Tuesday, March 11, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - குடி கெடுகின்றேன்

 திருவாசகம் - அதிசயப் பத்து - குடி கெடுகின்றேன் 



நாம் ஒரு தவறான காரியத்தைச் செய்கிறோம் என்றால் அது நம்மை மட்டும் பாதிப்பது இல்லை. நம் குடும்பத்தை, பிள்ளைகளை, அவர்களின் பிள்ளைகளை என்று இனி வரும் தலைமுறையையும் சேர்த்துப் பாதிக்கும். 


அது எப்படி?


ஒருவன் நன்றாக உழைக்காமல், ஏதோ வந்தோம் போனோம் என்று வேலை செய்கிறான். ஏதோ சம்பளம் வருகிறது. காலம் ஓடுகிறது.  பிள்ளைகள் சாதாரண பள்ளிகளில் படிக்கிறார்கள்.  உள்ளூரிலேயே ஏதோ ஒரு கல்லூரியில் படிக்கிறார்கள். அங்கேயே வேலை கிடைக்கிறது. 


அவனே முயன்று அதிக உழைப்பை தந்திருந்தால், அதிகம் சம்பாதித்து இருக்கலாம். பிள்ளைகளை பெரிய சிறந்த பள்ளிகளுக்கு அனுப்பி இருக்கலாம். மேற் படிப்புக்கு அயல் நாட்டிற்கு அனுப்பி உலகிலேயே சிறந்த கல்லூரிகளில் படிக்க வைத்து இருக்கலாம். 


அவனுடைய முயற்சின்மை அவனை மட்டும் அல்ல, அவன் குழந்தைகளையும், பேரக் குழந்தைகளையும் பாதிக்கிறது அல்லவா. 


அது போல, 


இறை வழியில் செல்லாமல் கண்ட படி சுத்தித் திரிந்தால், கெடுவது அவன் மட்டும் அல்ல, அவன் குலமே கெடும் என்கிறார் மணிவாசகர். 


இறை வழியில் சென்று உண்மையை உணர்ந்து இருந்தால், அதை தன் பிள்ளைகளுக்குச் சொல்லித் தந்திருப்பான். அவன் அறியாததால் அவன் பிள்ளைகளும் அறியவில்லை. இப்படி பின் வரும் சந்ததிகள் அந்த அறிவை அடையாமலேயே போய் இருக்கும். 


மணிவாசகர் சொல்கிறார் 


"இறைவனை போற்றும் அடியவர்கள் பால் செல்ல மாட்டேன். பூக்களைத் தூவி இறைவனை வழிபடமாட்டேன். மலர் சூடிய பெண்கள் பின்னால் சென்று என் குடியையே நாசம் செய்வேன். அப்படிப்பட்ட என்னை, இரவில், அனலை கையில் ஏந்தி ஆடும் எம் இறைவன், பொன் போல் மின்னும் ஜடா முடி கொண்டவன்,  என்னை ஆட்கொண்டு, தன் அடியவர் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது "


என்று. 


பாடல் 



பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன்; பல் மலர் பறித்து ஏத்தேன்;

குரவு வார் குழலார் திறத்தே நின்று, குடி கெடுகின்றேனை

இரவு நின்று, எரி ஆடிய எம் இறை, எரி சடை மிளிர்கின்ற

அரவன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.


பொருள் 


பரவுவார் = இறைவன் புகழை பாடுவார், சொல்லுவார் 


அவர் பாடு = அவர்களிடம் 


சென்று அணைகிலேன் = சென்று அவர்களோடு சேர்ந்து இருக்க மாட்டேன் 


பல் மலர் பறித்து = பல விதமான மலர்களைப் பறித்து 


ஏத்தேன் = உன்னை புகழ மாட்டேன் 


குரவு வார் = குரவு என்ற மலர்களை அணிந்த 


குழலார் = நீண்ட குழல் உடைய பெண்கள் 


திறத்தே நின்று = அவர்கள்பால் சென்று, அவர்களோடு இருந்து 


குடி கெடுகின்றேனை = என் குடியோடு கெடுகின்ற என்னை 


இரவு நின்று = நள்ளிரவில் 


எரி ஆடிய = எரியும் சுடுகாட்டில் திருநடனம் புரியும் 


எம் இறை = என்னுடைய இறைவன் 


எரி சடை மிளிர்கின்ற அரவன் = ஒளி வீசும் சடை முடி உடையவனை, பாம்பை அணிகலனாக அணிந்தவனை  


 ஆண்டு = என்னை ஆட்கொண்டு 



தன் அடியரில் கூட்டிய = தன்னுடைய அடியவர்களில் என்னையும் ஒருவனாக சேர்த்துக் கொண்ட 


அதிசயம் கண்டாமே = அதிசயத்தைக் கண்டேன் 


அடியவர்களோடு சேர்ந்து இருப்பது, மலர் தூவி வழிபடுவது - நல்ல நெறி 


பெண்கள் பின்னால் சுற்றுவது = தீ நெறி 


சரி, அப்படி என்றால் பெண்களுக்கு என்று ஒன்றும் சொல்லவில்லையா? பெண்கள் ஆண்கள் பின்னால் சுற்றலாமா? ஏன் எப்போதும் பெண்களையே பற்றி பேசுகிறார்கள். 


பல காரணங்கள் இருக்கலாம். எனக்குத் தெரிந்தவரை, பெண் பின்னால் போவது, அல்லது பெண் சுகம் தேடுவது என்பது ஒரு குறியீடு. அதாவது புலன் இன்பங்களின் பால் போகாமல் இருப்பது. 


வேறு ஏதாவது சொல்லலாமே, ஏன் பெண்களை முன்னிறுத்தி சொல்ல வேண்டும்?


சொல்லலாம். ஆனால் அந்த மாதிரி இன்பங்கள் எல்லோருக்கும் ஆசை இருக்குமா என்று தெரியாது. 


உதாரணமாக, "மது அருந்தி கேடு அடையும் என்னை" என்று சொல்லலாம். அப்படிச் சொன்னால், மது அருந்தாத பலர் இருப்பார்கள். அவர்கள் "மாணிக்க வாசகர் சொல்லுவது நம்மை அல்ல" என்று நினைத்துக் கொள்வார்கள். பெரும்பாலானோருக்கு பொதுவான ஒன்று என்றால் அது ஆணுக்கு பெண் மேல் உள்ள ஈர்ப்பும், பெண்ணுக்கு ஆண் மேல் உள்ள ஈர்ப்பும். 


உண்பது, உறங்குவது, மது, புகை பிடித்தல் போன்றவை பெரிய அளவில் மாறுபாடு இருக்கும். ஆண் பெண் கவர்ச்சி எல்லோருக்கும் உள்ள ஒன்று. 


சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும், ஏன் ஆணுக்கு பெண் மேல் உள்ள கவர்ச்சியை மட்டும் பேச வேண்டும். பெண்ணுக்கு ஆண் மேல் உள்ள கவர்ச்சி பற்றி பேசக் கூடாதா?


பேசலாம். 


ஆனால், ஒரு வயதுக்குப் பின், இயற்கையிலேயே பெண்ணுக்கு ஆண் மேல் உள்ள ஈர்ப்பு குறைந்து போகிறது. வயதான காலத்தில், ஆன்மீகத்தில் ஈடுபடும் நாட்களில், ஆணின் ஈர்ப்பு, பெண்ணை வெகுவாக பாதிப்பது இல்லை. அது இயற்கையிலேயே அமைந்த ஒன்று. ஆணுக்கு அப்படி இல்லை. இனக் கவர்ச்சி என்பது ஆணுக்கு மிக நீண்ட நாட்கள் இருக்கும். எனவே அது ஒரு தடை. எனவே, அது பற்றி வெகுவாக பேசப் படுகிறது. 


நான் தவறாகக் கூட இருக்கலாம்.  ஒரு சிந்தனை என்ற அளவில் அது பற்றி யோசிக்கலாம். சரி தவறு என்று வாதிக்க அல்ல. 


 

Sunday, March 2, 2025

திருக்குறள் - எல்லா அறமும்

 திருக்குறள் - எல்லா அறமும் 

https://interestingtamilpoems.blogspot.com/2025/03/blog-post.html



நான் அற வழியில் வாழ விரும்புகிறேன். எப்படி வாழ்ந்தால் அது அற வாழ்வு ஆகும் என்று ஒரு பட்டியல் தாருங்கள் என்று கேட்டால் யாராலும் தர முடியாது. இது தான் அறம் என்று வரையறுத்துக் கூற முடியாது. 


சரி, அது போகட்டும்...எது அறம் அல்லாதது என்று ஒரு பட்டியல் தர முடியுமா என்றால் அதுவும் முடியாது. 


பரிமேலழகரைக் கேட்டால், 'மனு முதலான நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும் ' என்று கூறுவார். 


அந்த நூல்களின் பட்டியலைப் போட்டு, அதில் விதித்தன எது விலக்கியன எவை என்று கண்டு பிடிக்க ஒரு வாழ்நாள் போதாது. 


இப்படி சிக்கல் நிறைந்த ஒரு வழிமுறையைச் சொன்னால் அதன் படி எப்படி வாழ முடியும் ?


அது அங்கேயே நிற்கட்டும். 


நீங்கள் புதிதாக ஒரு வேலையை செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்...சைக்கிள் ஓட்டுவது, கார் ஓட்டுவது, இசைக் கருவி வாசிப்பது, உடற் பயிற்சி செய்வது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். முதலில் ரொம்ப கடினமாக இருக்கும். போகப் போக நாம், அதைப் பற்றிய சிந்தனையே இல்லமால் செய்துவிடுவோம். சைக்கிள் ஓட்டும் சிறுவனைப் பாருங்கள். அவன் எப்படி ஓட்டுவது என்று சிந்திப்பதே இல்லை. இயல்பாக நடக்கும். 


அது போல நம் வாழ்க்கை முறையை ஆக்கிக் கொண்டால்? நம் இயல்பே அற வழியில் வாழ்வது என்று ஆகி விட்டால், ஒவ்வொரு முறையும் அது பற்றி யோசிக்கவே வேண்டாம். 


அதற்கு ஒரு வழி இருக்கா என்றால் இருக்கு, அதுவும் மிக எளிய வழி என்கிறார் வள்ளுவப் பேராசான். 


பாடல் 


பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை

எல்லா அறமும் தரும்.


பொருள் 


பொய்யாமை  = பொய் கூறாமல் இருத்தல் 


அன்ன = அது போன்ற 


புகழ்இல்லை  = புகழைத் தருவது வேறு எதுவும் இல்லை 


எய்யாமை = அறியாமை 


எல்லா அறமும் தரும் = எல்லா அறமும் தரும்.


முதல் பகுதி புரிகிறது. பொய் சொல்லாமல், உண்மை மட்டுமே சொல்லவதைப் போல ஒருவன் நல்ல புகழ் அடைய வேறு ஒரு மார்க்கம் இல்லை. 


புரிகிறது. 


அது என்ன அறியாமை எல்லா அறமும் தரும்?


மிக நுணுக்கமான இடம். 


அதாவது, உண்மை சொல்வது என்ற ஒன்றை மட்டுமே ஒருவன் கடைபிடித்துக் கொண்டு இருந்தால், அவன் அறியாமலேயே அது மற்ற எல்லா அறச் செயல்களின் பலன்களையும் தானே கொண்டு வந்து சேர்க்கும். 


புத்தகம் படிக்க வேண்டாம், தான தர்மம் செய்ய வேண்டாம், பூசனை, பஜனை செய்ய வேண்டாம்...ஒன்றும் செய்ய வேண்டாம். 


உண்மை மட்டுமே பேசுவது என்று வைத்துக் கொண்டால், ஒருவனுக்கு அவன் அறியாமலேயே மற்ற அனைத்து அறங்களின் பலனும் கிடைத்து விடும் என்கிறார். 


அது எப்படி?


உண்மை மட்டுமே சொல்லும் ஒருவனால் ஒரு தவறும் செய்ய முடியாது. ஒரு தவறும் செய்யாவிட்டால் மனம் சுத்தமாக இருக்கும். மனம் சுத்தமானால் சொல்லும், செயலும் சுத்தமாகும். 


மனம், மெய், மொழி சுத்தமானால் வேறு என்ன அறம் செய்ய வேண்டும்?  


மனிதன் செய்யும் பல தவறுகளுக்குக் காரணம், செய்ததை மாத்தி ஏதாவது பொய் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே. உண்மை மட்டுமே சொல்லுவது என்று வைத்துக் கொண்டால் தவறு செய்ய முடியாது. 


ஒரு நாள். ஒரே ஒரு நாள் முயன்று பாருங்கள். இந்தக் குறளின் ஆழம் புரியும் 


 



Thursday, February 27, 2025

திருவாசகம் - பித்தன்

 திருவாசகம் - பித்தன் 


அதிக பிரசங்கித்தனம் என்று கேட்டு இருக்கீர்களா?  இன்று நான் செய்ய இருப்பதுதான் அது. 


இதை அதிகப் பிரசங்கித்தனம் என்று தள்ளாமல் ஏதோ அறியாப் பிள்ளை உளறுகிறது என்று பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 


ஏன் என்று பின்னால் சொல்கிறேன். 


போகின்ற வழியில் ஒரு நல்ல உயர்தர உணவு விடுதி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பசிக்கிறது. உணவின் வாசம் மூக்கைத் துளைகிறது. நெய் வாசம், முந்திரிப்பருப்பு, ஏலக்காய் போன்றவற்றின் நறுமணம் உங்களை அழைக்கிறது. விலை ஒன்றும் அதிகம் கிடையாது. தூய்மையான விடுதி. பரிவான சேவை. 


அதில் இருந்து கொஞ்சம் தள்ளி, தெருவோரம் ஈ மொய்க்கும் ஒரு கடை. உணவு வகைகள எல்லாம் திறந்து கிடக்கிறது. ஒரு அழுக்குத் துணியைப் போட்டு மூடி இருக்கிறார்கள். தூசி படிந்த தட்டு, குவளை. பார்த்தாலே குமட்டுகிறது. 


முதலில் உள்ள விடுதியை விட்டு விட்டு இரண்டாவது விடுதியில் போய் யாராவது உண்பார்களா?  அப்படி உண்பவர்களை என்ன என்று சொல்லுவது?  பித்தன், பைத்தியக்காரன்  என்று தானே  சொல்ல முடியும்?


மணிவாசகர் சொல்கிறார், 


"இறைவா, உன் அடியவர்கள் சென்ற பாதையில் சென்று, உன் திருவருளை அடைய முயற்சிக்காமல், இந்த பிறவிக் கடலில் விழுந்து அழுந்தும் என்னை, பாவங்கள் பல செய்து நரகுக்கு போக இருந்த என்னை பித்தன் என்று ஊரார் சொல்லுவது சரிதானே.  இறையருள் அடைய வழி தெரிந்தும் அந்தப் பாதையில்  செல்லாமல்,   இந்த உலக வாழ்வில் கிடந்து உழன்று, பாவங்கள் செய்யும் என்னை பைத்தியம் என்று சொல்லாமல் என்ன என்று சொல்லுவது. அப்படிப் படி நரகில் விழ இருந்த என்னை, எப்படி நீ காப்பாற்றி, அருள் செய்து, ஆண்டுகொண்டாய்...என்ன ஒரு அதிசயம்...பைத்தியத்துக்கு அருள் புரிந்த அதிசயம் " என்று வியக்கிறார். 


