Wednesday, June 29, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 10 - அறன்வரையான் அல்ல செயினும்

திருக்குறள் - பிறனில் விழையாமை - 10 -  அறன்வரையான் அல்ல செயினும் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html


குறள் 144 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html


குறள் 145 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_19.html


குறள் 146 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_21.html


குறள் 147 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7_23.html


குறள் 148 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/8_24.html


குறள் 149 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/9.html


)


எத்தனையோ விதமான பாவங்கள் இருக்கின்றன. ஒருவன் அத்தனை பாவத்தையும் நீக்கி இந்த உலகில் வாழ முடியுமா? 


சின்ன சின்ன பொய்கள்,  சில உண்மைகளை மறைத்தல், சில பல ஆசார குறைபாடுகள், கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் கோபம், இவ்வளவு வரி கட்ட வேண்டுமா ? கொஞ்சம் குறைத்து கட்டுவோமே என்று தோணாதா? இதெல்லாம் வரும் தானே. இதில் ஒன்று கூட எனக்கு இல்லை என்று யாராலாவது கூற முடியுமா? 


சரி, ஒன்றிரண்டு மீறினால் பரவாயில்லை என்றால், இரண்டு மூணு செய்யலாமா, நாலைந்து செய்யலாமா என்று கேள்வி வரும். சில குற்றங்கள் நடந்தாலும் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம் என்றால் அவை என்னென்ன குற்றங்கள் ? அவற்றை யார் முடிவு செய்வது என்றெல்லாம் நடைமுறை சிக்கல்கள் எழும். 


வள்ளுவர் இதை உணர்கிறார். நடைமுறைக்கு ஒவ்வாத அறிவுரைகளை அவர் கூற மாட்டார். 


வள்ளுவர் கூறுகிறார் "...இங்க பாரு,  எனக்குத் தெரியும், ஏதோ அங்கொன்றும், இங்கொன்றும் சில தவறுகள் நீ செய்வாய். தவறு செய்யாத மனிதனே இல்லை. நீ எந்தத் தவறு செய்தாலும், ஒரு தவற்றை மற்றும் செய்து விடாதே, மாற்றான் மனைவியை விரும்பும் அந்த ஒரு குற்றத்தை மட்டும் செய்து விடாதே"  என்கிறார். 



பாடல் 


அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்

பெண்மை நயவாமை நன்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/10.html



(pl click the above link to continue reading)


அறன்வரையான் = அறத்தின் வரையறைக்குள் உள்ளவற்றை 


அல்ல செயினும் =  மறுத்து, அதற்கு வெளியில் உள்ளதை  செய்தாலும் 


பிறன்வரையாள் = மற்றவன் இல்லற வரைவுக்குள் இருக்கும் பெண்ணை 


பெண்மை நயவாமை நன்று = அந்தப் பெண்ணை விரும்பாமல் இருப்பது நல்லது 


ஆஹா வள்ளுவரே சொல்லிவிட்டார், பிறன் மனை நோக்கும் அந்த ஒரு தவறைத் தவிர மற்ற குற்றங்களை செய்யலாம் என்று, எனவே நான் நாளை முதல் மற்ற குற்றங்கள் எல்லாம் செய்யப் போகிறேன் என்று ஆரம்பித்து விடக் கூடாது. 


"அல்ல செயினும்" என்றால், செய்யக் கூடாது, ஒரு வேளை செய்து விட்டால் கூட, இந்த ஒரு தவறை செய்யக் கூடாது என்று அர்த்தம். 


"நீ ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் படித்தால், மாநிலத்திலேயே முதலாவதாக வருவாய்" என்றால், "படித்தால்" என்பதில் படிக்க முடியாது என்பது தொக்கி நிற்கிறது. 


இல்லறத்தில் இருப்பவன் சில சமயம் தவிர்க்க முடியாமல் சில தவறுகளை செய்ய நேரிடலாம். அந்த மாதிரி சமயத்தில் கூட, பிறன் மனை நோக்கும் தவறை செய்துவிடக் கூடாது என்கிறார். 


நிற்க.


பத்து குறளும் படித்து விட்டோம் இந்த அதிகாரத்தில். 


ஒவ்வொரு குறள் பற்றி எழுதும் போதும், அதற்கு முன்னால் உள்ள குறள் பற்றி எழுதிய வலை தளங்களின் முகவரியை பகிர்ந்து வந்திருக்கிறேன். 


தொகுப்புரை என்று தனியாகத் தேவையா? 



Tuesday, June 28, 2022

கம்ப இராமாயணம் - இராமன் என்றொரு மானுடன் - 5 - திருஇலி வலிக்கு

    

கம்ப  இராமாயணம் - இராமன் என்றொரு மானுடன்  - 5  -  திருஇலி வலிக்கு


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_25.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_23.html


)

 இனித் தொடர்வோம். 


தயரதன் தனக்கு ஒரு வாரிசு இல்லை என்று தன் குல குருவான வசிட்டரிடம் கூறினான். உடனே வசிட்டர் தன் ஞானக் கண்ணால் மேலுலகத்தில் நடந்தவற்றை பார்கிறார். 


தேவர்கள் எல்லோரும் சிவனிடம் சென்று முறையிடுகிறார்கள்.  சிவ பெருமானோ "நான் அரக்கர்களோடு போரிடுவது இல்லை என்று ஒரு வரத்தை அவர்ககளுக்கு கொடுத்து இருக்கிறேன். எனவே நான் அவர்களை எதிர்த்து போரிட முடியாது" என்று கூறிவிட்டு, அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு நான்முகனிடம் போனார். பிரமனும் தன்னால் முடியாது என்று கூறி அனைவரையும் அழைத்துக் கொண்டு பாற்கடல் சென்றனர், திருமாலிடம் முறையிட. 


"பத்துத் தலையும், இருபது கரங்களும் உள்ள அந்த அருள் இல்லாத இராவணனின் கொடுமையை எங்களால் தடுக்க முடியவில்லை. கருணைக் கடலான திருமாலே, நீர் அவனோடு சண்டையிட்டு எங்களை காத்தால் உண்டு" என்று திருமாலிடம் சரண் அடைந்தார்கள். 


பாடல் 



‘இருபது கரம். தலை ஈர்-ஐந்து. என்னும் அத்

திருஇலி வலிக்கு. ஒரு செயல் இன்று. எங்களால்.

கரு முகில் என வளர் கருணைஅம் கடல்

பொருது. இடர் தணிக்கின் உண்டு. எனும் புணர்ப்பினால்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_28.html


(pl click the above link to continue reading)




‘இருபது கரம் = இருபது கரங்கள் 


தலை ஈர்-ஐந்து = பத்துத் தலைகள் 


என்னும் = என்று இருக்கும் 


அத் திருஇலி  = அருள் இல்லதா, கருணை இல்லாத 


வலிக்கு = வலிமை மிக்க இராவணனை அடக்க 


ஒரு செயல் இன்று  = ஒரு செயலையும் செய்ய முடியவில்லை 


எங்களால். = தேவர்களாகிய எங்களால் 


கரு முகில் = கரிய மேகம் 


என  = போல 


வளர் கருணைஅம் கடல் = நாளும் வளரும் கருணைக் கடலே 


பொருது = அவனோடு சண்டையிட்டு 


இடர் தணிக்கின் உண்டு = எங்கள் துன்பத்தை தணித்தால் தான் உண்டு 


எனும் புணர்ப்பினால். = என்ற கருதினால். அந்தக் கருத்தைச் சொன்னார்கள் 


இராவணன் உட்பட எல்லா அரக்கர்களுக்கும் ஒரு சிக்கல் இருக்கிறது. 


மிக மிக கடுமையாக தவம் செய்வார்கள். இறைவனே நேரில் வருவான். கேட்கின்ற வரத்தை எல்லாம் தருவான். நீண்ட ஆயுள், செல்வம், புகழ், பெருமை, வீரம், அனைத்து வித இன்பங்களும் கிடைக்கும். 


வேறு என்ன வேண்டும்? அதை வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டியதுதானே? 


ஆணவம் இருக்க விடுவதில்லை. 


தேவர்களை அடிமைப் படுத்தத் தூண்டும். சரி, அவர்களை வென்று சிறையில் அடைத்து விட்டால் அது அடங்குமா என்றால் இல்லை. அவர்களை துன்புறுத்த வேண்டும். அல்லது தான் தான் கடவுள், தன்னைத் தான் எல்லோரும் வணங்க வேண்டும் என்று ஆணவம் தலை தூக்கும். 


தேவர்களை துன்பப்படுத்தினால் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது? 


அது அரக்கர்களின் சிக்கல் மட்டும் அல்ல. 


நம் சிக்கலும் தான்.


எவ்வளவோ இருக்கிறது. இருக்கிறதை வைத்துக் கொண்டு இன்பமாக இருக்கத் தெரிவதில்லை. இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் அலைவது. பின் முட்டி மோதி அழிவது. இருப்பதையும் அனுபவிக்காமல், ஓடி ஆடி சம்பாதித்தையும் அனுபவிக்காமல், வாழ்வை இழந்து நிற்பது. 


இராவணன் அடுத்தவன் மனைவியை ஆசைப்பட்டான். 


நாம் அடுத்தவன் வைத்திருக்கும் காருக்கு, அவன் போல் பெரிய வீட்டுக்கு, அவன் செல்வத்திற்கு, புகழுக்கு ஆசைப் படுகிறோம். 


இலக்கியம் கொஞ்சம் மிகைப் படுத்தித்தான் கூறும். அடிப்படை என்ன என்றால், இருப்பதைக் கொண்டு இன்பமாக வாழத் தெரியாதவன், மேலும் கொஞ்சம் வந்து விட்டால் மட்டும் இன்பமாக வாழ்ந்து விடுவானா? 


ஒருக்காலும் முடியாது. 


இராவணனின் அழிவு எங்கே ஆரம்பிக்கிறது என்று இராமாயணம் காட்டுகிறது. 


இராம அவதாரம் நிகழவில்லை. சீதை இன்னும் பிறக்கவில்லை. ஆனால், அவனின் அழிவு தீர்மானிக்கப் பட்டு விட்டது. 


எங்கே அறம் பிறழ ஆரம்பிக்கிறதோ, அன்றே அழிவின் விதை ஊன்றப் பட்டுவிட்டது என்று அர்த்தம். விதை வளரும். 


அதை நீங்கள் கடவுள் என்று நம்பினாலும் சரி, இயற்கை என்று கொண்டாலும் சரி, விதி என்று நினைத்தாலும் சரி, எப்படி என்றாலும் அறம் பிறழத் தலைப்பட்டால் அழிவின் தொடக்கம் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


அறம் ஒன்றும் அவசரப்படாது.  நின்று, நிதானமாக வேலை செய்யும். நமக்குத்தான் என்பது வருடம், நூறு வருடம் என்று ஆயுள் கணக்கு இருக்கிறது. அறத்திற்கு காலம் ஒரு பொருட்டு அல்ல. அது என்றும் நிலைத்து நிற்பது. அது தன் பாட்டுக்கு தன் வேலையைத் தொடரும். 






Monday, June 27, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 9 - தோன்தோயா தார்

திருக்குறள் - பிறனில் விழையாமை - 9 -  தோன்தோயா தார்


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html


குறள் 144 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html


குறள் 145 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_19.html


குறள் 146 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_21.html


குறள் 147 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7_23.html


குறள் 148 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/8_24.html


)


நாம் வாழும் இந்த பூமி என்பது சதவீதம் நீரால் சூழப்பட்டது. நீர் என்றால் ஏதோ சின்ன குளம், குட்டை அல்ல. என்னவென்று தெரியாத ஆழம், அகலம் கொண்ட பிரமாண்டமான நீர் பரப்பு. கடல் அவ்வளவு பெரியது. 


