Friday, December 30, 2022

கந்தரனுபூதி - சும்மா இரு

             

 கந்தரனுபூதி - சும்மா இரு 



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


கந்தரனுபூதியில் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட பாடல் என்று இன்று நாம் காண இருக்கும் பாடலைச் சொல்லலாம். 


அருணகிரிநாதர் அழகில், பெண்கள் பால் நாட்டம் உள்ளவர். பல பெண்களின் தொடர்பு இருந்தது. அதனால் உடலில் நோய் வந்து சேர்ந்தது. அழகு அழிந்தது. 

அழகும் போனதால், பெண்கள் அவரை வெறுக்கத் தொடங்கினார்கள். நோய் செய்யும் வருத்தம் ஒரு புறம். வாழ்க்கை வெறுத்துப் போய், தற்கொலை செய்ய நினைத்து, திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் ஏறி குதித்து விட்டார். 


விழும் போது, முருகன் அவரை கையில் ஏந்திக் கொண்டான்.


"முருகா, என்னை காத்தாய். எனக்கு உபதேசம் தந்தருள்வாய்" என்று வேண்டினார்.


முருகனும் உபதேசம் செய்தான். 


நாம் நினைப்போம், ஒரு நாலைந்து நாள் செய்திருப்பார் என்று. எவ்வளவு இருக்கிறது சொல்ல.


வேதம், இதிகாசம், புராணம், ஆகமம், என்று எவ்வளவு இருக்கிறது.


அதெல்லாம் இல்லை. 


முருகன் இரண்டே இரண்டு வரி உபதேசம் செய்தான். 


"சும்மா இரு"

"சொல் அற"


அவ்வளவுதான். 


மிக எளிதாக இருக்கிறதே என்று நினைப்போம். 


சும்மா இருக்கணும். அவ்வளவு தானே. இது என்ன பெரிய விடயமா என்று நினைப்போம். 


உடம்பு சும்மா இருந்தால் கூட, எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும். என்னணம் என்றால் வார்த்தைகள். நம் சிந்தனை எல்லாம் வார்த்தைகள் தான். 


வார்தைகள் இல்லாமல் சிந்திக்க முடியுமா?


சும்மா இரு. சொல் அற என்றால் சொல்லை அறவே விட்டு விட வேண்டும். மனதில் கூட சொல் ஓடக் கூடாது.


தனக்கு தானேயும் பேசிக் கொள்ள கூடாது. 


நடக்கிற காரியமா?


ஒரு நாள் WA பார்க்காமல் இருக்க முடியுமா? அரட்டை அடிக்காமல் இருக்க முடியுமா? 


பாடல் 


செம்மான் மகளைத் திருடுந் திருடன் 

பெம்மான் முருகன் பிறவான் இறவான் 

சும்மா இரு சொல்லற வென்றலுமே 

அம்மா பொரு ளொன்று மறிந்திலனே


பொருள் 



(pl click the above link to continue reading)



செம்மான் மகளைத் = சிவந்த மானின் வயிற்றில் இருந்து பிறந்த மகளான வள்ளியை 


 திருடுந் திருடன்  = அவளுடைய தாய் தந்தைக்குத் தெரியாமல் திருடிய திருடன் 


பெம்மான் = பெரியவனான 


முருகன் = முருகன் 


பிறவான் இறவான்  = பிறப்பும், இறப்பும் இல்லாதவன். முருக ஜெயந்தி உண்டா? 


சும்மா இரு = சும்மா இரு 


சொல்லற = சொல் அற 


வென்றலுமே  = என்று சொன்னவுடன் 


அம்மா = வியப்பு. இது எப்படி முடியும் என்ற வியப்பு 


பொரு ளொன்று மறிந்திலனே = அதன் பொருள் ஒன்றும் அறியாமல் இருக்கிறேனே 


அம் + மா + பொருள் = அந்தப் பெரிய பொருள் என்று உரை செய்வாரும் உண்டு. 


ஆன்மீக பாதையின் முதல் அடி பேச்சைக் குறைப்பது. எதற்கு எடுத்தாலும் ஒரு தர்க்கம், மறு பேச்சு, எதிர்ப்பு, என்று மனம் சதா காலமும் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தால், அது எங்கே வளவது. 


சத்தத்தை, இரைச்சலை குறைக்க வேண்டும். 


செயல் மாண்டு அடங்க வேண்டும். 


பின்னால் ஒரு பாடலில் "செயல் மாண்டு அடங்க" என்று சொல்ல இருக்கிறார்: 


பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்

தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்

புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்

தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.


மனதை, வாக்கை சலனம் அற்று இருக்க பழக்குங்கள். 



"சித்த விருத நிரோதம்" - சித்ததில் வரும் சலனங்களை நிறுத்துவது தான் யோகாவின் நோக்கம் என்பார் பதஞ்சலி 









 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


]




Friday, December 23, 2022

திருக்குறள் - புறங்கூறாமை - அறன் அல்ல

 திருக்குறள் - புறங்கூறாமை - அறன் அல்ல 


நல்ல புதுத் துணி உடுத்திக் கொண்டால் நமக்கு ஒரு புத்துணர்ச்சி வந்தது போல இருக்கும் அல்லவா? மனதுக்குள் ஒரு சந்தோஷம் வரும் தானே? 


ஒரு அழுக்கான, கிழிந்த, iron செய்யாமல், கசங்கி இருக்கும் ஒரு ஆடையை உடுத்தினால் எப்படி இருக்கும்? 


துணிக்கும், மனதுக்கும் என்ன சம்பந்தம்? 


நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் மறைமுக தொடர்பு இருக்கிறது அல்லவா? 


நம் மனம் இவைகளால் பாதிக்கப் படுகிறது என்று நாம் புரிந்து கொள்கிறோம். மனதை நேரடியாக நம்மால் கட்டுப்படுத்த முடியாது. உடம்பு, உடை, உணவு, மூச்சுப் பழக்கம் இவைகள் மூலம் அதை நாம் நம் வசப்படுத்த முடியும்.


சரி, அதற்கும் இந்த அதிகாரத்துக்கும் என்ன சம்பந்தம்?


நாம் நம் மன, வாக்கு, செயல்களை குற்றம் அற்றவையாக செய்ய வேண்டும். 


செயலை நாம் கட்டுப் படுத்த முடியும். 


வாக்கை நாம் கட்டுப் படுத்த முடியும்.


மனதை? 


வாக்கையும், செயலையும் சுத்தம் செய்தால் மனம் சுத்தமாகும். 


இதற்கு முந்தைய அதிகாரங்களில் மனச் சுத்தம் பற்றி கூறினார் (பிறனில் விழையாமை, வெக்காமை).


இனி வாக்கு சுத்தம் பற்றி கூற இருக்கிறார். 


இனிய சொற்களை கூறிப் பழகினால் மனமும் இனிமையாக மாறும். 


பிள்ளைகளை கூட "இராசா, தங்கம், செல்லம்,..." என்று சொல்லும் போது நம் மனமும் மென்மையாகிறது அல்லவா.


மாறாக "எருமை, சனியனே " என்று கடிந்து கூறினால் நம் மனமும், முகமும் விகாரப் படுகிறது அல்லவா. 


வாக்கில் உள்ள குற்றங்களை நீக்கினால் மனமும், செயலும் குற்றம் அற்றதாகி விடும். எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை. 


வாக்கு என்பது மிகப் பெரிய விடயம். அது பற்றி நிறைய சிந்திக்க இருக்கிறோம். 


பேச்சில் என்ன பெரிய குற்றம் வந்து விடும்? அதை எப்படி நீக்குவது, அதனால் வரும் நன்மை தீமைகள் என்ன என்று சிந்திப்போம். 


