Saturday, March 4, 2023

கந்தரனுபூதி - வள்ளிபதம் பணியும்

                       

 கந்தரனுபூதி -  வள்ளிபதம் பணியும் 




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


பிள்ளைகளை படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்து விடுகிறோம். அல்லது அவர்களே திருமணம் செய்து கொண்டு வாழ்வைத் தொடங்கி விடுகிறார்கள். 


இனி, நம் கடமை விட்டது, நமக்கும் அவர்களுக்கும் ஒரு பந்தமும் இல்லை. அவர்கள் குடும்பம், அவர்கள் வாழ்க்கை என்று ஒதுங்கி இருக்க முடியுமா?  


ஒவ்வொரு நாளும் அவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்கள் துணை நன்றாக இருக்கிறார்களா, பேரப் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்று நாம் அவர்கள் மேல் அக்கறையோடு இருப்போம் அல்லவா?  அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் ஓடோடிப் போவோம். முடியாவிட்டால், தினமும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசுவோம், நமக்குத் தெரிந்த கடவுள்களுக்கு எல்லாம் மனுப் போடுவோம், விரதம் இருப்போம் அல்லவா?


சாதாரண மனிதர்களான நாமே இப்படி என்றால், இறைவன் நம் மீது (அவனுடைய பிள்ளைகள்)  எவ்வளவு அக்கறையோடு இருப்பான்?  நம்மால் முடிந்ததை நாம் நம் பிள்ளைகளுக்குச் செய்கிறோம்.  அதே போல் ஆண்டவனும் அவனால் முடிந்ததை அவன் பிள்ளைகளுக்குச் செய்வான்தானே?  


அவனால் முடியாதது என்ன? 


பக்தர்களுக்கு உதவ அவன் எப்போதும் காத்துக் கிடக்கிறான் என்ற இந்த செய்தி நம் பக்தி இலக்கியங்களில் எங்கும் பரவிக் கிடக்கிறது. 


ஆதி மூலமே என்று கூவிய யானையில் இருந்து பெரிய பெரிய ஞானிகள் வரை எல்லோருக்கும் ஓடி வந்து உதவி இருக்கிறான் என்கிறது நம் இலக்கியம். 


அருணகிரிநாதர் சொல்கிறார் 


வள்ளி ஒரு வேடுவர் குலப் பெண்.  அவளுக்கு அருள் செய்ய ஓடி வந்து, அவளைத் திருமணம் செய்து கொண்டு, "எனக்காக நீ எவ்வளவு தவம் செய்தாய்? இந்த காடு மேடெல்லாம் அலைந்து திருந்தாய். பாவம் நீ. இந்த பாதம் எவ்வளவு துன்பப் பட்டிருக்கும்" என்று அவள் பாதத்தை பிடித்து அவளுக்கு பணிவிடை செய்வானாம். அப்படிப்பட்ட முருகனை நான் அடைய தவம் செய்தது ஆச்சரியம் என்கிறார். 


பாடல் 


காளைக்குமரேசன் எனக் கருதித் 

தாளைப்பணியத் தவம் எய்தியவா 

பாளைக்குழல் வள்ளிபதம் பணியும் 

வேளைச்சுர பூபதி மேருவையே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_4.html


(pl click the above link to continue reading)


காளைக் = காளை போல உறுதியும், பலமும் கொண்ட 


குமரேசன் = குமரேசன் 


எனக் கருதித் = என்று நினைத்து 


தாளைப் = திருவடிகளை 


பணியத்  = தொழ 


தவம் எய்தியவா  = தவம் செய்யும் பேறு பெற்றது எங்கனம் ?


பாளைக் = பனை மட்டை போல் அடர்ந்த 


குழல் = குழலை உடைய 


வள்ளி = வள்ளியின் 



பதம் பணியும்  = திருவடிகளைப் பணியும், அல்லது பணிவிடை செய்யும் 


வேளை = வேளைக்காரன் என்றால் படைத் தளபதி 


சுரபூபதி  = தேவர்களின் தலைவன் 


மேருவையே  = மேரு மலை போல உயர்ந்தவன் 


வள்ளியை முருகன் வந்து ஆட்கொண்டான். அது போல நம்மையும் ஆட்கொள்வான் என்பது கருத்து. அவள் தவம் செய்தாள். ஆண்டவனை அடைந்தாள்.


அது ஒரு செய்தி.


இன்னொரு செய்தி, 


எத்தனை பேர் மனைவிக்கு பணிவிடை செய்வார்கள்?  அவளும் ஒரு உயிர் தானே? அவளுக்கும் உடல் வலி, மன வலி எல்லாம் இருக்கும் தானே? மனைவியின் க் காலை பிடித்துவிட்டு பணிவிடை செய்பவர் எத்தனை பேர்?


