Saturday, August 24, 2019

ஐங்குறுநூறு - புகுந்த வீட்டு பெருமை

ஐங்குறுநூறு - புகுந்த  வீட்டு பெருமை 


பிறந்த வீட்டு பெருமை பேசாத பெண் யார் இருக்கிறார்கள். ஒன்றும் இல்லாவிட்டாலும், "எங்க வீட்டுல ...." என்று ஆரம்பித்தால் எளிதில் முடிக்க மாட்டார்கள்.

என்ன செய்வது ? எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்த பெண், பெருமையையாவது பேசி விட்டுப் போகட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான்.

ஐங்குறுநூறு இதை வேறு ஒரு கோணத்தில் காட்டுகிறது.

ஒரு பெண். திருமணம் ஆகி, கணவன் வீட்டுக்குப் போய் சிறிது நாள் இருந்து விட்டு பின் தாய் வீட்டுக்கு வருகிறாள்.

அம்மாவுக்குத் தெரியும் , அங்கே ஒண்ணும் பெரிய சிறப்பு கிடையாது என்று. ஏதோ காதல், கத்தரிக்காய் என்று இந்தப் பெண் திருமணம் முடித்து போய் விட்டாள்.

தாய் கேட்டிருப்பாள் போல இருக்கு , "உன் புருஷன் வீடெல்லாம் எப்படி இருக்கு" னு.

அவளுக்கு கணவன் வீட்டை வீட்டுக் கொடுக்க முடியவில்லை. ஆனால், அது ஏழ்மையான வீடு என்ற உண்மையையும் மறைக்க முடியவில்லை.

அந்தப் பெண் சொல்கிறாள்

"அவங்க வீட்டு கொல்லை பக்கத்துல குப்பை கூளம் நிறைந்த தோட்டம் ஒன்று இருக்கிறது. சரியாக பராமரிக்காமல் விட்ட தோட்டம்தான். அதில் உள்ள குழியில் கொஞ்சம் நீர் தேங்கி இருக்கிறது. அது கலங்கிய நீர். சேரும் சகதியுமாக இருக்கும். அந்த நீரை மான்கள் பருகும். அந்த நீரானது, நம் வீட்டு தோட்டத்தில் நீ தரும் தேன் கலந்த பாலை விட சிறந்தது" என்கிறாள்.

பாடல்


அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பைத் 
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு 
உவலை கூவல் கீழ 
மான் உண்டு எஞ்சிய கழிலிநீரே 

பொருள்

அன்னாய்  = அன்புத் தோழியே (தோழியிடம் சொல்வது போல அமைந்த பாடல்)

வாழி வேண்டு = நீ நீண்ட நாள் வாழ வேண்டுகிறேன்

அன்னை = நம் அன்னை

நம் படப்பைத் = நம் தோட்டத்தில்

தேன்மயங்கு = தேன் கலந்து தரும்

பாலினும் = பாலை விட

இனிய = இனிமையானது

அவர் = அவர் (என் கணவர்)

நாட்டு  = நாட்டில் (அவரது வீட்டில்)

உவலை = சருகுகள்

கூவல் = நீர் கட்டிக் கிடக்கும் குழி

கீழ = அதில்

மான் உண்டு எஞ்சிய கழிலிநீரே  = மான் உண்டது போக மிஞ்சிய கலங்கிய நீர்

 இங்க தேனும் பாலும் இருக்கு. ஆனால், அவளுக்கு கணவன் இருக்கும் இடம்தான் பெரிதாகத் தெரிகிறது.

மான் எல்லாம் வந்து தண்ணி குடிக்கும் என்றால், அவ்வளவு அன்பும் அரவணைப்பும் அங்கே   இருக்கிறது என்று அர்த்தம்.

செல்வம் அல்ல மகிழ்ச்சியைத் தருவது, அன்பும் அரவணைப்புமே இன்பம் தரும்.

எங்கோ இருந்து வந்த மான்கள் பயம் இல்லாமல் அவங்க வீட்டு தோட்டத்தில்  நீர்  குடிக்கும் என்றால், எனக்கு அங்கு ஒரு பயமும், கவலையும் இல்லை என்று  சொல்ல வருகிறாள்.

கணவனின் அன்பு  மட்டும் இருந்துவிட்டால் போதும், ஒரு பெண் எந்த இடத்திலும்  இனிமையாக குடும்பம் நடத்துவாள் என்பது செய்தி.

பிறந்த வீடு பெருமை பேசி, புகுந்த வீட்டை மட்டம் தட்டும் பெண்களுக்கு இது ஒரு  பாடம்.

அந்தக் காலத்தில் நம் பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று காட்டும் பாடல் இது.

முடிகிறதோ இல்லையோ, எப்படி எல்லாம் வாழ்ந்தார்கள் என்று தெரிந்து கொள்வதில்  ஒன்றும் தவறில்லையே.....

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_24.html


1 comment:

  1. மான் வந்து நீர் அருந்தும் இடம் அன்புள்ள இடம் என்ற கருத்து மிக இனிமையாக இருந்தது.

    அதே போல, "கணவன் வீட்டு அழுக்குத் தண்ணி, அம்மா தரும் பாலை விட இனியது" என்றதும் அருமை.

    நன்றி.

    ReplyDelete