அந்தக் கடல் சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் நிலப் பரப்பு முழுவதும் ஒரு நொடியில் மூழ்கிப் போய் விடும். 


அவ்வளவு பெரிய ஆபத்துக்கு மத்தியில் நாம் இருக்கிறோம். எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நிகழலாம். 


இருந்தும், இந்த ஆபத்துக்கு நடுவில் எல்லா நலன்களும் பெற்று வாழ்பவர் யார் என்றால், பிறன் மனைவியை தோளோடு தோள் சேர அனைக்காதவன் என்கிறார் வள்ளுவர். 



பாடல் 


நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்

பிறற்குரியாள் தோன்தோயா தார்.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/9.html


(pl click the above link to continue reading)


நலக்குரியார் = நலத்துக்கு உரியவர் 


யாரெனின் = யார் என்று கேட்டால் 


நாமநீர் = கடல் நீர் 


வைப்பின் = சூழ்ந்து இருக்கும் இந்த உலகில் 


பிறற்குரியாள் = மற்றவனுக்கு  உரியவள் 


தோன்தோயா தார். = தோளில் தோயாதவர், அணைத்துக் கொள்ளாதவர் 


கடல் சீற்றம் கொண்டால், "இவன் நல்லவன், பிறன் மனை நோக்கா பேராண்மையாளன் , எனவே இவனை விட்டு விடுவோம்"  என்றா நினைக்கும்? அவனும் சேர்ந்து தானே மூழ்கிப் போவான்?


அங்குதான் பரிமேலழகர் வருகிறார். 


"ஆம். அவனும் தான் இறப்பான். ஆனால், அவனுக்கு மறு பிறப்பில், அல்லது மேல் உலகில் நல்ல கதி கிடைக்கும். மறுமையில் இன்பம் கிடைக்கும். பிறன் மனை நோக்கியவனுக்கோ இம்மையிலும் மறுமையிலும் இன்பம் இல்லை" என்று உரை எழுதுகிறார். 


பிறன் மனை நோக்கியவன் இந்தப் பிறவியிலும் பயந்து பயந்து வாழ வேண்டும். மறு பிறவியிலும் நல்லது நடக்காது. 


எவ்வளவு ஆழமாக எழுதி இருக்கிறார்கள். அதை எவ்வளவு உன்னிப்பாக படித்து  இருக்கிறார்கள். 


திருக்குறள் தாண்டி இன்னொரு புத்தகம் வேண்டுமா? 







Saturday, June 25, 2022

கந்தரலங்காரம் - 60 - கிலேசம்

 கந்தரலங்காரம் - 60 - கிலேசம் 


நமக்கு எவ்வளவோ துன்பங்கள் வந்து இருக்கிறன்றன. இனியும் வரலாம். 


அருணகிரிநாதர் மனிதனுக்கு வரும் துன்பங்களை எல்லாம் இரண்டாகப் பிரிக்கிறார். மொத்தமே இரண்டு வகையான துன்பங்கள்தான் உண்டு. 


ஒன்று உடலுக்கு வரும் துன்பம். 


மற்றது மனதுக்கு வரும் துன்பம். 


இதில், மனதுக்கு வரும் துன்பம்தான் மிக மிக அதிகமானது. தலைவலி, கால்வலி, வயிற்று வலி போன்ற உடல் சார்ந்த துன்பங்கள் வரும் போகும். காய்ச்சல், சளி, போன்றவை வந்து போகும் தன்மை கொண்டவை. ஏதோ விபத்தில் கை கால் முறிந்து விட்டால் கூட கட்டுப் போட்டு சரியாகி விடும். 


மிக மிக சிறிய அளவிலான உடல் சார்ந்த துன்பங்கள்தான் தீர்க்க முடியாமல் நீண்ட நாள் இழுத்துக் கொண்டு இருக்கும். பெரும்பாலான உடல் சார்ந்த துன்பங்கள் அப்படி அல்ல.


ஆனால், இந்த மனம் சார்ந்த துன்பங்கள் இருக்கிறதே, அதற்கு ஒரு எல்லை கிடையாது. 


பயம், பொறாமை, வெறுமை, படபடப்பு, மன அழுத்தம், வெறுப்பு, கோபம், ஏக்கம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். 


எவ்வளவு செல்வம் இருந்தாலும், மற்றவன் என்னை விட அதிகம் வைத்து இருக்கிறானே என்ற எண்ணம் வந்து விட்டால், அந்த மனத் துயருக்கு ஏது மருந்து? 


கிலேசம் என்றால் துன்பம். 


உடல் கிலேசம், மனக் கிலேசம் என்கிறார் அருணகிரிநாதர். 


உடலை சரியாக வைத்துக் கொள்ள உடல் பயிற்சி, உணவு கட்டுப் பாடு, அதையும் மீறி ஏதாவது வந்து விட்டால் மருத்துவரை நாடி பரிசோதனைகள் செய்து, மருந்து உண்டு உடல் துன்பத்தைப் போக்கிக் கொள்கிறோம். 


மனத் துன்பத்தை என்ன செய்வது? சிக்கல் என்ன என்றால், பல நேரம், மன துன்பம் இருக்கிறது என்று கூடத் தெரியாது. 


அருணகிரிநாதர் இரண்டு துன்பங்களும் ஏன் வந்தன, அவை வராமல் எப்படி தடுப்பது என்று கூறுகிறார். 


பாடல் 


சிந்திக்கிலேனின்று சேவிக்கிலேன் றண்டைச் சிற்றடியை

வந்திக்கிலேனொன்றும் வாழ்த்துகிலேன் மயில்வாகனனைச்

சந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேனுண்மை சாதிக்கிலேன்

புந்திக்கிலேசமுங் காயக்கிலேசமும் போக்குதற்கே.


சீர் பிரித்த பின் 


சிந்திக்கிலேன் நின்று  சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை

வந்திக்கிலேன் ஒன்றும்  வாழ்த்துகிலேன் மயில்வாகனனைச்

சந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன்

புந்திக்கிலேசம்  காயக்கிலேசமும் போக்குதற்கே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/60.html



(click the above link to continue reading)



சிந்திக்கிலேன் = சிந்திக்க மாட்டேன், மனதில் நினைக்க மாட்டேன் 


நின்று  சேவிக்கிலேன் = நின்று வணங்க மாட்டேன் 


தண்டைச் சிற்றடியை =  தண்டை அணிந்த சிறிய திருவடியை 


வந்திக்கிலேன் = வணங்க மாட்டேன் 


ஒன்றும்  வாழ்த்துகிலேன் = ஒரு வாழ்த்தும் சொல்ல மாட்டேன் 


மயில்வாகனனைச் = மயில் வாகனனை, முருகனை 


சந்திக்கிலேன் = சந்திக்க மாட்டேன் 


பொய்யை நிந்திக்கிலேன் = பொய்யை வெறுக்க மாட்டேன் 


உண்மை சாதிக்கிலேன் = உண்மையை நிலை நிறுத்த முயல மாட்டேன் 


புந்திக்கிலேசம் = புத்தியில், ,மனதில் வரும் துன்பத்தையும் 


காயக்கிலேசமும் =உடலுக்கு வரும் துன்பத்தையும் 


போக்குதற்கே. = போக்குவதற்கு 


இவை ஒன்றும் செய்யாமல் "ஐயோ, எனக்கு உடல் துன்பம் வந்து விட்டதே, மன உளைச்சலில் கிடந்து உழல்கின்றேனே" என்று வருந்துவதில் பயன் இல்லை. 


இதில் ஓரிரண்டு செய்திகளை நாம் ஆழ்ந்து சிந்திக்கலாம்.



"பொய்யை நிந்திக்கிலேன்". பொய் என்றால் தவறானவை என்று பொருள் கொள்ள வேண்டும். இன்று என்ன நடக்கிறது? தவறுகள் போற்றப் படுகின்றன. இலஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பவர்கள் பெரிய திறமைசாலிகள் என்று வியக்கப்படுகிரார்கள். 


"அவர் பணம் வாங்கிட்டார்ணா, எப்படியாவது காரியத்தை முடித்து கொடுத்து விடுவார் " என்று பணம் வாங்குபவரை புகழும் காலம் வந்து விட்டது. 


"சட்டத்தின் ஓட்டைக்குள் புகுந்து வெளியில் வந்து விடுவார்...பெரிய கில்லாடி" என்று சட்டத்தை மீறுபவர்களுக்கு புகழாரம். 


பணம் கொடுத்து பிள்ளைக்கு கல்லூரியில் இடம் வாங்கிய தகப்பன் காலரை தூக்கி விட்டுக் கொள்கிறார். தலை குனிவதை விட்டு விட்டு. 


மனக் கிலேசம் வராமல் என்ன செய்யும் ?


"சிந்திக்கிலேன்". காலையில் எழுந்தவுடன் youtube இல்  அல்லது ஏதோ ஒரு mp3 இல் பக்திப் பாடலை ஓட விட்டுக் கொண்டு, அடுப்படி வேலை எல்லாம் நடக்கும். கேட்டால் பக்தி என்பது. அந்த ஒரு குறிப்பிட்ட பாடலை கேட்காமல் காப்பி கூட குடிப்பது இல்லை என்று பெருமை வேறு. தவறு இல்லை. ஆனால், அது பக்தி இல்லை. மனம் ஒன்ற வேண்டும். ஒரு வரி, ஒரு சொல் ...அது பற்றி சிந்திக்க வேண்டும். 


"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே" என்ற ஒரு வாக்கியத்தைப் படித்த பட்டினத்தார் அத்தைனையும் துறந்தார். 


நாமும் இந்த வரியை எத்தனையோ முறை படித்து இருக்கிறோம். ஒன்றையும் விட முடியவில்லை. காரணம்,  "சிந்தனை இல்லை". ஏதோ இரண்டும் இரண்டும் நாலு என்று வாய்ப்பாடு போல படித்துவிட்டு மேலே போய் விடுகிறோம். 


சிந்தனை இல்லை, 

பணிவு இல்லை,

பொய்யின் மேல் வெறுப்பு இல்லை, 

உண்மை மேல் நாட்டம் இல்லை, 

இறை தேடல் இல்லை, 

வாழ்த்தும் மனம் இல்லை, 


துன்பம் எப்படிப் போகும் என்று கேட்கிறார். 










Friday, June 24, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 8 - பேராண்மை

   

  

திருக்குறள் - பிறனில் விழையாமை - 8 -  பேராண்மை  


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html


குறள் 144 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html


குறள் 145 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_19.html


குறள் 146 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_21.html


குறள் 147 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7_23.html


குறள் 148 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/8_24.html


)


ஆண்மை என்றால் வீரம், கம்பீரம், துணிவு, வலிமை என்று பொதுவாக பொருள் சொல்லலாம். 


வீரம் என்றால் பகைவர்களை வெல்வது, அவர்கள் வலிமையை ஒடுக்குவது என்று கொள்ளலாம். 


வெளியில் உள்ள பகையை வெல்வது எளிது. உள்ளே உள்ள பகையாகிய காமத்தை வெல்வது மிகக் கடினம். 


எனவே வள்ளுவர் வெளிப் பகையை வெல்வதை ஆண்மை என்றும், உள் பகையான காமத்தை வெல்வதை பேராண்மை என்றும் கூறுகிறார். 


இராவணன் ஆண்மை மிக்கவன்தான். வெளிப் பகை எல்லாம் வென்று , அடக்கி ஒடுக்கினான். ஆனால், உட்பகையான காமத்தை வெல்ல முடியவில்லை. 


சீதையிடம் மண்டியிடுகிறான், காலில் விழுகிறான். கெஞ்சுகிறான்.  எங்கே போயிற்று ஆண்மை? 


'இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்"  தந்த இராமன் பேராண்மையால் உயர்ந்து நிற்கிறான். 