மனைவியின் மேல் அன்பு வராவிட்டால், வேறு யார் மேல் அன்பு வரும்? ஆண்டவன் மேல் அன்பு எப்படி வரும்? 


கணவனை நம்பி, வீடு, வாசல், உடன் பிறப்பு, பெற்றோர், குல தெய்வம், தன் பெயரைக் கூட மாற்றிக் கொள்ளும் ஒரு பெண் மேல் அன்பு வராவிட்டால் வேறு எங்கு அன்பு வந்துவிடும். 


அன்பில்லாத இடத்தில் ஆண்டவன் எங்கு வருவான்?   


நான் ஆண், ஒரு பெண்ணுக்கு நான் பணிவிடை செய்வதா என்பது அகங்காரம். மனம் நெகிழ வேண்டும். அன்பில் கரைய வேண்டும். அன்பு என்று வந்து விட்டால், உயர்வு தாழ்வு, ஆண்/பெண் பேதம் எல்லாம் இல்லை. 


முருகனே வள்ளியின் பதம் பணிகிறான் என்றால் மற்றவர் எம்மாத்திரம்? 


சிந்தனைக்கு உரியது. 









 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


 யாமோதிய கல்வியும் பாகம் 2


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


உதியா மரியா


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html


மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html


உபதேசம் உணர்தியவா 


]




Thursday, March 2, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - பாரித்து உரைக்கும் உரை

 

திருக்குறள் - பயனில சொல்லாமை - பாரித்து உரைக்கும் உரை 


(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


பயனற்ற சொற்களை பேசவே கூடாது. ஆனால், சிலர் பேசுவது மட்டும் அல்ல, அதை மிக விரிவாக, விலாவாரியாக விளக்கிக் கொண்டு இருப்பார்கள். 


தொலைக் காட்சியில், whatsapp போன்ற சமூக ஊடகங்களில், கைப் பேசியில், தேவையற்ற, பயனற்ற வார்த்தைகளை மணிக்கணக்கில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.


ஒருவன் பயனற்ற சொற்களை பேசுகிறான் என்றால் அவனைப் பற்றி நமக்கு என்ன எண்ணம் தோன்றும்?  


"சரியான அறுவை, இரம்பம், வந்துட்டான் கழுத்தை அறுக்க, வந்தான் விட ம் மாட்டானே..." என்று பயப்படுவோம் அல்லவா ?


அதே போல,


நாம் பயனற்ற சொற்களை பேசும் போது மற்றவர்களும் நம்மைப் பற்றி அப்படித்தானே நினைப்பார்கள். 


பேசும் முன் யோசிக்க வேண்டும். நான் இப்போது பேசப் போவதால் யாருக்கு என்ன பயன் என்று. 


"அவன் கிட்ட கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தால் ஏதாவது நாலு நல்ல விடயம் கிடைக்கும்" என்று மக்கள் நினைக்கும் படி பேச வேண்டும். 


இல்லாவிட்டால் மற்றவர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள். நாம் வேண்டுமானால் மனதுக்குள் நினைத்துக் கொள்ளலாம், நாம் பெரிய ஆள் என்றும், நாம் சொல்வதை கேட்க நாலு பேர் இருக்கிறார்கள் என்றும். 


யோசிக்க வேண்டும். உணமையிலேயே நாம் பேசியதால் (எழுதியதால்) யாருக்காவது ஏதாவது பலன் இருக்கிறதா என்று. 


பாடல் 


நயனிலன் என்பது சொல்லும் பயனில

பாரித்து உரைக்கும் உரை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


(please click the above link to continue reading)


நயனிலன்  = ஒருவன் நல்லவன் இல்லை  


என்பது = என்பதை 


சொல்லும்  = காட்டிக்  கொடுக்கும் 


பயனில = பயன் அற்ற சொற்களை 


பாரித்து = விரிவாக 


உரைக்கும் உரை = பேசும் பேச்சு 


நயனில என்பதற்கு பரிமேலழகர் "நீதி இல்லாதவன்"  என்று பொருள் கூறுகிறார். 


மற்றவர்கள் நேரத்தை வீணடிக்கிறோம். அது ஒரு நீதியற்ற செயல் என்ற பொருளில் இருக்கலாம். 



ஒரு சில சமயம் பயனற்ற சொற்களையும் பேச வேண்டி இருக்கும். அது இல்லறத்தில் தவிர்க்க முடியாது. 


முடிந்தவரை அதை தவிர்க்க வேண்டும். வேறு வழி இல்லை என்றால் சுருக்கமாக பேச வேண்டும். நீட்டி முழக்கிக் கொண்டு இருக்கக் கூடாது. 


"அப்புறம்...வேற என்ன விசேஷம்...சொல்லுங்க ..." என்று தேவையில்லாமல் பேச்சை வளர்த்துக் கொண்டே போகக் கூடாது. 


