திருவாசகம் - அதிசயப் பத்து - நொடியன சொல் செய்து
https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post_24.html
நம்மை இந்தப் பிறவியில் ஆழ்த்தியது யார் ?
நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு தக்கவாறு நமக்குப் பிறவியை அளிப்பவன் இறைவன்.
இறைவன் நினைத்தால், "சரிப்பா, நாளையில் இருந்து இனி யாருக்கும் ஒரு பிறவியும் கிடையாது. எல்லாருக்கும் முக்தி. இதே வேலையாப் போச்சு உங்களோட. பிறந்து, இறந்து, பாவ புன்னியங்கள் செய்து, இன்ப துன்பங்களை அனுபவித்து, இதையெல்லாம் கணக்கு வைத்துக் கொண்டு...போதும்...இன்றோடு இனி யாருக்கும் எந்த பிறவியும் கிடையாது" என்று இறைவனால் செய்ய முடியுமா ? முடியாதா?
முடியும்தானே? அவனால் முடியாதது எது? பின் ஏன் செய்ய மாட்டேன் என்கிறான். எதுக்கு இந்த துன்பம்?
IPL போட்டி நடக்கிறது. எதுக்கு இத்தனை போட்டி, பாயிண்ட் எல்லாம். எல்லாருக்கும் கோப்பை என்று கொடுத்துவிட்டுப் போகலாம்தானே ? ஆளுக்கு ஒரு கோப்பை. நம்மால் அது முடியுதானே? பின் ஏன் செய்ய மாட்டேன் என்கிறோம்?
அது ஒரு லீலை...அனுபவங்கள் ஆன்மாவைப் பக்குவப் படுத்துகின்றன. ஒரு கட்டத்தில் ஆன்மா சலிப்பு அடைந்து, போதும், என்று இறைவனை நாடத் தொடங்குகிறது.
பொம்மைகளை வைத்து விளையாடும் பிள்ளை, சிறிது நேரத்தில் அவற்றை தூக்கிப் போட்டுவிட்டு, அம்மாவைத் தேடுவது போல. அவளைக் காணோம் என்றால் அழத் தொடங்கி விடும். ஏன், பொம்மைதான் இருக்கிறதே. வைத்துக் கொண்டு விளையாட வேண்டியதுதானே என்றால், அதில் சலிப்பு வந்து விடுகிறது. அம்மா வேண்டும்.
அது போல் ஆன்மாக்கள் இறைவனை தேடும் நிலை வரும். அது வரை பொம்மை விளையாட்டுத்தான்.
மணிவாசகர் சொல்கிறார்
"இறைவா, நீ என்னை முன்னொரு காலம் உன்னை விட்டு நீக்கி, இந்த உலக வாழ்க்கையில் செலுத்தினாய். பின், நீயே எனக்கு மந்திர உபதேசம் செய்து, ஒரு துன்பமும் இல்லாமல் என்னை இந்தப் பிறவிக் கடலில் இருந்து கை தூக்கி விட்டாய். என் முன் வினைகள் என்னைத் தொடரா வண்ணம் பார்த்துக் கொண்டாய். என்னையும் ஆட்கொண்டு, உன் அடியவர்களில் ஒருவனாக சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது"
பாடல்
நீக்கி, முன் எனைத் தன்னொடு நிலாவகை; குரம்பையில் புகப் பெய்து;
நோக்கி; நுண்ணிய, நொடியன சொல் செய்து; நுகம் இன்றி விளாக்கைத்து;
தூக்கி; முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து; எழுதரு சுடர்ச் சோதி
ஆக்கி; ஆண்டு; தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
பொருள்
நீக்கி = உன்னை விட்டு என்னை நீக்கி, விலகச் செய்து
முன் எனைத் = முன்பு என்னை
தன்னொடு = தன்னோடு
நிலாவகை = எப்படி பிறை நிலா சிவனை விட்டுப் பிரியாமல் இருக்கிறதோ அது போல
குரம்பையில் புகப் பெய்து = இந்தப் பிறவி என்ற சுழலில் என்னை விடாமல் அழுத்தி
நோக்கி = பின் அன்புடன் நோக்கி
நுண்ணிய = கூர்மையான, நுட்பமான
நொடியன சொல் = ஒரு நொடியில் சொல்லும் சொல்
செய்து = எனக்குச் சொல்லி
நுகம் இன்றி விளாக்கைத்து = நுகம் என்றால் மாட்டுக்குக் கட்டும் நுகந் தடி. அந்த மாதிரி பிணைப்பு எதுவும் இல்லாமல் விவசாயம் செய்வது போல
தூக்கி = என்னை இந்தப் பிறவிக் கடலில் இருந்து கை தூக்கி விட்டு
முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து = முன்பு செய்த வினைகள் தூள் தூளாகும் படி செய்து
எழுதரு சுடர்ச் சோதி ஆக்கி = மேல் நோக்கி எழுந்து சுடர் விடும் ஜாதியாக்கி
ஆண்டு = ஆட்கொண்டு
தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! = தன்னுடைய அடியவர்களில் சேர்த்துக் கொண்ட அதியசயத்தை கண்டோம்.
ஆன்மாக்கள் இந்தப் பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கின்றன. வெளியே வர முடியாமல் தவிக்கின்றன. அவற்றின் மேல் கருணை கொண்டு, அவன் அவற்றிற்கு வீடு பேறு தருகிறான்.
நொடியன சொல் என்றால் ஒரு நொடியில் கூறிய சொல். ஏதோ உபதேசம் என்றால் ஒரு நான்கு ஐந்து நாள் சொல்லுவது அல்ல. ஒரே நொடி. அவ்வளவுதான்.
அருணகிரிக்கு முருகன் சொன்னது போல - "சும்மா இரு". அவ்வளவுதான் உபதேசம்.
இங்கே மணிவாசகருக்கு என்ன சொன்னார் என்று சொல்லவில்லை. உரை செய்தவர்கள் "ஓம்" என்று பிரணவத்தை உபதேசம் செய்தார் என்கிறார்கள்.
அதற்குப் பின், நீண்ட நாள் பூஜை, புனஸ்காரம், என்றெல்லாம் இல்லை. வேறு எதுவும் இல்லை.
"நுகம் இன்றி விளாக்கைத்து"
ஆன்மீக நூல்களின் தளம் வேறு எங்கோ இருக்கிறது. இவற்றின் உட்பொருள் காண்பது என்பது கடினம். முதலில் மேலோட்டமான பொருள் என்ன என்று தெரிந்து கொள்வோம். பின் உட்பொருளை தேட வேண்டும்.
தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும்.