பாடல் 


 

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு



பொருள் 



(pl click the above link to continue reading)


பிறன்மனை = மாற்றான் மனைவியை 


நோக்காத = நோக்காத 


பேராண்மை = பேராண்மை, பெரிய ஆண்மை 


சான்றோர்க்கு = சான்றோருக்கு 


அறனொன்றோ = அறன், காவல் 


ஆன்ற ஒழுக்கு = நிறைந்த ஒழுக்கமும் 


சான்றோருக்கு, மற்றவன் மனைவியை நோக்கமல் இருப்பது காவலும், அறமும் ஆகும் என்கிறார். 


இதில் பரிமேலழகர் செய்யும் நுணுக்கங்கள் சுவையானவை. 


ஒவ்வொன்றாகப் பார்ப்போம். 


"நோக்கா".  மற்றவன் மனைவியை பார்க்காமல் இருப்பது என்று அர்த்தமா? அது முடியுமா? வேலைக்குப் போகிறோம். எவ்வளவோ திருமணம் ஆன பெண்கள் உடன் வேலை செய்கிரார்கள். அவர்களை எல்லாம் பார்க்கக் கூடாது என்றால் ஒன்று நாம் வேலைக்குப் போகக் கூடாது, அல்லது அவர்கள் வேலைக்கு வரக் கூடாது. அது முடியாத காரியம். 


நோக்குதல் என்றால் "உள்வாங்குதல்" என்று உரை செய்கிறார்.  இந்த இடத்தில் காமக் கண்ணோட்டத்தோடு பார்ப்பது என்று பொருள். ஆசையோடு பார்த்தல்.  ஒரு அர்த்தத்தோடு பார்த்தல்.


"அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்" என்பான் கம்பன். அங்கே காதல் இருந்தது. 


மாற்றான் மனைவி மேல் வைப்பது காதல் அல்ல, காமம். 


"சான்றோருக்கு" அது என்ன குறிப்பாக சான்றோற்கு என்கிறார்?  சான்றோர் என்றால் யார்? அனைத்து நல்ல குணங்களும் நிறைந்தவர்கள். குறை ஒன்றும் இல்லாதவர்கள். அவர்களைப் பார்த்து நாம் படிக்க வேண்டும். 


"அறனொன்றோ". அறன் புரிகிறது. அது என்ன "ஒன்றோ" ? 


கொஞ்சம் இலக்கணம் படிப்போம். அப்போதுதான் அது புரியும். 


தமிழ் இலக்கணத்தில் "எண்ணிடை" என்று ஒன்று உண்டு. 


அதற்கு முன் உருபு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். 


எழுத்து, சொல், வரி அல்லது வாக்கியம், பத்தி (para), கதை/கட்டுரை என்று விரிந்து கொண்டே போகிறது அல்லவா?


வீடு கட்டும் போது செங்கல் மேல் செங்கல் அடுக்கிக் கொண்டே போக முடியாது. இரண்டு செங்கல் ஒன்றை ஒன்று இறுக பற்றிக் கொள்ள வேண்டும் என்றால் நடுவில் கொஞ்சம் சாந்து வேண்டும். சிமென்ட் அல்லது காரை என்று சொல்லுவார்கள். அதை இரண்டு செங்கலுக்கு நடுவில் வைத்து கட்டினால் தான் கட்டிடம் உறுதியாக இருக்கும். 


அது போல இரண்டு சொற்களை கட்டுவதற்கு 'உருபு'  என்ற ஒன்றைப் பயன் படுத்துகிறோம். து ஒரு இடைச் சொல். அது பற்றி ஒரு தனி புத்தகமே எழுதலாம். 


மிகவும் சுவையான பகுதி. 


அவள் முகம் நிலவு  இருந்தது 


என்றால் ஏதோ சரியாக இல்லை என்று தோன்றுகிறது அல்லவா? 


அவள் முகம் நிலவு போல இருந்தது 


என்றால் சரியாக இருக்கிறது அல்லவா? இங்கே போல என்பது ஒரு உருபு. 


இராமன் இராவணன் கொன்றான் 


என்றால் சரியாக இருக்கிறதா? இல்லையே 


இராமன் இராவணனைக் கொன்றான் 


இப்போது சரியாக இருக்கிறது அல்லவா? இங்கே இராவணனை என்பதில் உள்ள  'ஐ' என்பது ஒரு உருபு. 


அது பற்றி பின்னர் விரிவாக காண்போம். 


குறளுக்கு வருவோம். 



"அறனொன்றோ " என்பதில் 'ஒன்றோ' என்பது 'எண்ணிடை உருபு என்கிறார் பரிமேலழகர். 


ஒரு பட்டியல் இருக்கிறது என்றால், அது முழுமையாக தெரிந்து விட்டால் அதற்கு எண்ணிடை உருபை பயன் படுத்தலாம். 


உதாரணமாக 


மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் சுவையானவை. 


இதில் 'ஆகிய' என்பது எண்ணிடை உருபு. 


கண், வாய், செவி, மூக்கு, தோல் ஆகிய ஐந்து புலன்களும் 

இயல் , இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் 


என்று கூறும் போது அந்த பட்டியல் முடிந்து விடுகிறது. மொத்தமும் அவ்வளவுதான். அதற்கு மேல் ஒன்றும் இல்லை. 


எனவே, அங்கு எண்ணிடை உருபை பயன்படுத்தலாம். 


இங்கே 


"அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு" என்பதில் அறமும், ஒழுக்கமும் ஆகிய இரண்டும் இந்த ஒன்றைச் செய்யாமையால் வரும் என்கிறார். 


ஒன்றோ என்பது எண்ணிடை உருபு. 


இறுதியாக, அறம் செய்வது கடினமான காரியம். அறத்தின் வழி வாழ்வது என்பது கத்தி மேல் நடப்பது போல. மிக மிக எச்சரிகையாக இருக்க வேண்டும். 


ஆனால், சில சமயம் ஒன்றும் செய்யாமலேயே அற வழியில் நாம் செல்ல முடியும். சும்மா இருந்தால் போதும். 


உதாரணமாக, மற்றவன் பொருளை களவாடாமல் இருந்தால் அது ஒரு அறம். 


எடுக்காமல் இருந்தால் போதுமே. 


பொய் சொல்லமால் இருந்தால் அது ஒரு அறம். 


அது போல, பிறன் மனை நோக்காமல் இருந்தால் அதுவே ஒரு அறம். 


எவ்வளவு எளிது !


" செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்" 


என்று பரிமேலழகர் முடிக்கிறார். 




Thursday, June 23, 2022

கம்ப இராமாயணம் - இராமன் என்றொரு மானுடன் - 5 - யான் இனி அடுகிலேன்

   

கம்ப  இராமாயணம் - இராமன் என்றொரு மானுடன்  - 5  -  யான் இனி அடுகிலேன்


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_25.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4_22.html


)

 இனித் தொடர்வோம். 


தயரதன் தனக்கு ஒரு வாரிசு இல்லை என்று தன் குல குருவான வசிட்டரிடம் கூறினான். உடனே வசிட்டர் தன் ஞானக் கண்ணால் மேலுலகத்தில் நடந்தவற்றை பார்கிறார். 


தேவர்கள் எல்லோரும் சிவனிடம் சென்று முறையிடுகிறார்கள்.  சிவ பெருமானோ "நான் அரக்கர்களோடு போரிடுவது இல்லை என்று ஒரு வரத்தை அவர்ககளுக்கு கொடுத்து இருக்கிறேன். எனவே நான் அவர்களை எதிர்த்து போரிட முடியாது" என்று கூறிவிட்டு, அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு 



பாடல்  


சுடு தொழில் அரக்கரால் தொலைந்து. வான் உளோர்.

கடு அமர் களன் அடி கலந்து கூறலும்.

படு பொருள் உணர்ந்த அப் பரமன். ‘யான் இனி

அடுகிலேன்’ என மறுத்து. அவரொடு ஏகினான்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_23.html


(pl click the above link to continue reading)


சுடு தொழில் = தீய தொழில்களை செய்யக் கூடிய 


அரக்கரால் = அரக்கர்களால் 


தொலைந்து = வாழ்வை தொலைத்து 


வான் உளோர். = வானில் உள்ள தேவர்கள் 


கடு = கசப்பு, நஞ்சு 


அமர் = அமர்ந்த, இருந்த, தங்கிய 


களன் = கழுத்து (நஞ்சு கழுத்தில் தங்கிய = சிவன்) 


 அடி கலந்து கூறலும் = திருவடிகளை பணிந்து கூறிய பின் 


படு பொருள் = இனி வரப் போவதை 


 உணர்ந்த = உணர்ந்த 


அப் பரமன் = அப்பரமன், பெரிய கடவுள் 


 ‘யான் இனி = நான் இனி 


அடுகிலேன்’ = (அரக்கர்களோடு) போர் புரிய மாட்டேன்  (தந்த வரம் காரணமாக) 


என மறுத்து = என்று மறுத்து 


அவரொடு ஏகினான் = அவர்களை (தேவர்களை) கூட்டிக் கொண்டு போனான் 


எங்கே போனான் என்பதை அடுத்த பாட்டில் சொல்கிறார் கம்பர். 


இதெல்லாம் திருமால் இராமன் என்ற மானுட அவதாரம் எடுப்பதற்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகள். 


இராமாயணம் எப்படி உருவானது, அதன் கதைக் கரு எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்வோம்.  

திருக்குறள் - பிறனில் விழையாமை - 7 - பிற பெண் நயவாமை

  

  

திருக்குறள் - பிறனில் விழையாமை - 7 -   பிற பெண் நயவாமை 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html


குறள் 144 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html


குறள் 145 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_19.html


குறள் 146 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_21.html


)

வாழ்வின் நோக்கம் என்ன? எதற்காக வாழ்கிறோம்? முடிவில் எதை சாதிக்க நினைக்கிறோம்? 


ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இருந்து விட்டு போவதா வாழ்க்கை?


வாழ்வின் நோக்கம் வீடு பேறு. முக்தி. இறைவன் திருவடி. தன்னைத் தான் அறிதல். உண்மையை அறிதல். துன்பத்தில் இருந்து விடுபடுதல். பிறவித் துயர் நீங்கல் என்று எது வேண்டுமானாலும் உங்கள் குறிக்கோளாக இருந்துவிட்டுப் போகட்டும். ஏதோ ஒன்றைப் பற்றிக் கொண்டால், அதை அடைய முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா? 


பலபேருக்கு குறிக்கோளே இருப்பதில்லை. ஏதோ நாட்கள் ஓடிக் கொண்டு இருக்கிறது. 


சிலருக்கு குறிக்கோள் இருக்கும், அதை அடைய என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது. 


இன்னும் சிலருக்கு, குறிக்கோள் இருக்கும், என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியும். ஆனால் செய்ய மனம் இருக்காது. சோம்பேறித்தனம் மேலோங்கி நிற்கும். அவர்கள் என்ன செய்வார்கள், மேலும் மேலும் படித்துக் கொண்டே இருப்பார்கள். எதற்கு என்று தெரியாது. இதுவரை படித்ததில் எத்தனை நடைமுறையில் செய்து இருக்கிறார்கள் என்று கேட்டால் ஒன்றும் இருக்காது. சும்மா ஒரு சுவைக்காக படிப்பது. நல்லா இருக்கு, very nice என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவது. 


வள்ளுவர் தன் நூலை பொழுது போக்குக்காக எழுதவில்லை. 


வீடு பேறு அடைய வேண்டும் என்ற குறிக்கோளை மனதில் கொண்டு எழுதுகிறார். 


வீடு பேறு அடைய வேண்டும் என்றால், பற்று விட வேண்டும். 


பற்று விட வேண்டும் என்ன்றால் துறவறம் வேண்டும். 


துறவறம் வேண்டும் என்றால் இல்லறம் வேண்டும். .


இல்லறம் வேண்டும் என்றால் அதற்கு சில ஒழுக்க விதிமுறைகள் வேண்டும். கட்டுப் பாடு வேண்டும். 


