Saturday, September 13, 2025
கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது -2/2
Friday, September 12, 2025
கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது - 1/2
கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது -1/2
துக்கத்தை எப்படி கையாள்வது ?
எந்த ஒரு உணர்வையும் கையாள்வது என்றால் அதில் பயிற்சி வேண்டும். துக்கம் என்றாலே காத தூரம் ஓடி விடுகிறோம். அதை எப்படியாவது தவிர்க்க எண்ணுகிறோம். இப்படி பயந்து பயந்து ஓடிக் கொண்டே இருந்தால், ஒரு நாள் உண்மையிலேயே ஒரு துன்பம் வந்தால் அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமலேயே போய் விடும். சின்ன துன்பம் வந்தால் கூட தவித்துப் போய் விடுவோம்.
துன்பத்தை கையாளத் தெரிய வேண்டும். அதற்காக எங்கு போய் பயிற்சி எடுப்பது?
எங்கும் போக வேண்டாம். வரும் துன்பங்களை ஏற்றுக் கொண்டு அவற்றை கடந்து போகப் பழக வேண்டும்.
சரி துன்பமே வராவிட்டால் என்ன செய்வது?
அதற்குத்தான் விரதம், தூக்கம் விழிப்பது என்று வைத்து இருந்தார்கள். மாதத்தில் ஒரு நாள் சாப்பிடாமல் இருந்து பார். பசிக்கும். தலை வலிக்கும். சோர்வு வரும். ஆனால், பழகி விடும். அப்புறம், அது ஒரு பெரிய விடயமாகத் தெரியாது. அது போல் ஆண்டில் ஒரு நாள் சிவராத்திரி அன்று தூக்கம் தவிர்த்துப் பார்க்க வேண்டும். கடினம்தான். அவற்றை ஏற்றுப் பழகிக் கொண்டால் பின் நாம் எதிர்பார்க்காமல் பசி தூக்கம் போன்ற துன்பங்கள் வரும் போது அவற்றை எளிதில் நம்மால் சமாளிக்க முடியும்.
நான் பார்த்தவரை, நாம் துக்கம் அனுஷ்டிப்பது என்பதை நாம் சரியாக செய்வதில்லையோ என்ற சந்தேகம் உண்டு. துக்கம் வந்தால் அதை தள்ளிப் போட்டு விடுகிறோம். அதில் பல சடங்குகளைப் புகுத்தி அந்த உணர்வுகளை மழுங்கப் பண்ணி விடுகிறோமோ என்று தோன்றுகிறது. மனம் அந்த சமய சடங்குகளில், அதற்கு வேண்டிய சாமான்கள் வாங்குவது, வீட்டை சுத்தம் செய்வது, சடங்கு செய்யும் ஆட்களை கொண்டு வருவது,சுற்றம்/ நட்பை அழைப்பது, அதில் யாரை அழைக்க வேண்டும், யாரை அழைக்க வேண்டாம் என்ற சச்சரவு வேறு.
இதில் மனம் போனால் துக்கத்தில் எங்கே மனம் போகும்.
அனுபவிக்காமல் விட்ட துக்கம் எங்கோ போய் ஒளிந்து கொள்கிறது. பின், அது வேறு வேறு விதங்களில் வெளிப்படுகிறது.
ஜடாயு இறந்து போகிறார்.
இராமன் துக்கத்தில் புலம்புகிறான். அது தான் சரியான ஒன்று.
ஆனால், இலக்குவன் அதை மறுக்கிறான்.
அவன் என்ன சொன்னான் என்று நாளை சிந்திப்போம்.
Thursday, August 21, 2025
கம்ப இராமாயணம் - மாரீசன் - புலவியினும் வணங்கா முடி
கம்ப இராமாயணம் - மாரீசன் - புலவியினும் வணங்கா முடி
https://interestingtamilpoems.blogspot.com/2025/08/blog-post.html
வில்லன் இல்லை என்றால் கதாநயாகன் இல்லை.
கதாநாயகனின் பெருமை எல்லாம் வில்லனைச் சேர்ந்தது.
இராவணன் சீதையைச் தூக்கிச் செல்லவில்லை என்றால், பதினாலு வருடம் இராமனும், சீதையும் காட்டில் இருந்து விட்டு பின் நாட்டுக்குப் போய் இருப்பார்கள். அதில் இராமனின் பெருமை என்ன இருக்கிறது ? அப்பா காட்டுக்குப் போகச் சொன்னார். போனான். பின் வந்தான் என்று கதை முடிந்து இருக்கும்.
இராமனின் ஆற்றலை காட்ட ஒரு இராவணன் வேண்டும்.
இராமன் தெருவோரம் போகும் ஒரு மெலிந்த ஒருவனை வென்றான் என்றால் அது ஒரு செய்தி கூட இல்லை. கொசுவை அடித்துக் கொல்வது என்ன பெரிய செய்தியா?
இராமனின் பெருமை உயர வேண்டும் என்றால் அவன் இராவணன் என்ற மிகப் பெரிய வீரனை, தவ வலிமை உடையவனை, பேரும் புகழும் கொண்டவனை வென்றான் என்ற சொல்ல வேண்டும்.
இராமன் வென்ற இராவணன் எப்பேற்பட்டவன் என்று கம்பன் விவரித்துக் கொண்டு போகிறான்.
எவ்வளவுக்கு எவ்வளவு இராவணனை தூக்கிப் பேசுகிறானோ, அதை விட ஒரு படி இராமன் புகழ் வரப் போகிறது என்று அர்த்தம். அப்பேற்பட்ட இராவணனை, இராமன் வென்றான் என்று வர வேண்டும்.
"சிவன், திருமால், பிரமன் ஆகிய மூவரும், இராவணனை வெல்ல முடியாது. மும்மூர்திகளாலும் வெல்ல முடியாதவன் என்றால் அவனை வேறு யாரால் வெல்ல முடியும்.
எப்பேற்பட்ட ஆள் ஆனாலும், வீட்டில், படுக்கை அறையில், மனைவியிடம் அல்லது காதலியிடம் இறங்கி வந்தே ஆக வேண்டும். அது தான் கலவியில் இன்பம். அதட்டி, மிரட்டி, இன்பம் அனுபவிக்க முடியுமா?
ஆனால், இராவணன், படுக்கை அறையிலும் வணங்கா முடி உள்ளவனாம். அப்படி என்றால் வேறு எங்கு வணங்கி இருப்பான்? "
பாடல்
புலியின் அதள் உடையானும், பொன்னாடை
புனைந்தானும், பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு
யாவர், இனி நாட்டல் ஆவார்?
மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந்
தோள், சேயரிக் கண், வென்றி மாதர்
வலிய நெடும் புலவியினும் வணங்காத
மகுட நிரை வயங்க மன்னோ.
பொருள்
புலியின் = புலியின்
அதள் = தோலை
உடையானும் = உடையாகக் கொண்ட சிவனும்
பொன்னாடை = பட்டு , பீதாம்பரம்
புனைந்தானும் = உடுத்திய திருமாலும்
பூவினானும் = தாமரை பூவில் தோன்றிய பிரமனும்
நலியும் = (இராவணனை) வெல்லும்
வலத்தார் அல்லர் = வல்லமை உடையவர்கள் அல்ல
தேவரின் = அப்படி இருக்கும் போது, தேவர்களில்
இங்கு யாவர் = யார் இங்கு
இனி நாட்டல் ஆவார்? = இனி அவனை வெல்லப் போக்கிரார்கள்
மெலியும் இடை = மெலிந்து கொண்டே போகும் இடுப்பு
தடிக்கும் முலை = தடிக்கும் மார்பகங்கள்
வேய் = மூங்கில் போல்
இளந் தோள் = இளமையான தோள்கள்
சேயரிக் கண் = சிவந்த கண்கள்
வென்றி மாதர் = வெற்றி கொள்ளும் பெண்கள்
வலிய நெடும் புலவியினும் = நீண்ட கலவி நேரத்திலும்
வணங்காத = வணங்காத
மகுட நிரை வயங்க மன்னோ = மகுடங்களை கொண்டவன்
படுக்கை அறையில் கூட தலை வணங்காதவன்.
தனிமையில், மோகம் கொண்ட நேரம், ஆண், பெண்ணிடம் அடிமையாவது இயல்பு.
முருகன், வள்ளியிடம் "நீ எனக்கு என்ன ஆணை இடுகிறாயோ அதை செய்வேன் என்று வள்ளியின் பாதங்களை பிடித்துக் கொண்டு கேட்டானாம்".
"பணியா என வள்ளி பதம் பணியும்,
தணியா அதி மோக தயாபரனே"
என்பது அருணகிரி வாக்கு
அவள் காலடியில் பணிந்து நிற்பானாம்.
அதுதான் ஆண்மை. பெண்ணிடம் தோற்க வேண்டும். என் முன்னால் அவன் பணிந்து நிற்கிறான் என்று அவள் பெருமை கொள்ள வேண்டும். அது உயர்வு தாழ்வு அல்ல. அன்பின் வெளிப்பாடு.
இராவணனுக்கு அதெல்லாம் தெரியாது. அங்கும் கூட அவன் வணங்கா முடியன்.
அதுதான் அரக்க குணமோ ?
Thursday, July 31, 2025
நாலாயிர திவ்ய பிரபந்தம் - பசி தீராக் குழந்தை
நாலாயிர திவ்ய பிரபந்தம் - பசி தீராக் குழந்தை
https://interestingtamilpoems.blogspot.com/2025/07/blog-post_31.html
சில வீடுகளில் ஆண் பிள்ளைகள் மிகுந்த பசியோடு இருக்கும். எதை வைத்தாலும் சில நிமிடங்களில் காலி பண்ணி விடுவார்கள். அம்மாக்களுக்கு பிள்ளை நன்றாக சாப்பிடுகிறானே என்று ஒரு மகிழ்ச்சி இருந்தாலும், "ஒண்ணு செஞ்சா ஒரு நாலு நாளைக்கு வைக்க விட மாட்டான்...அது காலி ஆகிற வரையில் அவனுக்கு தூக்கம் வராது" என்றும் அலுத்துக் கொள்வார்கள்.
தோசை செய்து போட்டால் நாலு, அஞ்சு, ஆறு என்று போய்க் கொண்டே இருக்கும். வளரும் பிள்ளைகள். ஓடி ஆடி வந்திருப்பான். என்ன போட்டாலும் பசி எளிதில் அடங்காது.
இந்த உள்ளூரில் இந்த ஆட்டம் பாட்டத்துக்கே இவ்வளவு பசிக்கும் என்றால், உலகையே படைத்து, காத்து அருளும் பெருமாளுக்கு எவ்வளவு பசிக்கும் என்று நினைக்கிறார் பேயாழ்வார்.
"மண்ணை உண்டு, அரக்கியின் முலைப் பால் உண்டு, அதுவும் போதாது என்று ஆயர் பாடியில் உள்ள வீடுகள் எல்லாம் சென்று வெண்ணையை திருடி உண்டான். இப்படி தன் பிள்ளை திருடித் தின்கிறானே என்று போபம் கொண்டு அவனை சின்ன கையிற்றால் யசோதை கட்டிப் போட்டாள்"
என்கிறார்.
பாடல்
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,
வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி – கண்ணிக்
கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்,
வயிற்றினோ டாற்றா மகன்.
பொருள்
மண்ணுண்டும் = மண்ணைச் சாப்பிட்டு. இந்த உலகையே உண்டு.
பேய்ச்சி முலையுண்டு = பூதனை என்ற அரக்கியின் முலைப் பாலைக் குடித்து
மாற்றாதாய் = பசி அடங்காமல்
வெண்ணெய் விழுங்க = ஆயர்பாடியில் உள்ள வீடுகளில் வெண்ணையை திருடி உண்டதால்
வெகுண்டு = கோபம் கொண்டு
ஆய்ச்சி = யசோதை
கண்ணிக் கயிற்றினால் = சிறு சிறு கயிறுகள் கொண்டு முடி போட்ட கையிற்றால்
கட்ட = கட்டிப் போட
தான் = அவனே
கட்டுண் டிருந்தான் = கட்டுக்குள் இருந்தான்
வயிற்றினோ டாற்றா மகன் = வயிறு ஒரு போதும் திருப்தி அடையாத மகனான கண்ணபிரான்.
அது என்ன "கண்ணிக் கயிற்றினால்" ?
கயிறு இருந்தால் தானே கட்டிப் போடுவார்கள் என்று ஊரில் உள்ள கயிறை எல்லாம் துண்டு துண்டாய் வெட்டிப் போட்டு விடுவானாம் கண்ணன்.
அவனைக் கட்டிப் போட கயிறு எங்கே என்று தேடி, எதுவும் கிடைக்காமல், இருக்கிற துண்டு துண்டு கயிறுகளை எல்லாம் ஒன்றோடு ஒன்று முடிச்சுப் போட்டு நீண்ட கயிறை உருவாக்கினாள் யசோதை. எனவே "கண்ணிக் கயிறு" க். கண்ணி என்றால் சிறு துண்டு.
உலகையே உண்ட அவனுக்கு இந்த முடிச்சுப் போட்ட கயிறு எம்மாத்திரம்.
இருந்தாலும் கட்டுண்டு கிடந்தான்.
காரணம்,
இறைவனை நமது பலத்தால் பற்ற முடியாது. அது உடல் பலம் என்றாலும் சரி, மூளைப் பலம் என்றாலும் சரி. படித்து, ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடித்து விடுகிறேன் என்றால் முடியாது. ஆனால், அன்புக்கு அவன் கட்டுப் படுவான். அன்பால் அவனை எளிதாக கட்டி விடலாம். அதுவும், துண்டு துண்டு கயிற்றுக்கு அவன் கட்டுண்டு நிற்பான்.
இரண்டாவது, வினை, இறைவனையும் விடாது. வெண்ணையை திருடி உண்டது குற்றம் தானே. அதற்கு தண்டனை கையிற்றால் கட்டப்பட்டு இருப்பது. ஒரு குறியீடு. ஒரு அடையாளம். வினை யாரையும் விடாது. விளையாட்டாகச் செய்தேன், தெரியாமல் செய்தேன், அதுக்குக் கூட எனக்கு உரிமை இல்லையா என்றெல்லாம் வாதம் பண்ணி பலன் இல்லை.
சிறு பிள்ளையாக இருந்த போது, விளையாட்டாக கூனி முதுகில் களி மண் உருண்டையை அம்பில் சொருகி அவள் முதுகில் அடித்ததன் பலன் நமக்குத் தெரியும்.
எல்லாவற்றையும் விட்டு விடுவோம். பாசுரத்தை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று தெரியும். பொருள் தெரிந்து படிக்கும் போது அதன் இனிமை மேலும் கூடும்.
Thursday, July 10, 2025
திருக்குறள் - நிச்சயமான கேடு
திருக்குறள் - நிச்சயமான கேடு
சிலர், அவர்களின் கெட்ட குணங்களை, ஏதோ பெரிய சாதனை, பெருமை போல் சொல்லிக் கொள்வார்கள்.
உதாரணமாக, "எனக்கு பழியா கோபம் வரும், முணுக்கென்றால் எனக்கு மூக்கு மேலே கோபம் வரும். கோபம் வந்தால் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியாது.."என்றெல்லாம் பெருமையாக பேசிக் கொள்வார்கள்.
