Friday, August 23, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - சீர்மை சிறப்பொடு நீங்கும்

திருக்குறள்  - சொற்குற்றம்  - சீர்மை சிறப்பொடு நீங்கும்


நல்ல  பெயர் எடுப்பது என்பது மிகக் கடினமான செயல். அப்படி முயற்சி செய்து நல்ல பெயர் எடுத்தாலும், அதை கட்டிக் காப்பது அதனினும் கடினமான ஒன்று.

அப்படி முயன்று பெற்ற நல்ல பெயரும் புகழும், பயன் இல்லாத சொற்களை சொல்வதனால் , அப்படி பேசுபவர்களை விட்டு நீங்கும் என்கிறார் வள்ளுவப் பேராசான்.

பாடல்

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்

பொருள்

சீர்மை  = மேன்மை, உயர்வு

சிறப்பொடு = சிறப்பான பெயர், புகழ், மதிப்பு

நீங்கும் = ஒருவரை விட்டு நீங்கும். எப்போது என்றால்

பயன்இல = பயன் இல்லாதவற்றை

நீர்மை = நீரின் தன்மை

உடையார் = உடையவர்

சொலின் = சொன்னால்

சீரும் சிறப்பும் போய் விடும் என்கிறார்.

அப்படி என்றால் நல்ல பெயர் எடுக்க வேண்டும், எடுத்த பெயரை காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

பயன் இல்லாத சொற்களை பேசக் கூடாது என்பது தெரிகிறது அல்லவா.

சரி, அது என்ன நீர்மை உடையார்?

நீர்மை என்ற சொல்லுக்கு பல பொருள் சொல்லுகிறார்கள்.

நீர் இன்றி அமையாது உலகு என்று சொல்லுவார்கள். நீர் அவ்வளவு உயர்ந்தது. இன்று கூட வெளிக் கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்று ஆராயும் போது , முதலில் அங்கே நீர் இருக்கிறதா என்று ஆராய்கிறார்கள்.

நீர் இருந்தால் உயிரினம் இருக்கும் என்பது ஒரு எதிர்பார்ப்பு.

நீர் உயிர் காப்பது.

நீர்மை உடையார் என்றால், உயிர் காப்பதைப் போன்று அருள் உள்ளம் கொண்டவர்கள், பெரியவர்கள், சான்றோர் என்று பொருள்.



நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள்,
மைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால்,
ஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார்,
மெய்வாசகம் கேட்டுன் மெய்ந்நீர்மை தோற்றாயே.

என்று பிரபந்தம் பேசும்.

நிலவே, உன் உயரிய தன்மையை இழந்து விட்டாயா என்று கேட்கிறது அந்தப் பாசுரம்.

பயன் தரக்கூடியவற்றை எப்படி பேசுவது?

அதற்கு முதலில் பயன் தரக்கூடியவற்றை படிக்க வேண்டும். கேட்க வேண்டும்.

எது உள்ளே போகிறதோ, அது தானே வெளியே வரும்.

அரட்டைகளும், நையாண்டிகளும், துணுக்குகளும்,  பொய் செய்திகளும் உள்ளே போனால், அதுதானே வரும்.

நல்லவற்றை உள்ளே அனுப்புங்கள்.

கிழியும்படியடற் குன்றெறிந்தோன் கவிகேட்டுருகி
யிழியுங் கவிகற்றிடாதிருப்பீரெரி வாய்நரகக்
குழியுந்துயரும் விடாய்ப்படக் கூற்றுவனூர்க்குச் செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.

(கந்தரலங்காரம்-56)

என்பார் அருணகிரிநாதர்.

"இழியும் கவி கற்றிடாதிருப்பீர் "...மோசமான கவிதைகளை கற்காமல் இருங்கள் என்கிறார்.

கண்டதையும் படிக்கக் கூடாது.



நல்லதைப் படித்தால், நல்ல சிந்தனை வரும்.

நல்ல சிந்தனை வந்தால், நல்ல சொல் வரும்.

நல்ல சொல் வந்தால், சீரும் சிறப்பும் தானே வந்து சேரும்.

குப்பைகளை படிப்பதை நிறுத்த வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_23.html


1 comment:

  1. சிறந்த சிந்தனை. நல்லதொரு அறிவுரை.

    ReplyDelete