அரட்டை அடிக்கும் நேரத்தை குறைத்தால், அந்த நேரத்தை வேறு பயனுள்ள வழிகளில் செலவழிக்கலாம். நாம் மட்டும் அல்ல, நம் பேச்சை கேட்பவர்களும் அவர்கள் நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட முடியும். 





(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html



Wednesday, March 1, 2023

திருப்பாட்டு - உன்னை விட்டால் வேற ஆள் இல்லையா?

 திருப்பாட்டு - உன்னை விட்டால் வேற ஆள் இல்லையா?


சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய பாடல்களை திருப்பாட்டு என்று கூறுவர். பொதுவாக நால்வர் பாடிய பாடல்களை தேவாரம் என்று கூறினாலும், மணிவாசகர் பாடியது திருவாசகம் என்றும், அப்பர் பாடியது தேவாரம் என்றும், சுந்தர மூர்த்தி நாயனார் பாடியது திருப்பாட்டு என்றும், திருஞான சம்பந்தர் அருளியது திருக்கடைக் காப்பு என்றும் அழைக்கப்படும். 


ஒரு முறை சுந்தரர் பாச்சிலாச்சிராமம் என்ற திருத் தலத்துக்குச் சென்றிருந்தார். அங்குள்ள சிவனடியார்களுக்கு உதவி செய்யும் பொருட்டு சிவனிடம் பொருள் வேண்டினார். சிவன், அவருடன் விளையாட நினைத்து பொருள் தர தாமதித்தார். 


சுந்தரருக்கு கோபம் வந்து விட்டது. 


"உன்னை விட்டால் வேற ஆள் இல்லையா" என்ற கோபம் தொனிக்கும் படி ஒரு பதிகம் பாடி அருளினார். இறைவன் பொற் கிழி கொடுத்தான் என்பது புராணக் கதை. 


"உனக்கே என் தலையும், நாவும், மனமும் வைத்தேன். உனக்கே அடிமை செய்தேன். அப்படி இருந்தும் நான் கேட்பதைத் தராமல் கையில் பாம்போடு, கோவணத்தை அணிந்து கொண்டு பித்தன் மாதிரி இருந்தால், உன்னை விட்டால் எனக்கு வேறு ஆள் இல்லையா என்ன"



பாடல் 


வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்

    நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி

உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை

    உரைத்தக்கால் உவமனே யொக்கும்

பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு

    பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்

பித்தரே யொத்தோர் நச்சில ராகில்

    இவரலா தில்லையோ பிரானார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post.html


(please click the above link to continue reading)



வைத்தனன் தனக்கே  = அவனுக்கு என்றே வைத்தேன் 


தலையும் = தலையும் 


என் நாவும் = என் நாவையும் 


நெஞ்சமும் = என் மனமும் 


வஞ்சமொன் றின்றி = ஒரு வஞ்சனையும் இல்லாமல் 


உய்த்தனன் தனக்கே = உரிமை பொருள் ஆக்கினேன் 


திருவடிக் கடிமை = அவன் திருவடிக்கே அடிமை செய்தேன் 


உரைத்தக்கால் = இதை நானே சொன்னால் 


 உவமனே யொக்கும் = மக்கள் ஏதோ பெருமைக்கு சொல்கிறேன் என்று நினைப்பார்கள் 


பைத்தபாம்  = படம் விரித்த பாம்பு 


பார்த்தோர் கோவணத் தோடு = பார்க்கும் படி ஒரு கோவணத்தை ஆடையாகக் கொண்டு 


பாச்சிலாச்சிராமத் = பாச்சிலாச்சிராமம் என்ற திருத் தலத்தில் 


தெம் பரமர் = எம் முன்னவார், உயர்ந்தவர், தலைவர் 


பித்தரே யொத்தோர் = சரியான பித்தனைப் போல் இருக்கிறார் 


நச்சில ராகில் = என் மேல் விருப்பம் இல்லாமல் இருந்தால் 


இவரலா தில்லையோ = இவர் அல்லாது இல்லையோ 


பிரானார் = வேறு கடவுள்கள் 


கடவுள் மேல் அத்தனை அன்பு. 


அன்பு உள்ள இடத்தில்தானே கோபிக்க முடியும்?


அது என்ன நான் கேட்டு நீ தராமல் இருப்பது என்ற உரிமை. 


மற்றவர்கள் இறைவனிடம் வேண்டுவார்கள், கெஞ்சுவார்கள், தரமாட்டாயா என்று ஏங்கிக் கிடப்பார்கள். 


சுந்தரர் அப்படி எல்லாம் இல்லை.