சில தொழில் அதிபர்கள், நிறுவன மேலாளர்கள் தங்கள் கோபத்தால் அங்கே வேலை செய்யும் ஆட்களை மிரட்டி வேலை வாங்குவார்கள். வேலை நடக்கும். எனவே, அவர்கள் தங்கள் கோபத்தை பெரிய திறமை என்று நினைத்துக் கொள்வார்கள்.
வீட்டில் கூட சில பெண்மணிகள், வீட்டில் வேலை பார்க்கும் பெண்களை அதட்டி, உருட்டி, எதற்கு எடுத்தாலும் கோபித்து, திட்டி, வேலை வாங்குவார்கள். "ஏதோ நான் இருக்கிறேனோ, வேலை எல்லாம் ஒழுங்கா நடக்குதோ....நான் இல்லேனா தெரியும்" என்று அவர்களின் நிர்வாகத் திறமை பற்றி பெருமையாக சொல்லிக் கொள்வார்கள்.
வள்ளுவர் சொல்கிறார்,
"சினத்தை ஏதோ பெரிய திறமை, சிறப்பு என்று நினைத்து செயல்படுபவன், அந்தச் சிறப்பு வெகு நிச்சயமாக இழப்பான் என்பது உறுதி"
என்கிறார்.
பாடல்
சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்துஅறைந்தான் கைபிழையாது அற்று
பொருள்
சினத்தைப் = கோபத்தை
பொருள்என்று = சிறந்த ஒரு குணம் என்று
கொண்டவன் = அதைக் கைக் கொண்டவனின்
கேடு = அந்த சிறந்த குணம் அழிவது என்பது
நிலத்து = தரையை
அறைந்தான் = அறைந்தவன்
கை = கை
பிழையாது அற்று = எப்படி பிழை இல்லாமல் அடிக்குமோ அந்த அளவு உறுதியானது.
கோபம் கொண்டவன் தன் சிறப்பை இழப்பான் என்று சொல்ல வேண்டும்.
உண்மையாவா, நிச்சயமாகவா? எல்லா காலத்திலும் அது நடக்குமா என்று கேட்டால், ஆம் அது சர்வ நிச்சயம் என்று சொல்ல வேண்டும். அதற்கு ஒரு உதாரணம் தேடுகிறார் வள்ளுவர்.
ஒருவன் தரையை ஓங்கி அடித்தால், அவன் குறி தப்புமா? எப்படி அடித்தாலும் கடைசியில் அந்த அடி தரையில் எங்கோ ஒரு இடத்தில் விழத்தானே செய்யும்.
தரையை, கையால் அடித்தேன், கொஞ்சம் குறி தப்பி விட்டது என்று சொல்லவே முடியாது. குறி தப்பி எங்கு போகும்? எங்கு போனாலும், அந்த அடி த தரை மேல் தான் விழும். அந்த அளவு அது நிச்சயம். தப்பவே தப்பாது.
இன்னொரு பொருள், இது பரிமேலழகர் சொல்லாதது.
கோபம் கொண்டு மற்றவர்கள் மேல் சுடு சொற்களையோ அல்லது செயலையோ காட்டி விட்டால், அது அவர்களை பாதிக்கும், என்று கோபம் கொண்டவர் நினைக்கலாம்.
அது தவறு என்கிறார் வள்ளுவர்.
தரையை ஓங்கி அடித்தால் தரைக்கு வலிக்கலாம் அல்லது வலிக்காமல் போகலாம். ஆனால் அடித்தவன் கட்டாயம் வலிக்கும் அல்லவா?
அது போல
மற்றவர் மேல் கோபத்தை செலுத்தினால் அது உன்னையும் பாதிக்கும் என்கிறார்.
கோபம் ஏற ஏற இரத்தக் கொதிப்பு ஏறும், மன அழுத்தம் வரும், எரிச்சல் வந்து மகிழ்ச்சியை குறைக்கும், உறவும், நட்பும் சுருங்கும். "அவன் கிட்ட யார் பேசுவா, சரியான கோவக் காரன் . எதுக்கு எடுத்தாலும் வள்ளு வள்ளுன்னு நாய் மாதிரி குரைப்பான்" என்று மற்றவர்கள் அவனை விட்டு விலகிப் போவார்கள். தனித்து விடப்படுவான். அவனுக்கு கீழே வேலை பார்ப்பவர்கள் அவனை விட்டுப் போய் விடுவார்கள். நாளடைவில் அவனால் சிறப்பாக செயல்பட முடியாது.
இப்படி, கோபம், அதைக் கொண்டவனையே அழிக்கும். தரையை அடித்தால் நம் கையே வலிப்பது போல.
ஒருவன் தரையை அடிக்கிறான் என்றால் அது பார்க்க எப்படி இருக்கும்? "சரியான பைத்தியகாரன் போல, தரையை போட்டு அடித்துக் கொண்டிருக்கிறான்" என்று நினைப்போம் அல்லவா.
கோபம் கொண்டு, மற்றவர்கள் எரிந்து விழுந்தாலும் அப்படித்தான் இருக்கும்.
பொருள்
Saturday, July 5, 2025
திருக்கடைக் காப்பு - மனைவியை எப்படி விட்டுச் செல்வது?
திருக்கடைக் காப்பு - மனைவியை எப்படி விட்டுச் செல்வது?
அவளோ பேரழகி. அவனுக்கோ வெளியில் ஆயிரம் வேலை. அவளை எப்படி தனியே விட்டு விட்டுச் செல்வது என்று ஒரே குழப்பம். மேலும், அவள் தன்னுடனேயே இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று நினைக்கிறான்.
அவ்வப்போது அவளை, அவள் புன்னகையை பார்த்துக் கொள்ளலாம்.
அது எப்படி முடியும்?
யோசித்தான், எதுக்கு அவளை தனியே கூட்டிச் செல்ல வேண்டும்? தன் உடலிலேயே ஒரு பாதியை கொடுத்து, அதில் அவளை வைத்து விட்டால் என்ன என்று யோசித்து அப்படியே செய்தான் என்கிறார் திரு ஞான சம்பந்தர்.
பாடல்
காரு லாங்கட லிப்பிகண் முத்தங் கரைப்பெயும்
தேரு லாநெடு வீதிய தார்தெளிச் சேரியீர்
ஏரு லாம்பலிக் கேகிட வைப்பிட மின்றியே
வாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே
கொஞ்சம் சீர் பிரிப்போம்
கார் உலாவும் கடல் சிப்பியின் கண் முத்து கரை பெய்யும்
தேர் உலாவும் நெடு வீதியதார் தெளிச் சேரியீர்
ஏர் உலாவும் பலிக்கு ஏகிட வைப்பு இடம் இன்றியே
வார் உலாவும் முலையாளை ஓர் பாகத்து வைத்ததே
பொருள்
கார் = கருமையான (மேகங்கள்)
உலாவும் = உலவும், திரியும்
கடல் = கடலில் உள்ள
சிப்பியின் கண் = சிப்பியில் உள்ள
முத்து = முத்துக்கள்
கரை பெய்யும் = கடற்கரையில் மழை போல் தெறித்து விழும்
தேர் உலாவும் = தேர்கள் ஓடிக் கொண்டிருக்கும்
நெடு = நீண்ட
வீதியதார் = வீதிகளை உடைய
தெளிச் சேரியீர் = திருத் தெளிசேரி என்ற தலத்தில் இருப்பவரே
ஏர் = எழுச்சி, அழகு, பெருமை
உலாவும் = நிறைந்த
பலிக்கு ஏகிட = பிச்சை வாங்கிடப் போகும் போது
வைப்பு இடம் இன்றியே = வைக்க இடம் இன்றி
வார் = மார்புக் கச்சை
உலாவும் = அணிந்த
முலையாளை = மார்பகங்களை உடைய உமை அம்மையை
ஓர் பாகத்து வைத்ததே = உன்னுடைய ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டாயோ
மனைவியை யாராவது தூக்கிக் கொண்டு போய் விட்டால் என்ன ஆவது என்று பயந்து மனைவியை தன்னுடைய ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டாயோ என்று நகைச்சுவையாக கேட்கிறார் திரு ஞான சம்பந்தர்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
சிவன் ஏன் பிச்சை எடுக்கப் போகிறார்?
ஒரு முறை பிரமனின் ஒரு தலையை கிள்ளி எடுத்து விட்டார். அந்தத் தோஷம், அந்த மண்டையோடு அவர் கையிலியே ஒட்டிக் கொண்டது. அது அவர் கையை விட்டுப் போக வேண்டுமானால், அந்த மண்டை ஓட்டிலே பிச்சை எடுத்து உண்ண வேண்டும். அப்படி செய்து வந்தால், அந்த மண்டை ஓடு அவர் கையை விட்டுப் போகும்.
இது என்ன அபத்தமான கதையாக இருக்கிறதே என்று தோன்றலாம். கதை அபத்தம் தான். அதன் பொருள் என்ன?
ஒரு வினை செய்தால், அதன் பலனை அனுபவித்தே தீர வேண்டும். அது சிவனாகவே இருந்தாலும், செய்த வினை போகாது.
பலர் நினைக்கிறார்கள், ஏதாவது பாவம் செய்தால், அதற்கு பதிலாக ஒரு நல்லது செய்தால் பாவத்தில் இருந்து தப்பி விடலாம் என்று.
முடியாது.
பாவத்தின் பலனை அனுபவிக்க வேண்டும். பின் நல்லது செய்தால், அதன் பலனையும் அனுபவிக்க வேண்டும்.
"அறம் பாவம் எனும் அருங் கையிற்றால் கட்டி" என்பார் மணிவாசகர்.
இரண்டுமே நம்மை பிறவி என்ற பந்தத்தில் கட்டிப் போடும். இரண்டுமே செய்யக் கூடாது.
ஒன்றுக்கு ஒன்று சரியாகி விடாது. இரண்டும் தனித் தனி கணக்கு.
கோவிலுக்குப் போவது, உண்டியலில் காணிக்கை போடுவது, மொட்டை போட்டுக் கொள்வது, விரதம் இருப்பது, அன்ன தானம் செய்வது போன்ற காரியங்களால் செய்த தீவினைகளில் இருந்து தப்பி விடலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது. அப்படி என்றால் பணம் உள்ளவர்கள் எவ்வளவு தீமை வேண்டுமானாலும் செய்யலாம். பின் நிறைய தான தர்மங்கள் செய்து தப்பித்துக் கொள்ளலாம்.
முடியாது.
சிவனே ஆனாலும், செய்த வினையின் பலனை அனுபவித்தே தீர வேண்டும்.
சிவனுக்கே அந்தக் கதி என்றால், நம் கதி என்ன?
தீவினை செய்யாமல் இருக்க வேண்டும்.
மனதால், வாக்கால், செயலால் தீவினை செய்யக் கூடாது.
என்ன ஒரு அருமையான பாடல்
மேகங்கள் உலவுகின்றதாம்..ஏதோ வாக்கிங் போவது மாதிரி.
தேர்கள் ஓடவில்லை, உலவுகின்றன. சும்மா ஜாலியா அங்கும் இங்கும் சுத்திக் கொண்டிருக்கின்றன.
சிவன் பிச்சை எடுக்கப் போவது கூட ஏதோ பெருமையாக, அழகாகப் போனாராம்.
அம்மை சேலை அணிந்து இருக்கிறாள். காற்றில் அது அங்கும் இங்கும் அலைகிறது. அவள் மார்பின் மேல் அந்த சேலை உலாவுகிரதாம்.
இன்னொரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள். அவ்வளவு இனிமை.
Sunday, June 15, 2025
கம்ப இராமாயணம் - மாரீசன் - தர்மம் போல்
கம்ப இராமாயணம் - மாரீசன் - தர்மம் போல்
இராவணன் அரசவையில் வீற்றிருக்கிறான். அவன் இருக்கும் அந்த மணி மண்டபத்தை வர்ணிக்க வேண்டும்.
கம்பன் என்ன சொல்கிறான் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.
நாம் அறிந்தவரை ஒரு மண்டபத்தை எப்படி எல்லாம் வர்ணிக்கலாம்?
விண் வரை உயர்ந்த மாளிகை, மேகம் வந்து இளைப்பாறிப் போகும் முற்றம், ஒளி வீசும் மண்டபம், இமய மலை போல் உறுதியானது என்றெல்லாம் சொல்லக் கேட்டு இருக்கிறோம்.
கம்பன் சொல்லும் உவமை நாம் கனவிலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத உவமை.
அந்த மண்டபம் தேவ தச்சன், விஸ்வகர்மா உருவாக்கியது.
சரி. அது என்ன பெரிய விடயம்.
அவன் படைக்கும் கடவுளான பபிரமனாலும் முடியாத அளவுக்கு சிறப்பாக படைப்பான்.
ஓ, அப்படியா. பெரிய ஆள் தான்.
அவன் நாம் என்னவெல்லாம் வேண்டும் என்று சொல்கிறோமோ, அது போலத் கட்டித் தருவான்.
சரி, அதில் என்ன சிறப்பு இருக்கிறது.
அவன் நாம் மனதில் நினைப்பதை எல்லாம், வேண்டியதை எல்லாம் தருவான், எப்படி என்றால் அறம் எப்படி ஒருவனுக்கு வேண்டியன எல்லாம் தருமோ, அப்படி.
எங்கிருந்து எங்கே போகிறான் கம்பன். கிடைத்த சின்ன இடைவெளியில் அறத்தின் உயர்வை சொல்லிவிட்டுப் போகிறான்.
அறம் எப்படி வேண்டியன எல்லாம் தருமோ, அது போல் தேவதச்சன் அந்த மண்டபத்தை செய்தான்.
பாடல்
நிலை இலா உலகினிடை நிற்பனவும்
நடப்பனவும் நெறியின் ஈந்த
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது,
நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல்
உலைவு இலா வகை உழந்த தருமம் என,
நினைந்த எலாம் உதவும் தச்சன்
புலன் எலாம் தரெிப்பது, ஒரு புனை மணி
மண்டபம் அதனில் பொலிய, மன்னோ.
பொருள்
நிலை இலா = நிரந்தரம் இல்லாத
உலகினிடை = இந்த உலகில்
நிற்பனவும் = அசையாதனவும்
நடப்பனவும் = அசையும் தன்மை கொண்ட பொருள்களும்
நெறியின் = உயர்ந்த வழியில்
ஈந்த = உருவாக்கிய
மலரின் = திருமாலின் நாபிக் கமலத்தில்
மேல் = இருந்து உருவான, அல்லது இருக்கும்
நான்முகற்கும் = நான்கு முகங்கள் கொண்ட பிரமனுக்கும்
வகுப்பு அரிது = செய்வது கடினம்
நுனிப்பது = நுண்ணிய, நுட்பமான
ஒரு வரம்பு இல் = எல்லையில்லா
ஆற்றல் = திறமை
உலைவு இலா வகை = தீமை இல்லாத வழியில்
உழந்த தருமம் என = செய்த அறத்தைப் போல போல
நினைந்த எலாம் = மனதில் நினைத்ததை எல்லாம்
உதவும் தச்சன் = செய்து தரும் தேவ தச்சன்
புலன் எலாம் = தன் அறிவு அனைத்தையும்
தெரிப்பது = தெரிய, வெளிப்பட
ஒரு = கட்டிய ஒரு
புனை மணி = மணிகள் பதிக்கப் பெற்ற
மண்டபம் = மண்டபம்
அதனில் பொலிய, மன்னோ = அதில் பொலிவுடன் வீற்றிருந்தான்
தருமம் என்கிறான் கம்பன். அதை பிறருக்கு உதவும் தான தர்மம் என்று கொண்டாலும் சரி, செய்யக் கூடிய தருமம், அறம் என்று கொண்டாலும் சரி அர்த்தம் பெரிதாக மாறாது. அறம் சிறப்பு.
