Friday, August 30, 2019

கம்ப இராமாயணம் - யாண்டுக் கொண்டியோ ?

கம்ப இராமாயணம் - யாண்டுக் கொண்டியோ ?


இராமன் சந்தேகப்பட்டான். சீதை தீக்குளித்தாள். அவளின் கற்பின் சூடு தாங்க முடியாமல் அக்கினி தேவன் அவளை கொண்டு வந்து இராமனிடம் கொடுத்தான். "இவள் களங்கம் அற்றவள்" என்று சான்றிதழ் வேறு கொடுத்தான்.

அப்போது, இராமன் கேட்கிறான்.."நீ யார் என்று".

அதற்கு அவன் , "அக்கினி தேவன் " என்று பதில் சொல்லி விட்டு, அவன் இராமனைப் பார்த்து கேட்கிறான்.

இராம பக்தர்கள் எச்சில் விழுங்கும் இடம்.....

"தேவர்களும், முனிவர்களும் மற்றும் உயிர் உள்ள அனைத்தும், மூன்று உலகங்களும் கண்கள் மோதி நின்று "ஆ" என்று அதிர்ச்சியில் அலறியதை நீ கேட்க விலைலயா? அறத்தை நீக்கி வேறு ஏதோ ஒரு பொருளை நீ எவ்வாறு கடை பிடித்தாய் " என்று இராமனை அக்கினி தேவன் கேள்வி கேட்கிறான்.

பாடல்


'தேவரும் முனிவரும், திரிவ நிற்பவும், 
மூவகை உலகமும், கண்கள் மோதி நின்று, 
''ஆ!'' எனல் கேட்கிலை; அறத்தை நீக்கி, வேறு 
ஏவம் என்று ஒரு பொருள் யாண்டுக் கொண்டியோ? 


பொருள்

'தேவரும் = தேவர்களும்

முனிவரும் = முனிவர்களும்

 திரிவ = திரிகின்றவை உயிர் உள்ளவை)

நிற்பவும் = நிற்பவை (உயிர் அற்றவை)

மூவகை உலகமும் = மூன்று உலகங்களும்

கண்கள் மோதி நின்று,  = கண்கள் மோதி நின்று

''ஆ!'' எனல் கேட்கிலை = ஆ என்று அதிர்ச்சியில் அலறியதை நீ கேட்கவில்லையா ?

அறத்தை நீக்கி = அறத்தை விட்டு விட்டு

வேறு  = வேறு

ஏவம் என்று ஒரு பொருள் = ஏதோ ஒரு பொருளை

யாண்டுக் கொண்டியோ?  = எப்படி கொண்டாய்

சீதையின் கற்பை இராமன் சந்தேகம் கொண்டதை மூன்று உலகிலும் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

தேவர்கள், முனிவர்கள் என்று சான்றோர் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அது அறம் அன்று தீக் கடவுள் கூறுகிறார்.

சீதை பேசாமல் நிற்கிறாள்.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறாள்.

அவள் ஒன்றும் சாதாரணமானவள் அல்ல.

"எல்லை நீத்த இவ்வுலகம் யாவையும் என் சொல்லினால் சுடுவேன்"

என்றவள்.

பின் எப்போதுதான் பேசினாள் ? என்ன தான் பேசினாள் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_30.html


2 comments:

  1. சீக்கிரம் சொல்லுங்கள் ஆவல் தாங்கவில்லை

    ReplyDelete
  2. நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்

    ReplyDelete