Tuesday, August 27, 2019

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவுச் சிக்கல் - பாகம் 2

கம்ப இராமாயணம்  - கணவன் மனைவி உறவுச் சிக்கல் - பாகம் 2 


அசோகவனத்தில் இருந்து வந்த சீதையை மிக கொடுமையான வார்த்தைகளால் இராமன் பேசிவிடுகிறான். அது பொறுக்காமல், சீதை தீக்குளித்து தன் கற்பை நிலைநாட்டுகிறாள். 

அதற்குப் பின் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது கேள்வி. சீதையின் மனத்தில் அந்த சம்பவம் என்ன ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்? அவர்களுக்குள் தாம்பத்யம் எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தோம். 

கணவன் மனைவி உறவில் ஏற்படும் சிக்கல்களை, விரிசல்களை எப்படி சரி செய்வது. 

இது இன்று நேற்று வந்தது அல்ல. சங்க காலம் தொட்டு இந்த உறவு ஒரு சிக்கலான ஒன்றாகத்தான் இருந்து இருக்கிறது.

அதற்கு அவர்கள் ஒரு வழி முறையும் கண்டு வைத்து இருந்தார்கள் என்றுஆள் நம்ம முடிகிறதா?

அதை ஒரு வாழ்க்கை நெறியாக, அகப்பொருள் என்ற இலக்கிய நூல் பேசுகிறது. 

"ஊடல் தீர்க்கும் வாயில்கள்" என்று அதற்குப் பெயர்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் உறவுச் சிக்கலை தீர்க்கும் வழி முறைக்கு  ஊடல் தீர்க்கும் வாயில் என்று பெயர். 

யார் இந்த ஊடலை தீர்ப்பவர்கள், அவர்கள் செய்யக் கூடிய வேலைகள் என்ன, அவர்கள் எப்படி ஊடலை தீர்ப்பார்கள் என்று வரையறை செய்கிறது நம் இலக்கியம். 

இவற்றை எல்லாம் விட்டு விட்டு, மேல் நாட்டு புத்தகங்களை படித்துக் கொண்டு வியந்து கொண்டிருக்கிறோம். 

நம்ம  ஆட்கள் இதை கரைத்து குடித்தவர்கள். 

பாடல் 

கொளைவல் பாணன் பாடினி கூத்தர் 
இளையர் கண்டோர் இருவகைப் பாங்கர் 
பாகன் பாங்கி செவிலி அறிவர்
காமக் கிழத்தி காதற் புதல்வன்
விருந்து ஆற்றாமை என்றுஇவை ஊடல் 
மருந்தாய்த் தீர்க்கும் வாயில்கள் ஆகும்

பொருள் 


கொளைவல்  = ஏவல் செய்யும் 

பாணன் = பாடல் இசைப்பவர் 

பாடினி  = பாணனின் மனைவி 

கூத்தர்  = கூத்தாடிகள் 

இளையர் = வீட்டு வேலைக்காரர்கள் 

 கண்டோர் = வழியில் தலைவனை கண்டவர்கள் 

இருவகைப் பாங்கர் = இரண்டு வகை நண்பர்கள் 
பாகன் = தேர்ப்பாகன் 

பாங்கி = தலைவியின் தோழி 

செவிலி = வளர்ப்புத் தாய் 

அறிவர் = அறிஞர்கள் 

காமக் கிழத்தி = காம கிழத்தி 

காதற் புதல்வன் = மகன் 

விருந்து = விருந்தினர் 

ஆற்றாமை   = தலைவியின் ஏக்கம் 

என்று = என்று 

இவை = இவை 

ஊடல் = ஊடல் என்ற நோயை 

மருந்தாய்த் =  மருந்து  போல 

தீர்க்கும் வாயில்கள் ஆகும் = தீர்க்கும் வழிகள் ஆகும் 

இந்தக் காலத்தில் பாணன், பானி , கூத்தன், எல்லாம் கிடையாது. அதற்கு பதில்  சினிமா, நாடகம், இசைக் கச்சேரிகள் உண்டு.

