Friday, July 19, 2024

பாரதியார் கவிதைகள் - பாப்பா பாட்டு

பாரதியார் கவிதைகள் - பாப்பா பாட்டு 

https://interestingtamilpoems.blogspot.com/2024/07/blog-post_41.html


பல பாடல்களை வாசிப்போம். புரியும். மேலே சென்று விடுவோம். அதில் உள்ள ஆழ்ந்த ஆர்த்தத்தை பார்க்கத் தவறி விடுவோம். 


அப்படி விட்டுப் போன சில பாடல்கள் பின்னாளில் நினைவு வரும். அட, இதை எப்படி விட்டுவிட்டோம் என்று எண்ணம் வரும். 


அப்படி வரும் பாடல்களில் கீழே உள்ள பாரதியின் பாப்பா பாடலும் ஒன்றும்.  


சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;

நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு

நிறை உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும்;

வயிர முடையநெஞ்சு வேணும்;-இது

வாழும் முறைமையடி பாப்பா!


இதில் என்ன சிந்திக்க இருக்கிறது. எளிமையான பாடல் தானே என்று தோன்றும். 


யோசித்துப் பாருங்கள். 


ஒன்றைத் தாழ்த்திச் சொல்வது தவறு. உயர்த்திச் சொல்வதும் தவறாகுமா?


குலத் தாழ்ச்சி சொல்லல் பாவம் என்று சொல்லி இருக்கலாம் 


ஒருவனின் சாதியைப் பற்றி கூறி, நீ தாழ்ந்த சாதியைச் சார்ந்தவன் என்று கூறினால் அது பிழை. பாவம் என்று சொல்லலாம்.


ஒருவனின் சாதியைப் பற்றிக் கூறி, நீ உயர்ந்த சாதியைச் சேர்ந்தவன் என்று கூறுவது தவறாகுமா?


தவறு என்கிறான் பாரதி. 


குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் 


குலத் தாழ்ச்சி சொல்லல் பாவம் என்று சொல்லி இருந்தால் அவன் ஒரு சாதரணக் கவிஞன். 


குல உயர்ச்சி சொல்லலும் பாவம் என்கிறான். 


ஒருவனை உயர்ந்த சாதிக்காரன் என்று சொல்வது பாவம் என்கிறான் பாரதி. 


தாழ்ச்சி சொல்லுவது எந்த அளவு பாவமோ, அதே அளவு பாவம் உயர்த்திச் சொல்லுவதும். 


நான் குலத்தால் உயர்ந்தவன் என்று ஒருவன் நினைத்தால், அவன் பாவம் செய்கிறான் என்று அர்த்தம் என்று பாரதி சொல்கிறான். 



No comments:

Post a Comment