Saturday, September 21, 2013

இராமாயணம் - பரதன் கங்கை கரை அடைதல்

இராமாயணம் - பரதன் கங்கை கரை அடைதல்



இராமனை மீண்டும் அழைத்து வந்து அரியணையில்  அமர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு பரதன் கங்கைக் கரையை  அடைந்தான்.

முதல் பாடலிலேயே கம்பன்  உருகுகிறான்.

பூ விரிந்தது போன்ற அழகிய பாதங்களைக் கொண்ட பரதன், ஒப்பிட்டு கூற முடியாத அளவிற்கு உயர்ந்த சேனைகளை கொண்டவன்,  காவிரி நாடு போல உயர்ந்த அயோத்தியை விட்டு எல்லா உயிர்களும் பார்த்து இரக்கப் படும்படி கங்கைக் கரையை அடைந்தான்.

பாடல்

பூ விரி பொலன் கழல், பொரு இல் தானையான்,
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ,
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிட, கங்கை எய்தினான்.


பொருள்


Wednesday, September 18, 2013

இராமாயணம் - உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான்

இராமாயணம் - உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான் 


நம் மனம் அல்லது உயிர் எத்தனையோ விஷயங்களுக்கு ஆசைப்  படுகிறது. மனம் விரும்பும் விதம் எல்லாம் உடல்  சென்று அது வேண்டும் இன்பங்களை புலன்கள் மூலம் பெற்று மனம் மகிழ்ச்சி அடைய  உதவுகிறது.

இதைப் பார்த்த கம்பனுக்கு ஒன்று தோன்றியது.

மக்கள் எல்லாம் உயிர்  போலவும்,தசரதன் உடல் போலவும் தோன்றியது.

உயிர் வேண்டியதை எல்லாம் உடல் தேடித் பிடித்து அது அனுபவிக்கத் தருவதைப் போல தசரதன் மக்களுக்கு சேவை  செய்தான்.

பாடல்

வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்.
உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால்.
செயிர் இலா உலகினில். சென்று. நின்று. வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான்.

பொருள்

வயிர = வைரம் வைத்து செய்யப் பட்ட

வான் பூண் அணி  = உயர்ந்த பூண் கொண்ட அணிகலன்களை அணிந்த

மடங்கல் மொய்ம்பினான் = சிங்கம் போன்ற உடலைக் கொண்டவன்

.
உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால் = எல்லா உயிர்களையும் தன்  உயிர் போல நினைத்து காப்பதால்

செயிர் இலா உலகினில் = குற்றம் இல்லாத இந்த உலகில்

சென்று. நின்று. வாழ் = சென்று நின்று வாழும்

உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான் = எல்லா உயிர்களும் வாழும் உடம்பு போல  ஆயினான்




Tuesday, September 17, 2013

நற்றிணை - நீர் இன்றி அமையா உலகு

நற்றிணை - நீர் இன்றி அமையா உலகு 


நற்றிணை , 400 தனிப் பாடல்களை கொண்டது. அந்த கால தமிழர்களின் வாழ்கையை படம் பிடித்து  காட்டும்  நூல்.

அதில் ஒரு பாடல்.....

தலைவி அவளுடைய தோழியிடம் கூறுகிறாள்.

"..அவன் சொன்ன சொல் தவற மாட்டான். எப்போதுமே இனியவன். கட்டி அணைக்கும் என் தோள்களை என்றும் பிரியாதவன். தேன் போல இனிமையானவன். எப்படி இந்த உலகம் நீர் இல்லாமல் வாழ முடியாதோ, அது போல அவன் இல்லாமல் நான் வாழ முடியாது என்று அவன்  அறிவான். அவன் என்னை பிரியும் அந்த சிறுமையான செயலை ஒரு போதும் செய்ய மாட்டான். "

பாடல்


நின்ற சொல்லர் நீடு தோறு இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே;
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!


