Sunday, July 7, 2024

பெரிய புராணம் - விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே

 பெரிய புராணம் - விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே 


இறைவனை எப்படி அடைவது?


இறைவனை அடைய ஒரே ஒரு வழிதான் இருக்கிறதா? அல்லது பல வழிகள் இருக்கின்றனவா?


பூஜை என்றால் இப்படித்தான் செய்ய வேண்டும், ஆசாரம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்...குளித்து, முடித்து, ஈரத் துணி உடுத்து, இறைவன் மேல் பாடல்களைப் பாடி, கற்பூர தீபம் காட்டி...என்று ஒரு வழி முறை இருக்கிறதா அல்லது எப்படி வேண்டுமானாலும் வழிபடலாமா? 


எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம்...அன்பும், பக்தியும் தான் முக்கியம். என்ன செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்பதல்ல முக்கியம் என்பதை விளக்க வந்த நூல் பெரிய புராணம். 


ஒவ்வோரு நாயன்மாரும் வேறு வேறு வழியில் சென்று இறைவனை அடைந்தார்கள். எல்லோரும் ஒரே வழியில் செல்லவில்லை. 


அடிப்படை ஒன்றுதான். இறைவன் மேல் அன்பு, காதல், பற்று, பக்தி. அவன் அடியார்கள் மேல் அன்பு, மரியாதை, மதிப்பு. மத்தபடி அவர்கள் செய்தவை ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாதவை. 


கண்ணப்பர் வாயில் நீரை கொண்டுவந்து, இறைவன் மேல் கொப்பள்ளித்து அபிஷேகம் பண்ணினார், மாமிசத்தை கடித்துப் பார்த்து சரியாக உள்ளதை இறைவைனுக்கு படையல் செய்தார், தலையில் சூடிய மலரை இறைவனுக்கு படைத்தார்...அவர் தொடங்கிய ஆறே நாளில் இறைவனை அடைந்தார். 


"நாளாறில் கண் இடத்து அப்ப வல்லேன் அல்லேன்" என்பார் பட்டினத்தார். 


வாளால் மகவு அரிந்து ஊட்ட வல்லேன் அல்லன் 

மாதுசொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன் 

தொண்டு செய்து நாளாறில் கண் இடத்து அப்ப வல்லேன் அல்லன் 

நான் இனிச் சென்று ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே


அதே கோவிலில் ஆசார அனுஷ்டாங்களை கடைப்பிடித்து வாழ் நாள் எல்லாம் பூஜை செய்த சிவ கோச்சாரியாருக்கு இறைவன் காட்சி தரவில்லை. 


பெரிய புராணம் சொல்லும் செய்தி,  பக்தி முக்கியம். ஆராதனை, அபிஷேகம், தோத்திரம், ஆசாரம் முக்கியம் அல்ல என்பதுதான். 



"நிலவை தலையில் சூடி, மன்றத்தில் நடனமாடும் சிவனை துதி செய்யும் நாயன்மார்களும் அவர்களது அடியார்களும் சேர்ந்த பெரிய குழு கடைபிடித்த விதிகள் உலகில் என்றும் சிறந்து விளங்கட்டும்"


என்று ஆரம்பிக்கிறார் சேக்கிழார். 


பாடல் 


மதிவளர் சடைமுடி மன்று ளாரைமுன்

துதிசெயு நாயன்மார் தூய சொன்மலர்ப்

பொதிநல னுகர்தரு புனிதர் பேரவை

விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே.


பொருள் 


மதி = நிலவு 


வளர் = வளரும். தேய் பிறை வளரும் 


சடைமுடி = சடை முடியைக் கொண்ட 


மன்று ளாரை = மன்றத்தில் உள்ளவரை  


முன் = முன்பு 


துதி = தோத்திரம் 


செயு = செய்யும் 


நாயன்மார் = நாயன்மார்களது  


தூய = தூய்மையான 


சொன் மலர்ப் = சொல்லிய ம் மலர். அதாவது தேவாரம், திருவாசகம் போன்ற பாமாலைகள் 


பொதிநல னுகர் = பொதி + நலன் + நுகர் = பொதிந்த நல்லனவற்றை அறிந்து அனுபவிக்கும் 

 


தரு = தரக் கூடிய 


புனிதர் பேரவை = புனிதர்கள் நிறைந்த பெரிய அவை (குழு) 


விதிமுறை  = அவர்கள் செய்த விதியினை 


உலகினில் = இந்த உலகில் 


விளங்கி = விளங்கச் செய்து 


வெல்கவே = அவை வென்று நிலைக்க வேண்டும்.


பேரவை - பெரிய அவை. இறைவனை வழிபடும் கூட்டம் நேற்று இருந்தது, இன்று இருக்கிறது, நாளையும் இருக்கும். அவர்கள் எல்லோரையும் சேர்த்தால் அது பெரிய கூட்டமாக இருக்கும் என்பதால் பேரவை என்றார். 


விளங்கி வெல்கவே - அவர்கள் செய்த நூல்கள், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை இவற்றை உலகுக்கு விளக்க வேண்டும். மக்களுக்கு புரியும்படி விளக்க வேண்டும். விளங்கினால் அதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அந்த விதி வென்றுவிடும். புரியாமலேயே, கண்மூடித்தனமாக நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றைப் பின் பற்றினால் அது நீண்டு நிலைக்காது. புரிந்து செய்வது நிலைத்து நிற்கும். "விளங்கி, வெல்கவே". 


பொதி நலன் நுகர் = உண்மை அந்த நூல்களில் பொதித்து வைக்கப் பட்டு இருக்கிறது. அந்த நூல்களில் உள்ள நன்மையை ஆராய்ந்து எடுத்து அவற்றை அனுபவிக்க வேண்டும். 


முன் துதி செய்யும் நாயன்மார் = முன் என்றால் முன்பு. முன்பு நடந்ததை நினைத்து. துதி, மனதால் நினைத்து. செய்யும் என்றால் கையால் தொழுது. மனம், வாக்கு, செயல் என்ற மூன்றாலும் வழிபட்டு என்று பொருள். 



No comments:

Post a Comment