Wednesday, July 17, 2024

தேவாரம் - திருவெண்காடு

 தேவாரம் - திருவெண்காடு 


எப்பப் பார்த்தாலும் ஏதோ ஒரு கவலை, ஏதோ ஒன்றை அடைய வேண்டும் என்ற ஆதங்கம், எதை எதையோ எண்ணி பயம். 


ஒன்று முன் நடந்ததை நினைத்து கவலை. அல்லது வரப்போவதை நினைத்து பயம். தவிப்பு. நடக்குமோ, நடக்காதோ என்ற தவிப்பு. 


ஒன்று இறந்த காலத்தில் வாழ்கிறோம். அல்லது எதிர் காலத்தில். 


ஒரு நாளும், நிகழ் காலத்தில் வாழ்வது இல்லை.  


சிலர் எதிர் காலம் என்றால் இறந்த பின் சொர்கம் போவோமா மாட்டோமா, வைகுண்டம் போவோமா, கைலாசம் போவோமா, இன்னொரு பிறவி எடுப்போமா என்று மிக நீண்ட காலத்துக்குள் போய் விடுகிறார்கள். 


வாழ்க்கை என்பது நிகழ் காலத்தில் இருப்பது. நிகழ்காலம் ஒன்று தான் சத்தியம். இறந்த மற்றும் எதிர் காலங்கள் கற்பனைகள். அவை நம் மூளையில் இருக்கிறதே தவிர நிஜத்தில் கிடையாது. 


நிகழ்காலம் என்பது ஒன்றும் பெரிய மகோன்னத நேரம் அல்ல. மிக மிக இயல்பாக இருப்பது. 


இந்த நொடியில் உங்களைச் சுற்றி உள்ளவற்றைப் பாருங்கள். அவற்றின் எதிர் மற்றும் இறந்த காலம் பற்றி பார்க்காமல், இந்த கணத்தில் அவை எப்படி இருக்கின்ற என்று பாருங்கள்.


மனைவியைப் பார்க்கும் போது, அவள் முன் எப்படி இருந்தாள், எப்படி மாறிவிட்டாள், என்றெல்லாம் நினைக்காமல், அவள் முகத்தை மட்டும் பாருங்கள். ஒரு பெண். உங்களோடு வாழ வந்தவள். உயிரும், உடம்புமாய் உள்ள ஒரு பெண். அன்பு வருகிறதா இல்லையா என்று பாருங்கள். மனைவிக்கும் அதே விதிதான். 


திருஞான சம்பந்தர்  அப்படி பார்த்து ஒரு பாடல் எழுதி இருக்கிறார். 


 

"சிவ பெருமான் உறையும் திருவெண்காடு என்ற தலம். அங்கு வரும் பக்தர்கள் சிவனின் பல நாமங்களை போற்றி அவனை வழி படுகிறார்கள். அந்த ஊரின் வெளியே பல பனை மரங்கள் உயர்ந்து வளர்ந்து இருக்கின்றன. கரு கருவென அவை நிற்கின்றன. அந்த மரங்களில் பச்சைக் கிளிகள் அமர்ந்து இருந்கின்றன. அந்தக் கிளிகள், அங்கு வரும் பக்தர்கள் சொல்லும் இறை நாமத்தைக் கேட்டு அவையும் அவற்றை மாறி மாறி சொல்கின்றன. அந்த பனை மரங்களுக்கு மேலே மேகங்கள் தவழ்கின்றன..."


பாடல் 



தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்

ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்

பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை

வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.


பொருள்


தண்மதியும் = குளிர்ந்த நிலவையும் 


வெய்யரவுந் = வெய் + அரவும் = கொடுமையான விடம் கொண்ட நாகத்தையும் 


தாங்கினான் = தரித்தவன் 


சடையினுடன் = தன் தலையில் 


ஒண் = ஒளி வீசும் 


மதிய = பிறைச் சந்திரனைப் போன்ற 


நுதலுமையோர் = நுதல் + உமை + ஓர் = நெற்றியை உடைய பார்வதியின் 


கூறுகந்தான்  = கூறு + உகந்தான் = உடலில் பாதியை மகிழ்ச்சியாக கொண்டவன்  


உறைகோயில் = வாழும் கோவில் 


பண் = இசையுடன் கூடிய 


மொழியால் = பாட்டால் 


அவன்நாமம் = அவனுடைய (சிவனின்) பெயரை 


பலவோதப் = பலர் ஓதக் 


பசுங்கிள்ளை = பச்சைக் கிளிகள் 


வெண் = வெண்மையான 


முகில் = மேகம் 


சேர் = சேரும், ஒன்றாக இருக்கும் 


கரும் = கரிய 


பெணைமேல் = பனை மரத்தின் மேல் 


வீற்றிருக்கும் = அமர்ந்து இருக்கு 


வெண்காடே = திரு வெண்காடு என்ற திருத்தலமே 


சிவனின் நாமத்தை சொல்லிக் கொண்டு சிலர் செல்கிறார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்டு கிளிகள் அதைத் திருப்பிச் சொல்கின்றன. 


இதில் என்ன இருக்கிறது. இதில் பக்தி எங்கே இருக்கிறது?


செய்த பாவம் தொலையும், சுவர்க்கம் கிட்டும் என்றெல்லாம் இறந்த நிகழ் காலம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. மனம் எங்கும் அலையவில்லை. சுற்றி பார்க்கிறார். 


இதுதான் தெரிகிறது. 


பக்தர்கள் வருவதும் போவதும், அவர்கள் பாடுவதும், பனை மரம் உயர்ந்து நிற்பதும், அதில் கிளிகள் இருப்பதும்....


அந்த நொடி, அந்த நிகழ்காலம்...அதுதான் புனிதமானது. 


புரிவது கடினம். 


முயலலாம். 




1 comment: