Monday, August 19, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - நாட்டார் கண் செய்தலின் தீது

திருக்குறள் - சொற்குற்றம் - நாட்டார் கண் செய்தலின் தீது 



பெற்ற பிள்ளைக்கு யாராவது தீங்கு நினைப்பார்களா ? பெற்றோருக்கு? உடன் பிறப்புக்கு? நெருங்கிய நண்பர்களுக்கு?

எதிரிக்கு தீங்கு செய்தால் பரவாயில்லை. உற்றார், உறவினர், நண்பர்களுக்கு தீமை செய்வது என்பது எவ்வளவு பெரிய கொடிய விஷயம்.

அதை விட கொடியது ஒன்று இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

அது தான், பல பேர் முன், பயனில்லாத சொற்களை சொல்லுவது.

மற்றவர்களுக்கு தீமை செய்வது கொடிய செயல்.

அதிலும், நெருங்கியவர்களுக்கு செய்வது அதனினும் கொடுமை.

அதை விட கொடியது, பல பேர் முன்னிலையில் பயன் இல்லாத சொற்களை கூறுவது.

பாடல்


பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலின் தீது


பொருள்


பயன்இல = பயன் இல்லாத. தனக்கும், மற்றவர்க்கும் , இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தராத சொற்களை

பல்லார்முன் = பல பேர் முன்னிலையில்

சொல்லல்  = சொல்வது என்பது

நயன்இல = நன்மை இல்லாத

நட்டார்கண் = நெருங்கியவர்களிடத்து

செய்தலின் தீது = செய்வதை விட தீமையானது

சற்று ஆழமாக யோசிப்போம்.

"தீது" என்று யாருக்குச் சொல்கிறார். சொல்வது தீது அல்ல. செல்பவருக்கு தீது.

ஏன்?

உலகத்தில் நமக்கு பலர் முன்னே பின்னே தெரியாதவர்கள். பார்த்தும், கேட்டும் இல்லாதவர்கள்.  அவர்களை விட்டு விடுவோம். அவர்களுக்கும் நமக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை.

கொஞ்ச பேர் எதிரிகள் இருப்பார்கள் - தொழில் ரீதியாக, போட்டியில், அக்கம் பக்கம், அலுவலகம் போன்ற இடங்களில் இருப்பார்கள்.

கொஞ்சம் நண்பர்கள், உறவினர்கள் இருப்பார்கள்.

மொத்தம் அவ்வளவுதானே?

இப்போது, நமக்கு நெருங்கியவர்களிடம் நாம் பயன் இல்லாத சொற்களை பேசினால்  என்ன ஆகும்.

"வந்துட்டாண்டா, சரியான அறுவை கேஸு...வந்தா விட மாட்டான்...எதையாவது தொண தொண என்று பேசிக் கொண்டிருப்பானே, இவனிடம் இருந்து  எப்படி தப்புவது" என்று நம்மை விட்டு விலகிப் போக நினைப்பார்கள்.

இருக்கின்ற கொஞ்ச நஞ்ச நண்பர்களையும், உறவினர்களையும் இழக்க நேரிடும்.

யாருமே நமக்கு உறவு என்று இருக்க மாட்டார்கள்.

மாமியார் மருமகள் சண்டை வந்து பிள்ளை அம்மாவை விட்டு  விட்டு போவதற்கு காரணம்  என்ன ? பயனில்லாத சொல்.

நண்பர்கள் பகைவர்களாக மாற காரணம் என்ன - பயனில்  சொல்

கணவன் மனைவி உறவில் விரிசல் வரக் காரணம் என்ன - பயனில் சொல்

பயன் இல்லாத சொற்களை பேசினால், மற்றவர்களிடம் இருந்து அந்நியப் பட்டுப் போவோம்.

"அவன் கிட்ட மனசுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும், ஆறுதலா நாலு வார்த்தை சொல்லுவான், எந்த பிரச்சனை என்றாலும் என்னுடைய நலத்தை யோசித்து வழி சொல்லுவான்  ..." என்று மற்றவர்களை நினைத்தால் உறவு பலப்படும்.

எனவே, உறவினர்களுக்கு தீமை செய்வது எவ்வளவு தீமையானதோ, அதை விட  தீமையானது பலர் முன் பயன் இல்லாத சொற்களை கூறுவது.

பேசும்போது ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒரு வார்த்தை வாழ்க்கையின் திசையை மாற்றி விடும்.

எல்லோருக்கும் பயன் படும்படி எப்படி பேசுவது என்று சிந்தியுங்கள்.

அப்படி பேசுவதாக இருந்தால், உங்களிடம் நிறைய நல்ல விஷயங்கள் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் நிறைய அறிவை சேகரிக்க வேண்டும். படிப்பறிவு மற்றும் அனுபவ அறிவு.  இரண்டும் வேண்டும்.

அந்த அறிவின் மேம்பாடு உங்களை உயர்ந்த இடத்துக்கு கொண்டு போகும்.

சரி தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_19.html

No comments:

Post a Comment