இல்லறம் என்பது ஏதோ கல்யாணம் பண்ணி, பிள்ளைகள் பெற்றுக் கொள்வது அல்ல. 


அறத்தோடு இல்லதில் வாழ்வது.  


அந்த அறத்தில் ஒரு கூறு "மாற்றான் மனைவியை விரும்பாமல் இருப்பது". 


அந்தத் தவறு நிகழுமானால், இல்லறம் சிதையும். இல்லறம் சிதைந்தால் துறவறம் சிதையும். வீடு பேறு என்பது நிகழாது. 


எனவே, இல்லறத்தை சரி செய்ய வேண்டும், அதில் தவறு நிகழ்ந்து விடக் கூடாது என்று இந்த அதிகாரத்தை எழுதிக் கொண்டு போகிறார் வள்ளுவர். 


அடுத்த குறளில் 


"அற இயல்போடு இல்லறத்தில் ஈடுபட்டவன் என்பவன் யார் என்றால், மற்றவன் மனைவியை விரும்பாதவன்"


என்கிறார். 


பாடல் 


அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறஇயலாள்

பெண்மை நயவா தவன்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7_23.html


(pl click the above link to continue reading)



அறன்இயலான் = அறமாகிய இயல்போடு கூடி 


இல்வாழ்வான் என்பான் = இல்லறத்தில் வாழ்பவன் என்று கூறப்படுபவன் யார் என்றால் 


பிறஇயலாள் = பிறன் இயல்பை அறிந்து அவனோடு ஒன்றி வாழும் 


பெண்மை நயவா தவன் = பெண்ணை விரும்பாதவன் 


இல்லறத்தான் என்றால் ஏதோ திருமணம் ஆகி, பெண்ட்டாடி பிள்ளைகள், உறவு, சுற்றம் என்று இருப்பவன் அல்ல. 


எவன் ஒருவன் மாற்றான் மனைவியை விரும்பாமல் இருக்கிறானோ, அவனே இல்லறத்தில் உள்ளவன் என்று கூரப்படுவான் என்கிறார். 


மேலும், 


இங்கே இல்லறத்தின் ஒரு முக்கிய தன்மையை குறிப்பிடுகிறார். 


மனைவி என்பவள், கணவன் இயல்பை அறிந்து அவனோடு ஒன்றி வாழ்பவள் என்று கூறுகிறார். "ஆஹா, அது என்ன மனைவிக்கு மட்டும் அப்படி ஒரு கட்டுப்பாடு. கணவன் என்பவன் மனைவியின் இயல்பை அறிந்து ஒட்டி வாழ்பவன் என்று ஏன் கூறவில்லை. பெண்ணடிமைத்தனம். பிற்போக்கு வாதிகள்" என்று கொடி பிடிப்பவர்கள் பிடிக்கட்டும். 


யாரோ ஒருவர் மற்றவர் இயல்போடு ஒன்றித்தான் ஆக வேண்டும். ஆளுக்கு ஒரு இயல்பு என்று இழுத்துக் கொண்டிருந்தால் இல்லறம் பழுதுபடும். 


ஆளுக்கு ஒரு பக்கம் என்றால், திருமணம் ஏன் செய்ய வேண்டும்? தனித்தனியே இருந்து விட்டுப் போகலாமே? யார் தடுத்தது? 


ஒரு வண்டி ஓடுகிறது என்றால் ஒவ்வொரு பாகமும் அதன் கடமையைச் செய்ய வேண்டும். நான் ஏன் வண்டியை நிறுத்த வேண்டும், நான் வண்டியை நிறுத்த மாட்டேன், வேகமாக ஓடச் செய்வேன் என்று பிரேக் அடம் பிடித்தால் என்ன செய்வது? ஒரே நாளில் வண்டி காயலான் கடைக்குப் போய்விடும். 


யாரவது ஒருவர் ஒத்துப் போங்கள் என்று சொன்னால், யார் என்று சண்டை வரும். 


எனவே, ஒரு விதி செய்தார்கள். பெண் ஒத்துப் போக வேண்டும் என்று. ஒரு சில வீட்டில் விதி விலக்காக பெண் முன் எடுத்துச் செல்வாள். ஆண் அடங்கிப் போவான். விதி விலக்குகள் இருக்கின்றன என்பதற்காக அதை விதியாக்க முடியாது. 


இங்கொன்றும் அங்கொன்றும் அப்படி இருக்கும். இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான். 


அவருக்காக என்று பெண் தன்னை மாற்றிக் கொள்வது, அவளின் காதல். 


எனக்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்து இருக்கிறாள் என்று கணவன் உருகுவது, அவனின் காதல். 


அது இல்லறம். 


நான் என்ன விட்டுக் கொடுப்பது என்று குஸ்தி போடுவது, மல்யுத்த மைதானம். 









Wednesday, June 22, 2022

கம்ப இராமாயணம் - இராம அவதாரம் - 4 - கொடுமை தீர்ப்பேன்

  

கம்ப  இராமாயணம் - இராம அவதாரம்  - 4 - கொடுமை தீர்ப்பேன் 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_25.html

)

 இனித் தொடர்வோம். 


தன் குல குருவான வசிட்டரிடம் சென்று தயரதன் "எனக்கு பின் இந்த மக்களைக் காக்க ஒரு வாரிசு இல்லையே" என்று கூறியவுடன் வசிட்டன் தன் ஞானக் கண்ணால் நோக்குகிறான். 


அவருடைய கண்ணுக்கு பாற்கடல் தெரிகிறது. என்றோ நடந்த ஒரு நிகழ்ச்சி இப்போது தெரிகிறது. 


"பாற்கடல் மேல் திருமால் ஆதி சேஷன் என்ற பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கிறார். அப்போது தேவர்கள் எல்லோரும் வந்து அரக்கர்கள் பற்றி முறையிடுகிறார்கள். அரக்கர்களின் கொடுமையை நான் தீர்ப்பேன் என்று திருமால் அவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறார்"


அந்தக் காட்சி அவர் கண் முன் தோன்றுகிறது. 


பாடல்  


அலைகடல் நடுவண் ஓர்     அனந்தன் மீமிசை

மலை என விழி துயில்   வளரும் மா முகில்,

‘கொலை தொழில் அரக்கர் தம்  கொடுமை தீர்ப்பென்‘ என்று,

உலைவு உறும் அமரருக்கு   உரைத்த வாய்மையை.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4_22.html


(pl click the above link to continue reading)


அலைகடல் = அலை வீசும் கடல் (இங்கே பாற்கடல்) 


நடுவண்  = நடுவில் 


ஓர் = ஒரு 


அனந்தன் = அனந்தாழ்வான் என்று சொல்லப்படும் ஆதிசேடன் என்ற பாம்பின் 


 மீமிசை = மேலே 


மலை என = கரிய மலை போல 


விழி துயில்  வளரும் = கண்கள் தூங்கும் 


 மா முகில், = பெரிய மழை மேகத்தைப் போல 


‘கொலை தொழில் = கொலையை தங்கள் தொழிலாகக் கொண்ட 


அரக்கர் தம் = அரக்கர்களின் 


கொடுமை தீர்ப்பென்‘ என்று, = கொடுமைகளை தீர்ப்பேன் என்று 


உலைவு உறும் அமரருக்கு = அமைதி இன்றி அலையும் தேவர்களுக்கு 


உரைத்த வாய்மையை. = கொடுத்த வாக்கை 


தயரதன் கேட்டது ஒரு வாரிசை. வசிட்டர் கண்டதோ பாற்கடலில் நடந்த ஒரு நிகழ்வை. 


இரண்டுக்கும் என்ன சம்பந்தம்? 


அங்குதான் கதை ஆரம்பமாகிறது. 


இராமாயணத்தின் முதல் முடிச்சு அங்கே இருந்து தொடங்குகிறது. 





Tuesday, June 21, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 6 - பகை, அச்சம், பழி, பாவம்

 

  

திருக்குறள் - பிறனில் விழையாமை - 6 - பகை, அச்சம், பழி, பாவம் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html


குறள் 144 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html


குறள் 145 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_19.html


)


போக்குவரத்து விதியை மீறி விடுகிறோம். காவல்காரர் பிடித்துக் கொள்கிறார். உடனடியாக ஒரு தண்டத் தொகை (spot fine) கட்டச் சொல்கிறார். கட்டுகிறோம். அது அதோடு முடிந்து விடும். 


சட்டத்தை மீறினால், ஏதோ ஒரு தண்டனை, தண்டனை முடிந்தால், அந்தக் குற்றம் பற்றி மீண்டும் பேசக் கூடாது. குற்றத்துக்கும், தண்டனைக்கும் சரியாப் போச்சு.


ஆனால், அறம் மீறினால் அப்படி அல்ல. 


என்ன செய்தாலும் அது போகாது. வாழ்நாள் பூராவும் தண்டனை அனுபவிக்க வேண்டும். அது மட்டும் அல்ல, அடுத்த பிறவிக்கும் அது தொடரும். அது மட்டும் அல்ல, ஒருவன் செய்த அறம் மீறிய செயலுக்கு அவன் சந்ததி முழுவதும் தண்டனை அனுபவிக்க வேண்டும். 


எந்த அறம் மீறிய செயலுக்கும் அதுதான் நியதி. 


அதிலும் பிறன் மனை நோக்கிய தவறுக்கு கேட்கவே வேண்டாம். 


பாடல் 


பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்இறப்பான் கண்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_21.html


(pl click the above link to continue reading)



பகை = பகை 


பாவம் = பாவம் 


அச்சம் = அச்சம், பயம் 


பழி = பழி 


யென நான்கும் = என்ற நான்கும் 


இகவாவாம் = நீங்காதாம் 


இல்இறப்பான் கண் = மற்றவன் மனைவியை விரும்பியவன் இடம் 



ஒரு தவறு செய்தால், நான்கு தண்டனை என்கிறார் வள்ளுவர். 


பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கு தண்டனை. 


நாம் பொதுவாக "பழி பாவம்" என்பதை ஒரு சொல் போல பயன் படுத்துகிறோம். 


பழி என்பது இந்தப் பிறவியில் வருவது. 


பாவம் என்பது அடுத்து அடுத்து வரும் பிறவிகளிலும் தொடர்வது. 


பகை - யார் வீட்டு பெண்ணையாவது முறை தவறி ஒருவன் அடைய நினைத்தால், அந்த வீடு மட்டும் அல்ல, அவன் வாழும் சமுதாயமும் அவனுக்கு பகையாகப் போகும். அவனை நம்பி யார் வீட்டுக்குள் அனுமதிப்பார்கள்? ஒரு பகைவனை பார்ப்பது போலத் தான் பார்ப்பார்கள். எங்கே சிரித்தால், அதையே சாக்காக வைத்துக் கொண்டு நம் வீட்டுக்கு வந்து விடுவானோ என்று எண்ணி, முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விடுவார்கள். ஒரு பகைவனை பார்ப்பது போல. 


பாவம் - இனி வரும் பிறவிகளிலும் அந்த குற்றத்தின் தண்டனை தொடரும் என்கிறார். 


அச்சம் - எப்படியோ, ஏதோ ஒரு சந்தர்பத்தில் மாற்றான் மனைவியை ஒருவன் தவறாக அடைந்து விடுகிறான் என்றே வைத்துக் கொள்வோம். அவன் ஆயுள் முழுவதும் பயந்து கொண்டே இருக்க வேண்டும். எப்போது, அது வெளிப்படுமோ, யார் வெளிப்படுத்துவார்களோ, அது தெரியவந்தால் மனைவி, பிள்ளைகள் , பேரப் பிள்ளைகள், மருமகன், மருமகள், எல்லாம் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று எண்ணி எண்ணியே சாக வேண்டும். அவன் இறுதிக் காலம் வரை அந்த அச்சம் போகாது. 


