Sunday, May 7, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - வழி அலா வழி

 கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - வழி அலா வழி


(அங்கதன் தூதின் முந்தைய பதிவுகளின் வலை தளளங்களின் முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)


போருக்கு முன்னால் இராவணனுக்கு ஒரு தூது விட வேண்டும்  இராமன் கூறுகிறான். 


அதை மறுத்து இலக்குவன் கூறுகிறான். 


"இராவணன்   அயோக்கியன். சீதையை சிறை பிடித்து வைத்து இருக்கிறான். தேவர்களுக்கும், மனிதர்களுக்கும், அந்தணர்களுக்கு சொல்ல முடியாத துன்பங்களை செய்து கொண்டிருக்கிறான். யாருக்கும் எதுவும் கொடுக்காமல் எல்லாம் தனக்கே என்று எடுத்துக் கொள்பவன். வழி அல்லாத வழியில் செல்பவன்" என்று கூறினான்.


பாடல் 


தேசியைச் சிறையில் வைத்தான்;
    தேவரை இடுக்கண் செய்தான்;
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான்;
    மன்னுயிர் புடைத்துத் தின்றான்;
ஆசையின் அளவும், எல்லா
    உலகமும் தானே ஆள்வான்,
வாசவன் திருவும் கொண்டான்;
    வழி அலா வழிமேல் செல்வான்.


பொருள் 



(pl click the above link to continue reading)

தேசியைச் = தேசு என்றால் ஒளி. ஒளி பொருந்திய தேவியை 


சிறையில் வைத்தான் = சிறையில் வைத்தான் 


தேவரை = தேவர்களுக்கு 


இடுக்கண் செய்தான் = துன்பம் செய்தான் 


பூசுரர்க்கு = பூ உலகின் தேவர் போன்ற அந்தணர்களுக்கு 


அலக்கண் ஈந்தான் = பல துன்பங்களை தந்தான் 


 மன்னுயிர் = நிலைத்த உயிர்களை 


புடைத்துத் தின்றான்; = கொன்று தின்றான் 


ஆசையின் அளவும் = அளவற்ற ஆசையால் 


எல்லா = அனைத்து 


உலகமும் தானே ஆள்வான் = அனைத்து உலகங்களையும் தானே ஆள்வான் 


வாசவன் = இந்திரனின் 


திருவும் கொண்டான் = செல்வங்களை எல்லாம் தானே எடுத்துக் கொண்டான் 


வழி அலா வழிமேல்  = வழி அல்லாத வழியில் 


செல்வான் = செல்வான் 

அது என்ன வழி அலா வழி?

பேசாமல் தீய வழி என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே?


பெரியவர்கள் எப்போதும் உயர்ந்தவற்றையே நினைப்பார்கள். அவர்கள் வழி என்று சொன்னால் அது நல்ல வழி என்றுதான் கொள்ள வேண்டும். 


எனவே வழி அலா வழி என்பது தீய வழி. 



ஒளவையார் "வழியே ஏகுக, வழியே மீளுக" என்றாள். நல்ல வழியில் போய் , நல்ல வழியில் திரும்பி வா என்று அர்த்தம். 



 நெறியல்லா நெறி என்பார் மணிவாசகர்.



 நெறியல்லா நெறிதன்னை
    நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே
    திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத
    கூத்தன்தன் கூத்தையெனக்
கறியும் வண்ணம் அருளியவா
    றார்பெறுவார் அச்சோவே 


இராவணன் கொடியவன். ஏன் ?

இலக்குவன் மூலம் கம்பர் பட்டியல் இடுகிறார். 

1. மாற்றான் மனைவியை கவர்ந்தான். 

2. நல்லவர்களுக்கு தீமை செய்தான் 

3. எல்லாம் தனக்கு என்று வைத்துக் கொண்டான். யாருக்கும் எதுவும் கொடுக்கும் மனம் இல்லை. 

4. பேராசை. இருக்கின்ற செல்வம் போதாது என்று மேலும் மேலும் அலைந்தான். 

