Wednesday, July 31, 2024

கந்தரநுபூதி - குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

 கந்தரநுபூதி - குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 



நாம் யாரிடம் இருந்துதான் பாடம் கற்றுக் கொள்ள முடியாது?  எல்லோரிடமும் ஏதோ ஒன்று இருக்கிறது நாம் கற்றுக் கொள்ள. 


அசையாமல் நிற்கும் மரமும், மலையும் கூட ஏதோ ஒன்றை நமக்கு சொல்லித் தருகின்றன. 


எத்தனை துன்பம் வந்தாலும், அசையாமல் இரு. உலகை கவனித்துக் கொண்டு இரு. மழையும், வெயிலும், இரவும், பகலும் வரும் போகும். பெரிதாக அலட்டிக் கொள்ளாதே என்று சொல்லாமல் சொல்லி நிற்கின்றன. 


அப்படி இருக்கும் போது மற்றவற்றை பற்றி என்ன சொல்வது?


இன்றைய நவீன உலகில், whatsaap, youtube, wikipedia, internet, என்ற அறிவு எங்கும் விரிந்து கிடக்கிறது. கற்றுக் கொள்ளும் மனம் வந்துவிட்டால் எதில் இருந்தும் கற்றுக் கொள்ளலாம். 


அருணகிரிநாதர் சொல்கிறார், 


முருகா, நீ குரு வடிவில் வந்து எனக்கு அருள் தந்தாய். குரு என்றால் ஏதோ ஒரு ஆள், ஒரு வடிவம் அல்ல. உருவம் உள்ளவனாய், இல்லாதவனாய், இருப்பவனாக, இல்லாதவனாக, மலராக, மலரில் உள்ள மணமாக, மாணிக்கக் கல்லாக, அதில் உள்ள ஒளியாக, உயிராக, உயிர் செல்லும் வழியாக நீ இருந்து நான் செல்லும் இடம் எல்லாம் எனக்கு ஞான உபதேசம் செய்தாய்...இறுதியில் உன்னை எங்கெங்கோ தேடி அலைந்து என் மனக் குகையில் உன்னை கண்டு கொண்டேன்" என்கிறார். 


பாடல் 


உருவா யருவா யுளதா யிலதாய் 

மருவாய் மலராய் மணியா யொளியாய்க் 

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் 

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே . 


பொருள் 


உருவாய் = உருவம் உள்ளவனாக 


அருவாய்  = உருவம் இல்லாத அருபமாக 


உளதாய் = தெய்வம் உண்டு என்று நம்புபவர்களுக்கு உள்ளவனாய் 


இலதாய் = தெய்வம் இல்லை என்று நம்புபவர்களுக்கு இல்லாதவனாய் 

 

மருவாய் = மணமாக 


மலராய் = அந்த மணம் தோன்றும் மலராக 


மணியாக = வைரம் போன்ற மணியாக 


யொளியாய்க் = அந்த மணியில் தோன்றும் ஒளியாக 

 

கருவாய் = அனைத்துக்கும் காரணமாய் 


உயிராய்க் = அந்த அனைத்தையும் நடத்தும் உயிராய் 


கதியாய்  = அந்த உயிர் செல்லும் வழியாக 


விதியாய்க் = எந்த வழியில் எந்த உயிர் செல்ல வேண்டும் என்று நடத்தும் விதியாக 

 

குருவாய் = குருவாய் 


வருவாய் = நீயே வருவாய் 


அருள்வாய் = அருள்செய்வாய் 


குகனே = என் மனமெனும் குகைக்குள் இருப்பவனே 


இந்த உலகம் பொருள்களால் நிறைந்தது. 


சூரியன், சந்திரன், பூமி, வான், கடல், மலை,மரம், வீடு, என்று பொருள்களால் நிறைந்தது. 


பொருள்கள் என்பது குணங்களின் தொகுப்பு. மல்லிகை என்றால் வெண்மையாக இருக்கும், ஒரு குறிப்பிட்ட மணம் வீசும், சின்னதாக இருக்கும். இந்த குணங்களின் தொகுதிதான் பொருள்கள். 


குணங்கள் என்பது நம் மனதில் இருந்து வருவது. ஒருவன் ஒரு உணவை ருசித்து விட்டு என்ன உப்பு உரைப்பே இல்லை என்கிறான். அதை உணவை இன்னொருவன் ஐயோ, காரம் மண்டையைப் பிளக்கிறது என்கிறான். குணம் என்பது மனதில் இருக்கிறது. 


அப்படி என்றால் இந்த உலகம் நம் மனதில் இருக்கிறது. 


"பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுப்பது நமசிவாயவே"


பொருளும், அவற்றின் குணங்களும் அவனே என்பதை அர்பிராமி பட்டரும் சொல்லுவார். 


 மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த

அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்

பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே

பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே


மணியும் அவளே, மணியில் இருந்து வரும் ஒளியும் அவளே

பிணியும் அவளே, பிணிக்கு மருந்தும் அவளே. 


பாடம் சொல்லித் தர இறைவன் இந்த வடிவில்தான் வர வேண்டும் என்று இல்லை. அருணகிரியின் கூற்றுப் படி, இந்த பரந்துபட்ட உலகமே ஒரு ஞானாசிரியன் தான். ஒவ்வொன்றும் நம் நல் வாழ்வுக்கு ஏதோ ஒரு வழியில் பாடம் சொல்லி கொண்டுதான் இருக்கிறது. 

கெட்டவன் கூட இப்படி வாழாதே என்று வழி காட்டுகிறான். 

கற்றுத் தர இந்த உலகம் தயாராக இருக்கிறது.  

ஞானம்தான் அருள். 

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. 

-------------------------------------

இதோடு கந்தர் அநுபூதி முற்றுப் பெறுகிறது. 

பொறுமையுடன் இதுவரை வாசித்தமைக்கு நன்றி.  

1 comment:

  1. அபிராமிப் பட்டரின் பாடலைப் படித்தபின் ஒரு கேள்வி எழுகிறது…
    அவர் ஏன் கடவுளை “பிணியே” என்கிறார்? “பிணிக்கு மருந்தே” என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், பிணியே என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே! ஏதாவது தத்துவ விளக்கம் உண்டா?

    ReplyDelete