கம்ப இராமாயணம் - மாரீசன் - இராவணன் அறிமுகம்
இந்தக் காலத்துத் திரைப்படங்களில் கதாநாயகனை அறிமுகப்படுத்தும் போது பயங்கர build up இருக்கும். அவருடைய காலைக் காட்டி, அவர் வரும் காரைக் காட்டி, அவர் இருக்கும் பெரிய வீட்டைக் காட்டி, ஒரு பிரமாண்டத்தை மனதில் ஏற்படுத்துவார்கள்.
கதாநயாகன் பெரிய ஆள் என்று காட்டும் உத்திகள்.
இதெல்லாம் கம்பனின் முன் தூசு.
கதாநாயகனை விடுங்கள். வில்லன் இராவணனை, கம்பன் அறிமுகப் படுத்தும் விதத்தைப் பார்த்தால் அசந்து போவோம்.
அப்பேற்பட்ட பெரிய வில்லனை பின்னாளில் கதாநயாகன் வீழ்த்தினான் என்றால் கதாநாயகனாகிய இராமனின் பெருமை எவ்வளவு என்று சொல்லாமலேயே விளங்கும்.
இராமன் ஏதோ ஏப்பை சாப்பையான ஒரு மெலிந்த நலிந்த ஒருவனை வெற்றி கொள்ளவில்லை என்று காட்டவும் அது உதவும்.
இலக்குவனால் தண்டிக்கப்பட்ட சூர்பனகை இலங்கைக்குள் நுழைகிறாள். இராவணனைப் பார்த்து அவனிடம் முறையிட வேண்டும். சூர்பனகையின் எண்ணம் எல்லாம் இராமனை அடைவது. அதற்கு சீதை தடையாக இருக்கிறாள் என்று சூர்பனகை எண்ணினாள். சீதையை இராமனிடம் இருந்து பிரித்து விட்டால், இராமன் தன்னிடம் காதல் கொள்வான் என்பது சூர்பனகையின் எண்ணம்.
எனவே, இராவணனிடம், சீதையின் மேல் காதல் கொள்ளச் செய்து அவளை இராவணன் தூக்கி வந்து விட்டால், பின் இராமன் தனியனாவான், தன் மேல் காதல் கொள்வான் என்ற எண்ணத்தோடு வருகிறாள்.
சூர்பனகை இலங்கைக்குள் வருகிறாள்....கம்பனின் கவிதைகள் மடை திறந்த வெள்ளம் போல் வர இருக்கிறது.
பாடல்
இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை
மறந்தனள், போர் இராமன் துங்க
வரைப் புயத்தினிடைக் கிடந்த பேர் ஆசை
மனம் கவற்ற, ஆற்றாள் ஆகி,
திரைப் பரவைப் பேர் அகழித் திண்
நகரில் கடிது ஓடி, 'சீதை தன்மை
உரைப்பென்' எனச் சூர்ப்பணகை வர, இருந்தான்
இருந்த பரிசு உரைத்தும் மன்னோ.
பொருள்
இரைத்த = ஆராவரம் செய்யும்
நெடும் படை = பெரிய படை
அரக்கர் = அந்தப் படையில் உள்ள அரக்கர்கள்
இறந்ததனை = இராமனோடு சண்டையிட்டு இறந்ததை (கரன் முதலிய வீரர்கள். அது பற்றி பின்னொரு நாளில் சிந்திப்போம்)
மறந்தனள் = சூர்பனகை மறந்து விட்டாள்
போர் இராமன் = போரில் வல்ல இராமனின்
துங்க வரைப் = பெரிய மலை போன்ற
புயத்தினிடைக் = தோள்களுக்கு இடையே
கிடந்த பேர் ஆசை = அணைத்து கிடக்கும் பேராசையால்
மனம் கவற்ற = மனம் வருந்தி (அது முடியாமல் போனதால்)
ஆற்றாள் ஆகி = அந்த வருத்தத்தை பொறுக்க முடியாமல்
திரைப் = அலைகளை எழுப்பும்
பரவைப் = கடல்
பேர் அகழித் = பெரிய அரணாகக் கொண்ட
திண் நகரில் = சிறந்த நகரில் (இலங்கையில்)
கடிது ஓடி = வேகமாக ஓடி
'சீதை தன்மை உரைப்பென்' = சீதையின் அழகை சொல்லுவேன்
எனச் = என்று
சூர்ப்பணகை வர = சூர்பனகை எதிரில் வர
இருந்தான் = இராவணன் இருந்தான்
இருந்த பரிசு = அவன் இருந்த நிலையை
உரைத்தும் = சொல்லுவோம்
மன்னோ = அசைச் சொல்
காமம் தலைக்கு ஏறினால் என்ன ஆகும் என்று இந்தப் பகுதியில் கம்பன் வெகு விரிவாக சொல்ல இருக்கின்றான்.
சூர்பனகைக்கு, இராமன் மேல் காதல். அவனை அடைய சீதை தடை என்று அவள் நினைத்தாள். எனவே சீதையை இராவணன் கொண்டு வந்து விட்டால் தான் இராமனை அடையலாம் என்பது அவள் கணக்கு.
இதில் சில நுண்ணிய விடயங்களை நாம் சிந்திக்கலாம்.
மாற்றான் மனைவியை நினைப்பது, கவர்வது அறம் அற்ற செயல் என்று நாம் படித்து இருக்கிறோம். முதன் முதலாக, மாற்றாள் கணவனை நினைக்கும் ஒரு பெண் பாத்திரத்தை சந்திக்கிறோம்.
இராவணன் செய்த தவறுக்கு மூல காரணம் சீதையின் கணவனை சூர்பனகை விரும்பியது.
இரண்டாவது, வைணவ சம்ப்ரதாயத்தில் பெருமாளையும், பெருமாட்டியையும் சேர்த்தே வணங்க வேண்டும் என்ற மரபு இருக்கிறது. சூர்பனகை, பெருமாட்டியான சீதையை, பெருமானான இராமனிடம் இருந்து பிரிக்க முயல்கிறாள். அது பாவம். அதன் விளைவு என்ன என்று அறிவோம்.
மேலும், கணவன் மனைவி உறவு என்பது புனிதமானது. அதில் மூன்றாவது மனிதருக்கு வேலை இல்லை. சூர்பனகை அந்த உறவுக்குள் மூக்கை நுழைத்தாள். இழந்தாள்.
இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. காப்பியத்தின் ஓட்டத்தோடு அவற்றை சிந்திப்போம்.
(மிக நீண்ட பகுதி. எதையும் விட மனமில்லை. வாசிக்க உங்களுக்குப் பொறுமை இருக்குமா என்று தெரியவில்லை. சோர்வடைந்தால் சொல்லுங்கள்).