Tuesday, January 24, 2023

கந்தரனுபூதி - பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

                 

 கந்தரனுபூதி -  பேராசை எனும் பிணியில் பிணிபட்டு




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


பெரிய வீடு வேண்டும், வங்கியில் பல கோடிக்கு பணம் வேண்டும், பெரிய கார் வேண்டும், வருடத்துக்கு நாலு அயல் நாடுகளை சுற்றிப் பார்க்க வேண்டும், போட்ட பணத்துக்கு ஒன்றுக்கு பத்து வட்டி வேண்டும், அந்த நடிகர்/நடிகை போல் அழகாக இருக்க வேண்டும்...இப்படி எல்லாம் ஆசைப்படாதவர் யார்?


அது ஒரு புறம் இருக்கட்டும். 


நம் புராணங்களில் அரக்கர்கள் என்று சிலர் வருவார்கள்.  அவர்களின் குணத்தை ஆராய்ந்தால் ஒன்று பொதுவான குணமாகப் படும். 


உலகை எல்லாம் கட்டி ஆள வேண்டும், எல்லோரும் தனக்கு அடிபணிய வேண்டும், சாகா வரம் இல்லாவிட்டாலும் மிக மிக நீண்ட நாள் வாழும் வரம் வேண்டும், தேவர்களும் தனக்கு அடி பணிய வேண்டும்....என்று அவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போகும். 


ஆசை. பேராசை. 


யார் உன்னை வணங்கினால் என்ன, வணங்காவிட்டால் என்ன? அதனால் உனக்கு என்ன பலன்?  


அவன் பலத்துக்கு அவன் பேராசை. நம் பலத்துக்கு நாம் ஆசைப் படுகிறோம். வேண்டுமானால் நம்மை குட்டி அரக்கர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். 


அந்த அரக்கர்கள் கொண்ட பேராசையால் விளைந்தது என்ன?  அவர்கள் கேட்டது எல்லாம் கிடைத்தது. அத்தனை உலகையும் ஆண்டார்கள். ஆனால், இறைவனை விட்டு வெகு தூரம் போய் விடுகிறார்கள். இறுதியில் வரம் தந்த இறைவனே அவர்களை அழிக்கிறான். அது நான் நிகழும். 


ஆசை, பேராசை இறைவனை விட்டு நம்மை வெகு தூரம் கொண்டு சென்று விடும். அதனால் வரும் துன்பங்கள், பின் அழிவு. 


அது வேண்டும், இது வேண்டும் என்று இறைவனை குறித்து தவம் இருந்து, வரங்களைப் பெற்று, அதனாலேயே அவர்கள் அழிந்தார்கள். 


இன்றும் அது நடக்கிறது. கோவிலுக்கு நடையாக நடக்கிறார்கள், வேண்டிக் கொள்கிறார்கள்...


இலக்கியம் கொஞ்சம் மிகைப் படுத்தித் தான் சொல்லும். அதன் உள்ளே உள்ள பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 


அருணகிரிநாதர் சொல்கிறார் 


"பேராசை என்ற பிணியால் கட்டப்பட்டு நான் துன்பத்தில் தவிப்பது சரியா? சூரனின் மலை அழிய வேலை விடுத்தவனே, தேவ லோக அதிபதியே, என்னை இந்த பேராசைப் பிணியில் இருந்து காத்தருள்வாய்" என்று. 



பாடல் 


பேராசை எனும் பிணியில் பிணிபட்டு , 

ஓரா வினையேன் உழலத் தகுமோ ? 

வீரா ! முதுசூர் படவேல் எறியும் 

சூரா ! சுரலோக துரந் தரனே . 




பொருள் 





(pl click the above link to continue reading)


பேராசை = பேராசை 


எனும் = என்ற 


பிணியில் = நோயில் 


பிணிபட்டு ,  = கட்டப்பட்டு 


ஓரா  = சிந்திக்கும் திறன் அற்ற 


வினையேன் = வினை உடையவனான நான் 


உழலத் தகுமோ ?  = துன்பப் படுவது தகுமோ ?


வீரா ! = வீரனே 


முதுசூர் = சூரர்களில் மூத்தவனான பத்மாசுரன் 


பட = மேலே படும் படி 


வேல் எறியும்  = வேலை எறிந்த 


சூரா ! = சூரனே 


சுரலோக  = தேவர் உலகை 


துரந் தரனே .  = காப்பவனே 


தமிழில் நோய், பிணி என்று இரண்டு சொற்கள் உண்டு. 


நோய் என்றால் மருந்து சாப்பிட்டால் குணமாகி விடும். 


பிணி என்றால் குணமாகாது. சர்க்கரை நோய், கான்சர் போல. குறையும், பின் வந்து விடும். போகாது. 


பசியைப் பிணி என்று சொல்லுவார்கள். காலையில் சாப்பிட்டால் பசி குறைந்த மாதிரி இருக்கும் மதியம் வந்து விடும். மதியம் சாப்பிட்டால் பசி குறைந்த மாதிரி இருக்கும், இரவு பசிக்கும். விடாது. 


பிறவிப் பிணி என்பார்கள். விடாது தொடரும். 


அருணகிரி நாதர் பேராசை எனும் பிணி என்கிறார். அது விடாது. ஒன்றைக் கொடுத்தால் அடுத்தைக் கேட்கும். நூற்றி எட்டு அண்டம் கொடுத்தால் ஆயிரத்து எட்டு அண்டத்தையும் கொடு என்று கேட்கும். 


நம் துன்பத்துக்கு எல்லாம் காரணம் இந்த பேராசைதான். 


அதை அறியாமல் எதை எதையோ நினைத்து புலம்புகிறோம். 


"ஓரா வினையேன்" என்றார். சிந்திக்கும் திறன் இல்லாதவன். நான் கொண்ட பேராசையால் எனக்கு துன்பம் வந்தது என்று அறியாமல் இருக்கிறேனே என்கிறார். 


முருகா, நீ சூரபத்மனின் கிரௌஞ்ச மலையை உன் வேலால் அழித்தவன். என் பேராசையை உன்னால் அழிக்க முடியும். எனவே,  என் ஆசைகளை அழித்து என்னையும் காப்பாற்று என்று வேண்டுகிறார். 


நாம் எல்லாம் நம் ஆசைகளை நிறைவேற்றி வை என்று ஆண்டவனை வேண்டுவோம். 


அருணகிரிநாதர், அவர் ஆசைகளை நீக்கி விடு என்று ஆண்டவனை வேண்டுகிறார். 






 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 




]




Monday, January 23, 2023

திருவாசகம் - திரு அம்மானை - கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்

                

திருவாசகம் - திரு அம்மானை  -   கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் )



கண் பார்க்கிறது. 

பார்க்கிறது என்றால் என்ன?  

வெளியில் இருந்து வரும் ஒளியை கண் உள்ளே செலுத்துகிறது. கண்ணின் பின்னே உள்ள ஒளித் திரையில் அது விழுகிறது. அங்கிருந்து அது மூளைக்கு மின் அலைகள் மூலம் அந்த செய்தியை அனுப்புகிறது. மூளையில் சில வேதியல் நிகழ்வுகள் நிகழ்கின்றன. 


நாம் பார்த்தது இலட்டு என்றோ, நாய் குட்டி என்றோ, அம்மா என்றோ, பேனா என்று அறிந்து கொள்கிறோம். 


இதில், பார்ப்பது யார்?


கண்ணா? விழித் திரையா? மூளையா? 


கண்ணும், மூளையும் எல்லாம் இருந்தாலும், இருட்டில் தெரிவது இல்லை. 


கண்ணில் அடி பட்டால் ஒளி விழுந்தாலும் தெரிவது இல்லை. 


கண் நன்றாக இருந்து மூளையில் ஏதேனும் பிரச்சனை என்றாலும் தெரிவது இல்லை. 


எல்லாம் சரியாக இருந்தாலும், மனம் எதையோ நினைத்துக் கொண்டிருந்தால் கண் முன்னால் இருப்பது கூட தெரிவது இல்லை. 


பார்ப்பது யார்? 


மனமா? புத்தியா? சித்தமா? அகங்காரமா?  


ஒரே பெண்ணைப் பார்த்து ஒருவன் தாய் என்கிறான், அவளையே இன்னொருவன் தாரம் என்கிறான், மற்றொருவன் சகோதரி என்கிறான்...மாற்றுவது எது? 


ஒருவன் காரம் மண்டையை பிளக்கிறது என்கிறான். அதையே இன்னொருவன் உண்டுவிட்டு என்ன இது உப்பு உறைப்பு இல்லாமல் சப் என்று இருக்கிறது என்கிறான். 

எது பொருளின் நிஜமான சுவை?


பொருள்களுக்கு என்று ஒரு குணம் இருக்கிறதா இல்லையா அல்லது பார்பவரைப் பொறுத்து அது மாறுகிறதா? மாறும் என்றால் உலகம் என்பது தனித்து ஒன்று இல்லையா?


பொருள்கள்தான் என்று இல்லை. 


இன்பமும் துன்பமும் தனித்து இருக்கிறதா அல்லது அனுபவிப்பர்களைப் பொறுத்து மாறுமா? 

அப்படி மாறும் என்றால், நம் மனதை மாற்றிவிட்டால் எப்போதும் இன்பமாக இருக்கலாமா?

எப்போதுமே இன்பமாக இருக்க முடியும் என்றால், அதுதான் சொர்கமா?


அது தான் இறை அனுபவமா?


மனிவாசககர் சொல்கிறார் 


"என்னுடைய் உடலாகி, ,உயிர் ஆகி, உணர்வு ஆகி, எனக்குள்ளே கலந்து, தேன் ஆகி, அமுதம் ஆகி, கரும்பின் சுவையாகி, வானவரும் அறியாத வழியில் எமக்கு தந்து அருளும் சிவன் என்னுடைய அறிவாகி, பல உயிர்களுக்கும் தலைவனாக நின்றான். அவனைப் போற்றுவோம்" என்கிறார். 



