Tuesday, August 6, 2019

சகலகலாவல்லி மாலை - பாடும் பணியில் பணித்தருள்வாய்

சகலகலாவல்லி மாலை - பாடும் பணியில் பணித்தருள்வாய் 


கொஞ்சம் ஆசை உள்ளவர்கள், இறைவனிடம், காசு பணம் கேட்பார்கள், வீடு வாசல், நகை, நட்டு, பிள்ளைக்கு வேலை, பெண்ணுக்கு வரன், உடல் நலம் என்று கேட்பார்கள்.

பேராசை கொண்டவர்கள், பெரிதாக கேட்பார்கள், சுவர்க்கம், இறைவன் திருவடி, வைகுண்டம், கைலாயம், மறு பிறப்பு இன்மை என்று பெரிதாக கேட்பார்கள்.

எல்லாம் ஆசைதானே. எதையாவது வேண்டும் என்று கேட்பது. கேட்கும் பொருள் தான் மாறுகிறதே தவிர, கேட்பது என்பது அப்படியே இருக்கிறது.

இதில் சுவர்க்கம் கேட்பவர்கள், பணம் மற்றும் புகழ் போன்றவற்றை கேட்பவர்களை பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள். என்ன, கடவுள் கிட்ட போய் இந்த மாதிரி அற்ப பொருள்களை கேட்கிறாயே என்று.

அஞ்சு பத்துனு கேட்காதே, ஆயிரம் இரண்டாயிரம்னு கேளு என்று ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனுக்கு சொல்லித் தருகிறான்.  பெரிய பிச்சைகாரன், சின்ன பிச்சைக்காரன்.

இதுதானே நடக்கிறது.

ஞானிகள் தங்களுக்கு என்று எதையும் கேட்பது இல்லை.

குமர குருபரர், தனக்கு என்று வேண்டும் என்று ஒன்றும் கேட்கவில்லை. அப்படி ஒரு வேண்டுதல்.

எனக்கு நல்ல வேலை செய்ய அருள் செய் என்று வேண்டுகிறார். சம்பளம் தா, பதவி உயர்வு தா, என்றெல்லாம்  கேட்கவில்லை.

நல்ல வேலை செய்ய அருள் செய் என்று வேண்டுகிறார்.

எனக்கு பாட்டு எழுத வரும். எனவே, நிறைய நல்ல பாட்டுக்கள் எழுத அருள் செய் என்று வேண்டுகிறார். பாட்டின் மூலம் எனக்கு நிறைய பொன் கிடைக்க வேண்டும், ஆஸ்கார் விருது வேண்டும் என்றெல்லாம் கேட்கவில்லை.

மக்களுக்கு நல்ல பாட்டை தர அருள் புரிவாய் ...


பாடல்

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் 
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் 
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் 
காடுஞ் சுமக்குங் கரும்பே சகலகலாவல்லியே. 

பொருள் 

நாடும் = அனைவரும் விரும்பும்

பொருட்சுவை  = பொருள் சுவை

சொற்சுவை = சொல் சுவை

தோய்தர = தோய்த்துத் தர

நாற்கவியும் = நான்கு விதமான கவிதைகளும்

பாடும் = பாடுகின்ற

பணியிற் = வேலையில்

பணித்தருள் வாய் = என்னை பணித்து அருள் செய்வாய்

பங்க யாசனத்திற் = தாமரை மலராகிய ஆசனத்தில்

கூடும் = சேர்ந்து இருக்கும்

பசும்பொற் கொடியே = பசுமையான பொற் கொடி போன்றவளே

கனதனக் குன்று = தங்க மலை போன்ற மார்பும்

மைம்பாற் = ஐம்பால், ஐந்து விதமாக வகிடு எடுத்து செய்யும்

காடுஞ் = காடு போல் அடர்ந்த கூந்தலை

சுமக்குங் = சுமக்கும்

கரும்பே = கரும்பு போல தித்திப்பவளே

சகலகலாவல்லியே.  = அனைத்து கலைகளிலும் வல்லவளே

அறிஞர்கள் பிறருக்கு தங்கள் திறமையை கொடுக்கவே வரம் கேட்பார்கள்.

"ஆடும் மயில் வேல் அணி சேவல் என 
பாடும் பணியே பணியாய் அருள்வாய் 
தேடும் கய மா முகனை செருவில் 
சாடும் தனி யானைச் சகோதரனே "

என்பார் அருணகிரிநாதர்.

பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்பது அவர் வேண்டுதல்.

அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் 
இன்ப நிலை தானே எய்திடும் பராபரமே 

என்பார் தாயுமானவ சுவாமிகள்

அடுத்த முறை வேண்டும் போது , அது வேண்டும், இது வேண்டும் என்று வேண்டாமல் , எதை சிறப்பாக மற்றவர்களுக்கு செய்யலாம் என்று சிந்தித்து அதைக் கேட்டால் என்ன ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_6.html

1 comment:

  1. இந்த மாதிரி கேட்க தோன்றுவதில்லையே.இப் பாடலை படித்தவுடன் தான் சற்று ஞானோதயம் உண்டாகிறது!

    ReplyDelete