இவை எல்லாம் தீய குணங்கள். இந்தக் குணங்கள் இருப்பவர்கள் தீயவர்கள். 

நம்மிடம் இந்தத் தீக் குணங்கள் இருக்கிறதா என்று அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும். 




[ ஒரு முன்னோட்டம் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_29.html

கருணையின் நிலையம் அன்னான்


]


Saturday, May 6, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - மாசறு காட்சி யவர்

     

 திருக்குறள் - பயனில சொல்லாமை - மாசறு காட்சி யவர்



(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


ஏன் பயனற்ற சொற்களை பேசுகிறோம்? 


இது பற்றி என்றாவது சிந்தித்தது உண்டா? 


பொழுது போகவில்லை, சும்மா அரட்டை அடிப்பது...


பேச ஒன்றும் இல்லை. சும்மா மெளனமாக இருக்க முடியுமா? எதையாவது பேசுவது. 


என்ன பேசுகிறோம், எதற்கு பேசுகிறோம் என்று தெரியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருப்பது. 


இப்படி பல காரணங்கள். 


எல்லாவற்றையும் ஆராய்ந்து, வள்ளுவர் சொல்கிறார் 


நாம் தேவையற்ற சொற்களை பேசுவதற்கு காரணம் நம்மிடம் ஒரு தெளிவு இல்லாமை என்று. 


எது சரி, எது தவறு என்ற தெளிவு இல்லை. 


எது நல்லது, எது கெட்டது என்ற தெளிவு இல்லை. 


எது உண்மை, எது அபிப்ராயம் என்ற தெளிவு இல்லை. 


உண்மையை கண்டு பிடிக்க முயற்சி செய்வது இல்லை. சொல்வதை எல்லாம், கேட்பதை எல்லாம் 

நம்பிக் கொண்டு, அது தான் சரி என்று வாதம் செய்துகொண்டு திரிவது. 


இப்படி பல காரணங்களால் நம்மிடம் ஒரு தெளிவு இருப்பது இல்லை. 


பாடல் 

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post.html



(please click the above link to continue reading)



பொருள்தீர்ந்த = பொருள் தீர்ந்து போன, பொருளற்ற, அர்த்தம் இல்லாத, பயனில்லாத (சொற்களை)

 


பொச்சாந்தும் = மறந்தும் கூட 


சொல்லார் = சொல்ல மாட்டார்கள் 


மருள்தீர்ந்த = மயக்கம் நீங்கிய, மயக்கம் இல்லாத, 


மாசறு = குற்றம் இல்லாத 


காட்சி யவர் = பார்வை கொண்டவர்கள். 


மருள் என்றால் மயக்கம். 


இதுவா, அதுவா எது சரி என்று தெரியாமல் மயங்குவது. 


இதுவோ, அல்லது அதுவோ என்று குழம்புவது. 


எப்படி முடிவு செய்வது என்று அறியாமல் தவிப்பது. 


இந்த மயக்கம் முதலில் தீர வேண்டும். 


அப்படி தீர்ந்தால், மாசறு காட்சி கிடைக்கும். 


அது என்ன மாசறு காட்சி. 


நாம் ஒன்றை பார்க்கிறோம் (கேட்கிறோம், படிக்கிறோம்) என்றால் அது உண்மையில் என்ன என்று பார்பது கிடையாது. 


நமக்கு தெரிந்த, பிடித்த, நாம் நம்பும் வகையில் அவற்றைப் பார்ப்போம்.


அது குற்றம் உள்ள பார்வை. வேண்டியவன், வேண்டாதவன், பிடித்தது, பிடிக்காதது, என்பதை எல்லாம் தள்ளி வைத்து விட்டு, தெளிவான காட்சி இருந்தால், பேச்சு குறையும். பயனற்ற பேச்சு குறையும். 


மருள் தீர்ந்த 

மாசறு காட்சி 


நம்மிடம், எத்தனை விடயங்களில் இப்படிப்பட்ட காட்சி இருக்கிறது?