பாடல் 





ஊன் ஆய், உயிர் ஆய், உணர்வு ஆய், என்னுள் கலந்து,
தேன் ஆய், அமுதமும் ஆய், தீம் கரும்பின் கட்டியும் ஆய்,
வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும்,
தேன் ஆர் மலர்க் கொன்றைச் சேவகனார், சீர் ஒளி சேர்
ஆனா அறிவு ஆய், அளவு இறந்த பல் உயிர்க்கும்
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்; அம்மானாய்!


பொருள் 



(pl click the above link to continue reading)


ஊன் ஆய் = உடம்பு ஆகி 


உயிர் ஆய் = உயிர் ஆகி 


உணர்வு ஆய் = உணர்வு ஆகி 


என்னுள் கலந்து = எனக்குள்ளே கலந்து 


தேன் ஆய் = தேன் ஆகி 


அமுதமும் ஆய் = அமுதம் ஆகி 


தீம் கரும்பின் = இனிய கரும்பின் 


கட்டியும் ஆய் = கட்டியாகி (வெல்லக் கட்டி) 


வானோர் அறியா வழி = தேவர்களும் அறியாத வழியை 


எமக்குத் தந்தருளும், = எங்களுக்கு தந்து அருளும் 


தேன் ஆர்  = தேன் சொரியும் 


மலர்க் கொன்றைச் = கொன்றை மலர் சூடிய 


சேவகனார்= வீரம் பொருந்திய 


சீர் ஒளி சேர் = சிறந்த ஒளி பொருந்திய 


ஆனா அறிவு ஆய் = பெரிய அறிவாகி  


அளவு இறந்த = எண்ணில் அடங்காத  



பல் உயிர்க்கும் =  அனைத்து உயிர்களுக்கும் 


கோன் ஆகி நின்றவா = தலைவனாகி நின்றவனின் பெருமைகளை 


கூறுதும் காண்; அம்மானாய்! = பாடிப் புகழ்வோம் அம்மானாய் 






[


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 




 சேர்ந்து அறியாக் கையானை

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post.html


என்வினையை ஓட்டுகந்து



)


Sunday, January 22, 2023

வில்லி பாரதம் - விதியை வெல்லும் விரகு

 வில்லி பாரதம் - விதியை வெல்லும் விரகு 


ஏன் தமிழ் படிக்க வேண்டும்? இலக்கியம் ஏன் படிக்க வேண்டும்?  மொழி சோறு போடுமா? வேலை வாங்கித் தருமா? தமிழ் படிக்கும் நேரத்தில் வேறு ஏதாவது உருப்படியாக படித்தால் இன்னும் நாலு காசு சம்பாதிக்கலாமே என்று நினைக்கலாம். 


அது சரிதான். இல்லை என்று சொல்லுவதற்கு இல்லை. 


ஆனால், பணம் மட்டும் போதுமா? வாழ்க்கைக்கு பணம் மட்டும் போதும் என்றால், இலக்கியம் வேண்டாம் என்று தள்ளி விடலாம். வெறும் பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடுமா? 


அது புறம் இருக்கட்டும். 



நாம் நினைக்கிறோம், பணம் இருந்துவிட்டால் எந்தப் பிரச்சனையையும் சரி செய்து விடலாம் என்று. பணத்தால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை என்று.  


அது சரியா? 


வயது ஏற ஏற, பணத்தால் சாதிக்க முடியாத பலவற்றை நாம் அனுபவ பூர்வமாக அறிவோம். 


அப்போது என்ன செய்வது? 


மிகப் பெரிய பிரச்சனை. பெரிய துக்கம். தாங்க முடியவில்லை. பெட்டி பெட்டியாக பணம் இருக்கிறது. ஒரு பலனும் இல்லை. எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் நம் துக்கம் தீராது என்ற நிலைகள் வரும். அப்போது என்ன்ன செய்வது? 


பணத்தால் சரி செய்ய முடியவில்லையே என்ற இயலாமை ஒரு புறம்.  இந்தப் பணத்தைச் சேர்க்கவா என் வாழ் நாள் எல்லாம் செலவழித்தேன். கடைசியில் இந்தப் பணத்தால் ஒரு பலனும் இல்லை. என் முயற்சிக்கு கிடைத்த பலன் இதுவா என்ற வெறுமை மறுபுறம். 


அந்த நிலை வரும் முன், மனதை பக்குவப்படுத்த வேண்டாமா? தயார் செய்து கொள்ள வேண்டாமா? 


அதற்குத்தான் இலக்கியம். 


மகா பாரதத்தில் அபிமன்யு இறந்து கிடக்கிறான். 


அர்ஜுனன், தருமன், கண்ணன், பீமன் எல்லோருக்கும் முன்னால் வில்லிப்புத்துராழ்வார் அழது புலம்புகிரார். அவரால் அதை சகிக்க முடியவில்லை. 


அபிமன்யு யார்? 


அவனுடைய தந்தை உலகின் மிகப் பெரிய வீரன் அர்ஜுனன். 


அவன் மாமன், உலகைக் காக்கும் கண்ண பிரான். 