பாடல் 


`பித்தன்' என்று, எனை உலகவர் பகர்வது ஓர் காரணம் இது கேளீர்:

ஒத்துச் சென்று, தன் திருவருள் கூடிடும் உபாயம் அது அறியாமே,

செத்துப்போய், அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை,

அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!


பொருள் 


`பித்தன்' என்று, = பித்து பிடித்தவன் என்று 


எனை  = என்னை 


உலகவர் = உலகில் உள்ளவர்கள் 


பகர்வது = சொல்வதற்கு 


ஓர் காரணம் = ஒரு காரணம் இருக்கிறது 


இது கேளீர் = அது என்ன என்று கேளுங்கள் 


ஒத்துச் சென்று = இறைவனின் அடியவர்கள் பாதையில் சென்று 


தன் திருவருள் = அவனுடைய திருவருளை 


கூடிடும் = அடைந்திடும் 


உபாயம் அது அறியாமே = அந்த வழியை அறியாமல் 


செத்துப்போய் = பிறந்து, இறந்து 


 அரு நரகிடை  = கொடுமையான் நரகத்தில் 


வீழ்வதற்கு  = வீழ்வதற்கு 


ஒருப்படுகின்றேனை  = உடன்படும் என்னை 


அத்தன் = என் அத்தன் 


 ஆண்டு = ஆட்கொண்டு 


 தன் அடியரில் = அவனுடைய அடியவர் கூட்டத்தில் 


கூட்டிய = என்னையும் சேர்த்துக் கொண்ட 


அதிசயம் கண்டாமே = அதிசயத்தை நான் கண்டேன் !



இதில் அதிகப் பிரசங்கித்தனம் எங்கே வந்தது?


எனக்கு இதில் கொஞ்சம் மாற்றி யோசித்தால் என்ன என்று தோன்றுகிறது. அதுதான் அதிகப் பிரசங்கித்தனம் என்று முதலிலேயே சொல்லிவிட்டேன். 


பக்தர்கள் பித்து பிடித்தவர்கள் போல் இருப்பது பெரிய அதிசயம் இல்லை. சாதாரண ஆண் பெண் காதல் கொண்டவர்களே கொஞ்சம் பித்து பிடித்தவர் போல புலம்புவதை கேட்டிருக்கிறோம். இறைவன் மேல் பக்தி என்றால் கேட்க வேண்டுமா? அது அதிசயமா? 


இறைவன் அடியவர்களுக்கு அருள் புரிவதும் அதிசயம் அல்ல. பின் எதைப் பார்த்து மணிவாசகர் அதிசயிக்கிறார்?


"`பித்தன்' என்று, எனை உலகவர்"


என்று இருப்பதை 


`பித்தன்' என்று, உனை உலகவர்"


அதாவது எனை என்பதை உனை என்று மாற்றிப் பொருள் கொண்டால் என்ன? 


அப்படிப் பார்த்தால் அதிசயப்பட நிறைய இடம் இருக்கிறது. 


"சிவ பெருமானை உன்னை பித்தன் என்று உலகோர் சொல்லுவது சரிதான். எவ்வளவோ நல்லவர்கள் இருக்க, ஒன்றும் இல்லாத என்னை ஆட்கொண்டு, உன் அடியவர்களோடு சேர்த்துக் கொண்டாயே, உன்னை பித்தன் என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்லுவது"...என்று வியக்கிறார் அடிகளார். 


சிவனுக்கு பித்தன் என்று பெயர் இருக்கிறது. 


"பித்தா பிறை சூடி" என்று சுந்தரரும் பாடி இருக்கிறார். 


"அத்தனே! அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே! யாதும் ஈறு இல்லாச் சித்தனே!

பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே! சிவபெருமானே!

பித்தனே! எல்லா உயிரும் ஆய்த் தழைத்து, பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும்

எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே"


என்று மணிவாசகரும் பாடி இருக்கிறார். 


அது மட்டும் அல்ல, 


நமக்கு எல்லாம் எங்கே அவன் அருள் செய்யப்போகிறான் என்று சந்தேகம் கொள்ள வேண்டாம், அவன் கட்டாயம் அருள் செய்வான். ஆள் தராதரம் பார்ப்பது இல்லை அவன். ஏன் என்றால் அவன் ஒரு பித்தன். இப்படியும் ஒரு கடவுள் என்று அதிசயிக்கிறார் அடிகளார். 



Saturday, February 22, 2025

கந்தரலங்காரம் - வேன்மறவேன்

கந்தரலங்காரம் - வேன்மறவேன் 



உடுக்கை ஒலி கேட்டு இருகிறீர்களா?  டுண் டுண் டுண் என்று அடிக்கும். அதையே கொஞ்சம் மெல்லமாக, வேகமாக, அழுத்தமாக அடித்தால் அந்த சத்தமே வேறு வேறு விதத்தில் கேட்கும். அந்த சத்தத்தை மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். 


அது ஒரு சுடுகாடு. இரவு நேரம். அங்கொன்றும், இங்கொன்றுமாக பிணங்கள் எரித்து கொண்டு இருக்கின்றன. அந்த சிதைகளில் இருந்து நெருப்பு எழுந்து காற்றில் சுழன்று மேலே செல்கிறது. புகை ஒரு பக்கம். அந்த இடு காட்டில் பேய்கள் அங்கும் இங்கும் ஓலமிட்டுக் கொண்டு அலைகின்றன. 


அவை உடுக்கு அடிப்பதைப் போல டுண் டூண் டுண் என்று சப்தமிடுகின்றன. எங்கு தெரியுமா சூராதி அசுரர்களை கொன்று புதைத்த சுடுகாட்டில். 


அசுரர்களை யார் கொன்றது?  முருகப் பெருமான். 


அந்த முருகப் பெருமானை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்  என்கிறார். 


ஒரு போதும் என்றால் ஒரு போதுமா?  எப்போதும் எப்படி நினைக்க முடியும்?  அந்த ஒரு போதும் என்பதற்கு ஏதாவது வரையறை, விலக்கு இருக்கிறதா?  


இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் தருகிறார் அருணகிரியார். 


இளம் பெண்களோடு சேர்ந்து கலவியில் ஈடுபட்டு, அதில் களைத்து, சோர்ந்து போய் இருக்கும் அந்த நேரத்தில் கூட முருகனை மறக்க மாட்டேன் என்கிறார். 


"கற்கண்டு போன்ற இனிமையான குரல் உடைய மென்மையான பெண்களோடு கலவியில் ஈடுபட்டு, அந்த இன்பக் கள்ளை மொண்டு மொண்டு குடித்து களைத்து, அயர்ந்து போய் இருக்கும் அந்த வேளையிலும், பேய்கள் நடமாடும் சுடுகாட்டில் சூராதி அரக்கர்களை கொன்று புதைத்த முருகனை மறக்க மாட்டேன்" என்கிறார். 


பாடல் 



 

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை

மொண்டுண் டயர்கினும் வேன்மற வேன்முது கூளித்திரள்

டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு

டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.


பொருள் 


கண்டுண்ட = கற்கண்டை உண்டது போன்ற 


சொல்லியர் = இனிய குரலை உடைய 


மெல்லியர் = மென்மையான பெண்கள் 


காமக் கலவிக் கள்ளை = அவர்களோடு காம கலவியில் ஈடுபட்டு, அந்தக் காமமாகிய கள்ளை  


மொண்டுண் டயர்கினும் = மொண்டு உண்டு அயர்ந்து இருக்கும் அந்த நேரத்திலும் 


வேன்மற வேன் = வேலை மறவேன் 


முது  = வயது முதிர்ந்த 


கூளித் = ஆண் பேய் 


திரள் = கூட்டமாக திரண்டு 


டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு

டிண்டிண் = என்று சப்தம் இட்டுக் கொண்டு 

 


டெனக் = என்று 


கொட்டி யாட = கை கொட்டி ஆட 


வெஞ் = கொடுமையனா 


சூர்க்கொன்ற = சூரர்களை கொன்ற 


ராவுத்தனே = இராவுத்தனே 


அடிக்கடி முருகனை ராவுத்தன் என்பார் அருணகிரி. 


இராவுத்தன் என்பவன் குதிரை விற்பவன். முருகன் எங்கே குதிரை விற்றான். 


மாணிக்க வாசகருக்காக சிவ பெருமான் நரிகளை பரிகளாக்கி (குதிரைகள்) பாண்டிய மன்னனிடம் விற்றான். அப்பா குதிரை வியாபாரி என்பதால் மகனும் இராவுத்தன். 


அது ஒரு பக்கம் இருக்கட்டும். 


இந்தப் பாடலுக்கு எனக்கு இன்னொரு விளக்கம் தோன்றுகிறது. சரியா தவறா என்று தெரியவில்லை. 


ஒருவன் தன் மனைவியிடம் இல்லற சுகம் அனுபவிக்கிறான். ஐந்து புலன்களுக்கும் இன்பம் தருவது ஆண் பெண் இன்பம் என்பது வள்ளுவர் வாக்கு. 


அது சிற்றின்பம். 


இந்தச் சிற்றின்பமே இவ்வளவு இன்பமாக இருக்கிறதே, இறைவன் திருவடி என்ற பேரின்பம் எப்படி இருக்கும் என்று அந்த நேரத்தில்  எண்ணிப் பார்க்கிறார். 


இன்னொன்று, சிற்றின்பத்தில் மனிதன் தன்னையே மறந்து போகிறான். அந்த நேரத்தில் கூட இறைவனை நினைக்கிறேன் என்கிறார். 


இன்னொன்று, இந்த அழகான பெண்கள், என் இளமை, இந்த இனிமை எல்லாம் சீக்கிரம் தீர்ந்துவிடும். எல்லாம் அழிந்து இடுகாட்டுக்குப் போய் விடும். எது நிரந்தரம்?  இறைவன் ஒருவனே நிரந்தரம் என்று அந்த நேரத்திலும் இது எல்லாம் நிரந்தரம் அல்ல என்ற ஞானம் பிறக்கிறது. 


மகான்கள் மனதில் என்ன ஓடும் என்று நாம் எப்படி அறிவது?


வெறுமனே சொல்லுக்கு அர்த்தம் சொல்லிவிட்டுப் போய் விடலாம்...



Thursday, February 20, 2025

திருக்குறள் - மனோத்தொடு வாய்மை

 திருக்குறள் - மனோத்தொடு வாய்மை 


இந்த உண்மை பேசுவது, உண்மை பேசுவது என்று சொல்கிறார்களே, அது வாயால் பேசுவது மட்டும் தானா?  


ஒருவன் "நான் தொழில் தொடங்கலாம் என்று இருக்கிறேன். இன்ன தொழில் செய்யப் போகிறேன். அதுக்கு கொஞ்சம் முதல் வேண்டும். நீங்கள் உதவி செய்ய முடியுமா " என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உதவி செய்யும் நிலையில் இருப்பவருக்கு அந்த தொழில் பற்றித் தெரியும். அதில் இலாபம் வராது என்று தெரியும். தெரிந்தும், சொல்லமால், "அதுக்கு என்ன தாராளமாய் செய்யுங்கள்" என்று சொல்லி கொஞ்சம் பணமும் கொடுக்கிறார். பணம் பெற்றுக் கொண்டவர் தொழில் தொடங்கி நட்டப் பட்டு நடுத் தெருவில் வந்து நிற்கிறார். 


உதவி செய்தது தவறா என்றால் இல்லை. ஆனால், மனதில் "நல்லா நட்டப் படட்டும் " என்று நினைத்துக் கொண்டே செய்த உதவி நல்லது அல்ல. 


அது போல் சொல்லால் நல்லது போலத் தோன்றினாலும், மனம் நல்லதாக இருக்காது. 


வள்ளுவர் சொல்கிறார் 


"மனத்தோடு கூடி வாய்மை சொல்வது என்பது தானம், தவம் இவை இரண்டும் செய்வதை விட உயர்ந்தது " என்று 


பாடல் 


மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானம்செய் வாரின் தலை


பொருள் 



மனத்தொடு = மனத்தோடு கூடி 


வாய்மை மொழியின் = உண்மை சொன்னால் 


தவத்தொடு = (அது) தவத்தொடு 


தானம் = தானம் 


செய் வாரின் தலை = செய்வதை விட உயர்ந்தது 


கொஞ்சம் இலக்கணம் படிக்கலாமா?  


எழுத்துகள் சேர்ந்து சொற்கள் உருவாகின்றன. 


சொற்கள் சேர்ந்து வாக்கியம் உண்டாகிறது. 


இந்த சொற்களை ஒட்ட வைக்க ஒரு பசை வேண்டும். 


உதாரணமாக ஒருவன் வேகாமாக ஓடினான் என்று சொல்வதற்கு "மானைப் போல் ஓடினான்" என்கிறோம். 


இதில் "போல்" என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?  அது இந்த மானையும், ஓட்டத்தையும் சேர்த்து வைத்து பொருள் தருகிறது. அதற்கு உவம உருபு என்று பெயர். 


சுக்ரீவனைப் போல் அல்ல வாலி  என்று சொல்லும் போது இருவருக்கும் உள்ள  வேற்றுமையை நாம் காட்டுகிறோம். அது வேற்றுமை உருபு. 


இப்படி பலப் பல உருபுகள் தமிழில் உண்டு. மிக சுவாரசியமானவை. அவை நம் எழுத்தை மேலும் அழகு படுத்தும். 


இங்கே 'ஒடு' என்று உருபு இரண்டுதரம் வந்து இருக்கிறது. 


மனத்தொடு 

தவத்தொடு 


மனத்தொடு என்பதில் மனம், மொழி, மெய் இந்த மூன்றாலும் வாய்மை பேச வேண்டும்,


தவத்தொடு என்பதில் தானம் மற்றும் ஏனைய சிறப்பு அம்சங்கள் சேர்ந்து இருக்கின்றன. 


மன மொழி மெய்யால் வாய்மையுடன் இருப்பது எல்லாவற்றிலும் சிறந்தது. 



Wednesday, February 19, 2025

நாலடியார் - தீவினையச்சம் - இடுகாடு

 நாலடியார் - தீவினையச்சம் - இடுகாடு 


சுடுகாடு. 


அங்கே என்ன இருக்கும். பிணங்களை, குழி தோண்டி புதைத்து இருப்பார்கள். சுடுகாட்டை எங்கு தோண்டினாலும் பிணம்தான் இருக்கும். 