நாம் நம்புவது எல்லாம் சரியாகி விடாது. நம்பிக்கையைத் தாண்டி உண்மை எது என்று அறிய வேண்டும். அந்த உண்மையின் மேல் ஒரு குழப்பமும் இருக்கக் கூடாது. அப்போது தெளிவான காட்சி கிட்டும். அப்போது பயனற்ற சொற்கள் மறையும். 







(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


நயன்சாரா நன்மையின் நீக்கும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html


சீர்மை சிறப்பொடு நீங்கும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html


 பதடி எனல் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_28.html


பயனில சொல்லாமை நன்று




அரும்பயன் ஆயும் அறிவினார்

Saturday, April 29, 2023

கந்தரனுபூதி - நினைந்திலையோ

                           

 கந்தரனுபூதி -   நினைந்திலையோ  



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அறிவியலின் தாக்கம் நமக்குள் நாளும் வளர்ந்து கொண்டேதான் போகிறது. 


எவ்வளவுதான் நம்பிக்கை இருந்தாலும், மனதின் எங்கோ ஒரு மூலையில், இது சரிதானா, இது உண்மையா என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. 



சரி, உண்மை என்பதை எப்போது உறுதிப்படுத்தலாம்? சரியான ஆதாரம் இருந்தால் இந்த சந்தேகங்கள் போய்  விடும். ஆதாரத்துக்கு எங்கே போவது?



எந்த சோதனைச் சாலையில் சென்று அந்த ஆதாரங்களை சரி பார்ப்பது?



சரி ஆதாரம் இல்லை. எனவே இதை எல்லாம் புறம் தள்ளி விடலாம் என்றால் அதற்கும் மனம் ஒப்ப மறுக்கிறது. 


இதற்கு என்னதான் முடிவு? இப்படியே வாழ்நாள் முழுவதும் ஒரு முடிவும் இல்லாமல் தவித்துக் கொண்டே இருக்கத் தான்  வேண்டுமா?  



ஒரு வழி இருக்கிறது. 



இறைவனாக இரங்கி, "சரி போடா...ரொம்ப அலைஞ்சு திரிஞ்சு துன்பப் பட்டுவிட்டாய்" என்று அருள் செய்தால் பின்   ஆதாரம் ஒன்றும் வேண்டாம். அந்த அருள் ஒன்றே போதும். அதுதான் ஆதாரம். 



அருணகிரி சொல்கிறார், "ஆதாரம் இல்லேன், அருளை பெற நீயும் என் மேல் இரக்கம் காட்ட மறுக்கிறாய்...நான் என்ன செய்வது"


அவன் நமக்கு அருள் செய்யாவிட்டால் என்ன. நமக்கு முன்னால் யாருக்காவது அருள் செய்து இருப்பானே. அப்படி அருள் பெற்றவர்கள் ஏதாவது எழுதி வைத்து இருப்பார்களே. அதைப் படித்து தெரிந்து கொள்ள முடியாதா?


ஆன்மீக அறிவு சார்ந்த நூல்களை நான்கு படிகளாக பிரிக்கிறார்கள். 


வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் என்று. 


இந்த நூலகளைப் படித்து ஞானம் பெற்று உண்மை எது என்று அறிந்து கொள்ள முடியுமா?  


அருணகிரி சொல்கிறார், "...உண்மை, இறை என்பதெல்லாம் அறிவிற்குள் அடங்காத ஒன்று" என்று. 



அது என்ன அறிவிற்கு அகப்படாத ஒன்று இருக்கிறதா?  வினோதமாக இருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் நினைப்பது மிகவும் சரி என்கிறார் அருணகிரி. "விநோதமானவன்" என்கிறார். 

 


பாடல் 


ஆதாரமிலேன் அருளைப் பெறவே 

நீதானொரு சற்று நினைந்திலையோ 

வேதாகம ஞான வினோதமனோ 

தீதா சுரலோக சிகாமணியே 


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post_29.html

(pl click the above link to continue reading)


ஆதாரமிலேன் = ஆதாரம் ஒன்றும் இல்லாதவன் 


அருளைப் பெறவே = உன்னுடைய அருளைப் பெறுவதற்கு 

 
நீதானொரு = நீ தான் ஒரு 


சற்று = கொஞ்சம் கூட 


நினைந்திலையோ = நினைக்கவில்லையோ ? உனக்கு என்னைப் பற்றி கொஞ்சம் நினைப்பு கூட இல்லை. 
 