சொல்லில் வரும் முதல் குற்றமாக வள்ளுவர் புறம் கூறுதலைப் பற்றி கூறுகிறார். 


வள்ளுவர் எது முக்கியயமானதோ அதை முதலில் கூறுவார். 


"அறம் என்ற வார்தையைக் கூட ஒருவன் சொல்லாமல், அறம் அல்லாதவற்றை செய்து கொண்டிருந்தாலும், அவன் புறம் கூறாமல் இருப்பானாயின் அது நல்லது" என்கிறார். 



பாடல் 



அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறம்கூறான் என்றல் இனிது


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html


(pl click the above link to continue reading)



அறம்கூறான் = அறம் என்ற வார்தையை கூட வாயால் சொல்ல மாட்டான் 


அல்ல செயினும் = அறம் அல்லாதவற்றை ஒருவன் செய்தாலும் 


ஒருவன் = ஒருவன் 


புறம்கூறான் = புறம் கூறமாட்டான் 


என்றல் இனிது = என்ற பெயர் எடுப்பானாயின் அது மிக நல்லது 


அது எப்படி அறம் அல்லாதவற்றை செய்வது மிக இனிது என்று கூறலாம்?  அப்படி என்றால் வள்ளுவர் அதை எல்லாம் செய்யலாம் என்று கூறுகிறாரா?


இல்லை....


ஒருவனிடம் பல தீய குணங்கள் இருக்கலாம். 


மது அருந்தலாம், புகை பிடிக்கலாம், வேலை செய்யாமல் சோம்பித் திரியலாம், பெண்கள் பின்னால் சுற்றலாம் ...இப்படி பலஅறம் அல்லாத குணங்கள் இருந்தாலும் "ஒருத்தரைப் பற்றி தப்பா அவங்க இல்லாதப்ப பேச மாட்டான்" என்ற ஒரு நல்ல குணம் இருந்தால் உலகம் அவனது ஏனைய தீய குணங்களை பெரிது படுத்தாது. 


மாறாக, எல்லா நல்ல குணங்களும் இருந்தாலும், "அவன் பயங்கரமான ஆளு சார். எல்லாரையும் பத்தி இல்லாததும் பொல்லாததும் பேசுவான். அவனோடு ரொம்ப தொடர்பு வச்சுக்காதீங்க " என்ற அவனைப் பற்றி மற்றவர்கள் எச்சரிப்பார்கள். அவனுக்கு நெருங்கிய சுற்றமும் நட்பும் இருக்காது. 



ஏனைய அறம் அல்லாத குணங்கள் இருந்தாலும், புறம் கூறமாட்டான் என்ற ஒரு நல்ல குணம் மற்ற தீய குணங்களை மறைந்து விடும் அல்லது மழுங்கச் செய்து விடும்.


இது புறம் கூறாமல் இருப்பதின் நன்மை. 

Thursday, December 22, 2022

திருவாசகம் - திரு அம்மானை - எப்பொருட்கும் தானே ஆய்

             

திருவாசகம் - திரு அம்மானை  -   எப்பொருட்கும் தானே ஆய்



ஆட் கொள்ளுதல், ஆட் கொள்ளுதல் என்று சொல்லுகிறார்களே, ஆட் கொள்ளுதல் என்றால் என்ன?



நாம் பல பிறவிகளில் செய்த வினைகளின் தொகுப்பில் இருந்து ஒரு சிறு பகுதியை அனுபவிக்க இந்தப் பிறவி எடுத்து இருக்கிறோம். அந்த வினைகளை கழிக்கும் போது மேலும் வினை செய்து பழைய வினைகளோடு புதியதும் சேர்ந்து கொண்டால், என்று அதை தீர்ப்பது?


நல்லது செய்தால் புண்ணியம் வரும்.

தீயது செய்தால் பாவம் வரும். 


