Tuesday, January 17, 2023

திருவாசகம் - திரு அம்மானை - மந்தார மாலையே

               

திருவாசகம் - திரு அம்மானை  -   மந்தார மாலையே 




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் )


கோவிலுக்குப் போனால் தேங்காய், பழம் என்று நிவேத்தியம் செய்கிறோம். 

இறைவனுக்கு சந்தனம், பால், பன்னீர் என்று அபிசேகம் செய்கிறோம். 


வீட்டில் விசேடம் என்றால் தீ வளர்த்து அதில் பால், நெய், பட்டு என்று பலவகை பொருள்களைப் போடுகிறோம். எல்லாம் எரிந்து போகிறது. 


ஆற்றில் பிண்டம் கரைக்கிறோம். 


இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? எல்லாம் வீணாகப் போகிறதே?  இங்கே தீயில் போட்டால் அது எங்கோ இருக்கிற கடவுளுக்கு போகுமா? என்னதான் நம்பிக்கை என்றாலும், கொஞ்சமாவது அறிவு சார்ந்து இருக்க வேண்டாமா? 



இப்படிப் பட்ட கேள்விகள் இவற்றை ஆழமாக நம்பும் பக்தர்கள் மனத்திலும் எழும். 


அறிவு கேள்வி கேட்கத்தான் செய்யும்.  வெளியே சொல்லாவிட்டாலும், உள்ளுக்குள் இந்த கேள்விகள் இருந்து கொண்டுதான் இருக்கும். 


இது என்ன முறை? இதில் என்ன அர்த்தம் இருக்கிறது? 


தேவுக்களுக்கும், மனிதர்களுக்கும் ஒரு இடையறா தொடர்பு இருப்பதாக நம் முன்னவர்கள் நினைத்தார்கள். 


தேவுக்கள் என்பது கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்றால் இயற்கை என்று வைத்துக் கொள்ளலாம். 



மழை, வெயில், காற்று, என்று நம்மைச் சுற்றியுள்ள இயற்கைக்கும் நமக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. 



அது மட்டும் அல்ல, அவற்றை நாம் மதிக்க வேண்டும். இன்று சுற்றுப் புற சூழ்நிலையை மதிக்காமல் நாம் அரக்கத் தனமாக அவற்றை வேட்டையாடிக் கொண்டு இருக்கிறோம். 


இயற்கையின் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கிறது. அதைத் தாண்டும் போது அது நம்மை தண்டிக்கிறது. 


பனிப் பாறைகள் உருகுகின்றன. கடல் மட்டம் உயர்கிறது.  நில அதிர்வுகள் தோன்றுகின்றன. மழை பொய்கிறது.  கால நிலை மாறுகிறது. நிலத்தடி நீர் நாளுக்கு நாள் கீழே போய்க் கொண்டு இருக்கிறது.  ஒரு பக்கம் வெள்ளம். மறு பக்கம் வறட்சி. நிலம் அழுந்துகிறது. 


காரணம் என்ன?  இயற்கையின் மேல் மதிப்பும், மதிப்பும் மரியாதையும் இல்லை. நான் தான் எல்லாம், எனக்குத் தான் எல்லாம் என்று மனிதன் சுயநலமியாக மாரியதால் வந்த வினை. 


நம் கலாச்சாரம் என்ன சொல்லித் தந்தது?


மழையா - அதைப் போற்றுவோம். வணங்குவோம். மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் என்று மழையை போற்றினார்கள்.



வெயிலா? - சூரியனைப் போற்றுவோம். 



காற்றா ? - வாயு பகவானைப் போற்றுவோம். 



இயற்கையை தெய்வமாக போற்ற கற்றுத் தந்தது நம் மரபு. 


இயற்கை நமக்குத் தருவது எல்லாம் ஒரு வரம். ஒரு அருள். ஒரு கொடை. அதற்கு நாம் காட்டும் நன்றிக் கடன் இந்த பிரசாதங்கள், வேள்வி, அவிர்பாகம் என்பதெல்லாம். 


அவை போகிறதோ இல்லையோ, நம் மனதில் அது ஒரு புனிதமான ஒன்று என்ற எண்ணத்தை இவை தோற்றுவிக்கின்றன. 


தக்கன் ஒரு வேள்வி செய்தான். அதில் சிவனுக்கு தர வேண்டிய அவிர் பாகத்தைத் தர மறுத்தான்.  சிவன் அந்த யாகத்தை அழித்தான் என்பது புராணம். 


இயற்கயை மதிக்காமல், சுயநலமாக காரியங்களை செய்து கொண்டு போனால், அந்த இயற்கையே நம்மை அழிக்கும் என்பது செய்தி. .



பாடல் 



சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்றன் வேள்வியினில்

இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்

தந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்

சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த

செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்

மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய். 



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_17.html


(pl click the above link to continue reading)


சந்திரனைத் = சந்திரனை 


தேய்த்தருளித் = தேய்து 


தக்கன்றன் = தக்கன் தன் 


வேள்வியினில் = வேள்வியில் 


இந்திரனைத் = இந்திரனின் 


தோள்நெரித்திட்டு = தோள்களை நெரித்து  


எச்சன் தலையரிந் = எச்சன் என்ற தேவனின் தலையை அரிந்து 


அந்தரமே  = வானத்தில் 


செல்லும்  = செல்லும் 


அலர்கதிரோன் = பல கதிர்களை பரப்பும் சூரியனின் 


 பல்தகர்த்துச் = பற்கள் உதிரும் படி தண்டித்து 


சிந்தித்  திசைதிசையே = திசைகள் தோறும் சிந்தும் படி 


தேவர்களை ஓட்டுகந்த = தேவர்களை ஓட ஓட விரட்டி 


செந்தார்ப் = சிவந்த மாலைகள் போல 


பொழில்புடைசூழ் = சோலைகள் சூழ்ந்த 


தென்னன் பெருந்துறையான் = தென்னவன், திருபெருந்துறையில்  உறைபவன் 


மந்தார மாலையே = அணியும் மந்தார மாலையை 


பாடுதுங்காண் அம்மானாய்.  = பாடுவோம், அம்மானாய் 








[


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 


)


No comments:

Post a Comment