பெரியப்பா, மிகப் பெரிய பலசாலி பீமன். 


தாத்தா, தேவர்களின் அரசனான இந்திரன். 


அப்படிப்பட்ட அபிமன்யு அனாதையாக இறந்து கிடக்கிறான் என்றால் காரணம் என்ன.  விதி. இத்தனை பேர் இருந்தும் அவனை காக்க முடியவில்லை என்றால் விதியை நம்புவதைத் தவிர வேறு என்ன செய்வது ?


பாடல் 


மாயனாம் திருமாமன்; தனஞ்சயனாம் திருத்தாதை;

                  வானோர்க்கு எல்லாம்

நாயனாம் பிதாமகன்; மற்று ஒரு கோடி நராதிபராம்

                  நண்பாய் வந்தோர்; சேயனாம்

அபிமனுவாம், செயத்திரதன் கைப்படுவான்! செயற்கை

                  வெவ்வேறு

ஆய நாள், அவனிதலத்து, அவ் விதியை வெல்லும்

                  விரகு ஆர் வல்லாரே?


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_22.html


(click the above link to continue reading)


மாயனாம் திருமாமன்= மாயங்களில் வல்லவன் மாமனாகிய கண்ணபிரான் 


தனஞ்சயனாம் திருத்தாதை = வில் வீரத்தில் ஒப்பற்றவன் தந்தையாக அர்ஜுனன் 


வானோர்க்கு எல்லாம் = தேவர்களுக்கு எல்லாம் 


நாயனாம் = நாயகனாம், தலைவனாம் 


பிதாமகன் = தாத்தாவாகிய இந்திரன் 


மற்று = மேலும் 


ஒரு கோடி = ஒரு கோடி பேர்கள் 


நராதிபராம் = நர + அதிபராம் = மக்களின் அதிபர்கள், அரசர்கள் 


நண்பாய் வந்தோர் = நண்பர்களாக உள்ளவர்கள் 


சேயனாம் = பிள்ளையாம் 


அபிமனுவாம் = அபிமன்யு 


செயத்திரதன் = ஜெயந்திரன் என்ற அரசனின் 


கைப்படுவான்!  = கையால் இறந்தான் 


செயற்கை  வெவ்வேறு = வேறு வேறு விதமாக நடக்கும் செயல்கள் எல்லாம் 


ஆய நாள் = அன்றில் இருந்து 


அவனிதலத்து = இந்த உலகில் 


அவ் விதியை வெல்லும் = அந்த விதியை வெல்லும் 


விரகு = வழி 


ஆர் வல்லாரே? = யாரிடம் இருக்கிறது ? யாரிடமும் இல்லை 


இவ்வளவு இருந்தும், அபிமன்யுவை காக்க முடியவில்லை. 


கடவுளான கண்ணனால் கூட முடியவில்லை. கண்ணன் நினைத்து இருந்தால் காத்திருக்கலாம். 


விதி. 


விதி என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ, தெரியாது. 


சில சமயம், தாங்க முடியாத துக்கம் வரும் போது, மனதுக்கு ஒரே மருந்து விதியை நம்புவதுதான். இல்லை என்றால் எப்படி மனச் சமாதனம் அடைய முடியும். 


விதி என்று ஒன்று இல்லை என்று சொல்லிவிடுவது எளிது. 


பெரிய துக்கதில் இருக்கும் ஒருவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அதுதான் என்றால், அதை பறிப்பானேன் ?


நம் இலக்கியம் முழுவதிலும் விதி அழுத்தமாக நம்பப் படுகிறது. 


இலக்கியம் படித்துப் பழகிவிட்டால் வாழ்வில் வரும் துன்பங்களை பொறுத்து, சகித்து, அதைத் தாண்டி மேலே வர முடியும். 


இல்லை என்றால் மன அழுத்தம், மன நோய், மருந்து, மாத்திரை என்று துன்பப் பட வேண்டிவரும். 


இலக்கியம் துன்பத்தை ஆற்றும். மனதைத் தேற்றும். மன வலிக்கு மருந்து போடும். சாய்ந்து கொள்ள தோள் தரும். கண்ணீர் துடைக்கும். 




Saturday, January 21, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - புன்மையால் காணப் படும்

    

 திருக்குறள் - புறங்கூறாமை -  புன்மையால் காணப் படும்


(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


சிலர் அறம் என்றால் என்ன, பாவ புண்ணியம் என்றால் என்ன, கடவுள், வேதம், கர்மா என்று மிக அழகாகப் பேசுவார்கள் / எழுதுவார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் அறம் அல்லாத பலவற்றை செய்வார்கள். 


"அவர் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அவர் என்ன சொல்கிறார் என்பதுதானே முக்கியம். தனி வாழ்வில் அவன் எப்படியும் போகட்டும், அவன் சொல்லும் செய்தி நல்லதா கெட்டதா என்று பார்த்தால் போதாதா?" என்று சிலர் நினைக்கக் கூடும். 