ஒரு பிள்ளை எப்படி தன் தாயிடமோ அல்லது தந்தையிடமோ எப்படி உரிமையாகக் கேட்குமோ, ஒரு காதலன் தன் காதலியிடம் எப்படி உரிமையுடன் கேட்பானோ அப்படி கேட்கிறார்.


"நீயும், உன் டிரஸ்ம், சரியான பைத்தியக்காரன் போல இருக்கு. என்னமோ உன்னை விட்டால் வேற ஆளே இல்லைன்னு நினைப்பா"  என்று செல்லமாக கொஞ்சுகிறார். 


இது இந்து மதத்தில் மட்டுமே சாத்தியமான ஒன்று. 


மற்ற மதங்களில் இறைவனைக் கண்டு பக்தர்கள் பயப்படுவார்கள். 


இங்கே, இறைவன் தோள் மேல் கை போட்டுப் பேசலாம். 


அவ்வளவு அன்யோன்யம். 


 



Monday, February 27, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - சொல்லும் செயலும்

திருக்குறள் - பயனில சொல்லாமை - சொல்லும் செயலும் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


சொல்லா? செயலா ? எதற்கு வலிமை அதிகம்?


நம்மைக் கேட்டால் பெரும்பாலானோர் சொல்லுவது செயல் தான் வலிமை மிக்கது என்று. 



உங்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் தர எனக்கு விருப்பம் என்று சொல்லுவதை விட, ஆயிரம் ரூபாய் கொடுக்கும் செயல் உயர்ந்ததுதானே. 


எனக்கு வர்ற கோபத்துக்கு அவனை வெட்டிப் போட்டாலும் பரவாயில்லை என்று சொல்லும்சொல்லை விட, உண்மையாகவே வெட்டிப் போடுவது வலிமை மிக்கது அல்லவா?



நல்லது என்றாலும், கெடுதல் எது என்றாலும் சொல்லை விட செயலே ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. 



ஆனால், சில சமயம் செயலை விட சொல் வலிமை மிக்கதாக இருக்கும் என்கிறார் வள்ளுவர். 




அது எப்போது?


பயனற்ற சொற்களை படித்தவர் முன் சொல்வது, நமக்கு வேண்டியவர்களுக்கு அவர்கள் விரும்பத் தகாத செயல்களை செய்வதை விட மோசமானது என்கிறார். 



பாடல் 



பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல


நட்டார்கண் செய்தலின் தீது



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html



(please click the above link to continue reading)



பயன்இல = பயன் இல்லாத சொற்களை 



பல்லார்முன்  = அறிஞர்கள் முன் 



சொல்லல் = சொல்லுவது 



நயன்இல = நன்மை பயக்காத, விருப்பம் இல்லாத 



நட்டார்கண் = நெருங்கியவர்களுக்கு 



செய்தலின் தீது = செய்வதை விட தீமையானது 



அது ஏன் தீமையானது என்று வள்ளுவரும் சொல்லவில்லை. பரிமேலழகரும் சொல்லவில்லை. 



நாம் தான் சிந்திக்க வேண்டும். 



நமக்கு வேண்டியவர்கள், சொந்த, பந்தம் உள்ளவர்கள் முன் நாம் ஒரு வேண்டாத செயலைச் செய்தால் அவர்கள் முகம் சுளிப்பார்கள். நம்மை பற்றி கீழான அபிப்பிராயம் கொள்வார்கள். நம்மை வெறுப்பார்கள். 



அது ஒரு சின்ன வட்டம். 



ஆனால், கற்று அறிந்த பெரியோர் முன் பயனில சொன்னால், அவர்கள் மட்டும் அல்ல, அந்த சொல்லால் எல்லோரும் இகழத் தலைப்படுவார்கள். 


அது ஒரு பெரிய  வட்டம். 




இரண்டாவது,  சுற்றத்தார் இகழ்வது அந்த நேரத்தில் நடக்கும், அல்லது கொஞ்ச நாளைக்கு நடக்கும். ஆனால்,  அறிவுடைய பெரியாரால் இகழப் பட்டால்   அது கால காலத்துக்கும் நிற்கும். 



நெருங்கியோர் ஒருவனை விட்டு விலகிப் போனால் அதனால் வரும் நட்டம் அதிகம் இல்லை. 



அறிவுடையோர் ஒருவனை விட்டு விலகிப் போனால், அதனால் அவன் அடையும் நட்டத்துக்கு அளவில்லை. 



அவர்களிடம் இருந்து அவன் இம்மைக்கும், மறுமைக்கும் பெற்றுக் பயன் பெற வேண்டியவை அனைத்தையும் இழப்பான். 



