Saturday, January 14, 2023

கந்தரனுபூதி - முருகன் கழல் பெற்று உய்வாய்

               

 கந்தரனுபூதி -  முருகன் கழல் பெற்று உய்வாய்



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


மனம் அலைபாயும் தன்மை உடையது. ஒரு இடத்தில் இருக்காது. குரங்கு போல் தாவிக் கொண்டே இருக்கும். மனதை ஒரு முகப் படுத்தாவிட்டால் எதையும் செய்ய முடியாது.  ஒன்றைச் செய்யும் போதே வேறு சிந்தனை வந்தால் எதைச் செய்வது? 


சாப்பிடும்போது அலுவலகச் சிந்தனை, அலுவலகத்தில் இருக்கும் போது வீட்டு நினைப்பு, பிள்ளைகளை, மனைவியை கொஞ்சும்போது கூட மனம் வேறு எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. எதிலும் ஒரு முழு அனுபவம் கிடைப்பது இல்லை. 


வாழ்வில் ஏதோ ஒரு அதிருப்தி இருந்து கொண்டே இருக்கிறது. ஏதோ பறி கொடுத்த மாதிரி, ஒரு வெறுமை வருகிறது. காரணம், எதிலும் முழு மனத்தோடு ஈடு படுவது கிடையாது. 


புலன்கள் மனதை இழுத்துக் கொண்டு ஓடுகின்றன. வண்டியில் பூட்டிய குதிரைகள் ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு ஓடுகின்றன. வண்டி எந்த ஊர் போய்ச் சேரும்?


அப்படியெல்லாம் இல்லை. என் புலன்கள் என் வசம் இருக்கின்றன. அப்படி என்ன பெரிய தவறு செய்து விட்டேன் என்று நீங்கள் கேட்கலாம். 


எங்கே , முயன்று பாருங்கள், இன்று ஒரு நாள் Whatsapp பார்க்காமல் இருப்பேன் என்று. ஒரு நாள் என்ன ஒரு நாள். ஒரு மணி நேரம் இருக்க முடியாது. காரணம், மனம் இழுத்துக் கொண்டு ஓடுகிறது. என்னமோ வந்திருக்கும், யார் என்ன சொல்கிறார்கள் என்று பார் என்று நம்மை பிடித்து இழுத்துக் கொண்டு போகிறது. 


ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் WA, யூ டியூப், instagram, serial, என்று  மனதை அலைய விடுகிறோம். அந்த நேரத்தை எல்லாம் உருப்படியாக செலவழித்து இருந்தால் என்னென்ன சாதித்து இருக்கலாம்? 


மனம் ஏன் அலை பாய்கிறது? அதை எப்படி கட்டுப் படுத்துவது  என்று இங்கே அருணகிரிநாதர் சொல்கிறார். 


பாடல் 


கைவாய் கதிர்வேல்  முருகன் கழல் பெற்று 

உய்வாய் மனமே ஒழிவாய் ஒழிவாய் 

மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம் 

ஐவாய் வழி செல்லும் அவாவினையே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


(pl click the above link to continue reading)




கைவாய் = திருக்கையில் 


கதிர்வேல் = ஒளிக் கதிர் வீசும் வேலை 


முருகன் = கொண்ட முருகனின் 


கழல் பெற்று  = திருவடிகளை பெற்று 



உய்வாய் = கடைந்தேறுவாய் 


மனமே = என் மனமே 


ஒழிவாய் ஒழிவாய் = விடுவாய், விடுவாய் 


மெய் = உடல் 


வாய் = வாய், நாக்கு 


விழி = கண் 


நாசியொடுஞ் = மூக்கோடு 


செவியாம்  = செவி என்ற 


ஐவாய் = ஐந்து வாசல்  


வழி செல்லும் = வழியாகச் செல்லும் 


அவாவினையே = ஆசைகளை 


உய்வாய், உய்வாய் என்று இரண்டு தரம் ஏன் கூறினார்?


மெய், வாய், விழி, நாசி, கண் என்று ஐந்து புலன்கள் வழியாக நமக்கு ஆசைகள் தோன்றுகின்றன. 


சரி. அது நல்லது தானே. வாழ்க்கை அனுபவிக்கத் தானே. புலன்கள் வழி செல்லும் ஆசை தவறு என்றால் குருடாகவோ, செவிடாகவோ இருப்பது நல்லதா? எதை வாயில் போட்டாலும் ருசியே தெரியல என்றால் அது நல்லதா?


புலன்களின் வேலையே நமக்கு அனுபவத்தைத் தருவது தானே? அதை எப்படி நிறுத்துவது?


புலன்கள் அல்ல பிரச்சனை. புலன்கள், வெளி உலகில் இருந்து வரும் செய்திகளை உள்ளே அனுப்புகின்றன. 


கண் அல்ல அனுபவிப்பது. மனம் தான் அனுபவிக்கிறது. கண் சரியாகத் தெரியவில்லை என்றால் கண்ணாடி போட்டுக் கொள்கிறோம். கண்ணாடியா பார்க்கிறது? நம் கண்ணும் அந்தக் கண்ணாடி போலத்தான். அதற்கு என்று ஒரு அனுபவம் கிடையாது. 


அனுபவம் நிகழ்வது மனதில். ஆசை பிறப்பது மனதில். 


ஆனால், மனம் தானே உலகை அறிய முடியாது. புலன்கள் அந்த செய்திகளை அனுப்பினால் தான், மனம் அனுபவிவ்கும், நல்லது, கெட்டது என்று அறியும், மேலும் வேண்டும், அல்லது இது வேண்டாம் என்று தள்ளும்.


எனவே, மனமும், புலன்களும் ஒன்று சேர்ந்தால்தான் அனுபவம் நிகழ முடியும். 


எனவே இரண்டையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.


எனவே ஒழிவாய், ஒழிவாய் என்றார். 


முதலில் புலன்கள் செல்வதை தடுக்க வேண்டும். பின் மனம் செல்வதை தடுக்க வேண்டும். 


சரி, எப்படி தடுப்பது? 




 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html





]




Thursday, January 12, 2023

ஆதிபுராணத் திருக்குறுந்தொகை - சிவன்பெருந் தன்மையே

ஆதிபுராணத் திருக்குறுந்தொகை  - சிவன்பெருந் தன்மையே


நீங்கள் ஏதோ ஒரு வெளிநாடு சென்று அங்கு உள்ள ஒரு நல்ல இனிப்புப் பண்டத்தை சுவைத்து மகிழ்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதுவரை கண்டும், கேட்டும் இராத ஒரு சுவை. மிக அருமையாக இருக்கிறது. 


திரும்பி ஊருக்கு வருகிறீர்கள். உங்கள் நண்பரிடம் அந்த பண்டம் பற்றி கூறுகிறீர்கள். அவர் "அது என்ன நம்ம ஊர் இலட்டு போல இருக்குமா" என்கிறார். நீங்கள், "இல்ல இல்ல ..இலட்டு மாதிரி இருக்காது...அது வேற மாதிரி சுவை" என்கிறீர்கள். அவரோ "இலட்டு மாதிரி இல்லை என்றால் பாதுஷா மாதிரி இருக்குமா?" என்று கேட்கிறார். 


அவருக்கு எப்படிச்  சொல்லி விளங்கச் செய்வது? 


அது போலத் தான் ஆன்மீக அனுபவங்களும். 


ஆன்மீக அனுபவம் பெற்ற ஒருவர், முன் பின் தெரியாத ஒருவருக்கு எப்படி அதை விளங்கச் செய்வது?


ஒரு ஊரில் ஒரு நரி இருந்ததாம். அது அந்த ஊரை விட்டு வெளியே போனதே இல்லை. அந்த ஊருக்கு வெளியூரில் இருந்து ஒரு நரி வந்தது. அந்த புது நரி கடற்கரை ஓரம் உள்ள ஒரு இடத்தில் இருந்து வந்தது. புதிய நரி, உள்ளூர் நரியிடம் கடலைப் பற்றி கூறியது. "கடல் ரொம்ப பெரிசா இருக்கும். ரொம்ப ஆழமா இருக்கும். எந்நேரமும் அலை அடித்துக் கொண்டே இருக்கும் " என்றெல்லாம் சொன்னது. 


