Monday, August 12, 2019

கம்ப இராமாயணம் - துன்பம் வந்தால் என்ன செய்வது ?

கம்ப இராமாயணம்  - துன்பம் வந்தால் என்ன செய்வது ?


துன்பம் வந்தால் துவண்டு போவது மனித இயல்பு.

துயரம் வந்தால் சோர்ந்து போய் விடுகிறோம். என்ன செய்வது என்று அறியாமல் குழம்புகிறோம். எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று தன்னிரக்கம் கொள்கிறோம். இதற்கு யார் காரணம் என்று யாரையெல்லாமோ நினைத்து அவர்கள் மேல் குறை சொல்கிறோம்.

அந்தக் காலத்திலேயே எங்க அப்பா அம்மா என்னைய நல்லா படிக்க வச்சிருந்தா, இன்னைக்கு இந்த துன்பம் வருமா ?....

நல்ல மாப்பிள்ளையா பாத்து கட்டிக் கொடுத்திருந்தா, நான் இன்னிக்கு இப்படி கண்ணை கசக்கி கொண்டு இருந்திருப்பேனா ?....

வேலை போய் விட்டதே, இனி என்ன செய்வேன்? எப்படி இந்த குடும்பத்தை கரை சேர்ப்பேன்? என்று தவிப்பவர்கள் உண்டு.

இப்படி எவ்வளவோ விதத்தில் துன்பம் வந்து சேரலாம்.

துவள்வது, சோர்வது, பிறரை குற்றம் கூறுவது என்பது ஒரு வழி.

அந்தத் துன்பத்திலும் இன்பம் காண்பது என்பது இன்னொரு வழி.

இது என்ன கதையா இருக்கே...துன்பம் வரும் போது , அதில் எப்படி இன்பம் காண்பது?

வள்ளுவர்

இடுக்கண் வருங்கால் நகுக அதனை 

அடுத்தூர்வது அஃதொப்பது இல் 

என்றார்.

என்ன அர்த்தம்?

துன்பம் வந்தால் சிரிக்க வேண்டுமாம். ஏன் என்றால், அந்த துன்பத்தைக் கண்டு சிரித்து கொண்டு  சும்மா இருக்கக்  கூடாது.அந்த துன்பத்தை நீக்க வழி காண வேண்டும். முயற்சி செய்து, அந்த துன்பத்தை கடந்து விட்டால், அப்போது வரும்  சுகம் இருக்கிறதே, அதற்கு ஈடு இணை இல்லை என்கிறார்.

உதாரணமாக, வேலை போய்விட்டது என்று வைத்துக் கொள்வோம்.

ஐயோ, வேலை போய்விட்டதே என்று சுணங்கி விடாமல், "ஆஹா, வேலை போய் விட்டதா ...இப்ப என்ன செய்கிறேன் பார் " என்று களத்தில் இறங்க வேண்டும். வேறு வேலை தேடி கண்டு பிடிக்கலாம், அல்லது சுய தொழில் தொடங்கலாம். எப்படியோ, முயன்று பொருள் சம்பாதித்து, குடும்பத்தை கரை சேர்த்து விட்டால், அப்போது கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும்  அளவிட முடியாது என்கிறார் .

பெண்ணுக்கு வரன் கிடைக்கவில்லையே என்ற கவலை. ஆடி ஓடி ஒருவழியாக திருமணம் முடித்து வைத்து விட்டால் , பின் பேரக் குழந்தைகளோடு விளையாடும் போது உண்டாகும்  மகிழ்ச்சி இருக்கிறதே ....

இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம்.

முடி சூட்ட இருந்த இராமனை, காட்டுக்குப் போ என்று கைகேயி விரட்டி விட்டாள். இதை விட பெரிய துயரம் இருக்குமா ?

சக்ரவர்த்தியாக இருக்க வேண்டியவன், மர உரி உடுத்து காட்டிலும் மேட்டிலும்  நடந்து போக வேண்டி இருந்தது.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்.

அந்த நிலையில்   இருந்தால் என்ன செய்வோம்.

அப்பா இப்படி பண்ணி விட்டாரே என்று வருத்தப் படுவோம், பரதனிடம் பேசிப் பார்க்கலாமா என்று  நினைப்போம், பேசாமல் சீதையின் மிதிலாபுரிக்கு போய் விடலாமா  என்று யோசிப்போம் ...

