Saturday, August 31, 2019

கம்ப இராமாயணம் - மங்கையர் மனநிலை உணர வல்லரோ?

கம்ப இராமாயணம் - மங்கையர் மனநிலை உணர வல்லரோ?


என் மனைவிக்கு என்னதான் வேணும்னு தெரியல. எதைச் செய்தாலும், சொன்னாலும் திருப்தி அடைய மாட்டேங்கிறா...சரி என்னதான் வேணும்னு கேட்டா அதுவும் சொல்ல மாட்டேங்குறா...என்ன பண்றதுன்னே தெரியல என்று மண்டைய பிய்த்துக் கொள்ளாத கணவன்மார்கள் கிடையாது.

ஆண்கள், பெண்ணின் மனதை புரிந்து கொள்வது கடினம்.

என்னைக் கேட்டால் அவர்களுக்கே அவர்கள் மனம் என்ன என்று தெரியுமா என்பதே சந்தேகம் என்பேன்.

தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்தால்தானே மற்றவர்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல முடியும்.

நம்மை விடுங்கள். சாதாரண மனிதர்கள்.

அசோகவனத்தில் இருந்து வந்த சீதையை , இராமன் இன்னதுதான் பேசுவது என்ற வரைமுறை இல்லாமல் எல்லோர் முன்னிலையிலும் பேசி விடுகிறான்.

அப்போது சீதை நினைக்கிறாள்,

"பிரம்மா , விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும், உள்ளங்கையில் உள்ள நெல்லிக் கனி போல் அனைத்தையும் பார்த்தாலும், பெண்ணின் மன நிலையை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்கள் "

என்று நொந்து கொள்கிறாள்.

இது தீக்குளிக்குமுன் அவள் நினைத்தது.....

பாடல்


‘பங்கயத்து ஒருவனும்,
    விடையின் பாகனும்,
சங்குகைத் தாங்கிய
    தரும மூர்த்தியும்
அங்கையின் நெல்லிபோல்
    அனைத்தும் நோக்கினும்,
மங்கையர் மனநிலை
    உணர வல்லரோ?


பொருள் 

‘பங்கயத்து ஒருவனும், = தாமரை மலரில் இருப்பவனும் (பிரம்மா )

விடையின் பாகனும், = எருதின் பாகனும் (சிவனும்)

சங்குகைத் தாங்கிய = சங்கை கையில் ஏந்திய

தரும மூர்த்தியும் = தர்ம மூர்த்தியான திருமாலும்

அங்கையின் =உள்ளங்கையில்

நெல்லிபோல்  = நெல்லிக்கனி போல்

அனைத்தும் நோக்கினும், = அனைத்தையும் பார்த்தாலும்

மங்கையர் மனநிலை = ஒரு பெண்ணின் மனதை

உணர வல்லரோ? = அறியும் ஆற்றல் படைத்தவர்களா ? (இல்லை)

என் மனம் என்ன என்று இராமானுக்குத் தெரியவில்லையே. அவனைத் தவிர வேறு ஒருவரை நான்  நினைத்துக் கூட பார்ப்பேன் என்று அவன் எப்படி நினைக்கலாம் ?

என்று நினைத்து வருந்துகிறாள்.

முமூர்த்திகளுக்கே பெண்ணின் மனம் புரியாதென்றால் நாம் எம்மாத்திரம்.

பெண்ணின் மனதை அறிந்து கொள்ள முயல்வது என்பது மும்மூர்த்திகளை விட நமக்கு  ஆற்றல் அதிகம் என்ற நினைப்பால்.

எனவே, அந்த முயற்சியை சாதாரண மானிடர்கள் கைவிடுவது நலம் என்பது கம்பன் காட்டும்  பாடம்.

அது ஒரு புறம் இருக்க, இவ்வளவு தீவிரமாக யோசித்தவள், தீக்குளித்த பின்  ஏதாவது  சொன்னாளா?

"பார்த்தாயா இராமா, என்னைப் போய் சந்தேகப் பட்டாயே ..." என்று ஒரு சில வாக்கியங்களாவது  பேசி இருக்க வேண்டும் தானே ?

"நீ காட்டுக்கு வர வேண்டாம்" என்று இராமன் சொன்ன போது ,

"நின் பிரிவினும் சுடுமோ அந்த வெங்கானகம் " என்று இராமனை எதிர்த்து பேசியவன் சீதை.

அதுக்கே அப்படி பேசினாள் என்றாள், இவ்வளவு பெரிய விஷயத்துக்கு சும்மாவா இருந்திருப்பாள்?

என்ன பேசி இருப்பாள்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_31.html



1 comment:

  1. அதற்கான விளக்கத்தை அடுத்த பதிவில் பார்க்க விரைகிறேன்.

    ReplyDelete