அது சரியான வாதம்தான். இருந்தாலும், வள்ளுவர் சொல்கிறார், ஒருவன் மனதளவில் கெட்டவனாக இருந்தால், அவன் சொல்லும் சொல் மட்டும் எப்படி நல்லாதாக இருக்கும் என்று.  மனம் தானே மூல காரணம். அங்கிருந்துதானே சொல்லும் செயலும் பிறக்கிறது. மனமே கோணல் என்றால்? 


நிறைய பேர் நமக்கு நல்லது சொல்லுவது போல இனிக்க இனிக்கப் பேசுவார்கள். உள்ளுக்குள் இருப்பது எல்லாம் விடம். 


சரி, ஒருவன் மனதுக்குள் போய் நாம் பார்க்க முடியுமா? சொல்லுகிற சொல்லை நாம்  கேட்கிறோம். அவன் மனம் எப்படிப் பட்டது என்று எப்படி அறிந்து கொள்வது?


அதற்கு ஒரு வழி சொல்கிறார் வள்ளுவர். 


அவன் மற்றவர்களைப் பற்றி, அவர்கள் இல்லாத போது தவறாகப் பேசுகிறானா? அதாவது புறம் சொல்கிறானா ? அப்படி என்றால் அவனுக்கும் அறத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று எண்ணிக் கொள் என்கிறார். 


அவன் மனத்தில் களங்கம் இருக்கிறது என்று புரிந்து கொள் என்கிறார். 


அறம் பற்றி பேசுபவர்கள் மட்டும் அல்ல. நம் உறவு, நடப்பில் யாராக இருந்தாலும், எவன் ஒருவன் புறம் பேசுகிறானோ, அவன் சொல்லுவது எதையும் நம்பக் கூடாது.  புறம் சொல்லும் அவ்வளவு பெரிய தவறைச் செய்பவன் வேறு என்னவெல்லாம் செய்ய மாட்டான் என்பது குறிப்பு. 


பாடல் 



அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்

புன்மையால் காணப் படும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_21.html


(pl click the above link to continue reading)


அறம்சொல்லும் = அறத்தினை விரித்துச் சொல்லும் 


நெஞ்சத்தான்  = மனம் உடையவனது 


அன்மை  = தூரம். அவனுக்கும் அறத்துக்கும் உள்ள தூரம், தொடர்பு 


புறம்சொல்லும் = அவன் புறம் சொல்லும் 


புன்மையால் = தீய குணத்தால் 


காணப் படும் = அறிந்து கொள்ளலாம் 


ஒரு தலை சிறந்த வக்கீல் போல வள்ளுவர் சொல்கிறார். 


அவன் சொல்வதை கேள் என்றோ கேட்காதே என்றோ அவர் சொல்லவில்லை. 


அவன் நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ சொல்லவில்லை. 


புறம் சொல்கிறானா, அவனுக்கும் அறத்துக்கும் இடை வெளி என்ன என்று நீயே புரிந்து கொள் என்று கோடு போட்டு காட்டுகிறார். 


புறம் சொல்பவன் அறத்தை கேட்பதும் கேட்காததும் உன் விருப்பம். இடை வெளி இருக்கும் என்பதை புரிந்து கொள். 


இதற்கு உரை எழுதிய பரிமேல் அழகர் அப்படி விடத் தயாராக இல்லை. ஒரு படி மேலே போய், கேட்காதே என்று அடித்துச் சொல்கிறார். 


"மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்" 


என்பது அவர் உரை. 


புறம் சொல்லுவது மனக் குற்றம். ஒரு சமுதாய மனிதனாக வாழ விரும்புவன் அந்தக் குற்றத்தை களைய வேண்டும். 


நம்மிடமும் அந்தக் குற்றம் இருக்கலாம். 


ஒரு விடயம் பற்றி நமக்கு ஒரு அட்பிப்ப்ராயம் இருக்கும். 


அலுவலதத்திலோ, வீட்டிலோ நாம் ஒரு கருத்தைச் சொல்லுவோம். சில நேரம் அந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளப்படாமல் போகலாம். 


நம் கருத்தை மறுதலித்தது ஒரு உயர் அதிகாரியாக இருக்கலாம். 


அவர் இல்லாத போது "இவர் எல்லாம் ஒரு பெரிய அதிகாரி. இந்தச் சின்ன விடயம் கூடத் தெரியவில்லை. எப்படிதான் இந்த நிலைக்கு வந்தானோ"என்று அவர் இல்லாத போது அவர் பற்றி மற்றவர்களிடம் பேசுவதும் புறம் தான். 


மனவியைப் பற்றியோ, கணவனைப் பற்றியோ மற்றவர்களிடம் தரக் குறைவாகப் பேசுவதும் புறம் தான். 


மாமியாரைப் பற்றி, மருமகளைப் பற்றி, அவர்கள் இல்லாத போது தரக் குறைவாகப் பேசுவதும் புறம்தான். 


நம்மிடம் அந்தக் குற்றம் இருக்கிறதா? இல்லையா?


ஒவ்வொருமுறை மற்றவர்களைப் பற்றிப் பேசும் போது அவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்துப் பேச வேண்டும். இல்லை என்றால் பேசக் கூடாது. 