உள்ளூர் நரி "சரி சரி நிறுத்து உன் கடல் புராணத்தை...இங்க பார்...இந்த கிணற்றைப் பார்" என்று சொல்லிவிட்டு, தன் வாலை கொஞ்சம் அதில் விட்டது. "இவ்வளவு ஆழம் இருக்குமா உன் கடல்" என்று கேட்டது. 


அதற்கு அந்த வெளியூர் நரி சிரித்துக் கொண்டே சொன்னது "இல்லப்பா...அதை விட ரொம்ப ஆழம்" என்றது. 


உள்ளூர் நரி, இன்னும் கொஞ்சம் வாலை உள்ளே விட்டது. "இவ்வளவு ஆழம்?" என்று கேட்டது. 


உள்ளூர் நரிக்கு தெரிந்தது எல்லாம் கிணறும், தன் வாலின் அளவும் தான். 


அது போல இன்னொரு கதை. கடல் அமையும், கிணற்று அமையும். கிணற்று ஆமை, கிணற்றுக்குள் கொஞ்சம் தூரம் நீந்தி காட்டி "கடல் இவ்வளவு பெரிசா இருக்குமா" என்று கேட்டதாம். 


அறியாத ஒன்றை நேரடியாக அனுபவம் இருந்தால் தான் அறிய முடியும். யார் எவ்வளவு சொன்னாலும் புரியாது. 


எவ்வாளவு புத்தகங்கள் படித்தாலும், எத்தனை உபன்யாசம் கேட்டாலும், எத்தனை ப்ளாக் படித்தாலும் தன் அனுபவம் இல்லாமல் நரி வாலால் கடல் அழ்ந்த கதையாகத்தான் முடியும். 


பாடல் 



கூவ லாமை குரைகட லாமையைக்

கூவ லோடொக்கு மோகட லென்றல்போல்

பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்

தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_12.html


(pl click the above link to continue reading)


கூவ லாமை  = கூவல் + ஆமை = கிணற்று ஆமை 


குரைகட லாமையைக் = குரை கடல் ஆமையை = கடல் ஆமையை 


கூவ லோடொக்கு மோ  = கூவலோடு ஒக்குமோ = கிணறு போல பெரிசா இருக்குமா 


கட லென்றல்போல் = கடல் என்று கேட்டது போல 


பாவ காரிகள் = பாவம் செய்தவர்கள், அறியாதவர்கள் 


பார்ப்பரி தென்பரால் = பார்ப்பது அரிது என்பரால். சிவனை காண்பது அரிது என்பார்கள் 


தேவ தேவன் = தேவர்களுக்கு தேவன் ஆன 


சிவன்பெருந் தன்மையே.= சிவனின் பெருந்தன்மையை 


அதாவது, சிவன் , தன் பெருந்தன்மையால் எளியவர்களுக்கும் அருள் புரிவான். அதை அறியாத பாவிகள், சிவன் அருளை பெறுவது கடினம் என்று சொல்லித் திரிகிறார்கள். அவர்கள் கிணற்று ஆமை போன்றவர்கள் என்கிறது இந்த சிறு குறுந்தாண்டகம். 





Wednesday, January 11, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - அறம்கூறும் ஆக்கம்

  

 திருக்குறள் - புறங்கூறாமை -  அறம்கூறும் ஆக்கம்


(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


புறம் கூறி வாழ்வதை விட சாவது நல்லது என்கிறார் வள்ளுவர். 


புறம் கூறுவது அவ்வளவு மோசமானது என்பது ஒரு புறம் இருக்கட்டும், அது எப்படி சாவதை விட சிறந்ததாக முடியும்? இறந்த பின் ஒன்றும் இல்லையே. அதை விட சிறப்பு என்றால் அது எப்படி முடியும்?



பாடல்  



புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறம்கூறும் ஆக்கம் தரும்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html


(pl click the above link to continue reading)



புறம்கூறிப் பொய்த்து  = ஒருவன் இல்லாத போது அவனை பழித்துக் கூறி நேரில் கண்ட போது புகழ்ந்து, அப்படி ஒரு பொய்யாக  


உ யிர் வாழ்தலின் = உயிர் வாழ்வதை விட 


சாதல் = இறப்பது 


அறம்கூறும் ஆக்கம் தரும் = அற நூல்கள் சொன்ன ஆக்கத்தைத் தரும் 


இறப்பது எப்படி ஆக்கம் தரும் என்ற கேள்விக்கு பரிமேலழகர் உரை செய்கிறார். 


ஒருவன் புறம் சொல்லி உயிர் வாழ்ந்து கொண்டிருந்தால், அவன் மேலும் மேலும் பாவத்தைச் செய்து கொண்டே இருப்பான். அந்தப் பாவங்கள் அவனுடைய பின் பிறவிகளில் அவனை வாட்டும்.


மாறாக,


அவன் இறந்து போனால், மேற் கொண்டு பாவம் செய்ய முடியாது. அவன் பாவச் சுமை குறையும். இனி வரும் பிறவிகள் நல்ல பிறவிகளாக அமையும். 


எனவே தான், புறம் சொல்லி பொய்த்து உயிர் வாழ்வதை விட சாவது அறம் கூறும் ஆக்கம் தரும் என்றார். 


எப்படி எழுதி இருக்கிறார்கள். எப்படி படித்து இருக்கிறார்கள். 





(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html



Monday, January 9, 2023

திருவாசகம் - திரு அம்மானை - என்வினையை ஓட்டுகந்து

              

திருவாசகம் - திரு அம்மானை  -   என்வினையை ஓட்டுகந்து




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


நேற்று மதியம் என்ன சாப்பிட்டாய் என்று கேட்டால் ஞாபகம் இருக்கும். அதற்கு முந்தைய தினம்? போன வாரம், போன மாதம், போன வருடம் ? கட்டாயம் ஞாபகம் இருக்காது. 


நாம் உண்டது, ஒரு சில நாட்களில் மறந்து போகிறது.


அது நல்லதுதான். அது முக்கியமான விடயம் இல்லை என்பதால் நம் மூளை அவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது இல்லை. 


நம் போன பிறப்பு என்ன என்று கேட்டால் ஞாபகம் இருக்குமா?  


மணிவாசகர் சொல்கிறார், "யானையாக, புழுவாக, மனிதராய், தேவராய் மற்றும் வேற பிறவிகளாக பிறந்து இறந்து இருப்பவனை, அவன் என் பிறவித் தொடரை நிறுத்தி, என்னையும் தன் குழுவில் சேர்த்துக் கொண்ட அவன் திருவடிகளை போற்றி பாடுவோம்"




பாடல் 


ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய்

ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த்தேனை

ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஓட்டுகந்து

தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய

கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும்

வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_9.html


(pl click the above link to continue reading)


ஆனையாய்க் = உருவத்தில் பெரிய யானையாய் 


கீடமாய் = உருவத்தில் சிறிய புழுவாய் 


மானுடராய்த் = மனிதராய் 


தேவராய் = தேவராய் 


ஏனைப் = மற்ற 


பிறவாய்ப் = பிறவிகளாக 


பிறந்திறந் தெய்த்தேனை = பிறந்து, இறந்து இருப்பவனை 


ஊனையும் = என் ஊனையும் 


நின்றுருக்கி = நின்று உருக்கி 


என்வினையை = என்னுடைய வினைகளை 


ஓட்டுகந்து = உகந்து (உவந்து = விரும்பி) ஓட விட்டு. அதாவது, என் வினைகளை விருப்போடு விலக்கி 


தேனையும் = தேனையும் 


 பாலையுங் = பாலையும் 


கன்னலையும் = கரும்புச் சாரையும் 


ஒத்தினிய = ஒத்து, இனிய 


கோனவன்போல் = அரசன் போல் 


வந்தென்னைத் = வந்து என்னை 


தன் = தன்னுடைய 


தொழும்பிற் = அடியார் கூட்டத்தில் 


கொண்டருளும் = சேர்த்துக் கொண்டு அருளும் 


வானவன் = வானில் உறைபவன் 


பூங்கழலே = பூ போன்ற திருவடிகளை 


பாடுதுங்காண் அம்மானாய்.  = பாடிடுவோம் அம்மானாய் 


"