மேலும், நெருங்கியவர்கள் ஒரு வேளை நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்ளவும் கூடும். கணவனோ, மனைவியோ தவறு செய்தால் மற்றவர் மன்னித்து ஏற்றுக் கொள்ளக் கூடும். பிள்ளை தவறு செய்தால் பெற்றோர் வெறுத்து ஒதுக்கி விட மாட்டார்கள். 



ஆனால், அறிவுடையார், பயனில சொல் சொல்பவனை விட்டு விலகிப் போய் விடுவார்கள். 




எனவே, அந்தச் சொல், நெருங்கியவர்களுக்கு செய்யும் நன்மை தராத செயலை விட தீமையானது என்கிறார். 



இன்றைய சூழ்நிலையில், யார் அறிந்தோர் என்று நமக்குத் தெரியாது. எந்தக் கூட்டத்தில் எந்த அறிஞன் இருக்கிறான் என்று யாருக்குத் தெரியும்?




எனவே, எப்போதும் பயனுள்ள சொற்களையே பேசிப் பழக வேண்டும். 


(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html





கம்ப இராமாயணம் - அறத்தினால் அன்றி

கம்ப இராமாயணம் - அறத்தினால் அன்றி 


வாழக்கை என்பது பெரிய போராட்டம். கருவறை தொடங்கி கல்லறை வரை இது ஒரு முடிவில்லா போராட்டம். 


இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற என்ன வேண்டும்?


நிறைய செல்வம் வேண்டும். பணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். 


அப்புறம் ஆட்கள் துணை வேண்டும். கணவன், மனைவி, மக்கள், சுற்றம், நட்பு.


அப்புறம், அறிவு, படிப்பு, திறமை 


அப்புறம், கொஞ்சம் நல்ல நேரம் அமைய வேண்டும். 


இப்படித்தான் பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். 



கம்பன் மட்டும் அல்ல, நம் தமிழ் இலக்கியம் முழுவதும் இதை மறுதலிக்கிறது. 



இது பற்றி கம்பன் சொல்கிறான்



என்ன சொல்கிறான் என்பதைவிட எங்கு சொல்கிறான் என்பது வியப்பளிக்கும் விடயம். 



இராவணன் தேர் இழந்து,  ஆயுதங்கள் எல்லாம் இழந்து, மணி மகுடங்களை இழந்து, தனியே போர்க்களத்தில் நிற்கிறான். 



அந்த இடத்தில் இராமன் வாயிலாக கம்பன் ஒரு அறவுரை கூறுகிறான். 



இராவணனிடம் என்ன இல்லை?



பணம் - குபேரன் அவன் அரண்மனையில் வேலை செய்கிறான். அதற்கு மேல் என்ன வேண்டும்?


வீரம்?


தவம் ?


புகழ்?


பெருமை?


ஆட்கள்?


எல்லாம் அவனிடம் தேவைக்கு அதிகமாக இருந்தது.



இருந்தும், நிராயுதபாணியாக நிற்கிறான். இராமன் நினைத்து இருந்தால், ஒரு நொடியில் அவன் உயிரை வாங்கி இருக்க முடியும். 



அவ்வளவு அனாதையாக நிற்கிறான். 



என்ன ஆயிற்று அவன் செல்வம், பணம், புகழ், எல்லாம்?



ஒன்றும் துணைக்கு வரவில்லை. 


இராமன் சொல்கிறான் 



"அறத்தின் துணை அன்றி மறத்தினால் பெரிய போர்களை வெல்ல முடியாது. இதை மனதில் கொள். தனித்து நிராயுதபாணியாக நிற்கும் உன்னை கொல்ல மனம் வரவில்லை. உன் சுற்றத்தோடு போய் இரு" என்று அனுப்பி வைக்கிறான். 


பாடல் 




 அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ் சமம் கடத்தல்


மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி;


பறத்தி, நின் நெடும் பதி புகக் கிளையொடும்; பாவி!


இறத்தி; யான் அது நினைக்கிலென், தனிமை கண்டு இரங்கி.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_27.html


(pl click the above link to continue reading)


அறத்தினால் அன்றி, = அறவழியில் செல்வது இல்லாமல் 



அமரர்க்கும் = தேவர்களுக்கும் 



அருஞ் சமம் = அரும் சமர் = பெரிய போர்களை 



கடத்தல் = கடந்து செல்லுதல் 



மறத்தினால் அரிது = அறம் அல்லாத மற வழியில் அரிது (வெற்றி காண்பது அரிது) 



என்பது = என்பதனை 



மனத்திடை வலித்தி = மனதில் ஆழ பதிவு செய்து கொள் 



பறத்தி = பறந்து செல். இங்கு நிற்காதே 



நின் = உன்னுடைய  



நெடும் = பெரிய 



பதி = வீடு, இல்லம், அரண்மனை 



புகக் = சென்று 



கிளையொடும் = உறவினர்களோடு 



பாவி! = பாவம் செய்தவனே 



இறத்தி = இருப்பாயாக 



யான் = நான் 



அது நினைக்கிலென் = அது என்பது உன்னைக் கொல்வதை நினைக்கவில்லை 



தனிமை கண்டு இரங்கி = உன் தனிமை கண்டு இரக்கப்பட்டு 



இராமாயணம் கதையோ, உண்மையோ, அது ஒரு புறம் இருக்கட்டும். 