நாக்கைக் கடித்துக் கொள்ள வேண்டும். 


சரி, அப்படி முடியாது. இப்படி பேசி பேசிப் பழகிவிட்டது என்றால், அறம் பற்றி பேசாமலாவது இருக்கலாம். எது சரி, எது தவறு, என்றெல்லாம் பேசாமலவாது இருக்கலாம். 








(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html


அறம்கூறும் ஆக்கம்


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html


முன்இன்று பின்நோக்காச் சொல்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html




Friday, January 20, 2023

கந்தரனுபூதி - என்று அருள்வாய் ? பாகம் 1

                

 கந்தரனுபூதி -  என்று அருள்வாய் ?  பாகம் 1 




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


குகன் !


முன்பொரு காலத்தில் கங்கை கரை ஓரம் ஒரு முனிவர் தன்னுடைய மகனுடன் வசித்து வந்தார். ஒரு நாள், அந்த பையன் தன் தந்தையிடம் "தந்தையே, உலகில் பெரிய கடவுள் யார்" என்று கேட்டான். அவரும் முருகன் தான் தனிப் பெரும் கடவுள் என்றார். 


அப்படி இருக்கும் போது ஒரு நாள், அவர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் அந்நாட்டின் மன்னன் அந்த முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தான். முனிவர் இல்லாததைக் கண்டு வருந்தினான். அப்போது, முனிவரின் மகன், "மன்னா, வந்த காரியம் என்ன" என்று கேட்டான். 


"நான் வேட்டைக்கு வந்த இடத்தில், தவறுதலாக ஒரு முனிவர் மேல் அம்பை விட்டு விட்டேன். அவரும் இறந்ததால், ப்ரம்மஹத்தி தோஷம் என்னை துரத்துகிறது" என்றான். 


முனிவரின் மகனோ, "இதற்கா வருந்துகிறீர்கள். நான் பரிகாரம் சொல்கிறேன். இதோ இந்த கங்கையில் மூழ்கி, மூன்று முறை முருகா என்று சொல்லுங்கள், பிரம்மஹத்தி ஓடிவிடும்" என்றான். 


மன்னனும் அவ்வாறே செய்ய, ப்ரம்மஹத்தி விலகியது. 


முனிவர் திரும்பி வந்தார். நடந்ததை கேட்டு அறிந்து, மகன் மேல் மிகுந்த கோபம் கொண்டார். "முருகன் நாமத்தை ஒரு முறை சொன்னாலே ஓராயிரம் பிரம்மஹத்தி விலகுமே...நீ மூன்று முறை சொல்லச் சொல்லி இருக்கிறாய். முருக நாமத்தின் அருமை தெரியாத நீ கல்வி அறிவு இல்லாத வேடனாகப் போ" என்று சாபம் தந்தார். 


பின், கோபம் தணிந்து, சாப விமோசனமாக "நீ கங்கை கரையில் குகன் என்ற பெயரோடு வேடனாக பிறப்பாய். இராமன் வருவான். அவனுக்கு பணிவிடை செய்து உன் சாபம் விலகப் பெறுவாய்" என்று அருளினார். 


அந்த முனிவனின் மகன்தான் இராமாயணத்தில் குகனாக வந்தான் என்று ஒரு கதை உண்டு. 


குகன் என்றால் குகையில் வாழ்பவன். 


பக்தர்களின் மனம் என்ற குகையில் இருப்பவன் குகன். 


"அருள்வாய் குகனே" என்பார் அருணகிரிநாதர். 




உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.



முருகன் !


முருகு என்ற சொல்லுக்கு அழகு, இளமை என்று பொருள்.  என்றும் அழகோடு இருப்பவன், என்றும் இளமையோடு இருப்பவன் முருகன். 



குமரன் !


குமாரன் என்பதன் மரூஉ. இளையவன்.


"முருகன், குமரன், குகன் என்று உன் நாமத்தை கூறு உள்ளம் உருகும் படி என்று அருள்வாய்?  வானவரும், மண்ணில் உள்ளவரும் வணங்கும் குருவடிவாணவனே, எட்டு குணங்கள் நிறைந்தவனே" 


 என்று உருகுகிறார் அருணகிரியார். 


பாடல் 


முருகன் குமரன் குகன் என்று மொழிந்து 

உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய் ? 

பொரு புங்கவரும் புவியும் பரவும் 

குருபுங்கவ ! எண்குண பஞ்சரனே 


பொருள் 



(pl click the above link to continue reading)



முருகன் = முருகன் 


குமரன் = குமரன் 


குகன் = குகன் 


என்று மொழிந்து  = என்று கூறி 


உருகும் = மனம் உருகும் 


செயல் தந்து = செயலைத் தந்து 


உணர்வு என்று அருள்வாய் ?  = உணர்வை என்று அருள்வாய்? 