அறம், வேண்டியன எல்லாம் தரும் என்ற போதனையை இங்கே வைக்கிறான்.
கிடைக்கும் இடமெல்லாம் அறம் பேசியது நம் இலக்கியங்கள்.
Wednesday, June 11, 2025
கம்ப இராமாயணம் - மாரீசன் - இராவணன் அறிமுகம்
கம்ப இராமாயணம் - மாரீசன் - இராவணன் அறிமுகம்
இந்தக் காலத்துத் திரைப்படங்களில் கதாநாயகனை அறிமுகப்படுத்தும் போது பயங்கர build up இருக்கும். அவருடைய காலைக் காட்டி, அவர் வரும் காரைக் காட்டி, அவர் இருக்கும் பெரிய வீட்டைக் காட்டி, ஒரு பிரமாண்டத்தை மனதில் ஏற்படுத்துவார்கள்.
கதாநயாகன் பெரிய ஆள் என்று காட்டும் உத்திகள்.
இதெல்லாம் கம்பனின் முன் தூசு.
கதாநாயகனை விடுங்கள். வில்லன் இராவணனை, கம்பன் அறிமுகப் படுத்தும் விதத்தைப் பார்த்தால் அசந்து போவோம்.
அப்பேற்பட்ட பெரிய வில்லனை பின்னாளில் கதாநயாகன் வீழ்த்தினான் என்றால் கதாநாயகனாகிய இராமனின் பெருமை எவ்வளவு என்று சொல்லாமலேயே விளங்கும்.
இராமன் ஏதோ ஏப்பை சாப்பையான ஒரு மெலிந்த நலிந்த ஒருவனை வெற்றி கொள்ளவில்லை என்று காட்டவும் அது உதவும்.
இலக்குவனால் தண்டிக்கப்பட்ட சூர்பனகை இலங்கைக்குள் நுழைகிறாள். இராவணனைப் பார்த்து அவனிடம் முறையிட வேண்டும். சூர்பனகையின் எண்ணம் எல்லாம் இராமனை அடைவது. அதற்கு சீதை தடையாக இருக்கிறாள் என்று சூர்பனகை எண்ணினாள். சீதையை இராமனிடம் இருந்து பிரித்து விட்டால், இராமன் தன்னிடம் காதல் கொள்வான் என்பது சூர்பனகையின் எண்ணம்.
எனவே, இராவணனிடம், சீதையின் மேல் காதல் கொள்ளச் செய்து அவளை இராவணன் தூக்கி வந்து விட்டால், பின் இராமன் தனியனாவான், தன் மேல் காதல் கொள்வான் என்ற எண்ணத்தோடு வருகிறாள்.
சூர்பனகை இலங்கைக்குள் வருகிறாள்....கம்பனின் கவிதைகள் மடை திறந்த வெள்ளம் போல் வர இருக்கிறது.
பாடல்
இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை
மறந்தனள், போர் இராமன் துங்க
வரைப் புயத்தினிடைக் கிடந்த பேர் ஆசை
மனம் கவற்ற, ஆற்றாள் ஆகி,
திரைப் பரவைப் பேர் அகழித் திண்
நகரில் கடிது ஓடி, 'சீதை தன்மை
உரைப்பென்' எனச் சூர்ப்பணகை வர, இருந்தான்
இருந்த பரிசு உரைத்தும் மன்னோ.
பொருள்
இரைத்த = ஆராவரம் செய்யும்
நெடும் படை = பெரிய படை
அரக்கர் = அந்தப் படையில் உள்ள அரக்கர்கள்
இறந்ததனை = இராமனோடு சண்டையிட்டு இறந்ததை (கரன் முதலிய வீரர்கள். அது பற்றி பின்னொரு நாளில் சிந்திப்போம்)
மறந்தனள் = சூர்பனகை மறந்து விட்டாள்
போர் இராமன் = போரில் வல்ல இராமனின்
துங்க வரைப் = பெரிய மலை போன்ற
புயத்தினிடைக் = தோள்களுக்கு இடையே
கிடந்த பேர் ஆசை = அணைத்து கிடக்கும் பேராசையால்
மனம் கவற்ற = மனம் வருந்தி (அது முடியாமல் போனதால்)
ஆற்றாள் ஆகி = அந்த வருத்தத்தை பொறுக்க முடியாமல்
திரைப் = அலைகளை எழுப்பும்
பரவைப் = கடல்
பேர் அகழித் = பெரிய அரணாகக் கொண்ட
திண் நகரில் = சிறந்த நகரில் (இலங்கையில்)
கடிது ஓடி = வேகமாக ஓடி
'சீதை தன்மை உரைப்பென்' = சீதையின் அழகை சொல்லுவேன்
எனச் = என்று
சூர்ப்பணகை வர = சூர்பனகை எதிரில் வர
இருந்தான் = இராவணன் இருந்தான்
இருந்த பரிசு = அவன் இருந்த நிலையை
உரைத்தும் = சொல்லுவோம்
மன்னோ = அசைச் சொல்
காமம் தலைக்கு ஏறினால் என்ன ஆகும் என்று இந்தப் பகுதியில் கம்பன் வெகு விரிவாக சொல்ல இருக்கின்றான்.
சூர்பனகைக்கு, இராமன் மேல் காதல். அவனை அடைய சீதை தடை என்று அவள் நினைத்தாள். எனவே சீதையை இராவணன் கொண்டு வந்து விட்டால் தான் இராமனை அடையலாம் என்பது அவள் கணக்கு.
இதில் சில நுண்ணிய விடயங்களை நாம் சிந்திக்கலாம்.
மாற்றான் மனைவியை நினைப்பது, கவர்வது அறம் அற்ற செயல் என்று நாம் படித்து இருக்கிறோம். முதன் முதலாக, மாற்றாள் கணவனை நினைக்கும் ஒரு பெண் பாத்திரத்தை சந்திக்கிறோம்.
இராவணன் செய்த தவறுக்கு மூல காரணம் சீதையின் கணவனை சூர்பனகை விரும்பியது.
இரண்டாவது, வைணவ சம்ப்ரதாயத்தில் பெருமாளையும், பெருமாட்டியையும் சேர்த்தே வணங்க வேண்டும் என்ற மரபு இருக்கிறது. சூர்பனகை, பெருமாட்டியான சீதையை, பெருமானான இராமனிடம் இருந்து பிரிக்க முயல்கிறாள். அது பாவம். அதன் விளைவு என்ன என்று அறிவோம்.
மேலும், கணவன் மனைவி உறவு என்பது புனிதமானது. அதில் மூன்றாவது மனிதருக்கு வேலை இல்லை. சூர்பனகை அந்த உறவுக்குள் மூக்கை நுழைத்தாள். இழந்தாள்.
இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. காப்பியத்தின் ஓட்டத்தோடு அவற்றை சிந்திப்போம்.
(மிக நீண்ட பகுதி. எதையும் விட மனமில்லை. வாசிக்க உங்களுக்குப் பொறுமை இருக்குமா என்று தெரியவில்லை. சோர்வடைந்தால் சொல்லுங்கள்).
Tuesday, June 10, 2025
கம்ப இராமாயணம் - மாரீசன் வதைப் படலம்
கம்ப இராமாயணம் - மாரீசன் வதைப் படலம்
மாரீசன் வதைப் படலம் என்றவுடன் நமக்கு என்ன நினைவுக்கு வரும்?
இராவணன், மாரீசனை மாய மானாகப் போகச் சொன்னான். சீதை அந்த பொன் மானைப் பிடித்துத் தரச் சொன்னாள். இராமன், மான் பின் போனான். பின் இலக்குவன் போனான். இராவணன் கபட சந்நியாசி வேடத்தில் வந்து சீதையை தூக்கிச் சென்றான். இராமனின் அம்பு பட்டு மாரீசன் இறந்தான்.
இவ்வளவுதானே நமக்குத் தெரியும்.
இந்தப் பகுதியை கம்பன் எழுதியிருக்கும் விதத்தைப் படித்தால், கம்பன் மிகவும் இரசித்து இரசித்து எழுதிய பகுதி மாதிரி தோன்றும்.
அறம், இலக்கியம், மனோ தத்துவம், அரசியல் கோட்பாடு, வீரம், தன்னிரக்கம், காமம், என்று வண்ணமயமாக தீட்டி இருக்கிறான்.
நீண்ட ஒரு காப்பியத்தைப் படிக்கும் போது, இது போன்ற பகுதிகளை வேகமாக தள்ளிவிட்டு விட்டு மேலே போய் விடுவோம்.
என்ன அவசரம். எங்கே போகப் போகிறோம். நிறுத்தி நிதானமாக இரசிப்போமே.
எந்நேரமும் ஓட்டமும், நடையுமாக ஒரு வித பதட்டத்திலேயே வாழ்க்கை கழிகிறது.
இந்த உலகை விட்டு விட்டு வாருங்கள். கம்பன் காட்டும் அந்த அற்புத, மாயா உலகத்துக்குள் சென்று வருவோம்.
ஒவ்வொரு பாடலும் தேன்.
அடடா அடடா என்று ஒவ்வொரு பாடலும் அத்துணை அற்புதம்.
வாருங்கள். அனுமதி இலவசம்.
Friday, May 30, 2025
திருக்குறள் - சினம் எனும் தீ
திருக்குறள் - சினம் எனும் தீ
நீங்கள் இருக்கும் ஊரில் சாமான்கள் வைத்து இருக்கும் ஒரு கிடங்கில் தீ பிடித்து விடுகிறது. கிடங்கில் உள்ள பொருள் எல்லாம் எரிந்து சாம்பாலாகி விடுகிறது.
இது போன்ற செய்திகளை கேட்டும் பார்த்தும் இருக்கிறோம்.
போன வருடம் பிடித்த தீயில், இந்த வருடம் பல கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலானது என்று கேட்டு இருகிறீர்களா. இப்போது தீ பிடித்தால், இப்போதுதான் சேதம் இருக்கும். மாறாக ஒரு வருடம் கழித்து சேதம் வருமா? வராது.
அது போல
டெல்லியில் தீ பிடித்தது, அதனால் மும்பையில் உள்ள பொருள்கள் சேதம் ஆனது என்று கேட்டு இருக்கிறோமா? எங்கு தீ பிடிக்கிறதோ, அங்குதான் சேதம் விளையும்.
ஆனால் இந்த சினம் என்ற தீ இருக்கிறதே...
அது, இந்தப் பிறவியில் கோபத்தால் செய்த செயல்களுக்கு, இந்தப் பிறவியில் பின்னாளில் மட்டும் அல்ல இனி வரும் பிறவிகளிலும் தொடர்ந்து வந்து துன்பம் செய்யும். ஐயோ, எனக்கு ஏன் இந்தத் துன்பம் வந்தது என்று வருந்தும் போது நினைத்துக் கொள்ள வேண்டும், எந்தப் பிறவியில் செய்த பாவமோ இன்று வந்து சேர்ந்திருக்கிறது என்று.
நாம் கோபம் கொண்டால், அதனால் தீமை நமக்கு மட்டும் அல்ல, நம்மைச் சுற்றியுள்ள சுற்றத்தாரையும் சுடும்.
இராவணன், துரியோதனன் போன்றோர் கொண்ட கோபத்தால் அவர்கள் மட்டுமா அழிந்தார்கள்? அவர்கள் குலமே அழிந்தது.
பாடல்
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்
பொருள்
சினமென்னும் = சினம் என்று சொல்லப்படும்
சேர்ந்தாரைக் = அதைக் கொண்டவர்களை
கொல்லி = கொல்லும் குணமுடைய
இனம்என்னும் = தன் சுற்றம் என்ற
ஏமப் = காவல்
புணையைச் = தெப்பத்தை, மிதப்பை
சுடும் = எரித்து விடும்
சேர்ந்தாரைக் கொல்லி = சினம் தன்னைச் சேர்ந்தவர்களை கொல்லும்.
அடடா, இவர் தான் என்னை தோற்றுவித்தார். இந்த வீட்டில் தான் நான் பிறந்தேன் என்று நன்றியெல்லாம் பார்க்காது. எந்த தீக் குச்சி நெருப்பை உண்டாக்குகிறதோ, அந்தக் குச்சியை அது முதலில் எரிக்கும். எந்தப் பந்தம் தீயை உண்டாக்குகிறதோ, அந்தப் பந்தத்தை தீ முதலில் எரித்து சாம்பலாக்கும். அது போல, சினம் எங்கே உண்டாகிறதோ, அந்த இடத்தை அது முதலில் எரிக்கும்.
தன்னைச் சேர்ந்தவர்களைக் கொல்லும்.
"இனம் எனும்": இனம் என்றால் வேறு சுற்றம் மட்டும் அல்ல. ஒருவனைச் சேர்ந்த கூட்டம், குழு. நட்பு, சுற்றம், அரசன் என்றால் அவனுக்கு கீழே உள்ள குடிகள், ஒரு நிறுவனத் தலைவன் என்றால் அங்கே வேலை செய்பவர்கள். ஒருவனுக்கு சினம் வந்தால், அது அவனை மட்டும் அல்ல, அவனைச் சேர்ந்த கூட்டத்தையே கெடுக்கும்.
சுடும் : இப்போது மட்டும் அல்ல, இனி வரும் பிறவிகளிலும் சுடும். நான் அதிகாரத்தில் இருக்கிறேன். எனக்கு கீழே உள்ளவர்களிடம் நான் கோபித்து என்ன வேண்டுமானாலும் சொல்லுவேன், செய்வேன். என்னை யார் என்ன கேட்க முடியும் என்று நினைக்கலாம். இயற்கை பொறுத்து இருக்கும். வேலை போன பின் வந்து தாக்கும். இல்லை என்றால் அடுத்த பிறவிக்கு வரும். சுடாமல் விடாது.
இந்தக் குறள் துறவறத்தில் வருகிறது. முற்றும் துறந்த முனிவர்களுக்கு ஏது உறவு? அவர்களுக்கு என்ன இனம் இருக்கும்?
பரிமேலழகர் கூறுகிறார்
துறவிகளுக்கு, அவர்களுக்கு நல்லது சொல்லி முக்திக்கு வழி வகுக்கும் பெரியோர்கள், துறவிகளை பின் பற்றும் சீடர்கள் அல்லது பக்தர்கள் என்ற இனம். அந்த இரண்டையும் ஒரு துறவி கொண்ட சினம் கெடுத்து விடும்.
சினம் என்ற சேர்ந்தாரைக் கொல்லி....சினமே போய் கொல்லாது. அதற்கு என்ன கை காலா இருக்கிறது போய் கொல்வதற்கு? இங்கே சினம் என்றது சினம் கொண்டவரை. சினம் கொண்டவர் தன்னை அழித்துக் கொள்வது மட்டும் அல்ல, தன்னைச் சேர்ந்தவர்களையும் அழிப்பான் என்றவாறு.
Tuesday, May 20, 2025
நாலாயிர திவ்ய பிரபந்தம் - மெய்யே பெற்றோழிந்தேன்
நாலாயிர திவ்ய பிரபந்தம் - மெய்யே பெற்றோழிந்தேன்
நான் சில வயதானவர்களைப் பார்த்து இருக்கிறேன்.
எப்போது பார்த்தாலும், "முடியலை, எப்படா இந்த உலகத்தை விட்டுப் போவோம் என்று இருக்கிறது" என்று சலித்துக் கொள்வார்கள். சொல்லி ஒரு சில மணி நேரம் கூட இருக்காது, "சூடா ஒரு கப் காப்பி கொடேன்" என்று வந்து நிற்பார்கள்.