சமீப காலத்தில் ஊடங்களில் ஒரு பெரிய நிறுவனம் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இருந்து சரிந்து கீழே வந்தது என்று.




பணம், அரசியல் செல்வாக்கு,  ஆள் பலம் எல்லாம் இருக்கலாம். 



அற வழியில் செல்லாவிட்டால் அழிவு நிச்சயம். 



மறம், இராவணனை நிராயுதபாணியாக்கி போர்க்களத்தில் நிற்க வைத்து வேடிக்கை பார்த்தது. 



ஒரு சின்ன சறுக்கம்.  சீதை மேல் கொண்ட காமம். அவனை எங்கு கொண்டு நிறுத்தியது.


இதைச் சொல்வதற்காகவே காத்து இருந்ததைப் போல, கம்பன் சரியான இடத்தைத் தேர்ந்து எடுத்து இந்தப் பாடலை பொறுத்தி இருக்கிறான். 



Saturday, February 25, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - எல்லாரும் எள்ளப் படும்

 

திருக்குறள் - பயனில சொல்லாமை - எல்லாரும் எள்ளப் படும்


(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


நாம் பேசுவதை நாலு பேர் கேட்கிறார்கள். நாம் whatsapp போன்ற சமூக ஊடகங்களில் அனுப்பும் செய்திகளை பலர் படிக்கிறார்கள். 


படிப்பது மட்டும் அல்ல, நன்றாக இருக்கிறது என்றும் சிலர் சொல்கிறார்கள். இல்லை என்றால் ஒரு புன்சிரிப்பு காட்டும் படங்களைப் (emoji ) போட்டு அங்கீகரிக்கிறார்கள். நமக்கு அதில் ஒரு இன்பம். அட, நாம் சொல்வதைக் கேட்டு அதை பாராட்டவும் ஆள் இருக்கிறதே என்று நாம் மகிழ்ந்து மேலும் அவற்றைச் செய்கிறோம். 


ஒவ்வொரு குழுவிலும் இப்படி சிலர் இருப்பார்கள். 


முன்பெல்லாம் மேடைப் பேச்சு என்று இருந்தது இப்போது வலை தளங்களுக்கு மாறி விட்டது. 


பாராட்டுகிறார்களே. கேட்கிறார்களே. சொன்னால் என்ன தவறு. இரசிக்க நாலு பேர் இருந்தால், சொல்லலாமே என்று நாம் நினைக்கலாம். 


அதற்கு வள்ளுவர் என்ன சொல்கிறார் தெரியுமா?


பாடல் 


பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


(please click the above link to continue reading)



பல்லார் = பலர், பல பேர் 


முனியப்  = கோபப் படும்படி, வெறுக்கும் படி 


பயனில சொல்லுவான் = பயனிலாத சொற்களை சொல்லுபவன் 


எல்லாரும் = அனைவராலும் 


எள்ளப் படும் = தூற்றப் படுவான் 


நாம் பொருள் சொன்னால் இப்படித்தான் சொல்லுவோம். 


பரிமேலழகர் மிக நுணுக்கமாக பொருள் சொல்கிறார். அவரைத் தவிர வேறு யாரும் இப்படி சிந்திக்கக் கூட முடியுமா என்பது சந்தேகமே. 


இங்கே பல்லார், எல்லார் என்று இரண்டு சொற்கள் வருகின்றன. பல பேர், எல்லோரும் என்பது ஏறக்குறைய ஒரே பொருள் மாதிரித்தான் தெரிகிறது. 


பரிமேலழகர் சொல்கிறார். 


பல்லார் என்று முதலில் வருவது அறிவு உடையவர்கள், அறிஞர்கள் என்று. 


ஏன் அப்படிச் சொல்கிறார்?  பல்லார் என்பதற்கு அறிஞர் என்று எப்படி பொருள் சொல்ல முடியும்?


அதற்கு அடுத்த வார்த்தை "முனிய" என்று வருகிறது. 


யார் ஒரு சொல்லைக் கேட்டு வெறுப்பும், கோபமும் அடைவார்கள்? யார் சொல்லின் பலனை அறிந்தவர்களோ, யார் சொல்லின் தன்மை அறிந்தவர்களோ அவர்கள்தான் தவறான, பலன் இல்லாத சொற்களை கேட்கும் போது வெறுப்பு அடைவார்கள். 