பழி - வாழும் காலத்திலும், பழி சுமந்துதான் திரிய வேண்டும். ஒரு காலத்திலும் அந்த பழியை துடைக்க முடியாது. எவ்வளவு நல்ல காரியம் செய்தாலும், ,புண்ணியம் செய்தாலும், அந்தப் பழி போகவே போகாது. 


இந்தப் பிறவியில் பழி, அச்சம், பகை வந்து சேரும். 


அடுத்த பிறவிக்கு பாவம் வந்து சேரும். 


எனவே, இம்மைக்கும், மறுமைக்கும் இது கேடு விளைவிக்கும் என்கிறார் வள்ளுவர். 


சந்தர்பம் அமைந்தால், ஒரு நொடியில் தவறு நிகழ வாய்ப்பு இருப்பதால், வள்ளுவர் இதை மிகக் கடுமையாக கண்டிக்கிறார். 


குடும்பங்களுக்குள் குழப்பம் வரக் கூடாது, தனி மனித ஒழுக்கம் கெடக் கூடாது, சமுதாயம் சீரழிந்து விடக் கூடாது என்ற அக்கறையோடு வள்ளுவர் அருளிச் செய்து இருக்கிறார். 






Monday, June 20, 2022

வில்லி பாரதம் - இராஜ சூய யாகம் - பாகம் 1 - முதற் பூசை

 வில்லி பாரதம் - இராஜ சூய யாகம் - பாகம் 1 - முதற் பூசை


கம்ப இராமாயணம் அளவுக்கு வில்லி பாரதம் நம் மக்களிடை பெரிதாகப் போய்ச் சேரவில்லை. 


இராமயணத்தை விட கதை அமைப்பில், திருப்பங்களில், மனித மனச் சிக்கல்களில் பாரதம் சுவாரசியமானது என்றாலும், அது இராமாயணம் அளவுக்கு பிரபலமாகவில்லை என்பதும் உண்மைதான். 


அதற்கு பெரியவர்கள் ஒரு காரணம் சொல்லுவார்கள். 


அறம் என்றால் வேதம் முதலான உயர் நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும் என்பார்கள். 


இராமாயணம் அறத்தை நேர் முறையில் சொல்லத் தலைப்பட்டது. 


பாரதம் எதைச் செய்யக் கூடாது என்று சொல்லத் தலைப்பட்டது. 


இருந்தும், நேர்மறையான காப்பியத்துக்கு கிடைத்த பிரபலம் மறைமுகமாக கூறிய பாரதத்துக்கு கிடைக்கவில்லை என்பது யதார்த்தம். 


இருந்தும், வில்லி பாரதத்தில் பல சுவையான இடங்கள், அழகான கவிதைகள் இருக்கின்றன. 


அதில் சிலவற்றைப் பார்ப்போம். 


தர்மன் அசுவமேத யாகம் செய்து முடித்துவிட்டான். யாகம் முடித்த பின், யாருக்கு முதல் மரியாதை தருவது என்று தர்மன், பீஷமரை கேட்கிறான். 


யாரை எங்கே வைப்பது என்பதில் நம்மவர்கள் மிகுந்த முக்கியத்துவம் தந்து இருக்கிறார்கள். 


எதையும் ஒரு வரிசைப்படி செய்வது என்பது நம்மவர்கள் கலாசாரம். 


வீட்டில் ஒரு விழா, நிகழ்ச்சி என்றால் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு முதலில் மரியாதை செய்ய வேண்டும். மரியாதை என்பதெல்லாம் குறைந்து கொண்டே வரும் இந்தக் காலத்தில் அதைப் பற்றி பேசுவது கூட சரி இல்லையோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. 


பொய் சொல்லி, ஊரை ஏமாற்றி, களவு எடுத்து, பணம் சேர்பவனுக்கு மாலை, மரியாதை என்று ஆகிவிட்ட காலத்தில் மரியாதை பற்றி என்ன சொல்லுவது?


இருந்தும், எப்படி இருந்த கலாசாரம் என்றாவது தெரிந்து கொள்ளலாமே?


பீஷ்மரையும், அங்கு இருந்த முனிவர்களையும், பெரியவர்களையும் நோக்கிக் கேட்கிறான் "யாருக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும், கூறுங்கள்" என்று. 


பாடல் 



'பரிதியும் மதியும் வன்னியும் முதலாம் பல் வகைக்

                                குலத்தும் உற்பவித்த

சுரபதி குழாத்தில் யாவரே பெறுவார், நவிலும் முற்பூசை,

                                மற்று'' என்ன,

கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன், கங்கையின்

                                திருமகன், தெய்வச்

சுருதி மா மகம் செய் புனிதனை நோக்கி, தொல்

                                முனிவரையும் நோக்கி,


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_20.html



(pl click the above link to continue reading)


பரிதியும் = சூரியனும் 

மதியும் = சந்திரனும் 

வன்னியும் = அக்கினியும் 


முதலாம் = முதலிய 


பல் வகைக் = பல வகை 


குலத்தும் = குலத்தில் (பலவிதமான அரச குலத்தில்) 


உற்பவித்த = தோன்றிய 


சுரபதி குழாத்தில் =  அரசர் குலத்தில் 


 யாவரே பெறுவார் = யார் பெறத் தகுதியானவர் 


நவிலும் = சொல்லுங்கள் 


முற்பூசை = முதல் மரியாதை 


மற்று'' என்ன, = என்று 


கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன் = அட்ட வசுக்களில் ஒருவரும் 


கங்கையின்  திருமகன் = கங்கையின் மைந்தனுமான 


தெய்வச் = தெய்வத் தன்மை பொருந்திய 


சுருதி  = வேதம், வேதங்களில் கூறிய மாதிரி 


மா மகம் = பெரிய யாகத்தை 


செய் புனிதனை நோக்கி = செய்து தந்த புனிதனை நோக்கி  (வியாசர்) 


தொல் முனிவரையும் நோக்கி, = வயதில் மூத்த முனிவர்களையும் பார்த்து 


பீஷ்மன், வியாசர், மற்றும் உள்ள முனிவர்களை நோக்கி தர்மன் கேட்கிறான் "யாருக்கு நான் முதல் மரியாதை செய்ய வேண்டும் "  என்று 


இங்கே ஒரு கணம் நிறுத்துவோம். 


இராஜசூய யாகம் நடந்து முடிந்துவிட்டது. 


அத்தனை அரசர்களும் இருக்கிறார்கள். துரியோதனனும் இருக்கிறான். யாருக்கு முதல் மரியாதை செய்தாலும், மற்றவர்களுக்கு கோபம் வரும். 


யாகம் முடிந்தவுடன் சண்டை ஆரம்பித்து விடும். 


ஒரு சிக்கலான இடம். செய்தாலும் தப்பு, செய்யாவிட்டாலும் தப்பு என்ற ஒரு இடம். 


ஒரு படபடப்பு,  பதைபதைப்பு நம்மை பற்றிக் கொள்கிறது அல்லவா?  


ஒரு எதிர்பார்ப்பு, என்ன நடக்கப் போகிறதோ என்று ஒரு திகில், ஒரு சுவாரசியம் வருகிறதா இல்லையா?


அடுத்து என்ன ஆயிற்று என்று பார்ப்போம். 





Sunday, June 19, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 5 - விளியாது நிற்கும் பழி

  

திருக்குறள் - பிறனில் விழையாமை - 5 - விளியாது நிற்கும் பழி


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html


குறள் 144 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html


)

எவனோருவனும் ஏன் தவறு செய்கிறான்? 


தவறு செய்வது தவறு என்று தெரியும். இருந்தும் ஏன் செய்கிறான்?


காரணம், அது எளிது என்று நினைக்கிறான். தவறு செய்வது எளிது, சுலபம் என்று நினைப்பதால் தவறுகளைச் செய்கிறான். ஒழுக்கமாக, நேர்மையாக் நடப்பது கடினம் என்று நினைக்கிறான். குறுக்கு வழியில் செல்வது எளிது என்று நினைக்கிறான். 


அது தவறு என்கிறார் வள்ளுவர். 


"நீ எளிது என்று நினைத்து இப்போது தவறு செய்து விடலாம். ஆனால், அது எந்தக் காலத்திலும் அழியாத இழிவைத் தரும்"


என்கிறார். 


அதாவது, தவறான வழியில் இன்பம் வரலாம். இல்லை என்று சொல்லுவதற்கு இல்லை. ஆனால், அந்த இன்பம் மறைந்து விடும். ஆனால், அதன் மூலம் வரும் பழி இருக்கிறதே, அது ஒரு காலத்திலும் அழியாது. 


சிறிது கால இன்பத்துக்காக நிரந்தர பழியை யாராவது சுமப்பார்களா? என்று கேட்கிறார். 



பாடல் 


எளிதென இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_19.html


(pl click the above link to continue reading)


எளிதென = எளிமையானது, சுலபமானது என்று எண்ணி 


இல்இறப்பான் = மற்றவன் இல்லம் சென்று அவன் மனைவியிடம் தவறான வழியில் நடந்து கொள்பவன் 


எய்தும் = அடைவான் 


எஞ் ஞான்றும் = எல்லாக் காலத்திலும் 


விளியாது = முடிவு இல்லாத 


நிற்கும் பழி = நிலைத்து நிற்கும் பழி 


நன்கு படித்தவன் தவறு செய்ய மாட்டான்.  அதிகம் படிக்காதவனும், பழி பாவத்துக்கு அஞ்சி தவறு செய்ய மாட்டான். இந்த அரைகுறையாக படித்தவன் இருக்கிறானே, அவன் தவறு செய்வதற்கு வாய்ப்பு அதிகம். 


"எனக்குப் பிடித்து இருக்கிறது. அவளுக்கும் பிடித்து இருக்கிறது. இரண்டு பேர் மனம் ஒத்து போய்விட்டால், இடையில் கணவன் என்ன, கத்திரிக்காய் என்ன..." என்று வாதம் செய்வான். 


அவனைப் போன்றவர்களுக்கு அவன் வழியிலேயே போய் புத்தி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார் வள்ளுவர். 


"நீ சொல்வதும் சரிதான். தவறான வழி என்றால் இன்பம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நினைத்துப் பார்...இந்த சிறிய இன்பத்தால் உனக்கும், அவளின் குடும்பத்துக்கும் எப்படி ஒரு தீராத பழியை நீ கொண்டு வரப் போகிறாய் என்று" என்று எச்சரிக்கிறார். 


இப்படி ஒரு பாட்டன் கிடைக்க நாம் எல்லாம் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். 


பூஜை அறையில், வள்ளுவர் படத்தையும் வைக்க வேண்டும். 









Saturday, June 18, 2022

தேவாரம் - பிறவா நாளே

தேவாரம் - பிறவா நாளே  


காலையில் எழுந்தவுடன் "இன்னிக்கு அந்த வேலையை செய்து முடிக்கணும்" அப்படின்னு நினைகிறீங்க. அதுக்கு முன்னாடி வேற என்னென்னவோ வேலைகள் வந்து சேர்கிறது. அதையெல்லாம் செஞ்சு முடிச்சிட்டு நீங்க நினைச்ச வேலையை எடுக்கலாம்னு நினைக்கும் போது, ரொம்பவும் சோர்வாக உணர்கிறீர்கள். சரி கொஞ்ச நேரம் ஓய்வு எடுப்போம் என்று நினைகிறீர்கள்.


அப்படியே youtube, whatsapp என்று பார்கிறீர்கள். நேரம் போய் விடுகிறது. கடைசியில் "சே, நாள் பூராவும் வீணா பொழுது போயிருச்சு...ஒண்ணும் உருப்படியா செய்யல" என்று அலுத்துக் கொள்வீர்கள் அல்லவா?


