Sunday, May 30, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 9

       

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 9



பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/9.html


(pl click the above link to continue reading)


சுவை = சுவை 


ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 


( இதன் முந்தைய பகுதிகளை கீழே காணலாம்)


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html






)

ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம். 


இதுவரை 


1. மூலப் பிரகிருதியும் அதில் இருந்து பிறந்த பிரகிருதி 

2.  மான் அல்லது மஹத் 

3. அகங்காரம் 

4. மனம் 

5,6,7,8,9 - ஐந்து ஞானேந்திரியங்கள் 

10 - கை 

11 - கால் 

12 - பாயு (மல ஜலம் வெளியேற்றும் உறுப்புகள்) 

13 - வாக்கு 

14 - பிறப்பு உறுப்புகள் 


வரை சிந்தித்தோம். 


ஞானேந்திரியங்களும், கண்மேந்திரியங்களும் தோன்றி விட்டன. 


இனி அடுத்து வருவது தன் மாத்திரைகள். 


தன் மாத்திரைகள் என்றால் உணர்வு கூறு அல்லது உணர்வின் அடிப்படை என்று கொள்ளலாம். 


முதலில் அவை என்ன என்று பார்த்து விடுவோம். பின் அவை எப்படி மற்றவற்றோடு சேர்கிறது என்று பார்ப்போம். 


சுவை, ஒளி, ஊறு , ஓசை, நாற்றம் (மணம் முகர்தல்) என்ற இந்த ஐந்தும் தன் மாத்திரைகள் என்று அழைக்கப் படுகின்றன


இவை நாம் அறிந்தது தான்.


ஆனால், நாம் அறியாத ஒன்றை சாங்கிய தத்துவம் கூறுகிறது. 


இந்த தன் மாத்திரைகளில் இருந்து தான் பஞ்ச பூதங்கள் தோன்றின என்று. 


நாக்கு சுவையை அறிகிறது. 

கண் காண்கிறது 

செவி கேட்கிறது.


இதற்கும், பஞ்ச பூதங்களுக்கும் என்ன தொடர்பு?


நாக்கு சுவையை அறிகிறது அல்லவா? அப்படி நாக்கு சுவையை அறிய நீர் வேண்டும். நீர் இல்லாவிட்டால் நாக்கு சுவையை அறிய முடியாது. நாக்கு வறண்டு போய் விட்டால், சுவை தெரியாது.  நாக்கு எப்போதும் ஈரப் பதமாகவே இருக்கும்.  நீண்ட நேரம் வெயிலில் அலைந்து திரிந்து, நீர் குடிக்காமல் இருந்தால், நா வறண்டு விடும். அந்த நேரம் உணவு உண்டால் சுவை தெரியாது. உமிழ் நீரில் உணவு கரைந்தால்தான் சுவை தெரியும். 


எனவே, நாக்கு, சுவை, நீர் இவை தொடர்பு பட்டன என்று தெரிகிறது. 



மூக்கு, முகர்ந்து பார்க்கிறது. வாசனை என்பது நிலத்தோடு தொடர்பு பட்டது.  மண் வாசனை என்று சொல்கிறோம் அல்லவா. நீரில் வாசனை இல்லை. தீயில் வாசனை இல்லை. வெளியில் வாசனை இல்லை. மண்ணில் இருந்து தான் வாசனை பிறக்கிறது.  எனவே மூக்கு, வாசனை, மண் இவை தொடர்பு பட்டன என்று தெரிகிறது. 




கண் காண்கிறது. கண் காண வேண்டும் என்றால் பழுதுபடாத கண், அந்த கண் இயங்கும் உடல், அது இயங்க உணவு, பிராண வாயு எல்லாம் இருந்தாலும் போதாது. ஒளி வேண்டும். நல்ல இருட்டில் ஒரு புத்தகத்தை வாசிக்க முடியுமா?  ஒளி வேண்டும் என்றால் நெருப்பு வேண்டும். எங்கே ஒளி இருக்கிறதோ, அங்கே நெருப்பு அல்லது சூடு இருக்கும். ஒளி தரும் பல்பை தொட்டுப் பாருங்கள். சூடாக இருக்கும்.  எனவே, கண், காணுதல், ஒளி, நெருப்பு என்று இவை தொடர்பு பட்டன என்று தெரிகிறது. 


