Sunday, August 18, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - பயனில சொல்லாமை

திருக்குறள் - சொற்குற்றம் - பயனில சொல்லாமை 


ஆளுமை (personality ) எப்படி வருகிறது. நம்முடைய தோற்றம், நடை, உடை, பாவனை, நம் பேச்சு செயல் என்று இவற்றில் இருந்து நம்முடைய ஆளுமை பிறக்கிறது.

இதில் முக்கியமானது பேச்சு.

நாம் எப்படி மற்றவரிடத்தில் பேசுகிறோம் என்பதை வைத்து மற்றவர்கள் நம்மை எடை போடுவார்கள்.

இவன் படித்தவன், அறிஞன், முட்டாள், விஷயம் தெரிந்தவன், புளுகன் என்றல்லாம் நம்மை எடை போடுவார்கள்.

எடை போடுவது ஒரு புறம் இருக்கட்டும், நம் வாழ்க்கைக்கு மிக மிக தேவையான ஒன்று மற்றவர்களிடம் நாம் கொள்ளும் உறவு.

பிள்ளைகளிடம், பெற்றோரிடம், கணவனிடம், மனைவியிடம், உடன் பிறப்புகளிடம், சுற்றத்தாரிடம், நண்பர்களிடம், மாமனார், மாமியார், நாத்தனார், மேலதிகாரி , கீழே வேலை பார்ப்பவர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

அத்தனை பேரிடமும் நல்லபடியாக உறவை வளர்ப்பது என்பது சவாலான காரியம்.

உறவின் பலம், பேச்சில் இருக்கிறது.

சொல்லில் ஏற்படும் குற்றங்களை களைய வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

வள்ளுவருக்கு உரை எழுத வந்த பரிமேலழகர் சொல்லின் கண் ஏற்படும் குற்றங்கள் நான்கு என்கிறார்.

அதாவது,

பொய் சொல்லுதல்
குறளை
கடுஞ் சொல்
பயனில் சொல்

"பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்சொல் லென "

என்று மணிமேகலை கூறும்.

குறளை என்றால் நிந்தனை, திட்டுதல், ஏசுதல்.

தீக்குறளை சென்றோதோம் என்பாள் ஆண்டாள்.


வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் "தீக்குறளைச் சென்றோதோம்"
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமா(று) எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.'


இதில், வியக்கும் விஷயம் என்ன என்றால், உரை எழுதிய பரிமேல் அழகர் கூறுகிறார், முற்றும் துறந்த முனிவர்களால் மட்டும் பொய்யை முழுவதும்   அகற்ற முடியும் . எனவே, அதை விட்டு விட்டு, மற்றவற்றை திருவள்ளுவர் சொல்லுகிறார் என்றார்.

யாருக்கு கிடைக்கும் இப்படி பட்ட ஆசான்கள்.

இதில், பயனில் சொல்லாமை என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார்.

பயனில்லாத என்றால் என்ன?

தனக்கும் மற்றவர்க்கும் அறம் , பொருள், இன்பம், வீடு இந்த நான்கில் ஒன்றாவது  கிடைக்கும் பயன் இல்லாமல் பேசுவது பயனில் சொல்லாமை.

வாயை திறக்கிறோம் என்றால், என்ன சொல்லப் போகிறோம் என்று தெரிந்து பேச வேண்டும். நாம் சொல்லப் போவதால் யாருக்கு என்ன நன்மை என்று அறிந்து  பின் பேச வேண்டும்.

அதில் முதல் குறள்


பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்


பொருள்

பல்லார் = பலர்

முனியப்  = கோபம் கொள்ளும்படி, வெறுக்கும் படி

பயனில = பயனில்லாத

சொல்லுவான் = (சொற்களை) சொல்லுவானை

எல்லாரும் = எல்லாராலும்

எள்ளப் படும் = நகைக்கப் படும்

பலர் வெறுக்கும் படி பேசுபவனை எல்லாரும் பார்த்து நகைப்பார்கள்.

வெட்டிப் பேச்சு. அரட்டை.  பொழுது போகாமல் எதையாவது பேசிக் கொண்டிருப்பது.

இப்படி பேசுபவர்களை கண்டால், எல்லோரும் கோமாளி என்று நினைத்து  நகைப்பார்கள். பழிப்பார்கள் என்கிறார்.

பயன் தரும் சொல் ஒன்றும் இல்லையா. பேசாமல் இருந்து விடுவது நல்லது.

சொல்லுக்குள் வலிமையை ஏற்ற வேண்டும்.

ஒவ்வொரு சொல்லையும் தேர்ந்து எடுத்து பேச வேண்டும்.

எப்படி பயனில் சொற்களை தவிர்ப்பது என்று வள்ளுவர் பாடம் நடத்துகிறார்.

கேட்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_18.html

No comments:

Post a Comment