Monday, July 15, 2024

திருக்குறள் - தவத்திற்குப் பின்

 திருக்குறள் - தவத்திற்குப் பின் 


தவம் பற்றி சொல்லிவிட்டார். தவம் என்றால் என்ன , அதன் பெருமை, செய்வதனால் வரும் நன்மை, என்பன பற்றியெல்லாம் விளக்கமாகக் கூறினார். 


அடுத்து என்ன?


சில சமயம், நாம் பல நல்ல பழக்கங்களை கைக் கொண்டிருந்தாலும், மன உறுதி இல்லாமல், பழைய அனுபவத்தால், நல்லவற்றை கை விட்டு தீய பழக்கத்திற்கு மீண்டும் செல்ல வாய்ப்பு உண்டு. 


உதாரணமாக ஒருவர் மது அருந்தும் பழக்கத்தை மிகுந்த முயற்சிக்குப் (தவம்) பின் விட்டுவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். நீண்டநாள் கழித்து பழைய நண்பர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வருகிறார். வரும் போது விலை உயர்ந்த மது வாங்கி வருகிறார். மதுவை விட்ட அவருக்கு அந்த உயர்ந்த மதுவைக் கண்டவுடன் ஒரு ஆசை வருகிறது. ஒரே ஒரு peg அடிக்கலாமே. அதில் என்ன வந்து விடப் போகிறது என்று நண்பரோடு சேர்ந்து அருந்துகிறார். ஒன்று இரண்டாகிறது. இரண்டு மூன்றாகிறது. 


அதன் பின் மற்றொரு நண்பர், மற்றொரு விசேடம் என்று மீண்டும் பழையபடி முழு நேர குடிகாரராகி விடுகிறார். 


அவ்வளவு தூரம் போவானேன். 


உடம்பு எடை கூடிவிட்டது. இனிமேல் கண்ட கழுதைகளையும் உண்ணக் கூடாது என்று முடிவு எடுத்து இருப்போம். ஏதோ ஒரு விசேடம் வருகிறது. இன்று ஒரு நாள் மட்டும் என்று இனிப்பு, ஐஸ் கிரீம் என்று சாப்பிட்டு விடுகிறோம். விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்போம். உணவு வாசனை மூக்கைத் துளைக்கும். விரதம் அதோகதி. 


இப்படி எதை எடுத்தாலும் மன உறுதி இல்லாவிட்டால், பழைய எண்ணங்கள் மீண்டும் வந்து தவத்தினால் பெற்ற பலன்கள் நீங்கிவிடும். 


தவத்திற்கு பொருந்தாத ஒழுக்கங்களை கூடா  ஒழுக்கம் என்கிறார் வள்ளுவர். இது தவம் செய்பவர்களுக்கு வேண்டாத, தீய ஒழுக்கம். இது பற்றி கவனமாக இருக்க வேண்டும் என்பதால் இது பற்றி அடுத்து கூற இருக்கிறார். 


நாம் பல கதைகளை கேட்டு இருப்போம். 


முனிவர்கள் காட்டில் தவம் செய்வார்கள். தேவ லோகப் பெண்கள் வந்து ஆடிப் பாடி அவர்கள் தவத்தைக் கலைப்பார்கள். 


கதியாக சொல்ல அது சரி. 


உண்மை என்ன?  காமம் உள்ளே இருந்து கொண்டே இருக்கிறது. தவம் செய்து அதை அடக்கினாலும், அழகான பெண் ஆசையோடு வந்தால், தவம் கலைந்து விடுகிறது. 


இதை எப்படி சமாளிப்பது என்பது அடுத்த அதிகாரம். 


எவ்வளவு நுட்பமாக சிந்தித்து இருக்கிறார். 


வள்ளுவர் கைப் பிடித்து உள்ளே நுழைவோம். 




  

No comments:

Post a Comment