Thursday, July 11, 2024

திருக்குறள் - சிலர் பலர்

 திருக்குறள் - சிலர் பலர் 


இன்றைய குறளுக்கு முதலில் மேலோட்டமான உரை என்ன என்று பார்ப்போம். பின், பரிமேலழகர் தரும் நுணுக்கமான உரையை பற்றிச் சிந்திப்போம். 


இந்த உலகில் பணக்கார்கள் சில பேர் தான் இருக்கிறார்கள். ஏழைகள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். 


ஏன்?


ஏன் மாறி இருக்கக் கூடாது? நிறைய பணக்கார்கள், கொஞ்சம் போல ஏழைகள் என்று ஏன் இருக்கக் கூடாது?


இதை பணம் மட்டும் அல்ல, அறிவாளிகள், ஞானிகள் சிலர், கல்லாத மூடர்கள் பலர். 


இது ஏன் இப்படி இருக்கிறது?


வள்ளுவர் சொல்கிறார் 


"இல்லாதவர்கள் பலராகவும், இருப்பவர்கள் சிலராகவும் இருக்கக் காரணம் தவம் செய்பவர் சிலராகவும், தவம் செய்யாதவர்கள் பலராகவும் இருப்பதால்"


என்று. 


பாடல் 


இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்.


பொருள் 


இலர் = இல்லாதவர்கள் 


பலர் = அதிக எண்ணிகையில் 


ஆகிய = ஆனதற்கு 


காரணம் = காரணம் 


நோற்பார் = நோன்பு நோற்பார், தவம் மேற்கொள்வார் 


சிலர் = சிலராகவும் 


பலர் = அதிக எண்ணிகையில் உள்ளவர்கள் 


நோலா தவர் = தவத்தை செய்யாதவர்கள்.


இந்த உரை ஒரு மேலோட்டமான ஒரு உரை. 


இதில் உள்சென்று பரிமேலழகர் ஒரு உரை செய்கிறார். 


"செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன"


இருப்பதும், இல்லாததும் என்பது பொருள் செல்வத்தைப் பற்றியது அல்ல, அது அறிவு இருப்பதும், இல்லாததும் பற்றி என்கிறார். 


அது எப்படி இலர்பலர் என்று தானே இருக்கிறது. அதை எப்படி குறிப்பாக அறிவு இல்லாதவர் பலர் என்று கூற முடியும் என்ற கேள்விக்கு பரிமேலழகர் நாலடியாரில் இருந்து ஒரு மேற்கோள் காட்டுகிறார். 


நுண் உணர்வு இன்மை வறுமை; அஃது உடைமை

பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்;-எண்ணுங்கால்,

பெண் அவாய், ஆண் இழந்த பேடி அணியாளோ,

கண் அவாத் தக்க கலம்?


கொஞ்சம் நாலடியாருக்குள் செல்வோம். 


இந்த உலகில் அறிவில்லாத மடையர்களிடம் நிறைய செல்வம் குவிந்து கிடக்கிறதே. அதற்கு என்ன சொல்கிறீர்கள்?  யாருக்கு வேண்டும் அறிவு? நிறைய செல்வம் இருந்தால் போதாதா?  அறிவை வைத்துக் கொண்டு என்ன செய்வது ?


நாலடியார் சொல்கிறது, 


"ஆண்மை இல்லாமல், பெண் குணம் நிறைந்த ஒரு பேடி நிறைய அணிகலன்களை அணிந்து கொள்ளலாம். அது அவனுக்கு அழகு செய்யுமா?  அசிங்கமாக அல்லவா இருக்கும்? அருவெறுக்கும் படி அல்லவா இருக்கும். அது போல, அறிவில்லாதவன் கையில் உள்ள செல்வமும் என்கிறது நாலடியார். 


மீண்டும் குறளுக்கு வருவோம். 


இல்லாமை என்பது இங்கே அறிவின்மையை குறிக்கிறது என்கிறார். 


அறிவில்லாவிட்டா இந்தப் பிறவியிலும் பலன் இல்லை. மறு பிறவியிலும் பலன் இல்லை.


இந்தக் குறளோடு தவம் என்ற அதிகாரம் முடிவடைகிறது. 


மீண்டும் ஒரு முறை அந்தப் பத்து குறளையும் வாசித்துப் பாருங்கள். 


ஏதேனும் புதிய பொருள் தோன்றலாம்.




No comments:

Post a Comment