பொரு புங்கவரும் = உன்னுடன் போரிட்ட வானவர்களும் 


புவியும் = புவியில் உள்ளவர்களும் 


பரவும்  = போற்றி பரவும் 


குருபுங்கவ ! = குரு வடிவானவனே  


எண்குண பஞ்சரனே  = எட்டு விதமான குணங்களின் வடிவானவனே 






 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html





]




Tuesday, January 17, 2023

திருவாசகம் - திரு அம்மானை - மந்தார மாலையே

               

திருவாசகம் - திரு அம்மானை  -   மந்தார மாலையே 




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் )


கோவிலுக்குப் போனால் தேங்காய், பழம் என்று நிவேத்தியம் செய்கிறோம். 

இறைவனுக்கு சந்தனம், பால், பன்னீர் என்று அபிசேகம் செய்கிறோம். 


வீட்டில் விசேடம் என்றால் தீ வளர்த்து அதில் பால், நெய், பட்டு என்று பலவகை பொருள்களைப் போடுகிறோம். எல்லாம் எரிந்து போகிறது. 


ஆற்றில் பிண்டம் கரைக்கிறோம். 


இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? எல்லாம் வீணாகப் போகிறதே?  இங்கே தீயில் போட்டால் அது எங்கோ இருக்கிற கடவுளுக்கு போகுமா? என்னதான் நம்பிக்கை என்றாலும், கொஞ்சமாவது அறிவு சார்ந்து இருக்க வேண்டாமா? 



இப்படிப் பட்ட கேள்விகள் இவற்றை ஆழமாக நம்பும் பக்தர்கள் மனத்திலும் எழும். 


அறிவு கேள்வி கேட்கத்தான் செய்யும்.  வெளியே சொல்லாவிட்டாலும், உள்ளுக்குள் இந்த கேள்விகள் இருந்து கொண்டுதான் இருக்கும். 


இது என்ன முறை? இதில் என்ன அர்த்தம் இருக்கிறது? 


தேவுக்களுக்கும், மனிதர்களுக்கும் ஒரு இடையறா தொடர்பு இருப்பதாக நம் முன்னவர்கள் நினைத்தார்கள். 


தேவுக்கள் என்பது கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்றால் இயற்கை என்று வைத்துக் கொள்ளலாம். 



மழை, வெயில், காற்று, என்று நம்மைச் சுற்றியுள்ள இயற்கைக்கும் நமக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. 



அது மட்டும் அல்ல, அவற்றை நாம் மதிக்க வேண்டும். இன்று சுற்றுப் புற சூழ்நிலையை மதிக்காமல் நாம் அரக்கத் தனமாக அவற்றை வேட்டையாடிக் கொண்டு இருக்கிறோம். 


இயற்கையின் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கிறது. அதைத் தாண்டும் போது அது நம்மை தண்டிக்கிறது. 


பனிப் பாறைகள் உருகுகின்றன. கடல் மட்டம் உயர்கிறது.  நில அதிர்வுகள் தோன்றுகின்றன. மழை பொய்கிறது.  கால நிலை மாறுகிறது. நிலத்தடி நீர் நாளுக்கு நாள் கீழே போய்க் கொண்டு இருக்கிறது.  ஒரு பக்கம் வெள்ளம். மறு பக்கம் வறட்சி. நிலம் அழுந்துகிறது. 


காரணம் என்ன?  இயற்கையின் மேல் மதிப்பும், மதிப்பும் மரியாதையும் இல்லை. நான் தான் எல்லாம், எனக்குத் தான் எல்லாம் என்று மனிதன் சுயநலமியாக மாரியதால் வந்த வினை. 


நம் கலாச்சாரம் என்ன சொல்லித் தந்தது?


மழையா - அதைப் போற்றுவோம். வணங்குவோம். மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் என்று மழையை போற்றினார்கள்.



வெயிலா? - சூரியனைப் போற்றுவோம். 



காற்றா ? - வாயு பகவானைப் போற்றுவோம். 



இயற்கையை தெய்வமாக போற்ற கற்றுத் தந்தது நம் மரபு. 


இயற்கை நமக்குத் தருவது எல்லாம் ஒரு வரம். ஒரு அருள். ஒரு கொடை. அதற்கு நாம் காட்டும் நன்றிக் கடன் இந்த பிரசாதங்கள், வேள்வி, அவிர்பாகம் என்பதெல்லாம். 


அவை போகிறதோ இல்லையோ, நம் மனதில் அது ஒரு புனிதமான ஒன்று என்ற எண்ணத்தை இவை தோற்றுவிக்கின்றன. 


தக்கன் ஒரு வேள்வி செய்தான். அதில் சிவனுக்கு தர வேண்டிய அவிர் பாகத்தைத் தர மறுத்தான்.  சிவன் அந்த யாகத்தை அழித்தான் என்பது புராணம். 


இயற்கயை மதிக்காமல், சுயநலமாக காரியங்களை செய்து கொண்டு போனால், அந்த இயற்கையே நம்மை அழிக்கும் என்பது செய்தி. .



பாடல் 



சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்றன் வேள்வியினில்

இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்

தந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்

சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த

செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்

மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய். 