அப்படிப்பட்டவர்கள் யார் என்றால் அறிவு உள்ளவர்கள். அவர்களுக்குத்தான் பயனுள்ள சொற்களுக்கும், பயன் இல்லாத சொற்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும். 


அறிவு இல்லாதாவர்கள், எதையும் கேட்டு பாராட்டுவார்கள். whatsapp குழுவில் வரும் குப்பைகளை பாராட்டுவது போல. 


பின்னால் வரும் "எல்லார்" என்பது எல்லோரையும் குறிக்கும். ஏன்? இங்கே மட்டும் எல்லோரையும் குறிக்கிறார்? 


அறிவு உள்ளவர்கள் வெறுத்தால், அதைக் கண்டு எல்லோரும் வெறுப்பார்கள் என்கிறார். 


காரணம் என்ன?


அறிவு உள்ளவன் ஏதோ ஒரு காரணம் பற்றி ஒரு பயனில்லாத சொல்லை வெறுக்கிறான் என்றால் அவனுக்குத் தெரிந்து இருக்கிறது. எனவே வெறுக்கிறான். அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்று நினைத்து மற்றவர்களும் வெறுப்பார்கள் என்கிறார். 


எனவே, நாம் சொல்வதை அறிவு உள்ளவர்கள், படித்தவர்கள், அறிஞர்கள் பாராட்ட வேண்டும். நல்லவர்களிடம், உயர்ந்தவர்களிடம் பாராட்டு வாங்க வேண்டும். 


அவர்கள் வெறுக்கும்படி பேசினால், நாளடைவில் உலகம் நம்மை வெறுக்கும் என்கிறார். 


எவ்வளவு நுட்பமான உரை. 


அது மட்டும் அல்ல, நல்லவர்கள் யாரை பாராட்டுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அப்படி பாராட்டப் படுபவர்கள் சொல்வதை நாம் கேட்க வேண்டும். அது நமக்கு பயனுள்ள சொல்லாக அமையும். 


அவர்கள் பாராட்டாவிட்டால், அதை நாம் கேட்க்க வேண்டியது இல்லை. அவற்றால் நமக்கு ஒரு பயனும் விளையாது. 


அறிஞர்கள் பாராட்ட வேண்டும் என்றால் நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு உழைக்க வேண்டும். படிக்க வேண்டும். அறிவை கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும். சொற்களை தேர்ந்து எடுத்துப் பேச வேண்டும். 


அப்படி உழைக்கும் நேரத்தில், நாம் பேசுவது குறையும். படிக்க படிக்க நம் அறியாமை விளங்கும். நல்லவேளை இதெல்லாம் தெரியாமல் பேச இருந்தேனே என்று நம் மீதே நமக்கு ஒரு எண்ணம் பிறக்கும். 


இன்னும் எவ்வளவு இருக்கிறதோ என்ற மலைப்பு வரும். 


அறிவை ஆழமாகவும், அகலமாகவும், நுண்ணியதாகவும் செய்து கொண்டு பின் பேசினால், நம் பேச்சை அறிவுலகம் மதிக்கும். அறிவுலகம் மதித்தால் உலகம் மதிக்கும். 


இந்த இரண்டு வார்த்தைகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை வைத்து எவ்வளவு பெரிய வாழ்க்கைத் தத்துவத்தைப் போதிக்கிறார்.


அடுத்தமுறை பூஜை செய்யும் போது வள்ளுவருக்கு ஒரு பூ. பரிமேலழகருக்கு ஒரு பூ.







(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html





Thursday, February 23, 2023

கந்தரனுபூதி - கருதா மறவா

                      

 கந்தரனுபூதி - கருதா மறவா 




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


நாம் வாழ்வை முழுவதுமாக ஏற்றுக் கொள்வது இல்லை. 


வாழ்வின் பெரும் பகுதியை நாம் வேண்டாம் என்று விலக்கி விடுகிறோம். நமது இன்னல்களுக்கு அதுதான் காரணம். 


இனிப்பு பிடிக்கும். நிறைய வேண்டும். கசப்பு பிடிக்காது. வேண்டவே வேண்டாம். 


இன்பம் வேண்டும். துன்பம் வேண்டாம். 


இப்படி வாழ்வை கூறு போட்டு, அது வேண்டும், அது விரும்பத் தக்கது, அது வேண்டாம், அது வெறுக்கத் தக்கது என்று நாம் விலக்கி வைக்கிறோம். 

இதனால் என்ன ஆகிறது?


விரும்பியது வேண்டும் என்ற ஆசை எழுகிறது. ஒன்று கிடைத்தால் அதை விட மேலே வேண்டும் ஆசை நிரந்தரமாக நம்மை தள்ளிக் கொண்டே இருக்கிறது. 