மூன்று வேளைச் சாப்பட்டில் ஒரு குறை இருக்காது. காப்பி, டீ என்று உள்ளே போய்க் கொண்டிருக்கும். நடு நடுவில் கொஞ்சம் நொறுக்குத் தீனி வேற. கேட்டால் அந்த பெருமாள் என்னை எப்போ கூப்பிடுவான் என்று இருக்கிறேன் என்று சொல்லுவார்கள்.
இந்த உலகை விட்டுப் போக யாருக்கும் மனம் இல்லை. காரணம் வேறு வேறாக இருக்கலாம்...பொண்ணுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சுட்டால், சிவனேன்னு கிளம்பிறலாம் என்று சொல்லுவார்கள். அப்புறம், அவளுக்கு ஒரு பிள்ளை பொறக்கட்டும், பேரனை பார்த்துவிட்டுப் போகிறேன் என்பார்கள், அப்புறம் அது பள்ளிக் கூடம் போகட்டும் என்பார்கள். அப்புறம் "நான் போய்ட்டா அவரை/அவளை யார் பாத்துப்பா" என்று காரணம் சொல்லுவார்கள்.
மொத்தத்தில் போக மனம் இல்லை.
வெளியே கேட்டால் கோவிந்தா, கிருஷ்ணா, சிவனே, முருகா, என்னை எப்ப கூப்டுக்கப் போற என்று டயலாக்.
இதுதான் உண்மை என்று ஆழ்வாரே சொல்கிறார்.
"எப்பப் பார்த்தாலும் எப்பப் போறது, எப்பப் போறதுன்னு பொய் சொல்லிக் கொண்டு திரிகிறேன். எனக்கு ஒன்றும் போக ஆசையில்லை. உலக இன்பங்களில் நன்றாக திளைத்து அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். ஏதோ உன் கருணை கிடைத்ததால் நல் வழிப் பட்டேன். நீ உன் அருள் கிடைக்க வேண்டும் என்று விதி இருந்தால் அதை யார் தடுக்க முடியும். ஒரு வழியாக உன்னை வந்து அடைந்து விட்டேன். இனிமேல் உன்னை விட்டுப் பிரிய முடியாது. என்னை விட்டு விட்டுப் போய் விடாதே" என்று உருகுகிறார்.
பாடல்
கையார் சக்கரத்து என் கருமா ணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமேபுற மேஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க் கின்று காப்பார்ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.
பொருள்
கையார் = கையில்
சக்கரத்து = சக்கரத்தை கொண்ட
என் கருமா ணிக்கமே! = என்னுடைய கருமையான மாணிக்கமே
என்றென்று = என்று போவேன், என்று போவேன், என்று
பொய்யே கைம்மை சொல்லிப் = பொய்யாக சொல்லிக் கொண்டு
புறமேபுற மேஆடி = ஊருக்குள் நன்றாக ஆட்டம் போட்டு (அனுபவித்து)
மெய்யே பெற்றொழிந்தேன் = கடைசியில் உண்மையனா உன்னை பெற்று விட்டேன்
விதிவாய்க் கின்று = விதி வாய்கின்றது. உன் அருளைப் பெற வேண்டும் என்ற விதி இருந்தால்
காப்பார்ஆர்? = அதை யாரால் தடுக்க மூடியும்
ஐயோ! = ஐயோ
கண்ண பிராஅன்! = கண்ணபிரானே
அறையோ! = தாங்க முடியுமா
இனிப் போனாலே = இனி நீ என்னை விட்டுப் போய்விட்டால்
சில சமயம், உண்மையின் தரிசனம் கிடைக்கும். இதுதான் என்று நினைப்போம். நொடியில் கை விட்டுப் போய் விடும். இறை தரிசனமும், அருளும் நிரந்தரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அருள் கிடைத்தாலும், நாம் அதை விட்டு விட்டு உலக வாழ்க்கையில் மூழ்கி அதை மறந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது.
மணிவாசகருக்கு இறைவனே நேரில் வந்து அருள் பாலிக்க வந்தார். மணிவாசகர் இறைவனைக் கண்டார். அவர் பின்னால் போகாமல், குதிரை வாங்கப் போய் விட்டார்.
உயர்ந்தவற்றை விட்டு விட்டு அற்ப சுககங்களின் பின்னால் போய் விடுகிறோம்.
நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும், அது வாலைக் குழைத்துக் கொண்டு தெருவுக்குத்தான் போகும் என்பார்கள்.
மணிவாசகர் தன்னை நாய் என்று பல முறை கூறிக் கொள்வார்.
"நாயிற் கிடையாய் கிடந்த அடியேற்கு"
"நம்மையும் ஒரு பொருளாக்கி நாய் சிவிகை ஏற்றுவித்து"
ஆழ்வார் உருகுகிறார். கண்ணா, உன் அருள் கிட்டியது ஏதோ விதிவசம். அதை நான் விட்டு விடாமல் இருக்க நீ தான் அருள் செய்ய வேண்டும். உன் அருள் இல்லை என்றால் நான் மீண்டும் இந்த உலக வாழ்க்கைக்குத் திரும்பி விடுவேன் என்கிறார்.
நமக்காக அவர் சொன்னது.
எப்போதேனும் உண்மையின் தரிசனம் கிடைப்பின், கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
"சிக்கெனப் பிடித்தேன்" என்று பிடித்துக் கொள்ளுங்கள்.
Saturday, May 17, 2025
திருவாசகம் - அதிசயப் பத்து
திருவாசகம் - அதிசயப் பத்து
நாம் ஒரு சாலையில் போய்க் கொண்டிருக்கிறோம். அப்போது அங்கே வரும் ஒருவர், "இந்தப் பக்கம் எங்க போறீங்க?" என்று நம்மிடம் விசாரிக்கிறார்.
நாம் "இன்ன இடம் என்று குறிப்பாக இல்லீங்க...சும்மா இப்படியே போய்க் கொண்டிருக்கிறேன்.." என்கிறோம். நமக்கே அந்தப் பதில் ஒரு மாதிரியாக இருக்கிறது.
அவர்: "என்னங்க இப்படிச் சொல்றீங்க...போகிற இடம் எதுவென்று தெரியாமல் கால் போன போக்கிலே போனால் என்னங்க அர்த்தம்"
நாம்: அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. இந்தச் சாலையில் நல்ல நல்ல உணவு விடுதிகள் இருக்கின்றன, சினிமா கொட்டகைகள் இருக்கின்றன, ஐஸ் கிரீம், இன்னிப்பு வகையாறக்கள் நிறைய கிடைக்கும். அங்கங்கே தெருவோரம் வடை, பஜ்ஜி எல்லாம் சுடச் சுட தருவார்கள். இந்த சாலைக்கு என்ன குறை...இதில் போனால் என்ன ...என்று கேட்கிறோம்.
அவர்: சரிங்க...போற இடமும் தெரியாது, போற வழியும் சரியில்ல...இத்தனையும் சாப்பிட்டால் உடம்பு என்ன ஆகும்? அது மட்டும் அல்ல, இந்த சாலையில் பிக் பாக்கெட் அடிப்பவர்கள், ப்ளேடு போடுபவர்கள், அந்த மாதிரி பெண்கள் எல்லாம் இருப்பாங்க...இது சரியான வழி இல்லை...நான் உங்களுக்கு போகும் இடமும் நல்ல வழியும் சொல்லியும் தருகிறேன் என்கிறார்.
நாம்: ஐயா, நல்ல வேளை சரியான சமயத்தில் வந்து எனக்கு நல்ல ஒரு வழியை காட்டினீங்க...ஆமா நீங்க யாரு ?
அவர்: நானா, இந்த ஊர் தான்...எனக்கு எல்லா வழியும் தெரியும்...
அதிசயமாக இல்லை? கால் போன பாதையில், குறி ஒன்றும் இல்லாமல் திரிந்து கொண்டிருந்த நம்மை தடுத்து, போகும் இடம் காட்டி, போகும் வழியும் காட்டும் ஒருவர் வந்தால் அது எப்படி இருக்கும்?
பாடல்
இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச் சிறு குடில், இது: இத்தைப்
பொருள் எனக் களித்து, அரு நரகத்திடை விழப் புகுகின்றேனை
தெருளும் மும்மதில், நொடி வரை இடிதர, சினப் பதத்தொடு செம் தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே!
பொருள்
இருள் திணிந்து = அறியாமை என்ற இருள் நிறைந்து
எழுந்திட்டது = புறப்பட்டது
ஓர் வல்வினைச் = வஞ்சனையை செய்யும் வினைகள்
சிறு குடில், இது: = வாழும் ஒரு சிறு குடில் இது (இந்த உடல்)
இத்தைப் = இதைப் போய்
பொருள் எனக் களித்து = ஏதோ பெரிய விஷயம் என்று கருதி
அரு = கொடுமையான
நரகத்திடை = நரகத்தில் போய்
விழப் புகுகின்றேனை = விழ இருந்த என்னை
தெருளும் = தெளிவாகத் தெரியும்
மும்மதில் = = மூன்று சுவர்களைக் கொண்ட அந்த அரக்கர்களின் உலகத்தை
நொடி வரை = ஒரு நொடியில்
இடிதர = இடித்துச் தள்ளி
சினப் பதத்தொடு = சினம் கொண்டு
செம் தீ = நெற்றிக் கண் அனலை
அருளும் = அருள் செய்யும்
மெய்ந்நெறி = மெய்யே வடிவாகக் கொண்ட ஈசன்
பொய்ந்நெறி நீக்கிய = என்னுடைய பொய்யான வாழ்க்கை முறைகளை நீக்கிய
அதிசயம் கண்டாமே!
அவன் தான் வழி. அவன் தான் இலக்கு.
அதிசயப் பத்து நிறைவு பெற்றது.
Friday, May 16, 2025
திருக்குறள் - வெகுளாமை - பகைவன்
திருக்குறள் - வெகுளாமை - பகைவன்
https://interestingtamilpoems.blogspot.com/2025/05/blog-post_16.html
நமக்கு ஒரு எதிரி இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை நினைத்தாலே நமக்கு ஒரு எரிச்சல் வருகிறது. கோபம் வருகிறது. நன்றாக சிரித்து, மகிழ்ந்து கொண்டிருப்போம், திடீரென்று அவன் வந்து விட்டால் நம் முகத்தில் உள்ள சந்தோஷம் அனைத்தும் போய் விடும். அவன் நேரில் வர வேண்டும் என்று கூட இல்லை, அவன் நினைப்பு வந்தாலே போதும், நம் சந்தோஷம் வறண்டு விடும்.
அப்படி நமக்கு இருக்கும் எதிரிகளிலேயே பெரிய எதிரி யார் தெரியுமா?
கோபம்.
கோபம் தான் நமது முதல் எதிரி.
ஏன்?
எதிரி என்ன செய்வான்?
நம் முகத்தில் உள்ள சிரிப்பை அழிப்பான். மனதில் உள்ள சந்தோஷத்தை அழிப்பான்.
கோபமும் அதைத்தான் செய்கிறது.
கோபம் கொண்ட ஒருவரின் முகத்தைப் பார்த்தால் தெரியும். அதில் ஒரு துளி கூட புன்னகை இருக்காது, ஒரு சின்ன சந்தோஷம் கூட இருக்காது.
பாடல்
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற
பொருள்
நகையும் = சிரிப்பையும்
உவகையும் = சந்தோஷத்தையும்
கொல்லும் = நீக்கும்
சினத்தின் = கோபத்தைவிட
பகையும் உளவோ பிற = வேறு ஒரு பகையும் உள்ளதோ ? (இல்லை)
இந்தக் குறள் துறவறத்தில் உள்ளது.
துறவிக்கு ஏது பகைவன்? அவரோடு யார் போய் சண்டைப் போடப் போகிறார்கள்.
பரிமேலழகர் சொல்கிறார்,
துறவிக்கு வெளிப் பகை இல்லை. உள் பகை உண்டு. வெளிப் பகை என்ன செய்யுமோ, அதையே உள் பகையும் செய்யும் என்கிறார்.
மேலும், நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், துறவி என்றால் கடினமான வாழ்க்கை, சந்தோஷமே இருக்காது, ஒரு வறண்ட வாழ்க்கை, என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்போம்.
வள்ளுவர் சொல்கிறார், துறவிகளிடம் நகையும் (சிரிப்பு) உவகையும் எப்போதும் இருக்குமாம். அதை இந்த சினம் கொன்று விடுவதால், அது ஒரு பகை என்கிறார்.
துறவறத்தில் மிகுந்த இன்பம் இருக்கிறது என்று சொல்லமால் சொல்கிறார்.
ஏன் உவகை, என்ன சந்தோஷம்?
இனி பிறவி கிடையாது என்பது எவ்வளவு பெரிய சந்தோஷம்? அதை விட பெரிய நல்ல செய்தி என்ன இருக்க முடியும்?
துறவி ஆகிவிட்டால், பணம் சேர்க்க வேண்டும், அதைப் பாதுக்காக வேண்டும், அதைத் தருபவனிடம் பல்லைக் காட்ட வேண்டும், அதை பிடுங்கிக் கொண்டு போகிறவனிடம் பயப்பட வேண்டும், உறவுகளில், நட்பில் உள்ள சிக்கல்கள் என்று எதுவும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கலாம். ஒரு கவலையும் இல்லை.
கண்மூடி தியானிக்க வேண்டிய குறள்.
Sunday, May 11, 2025
அபிராமி அந்தாதி - மனக்கவலை
அபிராமி அந்தாதி - மனக்கவலை
இன்று யாரைக் கேட்டாலும் மன அழுத்தம், மனச் சோர்வு, மனக் குழப்பம், என்று மனம் சம்பந்தப்பட்ட ஆயிரம் பிரச்சனைகளை கூறுகிறார்கள். பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியர் கூட Anxiety, Depression, ADHD, Bipolar disorder, என்று அடுக்குகிறார்கள்.
இன்று பல பள்ளி, கல்லூரிகளில் கவுன்சிலிங் என்பது கட்டாயம் என்று ஆகி விட்டது. அந்த அளவுக்கு மன அழுத்தம்.
நூற்றுக் கணக்கில் மருந்து மாத்திரைகள் வந்து விட்டன...Anti-depressant, anti-anxiety
என்று.
இந்த மனக் கவலையை எப்படி மாற்றுவது ?
இந்த மனக் கவலையெல்லாம் மனதில் படியும் அழுக்குகள். அவற்றை எப்படி சுத்தம் செய்வது ?
அன்பு ஒன்றுதான் வழி.
அன்பு செய்யுங்கள்.
மனம் அன்பு செய்வதற்கு என்றே உண்டான ஒன்று.
மனிதர்களை நேசியுங்கள் - கணவன், மனைவி, பிள்ளைகள், உடன் பிறப்புகள், நட்பு, உறவு என்று எல்லோரையும் நேசியுங்கள்.
முடியவில்லையா, நாய் குட்டி, பூனைக் குட்டி என்று அவற்றை நேசியுங்கள்.
அதுவும் முடியவில்லையா, இயற்கையை நேசியுங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக உங்களை நீங்களே நேசிக்கப் பழகுங்கள். உங்கள் மேல் நீங்கள் அன்பு செலுத்தாவிட்டால் வேறு யார் செலுத்தப் போகிறார்கள்.