 
வேதாகம = வேதம், ஆகமம் போன்ற நூல்களில் சொல்லப்பட்ட 


ஞான = ஞானங்களில் 


வினோத = அறியப்பட முடியாத 


மனோதீதா = மனதிற்கு அப்பாற்பட்டவனே 


 சுரலோக = தேவர் உலகின் 


 சிகாமணியே = (சிகை = தலை) தலையில் சூடும் மணி போன்ற உயர்ந்தவனே 

 

 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


 யாமோதிய கல்வியும் பாகம் 2


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


உதியா மரியா


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html


மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html


உபதேசம் உணர்தியவா 


]




Wednesday, April 12, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - அரும்பயன் ஆயும் அறிவினார்

    

 திருக்குறள் - பயனில சொல்லாமை - அரும்பயன் ஆயும் அறிவினார்



(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 



பயனற்ற சொற்களை பேசுவதை எப்படி விடுவது?  


பேசாதே பேசாதே என்று சொன்னால் போதாது. எப்படி அப்படி பேசாமல் இருக்க வேண்டும் என்ற வழியைச் சொல்ல வேண்டாமா?



வள்ளுவர் சொல்கிறார். 



நாம் எதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறோமோ அதைப் பற்றித்தான் பேசுவோம். இல்லையா?



மனதில், சிந்தனையில் எது ஓடிக் கொண்டிருக்கிறதோ அது தான் சொல்லில் வரும். 


நம் சிந்தனை எல்லாம் சில்லறை விடயங்களில் போய் கொண்டிருக்கிறது. 



அரசியல், சினிமா, டிவி யில் வரும் தொடர்கள், நாள் வார இதழ்களில் வரும் உணர்வுகளை தூண்டும் செய்திகள்,  என்று இருக்கிறது. 


whatsapp போன்ற சமூக வலை தளங்களில் யாராவது ஒன்றைச் சொன்னால் அதைப் பிடித்துக் கொண்டு மாறி மாறி கருத்துப் பரிமாற்றம் செய்வது. காலணாவுக்கு பிரயோஜனம் இல்லாத விடயமாக இருக்கும். 



எனவே, நம் சிந்தனையை மாற்றினால், நம் பேச்சு மாறும். 


சிந்தனையை எதன் மேல் செலுத்துவது என்ற கே கேள்வி வரும். 


சமையல் குறிப்பு, அழகுக் குறிப்பு இதெல்லாம் முக்கியமில்லையா என்ற கேள்வி வரும். 


அதற்கும் பதில் சொல்கிறார் வள்ளுவர். 


பாடல் 


அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்


பொருள் 





(please click the above link to continue reading)


அரும்பயன் = அரிய பயன்களை 

ஆயும் = ஆராய்ச்சி செய்யும் 

அறிவினார் = அறிவு உள்ளவர்கள் 

சொல்லார் = சொல்ல மாட்டார்கள் 

பெரும்பயன் = பெரிய பயன் 

இல்லாத சொல் = தராத சொற்களை 


அதாவது, அரிய  பயன்களைத் தருபவைகளைப் பற்றி ஆராயும் அறிவை உடையவர்கள் பெரிய பலன் தராத சொற்களை பேச மாட்டார்கள். 

சரி, அரிய பயன் என்றால் என்ன?


பரிமேல் உரையை பின் பார்ப்போம்.

நம்மிடம் கேட்டால் என்ன சொல்லுவோம்?


அரிய என்றால் அபூர்வமான, எளிதில் கிடைக்காத என்று பொருள் சொல்லுவோம். அரிய வகை பூ என்றால் சாதாரணமாக பூக்காத பூ. குறிஞ்சி மலர் போல.

எளிதில் கிடைக்காத பலன் எது?


பணம், செல்வாக்கு, அதிகாரம், உடல் நலம், உறவுகள்...இதெல்லாம் எளிதில் கிடைக்காதா?