இராமனுக்காவது சரி, தசரதன் தந்தை. அவன் சொல் கேட்க வேண்டியது அவன் கடமை.

சீதைக்கு என்ன வந்தது? பேசாமல் அரண்மனையில் இருந்து இருக்கலாம். அல்லது, நான் என் அப்பா வீட்டுக்குப் போகிறேன் என்று போய் இருக்கலாம்.

அவளும், காட்டுக்கு கிளம்பி விட்டால்.

இரண்டு பேரும் வருத்தப் பட்டார்களா ?

இல்லவே இல்லை.

ஏதோ பிகினிக் போவது போல சந்தோஷமாக போகிறார்கள்.

இராமன், அவளுக்கு கானகத்தில் உள்ளவற்றை காட்டிக் கொண்டே வருகிறான். இருவரும் மகிழ்ச்சியாக அந்த இயற்கையை இரசித்துக் கொண்டே  செல்கிறார்கள்.

பாடல்




மன்றலின் மலி கோதாய்!
     மயில் இயல் மட மானே! -
இன் துயில் வதி கோபத்து
     இனம் விரிவன எங்கும்,
கொன்றைகள் சொரி போதின்
     குப்பைகள், குல மாலைப்
பொன் திணி மணி மானப்
     பொலிவன - பல - காணாய்!

பொருள்

மன்றலின் = மனத்தால்

மலி  = நிறைந்த

கோதாய்! = பெண்ணே

மயில் = மயிலின்

இயல்  = இயல்பை கொண்ட

மட மானே! - = மருண்ட மான் போன்றவளே

இன் துயில் = இனிய தூக்கத்தில்

வதி கோபத்து = இந்திர கோப பூச்சிகள்

இனம் = இனம்

விரிவன எங்கும், = எங்கும் விரிந்து

கொன்றைகள் = கொன்றை மலர்கள்

சொரி போதின் = கொத்து கொத்தாக மலர்ந்து

குப்பைகள் = குவியலாக

குல = சிறந்த

மாலைப் = மாலையில்

பொன் = பொன்னாலான

திணி மணி = மணி பதித்த

 மானப் = அது போல

பொலிவன பல = பலவாறாக பொலிவதை

காணாய்!  = பெண்ணே

கொன்றை மலர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்திர கோப பூச்சி சிவந்த நிறத்தில் இருக்கும்.   தங்க ஆரத்தில், வைரம் பதித்தது போல இருக்கிறது ஏங்கறான் இராமன்.

நடுவில், சீதையின் அழகை புகழ்கிறான்.

பெண்ணின் அழகை புகழ்ந்தால் அவளுக்கு அது ரொம்பப் பிடிக்கும்.

தன் அழகை , கணவன் இரசிக்க வேண்டும் என்று பெண் விரும்புவாள்.

மனம் நிறைந்தவளே , மயில் போன்றவளே , அங்க பாரு கொன்ற மலர்களும், இந்திர கோப பூச்சிகளும் எப்படி இருக்குனு என்று ஏதோ foreign vacation போன மாதிரி  சந்தோஷமாக போகிறார்கள்.

என்ன துன்பம் வந்தாலும்,

கணவனும் மனைவியும் பிரியக் கூடாது. ஒன்றாக இருக்க வேண்டும்.

அவர்கள் அன்பாக இருக்க வேண்டும்.

கணவன் இரசிக்கும் படி மனைவி இருக்க வேண்டும்.

கணவன், அவளை பாராட்டிச் சொல்ல வேண்டும்.

அப்படி இருந்து விட்டால், எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், அதை இன்பமாக மாற்றி விடலாம்


சிக்கல் என்ன என்றால், அந்த இனிமையான கணவன் மனைவி உறவையே துன்பமயமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

பின் எங்கே இயற்கையை இரசிப்பது, அன்பை பகிர்வது, மனைவியை புகழ்வது எல்லாம்?

நாங்கள் என்ன போகப் பொருள்களா? நீங்கள் இரசிக்க நாங்கள் என்ன கடையில் வைத்திருக்கும் பொம்மைகளா  ? என்று பெண்ணிய வாதிகள் கிளம்பி விட்டார்கள். தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

துன்பம் வந்தால், சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று இராமன் வாயிலாக  கம்பன் சொல்லித் தருகிறான்.

படித்துக் கொள்வோமே.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_12.html

No comments:

Post a Comment