மனசு முட்ட உங்களைக் காதலியுங்கள்.
பாடல்
உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.
பொருள்
உடைத்தனை வஞ்சப் பிறவியை = வஞ்சகமான இந்தப் பிறவியை நீ (அபிராமி) உடைத்தாய். இந்தப் பிறவி நமக்கு எவ்வளவோ நல்லது செய்ய் முடியும். அதை விட்டு விட்டு அது புலன் இன்பங்களின் பின்னால் போகிறது. நமக்கு நல்லது செய்யாமல் வஞ்சனையை செய்கிறது. அபிராமி இந்தப் பிறவி என்ற சங்கிலியை உடைத்தாள்.
உள்ளம் உருகும் அன்பு படைத்தனை = அன்பு என்றால் உள்ளம் உருக வேண்டும். கண்ணில் நீர் வர வேண்டும். 'நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக' என்பார் அருணகிரிநாதர். 'காதாலாகி கசிந்து கண்ணீர் மல்கி" என்பார் மணிவாசகர்.
பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை = உன் திருவடி தாமரைகளை என் தலைமேல் சூடும் பணியை எனக்குக் கொடுத்தாய்
நெஞ்சத்து அழுக்கை எல்லாம் = என் மனதில் உள்ள அழுக்கை எல்லாம் (கோபம், காமம், பொறாமை போன்ற அழுக்கை)
நின் அருள்புனலால் துடைத்தனை = உன்னுடைய அருள் என்ற வெள்ளத்தால் துடைத்தாய்
சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே = சுந்தரி, உன்னுடைய அருளை நான் என்னவென்று சொல்லுவேன்.
மன அழுக்கை எல்லாம் துடைத்தால், மனதில் எழும் பிரச்சனைகள் எல்லாம் தீரும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
உள்ளம் உருகும் அன்பு வேண்டும்.
அன்பு வேண்டும், அன்பு வேண்டும் என்று அலையாமல், இருக்கிற அன்பை எல்லாம் அள்ளிக் கொடுங்கள். திருப்பி வந்தால் வரட்டும், வராவிட்டாலும் ஒன்றும் பாதகம் இல்லை.
உங்களிடம்தான் கொட்டிக் கிடக்கிறதே. அன்புக்கா பஞ்சம்.
கொடுப்பதும் சுகம்தான்.
Monday, May 5, 2025
திருவாசகம் - அதிசயப் பத்து - பெற்ற பயன்
திருவாசகம் - அதிசயப் பத்து - பெற்ற பயன்
ஒரு குழந்தை வீட்டில் உள்ள ஏதோ ஒரு விலை உயர்ந்த பொருளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். "...குடுத்திருமா...நல்ல பிள்ளையில்ல .." என்று கெஞ்சி கேட்டாலும் "மாட்டேன் போ..இது என்னுது" என்று அடம் பிடிக்கும். அடித்தும் வாங்க முடியாது.
என்ன செய்யலாம். கீழே போட்டு உடைத்து விட்டால் பெரிய நட்டம்.
அந்தக் குழந்தையிடம் "...இந்தா உனக்கு பிடிச்ச சாக்கேலேட் .." என்று ஒரு இனிப்பைக் கொடுத்தால் அது அந்த விலை உயர்ந்த பொருளை கீழே போட்டு விட்டு சாக்கலேட்டைப் பற்றிக் கொள்ளும்.
அதற்கு அந்தப் பொருளின் விலை தெரியாது. மதிப்புத் தெரியாது.
அது போல
நாமும் இந்த வாழ்வில், பெரிய பெரிய விடயங்களை விட்டு விட்டு நமது சாக்கலேட்டின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறோம்.
கணவன்,மனைவி, பிள்ளைகள், பணம், அதிகாரம், செல்வாக்கு, புகழ், வீடு, வாசல், வங்கிக் கணக்கு, பட்டம், பதவி, ஜாதி, மதம், என்று எத்தனையோ சாக்கேலேட்டுகள்.
சாக்கேலேட்டு இனிப்பாக இருக்கும். சுவையாக இருக்கும். யார் இல்லை என்று சொன்னது. எனவே அதை பிடித்துக் கொண்டிருக்கிறோம். அதை விட்டால் வேறு ஒன்றும் இல்லை என்ற நினைப்பில் அதிலேயே ஆழ்ந்து விடுகிறோம். சிற்சில சமயம் மற்ற நினைப்பு வந்தாலும், மனம் மீண்டும் சாக்கலேட்டின் பின்னே போய் விடுகிறது.
மணிவாசகர் சொல்கிறார்,
"இந்த உறவுகள், பொருள்கள் எல்லாம் அனுபவிக்கவே இருக்கின்றன. மகிழ்ச்சியாக அனுபவிப்போம் என்று பல பித்தர்கள் சொன்னதைக் கேட்டு நானும் அவற்றின் பின்னால் போனேன். இறைவா, பூவின் நறுமணம் வருகிறது என்றால், பூ எங்கோ இருக்கிறது என்று தானே அர்த்தம். அந்தப் பூவை தேடிக் கண்டு பிடித்தால் அது எவ்வளவு இனிமையாக இருக்கும். அதை விட்டு விட்டு எங்கெங்கோ
அது ஒரு புறம் இருக்கட்டும்....
தெருவில் நடந்து போகிறோம். ஏதோ ஒரு கடையில் வடை சுடும் வாசம் மூக்கைத் துளைக்கிறது. அடடா, சூடா ஒரு வடை சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று அந்த வாசம் வரும் உணவு விடுதி நோக்கிப் போகிறோம்.
விடுதிக்குப் போய் விடுகிறோம். அங்குள்ள உணவு பரிமாறுபவரிடம், "ஒரு plate வடை" என்று ஆர்டர் செய்கிறோம். வடை வந்து விடுகிறது. நல்ல மொரு மொரு என்று இருக்கிறது. எண்ணெய் லேசாக மின்னுகிறது. ஆவி பறக்கிறது.
"இறைவா, உன் கருணை, மலரின் வாசம் போல் எங்கும் விரிந்து கிடக்கிறது. அந்த வாசனையை பற்றிக் கொண்டே போனால், மலரைக் காணலாம். அது போல் உன் கருணையை பற்றிக் கொண்டே போனால், உன்னைக் கண்டு விடலாம். அதை விட்டு விட்டு, இந்த உலக இன்பங்களின் பின்னால் போய்க் கொண்டிருக்கும் என்னையும் தடுத்தாட்கொண்டு, உன் அடியவர்களில் என்னையும் சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது " என்று வியக்கிறார் அடிகளார்.
பாடல்
உற்ற ஆக்கையின் உறு பொருள், நறு மலர் எழுதரு நாற்றம் போல்,
பற்றல் ஆவது ஓர் நிலை இலாப் பரம் பொருள்: அப் பொருள் பாராதே,
பெற்றவா பெற்ற பயன் அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே,
அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
பொருள்
உற்ற ஆக்கையின் = கிடைத்த இந்த உடம்பின்
உறு பொருள் = பெரி பொருள், அர்த்தம்
நறு மலர் = வாசமிகு மலர்
எழுதரு நாற்றம் போல் = எழுந்து வரும் வாசம் போல
பற்றல் ஆவது = பற்றிக் கொள்ளக் கூடியது
ஓர் நிலை இலாப் = என்று ஒரு நிலை இல்லாத
பரம் பொருள்: = உயர்ந்த பொருள் (இறைவன்)
அப் பொருள் பாராதே = அதைக் கவனிக்காமல்
பெற்றவா = இந்த உடம்பை பெற்று
பெற்ற பயன் = பெற்றதின் பயன் புலன் இன்பங்களை அனுபவிப்பது தான் என்று
அது நுகர்ந்திடும் = அவற்றை அனுபவிக்கும்
பித்தர் சொல் = பித்தர்களின் சொல்லைக் கேட்டு
தெளியாமே, = அறிவு தெளிவு அடையாமல்
அத்தன் = தலைவன்
ஆண்டு = என்னை ஆட்கொண்டு
தன் அடியரில் = தன்னுடைய அடியவர் கூட்டத்தில்
கூட்டிய = சேர்த்துக் கொண்ட
அதிசயம் கண்டாமே! = அதிசயத்தை என்னவென்று சொல்லுவேன்
மிகவும் சிக்கலான பாடல். வேறு பொருளும் இருக்கலாம். தேடணும்.
Sunday, April 27, 2025
திருக்குறள் - வெகுளாமை - தீது
திருக்குறள் - வெகுளாமை - தீது
நமக்கு கீழே உள்ளவர்களிடம் நாம் நம் கோபத்தை எளிதாக காட்ட முடியும். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. திட்டலாம், அவமானப் படுத்தலாம், அவர்கள் தன்னம்பிக்கை குறையும்படி பேசலாம், அவர்களை பலர் முன்னிலையில் தலை குனியும்படி செய்யலாம்...
ஆனால், அது எல்லாம் நமக்கே தீதாய் முடியும் என்கிறார் வள்ளுவர்.
நம்மை விட வலிமையானவர்களிடம் நாம் நம் கோபத்தைக் காட்டினால், அவர்கள் பதிலுக்கு நமக்குத் தீங்கு செய்ய முடியும். எனவே அது நிச்சயமாக நமக்கு ஒரு தீமையில்தான் போய் முடியும்.
நமக்கு கீழே உள்ளவர்களிடம் நம் கோபத்தைக் காட்டினால் நமக்கு என்ன தீங்கு விளையும்? அவர்கள் நம்மை என்ன செய்து விட முடியும்?
வள்ளுவர் சொல்கிறார், அப்படிப்பட்ட கோபம் இந்தப் பிறவியில் பழியையும், மறு பிறவியில் பாவத்தையும் கொண்டு வருவதால், அது முந்தைய கோபத்தை விட தீமை செய்வது என்கிறார்.
வலிமையானவர்களிடம் கோபத்தைக் காட்டினால், அவன் பதிலுக்கு நம்மை தாக்க முடியும், திட்ட முடியும். அதன் பலன் அங்கேயே தீர்ந்து விடும். ஆனால் மெலியார் மேல் காட்டும் கோபம் இந்தப் பிறவியிலும், மறு பிறவியிலும் தொடரும் என்பதால், அது மிகவும் தீதானது என்கிறார்.
பாடல்
செல்லா இடத்துச் சினம்தீது செல்இடத்தும்
இல்லதனின் தீய பிற.
பொருள்
செல்லா இடத்துச் சினம்தீது = நம் கோபம் செல்லாத இடத்தில் அதைக் காட்டினால் அது நமக்கு தீமையாய் முடியும்.
செல்இடத்தும் = கோபம் செல்லும் இடத்திலும்
இல்லதனின் தீய பிற = அதை விட பெரிய தீமை இல்லை என்கிறார்.
பரிமேலழகர் சொல்லாத ஒன்றை நான் என் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்.
நம்மை விட கீழே உள்ளவன் என்று நாம் நினைத்து ஒருவன் மேல் நம் கோபத்தை இன்று காட்டி விடலாம். அவனே நாளை நமக்கு மேல் வந்துவிட்டால், நம் கதி?
எத்தனையோ திரைப்படங்களில் பார்க்கிறோம். ஒன்றும் இல்லாதவன் ஏதோ அதிர்ஷ்டம் அடித்து பெரிய பணக்கரனாகவோ, முதலாளியாகவோ, பெரிய அரசியல் செல்வாக்கு உள்ளவனாகவோ ஆகிவிடலாம். அப்போது அவன் நாம் முன்பு செய்தவற்றை நினைத்து நமக்கு ஒன்றுக்கு பத்தாக தீமை செய்ய முற்படலாம்.
யார் அறிவார் ? காலம் , யாரை, எங்கே கொண்டு சேர்க்கும் என்று. அடிக்கின்ற காற்றில் சில குப்பைகள் கோபுரத்தின் மேல் போய் விடலாம்.
எனவே, இன்று நமக்கு கீழே இருக்கிறான் என்று எண்ணி அவனுக்கு தீமை செய்யக் கூடாது.
அதற்கு பெரிய உதாரணம் இராமன்.
கூனிதானே, வயதான, கூன் விழுந்த கிழவி என்ன செய்து விட முடியும்?
இராமன் அவள் மேல் கோபப்பட்டு உண்டி வில்லை அடிக்கவில்லை. விளையாட்டாக அடித்தான். அதுவே பின்னாளில் அவனுக்கு எவ்வளவு பெரிய துன்பத்தைக் கொடுத்தது? தெரியாமல் செய்ததற்கே இவ்வளவு பெரிய வேதனை. தெரிந்தே செய்திருந்தால்?
எனவே, யாரிடத்தும் கோபத்தைக் காட்டக் கூடாது என்பது பெறப்பட்டது.
Thursday, April 24, 2025
திருவாசகம் - அதிசயப் பத்து - நொடியன சொல் செய்து
திருவாசகம் - அதிசயப் பத்து - நொடியன சொல் செய்து
https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post_24.html
நம்மை இந்தப் பிறவியில் ஆழ்த்தியது யார் ?
நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு தக்கவாறு நமக்குப் பிறவியை அளிப்பவன் இறைவன்.
இறைவன் நினைத்தால், "சரிப்பா, நாளையில் இருந்து இனி யாருக்கும் ஒரு பிறவியும் கிடையாது. எல்லாருக்கும் முக்தி. இதே வேலையாப் போச்சு உங்களோட. பிறந்து, இறந்து, பாவ புன்னியங்கள் செய்து, இன்ப துன்பங்களை அனுபவித்து, இதையெல்லாம் கணக்கு வைத்துக் கொண்டு...போதும்...இன்றோடு இனி யாருக்கும் எந்த பிறவியும் கிடையாது" என்று இறைவனால் செய்ய முடியுமா ? முடியாதா?
முடியும்தானே? அவனால் முடியாதது எது? பின் ஏன் செய்ய மாட்டேன் என்கிறான். எதுக்கு இந்த துன்பம்?
IPL போட்டி நடக்கிறது. எதுக்கு இத்தனை போட்டி, பாயிண்ட் எல்லாம். எல்லாருக்கும் கோப்பை என்று கொடுத்துவிட்டுப் போகலாம்தானே ? ஆளுக்கு ஒரு கோப்பை. நம்மால் அது முடியுதானே? பின் ஏன் செய்ய மாட்டேன் என்கிறோம்?
அது ஒரு லீலை...அனுபவங்கள் ஆன்மாவைப் பக்குவப் படுத்துகின்றன. ஒரு கட்டத்தில் ஆன்மா சலிப்பு அடைந்து, போதும், என்று இறைவனை நாடத் தொடங்குகிறது.
பொம்மைகளை வைத்து விளையாடும் பிள்ளை, சிறிது நேரத்தில் அவற்றை தூக்கிப் போட்டுவிட்டு, அம்மாவைத் தேடுவது போல. அவளைக் காணோம் என்றால் அழத் தொடங்கி விடும். ஏன், பொம்மைதான் இருக்கிறதே. வைத்துக் கொண்டு விளையாட வேண்டியதுதானே என்றால், அதில் சலிப்பு வந்து விடுகிறது. அம்மா வேண்டும்.
அது போல் ஆன்மாக்கள் இறைவனை தேடும் நிலை வரும். அது வரை பொம்மை விளையாட்டுத்தான்.