எழுகடல் மணலை அளவிடி னதிக

     மெனதிடர் பிறவி ...... அவதாரம்"


ஏழு கடலில் உள்ள மணலை கூட எண்ணி விடலாம், அதை விட அதிகம் எனது முற்பிறவிகளின் எண்ணிக்கை என்பார் அருணகிரிநாதர். 


"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்பார் மனிவாசகர்.


பிறவிகள் இருக்கிறதா என்று நமக்குத் தெரியவில்லை. பிறவிகளின் தொடர்பு புரியவில்லை. 


இன்றைய அறிவியல் பரிணாம வளர்ச்சி பற்றி கூறுகிறது. ஒன்றில் இருந்து ஒன்று வந்தது என்று சொல்கிறது. 


குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று சொல்கிறது. 


ஆனால் நம் ஆன்மீகம், மனிதன் குரங்காகவும் ஆகலாம் என்கிறது. நம் அறிவுக்கு அது எட்டவில்லை. 


"ஊனை உருக்கி" என்று பல இடங்களில் மணிவாசகர் சொல்கிறார். 


ஏதோ ஒன்றில் மனம் இலயித்து விட்டால் பசி மறந்து போகும். ஒரு வேலையும் இல்லாமல் சும்மா இருந்தால், எதையாவது சாப்பிடுவோமா என்று தோன்றும். அறிவுப் பசி, ஆன்மத் தேடல் இருந்து விட்டால் பசி தூக்கம் போய் விடும். உடல் தானே இளைக்கும். 


மூன்று வேளையும் மூக்கு பிடிக்க உண்டால் தூக்கம்தான் வரும். 


தேடுவோம். 





முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 


)


Sunday, January 8, 2023

கந்தரனுபூதி - அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

              

 கந்தரனுபூதி - அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ 



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


இறைவனை அடைய பல மார்கங்கள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் என்று பல இருக்கின்றன. எது சிறந்தது, எது எளிதானது, எது யாருக்குச் ஏற்றது என்று அறிந்து கொள்வது சிக்கலாகவே இருக்கிறது. 


ஞான மார்க்கதின் உச்சம் தொட்ட மணிவாசகரும் 


"அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து 

சிந்தை மகிழ சிவா புராணம் தன்னை..."


என்பார். 


அது ஒருபுறம் இருக்கட்டும். 


இந்த உலகில் எவ்வளவோ துன்பங்கள் நிகழ்கின்றன. உயிருக்கு உயிரானவர்கள் அகாலத்தில் பிரிந்து போய் விடுகிறார்கள், நோய், வறுமை, வலி, பாலியல் வன் கொடுமைகள், போர், பெற்றோரை இழப்பது, பசி, உடல் ஊனம், ...இத்தனை துன்பதுக்கும் இறைவன்தானே பொறுப்பு ஏற்க வேண்டும்?  நல்லதுக்கும் மட்டும் அவன் அருள் என்று சொன்னால், துன்பதுக்கு யார் பொறுப்பு ஏற்பது?  துன்பதுக்கு அவன் பொறுப்பு இல்லை என்றால், இன்பதுக்கும் அவன் பொறுப்பு ஏற்க முடியாது அல்லவா? 


இதை எப்படி விளங்கிக் கொள்வது ?


இன்பம், துன்பம், 

பாவம், புண்ணியம்,

வறுமை, செல்வம்,

இரவு, பகல், 

என்ற இருமைகள் எல்லாம் நம் அறிவின் ஆக்கம். இறைவனுக்கு எல்லாம் ஒன்றுதான். 


நம்மிடம் பணம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் அவனுக்கு என்ன?


நம்மிடம் ஓரிரு பட்டங்கள் இருந்தால் என்ன, அல்லது நாம் கை நாட்டாக இருந்தால் அவனுக்கு என்ன? 


