Sunday, August 25, 2019

திருவாசகம் - புறம் புறம் திரிந்த செல்வமே

திருவாசகம் - புறம் புறம் திரிந்த செல்வமே 


தேவாரம், திருவாசகம், பிரபந்தம், குறள் , கம்ப இராமாயணம் போன்ற நூல்களை படிக்கும் போது அவ்வளவு இனிமையாக இருக்கிறது. அதன் கருத்தாழம் பிரமிக்க வைக்கிறது.

படித்ததை, இரசித்ததை பகிர்ந்து கொள்வோமே என்று நானும் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்.

சில சமயம் பயமாகக் கூட இருக்கிறது.

பாடல்களின் ஆழம், நினைக்க நினைக்க போய் கொண்டே இருக்கிறது. ஏதோ சிறு பிள்ளையின் கிறுக்கல்கள் போல நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

பாடல்களின் கருத்தாழம் காணும் போது, ஒரு நடுக்கம் வருகிறது.  நாம் பேசாமல் இருப்பதே நலம் என்று தோன்றுகிறது.

எவ்வளவோ யோசித்து, அனுபவித்து, நாலு வரியில் எழுதி வைத்துவிட்டுப் போய் விட்டார்கள். அவர்கள் என்ன நினைத்து எழுதினார்கள் என்று தெரிந்து கொள்ள, அந்த அளவு அறிவும், ஞானமும் வேண்டும் என்றே நினைக்கிறேன்.

"பால் நினைந்து ஊட்டும்" என்ற திருவாசகத்தில், அந்த முதல் வரியிலேயே நின்று போய் இருக்கிறேன். அடடா, என்ன ஒரு வரி. குழந்தைக்கு பசிக்குமே என்று அது அழுவதற்கு முன் "நினைந்து" ஊட்டும் கருணையை எண்ணி வியந்திருக்கிறேன்.

அதை எப்படி மணிவாசகர் உணர்ந்து எழுதினார் என்று உருகி இருக்கிறேன்.

பின்னால் ஒரு வரி வருகிறது.

"புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!"

என்று.


பாடல்

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!

விளக்கம்

சிவன் ஏன் புறம் புறம் என்று திரிந்து கொண்டிருக்கிறான்?  அவனுக்கு ஒரு வேலை இல்லையா ?

அவன் திரிய வேண்டிய காரணம் என்ன? அவன் நினைத்தால் அவனுக்கு வேண்டியது அவன் இருக்கும் இடத்துக்கு வந்து சேராதா ?

பின் ஏன் திரிய வேண்டும்?

அப்படி திரியும் சிவனை, மணிவாசகர் கொஞ்சுகிறார்.....

"செல்வமே, சிவ பெருமானே" என்று.

அப்படி திரிந்த சிவனை, மணிவாசகர் தொடர்ந்து சென்று சிக் என்று பிடித்துக் கொண்டாராம்.  "இனி மேல் எங்க போவாய்" என்று சிவனை கேட்கிறார்.

இதற்கு என்ன அர்த்தம்?

யோசித்துப் பார்க்கிறேன்.

உயிர்கள், இறைவனை தேடி அலைகின்றன. அவன் இங்கு இருப்பானா, அங்கு இருப்பானா  என்று அலைகின்றன.

அவன் இருக்கும் இடத்தை விட்டு விட்டு எங்கெங்கோ அலைகின்றன.

சிவன், அந்த உயிர்களின் பின்னால் போகிறனான். "நான் இங்கே இருக்கிறேன், இங்கே இருக்கிறேன், என்னை பிடித்துக் கொள் " என்று ஒவ்வொரு   உயிரின் பின்னும் அவன் அலைகின்றான் .

வீட்டில், சின்ன குழந்தை கண்ணா மூச்சி ஆடும். "நீ ஒளிஞ்சுக்கோ, நான் கண்டு பிடிக்கிறேன் " என்று பத்து வரை எண்ணி விட்டு, அப்பாவை தேடும்.

அங்கும் இங்கும் பிள்ளை தேடும்.

ஐயோ, பிள்ளை அங்கே போகிறானே. அது மேலே ஏறி, கீழே விழுந்து விட்டால்  என்ன செய்வது என்று அப்பா மறைந்து நின்றாலும் தவிப்பார். பிள்ளை எங்கெல்லாம் போகிறதோ,  அங்கெல்லாம் அவரும் பின்னாலேயே போவார். பிள்ளைக்குத் தெரியாமல்.  பிள்ளை விழுந்து விடும் என்று தெரிந்தால், ஓடி வந்து தாங்கிக் கொள்வார்.

அது போல, ஒவ்வொரு உயிரும் ஆண்டவனை தேடி அலைகின்றன.  ஆண்டவன்   உயிர்களைத் தேடி அழைக்கின்றான்.

பிள்ளை கலைத்துப் போகும் போது , அப்பா தன்னை வெளிக் காட்டுவார். பிள்ளை ஓடி வந்து அப்பாவின் காலை கட்டிக் கொள்ளும்.  "நீ அவுட்டு..இப்ப நீ என்னை  கண்டு பிடி" என்று சந்தோஷமாக விளையாட்டைத் தொடரும் அல்லவா.

அது போல, மணிவாசகரும், ஓடி வந்து இறைவனை கட்டிக் கொண்டார். "இனி உன்னை விடமாட்டேன்...இனி மேல் நீ என்னை விட்டு ஒளிந்து கொள்ள முடியாது".

"எங்கு எழுந்து அருள்வது இனியே ?"  என்று கூறுகிறார்.

இதுதான் அர்த்தம் என்று நான் நினைக்கிறேன்.

தவறாகவும் இருக்கலாம்.

தமிழ் பக்தி பாடல்கள் பற்றி பேச/எழுத ஒன்று தமிழ் அறிவு இருக்க வேண்டும், இல்லை பக்தியாவது இருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் எழுதினால்  இப்படித்தான் எதையாவது எழுத வேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன்.

பிழையிருப்பின் , பொறுக்க.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_57.html

3 comments:

  1. Your interpretation presents a visualization to the song and can feel your ecstasy! Thank you for sharing!

    ReplyDelete
  2. கண்களில் நீர் வரவழைத்து விட்டது இந்தப் பாதிப்பு! அருமையிலும் அருமை.

    ReplyDelete
  3. உள்ளம் உருகுதையா இந்த விளக்கம் படிக்க படிக்க!👌புறம் புறம் திரியும் பெம்மானே இவரிடம் ஒருக்கால் இந்த விளக்கம் பகிர்ந்து கொண்டாரோ!!

    ReplyDelete