மணிவாசகர் சொல்கிறார்
"இறைவா, நீ என்னை முன்னொரு காலம் உன்னை விட்டு நீக்கி, இந்த உலக வாழ்க்கையில் செலுத்தினாய். பின், நீயே எனக்கு மந்திர உபதேசம் செய்து, ஒரு துன்பமும் இல்லாமல் என்னை இந்தப் பிறவிக் கடலில் இருந்து கை தூக்கி விட்டாய். என் முன் வினைகள் என்னைத் தொடரா வண்ணம் பார்த்துக் கொண்டாய். என்னையும் ஆட்கொண்டு, உன் அடியவர்களில் ஒருவனாக சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது"
பாடல்
நீக்கி, முன் எனைத் தன்னொடு நிலாவகை; குரம்பையில் புகப் பெய்து;
நோக்கி; நுண்ணிய, நொடியன சொல் செய்து; நுகம் இன்றி விளாக்கைத்து;
தூக்கி; முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து; எழுதரு சுடர்ச் சோதி
ஆக்கி; ஆண்டு; தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
பொருள்
நீக்கி = உன்னை விட்டு என்னை நீக்கி, விலகச் செய்து
முன் எனைத் = முன்பு என்னை
தன்னொடு = தன்னோடு
நிலாவகை = எப்படி பிறை நிலா சிவனை விட்டுப் பிரியாமல் இருக்கிறதோ அது போல
குரம்பையில் புகப் பெய்து = இந்தப் பிறவி என்ற சுழலில் என்னை விடாமல் அழுத்தி
நோக்கி = பின் அன்புடன் நோக்கி
நுண்ணிய = கூர்மையான, நுட்பமான
நொடியன சொல் = ஒரு நொடியில் சொல்லும் சொல்
செய்து = எனக்குச் சொல்லி
நுகம் இன்றி விளாக்கைத்து = நுகம் என்றால் மாட்டுக்குக் கட்டும் நுகந் தடி. அந்த மாதிரி பிணைப்பு எதுவும் இல்லாமல் விவசாயம் செய்வது போல
தூக்கி = என்னை இந்தப் பிறவிக் கடலில் இருந்து கை தூக்கி விட்டு
முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து = முன்பு செய்த வினைகள் தூள் தூளாகும் படி செய்து
எழுதரு சுடர்ச் சோதி ஆக்கி = மேல் நோக்கி எழுந்து சுடர் விடும் ஜாதியாக்கி
ஆண்டு = ஆட்கொண்டு
தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! = தன்னுடைய அடியவர்களில் சேர்த்துக் கொண்ட அதியசயத்தை கண்டோம்.
ஆன்மாக்கள் இந்தப் பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கின்றன. வெளியே வர முடியாமல் தவிக்கின்றன. அவற்றின் மேல் கருணை கொண்டு, அவன் அவற்றிற்கு வீடு பேறு தருகிறான்.
நொடியன சொல் என்றால் ஒரு நொடியில் கூறிய சொல். ஏதோ உபதேசம் என்றால் ஒரு நான்கு ஐந்து நாள் சொல்லுவது அல்ல. ஒரே நொடி. அவ்வளவுதான்.
அருணகிரிக்கு முருகன் சொன்னது போல - "சும்மா இரு". அவ்வளவுதான் உபதேசம்.
இங்கே மணிவாசகருக்கு என்ன சொன்னார் என்று சொல்லவில்லை. உரை செய்தவர்கள் "ஓம்" என்று பிரணவத்தை உபதேசம் செய்தார் என்கிறார்கள்.
அதற்குப் பின், நீண்ட நாள் பூஜை, புனஸ்காரம், என்றெல்லாம் இல்லை. வேறு எதுவும் இல்லை.
"நுகம் இன்றி விளாக்கைத்து"
ஆன்மீக நூல்களின் தளம் வேறு எங்கோ இருக்கிறது. இவற்றின் உட்பொருள் காண்பது என்பது கடினம். முதலில் மேலோட்டமான பொருள் என்ன என்று தெரிந்து கொள்வோம். பின் உட்பொருளை தேட வேண்டும்.
தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும்.
Thursday, April 10, 2025
திருக்குறள் - வெகுளாமை
திருக்குறள் - வெகுளாமை
https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post_10.html
வெகுளுதல் என்றால் கோபம் கொள்ளுதல்.
வெகுளாமை என்றால் கோபம் கொள்ளாமல் இருத்தல்.
வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார்? கோபமே படக் கூடாது என்கிறாரா? ஒருவன் என்ன தவறு செய்தாலும் கோபமே படக் கூடாதா? இதெல்லாம் நடக்கிற காரியமா? நடை முறைக்கு ஒத்து வருமா? என்று கேட்கலாம்.
பரிமேலழகர் சொல்கிறார், "வெகுளாமை என்றால் வெறுமனே கோபப் படாமல் இருத்தல் அல்ல. கோபப் பட தகுந்த காரணம் இருந்தும், கோபப் படாமல் இருத்தல்" என்கிறார்.
சில பேர் காரணமே இல்லமால் எரிந்து விழுவார்கள்.
சிலர்க்கு கோபப்பட்டு பேசுவதே இயல்பாக இருக்கும். சாதரணமாகவே பேசத் தெரியாது.
ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த அதிகாரம் இருப்பது துறவறவியலில். இது துறவிகளுக்குச் சொல்லப் பட்டது.
அதானே பார்த்தேன், நமக்கு இல்லை என்று ஒதுக்கி விடக் கூடாது. துறவிக்கு இது கட்டாயம். இல்லறத்தில் இருப்பவர்கள் கடை பிடிக்கக் கூடாது என்று அல்ல. முயற்சி செய்ய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அது நோக்கி நகர வேண்டும்.
முதல் குறள்
யாரிடம் கோபம் கொள்ளலாம், யாரிடம் கோபம் கொள்ளக் கூடாது என்று சொல்கிறார்.
நம்மை விட வலிமை குன்றியவர்கள் நமக்கு ஒரு தீங்கு செய்தாலும், அவர்கள் கோபம் கொள்ளக் கூடாது. நம்மை விட வலிமையானவர்கள் நமக்கு ஒரு தீங்கு செய்தால், அவர்கள் மேல் கோபப் பட்டாலும் ஒன்றும் பலன் இல்லை. எனவே எக்காலத்தும், யார் மீதும் கோபம் கொள்ளக் கூடாது என்கிறார்.
பாடல்
செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்
பொருள்
செல்இடத்துக் = ஒருவனுடைய சினம் செல்லும் இடத்து, அதாவது மெலியார் மேல்
காப்பான் = சினத்தை காப்பவன்
சினங்காப்பான் = சினத்தை கட்டுப் படுத்துபவன் என்று கூறப் படுவான்
அல்இடத்துக் = மற்ற இடத்து (அதாவது வலியார் மேல்)
காக்கின்என் = கோபத்தை காட்டினால் என்ன
காவாக்கால் என் = காட்டாவிட்டால் என்ன
செல்லிடம், அல்லிடம் என்று இரண்டு இடங்களைக் கூறுகிறார். அது இடம் அல்ல. கோபம் செல்லும் மெலியார், கோபம் செல்லாத வலியார் என்று பொருள் கொள்ள வேண்டும்.
தெருவில் ஒரு தீயவன் இருக்கிறான். அவன் நாம் போகும் போது ஏதோ சொல்லி நம்மை கேலி செய்கிறான். அவனிடம் போய் சண்டை போட முடியுமா? அவன் பல முறை சிறை சென்று வந்தவன். அவனிடம் நம் கோபத்தைக் காட்டினால் நமக்குத்தான் மேலும் தீங்கு வரும்.
சரி, கோபப் படாமல், "அவனை மன்னித்து விட்டேன்" என்று பெருந்தன்மையாக சொன்னாலும், அவனுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. அவனை மன்னிப்பது என்பது பெரிய அறச் செயல் அல்ல. நம் உயிருக்கு பயந்து அவனை மன்னிக்கிறோம். அதில் அருள் இல்லை.
எனவே, அவனிடம் கோபத்தைக் காட்டினாலும், காட்டாவிட்டாலும் ஒரு பயனும் இல்லை.
நம்மை விட மெலியவர்கள், வீட்டில் வேலை செய்யும் பெண்கள், வண்டி ஓட்டுபவர், வீட்டு காவலாளி, அலுவலகத்தில் நமக்கு கீழே வேலை செய்பவர்கள் என்று நம்மை விட வலிமை குறைந்தவர்கள் மேல் கோபத்தைக் காட்ட முடியும். அந்த சமயத்தில் கோபத்தைக் காட்டாமல் இருப்பதுவே சிறந்த அறம்.
ஏன் கோபப் படக் கூடாது? பட்டால் என்ன ஆகும்?
மேலும் சிந்திப்போம்.
Monday, April 7, 2025
திருவருட்பா - நடுக்கம்
திருவருட்பா - நடுக்கம்
சமீபத்தில் ஒரு நண்பரின் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அவருடைய மகன் ஏதோ வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தான். என்னதான் விளையாடுகிறான் என்று பார்த்தேன்.
ஏதோ சேசிங் கேம் போல. பைக்கில் செல்லும் ஒருவன், முன்னால் செல்லும் ஒரு ஆம்புலன்ஸ் கதவைத் திறந்து, அதில் உள்ள ஒரு நோயாளியை வெளியே இழுத்து, பாலத்தின் மேல் இருந்து கீழே தள்ளி விட்டு, பைக்கில் பறக்கிறான். போகிற வழியில் தெருவில் சும்மா போய் கொண்டு இருப்பவர்களை காலால் எட்டி உதைத்து கீழே விழ வைக்கிறான். பைக்கில் செல்லும் மற்றவர்கள் மேல் வண்டியை விட்டு ஏத்துகிறான்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதுக்காக இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று அவனைக் கேட்டேன். அவனோ, கேம் அங்கிள் ...என்று சொல்லிவிட்டு மேலும் மேலும் சாலையில் என்னவெல்லாம் செய்யக் கூடாதோ அனைத்தையும் செய்து கொண்டிருந்தான்.
அவனுக்கு அதில் ஒரு வருத்தமோ, கவலையோ இல்லை. நோயாளியை பாலத்தின் மேல் இருந்து தள்ளி விடுவது என்ன விளையாட்டோ தெரியவில்லை.
சின்னப் பையன். வீடியோ கேம் விளையாடுகிறான். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று நினைக்கலாம்.
பெரியவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். இன்று வரும் சினிமா, டிவி சீரியல்கள் போன்றவற்றில் வரும் வன்முறைக்கு அளவே இல்லை. தலையை சீவுவதும், இரத்தம் சொட்ட சொட்ட வெட்டுவதும், வெடி வைப்பதும், கையை காலை முறிப்பதும்....வன்முறை எல்லை மீறி காட்டுகிறார்கள்.
இவற்றையெல்லாம் பார்த்து பார்த்து மக்கள் மனம் மரத்துப் போய் விடும். சாதாரண வன்முறையில் ருசி குறைந்து மேலும் மேலும் வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கும்.
மனம் மரத்து, இறுகிப் போய் விடும். உயிர்கள் மேல் அன்பு போய் விடும். கருணை வற்றும்.
வள்ளல் பெருமான் சொல்கிறார்....
"மீனவர்கள் மீன் வலையும், தூண்டிலும் கொண்டு போவதைப் பார்த்து உள்ளம் நடுங்கினேன்" என்கிறார்.
ஐயோ, இவ்வளவு மீன்கள் மூச்சு விட முடியாமல் மூச்சுத் திணறி துடி துடித்து இறக்குமோ என்று என்று பதறுகிறார். மீனவர்கள் இன்னும் மீனைப் பிடிக்கவில்லை. மீன்கள் சாகவில்லை. சாகுமே, என்று நினைத்து வருந்துகிறார்.
அந்தத் தூண்டிலையும், வலையையும் கொலை கருவிகளாக பார்க்கிறார்.
உயிர்கள் மேல் எவ்வளவு கருணை இருந்தால் ஒரு மனிதன் இவ்வளவு துடிக்க முடியும்.
பாடல்
துண்ணெனக் கொடியோர் பிற உயிர் கொல்லத்
தொடங்கிய போதெல்லாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போதெல்லாம்
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
என் தந்தை நின் திரு உளம் அறியும்.
பொருள்
துண்ணெனக் = துடித்து எழுந்து
கொடியோர் = கொடியவர்கள்
பிற உயிர் கொல்லத் = பிற உயிர்களைத் கொல்லத்
தொடங்கிய போதெல்லாம் பயந்தேன் = தொடங்கிய போதெல்லாம் பயந்தேன். இவரைக் கொல்ல வில்லை. மற்ற உயிர்களை கொல்வதை அறிந்து இவர் பயப்படுகிறார்.
கண்ணினால் = என்னுடைய கண்களால்
ஐயோ = ஐயோ
பிற உயிர் பதைக்கக் = பிற உயிர்கள் பதை பதைக்க துடிப்பதை
கண்ட காலத்திலும் பதைத்தேன் = கண்ட போது பதைத்தேன்
மண்ணினில் = மண்ணில் (கடற் கரையில்)
வலையும் = மீன் பிடிக்கும் வலையும்
தூண்டிலும் = தூண்டிலும்
கண்ணி = மீன் பிடிக்கும் கண்ணிகளும்
வகைகளும் = அது போன்ற கருவிகளையும்
கண்ட போதெல்லாம் = ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்
எண்ணி = அவை எப்படி எல்லாம் உயிர்களை வதைக்குமோ என்று எண்ணி
என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் = என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
என் தந்தை நின் திரு உளம் அறியும் = என் தந்தை போன்றவனே, நீ அறிவாய்
.
மற்ற உயிர்களுக்கு துன்பம் வருமே, இவர்கள் துன்பம் செய்வார்களே என்று இவர் பதறுகிறார்.
ஜீவ காருண்யத்தின் உச்சம்.
Thursday, April 3, 2025
திருவாசகம் - மெய்யெனக் கருதி
திருவாசகம் - மெய்யெனக் கருதி
https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post_3.html
இன்பம் வேண்டாம் என்று யார் சொல்லுவார்கள்.
இன்பத்தைத் தேடித்தானே இத்தனை அலைச்சலும்.
இன்பம் எங்கே இருக்கிறது?
பொருள்களில், அனுபவங்களில் இருப்பதாகத் தோன்றுகிறது.
அது உண்மையா?
உருசியான உணவு. நெய் மணக்கிறது. நாக்கில் எச்சில் ஊறுகிறது. மருத்துவர் சொன்னது ஞாபகம் வருகிறது. அரிசிச் சோறு சாப்பிட்டால் அது தான் கடைசிச் சாப்பாடு என்று. கை வைக்க மனம் வருமா?
அருமையான இருக்கை. மெத் மெத்தென்று இருக்கிறது. சாய்ந்து கொள்ளலாம். உட்காரும் இடத்தில் ஒரு கட்டி, அல்லது மூல வியாதி. உட்கார மனம் வருமா? பயம் வரும்.
பொருளில் இல்லை இன்பம்.
அனுபவிக்கும் உடலில் இருக்கிறது. ஒற்றைத் தலை வலி மண்டையைப் பிளக்கும் போது, சுவையான ஐஸ் கிரீம் கொடுத்தால் ருசிக்க மனம் வருமா?
சரி, உடல்தான் ஆதாரம் என்று தெரிகிறது.
இந்த உடல் எப்படிப்பட்டது?
சொல்லவே வேண்டாம். நீரும் சலமும் ஒழுகிக் கொண்டே இருக்கும் ஒரு ஓட்டைப் பாத்திரம். எந்நேரமும் அழுக்கு சேர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் இடுகாட்டுக்கு ஒரு அடி எடுத்து வைத்துக் கொண்டே இருக்கும்.
