Sunday, August 25, 2019

கம்ப இராமாயணம் - இராமாயணம் காட்டும் நெறி

கம்ப இராமாயணம் - இராமாயணம் காட்டும் நெறி 


இராமனுக்கும் இராவணனுக்கும் இடையே உள்ள முக்கிய வேற்றுமை என்று கம்பன் காட்டுவதை முன்னர் சிந்தித்தோம்.

இராமன் , ஏக பத்தினி விரதன்.

இராவணன், பிறன் மனைவிக்கு ஆசைப் பட்டான் என்று பார்த்தோம்.

அது மட்டும் அல்ல, இன்னும் ஒரு முக்கிய வேற்றுமையை கம்பன் காட்டுகிறான்.

இராமன், தன் மேல் அன்பு கொண்ட அனைவரையும் அனைத்துக் கொண்டு அவர்களை தம்பிகளாக, உடன் பிறப்புகளாக, சொந்தமாக கொண்டாடினான்.

இராவணனோ, உடன் பிறப்பையே எதிரியாக எண்ணினான்.

சேர்த்துக் கொள்வது இராமனின் குணம்.

பிரித்துக் கொள்வது இராவணனின் குணம்.

குகன் சொல்கிறான், "நானும் உன்னுடன் கானகம் வருகிறேன். என்னையும் கூட்டிக் கொண்டு போ" என்று.

அப்போது இராமன் சொல்லுவான்,


"துன்பம் இருந்தால் தானே இன்பம் இருக்கும். உறவு எப்போது இனிமையாக இருக்கும் என்றால் அதன் நடுவில் சிறு சிறு பிரிவு இருக்க வேண்டும். முன்பு நாங்கள் அண்ணன் தம்பிகள் நால்வர் இருந்தோம். இன்று உன்னோடு ஐந்து பேர் ஆகி விட்டோம்" என்கிறான்.



‘துன்பு உளது எனின் அன்றே
    சுகம் உளது; அது அன்றிப்
‘பின்பு உளது இடை மன்னும்
    பிரிவு உளது ‘என உன்னேல்;
முன்பு உளெம் ஒரு நால்வேம்,
    முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர்
    ஐவர்கள் உளர் ஆனோம். ‘

முன்ன பின்ன தெரியாத, பண்பாடு அதிகம் அறியாத, ஒரு கடைக் கோடியில் இருக்கும் குகனை தம்பி என்று ஏற்றுக் கொள்ள எவ்வளவு பெரிய மனம் வேண்டும்.

சரி, ஏதோ வாய் வார்த்தையாக சொன்னான் என்று இல்லை.

இந்த சீதை, உன்னுடைய உறவினள் என்று மனைவியை முன்னிறுத்திக் கூறுகிறான்.

பின்பு வீடணனுக்கு அடைக்கலம் கொடுத்து அவனுக்கு முடிசூட்டிய பின் இராமன் கூறுவான்

"குகனோடு நாங்கள் அண்ணன் தம்பிகள் ஐந்து பேராக ஆனோம். பின் குன்று சூழும் இடத்தில் உள்ள சுக்ரீவனோடு அறுவர் ஆனோம். அகத்தில் அன்பு கொண்ட உன்னோடு எழுவர் ஆனோம்...என்னை காட்டுக்கு அனுப்பியதன் மூலம் உன் தந்தை பெருமை கொண்டான்"



குகனொடும் ஐவர் ஆனேம்
    முன்பு; பின், குன்று சூழ்வான்
மகனொடும், அறுவர் ஆனேம்;
    எம் உழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
    நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகலருங் கானம் தந்து,
    புதல்வரால் பொலிந்தான் நுந்தை.

ஒரு வேடன் , ஒரு குரங்கு அரசன், ஒரு அரக்கன் என்று எல்லோரையும் தம்பியாக ஏற்றுக் கொண்டான் இராமன். ஒரு பாகுபாடு இல்லை.

ஆனால், இராவணனோ, உடன் பிறந்த தம்பிகளையே சொந்த சுகத்துக்காக விரட்டி விட்டான்

சீதையை விட்டு விடு என்று வீடணன் எவ்வளவோ அறவுரை கூறினான். இராவணன் மண்டையில் ஒன்றும் ஏறவில்லை. கடைசியில் பல சுடு சொற்கள் கூறி, வீடணனை "உடனே இங்கிருந்து போய் விடு" என்று விரட்டி விடுகிறான்.

"என் கண் முன்னே நிற்காதே . உடனே போய் விடு" என்று உடன் பிறந்த தம்பியை விரட்டினான்.

‘பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை;
ஒழி சில புகலுதல் : ஒல்லை நீங்குதி;
விழி எதிர் நிற்றியேல் விளிதி “ என்றனன்
அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்.


கும்பகர்ணனையும் அப்படியே சுடு சொல் கூறினான். ஆனால், கும்பன் போக வில்லை.

எல்லோரையும் சேர்த்து அணைத்துக் கொள்வது, உறவு பாராட்டுவது, நட்பாகக் கூட இல்லை, குடும்பத்தில் ஒருவராக அன்யோன்யம் பாராட்டுவது இராமன் காட்டும் வழி.

என் இன்பம், என் சுகம், அது தான்  முக்கியம்.  அதற்கு யார் ஒத்து வரவில்லையோ, அது தம்பியாக இருந்தால் கூட அவர்களை விலக்கி விடுவது இராவணன் காட்டிய வழி.

எது நம் வழி என்று நாம் தீர்மானித்துக் கொள்ளலாம்.


மேலும் சிந்திக்க இருக்கிறோம்.

(rethin@hotmail.com)

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_25.html



1 comment:

  1. மிக அருமையான கருத்து.

    ReplyDelete