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_17.html


(pl click the above link to continue reading)


சந்திரனைத் = சந்திரனை 


தேய்த்தருளித் = தேய்து 


தக்கன்றன் = தக்கன் தன் 


வேள்வியினில் = வேள்வியில் 


இந்திரனைத் = இந்திரனின் 


தோள்நெரித்திட்டு = தோள்களை நெரித்து  


எச்சன் தலையரிந் = எச்சன் என்ற தேவனின் தலையை அரிந்து 


அந்தரமே  = வானத்தில் 


செல்லும்  = செல்லும் 


அலர்கதிரோன் = பல கதிர்களை பரப்பும் சூரியனின் 


 பல்தகர்த்துச் = பற்கள் உதிரும் படி தண்டித்து 


சிந்தித்  திசைதிசையே = திசைகள் தோறும் சிந்தும் படி 


தேவர்களை ஓட்டுகந்த = தேவர்களை ஓட ஓட விரட்டி 


செந்தார்ப் = சிவந்த மாலைகள் போல 


பொழில்புடைசூழ் = சோலைகள் சூழ்ந்த 


தென்னன் பெருந்துறையான் = தென்னவன், திருபெருந்துறையில்  உறைபவன் 


மந்தார மாலையே = அணியும் மந்தார மாலையை 


பாடுதுங்காண் அம்மானாய்.  = பாடுவோம், அம்மானாய் 








[


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 


)


Monday, January 16, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - முன்இன்று பின்நோக்காச் சொல்

   

 திருக்குறள் - புறங்கூறாமை -  முன்இன்று பின்நோக்காச் சொல்



(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)



கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்இன்று பின்நோக்காச் சொல்


இந்தக் குறளை படித்தவுடன் நமக்கு என்ன தோன்றும்?


முகத்திற்கு முன் கடினமான சொற்களை சொன்னாலும் பரவாயில்லை ஆனால் ஒருவன் இல்லாதபோது  அவதூறாக அவனைப் பற்றி பேசாமல் இருப்பது நலம் என்றுதானே பொருள் சொல்வோம் ?


அது சரியும் கூட. 


ஆனால், பரிமேலழகர் மிக நுணுக்கமாக இதற்கு உரை எழுதுகிறார். அது என்ன என்று பார்ப்போம். 


பாடல் 


கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்இன்று பின்நோக்காச் சொல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html

(pl click the above link to continue reading)


கண்நின்று = கண் முன்னே நின்று 


கண்ணறச் = கண் + அற 


சொல்லினும் = சொன்னால் கூட பரவாயில்லை 


சொல்லற்க = சொல்லக் கூடாது 


முன்இன்று பின்நோக்காச் சொல் = முன்னால் இல்லாமல் அவனுக்கு பின்னால் சொல்லும் சொற்களை 


'கண்ணற' என்றால் என்ன?  கண் என்பது கருணையை, அன்பை, காதலை வெளிபடுத்தும் அவயம். கருணைக்கு கண்ணோட்டம் என்று பெயர். காதலர்களுக்குத் தெரியும் கண் எவ்வளவு காதலை வெளிப்படுத்தும் என்று. 


கண் அற என்றால், அந்த கருணை, அன்பு, பரிவு இல்லாத என்று பொருள். 


கண்ணறச் சொல் என்றால் அன்பு, பரிவு இல்லாத சுடு சொற்கள் என்று பொருள். 


"பின் நோக்கா" என்றால் என்ன?


ஒருவனுக்கு பின்னால் என்று நாம் பொருள் சொல்வோம். பரிமேலழகர் சொல்கிறார், பின்னால் வரும் பாவத்தை அறியாமல், பின்னால் வரும் துன்பத்தை அறியாமல் என்று பொருள் சொல்கிறார். 


பின் வரும் பாவம் தெரிகிறது. அது என்ன பின் வரும் துன்பம்?


அது பற்றி இனி வரும் குறள்களில் கூற இருக்கிறார். 


'பின்நோக்காச் சொல்' = இங்கே சொல் என்பது ஆகுபெயர் என்று குறிக்கிறார். 'சொல்'லுக்கு ஒரு பாவமும் இல்லை. சொல்லை சொல்பவனுக்குத் தான் அந்த பாவமும், துன்பமும் வந்து சேரும் என்பதால் சொல் என்ற சொல் , சொல்பவனைக் குறிந்து நின்றது என்பதால் அதை ஆகு பெயர். 


புறம் சொல்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஒன்றிருக்க ஒன்று சொல்லுவது ஒரு பொழுது போக்கு, இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி பொழுதை இனிதாகக் கழிக்க நினைக்கிறார்கள். 


அதன் விளைவுகளைப் பற்றி சிந்திப்பது இல்லை அல்லது அவர்கள் நினைக்கும் விளைவு மட்டுமே விளையும் என்று நினைக்கிறார்கள். 


அது தவறு. அவர்கள் நினைத்து பார்க்க முடியாத விளைவுகள் நிகழும் என்று எச்சரிக்கிறார். அவை என்னென்ன என்று பின்னால் கூற இருக்கிறார். 














(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html


அறம்கூறும் ஆக்கம்


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html