இந்த உடலுக்கா இந்தப் பாடு?
வயதானவர்கள், மருத்துவ மனைகளில் இருக்கும் நிலையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். மூக்கில், வாயில், கையில், காலில் என்று எங்கு பார்த்தாலும் ஏதேதோ வயர்களை சொருகி இருப்பார்கள். கருவிகளோடு ஒரு கருவியாக கிடப்பார்கள்.
மல சலம் போவது கூடத் தெரியாது.
ஏதோ இந்த உடல் கால காலமாய் நம்மோடு இருக்கப் போவது போலவும், இருக்கின்ற இன்பங்களை எல்லாம் ஒன்று விடாமல் அனுபவித்து விடலாம் என்றும் மனிதன் கணக்குப் போடுகிறான்.
"இந்த உடலை மெய் எனக் கருதி, துன்பக் கடலில் விழுந்து அழுந்துவேனை ஒளி வீசும் என் தந்தையான சிவன் என்னை ஆட்கொண்டு தன் அடியவர் கூட்டத்தில் சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது"
பாடல்
பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதிநின்றிடர்க் கடற் சுழித்தலைப் படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே
பொருள்
பொத்தை = ஓட்டை. ஒன்பது ஓட்டைகள்
ஊன் = மாமிசம் நிறைந்த
சுவர் = மாமிசத்தை சுவர் போல் பூசி
புழுப் = புழுக்கள்
பொதிந் து = நிறைந்த
உளுத்த = உறுதியில்லாத
அசும் பொழுகிய = அசும் என்ற நின நீர்
பொய்க்கூரை = பொய்யான கூரை
இத்தை = இந்த உடலை
மெய்யெனக் கருதி = உண்மையென்று கருதி
நின்றிடர்க் = நின்று இடர். அதில் நின்று துன்பக்
கடற் = கடலில்
சுழித்தலைப் = சுழலில்
படுவேனை = மாட்டிக் கொண்டு தவிக்கும் என்னை
முத்து = முத்து
மாமணி = பெரி மணி
மாணிக்க = மாணிக்கம்
வயிரத்த = வைரம்
பவளத்தின் = பவளம்
முழுச்சோதி = இவற்றின் முழு ஒளியை கொண்ட சோதி வடிவான
அத்தன் =என் தந்தை
ஆண்டு = என்னை ஆட்கொண்டு
தன் அடியரிற் = தன் அடியவர் கூட்டத்த்ஹில்
கூட்டிய = சேர்த்துக் கொண்ட
அதிசயங் கண்டாமே = அதிசயத்தைக் கண்டு கொண்டோம்
Tuesday, April 1, 2025
திருக்குறள் - வாய்மை - மெய்யா கண்டவற்றுள்
திருக்குறள் - வாய்மை - மெய்யா கண்டவற்றுள்
https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post.html
ஒரு நூலை எப்படிப் படிக்க வேண்டும்?
கதை புத்தகம் என்றால் எப்படி வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம்.
பாட நூல்கள், அறிவு நூல்கள், அற நூல்கள் போன்றவற்றை எப்படிப் படிப்பது?
ஏன், அதில் என்ன சிக்கல்? மற்ற நூல்களைப் போல அவற்றையும் படிக்க வேண்டியதுதானே? புரியாவிட்டால் அகராதி, இன்டர்நெட் எல்லாம் இருக்கே. அதில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான் என்று நாம் நினைக்கலாம்.
சரி, தெரிந்து கொள்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அது சரிதானா என்று எப்படி அறிவது? நாம் ஏதோ ஒன்றை புரிந்து கொள்கிறோம். அதுதான் சரி என்று நம் வாழ்வை நடத்தலாம். ஒரு வேளை நம் புரிதல் தவறாக இருந்து விட்டால்? வாழ் நாள் பூராவும் தவறாகவே வாழ்ந்திருப்போம் அல்லவா? எவ்வளவு பெரிய தவறு அது.
உயரிய நூல்களை ஒரு சிறந்த ஆசிரியர் மூலம் படிக்க வேண்டும் என்று நம் முன்னவர்கள் நினைத்தார்கள். தானாக படித்துத் தெரிந்து கொள்ள முடியாது.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
வள்ளுவர் சொல்கிறார் "நான் மெய்யாக கண்டவற்றில் வாய்மையை விட சிறந்த ஒன்றும் எதுவும் இல்லை" என்று.
பாடல்
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற.
பொருள்
யாமெய்யாக் = யாம் மெய்யாக
கண்டவற்று ளில்லை = கண்டவற்றுள் இல்லை
யெனைத்தொன்றும் = வேறு ஒன்றும்
வாய்மையி னல்ல பிற = வாய்மையைத் தவிர பிற ஒன்று.
நாம் படித்துக் கொண்டு போனால், "சத்தியமாகச் சொல்கிறேன். வாய்மைதான் உயர்ந்த அறம்" என்று வள்ளுவர் கூறுவதாக நினைத்துக் கொண்டு மேலே போய் விடுவோம்.
பரிமேலழகர் போன்ற உயர்ந்த உரை ஆசிரியர்கள் மூலம் படிப்பதன் மூலம் இதில் எவ்வளவு நுண்ணிய, ஆழமான அர்த்தங்கள் இருக்கிறது என்று புரியும்.
"மெய்யா" என்பதற்கு என்ன அர்த்தம்? உண்மையாக, சத்தியமாக என்று நாம் பொருள் சொல்வோம். பரிமேலழகர் சொல்கிறார் "மெய் நூல்களாக கண்டவற்றுள்" என்று. உலகில் எவ்வளவோ உண்மை பற்றி ஆராய்ந்து சொல்லும் நூல்கள் இருக்கின்றன. அந்த அனைத்து நூல்களிலும் என்கிறார்.
எதுக்கு அனாவசியமா நேரத்தை வீணாக்குகிறாய். நான் எல்லா நூல்களையும் படித்துவிட்டுச் சொல்கிறேன் என்கிறார் வள்ளுவர்.
அது சரி, மெய் நூல்கள் என்றால் என்ன என்ற கேள்வி வரும் அல்லவா? ஆளாளுக்கு ஒரு நூலை கொண்டு வருவார்கள். இதுதான் உண்மையான மெய் நூல் என்று. எப்படி இனம் காண்பது?
பரிமேலழகர் சொல்கிறார். பிரமிக்க வைக்கிறது.
"தம்கண் மயக்கம் இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள்"
அவர் உரைக்கு, நாம் உரை காணவேண்டும். ...:)
"தம்கண் மயக்கம் இன்மையின்" - அதாவது தனக்கு ஒரு குழப்பமும் இல்லாமல். எது சரி, எது தவறு என்ற குழப்பம் எதுவும் இல்லாமல்.
"பொருள்களை" உலகில் உள்ள பொருள்களை
உள்ளவாறு உணரவல்லராய்க் = அவை எப்படி இருக்கின்றனவோ அப்படியே உணர வல்லவர்கள்.
காம வெகுளிகள் இன்மையின் = காமமும், கோபமும் இல்லாமல். அதாவது விருப்பு, வெறுப்பு, இல்லாமல்
அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் = அந்தப் பொருள்களை உண்மையாக உணர்ந்தது மட்டும் அல்ல, உணர்ந்தவாறே சொல்லவும். சிலருக்கு உண்மை தெரியும். இருந்தாலும், சுய இலாபம் கருதி உண்மையை மறைத்து, திரித்துச் சொல்லி விடுவார்கள். அப்படி அல்லாமல்.
வல்லராய = திறமை உள்ளவர்களாக
இறைவர் = அப்படி இருக்கக் கூடியவர் உலகிலேயே ஒருவர்தான். அவர்தான் கடவுள்.
அருளான் = அந்தக் கடவுளின் அருள் பெற்ற
உலகத்தார் = உலகில் உள்ளவர்கள்
உறுதி = நிலையான வீடு பேறு
எய்துதற் பொருட்டுக் = அடைவதற்காக
கூறிய ஆகமங்கள் = கூறப்பட்ட ஆகமங்கள்
அதாவது, இறை அருள் பெற்ற பெரியவர்கள், சான்றோர்கள், , உலக மக்கள் நன்மை அடையும் படி சொல்லப்பட்ட ஆகம நூல்கள்தான் மெய்யான நூல்கள் என்கிறார்.
அப்படி என்றால், மற்றவை உண்மையை எடுத்துச் சொல்லும் நூல்கள் அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட அனைத்து மெய் நூல்களிலும், வாய்மையை விட உயர்ந்த அறம் ஒன்றும் இல்லை என்கிறார்.
கவனிக்க வேண்டியது, மெய் நூல்கள் பல இருக்கின்றன. நான் படிக்கும் நூல்தான் மெய் நூல் என்றும் மற்றவை எல்லாம் பொய் என்றும் நினைக்கக் கூடாது. வள்ளுவர் அவற்றை எல்லாம் படித்து இருக்கிறார்.
இதெல்லாம் பரிமேலழகர் இல்லாவிட்டால் தெரிந்தே இருக்காது.
எனவே, உயரிய நூல்களை ஆசிரியர் துணை கொண்டு அணுகுவது நலம்.
வாய்மை அதிகாரம் முற்றிற்று.
Monday, March 31, 2025
பெரிய புராணம் - உன்னால் எப்படி முடியும்?
பெரிய புராணம் - உன்னால் எப்படி முடியும்?
மனிதன் நினைக்கிறான் தன் காரியங்களை தானே நிர்ணயம் செய்து அவற்றை செய்து முடிப்பதாக.
நான் என்ன சாப்பிட வேண்டும், எத்தனை மனைக்கு அலுவலகம் செல்ல வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், என்று தன் வாழ்வின் நொடிகளை தான் தீர்மானிப்பதாக மனிதன் நினைக்கிறான்.
அது சரியா?
அடுத்த நொடி எது பற்றி சிந்திக்கப் போகிறான் என்று ஒருவனுக்குத் தெரியுமா? அடுத்த நொடி எதைப் பார்க்கப் போகிறோம் என்று ஒருவனால் உறுதியாகக் கூற முடியுமா?
பேசும் போது ஒலி வருகிறது. அந்த ஒலி வருவதற்கு முன்னால் அது எங்கே எப்படி இருந்தது? நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் யோசித்து, தேர்ந்து எடுத்துத்தான் பேசுகிறீர்களா? எப்படி சொற்கள் வந்து கொண்டே இருக்கின்றன? யார் முடிவு செய்தது இந்த இந்த வார்த்தைகளை பேச வேண்டும் என்று?
இந்த பிரபஞ்ச வெளியில் அறிவு கொட்டிக் கிடக்கிறது. ஆங்கிலத்தில் Cosmic Consciousness என்று சொல்லுகிறார்கள். அந்த பேரறிவை எட்டிப் பிடித்து விட்டால் நமக்குத் தேவையானது எல்லாம் அங்கிருந்து கிடைக்கும் என்கிறார்கள்.
அசரீரி என்று சொல்கிறார்களே அது அதன் வெளிப்பாடு.
அறிவியல் உலகில் எத்தனையோ பெரிய பெரிய கண்டுபிடிப்புகள் தற்செயலாய், கனவில், ஒரு விபத்தின் மூலமாக வெளிப்பட்டு இருக்கின்றன. அதெல்லாம் அந்த பிரபஞ்ச அறிவின் வெளிப்பாடு என்கிறார்கள்.
பெரிய புராணம் பாடு என்று அநபாய சோழன் சேக்கிழாரிடம் கூறினான். சேக்கிழாருக்கு எப்படி பாடுவது என்று தெரியவில்லை. சிதம்பரம் சென்று, சிவனை வேண்டி தொழுதார். அசரீரி வெளிப்பட்டது "உலகெலாம்" என்று அடி எடுத்துக் கொடுத்தது.
முழுவதும் பாடி விட்டார். அரங்கேற்றம் செய்ய வேண்டும்.
"அடியார்கள் புராணத்தை பாடும் அளவுக்கு உனக்கு திறமை இருக்கிறதா என்று யாராவது கேட்டால் அவர்களுக்குச் சொல்லுவேன், இது என் கூற்று அல்ல. மெய் முதற் கடவுளான சிவனின் கூற்று...அவன் கூறித்தான் நான் இதைப் பாடினேன்" என்று அவை அடக்கம் சொல்கிறார்.
நானாக செய்தது ஒன்றும் இல்லை. இது எனக்குத் தரப்பட்டது. நான் அதை உங்களுக்குத் தருகிறேன் என்கிறார்.
பாடல்
அருளின் நீர்மைத் திருத்தொண் டறிவருந்
தெருளின் நீரிது செப்புதற் காமெனின்
வெருளின் மெய்ம்மொழி வானிழல் கூறிய
பொருளின் ஆகும் எனப்புகல் வாமன்றே .
பொருள்
அருளின் நீர்மைத் = அருள் தன்மை. அருள் ஒன்றையே இயல்பாகக் கொண்ட
திருத்தொண் டறிவருந் = திருத் தொண்டர்களை அறியும் திறம்
தெருளின் = மயக்கமற அறிவது
நீரிது = நீர் (சேக்கிழாராகிய நீர்) இதை
செப்புதற் காமெனின் = செப்புவதுற்கு + ஆம் + எனின் = சொல்லுவது எவ்வாறு என்று கேட்டால்
வெருளின்= மயக்கம் அற்ற
மெய்ம்மொழி = உண்மையான மொழி
வானிழல் = வான் + நிழல் = அசரீரி
கூறிய = கூறிய
பொருளின் ஆகும் = பொருளின் மூலம்
எனப்புகல் வாமன்றே = என்று சொல்வேன்
"அடியவர்களின் புகழை உம்மால் எப்படி சொல்ல முடியும் என்று கேட்டால், வானில் இருந்து வந்த அசரீரி சொல்லக் கேட்டதால், என்னால் முடியும்" என்கிறார் சேக்கிழார் பெருமான்.
எப்படி தொலைக் காட்சிப் பெட்டியில் ஒரு குறிப்பிட்ட நிலையத்தை (channel ) ரிமோட் கன்ட்ரோலில் அழுத்தினால் அந்த நிலையத்தின்ஒளி பரப்பாவது நம் பெட்டியில் தெரிகிறதோ, அது போல், இறை அருள் கிடைக்கும் போது, எந்த அறிவையும் அங்கிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
அந்த அறிவு எந்நேரமும் வந்து கொண்டே தான் இருக்கிறது. தொலைக் காட்சிப் பெட்டியை ஆன் செய்ய வேண்டும், அந்த குறித்த நிலையத்தின் அலை வரிசையை பிடிக்க வேண்டும். பிடித்தால் வந்து விடும்.
Thursday, March 20, 2025
திருக்குறள் - விளக்கு
திருக்குறள் - விளக்கு
நம் வீடுதான். எது எது எங்க இருக்கும் என்று நமக்கு நன்றாகத் தெரியும்.
ஒரு நாள் சற்று தாமதமாக வீட்டுக்கு வருகிறோம். இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு என்று வைத்துக் கொள்வோமே. மின்சாரம் இல்லை. நம் வீடுதானே என்று நம்மால் எளிதாக உள்ளே சென்று காரியங்கள் செய்ய முடியுமா? அங்கும் இங்கும் முட்டிக் கொள்வோம். கட்டில் ஒரு பக்கம் இடிக்கும். நாற்காலி இன்னொரு பக்கம். மேஜை மறுபக்கம்.
