Tuesday, July 9, 2024

திருக்குறள் - கூற்றம் குதித்தலும் கை கூடும்

 திருக்குறள் - கூற்றம் குதித்தலும் கை கூடும் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/07/blog-post_9.html


நமது பெரும்பாலான  துன்பங்களுக்கு  அடிநாதமாக இருப்பது மரண பயம்.  


எந்த துன்பத்தை எடுத்துக் கொண்டாலும், ஆழ்ந்து சிந்தித்தால் அதன் அடியில் இருப்பது மரணம் பற்றிய பயம் என்று தெரிய வரும். 


இப்படி யோசித்துப் பார்ப்போம், மரணமே கிடையாது என்று ஒரு வரம் நமக்கு கிடைத்து விட்டால் எப்படி இருக்கும். பசி, பிணி, ஏழ்மை, எதினாலும் நமக்கு மரணம் வராது என்று இருந்தால் எப்படி இருக்கும்?  


மரண பயம் பெரும் பயம்.


பெரிய பெரிய தவம் செய்தவர்கள் இறைவனிடம் கேட்பது "மரணத்தை வெல்ல வேண்டும்" என்ற வரம் தான். எந்த வரத்தையும் தரவல்ல இறைவன் கூட, "மரணத்தை வெல்லும் வரத்தை மட்டும் இது வரை யாருக்கும் தரவில்லை.". 


பெரிய பெரிய ஞானிகளைக் கூட இந்த மரண பயம் விட்டுவைக்கவில்லை. 


 காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்


என்பார் பாரதியார். 


"மரணப் பிரமாதம் நமக்கு இல்லை" என்பார் அருணகிரி. 


மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை

கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள

சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா

பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே.


"காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் "

என்பார் அபிராமி பட்டர். 


இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க

அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்

குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.

உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே


மரண பயம் எல்லோருக்கும் இருக்கிறது. 


மரணத்தை வெல்ல முடியாது. தோன்றியது இறந்தே தீரும். பின் என்ன செய்வது. 


இந்த பயத்தைத் தாண்டி போய் விட முடியும் என்கிறார்.


தவம் செய்தால் மரணத்தை தாண்டிச் செல்ல முடியும் என்கிறார். 


பாடல் 



கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு


பொருள் 



கூற்றம் = கூற்றுவன், எமன், காலன். உடலையும், உயிரையும் கூறு படுத்துவதால் அவன் கூற்றுவன் 


குதித்தலும் = தாண்டிச் செல்லுதலும் 


கைகூடும் = கை கூடும். முடியும். 


நோற்றலின் = தவம் நோர்பவற்கு 


ஆற்றல் = அந்த ஆற்றலினால் 


தலைப்பட் டவர்க்கு = முனைந்து அடைந்தவர்களுக்கு 


தவம் நோற்று, அதில் வெற்றி கண்டவர்களுக்கு, எமனையும் தாண்டிச் செல்ல முடியும் என்கிறார். 


இங்கே குதித்தலும் என்ற சொல்லை கையாண்டிருக்கிறார். பலர் பல அர்த்தம் சொல்கிறார்கள். பரிமேலழகர் எமனை கடந்து செல்ல முடியும் என்று பொருள் சொல்கிறார். 


சிந்திக்க வேண்டிய சொல். 


1 comment:

  1. கூற்றம் என்றால் கொடிய மரணம் (அகால மரணம்) விபத்துகளினால் ஏற்படும் உடல் சிதையும் மரணம் என்று த்த்துவ ஞானி திரு T G N அவர்கள் கூறுவார். மரணத்தை வெல்ல இயலாது ஆனால் தவத்தினால் கொடிய மரணத்தை வெல்லலாம்.

    ReplyDelete