சற்று சிந்திப்போம். 

வீட்டில் கணவன் மனைவிக்கு இடையில் ஏதோ ஒரு சண்டை. ஒருவரோடு ஒருவர் சரியாக பேசிக் கொள்வது இல்லை. 

அப்போது வீட்டுக்கு ஒரு விருந்தினர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.  இருவரும், அப்போதும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். 

"வாங்க வாங்க " என்று உபசரிப்பார். "என்ன இந்த பக்கம்...என்ன சாப்பிடுறீங்க"  என்று அவர்களை கவனித்துக் கொள்வார்கள். 

மனைவி, கணவனை தனியே அழைத்து, இதை வாங்கிட்டு வாங்க, அதை வாங்கிட்டு வாங்க " என்று சொல்லுவாள். ஒருவருக்கு ஒருவர் குசலம் விசாரிப்பார்கள். சண்டை மறந்து போகும். விருந்தினர் போன பின், சண்டையின்  உக்கிரம் குறைந்து இயல்பு நிலைமைக்கு திரும்பி விடுவார்கள். 

அதே போல், கணவன் மனைவி உம் என்று இருக்கிறார்கள். வெளியூரில் படிக்கப் போன பிள்ளை  விடுமுறையில் ஊருக்கு வருகிறான்/ள். பிள்ளையை போட்டி போட்டு கவனிப்பார்கள் இல்லையா? அதில் ஊடல் மறந்து போகும். 

நண்பர்கள் (பாங்கன் , பாங்கி) உறவின் விரிசலை சரி படுத்துவார்கள். 

"மச்சான், பொம்பளைங்கனா அப்படித்தான் இருப்பாங்க. பாவம்டா, எல்லாத்தையும் விட்டுட்டு  உனையே நம்பி வந்திருக்கா...நீ தான் கொஞ்சம் விட்டு கொடேன் ...யாருகிட்ட விட்டு குடுக்குற..உன் பொண்டாட்டி கிட்டதான...இதுல என்ன உனக்கு பெரிய கஷ்டம் " 

"சரிடி, தப்பு அவரு பேரிலேயே இருக்கட்டும். குடும்பம் நடக்கணும்ல....இப்படி  சண்டை போட்டுக்கிட்டு இருந்தா, அவரு என்ன செய்வாரு...வீட்டுக்கு வர பிடிக்குமா சொல்லு.  அங்க இங்கனு சுத்த ஆரம்பிம்பாரு...இதெல்லாம் குடுபத்துக்கு நல்லதா....கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போ "

என்று சொல்லி ஊடலை தீர்ப்பார்கள். 

இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். இந்த பாடலுக்கு தனியே ஒரு பிளாக் போடலாம். 

காம கிழத்தி யார் என்று சொன்னால், இன்றைய பெண்கள்  சண்டைக்கு வருவார்கள். ஆர்வம் உள்ளவர்கள் தனியே என்னிடம் கேளுங்கள் இல்லையேல்  தேடி கண்டு பிடியுங்கள்...

சரி, அதுக்கும் இராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம்?

சீதைக்கு ஏற்பட்ட மன காயத்தை தீர்த்து வைத்தது யார் ?

யார் என்று நாளை சொல்வேன்  என்று கூறி விடை பெறுகிறேன்....

வர்ட்டா ...




2 comments:

  1. படிக்க தொடங்கியபோது என்னதான் சொல்ல போகிறீர்கள் என ஆவலுடன் எண்ணினேன்.மிக அழகாக வாழ்க்கை நடை முறையில் நடப்பவற்றை கூறினீர்கள்.
    கடைசியில் வழக்கம் போல சீதைக்கு ஏற்பட்ட மன காயத்தை தீர்த்து வைத்தது யார் என்பதை சொல்லாமல் ஒரு suspense இல் நிறுத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
  2. நயமாக உள்ளது.

    ReplyDelete