அந்த பாவ புண்ணியங்களை அனுபவிகக் இன்னொரு பிறவி வேண்டுமே. இது என்று முடியும்?


அவ்வாறு நாம் செய்த வினைகளையும், இப்போது செய்யும் வினைகளின் தொகுதி அனைத்தையும் நீக்கி நமக்கு மேலும் பிறவி வராமல் செய்வதைத் தான் ஆட் கொள்ளுதல் என்கிறார்கள். 


இறைவன் ஒருவனால் தான் அது முடியும். 


இறைவனடி சேர்ந்தால் தான் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரை சேர முடியும் என்பது நம் மத நம்பிக்கை. 


"நாம் இறைவனை தேடி அடைவதை விட, இறைவன் நம்மை அடைவது எளிது அல்லவா? தேவர்களும் காண முடியாத அவன், நம் மேல் அருள் கொண்டு இங்கு வந்து நம்மை ஆட் கொண்டு, இனி பிறவி வரமால் காக்கின்றான். அவன் மெய்யான பொருள்களின் தோற்றம் ஆகி, அந்த மெய் பொருள்களில் நிலைத்து நின்று, அவனே அந்த மெய் பொருளாகி, அனைத்து உயிர்களுக்கும் வீடு பேறு சிவனை நாம் பாடுவோம். "


பாடல் 

 


மைப்பொலியும் கண்ணி! கேள்; மால், அயனோடு, இந்திரனும்,
எப் பிறவியும் தேட, என்னையும் தன் இன் அருளால்
இப் பிறவி ஆட்கொண்டு, இனிப் பிறவாமே காத்து
மெய்ப்பொருள்கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய்
எப்பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும்
அப்பொருள் ஆம் நம் சிவனைப் பாடுதும் காண் அம்மானாய்!



பொருள் 





(pl click the above link to continue reading)




மைப்பொலியும் கண்ணி!  = கண் மையினால் அழகு கொண்ட கண்களை உடைய பெண்ணே 


கேள் = கேள் 

மால், அயனோடு, இந்திரனும், = திருமால், பிரமன், இந்திரன் ஆகியோரும் 


எப் பிறவியும் தேட = பல பிறவி எடுத்து தேடியும் காண முடியாதவன் 


என்னையும் = என்னையும் 

தன் இன் அருளால் = தன்னுடைய அருளால் 


இப் பிறவி ஆட்கொண்டு = இப்பிறவியில் ஆட் கொண்டு 


இனிப் பிறவாமே காத்து = இனி பிறவாமல் காத்து 



மெய்ப்பொருள்கண் தோற்றம் ஆய் = மெய்யான பொருள்களின் தோற்றம் ஆகி 




மெய்யே நிலைபேறு ஆய் = மெய்யான பொருள்களின் இருப்பிடமாகி 



எப்பொருட்கும் தானே ஆய்  = அனைத்துப் பொருள்களும் தானே ஆகி 



யாவைக்கும் வீடு ஆகும் = அனைத்துக்கும் வீடு பேறாக நின்று 



அப்பொருள் ஆம்  = அந்த பொருளாக நின்ற 



நம் சிவனைப் = நம் சிவனை 



பாடுதும் காண் அம்மானாய்! = பாடுவோம் அம்மானாய் 






(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 


)


Sunday, December 11, 2022

கந்தரனுபூதி - மெய்ப் பொருள் பேசியவா

            

 கந்தரனுபூதி - மெய்ப் பொருள் பேசியவா



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


பிறந்தான், இருந்தான், இறந்தான் என்று பெரும்பாலோனோர் வாழ்க்கை முடிந்து விடுகிறது. 


இறந்தான், எல்லோரும் ஓரிரு நாள் அழுவார்கள், பின் மறந்து போவார்கள். அவ்வளவுதானா வாழ்க்கை ?


மாறாக, பிறந்தான், இருந்தான், வாழ்வின் அர்த்தத்தை, உண்மைகளை அறிந்தான் என்று உலகம் போற்றும் வண்ணம் வாழ வேண்டாமா? அந்த உண்மைப் பொருளை எனக்கு உபதேசம் செய்த ஞான குருவே என்று முருகனை போற்றுகிறார். 



பாடல் 


கூகா வென வென் கிளை கூடியழப் 

போகா வகை மெய்ப் பொருள் பேசியவா 

நாகாசல வேலவ நாலுகவித் 

தியாகா சுரலோக சிகாமணியே . 


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


(pl click the above link to continue reading)


கூகா வென  = "கூ" என்றும் "கா" என்றும் (அய்யோ அம்மா என்று அரற்றுவதை)


வென் = என்னுடைய 


கிளை  = உறவினர்கள் 


கூடியழப் = ஒன்று கூடி அழது பின் 


போகா வகை = சென்று விடும் படி  செய்யாமல் 


மெய்ப் பொருள்  = வாழ்வின் உண்மையான பொருளை 


பேசியவா  = உபதேசம் செய்தவனே 


நாகாசல வேலவ = நாகாசாலம் என்ற தலத்தில் உறையும் வேலவரே 


 நாலுகவித் தியாகா = நாலு விதமான கவிதைகளை இயற்றும் ஆற்றலை அடியவர்களுக்கு அருளும் 


சுரலோக  = தேவர் உலகின் 


சிகாமணியே .  = தலைவனே 


பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்று இருக்காமல், உண்மையை அறிய வேண்டும் என்பது பொருள் 







 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html



]




Friday, December 9, 2022

திருக்குறள் - புறங்கூறாமை - முன்னுரை

திருக்குறள் - புறங்கூறாமை - முன்னுரை 



தனி மனிதன், ஒரு குடும்ப மனிதனாகிறான். பின், ஒரு சமுதாய மனிதனாகிறான். ஒவ்வொரு கட்டத்திலும், அவன் சிறந்த மனிதனாக வேண்டும் என்றால் குற்றங்களை களைந்து, குணங்களைப் பெருக்க வேண்டும். 



குற்றங்கள் மன, மொழி, மெய்யில் நிகழ்கிறது. 



முந்தைய அதிகாரம் மனதால் ஏற்படும் குற்றமான வெக்காமை பற்றி கூறியது. 



அடுத்து மொழியால், சொல்லால் ஏற்படும் குற்றம் பற்றிக் கூற இருக்கிறது.



சொல்லில் ஏற்படும் குற்றங்கள் பல வகைப்படும். 


முதலில் புறங்கூறாமை என்ற குற்றத்தைக் எடுதுக் கொள்கிறார். 



வள்ளுவர் சொல்லும் இந்த குற்றங்களை விலக்கினாலே போதும். நாம் மிகச் சிறந்தவர்கள் ஆவோம் என்பதி, சந்தேகம் இல்லை. 


வள்ளுவர் , இந்த அதிகாரத்தை ஐந்து பிரிவாக பிரித்துக் கொள்கிறார்.  அவையாவன 




(please click the above link to continue reading)







புறங்கூறாமையின் நன்மை 


புறங் கூறுதலின் கொடுமை 


புறம் கூறுவார் அடையும் குற்றங்கள் 


புறம் கூறுவதை எப்படி விடுவது 


இனி, இவை என்னென்ன என்று அறிவோம். 




Tuesday, November 29, 2022

திருக்குறள் - விறல்ஈனும்

         

 திருக்குறள் - விறல்ஈனும்


நமக்கு ஒரு பொருளோ அல்லது உதவியோ மற்றொருவரிடம் இருந்து வேண்டி இருந்தால், அவர் மனம் கோணாதபடி நடந்து கொள்ள வேண்டும். அவர் சொல்வதைக் கேட்க வேண்டும். அவருக்கு பணிந்து போக வேண்டும். அவர் முட்டாள்தனமாக ஏதாவது சொன்னால் கூட, சரி சரி என்று போக வேண்டும். மாறாக, "இது சரியான முட்டாள்தனம்" என்று சொல்ல முடியாது. எல்லாவற்றையும் உள்ளுக்குள் வைத்து பூட்டி வைத்து விட வேண்டும்.