காது கேட்கிறது. கேட்க வேண்டும் என்றால் காதுக்கும், ஒலி எழுப்பும் இடத்துக்கும் இடையே இடைவெளி வேண்டும். அந்த இடைப்பட்ட இடத்தில் காற்று நிரம்பி இருக்க வேண்டும். ஆகாயம் என்றால் வெளி. இடை வெளி. இரண்டு பொருளுக்கு இடையே உள்ள இடம் தான் வெளி அல்லது ஆகாயம் என்று அழைக்கப் படுகிறது. ஆகாயம் என்றால் மேலே பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நான்கு சுவர்களுக்குள் உள்ள இடம் ஒரு ஆகாயம். குடத்துக்குள் உள்ள இடம் ஆகாயம். எனவே , கேட்டல், காது, ஆகாயம் என்று இவை தொடர்பு பட்டன என்று தெரிகிறது. 


அதே போல் தோல்  தொடு உணர்ச்சியைத் தருகிறது. தோல் எப்போதும் காற்றோடு தொடர்பு கொண்டு உள்ளது.  புழுக்கமாக இருந்தாலும், ரொம்ப குளிர்ந்தாலும் நாம் உடலை மூடிக் கொள்கிறோம் அல்லது மின் விசிறியை சுழல விடுகிறோம். ரொம்ப குளிர்கிறது என்று யாரும் கண்ணை மூடிக் கொள்வது இல்லை. எனவே, தோல், தொடு உணர்ச்சி (ஊறு ), காற்று என்ற பஞ்ச பூதம் இவை ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டன என்று புரிகிறது. 


சாங்கியம் ஒரு படி மேலே போகிறது. 


இந்த பஞ்ச பூதங்கள், அந்த ஐந்து தன் மாத்திரைகளோடு தொடர்பு பட்டது என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 


ஆனால், இந்த தன் மாத்திரையில் இருந்து தான் அந்த பூதங்கள் தோன்றின என்கிறார்கள். 


அது எனக்கு விளங்கவில்லை. பல புத்தகங்கள் வாசித்து விட்டேன், சில பெரியவர்கள் சொல்வதையும் கேட்டேன். பிடிபடவில்லை என்பதே உண்மை. 


ஐந்தறிவான் கட்டே தங்கும் உலகு 


என்கிறார் வள்ளுவர். எனக்கு புரியவில்லை. எனவே, என்னிடம் உலகம் தங்காது என்று புரிகிறது. புரிந்து கொள்ள இன்னும் நேரம் வரவில்லை போலும்.  எனக்குப் புரியவில்லை என்பதால் அது தவறு என்று சொல்ல மாட்டேன். அல்லது புரிந்து போல் காட்டிக் கொள்ளவும் மாட்டேன். புரியவில்லை. முயற்சி தொடர்கிறது. வாசிப்பவர்களுக்கு ஆர்வம் இருப்பின், மேலும்  தொடர்ந்து சென்று அறிவார்களாக. 


15 சுவை 

16 ஒளி 

17 ஊறு 

18 ஓசை 

19 நாற்றம் 


என்ற ஐந்து தன் மாத்திரைகளைச் சேர்த்து மொத்தம் இதுவரை  19 தத்துவங்கள் ஆகிவிட்டது. 


இன்னும் ஆறு தத்துவங்கள் இருக்கின்றன. 


அடுத்த ப்ளாகில் அவற்றை சிந்திப்போம். அதோடு இந்த 25 தத்துவங்களும் பூர்த்தி அடையும். (அப்பாட, ஒரு வழியாக முடியப் போகிறது என்று தோன்றுகிறதோ?)


இன்னும் ஒரே ஒரு ப்ளாகு தான். பல்லைக் கடித்துக் கொண்டு அதையும் வாசித்து விடுங்கள். மனதின் ஓரத்தில் ஒரு பொறியாய்  கிடக்கட்டும். யாருக்குத் தெரியும்? அது என்று பற்றி பெரு நெருப்பாய் விளைந்து பயன் செய்யும் என்று. 





No comments:

Post a Comment