எங்கே பிணங்கள் புதைத்து வைக்கப் பட்டு இருக்கிறதோ, அந்த இடம் சுடுகாடு. சரி தானே?


விலங்குகளை கொன்று தின்பவர்களின் வயிறும் சுடுகாடு போன்றது என்கிறது நாலடியார். வயிற்றினுள் இறந்த பிணங்களை புதைத்து வைப்பதால் அவையும் சுடுகாடு தான் என்கிறது நாலடியார். 


பாடல்  


துக்கத்துள் தூங்கித் துறவின்கட் சேர்கலா

மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க

விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட

புல்லறி வாளர் வயிறு.


பொருள் 


துக்கத்துள் தூங்கித் = துன்பத்துள் அழுந்தி, அப்படி துன்பத்தில் கிடக்கிறோம் என்பது கூடத் தெரியாமல் இருந்து 


துறவின்கட் சேர்கலா = உயர்ந்த துறவு நெறியில் சேராமல் 


மக்கள் பிணத்த சுடுகாடு = இறந்த மனிதர்களை புதைக்கும் சுடுகாடு 


தொக்க = போல 


விலங்கிற்கும்  = விலங்கினங்களுக்கும் 


புள்ளிற்கும் = பறவைகளுக்கும் 


காடே = இறந்த பின் புதைக்கும் சுடுகாடே 


புலன்கெட்ட = புலன்கள் அழிந்து 


புல்லறி வாளர் = சிறந்த அறிவினை இல்லாதவர் 


வயிறு = அவர்களின் வயிறு 


உயிர்களை கொன்று தின்பதை தீவினை என்கிறது இந்தப் பாடல். 


மாமிசம் உண்பது சரியா தவறா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. என்றேனும் ஒரு முடிவு வருமா என்று தெரியவில்லை. 


தெளிவான முடிவு வரும்வரை என்ன செய்வது? 


அவரவர்க்கு சரி என்று பட்டதைச் செய்யலாம். 


அல்லது 


நம்மைவிட அறிவில் முதிர்ந்த சான்றோர் சொல் கேட்டு நடக்கலாம். 


நாலடியார் போன்ற நூல் வழி நிற்கலாம். 




Tuesday, February 18, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - எளியவன் அடியார்க்கு

திருவாசகம் - அதிசயப் பத்து - எளியவன் அடியார்க்கு 



பெரும்பாலனோர் நினைப்பது என்னவென்றால், ஏதாவது பாவம் செய்து விட்டால், அதற்கு ஒரு பரிகாரம் செய்து அந்த பாவத்தில் இருந்து தப்பி விடலாம் என்று. 


உதாரணமாக, கோவிலில் காணிக்கை செலுத்துவது, அன்ன தானம் செய்வது, நாலு ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற நல்ல காரியங்கள் செய்தால் தாங்கள் செய்த பாவம் போய் விடும் என்று நினைக்கிறார்கள். 


அது அப்படி அல்ல. 


பாவக் கணக்கு வேறு, புண்ணியக் கணக்கு வேறு. இரண்டையும் கலக்க முடியாது. 


பாவம் செய்தால் அதற்கு உரிய தண்டனை உண்டு. 


புண்ணியம் செய்தால் அதற்கு ஏற்ற பலன் உண்டு. ஒன்றை ஒன்று சரி செய்ய முடியாது. 


ஒரு கொலை செய்து விட்டு, உண்டியலில் பத்து இலட்சம் போட்டு விட்டால் கொலை பாதகம் போய் விடுமா?


போகாது. 


பாவத்தை அனுபவிக்க பிறக்க வேண்டும். 


புண்ணியத்தை அனுபவிக்கவும் பிறக்க வேண்டும். 


"அறம், பாவம் என்னும் அருங் கையிற்றால் கட்டி"  என்பார் மணிவாசகர். இரண்டும் நம்மை பிறவியோடு சேர்த்துக் கட்டும். ஒன்றை ஒன்று அவிழ்த்து விடாது. 




பின் இந்தப் பிறவிச் சுழலில் இருந்து எப்படித்தான் தப்பிப்பது?


ஒரே வழி, இறைவன் நினைத்தால், நம் புண்ணிய பாவங்கள் நம்மைத் தொடர்வதை நிறுத்த முடியும். 


"அவன் தாள் பட்டழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே"


என்பார் அருணகிரிப் பெருமான். 


இறைவன் திருவருள் இருந்தால் முன்வினைப் பயன் நீங்கும். நாமே ஒன்றும் செய்து கொள்ள முடியாது. 


மணிவாசகர் சொல்கிறார், 


"யாராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாத என் தந்தை, தாய் போன்ற சிவ பெருமான், என் முன்வினைகளை துடைத்து, என்னை ஆண்டுகொண்டு, என்னையும் தன் அடியாரோடு சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்ன சொல்லுவேன்"


என்று. 


 

பாடல் 


முன்னை என்னுடை வல்வினை போயிட முக்கண துடையெந்தை

தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப்

பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதி யதுவைத்த

அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.


பொருள் 


முன்னை  = முன்பு 


என்னுடை = என்னுடைய 


வல்வினை = கொடுமையான வினைபயனை 


போயிட = என்னை விட்டு போயகல 


முக்கண துடையெந்தை = மூன்று கண்களை உடைய என் தந்தை 


தன்னை = அவனை 


யாவரும் = யாராலும் 


அறிவதற் கரியவன் = அறிவதற்கு அரியவன். அறிய முடியாதவன் 


எளியவன் = ஆனால், அவன் எளியவன் 


அடியார்க்குப் = அடியவர்களுக்கு 



பொன்னை  = பொன்னின் நிறத்தை 


வென்றதோர் = வென்றது போன்ற 


புரிசடை =  நீண்ட சடை 


முடிதனில் = முடியில் 


இளமதி யதுவைத்த = பிறைச் சந்திரனை சூடிய 


அன்னை = என் அன்னை போன்றவனை 


ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரிற் = அவனுடைய அடியவர் கூட்டத்தில் 


கூட்டிய = என்னையும் சேர்த்துக் விட்ட 


 அதிசயங் கண்டாமே = அதிசயத்தை கண்டு வியகின்றேன் 


பல பக்திப் பாடல்களில் இறைவனை அம்மையே, அப்பா என்று அழைப்பதை கண்டிருக்கிறோம். 


ஏன் அப்படி?


என் பிறவிக்கு காரணமான தந்தை, தாய் இருக்கிறார்கள். நான் அவர்களோடு என்னை அடையாளம் கொண்டால், அவர்கள் மதம் என் மதம் என்று ஆகும், அவர்கள் ஜாதி என் ஜாதி என்று ஆகும், அவர்கள் நாடு என் தாய் நாடு என்று ஆகும். நான் ஒரு சிறு வலையில் மாட்டிக் கொள்வேன். 


நான் ஒரு இந்து, இந்தியன், இன்ன குலத்தில் பிறந்தவன், இன்ன மொழி எனக்குத் தாய் மொழி என்று ஆகி விடும். அதை விட்டு என்னால் வெளியே வர முடியாது. 


உண்மையைக் கண்டறிய இது ஒரு பெரிய தடை. 


நம் மதம் சொல்வதுதான் நமக்குச் சரி என்று படும்.மற்றவை எல்லாம் தவறென்று படும். 


இறைவன் எனக்குத் தாய், தந்தை என்று கொண்டால், எல்லோரும் சமம். சமயம் இல்லை, ஜாதி இல்லை, இன மொழி வேறுபாடு இல்லை. உண்மையைத் தேடி சுதந்திரமாகச் செல்லலாம். 



Friday, February 14, 2025

திருக்குறள் - வாய்மை - உள்ளத்துள் எல்லாம் உளன்

 திருக்குறள் - வாய்மை - உள்ளத்துள் எல்லாம் உளன் 



ஏன் வாய்மை பேச வேண்டும்?  அதனால் என்ன பயன் ? உண்மை பேசினால் நாலு காசு சம்பாதிக்க முடியுமா?  பலன் இல்லாமல் ஒரு காரியத்தை ஏன் செய்ய வேண்டும் ?


என்பன போன்ற கேள்விகள் எழலாம். அவை  நியாயமான கேள்விகளும் கூட.


வள்ளுவர் கூறுகிறார்....


"ஒருவன் தன் மனம் அறிய பொய் சொல்லாமல் இருப்பானானால், அவன் இந்த உலகில் எல்லோர் மனத்திலும் இருப்பான்" 


என்று. 


பாடல் 

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்


பொருள் 


உள்ளத்தால் = மனதினால் 


பொய்யாது ஒழுகின்  = பொய் சொல்லாமல்  வாழ்ந்து வந்தால் 


உலகத்தார் = உலகில் உள்ளவர்களின் 


உள்ளத்துள்  எல்லாம் = எல்லார் உள்ளத்திலும் 


உளன் = இருப்பான். 


சில பேர் நல்லவர்களை கேலி செய்வார்கள். "அவன் பாவம் ஒரு அப்பிராணி. ஒண்ணும் தெரியாது. நெளிவு சுளிவு தெரியாது.  நாலு காசு பாக்கத் தெரியாத அப்பாவி" என்று அவனைப் பார்த்து பரிதாபப் படுவார்கள். 


பரிமேலழகர் சொல்கிறார் "உலகத்தார்" என்றால் உலகில் உள்ள உயர்ந்தோர் என்று. 


அயோக்கியனுக்கு அயோக்கியத்தனம் தான் பிடிக்கும். "அடா, அவன் கில்லாடி, எப்படி காவல் அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு தப்பிச்சு வந்துட்டான்..." என்று களவாணிப் பயல்களை பெரிதாக பேசுவார்கள். பாராட்டுவார்கள். 


அவர்கள் மனதில் இடம் பிடிப்பது அல்ல நம் வேலை. 


ஒரு தவறான வழியில் பணம் சேர்க்கிறான் என்றான் என்றால் அவனை இகழ வேண்டுமே அல்லாமல் "..எப்படி பொருள் சேர்க்கிறான்...நாமும் தான் இருக்கிறோமே நாலு காசுக்குப் பயன் இல்லாமல்" என்று நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. 


சரி, அது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். 


பொய்யாது ஒழுகினால் எப்படி நல்லவர்கள் மனதில் இடம் பிடிக்க முடியும்?


ஒருவன் உண்மை மட்டுமே பேசுவது என்று முடிவு செய்து விட்டால், அவனால் ஒரு தவறு கூட செய்ய முடியாது. ஏன் என்றால் செய்த தவறை மறைத்து பொய் சொல்ல முடியாது. உண்மையை ஒப்புக் கொண்டால் மதிப்பு போய் விடும், மரியாதை போய் விடும், தண்டனை வரும், தலை குனிவு வரும்...எனவே உண்மை சொல்வது என்று முடிவு எடுத்து விட்டால் ஒரு தவறும் செய்ய முடியாது. ஒரு தவறும் செய்யாதவனை உலகம் கட்டாயம் போற்றும். 


ஒரே ஒரு நாள் முயன்று பாருங்கள். உண்மை மட்டுமே பேசுவது என்று. என்ன வந்தாலும் சரி, உண்மை மட்டும்தான் பேசுவது என்று. 


உங்களுக்கே உங்களைப் பிடித்துப் போய் விடும். 



தெரியாததை , தெரியாது என்று சொல்லுங்கள். 


செய்யாததை , செய்யவில்லை என்று சொல்லுங்கள். 


மறந்து விட்டால், மறந்து விட்டது என்று சொல்லுங்கள். 


வாழ்க்கை எளிமையாகும். நாம் பொய்களால் வலை பின்னி அதில் நாமே மாட்டிக் கொண்டு தவிக்கிறோம். 


முகமூடிகள் அணிந்து அணிந்து, உண்மையான முகம் எப்படி இருக்கும் என்பதே மறந்து போய் விடுகிறோம். 


 

 

Wednesday, February 12, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - பாதி மாதொடு கூடிய

திருவாசகம் - அதிசயப் பத்து - பாதி மாதொடு கூடிய 



எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்று எப்படி அறிந்து கொள்வது?  


எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அது சரி என்று சொல்ல கொஞ்சம் பேர், தவறு என்று சொல்ல கொஞ்சம் பேர், அது சரியா தவறா என்று தெரியாமல் குழம்பும் கொஞ்ச பேர். இப்படித்தான் உலகம் இருக்கிறது. 


தவறு என்று ஒரு நீதி மன்றம் சொல்வதை, மேல் நீதி மன்றம் தவறு அல்ல என்கிறது. 


ஒரு நாட்டிற்கு சரி என்பது இன்னொரு நாட்டுக்கு தவறு. 


ஒரு காலத்தில் தவறு என்பது இன்னொரு காலத்தில் சரி. 


மணிவாசகர் சொல்கிறார்


"எது சரி, எது தவறு என்று கூறும் நீதி பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அப்படி தெரிந்தவர்களிடமும் சேர மாட்டேன். மனம் போன படி காரியங்கள் செய்து கொண்டு ஏதோ பிறந்து, இறந்து உழன்று கொண்டு இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை, தன் அடியவன் என்று ஏற்றுக் கொண்டு, என்னை ஆண்டு கொண்டு, தன்னுடைய அடியவர்களோடு சேர்த்து வைத்தது எவ்வளவு பெரிய அதிசயம்" 


என்று அதிசயப்படுகிறார். 



பாடல் 


 நீதி யாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பdவ ரொடுங்கூடேன்

ஏத மேபிறந் திறந்துழல் வேன்றனை என்னடி யானென்று

பாதி மாதொடுங் கூடிய பரம்பரன் நிரந்தர மாய்நின்ற

ஆதி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.


பொருள் 


நீதி யாவன யாவையும்  = எது சரி, எது தவறு என்று சொல்லும் அனைத்து நீதிகளையும் 


நினைக்கிலேன் = நினைத்துக் கூட பார்க்க மாட்டேன் 


நினைப்பவ ரொடுங் = அது பற்றி சிந்திபவர்களோடும் 

 


கூடேன் = சேர மாட்டேன் 


ஏத மே = ஏதோ கடனே  என்று, ஒன்றும் தெரியாமல்  


பிறந் திறந்துழல் வேன்றனை = பிறந்து இறந்து உழல்வேன் தன்னை 


என்னடி யானென்று = என்னுடைய அடியவன் என்று 


பாதி மாதொடுங் கூடிய = தன் உடம்பில் பாதியை உமாதேவிக்கு கொடுத்த 


பரம்பரன் = மிக உயர்ந்தவன் 


 நிரந்தர மாய்நின்ற = என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் 


ஆதி  = முதல்வன் 


ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரிற் = தன்னுடைய அடியவர்களோடு 


கூட்டிய = சேர்த்து வைத்த 


அதிசயங் கண்டாமே. = அதிசயத்தைப் பார்த்தோம் 


இறைவனின் அடியவர்களோடு சேர்ந்தால் இறைவன் பற்றிய ஞானம் வரும், இறைவன் மேல் பக்தி வரும். 