இந்தப் பிரிவுகள் எல்லாம் அவனை ஒன்றும் செய்வது இல்லை. 


இன்பமும், துன்பமும் நாம் செய்த வினையால் வருகிறது. அதில் இறைவனின் பங்கு ஒன்றும் இல்லை. 


இந்த இருவினை பிரிவுகள் கடந்த இடத்தில் அவன் இருக்கிறான். 


இறைவனை அறிந்தவர்கள், அவன் இந்த பிரிவுகளை கடந்தவன் என்று சொல்கிறார்கள். 


"தனிச் சிறப்பு கொண்ட வேலை  கையில் கொண்ட முருகன், முனிவன், நமது ஞான குரு, என்று அவன் அருள் அன்றி அவனை அறிய முடியுமா? (முடியாது). அவன் உருவம் உள்ளவன் அல்ல, உருவம் இல்லாமலும் இல்லை, இருப்பவன் அல்ல, இல்லாமல் இருப்பவன் அல்ல, அவன் இருள் அல்ல, ஒளி அல்ல, என்று இருப்பவன்"


பாடல் 


முருகன் தனி வேல் முனிநங் குருவென் 

றருள் கொண்டறியா ரறியும் தரமோ 

வுருவன் றருவன் றுளதன்று இலதன்று 

இருளன்று ஒளியன்று என நின்றதுவே . 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


(pl click the above link to continue reading)


முருகன் = முருகன் 


தனி = தனிச் சிறப்பு வாய்ந்த 


வேல் = வேலாயுதத்தை கொண்ட அவன் 


முனி = முனிவன் 


நங்  = நம், நமது 


குருவென் றருள்  = குரு வென்று அருள் 


கொண்டறியா ரறியும்  = கொண்டு  அறியார், அறியும் 


தரமோ  = தரமோ? முடியுமா? 


வுருவன் றருவன் றுளதன்று இலதன்று  = உருவன்று, அருவன்று, உளதன்று, இலதன்று 


இருளன்று = இருள் அன்று 


ஒளியன்று = ஒளியும் அன்று 


என நின்றதுவே .  = என்று நின்றதுவே 


நாம் இந்த உலகை நமது விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி பிரித்து வைத்துக் கொண்டு துன்பப்படுகிறோம்.


அழகானது (பிடிக்கும்), அழகற்றது (பிடிக்காது), அறிவு, அறிவீனம், செல்வம், ஏழ்மை, வெள்ளை, கறுப்பு, உயரம், குட்டை,பருமன், மெலிந்து இருப்பது, என்று உலகை பிரித்துப் போட்டுவிட்டு, அல்லாடுகிறோம். 


இந்த இருமைகள் மறையும் போது, இறை உணர்வு மேலிடும். 


"ஒன்றாக காண்பதுவே காட்சி"  என்பார் ஔவையார்.


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே

என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே. 


என்பார் வள்ளல் பெருமான். 


சிந்திப்போம். 




 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html





]




Thursday, January 5, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - அறனழீஇ

 

 திருக்குறள் - புறங்கூறாமை -  அறனழீஇ 


(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


அறம் அழிந்து வருகிறது என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன?


பாவம், புண்ணியம் என்பது என்று ஒன்று இல்லை.  பாவம் புண்ணியம் என்பதெல்லாம் நமக்கு நாமே வகுத்துக் கொண்ட வேலிகள். நமக்கு இடையூறு என்றால் நாம் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்று விதாண்டாவாதம் பேசுவது.


வினை, விதி, கர்மா என்பதெல்லாம் பொய். பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பது.


இது போன்ற சிந்தனைகள் பரவலாக பரவி வருகிறது. எங்கோ ஓரிருவர் சொன்னால் பரவாயில்லை. ஒரு தலைமுறையே இப்படி சிந்திக்கத் தொடங்கி விட்டது.


வள்ளுவர் சொல்கிறார், அறத்தில் இருந்து விலகி, அறம் அல்லாதவ்றை செய்தால் கூட பரவாயில்லை, அதை விட கொடுமையானது ஒருவன் இல்லாத போது அவனை பழித்துக் கூறி, பின் அவனை நேரில் பார்க்கும் போது அவனை புகழ்வது என்கிறார். 