பொருள்

நின்ற சொல்லர் = சொன்ன சொல் தவறாதவன். அவன் சொன்ன சொல் என்றும் நிலைத்து இருக்கும்.  ஒரு தடவை ஒன்று சொன்னால் அதில் இருந்து மாற மாட்டான்.

நீடு தோறு இனியர் = ரொம்ப இனிமையானவன். நீடு என்றால் நீண்ட, ரொம்ப நாள், என்று பொருள். 

என்றும் என் தோள் பிரிபு அறியலரே = என் தோள்களை விட்டு பிரியவே மாட்டான்


தாமரைத் = தாமரை மலரில் 

தண் = குளிர்ச்சியான

தாது ஊதி = மகரந்தப் பொடிகளை ஊதி. ஊதி என்றால் துளைத்து, நுழைந்து, உறிஞ்சி  என்று பொருள்

மீமிசைச் = உயர்ந்த இடத்தில்

சாந்தில் = சந்தன மரத்தில்

தொடுத்த தீம் தேன் போல = சேர்த்து வைத்த சுவையான தேனைப் போல

புரைய மன்ற = நிச்சயமாக உயர்ந்தது

புரையோர் கேண்மை = உயர்ந்த அவனின் நட்பு அல்லது உறவு

நீர் இன்று அமையா உலகம் போலத் = நீர் இல்லாமல் அமையாத உலகம் போல

தம் இன்று = அவன் இன்றி


அமையா நம் நயந்தருளி = அமையாத நம்முடைய நன்மையைக் கருதி, அருள் செய்து

நறு நுதல் பசத்தல் அஞ்சிச் = என் நெற்றி பசலை நிறம் அடையும் என்று அஞ்சி

சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே! = என்னை பிரியும் அந்த சிறிய செயலை  செய்வானா ? அவனுக்கு அதைச் செய்யத் தெரியாது

சந்தன மரத்தில் உள்ள தேன் போல அவன் காதல் உயர்ந்தது. கெட்டுப் போகாதது. 

இராமாயணம் - வெட்கப்பட்ட திருமால்

இராமாயணம் - வெட்கப்பட்ட திருமால் 



சீதையை தேடி கண்டடைந்த அனுமன், அவளுக்கு தன் விஸ்வரூபத்தை காட்டுகிறான். அந்த உருவத்தை கம்பன் சில பாடல்களில் விவரிக்கிறான். அதில் ஒரு பாடல்...

"இதை ஒரு வலிமை இல்லாத குரங்கு என்று நினைக்க முடியாது. உலகுக்கோர் அச்சாணி போன்றவன் இந்த அனுமன். இவனுடைய பெருமை சொல்ல முடியாது. இவனுடைய விஸ்வரூபத்தைப் பார்த்தால், அந்த உலகளந்த திருமாலும் வெட்கப் படுவான் "

என்கிறார் கம்பர்.

பாடல்

‘ஏண் இலதுஒரு குரங்கு ஈது’ என்று எண்ணலா
ஆணியை, அனுமனை,அமைய நோக்குவான்,
‘சேண் உயர்பெருமை ஓர் திறத்தது அன்று’ எனா,
நாண் உறும்-உலகுஎலாம் அளந்த நாயகன்.

பொருள்


Monday, September 16, 2013

இராமாயணம் - இராமன் அம்பா ? காமன் அம்பா ?

இராமாயணம் - இராமன் அம்பா ? காமன் அம்பா ?


மாரீசனை ஏதோ கெட்டவன் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். கம்பன் அப்படிச் சொல்லவில்லை. அவனை மிக நல்லவனாக காட்டுகிறான்.

மாரீசன், எவ்வளவோ எடுத்துச் சொல்லுகிறான். இராவணன் கேட்டான் இல்லை. கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்று.

கடைசியில், நீ போகவில்லை என்றால் உன்னை கொல்வேன் என்றான் இராவணன்.

வேறு வழியில்லாமல் மாரீசன் ஒத்துக் கொண்டான்.