நாமும் ஒரு அடியவர்தானே?  நம்மோடு சேர்ந்தால் இறை ஞானம், பக்தி எல்லாம் மற்றவர்களுக்கு வருமா?  


அந்த அளவு ஞானத்தை நாம் தேடி அடைந்து இருக்கிறோமா? நம்மிடம் அவ்வளவு பக்தி இருக்கிறதா? 


ஏன் பிறவி வருகிறது?


சரியானவற்றை செய்யாமல் இருப்பது. 


தவறானவற்றை செய்வது. 


எது சரி, எது தவறு என்று அறியாமல் இருப்பது. 


அறிந்த்வவர்களை அண்டி அந்த அறிவைப் பெறாமல் இருப்பது. 


இவை எல்லாம் இல்லாத எனக்கு அவன் அருள் புரிந்தான் என்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு சொல்கிறார். 


உண்மையில் அவருக்குத் தெரியும். அவர் நம் குற்றங்களை தன் மேல் ஏற்றிக் கூறுகிறார். 


நாம் இறைவனால் ஆட்கொள்ளப் படவேண்டும் என்றால், 


நீதி எது என்று அறிய வேண்டும். 


அறிந்தவர்களோடு சேர்ந்து இருக்க வேண்டும். 




Tuesday, February 11, 2025

திருக்குறள் - வாய்மை - சுடும் நெஞ்சு

 திருக்குறள் - வாய்மை -  சுடும் நெஞ்சு 



பொய் சொல்லி வாழ்பவர்கள் பணம் நிறைய சம்பாதிக்கிறார்கள். செல்வாக்கோடு இருக்கிறார்கள். உண்மை சொல்லி நேர்மையாக வாழ்பவர்கள் அரிச்சந்திரன் மாதிரி துன்பப்படுகிறார்கள். இதுதான் உலக நடைமுறையாக இருக்கிறது. 


அப்படி இருக்க உண்மை பேசு, உண்மை பேசு என்று ஏன் சொல்ல வேண்டும். நாமும் பொய் சொல்லி வளமாக வாழ்வதில் என்ன தவறு என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு வள்ளுவர் கூறுகிறார்: 


"பொய் என்று ஒருவன் அறிந்தே சொல்லுவானானால், அவன் மனமே தண்டிக்கும்"


பாடல்  


தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்


பொருள் 



தன்னெஞ்சு அறிவது  = ஒருவன், தனது மனம் அறிய 


பொய்யற்க = பொய் சொல்லாமல் விடுக 


 பொய்த்தபின் = மாறாக பொய் சொல்வானாயின் 


தன்நெஞ்சே = அவனுடைய நெஞ்சமே 


 தன்னைச் சுடும் = அவனைச் சுடும் 


அது எப்படி ஒருவனின் மனம் அவனை சுட முடியும்? சுடுதல் என்பதை துன்பம் என்று வைத்துக் கொண்டாலும், எப்படி ஒருவனின் மனம் அவனுக்குத் துன்பம் தரும்?  பொய் சொல்பவர்கள் மனம் எல்லாம் அவர்களை சுடுவது மாதிரி தெரியவில்லையே என்று சந்தேகம் கொண்டால், அதற்கு பரிமேலழகர் விளக்கம் தருகிறார். 


" பொய்த்தானாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும்."


அது பரிமேலழகர் உரை. 


அதாவது, 


கரி என்றால் சாட்சி. 


ஒருவன் தெரிந்தே பொய் சொல்வானானால் அவன் மனமே அந்த செயலுக்கு சாட்சியாய் இருந்து அவனுக்கு துன்பத்தை வருவிக்கும் என்கிறார். 


அவன் மனமே அவனுக்கு துன்பத்தை கொண்டு வரும் என்கிறார். 


ஒருவன் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். தன் மனதை ஒருவன் ஏமாற்ற முடியாது. அது எப்போதும் அவன் செய்வதை, சொல்வதை கவனித்துக் கொண்டே இருக்கும். 


சரி, ஏதோ தெரியாமல் சொல்லி விட்டேன் என்று சொல்ல முடியாது. அறிந்தே சொன்ன பொய் தான். "தன் நெஞ்சு அறிவது பொய்யற்க" என்றார். தெரிந்தே சொல்லும் பொய்கள். 


எப்போதோ சொன்னேன். அது நாளடைவில் மறைந்து விடாதா, மறந்து விடாதா என்றால் மறையாது, மறக்காது. எனவே தான் "பொய்யற்க" என்றார். பொய்யை ஒரு காலும் சொல்லக் கூடாது. அறவே சொல்லக் கூடாது. 




Monday, February 10, 2025

அபிராமி அந்தாதி - நூறாவது பாடல் - உதிக்கின்றனவே

 அபிராமி அந்தாதி - நூறாவது பாடல் - உதிக்கின்றனவே

https://interestingtamilpoems.blogspot.com/2025/02/blog-post_39.html



அபிராமி அந்தாதியின் முதல் பாடல் தொடங்குவது "உதிக்கின்ற செங்கதிர்" என்று. 


உதிக்கின்ற என்று தொடங்கி, உதிக்கின்றதுவே என்று தான் தொடுத்த பாமாலையை முடிக்கிறார் பட்டர். 


எப்படி சொல் வந்து நிற்கிறது. 


எந்தப் கல்லூரியில் படித்து வருவது இது?


அன்று கல்லூரியின் கடைசி நாள். இனி எப்போது அவளை பார்க்க முடியுமோ தெரியவில்லை. பார்க்கவே முடியாமல் போய் விடுமோ? வாழ்க்கை அவனையும், அவளையும் வேறு வேறு திசையில் கொண்டு போகலாம். அவனுக்கு இந்த நாளை எப்படியாவது நீட்டித்துக் கொண்டே போனால் என்ன என்று தோன்றுகிறது. 


இனி எப்போது பார்ப்போமோ என்ற தவிப்பில் அவளை கண் இமைக்காமல் பார்க்கிறான். அவள் காதோரம் நெளிந்து ஓடும் அந்த முடி, அவள் புருவம், அவள் கழுத்தில் அணிந்திருக்கும் மாலை, அவள் கையில் உள்ள கைக் கடிகாரம், அவள் அணிந்திருக்கும் செருப்பு என்று ஒரு அங்குலம் விடாமல் அவளை தூர நின்று எவ்வளவு தெளிவாக மனதில் பதிய வைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு மனதில் பதிய வைக்கிறான். 


இனி காலம் எல்லாம் இந்த பிம்பத்தை மறக்காமல் இருக்க வேண்டுமே என்று அவளை அப்படியே மனதுக்குள் சிற்பம் போல் செதுக்கி வைக்கிறான். 


சொல்லி பார்த்துக் கொள்கிறான்...அவள் கண் எப்படி இருந்தது, விரல்கள் எப்படி என்று...அவளுக்கு திருமணம் ஆகலாம்...திருமண கோலத்தில் எப்படி இருப்பாள் என்று எண்ணிப் பார்க்கிறான்....



பாடல் 



குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி

கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும்

விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்

உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே



பொருள் 



குழையைத் = காதணி. அவள் அணிந்திருக்கும் தோடு, ஜிமிக்கி


தழுவிய = அந்தக் காதணியை தொடும் 


 கொன்றையந்தார்= தார் என்றால் மாலை. காதில் போட்ட ஜிமிக்கையை தொட்டு வருடும் அந்தக் கொன்றை மாலை.


கமழ் = மணம் வீசும் 


கொங்கை = மார்பு 


வல்லி = சிறந்தவள் 


கழையைப் = மூங்கிலைப் 


பொருத = போட்டிபோடும் 


திருநெடுந்தோளும் = சிறந்த நீண்ட தோள்களும் 


கரும்புவில்லும் = கரும்பு வில்லும் 


விழையப் = விழைவு என்றால் ஆசை, ஆவல், ஆர்வம் 


பொரு = பொருதல் என்றால் சண்டை இடுதல், கட்டித் தழுவி நெருங்கி இருத்தல் 


வேரியம் = மணம் வீசும் 


பாணமும் = மலர்க் கணைகளும் 


வெண் நகையும் = வெண்மையான புன்சிரிப்பும் 


உழையைப் = மானுடன் 


பொரு  = போட்டி போடும் 


கண்ணும்  = கண்களும் 


நெஞ்சில் = என் மனதில் 


எப்போதும் உதிக்கின்றவே = எப்போதும் உதிக்கின்றதே 


சிவன் அணியும் காதணிகள் ஏழு வகைப்படும். 


தோடு, குண்டலம், குழை, சுருள், கோளரவன், ஓலை, பொற்றோடு என்பன.


அவன் அணியும் காதணி இவளிடம் எப்படி வந்தது?  ஆசையாக எடுத்துப் போட்டு இருப்பாளோ?  இல்லை இல்லை, அவன்தான் மாதொரு பங்கன் ஆயிற்றே. அவன் காதணி அவளுடையதும்தான். 


கொன்றை மலர் அவனுக்கு உரியது. அது இவள் தோளில்.  


அவள் மேனி எங்கும் மலர் வாசனை. 


காதணி, மாலையும் கழுத்துமாக அவள், முத்துப் பல் சிரிப்பு....


எப்போதெல்லாம் அவன் மனம் சோர்கிறதோ, அப்போதெல்லாம் அவன் மனதில் சூரியனாய் அவள் உதித்து ஒளி வீசுகிறாள். 


படித்துப் பாருங்கள். புரியலாம். 




திருவாசகம் - அதிசயப் பத்து - மனத்திடை உருகாதே

திருவாசகம் - அதிசயப் பத்து - மனத்திடை உருகாதே



தங்க ஆபரணத்தில் ஒரு வைரக் கல்லை பதிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?


அந்த ஆபரணத்தின் மேல் வைரக் கல்லை வைத்து சுத்தியலால் நாலு போடு போட்டால் ஒட்டுமா? 


அல்லது, ஏதாவது பசை போட்டு ஒட்டி வைக்க முடியுமா?


நூல் ஏதாவது சுத்தி வைக்க முடியுமா?


முடியாது. 


தங்கத்தை உருக்கி, அதை கொஞ்சம் மென்மையாக்கினால் அது நெகிழும், அப்போது அந்த வைரக் கல்லை வைத்து லேசாக அழுத்தினால் அது பதிந்து விடும். ஒரு போதும் விழாது. 


அது போல,


இறைவன் நம் மனதில், நெஞ்சில் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?


மனம் உருக வேண்டும். உருகிய மனதில் அவன் திருவடி எளிதில் பதியும். 


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக 


என்பார் அருணகிரி. 


"ஊனாய் உருக்கி என் உள் ஒளியாய் நின்றானே"


என்பார் மணிவாசகர்.


மனம் உருகு என்றால் உருகுமா?


அதை எப்படி உருக்குவது?  


நமக்கு இன்பம் வந்த காலத்தில் நம்மோடு கூடி வாழ பலர் இருப்பார்கள். துன்பம் வந்தால், நமது சேமம் (சேமிப்பு) குறைந்தால் யார் நம்மோடு இருப்பார்கள்?  


துன்பம் வந்த காலத்தில் நம்மோடு இருப்பவன் இறைவன். நமக்கு இதுவரை எவ்வளவோ துன்பங்கள் வந்திருக்கும். அவற்றை எல்லாம் தாண்டி எப்படி வந்தோம்?  எல்லாம் நம் சாமர்த்தியமா?  நம் ஏழ்மையை பங்கு போட்டுக் கொள்ள வருபவன் அவன் மட்டும்தான். 


"ஏழை பங்காளனை பாடுதும் காண் அம்மானாய்" என்பார் மணிவாசகப் பெருந்தகை. 


"நான் தளர்ந்த போது, நலிந்த போது, துணையின்றி தவிக்கும் போது எனக்கு துணையாய் நின்று என்னை எப்படியெல்லாம் காப்பாற்றினாய். அவற்றை எல்லாம் நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஏதோ எல்லா துன்பங்களையும் நானே தனித்து நின்று வென்று விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். அது மட்டும் அல்ல, நீ இவ்வளவு எல்லாம் உதவி செய்திருக்கிறாய். உன்னை நினைக்காமல் இந்த பெண்கள் பின்னால் நான் அலைந்து கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை நீ என்னை ஆண்டு கொண்டு, உன் அடியாரில் என்னையும் ஒருவனாக சேர்த்துக் கொண்டது பெரிய அதிசயம் தான் "


என்கிறார் வாதவூர் அடிகள் 


பாடல் 



வைப்பு மாடென்று மாணிக்கத் தொளியென்று மனத்திடை உருகாதே

செப்பு நேர்முலை மடவர லியர்தங்கள் திறத்திடை நைவேனை

ஒப்பி லாதன உவமனி லிறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்

தப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.


பொருள் 


வைப்பு மாடென்று = மாடு என்றால் செல்வம். வைப்பு மாடு என்றால் சேமித்த செல்வம். வைப்பு நிதி என்பது போல. 


மாணிக்கத் தொளியென்று = மாணிக்கத்தின் ஒளி என்று. 


மனத்திடை = மனதினில் 


உருகாதே = உருகாமல் 


செப்பு = செப்பு சட்டி போல 


 நேர் = உயர்ந்து எழுந்த 


முலை = மார்புகளை உடைய 


மடவர லியர்தங்கள் = இளம் பெண்கள் பின்னால் 


திறத்திடை = அவர்களிடம் சென்று 


நைவேனை = துன்பப்படுவேனை 


ஒப்பி லாதன = உனக்கு ஒப்பு என்று ஒன்றும் இல்லாதவனே 


உவமனி லிறந்தன = உன்னோடு உவமித்து சொல்லும்படி ஒன்றும் இல்லாதவனே 


ஒண்மலர்த் = ஒளி வீசும் மலர் போன்ற 


திருப்பாதத் தப்பன் = திருவடிகளுக்கு சொந்தமான எனது அப்பன் 



 ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரிற் = தன்னுடைய அடியவர் கூட்டத்தோடு 


கூட்டிய = என்னையும் சேர்த்துக் கொண்டது 


அதிசயங் கண்டாமே = அந்த அதிசயத்தைப் பார்த்தோமே 


இந்த அடியவர்க் கூட்டம், அடியவர் கூட்டம் என்று சொல்கிறார்களே, அப்படி என்ன அதில் பெருமை. அவர்களும் நம்மை போன்றவர்கள்தானே. அடியாரோடு சேர்ந்து கொள்வது என்ன பெரிய விசேடம்?  


இந்தக் கேள்வி ரொம்ப நாள் என்னிடம் இருந்து கொண்டே இருந்தது. 


நாம் யாரோடு சேர்கிறோமோ, அவர்களின் குணம், சிந்தனை ஓட்டம், செயல்பாடுகள் நம்மிடம் வரும். 


எளிய உதாரணம் ஒன்று பார்ப்போம். 


நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் யாரோடு அதிகம் பழகுவீர்கள்? உங்களோடு கூட வேலை செய்பவர்களிடம் பழகுவீர்கள். 