அற வழுவலை விட புறம் கூறுதல் பெரிய பாவம்.


பாடல் 


அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறனழீஇப் பொய்த்து நகை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html

(pl click the above link to continue reading)


அறனழீஇ = அறத்தில் இருந்து நழுவி, விலகி, அறம் இல்லை என்று சொல்லி


அல்லவை = அறம் அல்லாதவ்றை 


செய்தலின் தீதே = செய்வதை விட தீமையானது 


புறனழீஇப் = ஒருவனை காணாத போது அவனைப் பற்றி பழித்துப் பேசி 


பொய்த்து நகை = அவனைக் கண்ட போது பொய்யாக நகை செய்வது 


இந்தக் குறளில் பரிமேலழகர் இரண்டு நுண்ணிய விடையங்களை விரித்துச் சொல்கிறார். 


உறழ்ச்சி என்று இலக்கணத்தில் ஒன்று உண்டு. அதற்கு மாறுபாடு, திரிதல், வேறுபடுதல் என்று பொருள்.


இந்தக் குறளில் உறழ்ச்சி இருக்கிறது என்கிறார். 


எங்கே என்று பார்ப்போம்.


நாம் நடை முறையில் உதாரணம், உவமைகளை பயன் படுத்துகிறோம். 


கும்பகர்ணன் போல தூங்குகிறான், எருமை மாதிரி நடு ரோட்டில் நடக்கிறான் என்றெல்லாம் சொல்கிறோம். 


உவமையை இரண்டு இடத்தில் நாம் பயன் படுத்துவோம். 

ஒன்று, தெரிந்த ஒன்றை உதாரணமாகக் கூறி, தெரியாத ஒன்றை விளக்குவது. 


ஒருவன் புலியை பார்த்ததே இல்லை என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு புலி எப்படி இருக்கும் என்று விளக்க வேண்டும். 


"நீ பூனை பார்த்து இருக்கிறாய் அல்லவா? புலி என்பது பூனை மாதிரி இருக்கும். கொஞ்சம் பெரிய பூனையை கற்பனை செய்து கொள்" 


என்று சொல்லி விளங்க வைக்கலாம். 


மற்றொன்று, ஒன்றை உயர்வாக, சிறப்பாகக் கூற பயன்படுத்தலாம். 


அவள் முகம் நிலவு மாதிரி இருக்கிறது என்றால் குளிர்ந்து, ஒளி வீசும் நிலவு போல சிறப்பாக இருக்கிறது என்று அர்த்தம். 


முகம் நிலவு மாதிரி இருக்கிறது என்பது நேரடி உவமை. 


இதை கொஞ்சம் மாற்றி,, முகம் நிலவை விட அழகாக இருக்கிறது என்றும் சொல்லலாம். தவறு இல்லை. அப்படிச் சொல்வது உறழ்ச்சி என்று அழைக்கப்படும். 


இந்தக் குறளில், 


அறம் விலகி, அல்லன செய்வதுதான் மிகப் பெரிய பாவம். ஆனால், வள்ளுவர், அதை விட பாவம் புறம் சொல்லுவது என்கிறார். அதனால் அது உறழ்ச்சி.


இரண்டாவது, மனிதனுக்கு உள்ள சிறப்பை நம் முன்னோர் இரண்டு விதமாக பிரித்தார்கள். 


ஒன்று ஒளி, இன்னொன்று புகழ். 


ஒளி என்பது இந்தப் பிறவியில், ஒரு குறிப்பிட்ட காலத்தில் வரும் சிறப்பு. 


புகழ் என்பது இந்த பிறவி தாண்டியும் நிற்கும் சிறப்பு.


வள்ளுவர், கம்பர் என்பவர்கள் புகழ் பெற்ற புலவர்கள். 


இன்று நடிக்கும் நடிகர்கள், எழுதாளர்களுக்கு இருப்பது ஒளி. அதுவே காலம் கடந்து நின்றால் அது புகழ். 