இறை அருள், வீடு பேறு , முக்தி...இவை எளிதில் கிடைக்குமா?

பரிமேலழகர் சொல்கிறார் " அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார்" என்று. 

எளிதில் ஆராய்ந்து அறிந்து விட முடியாத பயன்கள். 


யோக முயற்சி செய்தால் என்ன கிடைக்கும்? அதன் பலன்களை எளிதில் அறிய முடியாது. துறவறம் நல்லதா?  எவ்வளவு சிந்தித்தாலும்  அதை முழுவதும் அறிந்து கொள்ள முடியாது. 

அது போன்ற விடயங்களை ஆராயும் அறிவை உடையவர்கள் என்று உரை செய்கிறார்.  மேலும், 


அது எது பற்றியது என்றால் "வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின" என்பார். 

கதி என்றால் பாதை. மேற்கதி உயர்ந்த நிலைக்கு நம்மை கொண்டு செல்லும் பாதை. அதைப் பற்றி ஆராயும் அறிவுஉள்ளவர்கள் என்கிறார். 




 
பெரும் பயன் இல்லாத சொற்களை பேச மாட்டார்கள் என்றால் சிறு பயன் தரும் சொற்களைப் பேசுவார்களா என்று கேட்கக் கூடாது. 

பெரிய பயன் இல்லாத சொற்களை பேச மாட்டார்கள் என்றால் சிறு பயன் இல்லாத சொற்களையும் பேச மாட்டார்கள் என்பது குறிப்பு. 

பெரும் பயன் தரும் சொற்களை மட்டும் தான் பேசுவார்கள். 


அதாவது, நாம் பேசினால் அதனால் மற்றவர்களுக்கு பெரிய பயன் விளைய வேண்டும். ஏதோ பொழுது போக அரட்டை அடித்தேன் என்றால் அதுவும் ஒரு பலன் தான்.   ஆனால் அது சிறு பயன். அது பற்றி பேசக் கூடாது. 


இரண்டாவது, அறிவுள்ளவர்கள் அப்படி பேச மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்?  அறிவு இல்லாத முட்டாள்கதான்  பெரும் பயன் அற்ற சொற்களைப் பேசுவார்கள் என்று அர்த்தம். 

நாம் யார் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். 



(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


நயன்சாரா நன்மையின் நீக்கும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html


சீர்மை சிறப்பொடு நீங்கும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html


 பதடி எனல் 

Friday, April 7, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - அழகிற்றே யாகும்

     கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - அழகிற்றே யாகும்


(அங்கதன் தூதின் முந்தைய பதிவுகளின் வலை தளளங்களின் முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)


இராவணனிடம் சீதையை விட்டு விடும்படி தூது அனுப்பலாம் என்று இராமன் நினைத்து தன் கருத்தைச் சொல்கிறான். அவனுடன் இருக்கும் மற்றவர்கள் கருத்துகளை கேட்கிறான். ஒவ்வொருவராக தங்கள் கருத்துக்களைச் சொல்கிறார்கள். 


வீடணன் சொல்லுவான், "தூது அனுப்புவதுதான் அழகான செயல்" என்று 


சுக்ரீவன் சொல்லுவான் "தூது அனுப்புவதுதான் அரச தர்மம்" என்று 


பின் இலக்குவன் நீண்ட உரை ஆற்றுகிறான். 


"இராவணன் மேல் இரக்கம் காட்டுவது தவறு. அவனுக்கு அம்பால் தான் பதில் சொல்ல வேண்டுமே அல்லால் சொல்லால் (தூதின் மூலம்) சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை" என்று. 