உங்களின் சிந்தனை, செயல், நோக்கம், குறிக்கோள் எல்லாம் என்னவாக இருக்கும்?


எப்படி திறமையாக வேலை செய்து நல்ல பேர் எடுப்பது? எப்படி பதவி உயர்வு அடைவது, எப்படி ஐந்து அல்லது பத்து சதவீதம் ஊதிய உயர்வு பெறுவது என்பது பற்றியே இருக்கும். 


நீங்கள், எப்படி தொழில் தொடங்குவது, எப்படி முதலீடு திரட்டுவது, எப்படி அதிக இலாபம் சம்பாதிப்பது என்பது பற்றியெல்லாம் சிந்திக்க மாட்டீர்கள். பணம் சம்பாதிக்க வேண்டும், அந்த மாதிரி ஆட்களோடு சேர வேண்டும். பழக வேண்டும். 


ஒரு துறையில் முன்னேற வேண்டும் என்றால், அந்தத் துறை சம்பந்தப்பட்ட ஆட்களோடு பழக வேண்டும், பேச வேண்டும். 


அது போல ஆன்மீகத் துறையில் முன்னேற வேண்டும் என்றால், அந்தத் துறையில் உள்ள அடியவர்களோடு சேர வேண்டும். 


இறைவனை அடைய அது ஒன்றுதான் வழி. இல்லை, நானே கண்டு பிடித்து விடுவேன் என்று சவால் விடலாம். ஒரு வேளை நீங்கள் அதை செய்தும் முடிக்கலாம். சற்று சிரமம். நிறைய மெனக்கெட வேண்டும். மாறாக, அதில் ஏற்கனவே உள்ள பலரிடம் பேசி, பழகி கொண்டிருந்தால், எளிதாக, வேகமாக சென்று அடையலாம். 


இப்படி எல்லாம், எனக்கு வழி அமைத்துத் தந்த இறைவனின் கருணையை நினைத்து அதிசயப் படுகிறார் மணிவாசகர். 




Sunday, February 9, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - முன்னுரை

 திருவாசகம் - அதிசயப் பத்து - முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2025/02/blog-post_9.html


உலகிலேயே பெரிய அதியசம் எது?


நாம் தான். 


நாம் எவ்வளவு பெரிய அதியசயமான ஒரு படைப்பு. 


இந்த பிரபஞ்சம் எவ்வளவு விரிந்தது? எவ்வளவு பெரியது ? நம்மால் அதை கற்பனை கூட பண்ண முடியாது. 


அவ்வளவு பெரிய அண்டப் பெரு வெளியில், ஏதோ ஒரு மூலையில், ஒரு சின்ன நட்சத்திரம் நம் சூரியன். அதைச் சுற்றும் ஒரு சின்ன கோள் நம் பூமி. அதில் உள்ள ஒரு சின்ன இடம் நம் நாடு, பின் நம் ஊர். அங்கு நாம் பிறந்தோம். 


அதுவும் கண், காது, மூக்கு என்று எல்லாம் சரியாக வேலை செய்யும்படி. 


அதுவம் எழுதப் படிக்க தெரிந்த படி.


அதுவும், அமைதியான இந்த நாட்டில். 


அதுவும், தமிழ் அறிவோடு. 


இது நடக்க என்ன சாத்தியக் கூறு இருக்கிறது?  


மிக மிக அபூர்வமான அமைப்பு நாம் பிறந்து வளர்ந்து, இந்த ப்ளாகைப் படிப்பது என்பது. 


இது நடக்காமல் இருக்க கோடிக் கணக்கான வாய்ப்பு இருக்கு. அத்தனையும் புறம் தள்ளி, இதோ நான் எழுதுகிறேன், நீங்கள் படிக்கிறீர்கள். இது அதிசயம் அல்லவா?


மணிவாசகர் அதிசயப் பத்து என்று பத்துப் ஆடல்கள் எழுதி உள்ளார். 


"நான் எல்லாம் என்ன ஒரு ஆளுன்னு, என்னை கண்டு பிடிச்சு எனக்கு அருள் செய்திருக்கிறார் இந்த சிவ பெருமான். இது எவ்வளவு பெரிய அதியசம்" என்று உருகி உருகி பத்துப் பாடல்கள் பாடி உள்ளார். 


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருகும்படி பாடி இருக்கிறார். 


தினம் ஒன்றாக அந்தப் பாடல்களை சிந்திப்போம். 





Thursday, February 6, 2025

திருக்குறள் - பொய்யும் மெய்யும்

 திருக்குறள் - பொய்யும் மெய்யும் 



சில சமயம் நாம் பொய் சொல்ல வேண்டி வரலாம்.  பொய் சொல்வது அறம் அல்லாத செயல் அல்லவா? அது பாவம் அல்லவா? பொய் சொல்லலாமா? 


எது நடந்தாலும் சரி, உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும் என்று ஒரு விதி வைத்தால் அதை நடைமுறையில் செயல் படுத்த முடியுமா? 


சில உதாரணங்கள் பார்ப்போம்....


ஒரு நோயாளி ஏதோ ஒரு தீவிரமான நோயில் அவதிப் படுகிறார். மருத்துவருக்குத் தெரியும் அந்த நோயாளி இன்னும் ஓரிரு மாதங்களில் இறந்து விடுவார் என்று. நோயாளி மருத்துவரிடம் "டாக்டர் எனக்கு உடம்புக்கு எப்படி இருக்கிறது" என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 


மருத்துவர் என்ன சொல்ல வேண்டும்? 


உண்மையைச் சொன்னால் "இன்னும் ஓரிரு மாதங்கள்தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள்" என்று சொல்ல வேண்டும். 


மாறாக, "ஒண்ணும் கவலைப் படாதீங்க...எல்லாம் சரியாகிவிடும். மருந்தை மட்டும் வேளா வேளைக்கு சாப்பிடுங்கள். நாளை வந்து பார்க்கிறேன்" 


என்று சொல்லிவிட்டுப் போவார். 


மருத்துவர் சொன்னது பொய்யா?  அவர் பொய்யரா?  அவர் பாவம் செய்து விட்டாரா?


இல்லை. 


வள்ளுவர் சொல்கிறார் 


"ஒருவற்கு எந்தவித தீங்கும் விளைவிக்காத பொய்யும், மெய் என்றே கொள்ள வேண்டும்" என்று.


சொன்னது தீங்கு விளைவிக்காது என்றால் அது மெய். 


சொன்னது தீங்கு விளைவிக்கும் என்றால் அது பொய். 


மேலே சொன்ன உதாரணத்தில், அந்த மருத்துவர் இன்னும் இரண்டு மாதம் தான் என்று சொல்லி இருந்தால் அது பொய் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்


பொருள் 



பொய்ம்மையும் = பொய்யான சொற்களும் 


வாய்மை இடத்த = உண்மை என்றே கொள்ளப்படும் 


புரைதீர்ந்த = சந்தேகம் இல்லாமல் 


நன்மை பயக்கும் எனின் = நன்மையைக் கொடுக்கும் என்றால். 


சில பேர் உண்மை சொல்வதே மற்றவர்களை மாட்டி விடுவதற்காகத்தான். கேட்டால், "நான் உள்ளதைத்தானே சொன்னேன்" என்று நல்லவர்கள் போல் நடிப்பார்கள். 


சொன்னது தீமை தரும் என்றால், அது உண்மை அல்ல என்கிறார் வள்ளுவர். 


புரை தீர்ந்த என்றால் எந்த வித குற்றமும், இல்லாமல். ஒரு சதவீதம் கூட அதில் தீங்கு வரக் கூடாது. 


ஒரு அயோக்கியன் ஒரு அபலைப் பெண்ணை துரத்தி வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெண் நம் வீட்டில் தஞ்சம் புகுகிறாள். "என்னை காட்டி கொடுத்து விடாதீர்கள்" என்று நம்மிடம் கெஞ்சுகிறாள். 


சிறிது நேரம் கழித்து அந்த அயோக்கியன் நம்மிடம் கேட்கிறான் "இங்கே ஒரு பெண் வந்தாளா " என்று. என்ன சொல்ல வேண்டும்? "ஆமாம், இங்கே உள்ளேதான் இருக்கிறாள் " என்றா சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் அது பொய். 


"இல்லையே, அப்படி யாரும் வரலையே" என்று சொல்லி அந்தப் பெண்ணைக் காப்பாற்றினால் அது மெய். 


அவ்வளவு தூரம் போவானேன்....


வீட்டில் மனைவி அழகு நிலையம் (beauty parlor ) சென்று கொஞ்சம் தன்னை அழகு படுத்திக் கொண்டு வந்திருப்பாள். நமக்கு ஒன்றும் பெரிதாக வித்தியாசம் தெரியாது. இருந்தாலும், "அழகு நிலையத்துக்குப் போயிட்டு வந்தாலே உனக்கு அஞ்சு வயசு குறைஞ்ச மாதிரி இருக்கு" என்று ஒரு சொன்னால், அது உள்ளது உள்ளபடி அல்ல என்றாலும், அது வாய்மையே. ஏன் என்றால், அதனால் யாருக்கும் ஒரு தீங்கும் இல்லை. 


அதே போல், கணவன் திடீரென்று உடற் பயிற்சி செய்கிறேன், உணவு கட்டுப்பாடு இருக்கிறேன், தொப்பையைக் குறைக்கப் போகிறேன் என்று ஆரம்பிக்கலாம். ஒரு வாரத்தில் ஒரு மாற்றமும் இருக்காது. இருந்தாலும், மனைவி கணவனைப் பார்த்து "நல்லா மெலிஞ்ச மாதிரி இருக்குங்க" என்று சொல்லி வைக்கணும். அதுவும் வாய்மைதான். 


நம்மில் பல பேருக்கு மற்றவர்களை பாராட்டுவது என்பது எளிதாக வருவது இல்லை. "இதெல்லாம் ஒரு பெரிய சாதனையா...இதைப் பாராட்டினால் அது உண்மை இல்லை" என்று நினைக்கலாம். 


அப்படி அல்ல. 


யாருக்கும் ஒரு தீங்கும் இல்லை என்றால், பாராட்டுவது உண்மைதான் என்கிறார் வள்ளுவர். பாரட்டுக்குத் தகுதி இல்லாவிட்டாலும், "நல்லா செஞ்சீங்க" என்று சொல்லுவதால் அவர் மகிழ்வார். உங்களை மதிப்பார். எல்லோருக்கும் நல்லது நடக்கும். எனவே அதுவும் உண்மைதான்.


சில பேர் "நான் மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவேன். நம்மிடம் ஒரு ஒளிவு மறைவு கிடையாது. உள்ளதை உள்ளபடி சொல்ல எதற்கு தயங்க வேண்டும் " என்று பெருமையாகச் சொல்வார்கள். 


அது தவறு. 


உள்ளதை உள்ளபடியே சொல்லுவதன் மூலம் மற்றவர்கள் வருந்துவார்கள் என்றால், அது உண்மை அல்ல. பொய். 


ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.




Tuesday, February 4, 2025

நாலடியார் - கண் குத்திய கை

நாலடியார் - கண் குத்திய கை 


நட்பிலும், உறவிலும் சில சமயம் வேண்டத்தகாதன ஏதாவது நிகழ்ந்து விடும். 


நண்பர்கள் நம் மனம் நோகும் படி ஏதாவது சொல்லி விடுவார்கள், அல்லது செய்து விடுவார்கள். நாம் எதிர்பார்த்து இருக்கவே மாட்டோம். 


என்ன செய்வது?


அப்படி செய்து விட்டார்களே என்று அவர்களோடு விரோதம் பாராட்டி, நட்பை துண்டித்து விடலாமா?


அல்லது சரி சரி என்று கண்டும் காணாததும் போல் இருந்து விடலாமா?


எப்படித்தான் மறந்தாலும், மன்னித்தாலும், மீண்டும் அவர்கள் முகம் பார்க்கும் போது பழையன எல்லாம் வந்து போகும்தானே. 


எப்படி இந்த தர்ம சங்கடத்தில் இருந்து மீள்வது?


நாலடியார் அதற்கு ஒரு வழி சொல்கிறது. 


சில சமயம் நம் விரல் நம் கண்ணில் பட்டுவிடும். வலி உயிர் போய்விடும். 


இவ்வளவு வலிதந்தாயே என்று விரலை வெட்டி விட முடியுமா?


நம் விரல்கள் நமக்கு எவ்வளவோ உதவி செய்து இருக்கின்றன. இனியும் அவை நமக்கு உதவி செய்யும். அப்படி இருக்க, ஏதோ ஒரு தடவை தவறு நிகழ்ந்தது என்பதற்காக விரலை வெட்டி விட முடியுமா?


அது போல நண்பர்கள் எப்போதேனும் தவறு செய்து விட்டால், அதை பெரிது படுத்தாமல் கண் குத்திய விரலை ஏற்றுக் கொள்வது போல் அவர்களை ஏற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டும். 


பாடல்  



 இன்னா செயினும் விடுதற் கரியாரைத்

துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர்

விண்குத்து நீள்வரை வெற்ப ! களைபவோ

கண்குத்திற் றென்றுதங் கை.


பொருள் 


இன்னா செயினும் = நமக்கு துன்பம் செய்யினும் 


 விடுதற் கரியாரைத் = விட்டு விட முடியாதவரை. நல்ல நண்பர்களை 


துன்னாத் துறத்தல் = நெருங்கி இல்லாமல் விட்டு விலகிப் போய் விடுவது. (துன்னுதல் = நெருங்குதல்)


 தகுவதோ = சரி தானா ? (சரி இல்லை) 


துன்னருஞ் = நெருங்க முடியாத 


சீர் =  சிறந்த 


விண்குத்து = வானத்தை குத்துவது போல 


நீள்வரை  வெற்ப ! = உயர்ந்த மலைகளை கொண்ட நாட்டின் அரசனே 


களைபவோ = யாராவது வெட்டி விடுவார்களா? 


கண் குத்திற் றென்றுதங் கை = கண்ணை குத்தியது என்பதற்காக தன் கையை ?


நன்கு ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும். 


அதற்குப் பின் என்ன நடந்தாலும் அந்த நட்பை விட்டு விடக் கூடாது.


வார்த்தைகள் முத்திப் போய் அடி, தடி, சண்டை, சச்சரவு, வழக்கு, வக்கீல், நீதி மன்றம், விவாகரத்து என்று போகின்ற இந்தக் காலத்தில், இது போன்ற அறவுரைகள் மிகவும் தேவையான ஒன்று. 




Friday, January 31, 2025

திருக்குறள் - வாய்மை

 திருக்குறள் - வாய்மை 


வாய்மை என்றால் உண்மை. 


உண்மை என்றால் உண்மையைக் கூறுவது அல்ல. உண்மையின் தன்மை பற்றிக் கூறுவது. 


குழப்பமாக இருக்கிறதா?


இரண்டும் இரண்டும் நாலு என்பது உண்மை. 


தீ சுடும் என்பது உண்மை. 