இராவணனுக்கு ஒரே குஷி.....மாரீசனை அப்படியே கட்டிக் கொண்டு, கோபம் எல்லாம் நீங்கி,  "மலை போல் உயர்ந்த தோள்களை கொண்டவனே, மன்மதனின் கொதிக்கும் அம்பால் அழிவதை விட, இராமனின் அம்பால் இறப்பது எவ்வளவோ பெருமை தருவது அல்லவா ? எனவே, தென்றலை விட மென்மையான சீதையை தருவாய்" என்று கூறினான்.

பாடல்

என்றலும், எழுந்து புல்லி, ஏறிய வெகுளி நீங்கி,
'குன்று எனக் குவிந்த தோளாய்! மாரவேள் கொதிக்கும் அம்பால்
பொன்றலின் இராமன் அம்பால் பொன்றலே புகழ் உண்டு அன்றோ?
தென்றலைப் பகையைச் செய்த சீதையைத் தருதி' என்றான்.

பொருள் 

Sunday, September 15, 2013

திருக்குறள் - கூடா ஒழுக்கம்

திருக்குறள் - கூடா ஒழுக்கம் 


கூடா ஒழுக்கம் என்றால், ஏதோ சேரக் கூடாதவர்களோடு சேர்வது என்று சிலர் நினைக்கலாம்.

அது அல்ல.

பரிமேலழகர் சொல்கிறார்

" அஃதாவது, தாம் விட்ட காம இன்பத்தை உரன் இன்மையின் பின்னும் விரும்புமாறு தோன்ற , அவ்வாறே கொண்டு நின்று தவத்தோடு பொருந்தாததாய தீய ஒழுக்கம் . அது விலக்குதற்கு , இது தவத்தின்பின் வைக்கப்பட்டது."

அதாவது, ஒரு கால கட்டத்தில், காம இன்பம்  போதும்,இனி  என்று சொல்லிவிட்டு துறவறம் மேற் கொண்டவர்கள், அதை விட முடியாமல் பின்னும் காமத்தின் பின்னே செல்வதை காண்கிறோம். அப்படி பட்ட ஒழுக்கத்தை தீய ஒழுக்கம் என்கிறார். அது தவிர்க்கப்பட வேண்டியது என்பதால், கூடா ஒழுக்கம் என்ற இந்த அதிகாரம் தவம் என்ற அதிகாரத்தின் பின்னால் வைக்கப் பட்டது.

அசரம் பாபு, நித்யானந்தா, பிரேமானந்தா என்று எத்தனையோ பேரை பற்றி கேள்விப் படுகிறோம். அவை எல்லாம் கூடா ஒழுக்கத்தால் வந்தவை. 


பாடல்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

பொருள்


இராமாயணம் - துரிசு இல்லாத் திருமனத்தான்

இராமாயணம் - துரிசு இல்லாத் திருமனத்தான் 


இராமனைத் தேடி பரதன் கங்கை கரை அடைகிறான். பரதனை சந்தேகப் படுகிறான் குகன். ஒருவேளை இராமனை கொல்லத்தான் வந்திருகிறானோ என்று சந்தேகம் வருகிறது.

இராமாயணத்தில் , மிக மிக பாவப்பட்ட பாத்திரம் என்றால் பரதன் தான். அவனை யாருமே புரிந்து கொள்ளவில்லை. பெற்ற தாய் புரிந்து கொள்ளவில்லை. தந்தை புரிந்து கொள்ளவில்லை. உடன் பிரிந்த இலக்குவன் புரிந்து கொள்ளவில்லை. ஏன்,  கோசலை கூட அவனை ஒரு இடத்தில் சந்தேகித்தாள்.

அவ்வளவு நல்லவன். ஆனாலும் காப்பியும் முழுவதும் துன்பப்படுகிறான்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் என்றார்  வள்ளுவர். நல்லவனுக்கு ஏன் இவ்வளவு துன்பம் ?

கங்கை கரை அடைந்த பரதன் அங்கு நின்ற குகனை காட்டி அவன் யார் என்று சுமந்தரனிடம்  கேட்டான்.

