Friday, July 26, 2024

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - ஒரு மீள் பார்வை

 திருக்குறள் - செய்நன்றி அறிதல் - ஒரு மீள் பார்வை 

https://interestingtamilpoems.blogspot.com/2024/07/blog-post_26.html

நாம் பலருக்கு பல நன்மைகள் செய்து இருப்போம். ஆனால், சமயத்தில் நமக்கு ஒரு உதவி தேவை என்று வரும்போது அவர்கள் நமக்கு உதவி செய்ய மாட்டார்கள். நம்மால் அதை ஜீரணிக்க முடியாது. ..எவ்வளவு செய்து இருப்பேன்...இப்படி செய்து விட்டானே என்று வருந்துவோம். 


இது ஏதோ நண்பர்களுக்குள் நடப்பது என்று நினைக்கக் கூடாது. 


கணவன் குடும்பத்துக்காக எவ்வளவோ உழைப்பான், தியாகம் செய்வான். ஏதோ ஒரு நாள், தவறாக ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். அல்லது கேட்டது ஒன்றை வாங்கித் தர முடியாது என்று சொல்லி இருக்கலாம், அல்லது மனைவி வீட்டாரை மதிக்காமல் ஏதாவது தவறாக சொல்லி இருக்கலாம். அதற்காக அதை வாழ்நாள் முழுவதும் மனதில் வைத்துக் கொண்டு பகை பாராட்டும் மனைவிமார்களைப் பற்றி கேட்டு இருக்கிறோம். 


அது கணவன்களுக்கும் பொருந்தும். மனைவி எவ்வளவோ விட்டுக் கொடுத்து, வலிகளைத் tதாங்கி குடும்பத்தை கொண்டு செல்வாள். ஏதோ ஒரு சமயம், ஏதோ ஒரு வார்த்தை தவறாக வந்து இருக்கலாம். அதற்காக அதை மனதில் வைத்துக் கொண்டு வன்மம் பாராட்டுவது அழகல்ல. 


இது வாழ்வில் அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும். பெற்றோர், பிள்ளைகள், உடன் பிறப்புகள், நண்பர்கள், மேலதிகாரி , கீழே வேலை செய்பவர்கள், என்று அனைத்து தளத்திலும் இந்த சிக்கல் இருக்கிறது. 


இதெல்லாம் ஏன் நிகழ்கிறது?


வள்ளுவர் விடை சொல்கிறார். 


நாம் நமக்கு பிறர் செய்த நல்லவற்றையும், தீயவற்றையும் எப்படி எடுத்துக் கொள்கிறோம்?


ஒரு கெடுதல் செய்தால் அதை மிகப் பெரிய விடயமாகவும், ஆயிரம் நல்லது செய்து இருந்தால் அவற்றை எல்லாம் மிகச் சாதரணமாகவும் எடுத்துக் கொள்கிறோம். அது தான் இத்தனை சிக்கல்களுக்கும் காரணம். 


இதையே மாற்றிப் போட்டால் எப்படி இருக்கும். 


ஒரே ஒரு நல்லதை மிகப் பெரிதாகவும், ஆயிரம் தீமைகளை மிகச் சாதாரண விடயமாகவும் கொண்டால் எப்படி இருக்கும்?


அது எப்படி முடியும் என்று கேட்டால், முன்னது முடியும் என்றால் பின்னதும் முடியும் தானே. 


உதாரணமாக, எனக்காக பெற்றோர், உறவு, சொந்தம், பந்தம், நட்பு, ஊர் என்று எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்திருக்கிறாள். அந்த ஒரு செயல் போதாதா அவளை கோவில் கட்டி கும்பிட என்று நினைத்து விட்டால், அவள் செய்யும் சில்லறை தொந்தரவுகள் பெரிதாகத் தெரியாது. 


மனுஷன் உயிரைக் கொடுத்து உழைக்கிறான், பாவம் என்று கணவனின் பங்களிப்பை பெரிதாக நினைத்து விட்டால் அவனின் கோப தாபங்கள் பெரிதாகத் தெரியாது. 


எதை பெரிதாக நினைக்க வேண்டும், எதை சிறிதாக நினைக்க வேண்டும் என்பதில்தான் இருக்கிறது சிக்கல். 


தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்.


nஎன்ற குறளில், தினையளவு நல்லது செய்தாலும், அதை பனை மரம் அளவு உயரமாக உள்ளதாக கொள்வார் என்றும். 


கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்.


உயிரை எடுக்கும் அளவுக்கு ஒரு கொடிய செயலை ஒருவர் நமக்குச் செய்தாலும், அவர் செய்த ஒரே ஒரு நல்ல காரியத்தை நினைத்தால் அந்த கொடிய காரியத்தின் மூலம் வரும் துன்பம் மறைந்து போகும் என்றும் கூறுகிறார். 


நல்லது செய்தால், அதை பெரிதாக நினைக்க வேண்டும். 


தீமை செய்தால், அதை மறந்து, மற்றவர் செய்த நன்மையை நினைக்க வேண்டும். அதாவது, தீயவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறார். 


எல்லாம் பார்க்கும் விதத்தில் இருக்கிறது. 



1 comment: