Friday, August 16, 2019

கம்ப இராமாயணம் - இராமாயணம் சொல்ல வருவது என்ன ?

கம்ப இராமாயணம் - இராமாயணம் சொல்ல வருவது என்ன ?


கம்ப இராமாயணத்தை எத்தனையோ விதமாக அணுகலாம். அது தான் காப்பியங்களின் பெருமை. நாம் நினைக்க நினைக்க அது விரிந்து கொண்டே போகும்.

இராமாயணம் என்பது  ஒரு கதை அல்ல. அதைக் கதை என்று எடுத்துக் கொண்டு அணுகினால், அப்படி ஒன்றும் பெரிய  கதை அல்ல. இன்றைய டிவி சீரியல்கள் அதை விட உணர்ச்சி பூர்வமான கதைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றன.

பின், அந்த காப்பியத்தில் மறைந்து கிடக்கும் பாடங்கள் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால் நமக்கு சில உண்மைகள் புலப்படும்.

அப்படி எனக்கு தட்டுப்பட்ட உண்மைகளை பகிர்ந்து கொள்ள விருப்பம்.

எந்த ஒரு கதையிலும், கதாநாயகன் நலலவன். வில்லன் கெட்டவன்.

கதாநாயகன் நல்லவன் என்பதற்கு சில சம்பவங்கள் காட்டப்படும்.

வில்லன் கெட்டவன் என்பதற்கு சில சம்பவங்கள் காட்டப்படும்.

இங்கே இராமன், கதாநாயகன். அவன் அவதாரம் என்று சொல்லி ஆகி விட்டது. எனவே, அவன் நல்ல குணங்கள் அளப்பரியன என்று சொல்லாமலே விளங்கும்.

இராவணன், இராமனுக்கு இணையான நல்லவன் என்றே கம்பன் காட்டுகிறான்.

வேறு எந்த காப்பியத்திலாவது வில்லனை இவ்வளவு உயர்வாக காட்டி இருப்பார்களா என்பது சந்தேகமே.

வாரணம் பொருத மார்பு
வரையினை எடுத்த தோள்

உடல் வலிமை மட்டும் அல்ல

நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவு

தார் அணி மௌலி பத்து

சங்கரன் கொடுத்த வாள்  (தவ வலிமை)

முக்கோடி வாழ் நாள் (நீண்ட ஆயுள்)

முயன்று உடைய பெரும் தவம்

யாராலும் வெல்லப் படாய் எனப் பெட்ற வரம்

என்று அடுக்கிக் கொண்டே போகிறான் கம்பன்.

வீரம், தவம், பக்தி, அறிவு, உடல் வலிமை,  ஆயுள், என்று எதிலும் குறைவு இல்லாமல்  இருக்கிறான்.

எங்கே வந்தது அவன் குறை?

இராவணனையும் இராமனையும் இரு துருவங்களாக பிரிக்கும் ஒரே குணம் எது ?


ஒரு பெண்ணைத் தவிர வேறொருத்தியை மனதாலும் தொட்டேன் என்று சொன்னவன் இராமன்.

இருக்கிற பெண்கள் போதாது என்று மாற்றான் மனைவியும் வேண்டும் என்ற ஒழுக்கக் குறைவு   இராவணனிடம்.

அது ஒன்று தான் இருவரையும் பிரிக்கிறது .

"என்னை மணந்து கொண்ட போது, உன்னைத் தவிர வேறொரு பெண்ணை மனதாலும் தீண்டேன் என்று இராமன்  எனக்கு ஒரு வரம் தந்தான் . அதை நினைவு படுத்து   " என்று சீதை அனுமனிடம் கூறுகிறாள்.

வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்

தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்

இது இராமனின் ஒழுக்கம்.


ஆசில் பரதாரம் அவை அம் சிறை அடைப்பேம்
மாசில்புகழ் காதலுறுவேம் வளமை கூரப்
பேசுவது மானம் இடை பேணுவதும் காமம்
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்

இது இராவணன்.

அந்த ஒரு புள்ளிதான்.

மனைவியைத் தவிர வேறு ஒரு பெண்ணை நினைக்காத ஒரு மனம்,
மாற்றான் மனைவியையும் நினைத்தது இன்னொரு மனம்.

கதை பின்னல்களூடே இந்த துருவங்கள் மறைந்து போயிருக்கலாம்.

நினைத்துப் பார்ப்போம்.

இது ஒரு பாடம்.

இன்னும் , சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_16.html

2 comments:

  1. சரியாகத்தான் சொன்னீர்கள்.வேறு பல காரணங்கள் இருந்தாலும்,இந்த ஒரு குணம்தான் அவன் அழிவிற்கு ஒரு காரணமாயிற்று (proximate cause).

    ReplyDelete
  2. இரண்டாவது பாடல் ஏதோ சுமாராகப் புரிகிறது. அர்த்தம் எழுதியிருக்கலாம்!

    ReplyDelete