பாடல் 


அரக்கர் கோன் அதனைக் கேட்டான்,

    ‘அழகிற்றே யாகும் ‘என்றான்;

குரங்கு இனத்து இறைவன் நின்றான்,

    ‘கொற்றவற்கு உற்றது ‘என்றான்;

‘இரக்கமது இழுக்கம் ‘என்றான்,

    இளையவன்; ‘இனி, நாம் அம்பு

துரக்குவது அல்லால், வேறு ஓர்

    சொல் உண்டோ? ‘என்னச் சொன்னான்.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post_7.html


(pl click the above link to continue reading)



அரக்கர் கோன் = வீடணன் 


அதனைக் கேட்டான்= தூது அனுப்பலாம் என்று இராமன் சொன்னதைக் கேட்டான் 


‘அழகிற்றே யாகும் ‘என்றான் = அதுதான் சிறந்தது என்றான் 


குரங்கு இனத்து = குரங்கு இனத்தின் 


இறைவன் = தலைவனான சுக்ரீவன் 


நின்றான்= எழுந்து நின்று 

‘கொற்றவற்கு உற்றது ‘ = அரசர்களுக்கு உரியது. அதாவது அரச தர்மம் 

என்றான் = என்று கூறினான் 


‘இரக்கமது இழுக்கம் ‘என்றான் = இராவணன் மேல் இரக்கம் காட்டுவது குற்றம் என்றான் 


 இளையவன்; = இராமனுக்கு இளையவனான இலக்குவன் 


‘இனி = இனிமேல்  


நாம் = நாம் 


அம்பு துரக்குவது அல்லால் = அம்பை விடுவதைத் தவிர 


வேறு ஓர் = வேறு ஒரு 


சொல் உண்டோ?  = சொல்வதற்கு ஒன்று இருக்கிறதா ? 


‘என்னச் சொன்னான் = என்று சொன்னான் 


இங்கே ஒரு சில பாடங்களை கம்பன் நமக்குச் சொல்லாமல் சொல்கிறான். 



முதலாவது, இராமன் பெரிய வீரன். நன்கு படித்து அறிந்தவன். அவனால் தன்னிச்சையாக முடிவு செய்ய முடியும்.. இருந்தும், மற்றவர்கள் கருத்துகளைக் கேட்கிறான். வீட்டிலும் சரி, வேலை செய்யும் இடத்திலும் சரி நான் தான் பெரியவன், எனக்கு எல்லாம் தெரியும், நான் யாரையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை, மற்றவர்களுக்கு என்ன தெரியும் என்று  நினைத்து செயல்படக் கூடாது. 


மனைவியிடம், கணவனிடம், கீழே வேலை செய்பவர்களிடம் கலந்து பேசி முடிவு செய்வது சிறந்தது. 



இரண்டாவது, எந்த சூழ்நிலையிலும், இதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நினைக்கக் கூடாது. அவ்வளவுதான், என் வாழ்க்கை பாழ், இனி செய்வதற்கு என்ன இருக்கிறது, எல்லாம் முடிந்து போய் விட்டது என்று ஒருக்காலும் நினைக்கக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட செயல் படும் வாய்ப்புகள் இருக்கும். தேடி கண்டு பிடிக்க வேண்டும். 



இலக்குவன் சொல்கிறான், "வேறு வழி இல்லை. சண்டை ஒன்றுதான் ஒரே வழி" என்கிறான். அதே தவறை இராவணனும் செய்தான். அது வேறு விடயம். அதை பின்னால் பார்க்க இருக்கிறோம். 



வீடணனும், சுக்ரீவனும் சண்டை ஒரு வழி. தூது இன்னொரு வழி என்று நினைக்கிறார்கள். 



எந்த சிக்கலில், எந்த துக்கத்திலும் இருந்து வெளிவர இந்த சிந்தனை உதவும். 


இப்படி கிடந்து துன்பப் பட்டுக் கொண்டு இருப்பதைத் தவிர வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டும். 


ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் 


You have no control over what happens to you but you have absolute control over how you react to what happens to you 


என்று. 

வேறு என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டும். 



[ ஒரு முன்னோட்டம் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_29.html

கருணையின் நிலையம் அன்னான்


]


Thursday, April 6, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - பயனில சொல்லாமை நன்று

   

 திருக்குறள் - பயனில சொல்லாமை - பயனில சொல்லாமை நன்று



(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


பயனற்ற சொற்களை பேசுவதை எவ்வளவு தூரம் வள்ளுவர் கண்டிக்கிறார் என்பதற்கு இன்று நாம் பார்க்க இருக்கும் குறள் ஒரு உதாரணம். 