விரும்பியதை அடைய முடியாதோ என்ற பயம் வருகிறது. யாரும் தடுத்து விடுவார்களோ என்ற ஐயம் வருகிறது. விரும்பியது கிடைத்தாலும் அதை பாதுகாக்க வேண்டுமே என்ற கவலை வருகிறது. 

அது ஒரு புறம் இருக்க, 


விரும்பாதது வந்து விடுமோ என்ற கவலை. வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம். அதில் இருந்து எப்படி தப்புவது என்ற தவிப்பு. 


இப்படி வாழ்வை இரண்டாகப் பிரித்து வைத்துக் கொண்டு நாம் அன்றாடம் அல்லாடுகிறோம். 


சரி, அதுக்காக இன்பமும், துன்பமும் ஒன்றாக முடியுமா? பண வரவும், பணம் தொலைந்து போவதும் ஒன்றாக முடியுமா? என்று கேட்டால்....முடியாது. கடினம்தான். 


இறைவன் அருள் இல்லாவிட்டால் இந்த சம நோக்கு வராது. 


இதை "இருவினை ஒப்பு" என்பார்கள். 


அருணகிரிநாதருக்கு தெரிகிறது. இந்த இரு நிலை தான் துன்பத்துக்குக் காரணம் என்று. ஆனாலும், விட முடியவில்லை. தவிக்கிறார். 


முருகா, எனக்கு அருள் செய்ய மாட்டாயா? இந்த இரு வித நோக்கங்கள் போய், ஒன்றாகக் காணும் காட்சியை எனக்கு எப்போது அருள்வாய் என்று கேட்கிறார். 


பாடல் 


கருதா மறவா நெறிகாண வெனக் 

கிருதாள் வனசந்தர வென் றிசைவாய் 

வரதா முருகா மயில் வாகனனே 

விரதா சுரசூர விபாடணனே . 


பொருள் 




(pl click the above link to continue reading)



கருதா  = நினைப்பது 


மறவா  = மறப்பது 


நெறிகாண = இப்படி நினைப்பு, மறுப்பு என்ற இரு நிலை இல்லாத வழியை நான் காண 


வெனக்  = எனக்கு 


கிருதாள் = உன்னுடைய இரண்டு திருவடிகளை 


வனசந்தர வென் றிசைவாய்  = வனசம் தர என்று இசைவாய்? வனசம் என்றால் தாமரை மலர் என்று பொருள். உன் திருவடித் தாமரைகளை தர என்று இசைவாய்?


வரதா = வரம் தருபவனே, அல்லது வரை இல்லாமல் கொடுப்பவனே 


முருகா = முருகா 


மயில் வாகனனே  = மயிலை வாகனமாகக் கொண்டவனே 


விரதா = விரதங்களினால் அடையப் படுபவனே 

சுர = தேவர்களின் அதிபதி (சுர எதிர்மறை அசுர) 


சூர = சூரபத்மனின் 


 விபாடணனே . = பாடாணம் என்றால் கல், பாறை. ஆதியில் உயிர் பாடாண நிலையில் இருந்தது என்று சொல்லுவார்கள். அதாவது, கல் போலக் கிடந்தது என்று பொருள்.  பாறை போல் உறுதியான, ஈரம் இல்லாத சூர பத்மனை அழித்தவனே 


இன்ப துன்பங்களை ஒன்றாக ஏற்றுக் கொள்வது என்பது நீண்ட பயிற்சிக்குப் பின் வருவது. 


முதல் படியாக, துன்பமே வேண்டாம், துன்பம் வரவே கூடாது, வலியே கூடாது என்று விறைப்பாக இல்லாமல், வாழ்க்கை என்றால் இன்ப துன்பம் இரண்டும் கலந்ததுதான். வரட்டும் பார்ப்போம் என்று இருக்க வேண்டும். சரி, இன்று இந்தத் துன்பம் வந்து விட்டது. சரி, இதை ஏற்றுக் கொள்வோம் என்று பக்குவப் பட வேண்டும். அதற்காக துன்பத்தைக் கண்டு துவண்டு விடக் கூடாது. 


வரட்டுமே, வந்தால் என்ன. சமாளிப்போம் என்று இருக்க பழக வேண்டும். துன்பம் கட்டாயம் வரும். நாம் எவ்வளவுதான் வேண்டி விரும்பினாலும், அது நம்மை விடாது. எனவே, அதைக் கண்டு ஓடுவது ஒரு பயனும் தராது. 



துன்பமும் வாழ்வின் ஒரு பகுதி என்ற எண்ணம் வந்து விட்டால், வாழ்க்கை சமனப்படும். 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


 யாமோதிய கல்வியும் பாகம் 2


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


உதியா மரியா


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html


மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html


உபதேசம் உணர்தியவா 


]