அதே போல், முழு வாழ்நாளையும் நினைத்துப் பாருங்கள். எதுக்காக வந்தோம், என்ன செய்து கொண்டு இருக்கிறோம், முடியும் போது நம் மன நிலை எப்படி இருக்கும்? உருப்படியா ஏதாவது செய்தோம் என்று மன நிறைவு இருக்குமா, அல்லது வெட்டி வேலை நிறைய செய்து பொழுதை எல்லாம் வீணடித்து விட்டோம் என்று நினைப்போமா?


திருநாவுக்கரசர் சொல்கிறார்,


"இறைவனை நினையாத நாள் எல்லாம் பிறவா நாளே" 

என்று.


பிறந்தும் ஒரு பலனும் இல்லை என்றால், பிறந்து என்ன பிறக்காமல் இருந்து என்ன ? எல்லாம் ஒன்று தானே? 


காலையில் எழுந்து காப்பி குடித்து, செய்தி வாசித்து, வேலைக்குப் போய், சமைத்து, சாப்பிட்டு, தூங்கி, தொலைக் காட்சி பார்த்து ....இப்படி ஒவ்வொரு நாளும் போய்க் கொண்டிருந்தால் அந்த நாட்களால் என்ன பலன்?


பாடல் 


அரியானை அந்தணர்தம் சிந்தை யானை

        அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்

தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்

        திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்

கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்

        கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற

பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

        பேசாத நாளெல்லாம் பிறவா நாளே


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_18.html


(pl click the above link to continue reading)


அரியானை = அறிவாலும், பொருளாலும் அடைய அரிதானவனை 


அந்தணர்தம் சிந்தை யானை = அந்தணர்களின் சிந்தனயில் என்றும் இருப்பவனை 


அருமறையின் = உயர்ந்த மறைகளின் 


அகத்தானை = உட்பொருளாக அமைந்தவனை 


அணுவை  = அணுவை 


யார்க்கும் = ஒருவருக்கும் 


தெரியாத தத்துவனைத் = தெரியாமல் வைத்த உண்மை வடிவானனவை 


தேனைப் = தேன் போன்றவனை 


பாலைத் = பால் போன்றவனை 


திகழொளியைத் = ஒளி போருந்தியவனை 


தேவர்கள்தங் கோனை  = தேவர்களின் தலைவனை 


மற்றைக் கரியானை  = கரிய நிறம் கொண்ட திருமால் 


நான்முகனைக் = நான்கு முகம் கொண்ட பிரமன் 


கனலைக் = தீயை 


காற்றைக் = காற்றை 


கனைகடலைக் = ஒலி உடைய கடலை 


குலவரையைக் = பெரிய மலையை 


கலந்து நின்ற =இவை எல்லாவற்றிலும் கலந்து நின்ற 


பெரியானைப்  = பெரியவனை 


பெரும்பற்றப் புலியூ ரானைப் = புலியூர் என்ற ஊரில் இருப்பவனை 


பேசாத நாளெல்லாம் பிறவா நாளே = பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே 


அப்படி எல்லாம் கணக்கு போட்டால் நம் வயது எவ்வளவு இருக்கும் ? ஐந்து அல்லது பத்து நாள் தான் இருக்கும். 


எவ்வளவோ நாட்கள் வீணாகப் போகின்றன. 


அந்தக் கவலை எப்போதும் இருக்க வேண்டும். 


ஒவ்வொரு நாளும் சிறப்பாக கழிய வேண்டும். 




Friday, June 17, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 4 - எனைத்துணையர் ஆயினும் என்னாம்

 

திருக்குறள் - பிறனில் விழையாமை - 4 - எனைத்துணையர் ஆயினும் என்னாம் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html



)


சமுதாயத்தில் ஒரு நல்ல பெயர் எடுப்பது மிகக் கடினம். பல ஆண்டுகள் உழைக்க வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். கல்வி, அறிவு, வேலை, பதவி, மற்றவர்களுக்கு உதவுவது என்று பல செய்து ஒரு நற்பெயரை சம்பாதிக்க வேண்டும். 


ஆனால், அத்தனை உழைப்பு ஒரு நொடியில் வீணாகிவிடும். 


எப்போது என்றால், தன் நிலை மறந்து மற்றவன் வீட்டில் அவன் மனைவியை அடையும் நோக்கத்தில் சென்றால். 


அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அதனால் ஒரு  பயனும் இல்லை ,  எல்லாம் வீணாகிப் போய்விடும் என்கிறார் வள்ளுவர்.


பாடல் 


எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்

தேரான் பிறனில் புகல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html


(pl click the above link to continue reading)



எனைத்துணையர் = எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் 


 ஆயினும் = ஆனாலும் 


என்னாம்  = என்ன பலன் 


தினைத்துணையும் = ஒரு நொடியளவும் 


தேரான் = சிந்திக்காமல் 


பிறனில் புகல் = மற்றவன் வீட்டில் புகுந்தவன் 


வள்ளுவர் ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து, தெரிந்து எடுத்துப் கையாள்கிறார். 


"எனைத்துணையர் ஆயினும் என்னாம்". ஒருவன் எவ்வளவு உயர்ந்தவனாக இருந்தாலும் என்ன என்று கேட்கிறார். அவன் பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம், செல்வம், படிப்பு எது ஒன்றாலும் பயன் இல்லை. எல்லாம் செல்லாக் காசாகிவிடும் என்கிறார். 


எல்லோருக்கும் தெரியும் இது. இருந்தும் காமம் கண்ணை மறைக்கும். 


இராவணன் தவறினான். 


இந்திரன் தவறினான். தேவர்களுக்கு எல்லாம் அதிபதி, கௌதமர் வந்துவிட்டார் என்று அறிந்து பூனை வடிவம் கொண்டு தப்பி ஓடினான். தேவ இராசா ஒரு சிறு விலங்காகிப் போனான். அவன் செய்த தவம், புகழ், சக்தி, ஒன்றும் அவனுக்கு கை கொடுக்கவில்லை. 


விஸ்வாமித்திரன் செய்த அத்தனை தவத்தையும் ஒரு நொடியில் இழந்தான். 


எவ்வளவு பெரிய ஆளையும் ஒரு நொடியில் புரட்டிப் போட்டு விடும் காமம். 


பெரிய ஆட்கள் கதியே இது என்றால், சிறியவர்கள் கதி என்ன ஆகும். பெரிய பெரிய கப்பலே மூழ்கும் என்றால், சிறு படகு எம்மாத்திரம். 


அடுத்தது, பிறனில் விழைந்தான் என்று கூட வள்ளுவர் சொல்லாவில்லை. 


"தேரான் பிறனில் புகல்" : எது சரி, எது தவறு என்று தெரியாமல் ஒருவன் வீட்டுக்குள் செல்பவன் என்கிறான். அப்படி ஒரு அறிவு இல்லாதவன் மற்றவன் இல்லத்துக்கு செல்வதே குற்றம் என்கிறார்.   


மற்றவன் இருப்பான். அவன் மனைவி இருப்பாள். நான் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். தவறு எதுவும் செய்து விடக் கூடாது. என் பார்வையோ, சொல்லோ, செயலோ தவறு இழைத்து விடக் கூடாது என்று அறிந்து, தெளிந்து செல்ல வேண்டும் என்கிறார். அந்த தெளிவு இல்லாவிட்டால் போகாதே என்கிறார். 


இன்னொரு நுணுக்கத்தை பரிமேலழகர் எடுத்துக் காட்டுகிறார். 


"எனைத்துணையர்" , "தேரான்" 


என்று இரண்டு சொற்கள் இருக்கின்றன. 


முதலில் பன்மையில் ஆரம்பிக்கிறார். 


"எனைத்துணையன்" என்று போட்டு இருக்கலாம். துணையர் என்று மரியாதை காரணமாக பன்மையில் ஆரம்பிக்கிறார். 


அறிவு இல்லாமல் செல்பவனுக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கிறது என்று "தேரான்" என்று ஒரு ஒருமையில் குறிப்பிடுகிறார். தேரார் என்று வந்திருக்க வேண்டும். அவனுக்கு என்ன மரியாதை என்று ஒருமையில் அழைக்கிறார் என்று பரிமேலழகர் குறிப்பிடுகிறார். 


(பரிமேல் அழகர் அப்படிச் சொல்லவில்லை. "ஒருமை பன்மை மயக்கம் மரியாதை நிமித்தம் மயங்கிற்று" என்பார். நான் சற்று விளக்கினேன்).


மற்றவர்கள் வீட்டுக்குச் செல்வதனால, மிகவும் ஆராய்ந்து, நேரம், ,காலம், எல்லாம் அறிந்து எதற்காகச் செல்கிறோம், என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்று அறிந்து,தெளிந்து செல்ல வேண்டும் என்கிறார். 


எவ்வளவு சிந்தித்து இருக்கிறார்கள். 




Wednesday, June 15, 2022

நான்மணிக்கடிகை - 6 - அறிவார் யார்?

 நான்மணிக்கடிகை -  6 - அறிவார் யார்? 


நான்மணிக்கடிகை என்ற நூல், வாழ்க்கையின் அனுபவத்தை, சாரத்தை வடித்துத் தரும் நூல். தங்கள் அனுபவத்தில் கண்டதை, நமக்கு உதவும் பொருட்டு எழுதி அருளிய நூல். 


தவறுகள் செய்து, அடிபட்டு, அனுபவங்களை சேகரித்து நாம் அந்தத் தவறுகளை செய்யாமல் இருக்கவும், அந்தத் துன்பங்களை அடையாமல் இருக்கவும், நம் மீது கருணை கொண்டு எழுதித் தந்த நூல். 


வீட்டில், பிள்ளையிடம் அம்மா சொல்லுவாளே "மழையில நனையதடா, காய்ச்சல் வரும்" என்று. அந்த அன்போடு, கரிசனத்தோடு கூறும் நூல். அம்மா ஒன்றும் மருத்துவர் கிடையாது. அவள் அனுபவம் சொல்கிறது மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும் என்று. 


அது போல உலக இயல்பை கவனித்து, யாதார்த்தை முழுவதும் உள்வாங்கி, இந்த உலகம் இப்படித் தான் இருக்கிறது. இது தான் இந்த உலகின் வரைபடம். இதை வைத்துக் கொண்டு நீ விரும்பிய இடத்தை அடையலாம் என்று நமக்கு ஒரு வழிகாட்டும் ஓரூர் நூல். 


ஏறக்குறைய நூறு பாடல்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு அனுபவத் தெளிவு. 


அதில் சில பாடல்களை பகிர்ந்து கொள்ள ஆசை.


நாம் சிலபேரை அவர்கள் தோற்றம், அவர்கள் பொருளாதார நிலை, அவர்கள் உடுத்தும் உடை, பேசும் பேச்சு, அவர்கள் நிறம், அவர்கள் பிறந்த குலம் இவற்றை வைத்து எடை போடுவோம். 


அது சரியல்ல. 


ஒருவரை சரியாக எடை போடவேண்டும் என்றால் அவரோடு பழகி, அவரின் அறிவு, குணம், ஒழுக்க, செயல் இவற்றை அறிந்து பின் முடிவு செய்ய வேண்டும். 


இந்த குடியில் பிறந்தவன் உயர்ந்தவன், இந்த குடியில் பிறந்தவன் உயர்ந்தவனாக இருக்க முடியாது என்று முடிவு செய்யக் கூடாது. எதையும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்கிறது நான்மணிக்கடிகை. 