நீதியற்ற சொற்களை, இனிமை இல்லாத சொற்களை சொன்னால் கூட ஒருவிதத்தில் பரவாயில்லை, ஆனால் ஒரு போதும் பயனற்ற சொற்களை சொல்லக் கூடாது என்கிறார். 



நல்ல பலன் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தீய பயன் தந்தால் கூடப் பரவாயில்லை, ஒரு பயனும் இல்லாத சொற்களை சொல்லாதே என்கிறார். 




பாடல் 


நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று



பொருள் 




(please click the above link to continue reading)



நயனில = நீதியற்ற, இனிமையற்ற 


சொல்லினும் = (சொற்களை) சொன்னாலும் 


சொல்லுக = சொல்லலாம் 


சான்றோர் = பெரியவர்கள் 


பயனில = பயனற்ற (சொற்களை)  


சொல்லாமை  = சொல்லாமல் இருப்பது 


நன்று = நல்லது 


அதற்காக, வள்ளுவரே சொல்லிவிட்டார் அறன் அல்லாத சொற்களை பேசலாம் என்று ஆரம்பிக்கக் கூடாது. 


"ஐயோ டாக்டர் இந்த பல் வலி தாங்க முடியவில்லை. செத்தாலும் பரவாயில்லை, அந்த பல்லை பிடுங்குருங்க " என்று ஒரு நோயாளி சொன்னால், கொல்வதற்கு அனுமதி அளித்து விட்டான் என்று கொள்ளக் கூடாது.  


"உயிரே போனாலும்" என்பதில் உள்ள 'ம்', போகக் கூடாது என்பதை அறிவுறுத்தும். 



அது போல 


நயனில சொல்லினும் 


என்பதில் உள்ள 'ம்' சொல்லக் கூடாது என்பதை அறிவுறுத்தும். 


ஒரு வேளை , அரிதான ஒரு சமயத்தில் சொல்ல வேண்டி வந்தால், சொல்லலாம் ஆனால் ஒரு காலத்திலும் பயனற்ற சொற்களை பேசக் கூடாது. 


(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


நயன்சாரா நன்மையின் நீக்கும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html


சீர்மை சிறப்பொடு நீங்கும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html


 பதடி எனல் 

Sunday, April 2, 2023

கந்தரனுபூதி - அலையத் தகுமோ

                          

 கந்தரனுபூதி -     அலையத் தகுமோ



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


நாள் முழுவதும் ஏதாவது செய்து கொண்டே இருக்கிறோம். 


அவற்றில் சில நல்லதாக இருக்கலாம், சில நல்லது இல்லாததாக இருக்கலாம். 


நல்வினை, தீவினை என்று இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம். 


நல்வினை செய்தால் புண்ணியம். 


தீவினை செய்தால் பாவம். 



இந்த வினைகள் எல்லாம் நம் கணக்கில் ஏறிக் கொண்டே இருக்கும். 


நம் வாங்கிக் கணக்கு மாதிரி பணம் போடுவதும் எடுப்பதும் ஒன்றுக்கு ஒன்று சரி செய்து முடிவில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று காண்பிப்பது போல அல்ல இந்த பாவ புண்ணிய கணக்கு. 



பாவம் தனிக் கணக்கு. 


புண்ணியம் தனிக் கணக்கு. 


நிறைய பேர் நினைக்கிறார்கள் எவ்வளவு பாவம் செய்தாலும், கொஞ்சம் தானம், தர்மம், பூஜை, புனஸ்காரம் செய்தால்   செய்த பாவம் எல்லாம் போய் விடும் என்று. 



போகாது என்பது நம் சித்தாந்தம். 


புண்ணியம் செய்தால் புண்ணியக் கணக்கில் சேரும். அவ்வளவுதான். பாவக் கணக்கு குறையாது. 



இப்படி சேர்த்த பாவமும் புண்ணியம் மறு பிறவிகளில் இன்ப, துன்பங்களாக வந்து சேரும். 