இங்கே உண்மைகளைப் பற்றிக் கூறவில்லை. 


உண்மையின் தன்மை பற்றிக் கூறுகிறார். உண்மை என்றால் என்ன. எந்த மாதிரியான சொல்லும், செயலும் வாய்மையின் பாற்படும் என்பது பற்றி கூற இருக்கிறார். 


மக்கள் ஏன் உண்மை சொல்லுவது இல்லை? ஏன் பொய் சொல்கிறார்கள்?


பெரும்பாலும் இரண்டு காரணங்கள் பற்றி வாய்மை தவிர்க்கப் படுகிறது. 


ஒன்று காமம். இரண்டாவது பொருள் பற்றியது. 


பொருள் சேகரிக்க, பொருளை பாதுகாக்க, பொருளை அனுபவிக்க என்று பல சமயங்களில் பொய் சொல்ல வேண்டி வருகிறது. காமமும் அப்படித்தான். 


எனவே, வள்ளுவர் "கூடா ஒழுக்கம் (காமம்), கள்ளாமை (பொருளை கவர்ந்து கொள்ளுதல்)" என்ற இரண்டு அதிகாரத்தின் பின், வாய்மை என்ற அதிகாரத்தை வைத்து இருக்கிறார். 


வாய்மை என்றால் என்ன என்று நம்மிடம் கேட்டால் என்ன சொல்லுவோம்?


உள்ளதை உள்ளபடி மறைக்காமல் சொல்லுவது வாய்மை என்று சொல்லுவோம். 


வள்ளுவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 


வாய்மைக்கு அவர் ஒரு புது விளக்கம் தருகிறார். 


வாய்மை என்றால் என்ன என்று கேட்டால், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாத சொற்களே வாய்மை என்கிறார். 


பாடல் 


வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.


பொருள் 


வாய்மை  = உண்மை 


எனப்படுவது = என்று சொல்லப்படுவது 


யாதெனின் = எது என்றால் கேட்டால் 


யாதொன்றும் = எந்த ஒரு 


தீமை = தீமையும் 


இலாத சொலல் = இல்லாத சொற்கள்



மூன்று விடயங்களை நாம் கவனிக்க வேண்டும். 


முதலாவது, உள்ளதை உள்ளபடியே கூறுவது வாய்மை அல்ல. 


இரண்டாவது, எந்த ஒரு தீமையும் இல்லாத சொற்களே வாய்மையான சொற்கள். 


மூன்றாவது, தீமை பயக்குமானால், உள்ளதை உள்ளபடியே சொல்லுவது கூட பொய்தான். அல்லது அது வாய்மையாகாது.


நடைமுறையில் சில விடயங்களை பற்றிச் சிந்திப்போம். 


கணவனோ மனைவியோ ஏதோ சொன்னார்கள் செய்தார்கள் என்பதற்காக மற்றவர் அவரை கடிந்து ஒரு வார்த்தை சொல்கிறார் என்றால் அது வாய்மை அல்ல. ஏன் என்றால் அந்த கடுமையான சொற்கள் "தீமை" பயப்பன. 


பிள்ளைகளை கண்டிக்கிறோம் என்று சுடு சொற்களை சொன்னால், அது வாய்மை அல்ல. 


கீழே வேலை பார்ப்பவரை சொல்லால் சுட்டால், அது வாய்மையான ஒன்று அல்ல. 


இங்கே "தீது" என்றால் யாருக்கு என்ற கேள்வி வரும். 


வள்ளுவர் அதை மிக விரிவாக கொள்கிறார். 


"யாதொன்றும் தீமை இல்லாத" என்கிறார். 


அப்படி என்றால மற்ற மனிதர்களுக்கு மட்டும் அல்ல, பிராணிகளுக்கும், மரம் செடி கொடிகளுக்கும், மலை, ஆறு போன்றவற்றிற்கும் தீங்கு வராத சொற்களை சொல்ல வேண்டும். 


இப்போது மட்டும் அல்ல, இனி வரும் காலத்துக்கும் தீமை பயக்கக் கூடாது. 


எந்த விதத்திலும், யாருக்கும், எப்போதும் தீங்கு தரக் கூடாது. 


எவ்வளவு கடினமான செயல். 


மனைவிக்கு ஆதரவாக ஏதாவது கூறினால், சில சமயம் அம்மாவுக்குப் பிடிக்காது. அம்மா வருந்துவாள். அம்மாவும் வருந்தக் கூடாது, மனைவியின் முகமும் வாடக் கூடாது. அப்படி பேச வேண்டும். எவ்வளவு கடினம். 


பிள்ளையை இப்போது கண்டிக்கவில்லை என்றால் பின்னால் துன்பப்படும். தீமை பின்னால் வரலாம். "யாதொன்றும் தீமை இல்லாத சொலல்" என்றால் வருங்காலத்திலும் தீமை வரக் கூடாது. 


மனம் வருந்தாமல் கண்டிக்க வேண்டும். கடினமான காரியம். 


ஒவ்வொரு சொல்லையும் நிறுத்தி, நிதானமாக யோசித்து, ஆராய்ந்து பின் பேச வேணும். 


"தீமை" என்றால் உடல் வருத்தம் மட்டும் அல்ல. மன வருத்தமும் வருத்தமும் தான். 


பேச்சிலே எவ்வளவு நிதானம் வேண்டும் என்று பாருங்கள். 


எந்த தீமையும் இல்லாத சொற்களை பேசி பழகினால், நாளடைவில் வாழ்க்கை அவ்வளவு இனிமையாக இருக்கும். 





Wednesday, January 22, 2025

குண்டலகேசி - எது நடக்க வேண்டுமோ

 குண்டலகேசி - எது நடக்க வேண்டுமோ 


நிறைய பலசரக்கு கடைகளில், உணவு விடுதிகளில் பார்த்து இருக்கலாம், கண்ணன் படம் போட்டு, அவன் முன்னால் அர்ஜுனன் மண்டியிட்டு உபதேசம் கேட்பது போல் ஒரு படம் இருக்கும். 


அந்த படத்திற்கு பக்கத்தில் 


"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது 

எது  நடக்கின்றதோ, அது நன்றாகவே நடக்கிறது 

எது நடக்குமோ, அது நன்றாகவே நடக்கும்"


- ஸ்ரீ கிருஷணர், பகவத் கீதை 


என்று போட்டு இருக்கும். 


கீதையில் எந்த அத்யாயம், எத்தனாவது சுலோகம் என்று போட்டு இருக்காது. 


காரணம் என்ன?


கீதையில் அப்படி ஒரு சுலோகம் இல்லை. 


எதையாவது போட்டுவிட்டு, அடியில் கிருஷ்ணர், இராமர் விவேகானந்தர் என்று எழுதிவிடுவது. 


மேற்கண்ட வாசகத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் சொன்னதாகவும் சில இடங்களில் பார்த்து இருக்கிறேன். 


சரி, அது போகட்டும். யார் சொன்னார்கள் என்பது முக்கியம் அல்ல. 


சொன்னது சரிதானா என்று பார்ப்போம். 


நடந்தது எல்லாமே நன்றாகவே நடந்ததா?  


உங்கள் வாழ்வில் நடந்த அனைத்தும் நல்லவையாகவே நடந்ததா?  


யாருக்குமே அப்படி ஒரு வாழ்க்கை இருந்திருக்க வாய்ப்பில்லை. 


வாழ்க்கை என்றால் நல்லதும் இருக்கும், அல்லதும் இருக்கும். 


குண்டலகேசி சொல்கிறது 


"எது இறக்க வேண்டுமோ, அது இறக்கும் (அல்லது அழியும்). எது பிறக்க வேண்டுமோ, அது பிறக்கும். யார் எதைப் பெற வேண்டுமோ, அதை அவர்கள் பெறுவார்கள். யார் எதை இழக்க வேண்டுமோ, அதை அவர்கள் இழப்பார்கள். இதை அறிந்து கொண்டவர்கள், அழவும் மாட்டார்கள், சிரிக்கவும் மாட்டார்கள். எது நடக்க வேண்டுமோ, அது நடந்தே தீரும் என்று இருப்பது நல்லது"


என்று. 


பாடல் 


மறிப மறியும் மலிர்ப மலிரும்

பெறுப பெறும் இழப்பை இழக்கும்

அறிவார் அழுங்கார் உவவார்

உறுவது உறும்என்று உரைப்பது நன்று.


பொருள் 


மறிப = அழிய வேண்டியது 


மறியும் = அழியும் 


மலிர்ப  = மலர வேண்டியது 


மலிரும் = மலரும் 


பெறுப பெறும் = பெற வேண்டியவர்கள் பெறுவார்கள் 


இழப்பை இழக்கும் = இழக்க வேண்டியவர்கள், இழப்பார்கள் 


அறிவார் = அதை அறிந்தவர் 


அழுங்கார்  = துன்பத்தில் மூழ்கி விட மாட்டார்கள் 


உவவார் = இன்பத்தில் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள் 


உறுவது உறும்என்று = எது நடக்கணுமோ, அது நடக்கும் என்று 


உரைப்பது நன்று = சொல்லுவது சிறந்தது 


வாழ்க்கையில் நிறைய எதிர்பார்ப்புகள் கூடாது.


Tuesday, January 21, 2025

திருக் குறள் - கள்ளாமை - தள்ளாது

 திருக் குறள் - கள்ளாமை - தள்ளாது 


களவு செய்வார்க்கும், களவு செய்யாதாருக்கும் என்ன வேறுபாடு?  


இந்த உயிர் எங்கே தங்கி இருக்கிறது?


உயிர் உடம்பில் தங்கி இருக்கிறது. 


களவு செய்பவர்களுக்கும், அவர்கள் உடம்பு அவர்கள் உயிரை தள்ளி விடுமாம். அதாவது உடம்பு உயிரை விட்டுவிடும் என்கிறார் வள்ளுவர். 


சரி, களவு செய்யாதவர்களுக்கு மரணமே கிடையாதா? அவர்கள் சாகவே மாட்டார்களா? அப்படி என்றால் இதுவரை களவு செய்யாதவர் யாருமே இல்லையா? என்று கேட்டால், அதற்கும் வள்ளுவர் விடை தருகிறார். 


களவு செய்யாமல் இருப்பவர்கள், உயிரை விட்டாலும், அது விண்ணுலகம் சென்று தேவர்களில் ஒருவராக மாறி சாகா நிலை அடையும் என்கிறார். 


பாடல் 


கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்

தள்ளாது புத்தேள் உலகு


பொருள் 


கள்வார்க்குத் = களவு செய்பவர்களுக்கு 


தள்ளும் = வெளியே தள்ளி விடும் 


உயிர்நிலை = உயிர் நிலைத்து நிற்கும் உடல்.  அதாவது, உடல் உயிரை விட்டு விடும். 


கள்ளார்க்குத் = களவு செய்யாதவர்களுக்கு 


தள்ளாது = வெளியே தள்ளாது. அதாவது உள்ளே ஏற்றுக் கொள்ளும். எது?


புத்தேள் உலகு = விண்ணுலகு. 



அவர்களை விண்ணுலகம் தள்ளிவிடாமல் ஏற்றுக் கொள்ளும். 


சரி, களவு செய்பவர்களை ஏன் அவர்கள் உடல் அவர்களின் உயிரை தள்ளிவிடும் என்பதற்கு பரிமேலழகர் விளக்கம் செய்கிறார். களவு செய்பவர்களை அரசன் தண்டிப்பான். சிறையில் போடுவான். உடல் நலியும். சீக்கிரம் உயிரை விடும். 


களவு செய்தால் இந்தப் பிறவியிலேயே உடலும் உயிரும் பிரிந்து நிற்கும். களவு செய்யாவிட்டால், உயிர் பிரிந்த பின்னும், தேவர் உலகில் நீங்கா இடம் பெறலாம். 


இத்துடன் இந்த அதிகாரம் நிறைவு பெறுகிறது. 


அடுத்து என்ன அதிகாரம் என்றால்.....



Monday, January 20, 2025

நள வெண்பா - யான் பாடல் உற்ற இது

நள வெண்பா - யான் பாடல் உற்ற இது 

https://interestingtamilpoems.blogspot.com/2025/01/blog-post_20.html


அடக்கம் நல்லதா?  


நம் அறநெறி இலக்கியங்கள் எல்லாம் அடக்கமாக இருக்க வேண்டும், ஆணவம் கூடாது என்று தான் சொல்லித் தருகின்றன. 


இருந்தும், சிலர் இதில் இருந்து மாறுபடுகிறார்கள். 


அவை அடக்கம், அடக்கம், பணிவு என்று சொல்லிச் சொல்லி, நம் மக்கள் ஒரு மன உறுதி இல்லாமலலேயே வளர்ந்து விடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். 


என்ன செய்தாலும், அது பத்தாது, இன்னும் நல்லா செய்யணும், இதெல்லாம் பெரிசா, இதை விட எவ்வளவோ பேர் எவ்வளவோ அதிகமாகச் செய்து இருக்கிறார்கள் என்று தோன்றுமே அல்லாமல், நாம் நன்றாகச் செய்தோம் என்ற எண்ணமே வராது. 


அது மட்டும் அல்ல, வேறு யார் நன்றாகச் செய்தாலும் பாராட்ட மனம் வராது. தான் செய்ததையே பாராட்டாத ஒரு ஆள் மற்றவர் செய்வதை எப்படி பாராட்டுவார்.


மனைவி வேலை மெனக்கெட்டு ஏதாவது உணவு தயாரித்து இருப்பாள். மாடு வைக்கோல் தின்பது மாதிரி தின்று விட்டுப் போய் விடுவார் கணவன். ஒரு வார்த்தை அதைப் பற்றி பேசுவது கிடையாது. அப்படியே வலிந்து "எப்படி இருக்கு " என்று கேட்டால் "எங்க அம்மா செய்வது போல இல்லை " என்று குற்றம் வேறு சொல்வது. 


காரணம் என்ன?  


தன் பெருமையை தானே சொல்லிக் கொள்ளக் கூடாது. அடக்கமாக இருக்க வேண்டும் என்று மூளைச் சலவை செய்து விடுவதால் வரும் வினை என்று ஒரு சாரார் இந்த அடக்க உணர்வை ஏற்றுக் கொள்வது இல்லை. 


உன்னை நீயே உயர்த்திப் பிடிக்காவிட்டால் உலகில் வேறு யார் உன்னைப் பாராட்டுவார்கள் என்பது அவர்கள் வாதம். 


நளவெண்பா பாட வந்த புகழேந்திப் புலவர் அவையடக்கம் பாடுகிறார். 


"நள மகாராஜாவின் வரலாற்றை நான் கூறுவது என்பது சினம் கொண்ட பலமான யானையை ஒரு தாமரை நூலினால் கட்டுவது போல...எப்படி அது முடியாதோ இதுவும் முடியாது. எனவே என் இந்தச் செயலை ஆன்றோர் பொறுத்து அருள வேண்டும்" என்று பணிவோடு கூறுகிறார். 


