Monday, August 26, 2019

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவுச் சிக்கல்

கம்ப இராமாயணம்  - கணவன் மனைவி உறவுச் சிக்கல் 



கணவன் மனைவி உறவில் சிக்கல் வருவது இயல்பு. ஒவ்வொருத்தருக்கும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு. அது நிறைவேறாத போது, மன வருத்தமும், துக்கமும் வருவது இயற்க்கை.

சில சமயம், பேச்சு , வாதமாகி மாறி, தவறான சொற்கள் வந்து விழுந்து விடலாம். உணர்ச்சிவசப் படும்போது இவை நிகழ்வது ஒன்றும் புதிது அல்ல.

அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் சில சமயம் நம்மையும் மீறி வந்து விடுவது உண்டு.

சண்டை சச்சரவு என்று கூட வேண்டாம், நேரத்துக்கு வருகிறேன், சினிமாவுக்கு கூட்டிப் போகிறேன் என்று சொன்ன கணவன் வர முடியாமல் போய் இருக்கலாம். வீடு வாங்கலாம் என்று போட்ட திட்டம் வேறு ஏதோ ஒன்றினால் மாறிப் போய் இருக்கலாம்.

கோபத்தில், தாபத்தில் வார்த்தைகள் வந்து விழுந்து விட்டால் என்ன செய்வது.

பொதுவாக, மீண்டும் எப்படி பழைய நிலைக்கு வருவது என்ற தர்ம சங்கடம் இரண்டு பேருக்கும் இருக்கும்.

நான் என்ன தவறு செய்தேன் என்று இருவரும் மருகிக் கொண்டு இருப்பார்கள்.

எப்படி, அந்த மனக் கசப்பை மறந்து விட்டு இயல்பாக இருப்பது என்று இருவரும் மனதுக்குள் போட்டு  குழப்பிக் கொண்டிருப்பார்கள்.

அவர் பேசட்டும், என்று அவளும்.

அவளுக்கு என்ன அவ்வளவு அதப்பு , பேசுனா பேசட்டும், இல்லாட்டி கிடக்கட்டும் என்று அவரும்  ஆளுக்கு ஒரு மூலையை பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

உறவில் விழும் விரிசல் இயல்பானதுதான்.

ஆனால், ஒரு முறை அப்படி விரிசல் விழுந்து விட்டால், அதையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.

அன்னிக்கு அப்படி சொன்னாயே, என்று மீண்டும் மீண்டும் அதையே நினைத்துக் கொண்டிருந்தால்   வாழ்க்கை சுவைக்காது.


இராமன் சீதை வாழ்வில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

இராவணன் இறந்த பின், சீதையை கொண்டு வருகிறார்கள்.

அவளை பேசக் கூடாத பேச்செல்லாம் பேசுகிறான் இராமன். எல்லோர் முன்னிலையிலும்.

சுடு சொல் தாங்காமல் சீதை தீக்குளிக்கிறாள். மீண்டு வருகிறாள்.

அக்கினிதேவன் அவள் கற்புக்கு சான்றிதழ் (Certificate) தருகிறான். சீதையை இராமன் ஏற்றுக் கொள்கிறான்.

யோசித்துப் பாருங்கள். சீதையின் மன நிலை எப்படி இருக்கும் என்று.

தன் கற்பை, தன் கணவனே சந்தேகப்பட்டான் என்றால் ஒரு பெண்ணின் மன நிலை  எப்படி இருக்கும்?

அந்த சம்பவத்துக்குப் பின், அவர்களுக்குள் உள்ள தாம்பத்யம் எப்படி இருக்கும்?

சீதை, அந்த சம்பவத்தை எளிதில் மறப்பாளா?  அது முள்ளாக அவள் மனதில் தைக்காதா?

அவள் எப்படி இராமனுடன் இயல்பாக குடும்பம் நடத்த முடியும்?

சீதை என்ன செய்தாள்? என்ன சொன்னாள் ? அவர்களுக்குள் ஊடல் நிகழ்ந்ததா? இராமன் சமாதானம் எதுவும் சொன்னானா?  இராமன் எதுவும் சொல்லிவிட்டுப் போகட்டும். சீதை என்ன சொன்னாள் என்பதுதான் முக்கியம்.

சீதை என்ன நினைத்தாள் / சொன்னாள் / செய்தாள் என்று சிந்தித்துக் கொண்டிருங்கள்.

நாளை சந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_26.html

No comments:

Post a Comment