் = கேள் 

மால், அயனோடு, இந்திரனும், = திருமால், பிரமன், இந்திரன் ஆகியோரும் 


எப் பிறவியும் தேட = பல பிறவி எடுத்து தேடியும் காண முடியாதவன் 


என்னையும் = என்னையும் 

தன் இன் அருளால் = தன்னுடைய அருளால் 


இப் பிறவி ஆட்கொண்டு = இப்பிறவியில் ஆட் கொண்டு 


இனிப் பிறவாமே காத்து = இனி பிறவாமல் காத்து 



மெய்ப்பொருள்கண் தோற்றம் ஆய் = மெய்யான பொருள்களின் தோற்றம் ஆகி 




மெய்யே நிலைபேறு ஆய் = மெய்யான பொருள்களின் இருப்பிடமாகி 



எப்பொருட்கும் தானே ஆய்  = அனைத்துப் பொருள்களும் தானே ஆகி 



யாவைக்கும் வீடு ஆகும் = அனைத்துக்கும் வீடு பேறாக நின்று 



அப்பொருள் ஆம்  = அந்த பொருளாக நின்ற 



நம் சிவனைப் = நம் சிவனை 



பாடுதும் காண் அம்மானாய்! = பாடுவோம் அம்மானாய் 






(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 


)