பாடல் 



வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தன்

தந்துவினால் கட்டச் சமைவதொக்கும்-பைந்தொடையில்

தேன்பாடும் தார்நளன்தன் தெய்வத் திருக்கதையை

யான்பாடல் உற்ற இது.


பொருள் 



வெந்தறுகண் = கோபம் கொண்ட வலிமையான  

வேழத்தை = யானையை


வேரிக் = மணம் நிறைந்த 


கமலத்தன் = தாமரை மலரின் 


தந்துவினால் = நூலினால் 


கட்டச் சமைவதொக்கும் = கட்டி வைப்பதற்கு ஒப்பாகும் 


பைந்தொடையில் = மலர்களில்  (மணம் நிறைந்த மலர்க் கொடி)


தேன்பாடும் = தேனை உண்டு பாட்டுப் பாடும் 


தார் = மாலை அணிந்த 


நளன்தன் = நள மகாராஜாவின் 


 தெய்வத் திருக்கதையை = தெய்வத் தன்மை வாய்ந்த உயர்ந்த கதையை 


யான்பாடல் உற்ற இது = நான் பாட நினைத்தது 


யாராவது கேட்டால் நான் நல்லவன், திறமை உள்ளவன், அறிவாளி என்று சொல்ல வேண்டுமா அல்லது அடக்கமாக எனக்கு ஒண்ணும் தெரியாது, நான் கற்றது கை மண் அளவு அடக்கமாக பதில் சொல்ல வேண்டுமா? எதைச் சொன்னால் வாழ்வில் முன்னேற முடியும்?



 

Friday, January 17, 2025

புறநானுறு - வாழ்வின் போக்கு

புறநானுறு - வாழ்வின் போக்கு 



வாழும் போது பல இன்னல்கள், இடையூறுகள், துன்பங்கள், தடைகள் வரும். வந்தால் என்ன செய்வது ?


கோவிலுக்குப் போய் இறைவன வழிபட்டால் அந்தத் துன்பங்கள் விலகிவிடுமா?  


யாகம், வேள்வி செய்தால் போகுமா?  


தான, தர்மம் செய்தால் போய் விடுமா? 


என்ன செய்தால் வந்த துன்பம் போகும்?  


என்ன செய்தாலும் போகாது?  துன்பம் வாழ்வின் ஒரு பகுதி. அது வரும், இருக்கும். போகும். தனி மனித முயற்சியால் விலகும் என்பது ஒரு தோற்றமே அல்லாது அது உண்மையா?


மலையின் மேல் பெரிய மழை பெய்கிறது. அது ஒன்று சேர்ந்து காட்டாற்று வெள்ளமாக வருகிறது. அதில் சில மரக் கட்டைகள் அடித்து வரப்படுகின்றன.  அந்தக் கட்டைகள் அங்கும் இங்கும் அலைகின்றன. அப்போது அந்த கட்டைகள் நினைக்கும், எப்படியாவது இந்த ஆர்பரிக்கும் ஆற்றின் ஓட்டத்தில் இருந்து எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று நினைக்கும். இப்படியே போனால் அங்கே ஒரு பாறையில் மோத வேண்டும், இங்கே ஒரு கரையில் இடிக்க வேண்டும், மலை மேல் இருந்து கீழே விழ வேண்டும், இறுதியில் துண்டு துண்டாக உடைந்து கடலில் உருத் தெரியாமல் அழிய வேண்டும். 


முடியுமா?  அந்த மரக் கட்டைகள் என்ன நினைத்தாலும், எத்தனை அழுதாலும், எத்தனை பிரார்த்தனை செய்தாலும், தன் முயற்சியால் கரை ஏறி வர முடியுமா?


வாழ்வில் துன்பம் ஒரு பகுதி. அதை நீக்கி வாழ முடியாது. வாழ்வின் போக்கில் போக வேண்டியது தான். இன்பம், வரும். துன்பம் வரும். எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டியது தான். 


இதைத்தான் கணியன் பூங்குன்றனார் புறத்தொகையில் கூறுகிறார். 


பாடல் 


கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்

முறைவழிப் படூஉ மென்பது திறவோர்

காட்சியிற் றெளிந்தன மாகலின் 


பொருள் 


கல் = கற்கள் 


பொரு = பொருந்திய, அல்லது கற்களில் பொருதி (மோதி) 


திரங்கு = இறங்கி வரும் 


மல்லற் பேர்யாற்று = பெரிய ஆற்றின் 


நீர்வழிப் = நீரின் வழியில், ஆற்றின் ஓட்டத்தில் 


படூஉம் = மிதந்து வரும் 


புணைபோல் = மரக்கட்டை போல் 


ஆருயிர் = அருமையான உயிர் 


முறைவழிப் படூஉ = அதன் வழியில் போகும் 


மென்பது = என்பது 


திறவோர் = அறிஞர் 


காட்சியிற் = அறிவில் 


றெளிந்தன மாகலின் = அறிந்தோம் என்பதால் 

 

பெரியவர்கள் கண்டு உணர்ந்த சொன்னதை நாம் அறிந்து கொண்டதால். 


ஆறு, வாழ்க்கை.


மரக் கட்டை, நம் வாழ்க்கை 


ஆறு அலைக்கழிப்பது - வாழ்வில் அங்கும் இங்கும் அலைவது. 


மரக் கட்டையின் கையில் என்ன இருக்கிறது?  


ஆறு அமைதியாக இருந்தால் - வாழ்வு சுகம் என்று நினைப்பது. 


ஆற்று சுழலில் அகப்பட்டுக் கொண்டால் - ஐயோ, முறையோ என்று அழுவது. 


வேறு என்ன செய்ய முடியும் ?


 

Sunday, January 12, 2025

திருக்குறள் - கள்ளாமை - ஆங்கே வீழ்வார்

திருக்குறள் - கள்ளாமை - ஆங்கே வீழ்வார் 


பிறர் பொருளை அடைய வேண்டும் என்று ஏன் தோன்றுகிறது. அந்த மாதிரி கார் வேண்டும், அது போல ஒரு வீடு வேண்டும், அந்த மாதிரி நகை வேண்டும் என்றெல்லாம் ஏன் தோன்றுகிறது?  


உள்ளதைக் கொண்டு திருப்தி அடையாமல் இருப்பதால், இல்லாததைக் கொண்டு வா என்கிறது மனம். 


சரி, ஆசைப் பட்டதை அடைந்து விட்டால் போதும் என்று நிற்குமா என்றால் இல்லை. ஒன்றை அடைந்தால் அதை விட பெரியதற்கு ஆசைப் படுகிறது. இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று பறக்கிறது. 


ஒரு கட்டத்தில் தன் சொந்த உழைப்பினால் வேண்டியதை எல்லாம் அடைய முடியாது என்ற நிலை வரும் போது, ஒன்று தவறான வழியில் செல்லலாமா என்று மனம் சிந்திக்கிறது. அல்லது, நம்மால் முடியாது என்று அயர்ந்து, துவண்டு விடுகிறது. இரண்டுமே நல்லது இல்லை. 


வள்ளுவர் சொல்கிறார் 


அளவு அல்லாத தீய செயல்களை செய்தவர் உடனே வீழ்வார், அழிவர். யார் என்றால் களவைத் தவிர பிற ஒன்றை அறியாதவர்கள். 


பாடல் 


அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல

மற்றைய தேற்றா தவர்.


பொருள் 


அளவல்ல = அளவு அல்லாதது. 


செய்தாங்கே  = செய்து உடனே 


வீவர் = வீழ்வார், அழிவார் 


களவல்ல = களவைத் தவிர 


மற்றைய = பிற ஒன்றை 


தேற்றா தவர் = அறியாதவர் 


அது என்ன அளவு அல்லாதது ?


நல்லது எது, கெட்டது எது என்று அளந்து அறியும் அறிவு. அந்த அறிவு இல்லாதவர் செய்து உடனே கெடுவர். 

எதைச் செய்து?


களவைச் செய்து உடனே கெடுவர்.


பரிமேலழகர் சொல்கிறார், களவு செய்வோம் என்று நினைப்பதும் செயல் தான். நினைக்கும் செயல். நினைத்தவுடனே வீழ்வர், "ஆங்கே" வீழ்வர் என்றால் உடனே. 


நாம் நிஜ வாழ்வில் அப்படி நிகழ்வதாக காண்பதில்லை. கையும் களவுமாக பிடிபட்டால் கூட, நீதி மன்றம், வழக்கு, வக்கீல், வாய்தா, சாட்சி, என்று இழுத்துக் கொண்டே போகும். எங்கே உடனே தண்டனை கிடைக்கிறது?


முன்பே வள்ளுவர் சொல்லி இருக்கிறார், "தன்நெஞ்சு அறிவது பொய்யற்க, பொய்ப்பின், தன்நெஞ்சே தன்னைச் சுடும்" என்று. அதற்கு ரொம்ப நேரம் ஆகாது. 


சரி, இது எதற்கு இந்த களவைப் பற்றி நாம் இவ்வளவு சிந்திக்க வேண்டும்?  நாம் களவு செய்வதே இல்லை. களவு செய்யும் எண்ணமும் இல்லை. எதற்கு இதைப் போட்டு படிக்க வேண்டும். 


நாம் நேரடியாக களவு செய்வது இல்லைதான். 


இருந்தும், பல விதங்களில் நாம் களவு செய்கிறோம். 


உதாரணமாக, 


நாம் பெறும் ஊதியத்துக்கு ஒவ்வொரு நாளும் அதற்கு உரிய வேலை செய்கிறோமா?  வேலை செய்தாலும், வாங்கிய பணத்துக்கு உரிய பலனை முதலாளிக்களுக்கு தருகிறோமா?  நூறு ரூபாய் பெற்றுக் கொண்டு என்பது ரூபாய் அளவு வேலை செய்தால், மீதி இருபது ரூபாய் களவுதான். 


வீட்டில் வேலை செய்பவர்கள், அவர்கள் செய்யும் வேலைக்கு உரிய ஊதியம் தருகிறோமா? இல்லை என்றால், எவ்வளவு குறைத்துக் கொடுக்கிறோமோ அவ்வளவு களவுதான். 


நம்மிடம் பணம் இருக்கிறது என்பதற்காக, பிறருக்கு கிடைக்க வேண்டிய ஒன்றை இலஞ்சம் கொடுத்து நாம் தட்டிப் பறித்தால் அதுவும் களவுதான். 


உறவில் கூட, பெறுவது அதிகமாகவும், கொடுப்பது குறைவாகவும் இருந்தால், அந்த இடைவெளி களவுதான். 


களவு என்றால் ஏதோ ஓட்டைப் பிரித்து இரவில் உள்ளே இறங்கி, திருடுவது மாத்திரம் அல்ல. 


நமக்குச் சொந்தம் இல்லாத எதை எடுத்துக் கொண்டாலும் அது களவுதான். 


எவ்வளவு களவு செய்கிறோம். 


கள்ளாமை துறவிக்கு மட்டும் அல்ல,  இல்லறத்தில் உள்ளவற்கும்தான். 






Thursday, January 9, 2025

கம்ப இராமாயணம் - சடாயு புலம்பல் - நெஞ்சின் நலம் காண

 கம்ப இராமாயணம் - சடாயு புலம்பல் - நெஞ்சின் நலம் காண 

https://interestingtamilpoems.blogspot.com/2025/01/blog-post_9.html

தயரதன் இறந்த செய்தியைக் கேட்ட சடாயு புலம்புகிறான். 


அவன் புலம்புவது ஒரு புறம் இருக்கட்டும். 


ஒரு பட்சிக்கும், ஒரு சக்ரவத்திக்கும் எப்படி இப்படி ஒரு நட்பு இருக்க முடியும் என்று வியப்பாக இருக்கிறது. 


நண்பர்களுக்குள்ளேயே ஒருவன் விரைவில் பெரிய இடத்தை அடைந்து விட்டால், மற்றவர்கள் மெல்ல மெல்ல விலகி விடுவார்கள். "அவன் பெரிய ஆள் .." என்று அவனிடம் உள்ள பழைய நெருக்கம் குறைந்துவிடும். 


அப்படி இருக்க ஒரு பறவைக்கும், ஒரு பெரிய சக்ரவத்திக்கும் இடையே இப்படி ஒரு நட்பா என்று நம்மை வியக்க வைக்கிறது.  


உண்மையான நட்பில் உயர்வு தாழ்வு இல்லை. 


இப்போது சடாயுவின் புலம்பலுக்கு வருவோம். 


சடாயு 


"தயரதா, என் நண்பனே, நீ ஏன் என்னை விட்டுப் போனாய் என்று எனக்குத் தெரியும். நீ இறந்து போனால் நானும் இறப்பேனா என்று என் நட்பின் ஆழத்தை அறியவே நீ என்னை விட்டுப் போய் விட்டாய். என்ன செய்ய. நான் இன்னும் உயிரை வைத்துக் கொண்டு இருக்கிறேனே. காரணம், நான் ஒரு விலங்கு என்பதலா? ஒரு வேளை நான் ஒரு மனிதப் பிறவியாய் இருந்திருந்தால் நீ உயிர் துறந்த போது நானும் உயிரை துறந்து இருப்பேன் என்று நினைக்கிறேன்"  


புலம்புகிறார். 


பாடல் 


அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும்

    தனிக் குடையாய்! ஆழி சூழ்ந்த

நிலம் காவல் அது கிடக்க, நிலையாத

    நிலை உடையேன் நேய நெஞ்சின்

நலம் காண நடந்தனையோ? நாயகனே!

    தீவினையேன், நண்பின் நின்றும்

விலங்கு ஆனேன் ஆகலினால், விலங்கினேன்;

    இன்னும் உயிர் விட்டிலேனால்.


பொருள் 

அலங்காரம் = அழகானது 


என = என்று 


உலகுக்கு = இந்த உலகத்துக்கு 


அமுது அளிக்கும் = அமுதை வழங்கும் 


தனிக் குடையாய்! = சிறந்த வெண் கொற்ற குடையை உடையவனே 


ஆழி சூழ்ந்த = கடல் சூழ்ந்த 


நிலம் = இந்த உலகம் 


காவல் அது கிடக்க = காவல் இன்றி கிடக்க (நீ இல்லாததால்) 


நிலையாத = ஒரு நிலையில் நிற்காத 


நிலை உடையேன் = மனதை உடைய என் 


நேய நெஞ்சின் = அன்பு கொண்ட மனத்தின் 


நலம் காண = பெருமையை, உறுதியைக் காண 


நடந்தனையோ? = என்னை விட்டு பிரிந்து போனாயோ ?


நாயகனே! = தலைவனே 


தீவினையேன், = தீய வினை உடையவனான நான் 


நண்பின் நின்றும் = நட்பு இருந்தாலும் 


விலங்கு ஆனேன் = விலங்காக இருக்கின்றேன் 


ஆகலினால் = ஆதலினால், எனவே 


விலங்கினேன் = விலகி இருக்கிறேன் 


இன்னும் உயிர் விட்டிலேனால் = இன்னும் உயிரை விடாமல் இருக்கிறேன் 


தன்னைத் தானே நொந்து கொள்கிறார். 