பாடல் 


கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று

ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள்

பல் விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார்,

நல் ஆள் பிறக்கும் குடி?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_15.html


(Pl click the above link to continue reading)




கள்ளி = கள்ளி மரத்தின் 


வயிற்று இன்  = உள்ளே 


அகில் பிறக்கும் = அகில் என்ற வாசனைப் பொருள் தோன்றும் 


மான் வயிற்று = மானின் வயிற்றில் 


ஒள் அரிதாரம் பிறக்கும்  = முகத்தில் பூசும் ஒளி பொருந்திய அரிதாரம் பிறக்கும் 


பெருங் கடலுள் = குடிக்க முடியாத, ,உப்பு நிறைந்த கடலின் இடையே 


பல் விலைய முத்தம் பிறக்கும் = விலை மதிக்க முடியாத பல வித முத்துக்கள் பிறக்கும் 


அறிவார் யார், = யாருக்குத் தெரியும் ?


நல் ஆள் பிறக்கும் குடி? = நல்ல மனிதர்கள் பிறக்கும் இடம் 


நல்ல மனிதர்கள் எங்கும் தோன்றலாம். இங்குதான் தோன்ற வேண்டும், இங்கு தோன்ற முடியாது என்று நினைக்கக் கூடாது. நல்லது எங்கும் இருக்கலாம். ஒரு திறந்த மனத்தோடு உலகை அணுகினால் எல்லோரும் நட்பாவார்கள், பகை என்பது இருக்காது. யாரையும் உதாசீனம் செய்யும் எண்ணம் வராது, யாரையும் தவறாக நல்லவர்கள் என்று எடை போட்டு ஏமாற மாட்டோம். 


மிக எளிய, நடை முறையில் உள்ள உதாரணங்கள் மூலம், உயர்ந்த அனுபவத்தை சொல்லும் பாடல். 




Tuesday, June 14, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 3 - தெளிந்தார் இல் தீமை புரிவார்

   

 திருக்குறள் - பிறனில் விழையாமை - 3 - தெளிந்தார் இல் தீமை புரிவார் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


)


பிறன்மனை விழைவது என்பது எப்படி நிகழும் என்று சிந்திக்கிறார் வள்ளுவர். 


ஒருவன் தன்னுடைய நண்பன் வீட்டுக்கோ, உறவினர் வீட்டுக்கோ போகிறான். அந்த வீட்டின் தலைவன் அவனை வரவேற்று உபசரித்து பேசிக் கொண்டு இருக்கிறான். ஏதோ பொருள் வாங்க வேண்டும் என்று வெளியில் செல்ல வேண்டி இருக்கிறது. "நீங்கள் பேசிக் கொண்டு இருங்கள்" என்று நண்பனிடமும், மனைவியிடமும் சொல்லிவிட்டு வெளியில் போகிறான். அந்த நேரத்தில், அந்த நண்பனின் மனைவியின் மேல் இவன் ஆசை கொள்கிறான். எல்லை மீறப் படுகிறது என்று வைத்துக் கொள்வோம். 


அந்த இடத்தில் நிறுத்தி வள்ளுவர் குறள் சொல்கிறார். 


"நீ நல்லவன் என்று உன்னை நம்பி வீட்டுக்குள் அனுமதித்த உன்  நண்பனுக்கு அல்லது உறவினனுக்கு நீ துரோகம் செய்கிறாய் என்றால் நீ மனிதன் அல்ல, விலங்கு கூட அல்ல, செத்த பிணம் போன்றவன்"


என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடுகிறார். 



பாடல் 


விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்

தீமை புரிந்தொழுகு வார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html


(pl click the above link to continue reading)



விளிந்தாரின் =  இறந்தவர்களின் 


வேறல்லர் = வேறு அல்லர் 


மன்ற = உறுதியாக 


தெளிந்தார்இல் = தெளிந்தவர் இல்லத்தில் 


தீமை புரிந்தொழுகு வார் = தீமை செய்து வாழ்பவர்கள் 


"தெளிந்தார் இல் " என்றால் நீ நல்லவன், தவறு செய்யமாட்டாய் என்று நம்பிக்கை கொண்டவன் இல்லம். அவனுக்கு இவன் மேல் சந்தேகம் இல்லை. தெளிவாக இருக்கிறான். இவன் நம்பத்தகுந்தவன் என்று தெளிவாக முடிவு செய்து மனைவியோடு தனியாக விட்டுச் செல்கிறான். எனவே, அவனை தெளிந்தார் என்றார். 


அப்படி நம்பியவனை துரோகம் செய்பவனை ஏன் பிணம் என்றார்? 


பரிமேலழகர் கூறுகிறார் "அறம், பொருள், மற்றும் இன்பம் என்பவை உயிர் சார்ந்த விடயம். இந்த மூன்றும் நம்பிக்கை துரோகம் செய்பவனுக்கு கிடைக்காது என்பதால் பிணத்துக்கும் அவனுக்கும் ஒரு வேற்றுமையும் இல்லை என்கிறார். 


வள்ளுவர் "தீமை" என்று தான் சொல்லி இருக்கிறார். அவன் வீட்டில் உள்ள பொருளை திருடுவது கூட தீமைதான். ஆனால், இந்த அதிகாரம் பிறனில் விழையாமை என்பதால், இங்கே தீமை என்பதை அவன் மனைவி மேல் ஆசை கொள்வது என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். 


அவன் வீட்டுக்குப் போய், அவன் மனைவி கையால் சமைத்த உணவை உண்டுவிட்டு, அவனுக்கு துரோகம் செய்வது என்பது செய்நன்றி கொன்ற குற்றம். 


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 

செய்நன்றி கொன்ற மகற்கு 


என்ற குறளும் இங்கே எண்ணத் தக்கது. 


இந்த அதிகாரத்தின் தலைப்பு பிறனில் விழையாமை. 


பிறனில் அனுபவிக்காமை, அபகரிக்காமை என்று சொல்லவில்லை. 


மற்றவன் மனைவியை தொட வேண்டும் என்று கூட தேவையில்லை. மனதால் நினைத்தாலே அது குற்றம் என்பதால் 'விழையாமை" என்றார். விரும்பாமை. 


அவன் மனைவி எவ்வளவு அழகாக இருக்கிறாள், எப்படி அழகாக பேசுகிறாள். எப்படி சமைக்கிறாள். எனக்கும் ஒண்ணு வாய்த்து இருக்கிறதே. அந்தப் பெண்ணை போல இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனதளவில் நினைப்பது கூட குற்றம் என்கிறார். 


வள்ளுவர் ஏதோ ஆணாதிக்க சிந்தனை உள்ளவர், பெண்ணடிமையை போற்றுபவர் என்று சிலர் நினைக்கலாம். அவர்கள் இந்தக் குறளையும், இந்த அதிகாரத்தையும் படிக்க வேண்டும். 


மற்றவன் மனைவியை நினைப்பவனை பிணம் என்று சாடுகிறார் வள்ளுவர். 







Monday, June 13, 2022

நளவெண்பா - கற்பின்தாழ் வீழ்த்த கதவுநளவெண்பா - கற்பின்தாழ் வீழ்த்த கதவு

நளவெண்பா - கற்பின்தாழ் வீழ்த்த கதவு


எப்பப் பார்த்தாலும் அறம், பக்தி, துறவு, நிலையாமை என்று படிக்காமல் இடையிடையே கொஞ்சம் ஜொள்ளு பாடல்களையும் அறிவோம். 


தமிழ் இலக்கியத்தில் ஜொள்ளுக்கு ஒரு குறைவில்லை. ஒரு எல்லை தாண்டாமல் மிக நளினமாக காதலை, அதன் நெருக்கத்தை, பிரிவை, சோகத்தை எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். 


நள மன்னனுக்கும் தமயந்திக்கும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே காதல். அன்னம் எல்லாம் தூதுவிட்டு முடிந்து விட்டது. நளன், தமயந்தி இருக்கும் மாளிகைக்கு வருகிறான். அது பெரிய கதை. அதை பின்னர் காண்போம். 


முதன் முதலாக இருவரும் சந்திக்கிறார்கள். 


அந்த இடத்தில ஒரு பாட்டு வைக்கணும் என்று புகழேந்தி நினைக்கிறார். 


முதன் முதலாக காதலர்கள் சந்திக்கிறார்கள். என்னென்ன நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லாவற்றையும் இலக்கியத்தில் வெளிப்படையாக சொல்லவும் முடியாது. சொல்லாவிட்டாலும் சுவை இருக்காது. கத்தி மேல் நடப்பது போன்ற இடம். கொஞ்சம் தவறினாலும் விரசமாகிவிடும் அபாயம். 


மிக அற்புதமான கவிதை ஒன்றைத் தருகிறார் புகழேந்தி. 


நள மன்னனை பார்த்ததும் அவள் இது நாள் வரை கட்டுப் படுத்தி, அடக்கி வைத்து இருந்த கற்பின் கதவு தாழ் திறந்தது என்கிறார். 


அவ்வளவுதான். மற்றவற்றை நம் கற்பனைக்கு விட்டு விடுகிறார். 


பாடல் 


நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று

தீண்டும் அளவில் திறந்ததே - பூண்டதோர்

அற்பின்தாழ கூந்தலாள் வேட்கை அகத்தடக்கிக்

கற்பின்தாழ் வீழ்த்த கதவு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_13.html


(Pl click the above link to continue reading)




நீண்ட கமலத்தை  = நீண்ட தாமரை போன்ற முகம் கொண்ட நளனை 


நீலக் கடைசென்று = நீலோற்பலம் போன்ற கண்களை உடைய தமயந்தியின் கண்கள் 


தீண்டும் அளவில் = தீண்டிய அந்த நேரத்தில் 


திறந்ததே = திறந்து கொண்டதே  


பூண்டதோர் = பூட்டி வைக்கப்பட்ட 


அற்பின்தாழ = அன்பு மிக 


கூந்தலாள் = கூந்தலை உடைய தமயந்தியின் 


வேட்கை =  ஆசையை 


அகத்தடக்கிக் = உள்ளத்துள் அடக்கி 


கற்பின்தாழ் = கற்பு என்ற தாழ்பாள் 


வீழ்த்த கதவு. = வீழ, திறந்து கொண்ட கதவு 


என்ன ஒரு உவமை. 


அவளுடைய மனம் என்ற அறையில், அவளுடைய நிறை தன்மை என்ற கதவுக்கு, கற்பு என்ற தாழ்பாள் போட்டு வைத்து இருந்தாள். நளனை கண்டவுடன், அவன் மேல் கொண்ட காதலால் அந்த கற்பு என்ற தாழ்பாள் விலகி கதவு திறந்து கொண்டது என்கிறார்.


கவிதை ஓட்டத்தில் படித்தால் அதன் சுவை தெரியும். 


சுகமான, ஒரு தென்றல் தலை கலைத்து விட்டுப் போவது போன்ற ஒரு சுகம். 




Sunday, June 12, 2022

திருக்குறள் - பிறனில் விழையாமை - 2 - அறம் பொருள் கண்டார்

  

 திருக்குறள் - பிறனில் விழையாமை - 2 - அறம் பொருள் கண்டார் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம் 


முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html


குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html


)


பிறன் மனைவியை காதலித்து வாழும் பேதைமை அறம் பொருள் கண்டாருள் இல்லை என்றார் முதல் குறளில். 


அடுத்த குறளில் அது எவ்வளவு பெரிய பேதைமை என்று சொல்கிறார். 


காமவயப்ட்டு எவ்வளவோ பேர் எவ்வளவோ தவறான காரியங்களைச் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் வகைப் படுத்தினால், இந்த பிறன் மனை நோக்கியவன் இருக்கிறானே அவன் எல்லோருளும் கடைசியாக இருப்பான் என்கிறான். அதாவது உள்ளதுக்குள் மோசமானவன் என்கிறார். 




பாடல் 


அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரின் பேதையார் இல்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html


(pl click the above link to continue reading)


அறன்கடை = அறத்தின் எல்லையில், அதாவது வெளியில் 


நின்றாருள்  = நின்றவர்களுள் 


எல்லாம் = அனைவரிலும் 


பிறன்கடை = மற்றவன் வீட்டு வாசலில் 


நின்றாரின் = நின்றவனைப் போல 


பேதையார் இல் = பேதை வேறு யாரும் இருக்க மாட்டார்கள் 




அற நெறி விலகியவர்கள் ஏதோ பெரிய வரிசை (queue) நிற்பது போலவும், அதில் கடைசியாக நிற்பவன் இந்த பிறன் மனை விரும்பியவன் என்றும் கூறுகிறார். 