நேரடியாக ஒரு உதவி வேண்டி நின்றாலே இந்தக் கதி. அவருக்குத் தெரியாமல் அவர் பொருளை கவர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தால் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டி வரும்?



மாறாக, அவரிடம் இருந்து நமக்கு ஒன்றும் வேண்டாம் என்றால், நாம், நம் மனதில் பட்டதை சொல்லலாம், செய்யலாம். தைரியமாக நெஞ்சு நிமிர்த்தி நடக்கலாம். 


"யாமார்க்கும் குடி அல்லோம்" என்று நாவுக்கரசர் முழங்கியது மாதிரி முழங்கலாம்.


அதைத்தான் இன்றைய குறளில் கூறுகிறார். 



"இறுதியில் வரப் போகும்  துன்பத்தை அறியாமல், பிறன் பொருளை விரும்பினால் அது துன்பத்தைத் தரும். மாறாக, , வெற்றியை, பெருமையைத் தரும் அப்படி வேண்டாம் என்று சொல்லும் பெருமை"



பாடல் 


இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு


பொருள் 




(please click the above link to continue reading)


இறல் = கெடுதல், துன்பம் 


ஈனும்  = தரும். (என்பதை) 


எண்ணாது  = நினைத்துப் பார்க்காமால் 


வெஃகின் = பிறன் பொருளை விரும்பினால் .
 

விறல்ஈனும்  = வெற்றியைத் தரும் 


வேண்டாமை = பிறன் பொருள் வேண்டாம் 


என்னுஞ்  = என்று சொல்லும் 


செருக்கு = செல்வம், பெருமை 




பயந்து, பயந்து, சகித்து, பணிந்து வாழ வேண்டுமா ?

அல்லது 

தலை நிமிர்ந்து, நெஞ்சு நிமிர்த்தி, தன்னம்பிக்கையோடு வாழ வேண்டுமா?


[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


அகன்ற அறிவுஎன்னாம்




பொல்லாத சூழக் கெடும்




வேண்டற்க வெஃகியாம் 


அஃகாமை செல்வத்திற்கு யாதெனின்


திரு சேரும் திறனறிந்து  



]


Saturday, November 26, 2022

கந்தரனுபூதி - எதிரப் படுவாய்

           

 கந்தரனுபூதி - எதிரப் படுவாய்


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


ஆழ்ந்து சிந்தித்தால் நம் வாழ்க்கை முழுவதும் பயம் என்ற ஒரு பெரிய உணர்வால் உந்தப்பட்டே சென்று கொண்டு இருக்கிறது. 


பள்ளி நாட்களில் பள்ளிக் கூடம், ஆசிரியர், பாடம், பரீட்சை என்று பயம். 

பின், வேலை, மேலதிகாரி, செய்து முடிக்க வேண்டிய வேலைகள், வேலை போய் விடுமோ என்ற பயம்...


குடும்பம் என்று வந்துவிட்டால், நமக்கு ஏதாவது ஆகி விட்டால் நம் குடும்பம் என்ன ஆகும் என்ற பயம். 


இதற்கு நடுவில் நோய், விபத்து ,பிள்ளைகள் படிக்க வேண்டுமே, அவை நல்ல படியாக வளர வேண்டும் என்று ஆயிரம் கவலை, பயம். 


பயங்களில் பெரிய பயம் மரண பயம் . அனைத்து பயங்களுக்கும் மூல பயம் மரண பயம். 