கை பேசி விளக்காவது வேண்டும் எது எது எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்ள. இடித்துக் கொள்ளாமல் செயல் பட. அடி பட்டுக் கொள்ளாமல் இருக்க. தவறி விழுந்துவிடாமல் இருக்க.
அது வீட்டுக்கு.
நம் வாழ்வை நாம் எப்படி நடத்திச் செல்வது ?
எது சரி, எது தவறு என்று எப்படி தெரியும்? யார் நல்லவர், யார் கெட்டவர் என்று எப்படித் தெரியும்.
மனம் பூராவும் அறியாமை என்று இருள் மண்டிக் கிடக்கிறது. இதை வைத்துக் கொண்டு எப்படி வாழ்வை செம்மையாக நடத்துவது ?
இந்த அறியாமை என்ற இருளைப் போக்கி வெளிச்சம் தருவது எது ?
வாய்மை என்ற விளக்கே மிகச் சிறந்த விளக்கு என்கிறார் வள்ளுவர்.
பாடல்
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
பொருள்
எல்லா விளக்கும் = புற இருளை போக்கும் அனைத்து விளக்குகளும்
விளக்கல்ல = விளக்கு அல்ல
சான்றோர்க்குப் = சான்றோருக்கு
பொய்யா விளக்கே விளக்கு = பொய்யாமை என்ற விளக்கே விளக்கு ஆகும்.
மற்ற விளக்குகள் எல்லாம் சூரியன், சந்திரன், தீ, மற்றும் வீட்டில் ஏத்தும் குத்து விளக்கு, அகல் விளக்கு, மின்சார விளக்கு போன்றவை. இவை புற இருளை மட்டுமே போக்கும். எனவே அவை சிறந்தவை அல்ல.
அக இருளை நீக்கும் வாய்மை என்ற விளக்கே உண்மையான விளக்கு என்று சான்றோர் கொள்வர்.
Wednesday, March 19, 2025
நான்மணிக் கடிகை - எதுக்கு எது வேண்டும் ?
நான்மணிக் கடிகை - எதுக்கு எது வேண்டும் ?
கல்யாண வீட்டுக்குப் போக வேண்டும் என்றால் நல்ல துணி உடுத்திப் போக வேண்டும். நன்றாக படிக்க வேண்டும் என்றால் நல்ல புத்தங்கள் வேண்டும்.
இது போல வாழ்வில் எது ஒன்றையும் அடைவதற்கு வேறொன்றின் துணை தேவைப்படுகிறது.
ஒருவன் இழிவு அடையாமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
பேர் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
எப்போதும் கூடவே துணைக்கு ஒன்றும் என்றால் என்ன செய்ய வேண்டும் ?
எல்லோரையும் வெற்றி கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
நான்மணிக் கடிகை விடை தருகிறது.
பாடல்
இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு
செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது
வேண்டின் வெகுளி விடல்.
பொருள்
இன்னாமை வேண்டின் = ஒருவன் பிறரால் இகழப் பட விரும்பினால்
இரவெழுக = பிச்சை எடுக்க வேண்டும்.
இந்நிலத்து = இந்தப் பூமியில்
மன்னுதல் வேண்டின் = நிலைத்து நிற்க வேண்டும் என்றால்
இசைநடுக = புகழ் தரும் வினைகளைச் செய்ய வேண்டும்
தன்னொடு = எப்போதும் தன்னோடு கூடவே
செல்வது வேண்டின் = ஒன்று இருக்க வேண்டும் என்றால்
அறஞ்செய்க = அறம் செய்க
வெல்வது வேண்டின் = எல்லோரையும் வெல்ல வேண்டும் என்றால்
வெகுளி விடல் = கோபத்தை விட்டு விட வேண்டும்
யாரிடமும், எதையும் இலவசமாகப் பெற நினைக்கக் கூடாது. அது இழிவைத் தரும். எனக்கு அந்த உதவி செய், இந்த உதவி செய், என்று நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கேட்டுக் கொண்டிருந்தால், உன்னை ஒரு பிச்சைக்காரன் என்றே அவர்கள் நினைப்பார்கள்.
நல்ல காரியங்களைச் செய்தால் தனக்குப் பின்னும் பேர் நிலைத்து நிற்கும்.
ஒருவன் செய்யும் அறம் அவனோடு எப்போதும் கூடவே இருக்கும்.
கோபம் இல்லாதவன் மற்றவர்களை எளிதில் வென்று விட முடியும்.
Tuesday, March 18, 2025
திருக்குறள் - தூய்மை
திருக்குறள் - தூய்மை
ஒவ்வொரு நாளும் வீட்டு வேலை, வெளி வேலை என்று அலைகிறோம். வியர்வை, தூசி, புகை, என்று அசுத்தங்கள் உடல் மேல் படித்து உடம்பு அழுக்கு ஆகிறது. நாற்றம் அடிக்கிறது. உடம்பை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் குளிக்க வேண்டும். ஒரு நல்ல குளியல் போட்டால் அழுக்கு, வியர்வை எல்லாம் நீங்கி உடம்பு சுத்தமாகிவிடும்.
உடம்பை சுத்தம் செய்துவிடலாம்.
உள்ளத்தை? மனதை? எப்படி சுத்தம் செய்வது?
வள்ளுவர் சொல்கிறார்
"எப்படி நீர் கொண்டு உடம்பை சுத்தம் செய்கிறோமோ, அது போல மனதை வாய்மையால் சுத்தம் செய்யலாம்" என்று.
பாடல்
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்
பொருள்
புறந்தூய்மை = மனதுக்கு வெளியே உள்ள தூய்மை, அதாவது உடலின் தூய்மை
நீரான் அமையும் = நீரில் குளிப்பதால் அமையும்
அகந்தூய்மை = உள்ளுக்குள் இருக்கும் மனதின் தூய்மை
வாய்மையால் காணப் படும் = வாய்மையால் அமையும்
காணப்படும் என்று கூறியதன் காரணம், உறுதியாக, நிச்சயமாக நடக்கும் என்பதால் கட்டாயம் காணப்படும் என்று கூறினார்.
உடலை தூய்மைப் படுத்த நீரின்றி வேறு வழி இல்லை.
அது போல மனதை தூய்மைப் படுத்த வாய்மை அன்றி வேறு வழி இல்லை.
சரி, இந்த மனத்தூய்மை என்றால் என்ன?
பரிமேலழகர் சொல்கிறார் "மனத் தூய்மை என்பது மெய்யுணர்தல்" என்று.
மனம் தூய்மையாக இருந்தால்தான் உண்மையை அறிய முடியும். வாய்மை ஒன்றுதான் அதற்கு வழி.
Monday, March 17, 2025
திருவாசகம் - அதிசயப் பத்து - எண்ணி லேன்திரு நாமஅஞ் செழுத்தும்
https://interestingtamilpoems.blogspot.com/2025/03/blog-post_17.html
"நன்றாகப் படிக்காததால் தேர்வில் வெற்றி பெறவில்லை" என்று ஒருவன் கூறினால் நாம் என்ன அறிந்து கொள்கிறோம்?
சரியா படிக்கல, அதனால் வெற்றி பெறவில்லை என்று அறிகிறோம்.
அது மட்டும் அல்ல.
தேர்ச்சி பெறவேண்டும் என்றால் நன்றாக படிக்க வேண்டும் என்ற அர்த்தமும் அதில் அடங்கி இருக்கிறது.
மணிவாசகர் சொல்கிறார்,
"தனக்காவது சொந்த அறிவு வேண்டும். அது இல்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும். இந்த பூமியில் பிறந்து என்ன பலனைக் கண்டேன்? ஏதோ பிறந்தேன், வளர்ந்தேன், இறந்தேன், மறுபடி பிறப்பேன் என்று என் வாழ்க்கை இப்படியே போய்க் கொண்டு இருக்கிறது. நல்ல வேளை சிவன் என்ன ஆட்கொண்டு, தன் அடியார் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டான். என்ன ஒரு அதியசம்" என்கிறார்.
பாடல்
எண்ணி லேன்திரு நாமஅஞ் செழுத்தும்என் ஏழைமை யதனாலே
நண்ணி லேன்கலை ஞானிகள் தம்மொடும் நல்வினை நயவாதே
மண்ணி லேபிறந் திறந்துமண் ணாவதற் கொருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.
பொருள்
எண்ணி லேன் = மனதால் நினைத்துக் கூட பார்க்க மாட்டேன்
திரு நாம = உன் திருநாமமாகிய
அஞ் செழுத்தும் = அஞ்சு எழுத்தை
என் ஏழைமை யதனாலே = என்னுடைய அறிவீனத்தினாலே
நண்ணி லேன் = உடன் சேர மாட்டேன்
கலை ஞானிகள் தம்மொடும் = வேத ஆகமங்களில் கற்றுயர்ந்த ஞானிகளுடன்
நல்வினை நயவாதே = நல்ல செயல்களை செய்யாமல்
மண்ணி லேபிறந் திறந்து = மண்ணிலே பிறந்து இறந்து
மண் ணாவதற் = மண்ணோடு மண்ணாகப் போவதற்கு
கொருப்படு கின்றேனை = முற்படுகின்ற என்னை
அண்ணல் ஆண்டு = அண்ணலாகிய சிவன் என்னை ஆட்கொண்டு
தன் அடியரிற் = தன் அடியவர் கூட்டத்தில்
கூட்டிய = சேர்த்துக் கொண்ட
அதிசயங் கண்டாமே. = அதிசயத்தைப் பாருங்கள்
அஞ்செழுத்தை நினைக்க மாட்டேன்.
அடியவர்களோடு சேர மாட்டேன்
நல்ல காரியங்களை செய்ய மாட்டேன்
Wednesday, March 12, 2025
திருக்குறள் - பொய்யாமை பொய்யாமை
திருக்குறள் - பொய்யாமை பொய்யாமை
பெண் வீட்டில் இருந்து ஒருவர் மாப்பிளையை சந்தித்து அவரைப் பற்றி விசாரிக்கச் சென்றிருந்தார்.
அவர் , வருங்கால மாப்பிளையிடம் "உங்களுக்கு இந்த மது, புகை பிடித்தல், இலஞ்சம் வாங்குதல், போன்ற கெட்ட பழக்கங்கள் எதாவது உண்டா" என்று மென்மையாக, நாசுக்காக கேட்டு அறிந்து கொண்டிருந்தார்.
எல்லாவற்றிற்கும் "இல்லை, இல்லை " என்றே பதில் சொல்லிக் கொண்டிருந்தார் அந்த மாப்பிளை.
கடைசியில், "மனுஷன்னு இருந்தா, ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் இருக்கும், குறையே இல்லாத மனிதன் உண்டா...உங்களுக்கு என்ன குறை இருக்கிறது " என்று நேரடியாகவே கேட்டுவிட்டார்.
அதற்கு அந்த மாப்பிள்ளை "என்ன அப்பப்ப கொஞ்சம் பொய் சொல்லுவேன்"...என்றாராம்.
அப்படினா, இதுவரை சொன்னவை எல்லாம் உண்மை இல்லை என்று ஆகிவிடும். அதாவது எல்லா கெட்ட பழக்கமும் இருக்கு. ஆனால், இல்லை என்று பொய் சொல்லித் திரிகிறார்.
சிலர் பேர் "நான் பொய்யே பேச மாட்டேன்" என்பார்கள். அதுவே ஒரு பொய்யாக இருக்கும்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
சில பேர் "நான் தீவிர உணவு கட்டுப்பாடோடு இருக்கிறேன்...இருந்தும் என் எடை குறையவே மாட்டேன் என்கிறது" என்பார்கள்.
அவர்கள் உணவு கட்டுப் பாடு எப்படி இருக்கும் என்றால்,
"அலுவலகத்தில் ஏதாவது பார்ட்டி என்றால் எல்லாம், எல்லோருடனும் சேர்ந்து என்ன இருக்கிறதோ அதை சாப்பிட்டுவேன்...மற்ற படி கட்டுப்பாடுதான் "
"தீபாவளி, பொங்கல் என்று ஏதாவது விசேடம் என்றால் அன்று செய்ததை சாப்பிட்டுக் கொள்வேன்...மற்றபடி கட்டுப்பாடுதான்"
"வெளியூருக்குப் பயணம் போகும் போது இந்த கட்டுப்பாடு எல்லாம் முடியாது, என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிட வேண்டியதுதான்...மற்ற படி தீவிர கட்டுப்பாடுதான்" என்பார்கள்.
உணவு கட்டுப்பாடு இருக்கிறார்கள். அது உண்மை; ஆனால் அதை விடாமல் கடைபிடிப்பது இல்லை. அவ்வப்போது ஏதாவது ஒரு தடை வந்து விடும். மனதுக்குள் நினைப்பது என்னவோ, பெரிய உணவு கட்டுப்பாடு இருப்பது மாதிரி.
எதைச் செய்தாலும், அதை விடாமல் கடை பிடிக்க வேண்டும். விட்டு விட்டு செய்வது விரதம் ஆகாது.
வள்ளுவர் சொல்கிறார்
"பொய் சொல்லாமல் இருந்தாலே போதும். வேறு எந்த அறமும் செய்ய வேண்டாம்"
என்று.
பாடல்
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
பொருள்
பொய்யாமை பொய்யாமை = பொய்யாமை
ஆற்றின் = செய்தால், அந்த வழியில் நடந்தால்
அறம்பிற = பிற அறங்களை
செய்யாமை செய்யாமை நன்று = செய்யாமல் இருந்தாலும் குற்றம் இல்லை.
இருக்கிறதே ஏழு வார்த்தை. அதில இரண்டு வார்த்தையை இரண்டு தரம் போடணுமா?
பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை நன்று
என்று சொல்லி இருக்கலாமே?
பொய்யாமை, பொய்யாமை என்பதற்கு, பொய்யாமை என்ற அறத்தை பொய்யாக்காமல் விடாமல் கடை பிடிக்க வேண்டும் என்று சில உரை ஆசிரியர்கள் உரை எழுதுகிறார்கள். பரிமேலழகர் "முதலில் வரும் பொய்யாமை உறுதி பற்றியும், இரண்டாவது வரும் பொய்யாமை உறுதியாக அதில் இருப்பதை பற்றியும் வருகிறது என்கிறார்.
அதாவது, எப்போதும் உண்மை பேசுவேன், ஆனால் தவிர்க முடியாத நேரத்தில் பொய்யும் பேசுவேன் என்று சொல்லக் கூடாது. அரிச்சந்திரன் உண்மை பேசிக் கொண்டிருந்தான். கடைசியில் விஸ்வாமித்திரன் "ஒரே ஒரு பொய் சொல்லு, நீ இழந்த நாடு, செல்வம் அனைத்தும் உனக்குத் தருகிறேன்" என்றான். அப்போது கூட பொய் சொல்ல மாட்டேன் என்று உறுதியாக இருந்தான்.
எனவே பொய்யாமையாகிய அறத்தை பொய்யாமல் (தவறாமல்) கடைபிடித்தால்
மற்ற அறங்களை ஒரு போதும் செய்ய வேண்டாம். அதாவது, பொய்யாமையும் செய்து, மற்ற அறங்களையும் செய்ய வேண்டுமா, என்றால் வேண்டாம், பொய்யாமை ஒன்றே போதும் என்கிறார்.
மேலும், மற்ற அறங்களை எல்லாம் செய்து கொண்டு, நடுநடுவே பொய்யும் சொல்லிக் கொண்டிருந்தால் ஏனைய அறங்களால் பலன் ஒன்றும் இல்லை என்றும் பொருள் சொல்கிறார்கள்.