இன்னொருவன் மனைவி மேல் ஒருவன் ஏன் ஆசை கொள்கிறான்? அவளிடம் ஏதோ இன்பம் கிடைக்கும் என்பதால் தானே? சமுதாயம் சீரழியும் என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நீ தேடிய இன்பமும் உனக்குக் கிடைக்காது என்கிறார் வள்ளுவர். 


அப்புறம் எதற்கு அதைச் செய்வானேன்? 


வள்ளுவர் "நின்றாருள் எல்லாம்" என்று சொல்லி விட்டார். நின்றவர்கள் எல்லாம் யார் யார் என்று சொல்லவில்லை. பரிமேலழகர் சொல்கிறார். 


காம வயப்பட்டவர்கள் பலவிதமான குற்றங்களைச் செய்வார்கள். அவை என்னென்ன என்று பரிமேலழகர் சொல்கிறார். 


காமவயப்படவன் 


பெண்வழிச் சேறல் 

வரைவின் மகளிரைச் சேறல் 

இழிகுல மகளிரைச் சேறல் 

பிறன்மனை சேறல் 


என்ற நான்கு விதமான குற்றங்களைச் செய்வார்கள் என்கிறார். 


அவை என்னென்ன என்று பார்ப்போம். 


சற்று நெருடலான விடயம்தான். என்ன செய்வது? 


பெண்வழிச் சேறல் என்றால் பெண்ணின் பேச்சைக் கேட்டு நடப்பது. "ஆஹா ஆணாதிக்க சிந்தனை, பெண்ணடிமை" என்று கொடி பிடிக்கும் முன் சற்று பொறுப்பது நல்லது. 


ஒரு பெண்ணிடம் காமவசப்பட்டு அவள் சொல்வதைக் கேட்டு வீட்டு மற்றும் நாட்டு நிர்வாகத்தை நடத்துவது குற்றம் என்கிறார். அன்போடு மனைவி சொல்கிறாள், அம்மா சொல்கிறாள் என்றால் அதைக் கேட்பதில் தவறில்லை.  காமவசதில்  ஒரு பெண் சொல்கிறாள் என்பதற்காக ஒரு நாட்டிலோ, நிர்வாகத்திலோ ஒருவன் ஒரு முடிவை எடுப்பான் என்றால் அது தவறு என்கிறார்.  


நாம் செய்தித் தாள்களில் பார்கிறோமே. பெரிய அதிகாரிகளை, இராணுவ இரகசியம் தெரிந்தவர்களை, அரசியல்வாதிகளை பெண்களை அனுப்பி மயக்கி, பின் அதைக் கொண்டு அவர்களை மிரட்டி தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்.  இதை ஆங்கிலத்தில் Honey Trap என்று சொல்லுவார்கள். 


அது முதல் குற்றம். 


இரண்டாவது  வரைவின் மகளிரைச் சேறல்.   இப்படிதான் வாழவேண்டும் என்று ஒரு வரையறை செய்து கொண்டு வாழ்வது ஒரு முறை. அப்படியெல்லாம் இல்லை, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைப்பது இன்னொரு முறை. வரைவு இல்லாமல் வாழும் பெண்களை வரைவின் மகளிர் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு கூட்டம் இருந்திருக்கிறது, இன்றும் இருக்கிறது. விலைமகளிர் என்று சொல்லுவார்களே. நாகரீகம் கருதி, மேலும் விவரிக்காமல் விட்டு விடுவோம். 


மூன்றாவது, இழிகுல மகளிர் என்கிறார். அதாவது தன்னை விட தாழ்ந்த, பொருத்தம் இல்லாத பெண்ணிடம் காமம் கொண்டு செல்வது. இதை எப்படி விவரிப்பது ? அப்படியே விட்டுவிடுகிறேன். இது குலம் பற்றியது அல்ல, பொருந்தா காமம் என்று வைத்துக் கொள்ளுங்கள். 


அடுத்ததாக பிறன் மனை நயத்தல். 


ஏன் இந்த பிறன் மனை நயத்தலை எல்லோரிலும் கீழாக வள்ளுவர் சொன்னார் என்றால்....


முதல் சொன்ன மூவர்க்கும் அறமும், பொருளும் நட்டப்படும். ஆனால் இன்பம் கிடைக்கும். 


ஆனால், பிறன் மனை நயந்தவனுக்கு இன்பமும் கிடைக்காது.  எப்போது அந்தப் பெண்ணின் கணவன் வந்து விடுவானோ, வேறு யாரும் பார்த்து விடுவார்களோ என்று பயந்து பயந்து தான் இன்பம் அனுபவிக்கப் போக முடியும். அப்படி ஒரு பயத்தில் இன்பம் அனுபவிக்க முடியுமா? 


அறமும் போய், பொருளும் போய், இன்பமும் கிடைக்காமல் போவதால் அவனை வடி கட்டின முட்டாள் என்கிறார் வள்ளுவர். 


எல்லாவற்றையும் இழந்து, ஒன்றும் கிடைக்காமல் நிற்பவனை என்ன என்று சொல்லுவது?


அது மட்டும் அல்ல, பழி, அவமானம், தலை குனிவு எல்லாம்வரும் அல்லவா?


என்னதான் கிடைக்கும் என்று இன்னொருவன் மனைவியை விரும்பி ஒருவன் போகிறான் என்று  வள்ளுவர் அவனை கண்டிக்கிறார். 


சற்று சங்கடமான குறள்தான். அறம் சொல்ல வந்துவிட்டால் எல்லாம் கூறித்தான் ஆகவேண்டும் என்று வள்ளுவர் அதையும் வெளிபாடையாக கூறினார். 
















Saturday, June 11, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - இது செய்மின், இன்றே

திருவாசகம் - யாத்திரைப் பத்து - இது செய்மின், இன்றே 


ஆன்மீகம் சிலசமயம் குழப்பமாகவும், தெளிவற்று மயக்கம் தருவதாகவும் தோன்றும். 


ஒரு பக்கம் கடவுள் இல்லை என்று கூறும் கூட்டம். 


இன்னொரு பக்கம் கடவுள் இருக்கிறார் ஆனால் எங்கள் கடவுள்தான் உண்மையான கடவுள் எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை என்று கூறும் மதங்கள் ஆயிரம். என் கடவுள் முக்தி தருவார், என் கடவுள் இறுதித் தீர்ப்பு தருவார், என்று ஆளாளுக்கு தங்கள் மதம், கடவுள் பற்றிக் கூறுகிறார்கள். இதில் எது சரி, எது தவறு என்று எப்படி கொள்வது? 


நாம் பிறந்த ஒரே காரணத்தால் என் மதம் உயர்ந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? 


சரி கடவுள் கூட ஒருவர்தான் என்று ஏற்றுக் கொண்டாலும், அவரை அடையும் வழி எது தெரிய மாட்டேன் என்கிறது. 


மதங்களுக்குள் உள்ள வேறுபாடுகள் ஒரு புறம் இருக்கட்டும்.  இந்து மதத்தின் உள்ளே கூட பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம்  என்று பலவிதமான மார்க்கங்கள் இருக்கின்றன. எதை கொள்வது. எதைத் தள்ளுவது என்று புரியாமல் குழப்பம் வரும். 


சரி ஏதோ ஒரு கடவுள், ஏதோ ஒரு மார்க்கம் என்று முடிவு செய்து விட்டால் கூட, அதில் போக எங்கே நேரம் இருக்கிறது?  வீடு, வேலை,  சம்பாத்யம்,  பொழுது போக்கு, உடல் ஆரோக்கியம் என்று ஒவ்வொரு நாளும் போய் விடுகிறது.  


இதில் எங்கே ஆன்மீகத்தில் ஈடுபட எங்கே நேரம் இருக்கிறது? 


இப்படி எல்லாம் குழப்பம் வரும் என்று மணிவாசகருக்குத்  தெரியும். 


" பக்தி செய்யும் பக்தர்களுக்குள் இன்றே வந்து சேராமல், மயக்கம் கொண்டவர்களே, பின்னாளில் நீங்கள் துன்பப்படும் போது உங்களை யார் மதிக்கப் போகிறார்கள்? உங்கள் குழப்பம் தெளிய வேண்டும் என்றால், ஒன்று செய்யுங்கள், சிவலோகத்து அதிபன், பாம்பணிந்த கைகளை கொண்டவனை அடையாமல் வேறு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறீர்கள். ஐயோ, ஐயோ, ஐயோ "


என்று பதறுகிறார். 


பாடல் 


 புரள்வார், தொழுவார், புகழ்வார், ஆய்; இன்றே வந்து, ஆள் ஆகாதீர்,

மருள்வீர்; பின்னை, மதிப்பார் ஆர்? மதியுள் கலங்கி, மயங்குவீர்;

தெருள்வீர் ஆகில், இது செய்மின்; சிவலோகக் கோன், திருப்புயங்கன்

அருள் ஆர் பெறுவார், அகல் இடத்தே? அந்தோ! அந்தோ! அந்தோவே!


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_11.html


(please click the above link to continue reading)



 புரள்வார் = தரையில் கிடந்து புரள்வார் 


தொழுவார் = வணங்குவார் 


புகழ்வார் = போற்றுவார் 


 ஆய் = ஆகி 


இன்றே வந்து = இன்றே வந்து 


ஆள் ஆகாதீர், = ஆட்படாமல் 


மருள்வீர் = மயக்கம் கொள்வீர்கள் 


பின்னை = பின்னாளில் 


மதிப்பார் ஆர்? = உங்களை யார் மதிக்கப் போகிறார்கள் 


மதியுள் கலங்கி = புத்தி குழம்பி 


மயங்குவீர்; = மயக்கம் கொண்டு 


தெருள்வீர் ஆகில் =அதில் இருந்து தெளிவு அடைய விரும்பினால் 


இது செய்மின் = இதைச் செய்யுங்கள் 


சிவலோகக் கோன் = சிவலோகத்து அதிபன் 


திருப்புயங்கன் = பாம்பணிந்த கைகளை கொண்டவன் 


அருள் ஆர் பெறுவார் = அருளை வேறு யார் பெறுவார்கள் ?


அகல் இடத்தே? = வேறு இடத்தில் 


அந்தோ! அந்தோ! அந்தோவே! = ஐயோ, ஐயோ, ஐயோவே 


படித்துக் கொண்டே இருந்தால், சிந்தித்துக் கொண்டே இருந்தால் இருக்க வேண்டியதுதான்.  குழப்பம்தான் மிஞ்சும். 


அவனை அறிவு கொண்டு காண முடியாது. 


அறிவு ஏற ஏற புரளுதலும், தொழுதலும் நிகழ்வது கடினமாகிப் போகும். அறிவு தடுக்கும்.  "தரையில் கிடந்து புரள்வதா?" என்று அறிவு தடுக்கும். 


ஆனால், புரண்டும், தொழுதும், போற்றியும் எளிதாக இறைவனை அடையலாம்.  அதை விட்டு விட்டு, ஏதேதோ செய்து கொண்டிருகிரீர்களே, ஐயோ, ஐயோ, ஐயோ என்று  பச்சாதப் படுகிறார் மணிவாசகர். 


இதெல்லாம் செய்ய நாள் கிழமை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. 


"இன்றே இதைச் செய்மின்" என்கிறார். 


இந்தப் பாடலோடு யாத்திரைப் பத்தில் உள்ள பத்து பாடல்களையும் நாம் பார்த்து விட்டோம். 


வாசித்தமைக்கு நன்றி.