சில பேருக்கு மரணம் என்று சொன்னாலே பிடிக்காது. முகம் சுளிப்பார்கள். அவ்வளவு பயம். 


மரண பயம் இருக்கும் வரை நம்மால் வாழ்கையை தெளிவாக அணுக முடியாது. எதை எடுத்தாலும் அந்த பயம் முன் வந்து நிற்கும். நேரடியாக, மறை முகமாக அது நம்மை பயப்படுதிக் கொண்டே இருக்கும். 


அதெல்லாம் ஒண்ணும் இல்லை என்று நினைத்தால், ஒரு நாள் கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ வீடு வர நேரம் ஆனால், போன் சுவிட்ச் ஆப் என்று வந்தால், அன்று தெரியும். 


அந்த பயத்தை நீக்கி விட்டால்? 


"என் இறுதிக் காலத்தில், நான் மரணப் படுக்கையில் இருக்கும் போது , மிகவும் பயந்து போய் இருப்பேன். அப்போது, முருகா, நீ மயில் மேல் வந்து என் பயத்தைப் போக்க வேண்டும்" என்று வேண்டுகிறார். 



பாடல் 


கார்மா மிசைகா லன்வரிற் கலபத்

தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்

தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்

சூர்மா மடியத் தொடுவே லவனே!


சீர் பிரித்த பின் 


கார் மாமிசை காலன் வரின் கலபத்து

ஏர் மாமிசை வந்து எதிரப் படுவாய்

 தார்மார்ப வலாரி தலாரி எனும்

சூர்மா மடியத் தொடு வேலவனே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


(pl click the above link to continue reading)



கார் = கரிய மேகம் போன்ற 


மாமிசை = (மா = விலங்கு, மாக்கள் = விலங்குகள்) = எருமை மேல் 


காலன் = எமன் 


வரின் = வரும் போது 


கலபத்து = கலபம் என்றால் தோகை.


ஏர் மாமிசை  = மயில் மேல் ஏறி 


வந்து = வந்து 


எதிரப் படுவாய் = என் எதிரில் வருவாய் 


தார்மார்ப = மாலை அணிந்த மார்பை உடையவனே 


வலாரி = வலன் என்ற அசுரனை கொன்ற இந்திரன் 


தலாரி = தலம் (இடம்) 


எனும் = என்ற தேவ லோகத்தை வென்ற 


சூர்மா = சூரன் என்ற அசுரன் 


மடியத் = அழியும் படி 


தொடு வேலவனே! = வேலை எடுத்தவனே 


மரண பயம் என்றால் என்ன? எதைப் பற்றி பயம்?  சிந்திப்போம். .


குடும்பத்தை தனியே விட்டு விட்டுப் போகிறோமே என்ற பயமா என்றால் இல்லை. அது கவலை. அது கூட கொஞ்ச வயது வரை. .என்பது வயதில் நம்மைச் சார்ந்து யாரும் இருப்பது இல்லை. 


சரி, அனுபவிக்காமல் விட்டு விட்டவைகள் காரணமாக இருக்குமா என்றால், என்பது தொண்ணுறு வயதில் எதை அனுபவிக்க முடியும்?


பின் எதுதான் மரண பயம் என்று கேட்டால் சரியான விடை கிடைத்தபாடில்லை. நசிகேதன் தொடங்கி இன்று வரை அந்தக் கேள்வி விடை வேண்டி நிற்கிறது. 


நாம் சேர்த்து வைத்த அனுபவங்களை விட்டு விட்டுப் போகிறோமே என்பதுதான் கவலை. தெரியாத ஒன்றை இழக்க முடியாது. அப்படியே இழந்தாலும் பயம் இருக்காது. இந்த தெரிந்த விடயங்கள்தான் கவலைக்குக் காரணம். பயத்தின் வித்து. 


அந்த பயத்தை போக்க வேண்டும் என்று வேண்டுகிறார். 





 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html


]