Friday, July 19, 2024

திருக்குறள் - அகத்தே நகும்

 திருக்குறள் - அகத்தே நகும் 


கூடா ஒழுக்கம் என்பது மேற்கொண்ட தவத்திற்கு ஒவ்வாத அல்லது பொருந்தாத செய்கைகள். 


தவம் செய்வது கடினம். அப்படி கடினமான தவத்தை மேற்கொள்பவர்களை சமூகம் போற்றும். இன்றும் கூட துறவிகளுக்கு, சாமியார்களுக்கு மதிப்பு இருக்கத்தானே செய்கிறது. நம்மால் ஒரு வேளை உணவை விட முடியவில்லை. ஒரு வேளை காப்பியை விட முடியவில்லை. தவம் செய்பவர்கள் உண்ணாமல் விரதம் இருக்கிறார்கள். ஆண் பெண் இன்பத்தை துறக்கிறார்கள். இதெல்லாம் எவ்வளவு கடினம் என்று சமுதாயம் அவர்களைப் போற்றுகிறது. 


ஆனால், தவம் மேற்கொண்டவர்கள் சில சமயம் தவத்தை தொடர்ந்து செய்ய முடியாமல் தவிப்பார்கள். சரி, தவத்தை விட்டு விடலாம் என்றால் ஊரில் கிடைக்கும் நல்ல பெயர் போய் விடும். 


என்ன செய்வது?  


ஊருக்குத் தெரியாமல், தவத்திற்கு புறம்பான காரியங்களை செய்வார்கள். அப்படிச் செய்பவர்கள் ஒரு நாள் மாட்டிக் கொள்வார்கள். உலகம் அவர்களை "போலிச் சாமியார்" என்று முத்திரை குத்தி ஏளனம் செய்யும். 


எல்லா போலிச் சாமியார்களும் பிடிபடுவது இல்லை. மற்றவர்கள் ஊருக்குத் தெரியாமல் தங்கள் காரியங்களை செய்து கொண்டு இருப்பார்கள். அதே சமயம் பெரிய துறவி, குரு, சாமியார் என்ற பட்டமும் இருக்கும். 


அப்படிப்பட்டவர்களைப் பார்த்து வள்ளுவர் சொல்கிறார் 


"நீ ஊரை ஏமாற்றி விட்டேன் என்று நினைக்காதே. உனக்குள் இருக்கும் ஐம்பூதங்களும் உன் கபட வேடத்தை பார்த்து உன்னை எள்ளி நகையாடும். அதில் இருந்து நீ தப்பவே முடியாது" 


என்று. 


பாடல் 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்


பொருள் 


வஞ்ச மனத்தான் = உள்ளொன்று வைத்து வெளியே ஒன்று செய்யும் வஞ்சக மனத்தை கொண்டவன் 


படிற்றொழுக்கம் = படிற்று என்றால் மறைத்து என்று அர்த்தம். மறைந்து செய்யும் செய்கைகள்.


பூதங்கள் = பூதங்கள்  


ஐந்தும் = ஐந்தும் 


அகத்தே நகும் = அவனுக்குள்ளேயே அவனைப் பார்த்து சிரிக்கும். 


அது என்ன பூதங்கள் ஐந்து?


அவை நீர், நிலம், தீ, ஆகாயம், காற்று என்ற ஐந்தும். 


இவை ஐந்தினாலும் ஆனதுதான் உலகம். இந்த ஐந்தும் உள்ளும் இருக்கின்றன. வெளியேயும் இருக்கின்றன. 


இந்து சமய கோட்பாடுகளில் முக்கியமான ஒன்று,  இந்த ஐம்பூதக் கோட்பாடு. 


வெளியில் இருக்கும் ஐந்து பூதங்களும் நம் உடம்பில் உள்ள புற மற்றும் அகக் கருவிகளோடு சம்பந்தப்பட்டவை.


உதாரணமாக நீர் என்பது நாக்கோடு சம்பந்தப்பட்டது. நாக்கு எப்போதும் நீரில்தான் இறக்கும். நாக்கு வறண்டு விட்டால் சுவை தெரியாது. 


நீர் நாக்கோடு சம்பந்தப்பட்டது. 


நாக்கு சுவையோடு சம்பந்தப்பட்டது. 


சுவை மனம், புத்தி, அகங்காரம், சித்தம் இவற்றோடு தொடர்புபட்டது. 


இப்படி ஒவ்வொரு பூதமும், நம் உடலோடு சம்பந்தப்பட்டது. 


இவற்றைத் தாண்டி, ஒவ்வொரு புலன்களுக்கும் ஒரு அதி தேவதை உண்டு என்கிறார்கள். 


பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் என்றால், உள்ளே இருக்கும் தெய்வ சாட்சியாக நிற்கும் என்பது நம்பிக்கை. 


நமக்கே தெரியாமல் நாம் எப்படி தவறு செய்ய முடியும்?


ஊரை ஏமாற்றலாம். நம் மனதை நாம் ஏமாற்ற முடியாது. 


எனவே, ஊருக்குத் தெரியாது என்று நினைத்து தவறு செய்யாதே என்கிறார். 


 

No comments:

Post a Comment