சுமந்திரன் குகனைப் பற்றி பல விஷயங்கள் கூறுகிறான் ...அதோடு ஒரு வரி  "உங்கள் குல தனி நாதற்கு உயிர் துணைவன்" என்று  குறிப்பிடுகிறான்.

அதை கேட்ட பரதன்  ரொம்ப மகிழ்ந்தான்...." அப்படியா,என் அண்ணனுக்கு துணைவனா ? அப்படினா நானே போய் அவனைப் பார்க்கிறேன்" என்று எழுந்தான். பரதன் பெரிய அரசன்.  குகன் ஒரு சிற்றரசன். படகுகள் ஓட்டும் மக்களுக்குத் தலைவன். பரதன் நினைத்திருந்தால், குகனை இங்கே அழைத்து வாருங்கள் என்று சொல்லி  இருக்கலாம்.

இராமனின் நண்பன் என்று சொன்னவுடன் பரதனுக்கு எல்லாம் மறந்து போயிற்று. தான் யார், குகன் யார் என்பதெல்லாம் அவனுக்கு பொருட்டு  இல்லை.  நானும் இராமனின் தொண்டன். அவனும் இராமனின் தொண்டன் ...எங்களுக்குள் என்ன உயர்வு தாழ்வு என்று நினைத்தான்.

இறைவன் சந்நிதியில் எல்லோரும் ஒன்று....

பாடல்


தன் முன்னே, அவன் தன்மை,
     தந்தை துணை முந்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற
     துரிசு இலாத் திரு மனத்தான்,
‘மன் முன்னே தழீஇக்
     கொண்ட மனக்கு இனிய துணைவனேல்,
என் முன்னே அவற் காண்பென்,
     யானே சென்று’ என எழுந்தான்.


பொருள்


தன் முன்னே = தன்  முன்னே நின்ற குகனை பற்றி

அவன் தன்மை = அவனுடைய தன்மைகளை

தந்தை துணை = தந்தையின்  (தசரதனின்) துணை (துணைவன் சுமந்திரன்)

முந்து உரைத்த சொல் = முன்னால் சொன்ன சொல் (உங்கள் குல நாயகற்கு உயிர் தோழன் என்று சொன்ன சொல்)

சொல் முன்னே உவக்கின்ற = இது ஒரு ஆச்சரியமான வரி. சொல்வதற்கு முன்னே மகிழ்ந்தான். எப்படி சொல்வதற்கு முன்னேயே மகிழ்ச்சி வரும். சில பேரை கண்டால், இனம் புரியாத மகிழ்ச்சி மனதில் கொப்பளிக்கும். யார் என்று தெரியாது, என்ன பேர், என்ன ஊர் எதுவும் தெரியாது. இருந்தாலும் ஏதோ ரொம்ப நாள் பழகின மாதிரி ஒரு எண்ணம் தோன்றும். சுமந்திரன் சொல்வதற்கு முன்னாலேயே பரதனுக்கு மனதிற்குள் ஒரு சந்தோஷம். 

துரிசு இலாத் திரு மனத்தான் = மனதில் ஒரு குற்றமும் இல்லாதவன். வள்ளுவர் சொன்ன மாதிரி "மனதிற்கன் மாசு இலன்" . மனதில் கூட குற்றம் இல்லாதவன். அவ்வளவு நல்லவன். 

‘மன் முன்னே தழீஇக் கொண்ட = நம் மன்னவனான இராமனை தழுவிக் கொண்ட

மனக்கு இனிய துணைவனேல் = மனதுக்கு இனிய துணைவன் என்றால்

என் முன்னே  அவற் காண்பென்  யானே சென்று’ என எழுந்தான். = அவனுக்கு முன்னால் நானே போய் அவனைப் பார்ப்பேன் என்று பரதன் எழுந்தான்

பரதனும், குகனும் சந்தித்த இடத்தில் கம்பனின் பாடல்கள் ஒவ்வொன்றும் தேன் சொட்டும் பாடல்கள்.

நேரம் இருப்பின் மூல நூலை படித்துப் பாருங்கள்.