ஒரு பிறவியில் எல்லா பாவத்தையும் தீர்த்து விடலாமா என்றால் முடியாது. நம்மால் தாங்க முடியாது. எனவே, ஆண்டவன்   கொஞ்சம் பாவம், கொஞ்சம் புண்ணியம் என்று கலந்து இன்ப துன்பங்களை விரவி நம் வாழக்கையை  வகுக்கிறான். பகுக்கிறான்.  



நான் சாதித்து விட்டேன் என்று குதிப்பதும், ஐயோ எனக்கு இப்படி வந்து சேர்ந்து விட்டதே என்று வருந்துவதும் தேவை இல்லாத ஒன்று.   முன் செய்த வினை இன்று வந்து நிற்கிறது. 



இந்த வாழ்வில் செய்யும் வினைகள் பின்னால் வரும். 


இந்த வாழ்வு நிரந்தரமானது என்று எண்ணி மக்கள் பலவும் செய்கிறார்கள். கால காலத்துக்கு இருக்கப் போவது போல எண்ணிக் கொண்டு  காரியம் செய்கிறார்கள். 



தாங்கள் எல்லாம் முடிவு செய்து காரியங்களை நடத்துவதாக நினைத்துக் கொள்கிறார்கள். 



அருணகிரியார் சொல்கிறார் 



"இந்த வாழ்வை நிரந்தரம் என்று எண்ணி நான் இதன் பின்னே போய்க் கொண்டு இருக்கிறேன். இது நிரந்தரம் அல்ல. ஒரு நாள் சட்டென்று முடிந்துவிடும். இதற்கு நடுவில் அந்த இன்பம், இந்த அனுபவம் என்று அங்காடி நாய் போல் அலைந்து கொண்டு இருக்கிறேன். இது சரியா? என்னை நீ காக்கக் கூடாதா ?" என்று வேண்டுகிறார். 


பாடல் 



மெய்யே யென வெவ்வினை வாழ்வை யுகந்து 

ஐயோ அடியேன் அலையத் தகுமோ 

கையோ அயிலோ கழலோ முழுதுஞ் 

செய்யோய் மயிலேறிய சேவகனே 



பொருள் 




(pl click the above link to continue reading)




மெய்யே யென =மெய் என்று எண்ணி, நிரந்தரமானது என்று எண்ணி 


வெவ்வினை = கொடுமையான வினைகள் சூழ்ந்த 


வாழ்வை = இந்த வாழ்வை 


யுகந்து = விரும்பி 

 
ஐயோ = ஐயோ 


அடியேன் = அடிமையாகிய நான் 


அலையத் தகுமோ = ஒரு குறிக்கோள் இல்லமால் அங்கும் இங்கும் அலையத் தகுமோ? 
 

கையோ = கையோ ?


அயிலோ = இரும்பினாலான, கூர்மையான வேலோ?


கழலோ = திருவடிகளோ ?


முழுதுஞ் = அல்லது உடல் முழுவதுமா? 
 

செய்யோய் = சிவந்த வண்ணமாய் இருப்பது 


மயிலேறிய சேவகனே = மயில் மேல் ஏறி வரும் காவலனே 


 
இந்த வாழ்வும் அதில் உள்ள எதுவும் நிரந்தரமானது அல்ல. 


உறவும், நட்பும், செல்வமும், பொருளும், அனுபவங்களும், ஞாபகங்களும், இளமையும் எதுவும் நிரந்தரம் அல்ல. 


இவை எல்லாம் என்றும் இருக்கப் போவது போல எண்ணிக் கொண்டு வாழக் கூடாது. 


ஒரு நாள் தனித்து நிற்க வேண்டி வரும். 


அப்போது என்ன செய்ய நினைத்தாலும் முடியாது. உடலும், உள்ளமும் தளர்ந்து போய் இருக்கும். 


இப்பவே செய்துவிட வேண்டும். 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


 யாமோதிய கல்வியும் பாகம் 2


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


உதியா மரியா


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html


மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html


உபதேசம் உணர்தியவா 


]