புறம் சொல்பவன், மற்றவனின் ஒளியை அழிக்க முடியும். புகழை அழிக்க முடியாது. 


உதாரணமாக, ஒரு பெரிய தலைவரின் வாழ்வில் ஏதோ ஒரு களங்கம் இருந்திருக்கலாம். அவர் வாழ்ந்த காலத்தில் அது பெரிதாக பேசப் பட்டு இருக்கல்லாம். நாளடைவில், உலகம் அதை மறந்து விடும். அவர் செய்த தொண்டு, அவர் எழுதிய புத்தகம், அவர் உலகுக்குச் செய்த நன்மை எதுவோ அதுவே பெரிதாகப் பேசப் படும். 


புறம் சொல்பவன், மற்றவனின் ஒளியை குறைக்கலாம். புகழ் அழியாது என்கிறார். 


இலக்கணம் படிக்க படிக்க இலக்கியத்தை ஆழ்ந்து இரசிக்க முடியும். 










(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html




Tuesday, January 3, 2023

திருவாசகம் - திரு அம்மானை - சேர்ந்து அறியாக் கையானை

             

திருவாசகம் - திரு அம்மானை  -    சேர்ந்து அறியாக் கையானை




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


இறைவனால் எல்லாம் முடியும். ஆனால் அவனுக்கும் ஒன்று தெரியாது. அது, இன்னொருவர் முன்னால் கை கூப்புவது. இறைவன் யார் முன்னால் எதற்காக கை கூப்பப் போகிறான். 


மணிவாசகர் சொல்கிறார் "சேர்ந்தறியா கையானை" என்று. 


இறைவன் இருக்கின்றானா இல்லையா என்ற கேள்வி அன்று தொட்டு இன்று வரை நடந்து கொண்டே இருக்கிறது. 


அவன் இருக்கிறான், இல்லாமலும் இருக்கிறான். 


உள்ளதில் அன்பு இருந்தால் அவன் இருப்பது தெரியும். அன்பு இல்லாவிட்டால் இறையை உணர முடியாது. 


அன்பே சிவம். 


அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே


என்பார் திருமூலர். 


அன்புதான் சிவம். 



பாடல் 


கைஆர் வளை சிலம்பக் காதுஆர் குழை ஆட

மைஆர் குழல் புரழத் தேன் பாய வண்டு ஒலிப்பச்

செய்யானை வெண் நீறு அணிந்தானைச் சேர்ந்து அறியாக்

கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு

மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை

ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானை!


பாடல் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post.html


(pl click the above link to continue reading)


கைஆர் வளை சிலம்பக் = கைகளில் அணிந்த வளையல்கள் ஒலிக்க 


 காதுஆர் குழை ஆட = காதில் அணிந்த குழை ஆட 


மைஆர் குழல் புரழத் = மை போல் கறுத்த குழல் அலை பாய 



தேன் பாய = அந்தக் குழலில் சூடிய மலர்களில் இருந்து தேன் பாய்ந்து வர 


வண்டு ஒலிப்பச் = அந்தத் தேனை உருசிக்க வண்டுகள் ரீங்காரம் இட்டு வர 


செய்யானை = சிவந்த மேனி கொண்டவனை 


வெண் நீறு அணிந்தானைச் = திரு வெண்நீறு அணிந்தவனை 



சேர்ந்து அறியாக் கையானை  = இரண்டு கைகளை கூப்பி அறியாதவனை 



எங்கும் செறிந்தானை = எங்கும் நீக்கம் அற நிறைந்து இருப்பவனை 


அன்பர்க்கு மெய்யானை  = உள்ளதில் அன்பு உள்ளவர்களுக்கு உண்மையானவனை 



அல்லாதார்க்கு அல்லாத வேதியனை = உள்ளதில் அன்பு இல்லாதவர்களுக்கு அவனும் இல்லாமல் இருப்பவனை 


ஐயாறு அமர்ந்தானைப் = திருவையாற்றில் இருப்பவனை 


 பாடுதும் காண் அம்மானை! = பாடுவோம் அம்மானாய் 







முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 


)