அலுவலக வேலைக்கு செல்பவர்கள் கூட, வீட்டில் கணவன்/மனைவி/பிள்ளைகள் என்று உறவாட நேரம் இல்லமால் தவிக்கிறார்கள். 


ஒரு சக்கரவர்த்தி எப்படி நேரம் ஒதுக்கி ஒரு பறவையோடு நட்பு பாராட்டி இருக்க முடியும். 


நேரம் இல்லை என்று நாம் சொல்லுவது எல்லாம் ஒரு சாக்கு. 


அன்பிருந்தால், நேரம் இருக்கும். 



Wednesday, January 8, 2025

தேவாரம் - பித்தரைப்போலப் பிதற்றுவார்

 தேவாரம் - பித்தரைப்போலப் பிதற்றுவார்


அப்பர் அருளிச் செய்த திருவாதிரைப் பதிகம். 


பெற்றோர்கள் குழந்தையை கொஞ்சும் போது, "என்னைப் பெத்த இராசா, செல்லக் கிளி, பப்புலு, ஜில்லுக் குட்டி, குட்டிக் கண்ணா.." என்றெல்லாம் கூறுவார்கள். அவர்களிடம் போய், "இராசாவா?, கண்ணனா?, கிளியா? ன்னு முடிவு பண்ணுங்க. ஒரே பிள்ளை எப்படி எல்லாமாக இருக்க முடியும். சும்மா உளறக் கூடாது" என்று சொல்ல முடியுமா?  


அன்பு மேலிட்டால் என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்கள். அதை அறிவுக் கண் கொண்டு பார்க்கக் கூடாது. 


காதலன், காதலியை கொஞ்சும் போது, "மானே, தேனே, மல்லிகையே, நிலவே,..."என்றெல்லாம் கொஞ்சுவான். ஒரே பெண் எப்படி மானாகவும், மயிலாகவும் இருக்க முடியும்?  


அதெல்லாம் கேட்க்கக் கூடாது. அன்பு, காதல் என்று வந்து விட்டால் கொஞ்சம் அறிவு விடை பெற்றுக் கொள்ளும். 


பக்தர்கள் பாடும் அப்படித்தான் என்கிறார் திருநாவுகரசு சுவாமிகள்.



இறைவன் முன் பக்தர்கள் இறைவனின் குண நலன்களைப் பாடி பரவசம் அடைகிறார்கள். ஆளாளுக்கு ஒரு குணத்தை சொல்கிறார்கள். ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தம் இல்லாமல் இருக்கும். 


வெளியில் இருந்து பார்பவர்களுக்கு ஏதோ பித்து பிடித்து உளறுவதைப் போல் இருக்கும். பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை பிடிப்பது போல் இருக்கும்.  


என்ன செய்வது. பக்தி மேலிட்டால் என்ன சொல்கிறோம், என்ன செய்கிறோம் என்று தெரிவதில்லை. 


பாடல் 


குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள்

பிணங்கித்தம்மிற் பித்தரைப்போலப் பிதற்றுவார்

வணங்கிநின்று வானவர்வந்து வைகலும்

அணங்கனாரூ ராதிரை நாளா லதுவண்ணம் .


பொருள் 


குணங்கள்பேசிக் = இறைவனின் குணங்களைப் பேசி 


கூடிப் = பக்தர்கள் ஒன்றாகக் கூடி 


பாடித் = பாட்டுப் பாடி 


தொண்டர்கள் = பக்தர்கள் 


பிணங்கித் = இறைவனை புகழ்வதில் ஒருவருக்கு ஒருவர் மாற்றிச் சொல்லி 


தம்மிற்  = தங்களுக்குள் 


பித்தரைப்போலப் பிதற்றுவார் = பித்தர்களைப் போல் பிதற்றுவார்கள் 


வணங்கி நின்று = வணங்கி நின்று 


வானவர்வந்து = தேவர்கள் வந்து 


வைகலும் = தினமும் 


அணங்கனாரூ ராதிரை நாளா லதுவண்ணம் = அணங்கன் + ஆரூர் + ஆதிரை + நாள் + அது + வண்ணம் = அணங்கு என்றால் பெண். பெண்ணை பாதியாகக் கொண்டவன். திருவாரூர், திருவாதிரைத் நல்ல நாளில்.


தேவர்கள், திருவாரூர் வந்து தினமும் வணங்கிச் செல்வார்கள். 


உன் பக்தி சிறந்ததா, என் பக்தி சிறந்தாத என்பதல்ல போட்டி. அவரவருக்குத் தோன்றியதைச்  சொல்லி வணங்குகிறார்கள். 


தேவாரம் தெரியவில்லையா, பரவாயில்லை. 


திருவாசகம், பிரபந்தம் தெரியவில்லையா - ஒரு பிழையும் இல்லை. 


பக்தி மனதில் இருந்தால் போது. அந்த பக்தியில் என்ன தோன்றுகிறதோ, அதுதான் வழிபாடு. 


இறைவனை இப்படித்தான் வழிபட வேண்டும் என்று ஒரு நியதி இல்லை. 


சூடிக் கொடுத்தவள் = ஆண்டாள் 


சூடிக் கொடுத்தவன் = கண்ணப்பன் 





 


Monday, January 6, 2025

திருவருட்பா - வாலிலேன்

திருவருட்பா - வாலிலேன் 


உணவு வாழ்வதற்கு எவ்வளவு தேவையோ, அதுவே அளவு அதிகமானால் பல துன்பங்களுக்கு இடமாகிப் போகிறது. 


உணவில் நாட்டம் அதிகமாக அதிகமாக, மற்றவற்றில் புத்தி போவது இல்லை. 


உணவில் சிறு பற்று வந்துவிட்டால் கூட போதும், அது நாளடைவில் பெரிதாக வளர்ந்து விடும். 


"காலையில் எழுந்தவுடன் ஒரு வாய் காப்பி குடிக்காமல் எனக்கு ஒரு வேலையும் ஓடாது" என்று பெரிய சாதனை போல் சொல்லுபவர்களை கேட்டு இருக்கிறேன். 


சில நாள் வீட்டில் செய்த உணவு மிகுந்து விடும். அதைக் கூட மற்றவர்களுக்கு பகிர்ந்து உண்ணும் எண்ணம் வராது. அதை குளிர் சாதன பெட்டியில் (fridge) வைத்து இரண்டு மூணு நாளைக்கு சூடு பண்ணி சூடு பண்ணி உண்பவர்களும் உண்டு. 


வள்ளலார் சொல்கிறார்,


"நெல் குதிர் போல் என் வயிற்றில் சோற்றை அள்ளிப் போடுகிறேன். பழங்களை உண்டு அதன் தோலில் ஒரு துளியைக் கூட மற்றவர்களுக்குத் தர மாட்டேன். எனக்கு ஒரு வால் இல்லை. இருந்து இருந்தால் நான் காட்டில் வாழும் விலங்கோடு ஒன்றாக இருக்கத் தகுந்தவன். இப்படி ஆகி விட்டேனே, இறைவா நான் என்ன செய்வேன்" என்று. 


பாடல் 


 பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே

          பத்தியால் ஒருபெரு வயிற்றுச்

     சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை

          தகுபலா மாமுதற் பழத்தின்

     தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும்

          சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்

     வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க

          வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.



பொருள் 


 பாலிலே கலந்த சோறெனில் = பாலில் கலந்த சோறு என்றா 


விரைந்தே = வேகமாகச் சென்று 


  பத்தியால் = மிகுந்த ஆர்வத்துடன் 


ஒருபெரு வயிற்றுச் = பெரிய வயிறு 


சாலிலே = பெரிய வாயகன்ற பாத்திரம். நெல்லு போட்டு வைப்பார்கள். 


அடைக்கத் தடைபடேன் =  அள்ளி அள்ளிப் போட்டு, ஒரு அளவில்லாமல் உள்ளே போடுவேன் 


வாழை,  தகுபலா மா = வாழை, பலா, மாம் பழம் 


முதற் பழத்தின் = போன்ற பழங்களை தின்று விட்டு, 


தோலிலே எனினும் = அவற்றின் தோலில் 


கிள்ளிஓர் சிறிதும் = நகத்தால் கிள்ளி ஒரு சிறிய துணுக்கைக் கூட 


சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் = அருகில் இருப்பவர்களுக்கு கொடுக்க மனம் வராது எனக்கு 


வாலிலேன் = எனக்கு வால் இல்லை 


இருக்கில் = இருந்திருந்தால் 


வனத்திலே இருக்க வாய்ப்புளேன் = காட்டில் இருக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. வால் இல்லாத ஒரே காரணத்தால் நாட்டில் இருக்கிறேன். நான் ஒரு வால் இல்லாத வன விலங்கு 


என்செய்வேன் எந்தாய் = நான் என்ன செய்வது இறைவா 


முதலில் வேறு சோறு. அப்புறம் அதில் கொஞ்சம் பால் விட்டு உண்பது. பின் சோற்றில் பாலை விடுவதற்கு பதில் பாலில் சோற்றை விடுவது என்று ஆகி விடுகிறது. 


" பாலிலே கலந்த சோறெனில்"....பாலில் கலந்த சோறு என்கிறார். 


வீட்டில் நல்ல பண்டங்கள் செய்தால், நாலு பேருக்குக் கொடுத்து உண்ண வேண்டும். எல்லாம் எனக்கே என்று தீபாவளி, பொங்கலுக்கு செய்த தின் பண்டங்களை பத்து நாள் வைத்து உண்ணக் கூடாது. 


பசித்தவர்க்கு கொஞ்சம் உணவு கொடுத்து உண்டால் அவர்கள் பசி தீர்வது மட்டும் அல்ல, நாம் உண்பதும் குறையும். 

Wednesday, January 1, 2025

திருக்குறள் - எது எங்கு நிற்கும்

 திருக்குறள் - எது எங்கு நிற்கும் 

https://interestingtamilpoems.blogspot.com/2025/01/blog-post.html


எவ்வளவோ படிக்கிறோம், எவ்வளவோ கேட்கிறோம். 


படிக்கும் போதும், கேட்கும் போதும் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அதை அப்படியே கடை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். 


ஆனால் முடிவதில்லை. 


மனம் பழைய வழியிலேயே போகிறது.  


ஏன்?


ஒன்றைச் செய்வதினால் வரும் நன்மை, செய்யாமல் விடுவதினால் வரும் தீமை என்ற இரண்டு மட்டும் புரிந்தால் போதாது. 


நன்மையின் அளவு என்ன, தீமையின் அளவு என்ன என்று தெரிய வேண்டும்.  அளவு தெரிந்தால், கடைபிடிப்பது எளிது. 


ஒரு உதாரணம் பார்ப்போம்.


ஐஸ் கிரீம் சாப்பிடுவது இன்பமாக இருக்கிறது. அதில் உள்ள துன்பம் தெரிகிறதா என்றால் இல்லை. அதில் என்ன துன்பம் இருக்கிறது என்று சொல்லுவோம். 


அதுவே, ஒரு சர்க்கரை நோயாளியிடம் அந்த ஐஸ் கிரீமை கொடுத்தால் காத தூரம் ஓடுவார். ஏன்? அதனால் வரும் தீமை அவருக்கு நன்றாகத் தெரியும். இரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு கூடும் என்று துல்லியமாகத் தெரியும். எத்தனை கிராம் மாத்திரை சாப்பிட வேண்டி வரும் என்று தெரியும். தலை சுற்றல், வியர்வை, படபடப்பு போன்ற உடல் உபாதைகள் அவருக்குத் தெரியும். எனவே, அதை உண்ணாமல் இருப்பது சுகம் என்று இருப்பார். 


தவறு செய்வதின் விளைவு முழுமையாகத் தெரிந்தால், அளந்து, அது என்ன அளவு என்று தெரிந்தால் தவறு செய்வதில் நாட்டமே வராது. அதை செய்யாமல் இருப்பது எவ்வளவு சுகம் என்று தெரியும். 


அந்த அளவு இல்லை என்றால், "செய்தால் என்ன, ஒரு முறைதானே" என்று மனம் ஓடும். 


வள்ளுவர் சொல்கிறார் 


"எதையும் ஆராய்ந்து, விளைவுகளை அளந்து அறிந்தவன் மனதில் எப்படி அறம் நிலைத்து நிற்குமோ, அது போல் களவையும், அதன் சுவையையும் அறிந்தவர் மனதில் வஞ்சனை நிலைத்து நிற்கும்" 


பாடல் 


அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்

களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு


பொருள் 


அளவுஅறிந்தார் = எதையும் ஆராய்ந்து, அளந்து அறிந்தவர் 


நெஞ்சத்து = மனதில் 


அறம்போல  நிற்கும் = அறம் எப்படி நிலைத்து நிற்குமோ அது போல 


களவுஅறிந்தார் = களவு செய்வதை மேற்கொண்டவர் 


நெஞ்சில் = மனதில் 


கரவு = வஞ்சனை 


களவு எண்ணம் மனதில் வந்து விட்டால்,யாரை எப்படி ஏமாற்றலாம், எப்படி அவர்கள் பொருளை அவர்கள் அறியாமல் பறித்துக் கொள்ளலாம் என்றெல்லாம் மனம் ஓடும். அதில் சந்தேகமே இல்லை. அது எந்த அளவுக்கு உறுதியானது என்றால் அளவு அறிந்தவர் மனதில் அறம் எவ்வாறு நிலைத்து நிற்குமோ அந்த அளவு என்கிறார். 


நாம் இரண்டாம் பகுதியை சற்று விட்டு விடுவோம். நமக்கு களவில் நாட்டம் இல்லை. களவினால் வரும் பொருள் நல்லது செய்யாது என்று நாம் நம்புபவர்கள். 


முதலாவது பகுதி நமக்கு முக்கியமானது. 


அற வழியில் நிற்க மனம் ஆசைப் பட்டாலும், பெரும்பாலும் முடிவது இல்லை. ஒரு விரதம் இருக்க முடிகிறதா?  ஒரு வேளை காப்பியை விட முடிகிறதா?  


காரணம், விளைவின் ஆழம் தெரியாமை. மேலோட்டமாகத் தெரியும். அல்லது, அது பற்றிய சிந்தனை கிடையாது. முன்னோர்கள் சொன்னார்கள், புத்தகத்தில் எழுதி இருக்கிறது, பரம்பரையாக இப்படித்தான் செய்து வருகிறார்கள் என்ற அளவில் தெரியுமே தவிர செயலின் உண்மையான நீள அகலம் தெரியாது. 


தெரிந்தால், அறத்தை கடை பிடிப்பது அவ்வளவு எளிது. 


துறவறத்தின் இன்ப எல்லைகள் புரியாமையால் இல்லறத்தில் மனிதன் கிடந்து உழல்கிறான். 


புரிந்தவன், துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விடுகிறான்.