Showing posts with label kurunthogai. Show all posts
Showing posts with label kurunthogai. Show all posts

Saturday, January 29, 2022

குறுந்தொகை - தாகம்

குறுந்தொகை  - தாகம் 


பசி கூட பொறுத்து விடலாம், தாகம் பொறுக்க முடியாது. 


தாகம் வந்து விட்டால், உடம்பு தவித்துப் போய் விடும். நா வறளும். கண் மயங்கும். காது அடைக்கும். மயக்கம் வரும். 


ஓரிரண்டு நாள் சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் ஆகாது. நீர் குடிக்காமல் இருக்க முடியாது. 


அந்த தாகத்தையும் மீறியது காதல் உணர்வு. 


தலைவன் பிரிந்து போய் விட்டான். எப்போது வருவான் என்று தெரியாது. வருவானா மாட்டானா என்றும் தெரியவில்லை. தலைவி தவிக்கிறாள். தோழியிடம் தன் தவிப்பை சொல்கிறாள். 


தோழி, அவளுக்கு ஆறுதல் சொல்கிறாள். 


"கவலைப்படாதே அவர் கட்டாயம் வருவார். வேலை நிமித்தமாக அவர் உன்னை மறந்தால் கூட, அவர் போகிற வழி உன்னை அவருக்கு ஞாபகப் படுத்தும். அவர் போகிற வழி பாலை நிலம். வெப்பம் அதிகமாக இருக்கும். தண்ணீர் கிடைப்பது அரிது. அங்கு ஆண் யானைகளும், பெண் யானைகளும் திரியும். அப்போது, பெண் யானைக்கு தாகம் எடுக்குமே என்று ஆண் யானை, அங்குள்ள மரப் பட்டைகளை உரித்து, அதில் வடியும் நீரை தன் தும்பிக்கையில் ஏந்தி, தான் குடிக்காமல் , பெண் யானைக்கு ஊட்டி விடும். அதை பார்க்கும் போது தலைவனுக்கு உன் நினைவு கட்டாயம் வரும்"


என்று. 


பாடல் 


"நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின தோழியவர் சென்ற வாறே."


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_26.html


(please click the above link to continue reading)


"நசை = அன்பு, நட்பு 


பெரி துடையர் = நிறைய உள்ளவர் 


நல்கலு நல்குவர் = உனக்கு அவர் காதலைத் தருவார் 


பிடி = பெண் யானையின் 


பசி = தாகத்தை 


களைஇய = போக்க 


பெருங்கை = பெரிய கையை உடைய 


வேழம் = ஆண் யானை 


மென்சினை = மென்மையான கிளைகளை 


யாஅம் = யா என்ற மரத்தின் 


பொளிக்கும் = உடைத்து, முறித்து 


அன்பின = அன்பினால் 


தோழி = தோழி 


யவர் =அவர் 


சென்ற வாறே." = சென்ற ஆறே = சென்ற வழியே 


யதார்த்தமான கவிதை. 


நிலவு போல் முகம், மூங்கில் போல் கை என்று பெண்ணின் உடலை வருணனை செய்யாமல், பிரிவு, காதல், ஏக்கம், நம்பிக்கை, என்று மனித உணர்வுகளை படம் பிடிக்கும் பாடல். 


"இதோ இருக்கிறது மரம். நான் இந்தப் பக்கம் கிளைகளை முறித்து நீர் அருந்துகிறேன். நீ அந்தப் பக்கம் குடி" என்று சொல்லாமல், பெண் யானைக்கு நீர் ஊட்டி விடுமாம் ஆண் யானை. 


அம்புட்டு காதல். 


ஒரு யானைக்கே இவ்வளவு காதலா என்று தலைவன் மனதில் தோன்றும் தானே. 


பொருளீட்டிக் கொண்டு , அதை அவள் கையில் கொடுத்து, அவள் முகம் மலர்வதை பார்க்க அவனுக்கும் அவனுக்கும் ஆசை வரும் தானே. 


சும்மா காதல் காதல் என்று சொல்லிக் கொண்டு இருக்கவில்லை. மரப் பட்டைகளை உரித்து, நீர் எடுத்து, பெண் யானைக்கு ஊட்டி விடுகிறது. அது காதல். 


இப்படி பல விடயங்களை நம் கற்பனைக்கு விடுகிறது இந்தப் பாடல். 


இப்படி நிறைய பாடல்கள் இருக்கின்றன.  


ஆர்வம் உள்ளவர்கள்,  தேடிப் பிடியுங்கள், படியுங்கள். 

Tuesday, June 8, 2021

குறுந்தொகை - நல்கலு நல்குவர்

குறுந்தொகை - நல்கலு நல்குவர் 


வேலை நிமித்தமாக வெளியூர் போயிருப்போம். நாட்கள் பல கழிந்திருக்கும். வீட்டு நினைப்பு வராமல் இருக்குமா?


அந்த ஊரில் தெருவில் ஒரு இளம் ஜோடி கை கோர்த்து நடந்து போவதை பார்க்கும் போது, மனைவியின் (அல்லது கணவனின்) நினைப்பு வரும் அல்லவா? 


அந்த ஊரில் ஒரு நல்ல உணவை இரசிக்கிறோம். அடா ...இந்த ஐஸ் கிரீம் அவளுக்கு பிடிக்குமே என்ற எண்ணம் வரும் அல்லவா? 


இந்த மாதிரி சேலை உடுத்தினால் அவள் அழகாக இருப்பாள் என்று தோன்றலாம். 


அது மனித இயற்கை. துணையை பிரிந்து வந்த பின், சுற்றுப் புற சூழ் நிலை நமக்கு நம் துணையை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். 


இது இன்று நேற்று அல்ல. சங்க காலம் தொட்டு நிகழ்ந்து வருகிறது. 


தலைவன் பிரிவால் தலைவி வாடுகிறாள். அவளுக்கு ஆறுதலாக தோழி சொல்கிறாள் "கவல படாதடீ ...சீக்கிரம் வந்துருவார்" நு.


தலைவி: ஆமா நீ தான் சொல்ற. எனக்கு என்னவோ நம்பிக்கையே இல்ல. அவருக்கு வேலை தான் முக்கியம். என் நினைப்பு கூட இருக்குமோ இல்லையோ..


தோழி: அதெல்லாம் இல்லை...அவருக்கு உன் நினைப்பு கண்டிப்பா இருக்கும். 


தலைவி: அதெப்படி சொல்ற? 


தோழி: அவர் போகிற வழியோ பாலை நிலம். வெயில் சுட்டு எரிக்கும். அங்கு ஆண் யானையும், பெண் யானையும் சேர்ந்து செல்லும். தாகம் அதிகம் எடுக்கும். அப்போது, ஆண் யானை அங்குள்ள "யா" மர பட்டைகளை உரிக்கும். அதில் இருந்து நீர் வடியும். வடியும் நீரை தான் உண்ணாமல், பெண் யானை அருந்த, ஆண் யானை அதைப் பார்த்து மனம் மகிழும். 


அதை எல்லாம் பார்க்கும் போது அவருக்கு உன் நினைப்பு கண்டிப்பாய் வரும்.


ஏதோ, இன்று வரும் சினிமா பட காட்சி மாதிரி இருக்கிறது அல்லவா? 


கீழே உள்ள சங்க காலப் பாடலைப் பாருங்கள்.


பாடல் 


நசைபெரி துடையர் நல்கலு நல்குவர் 

 பிடிபசி களைஇய பெருங்கை வேழம் 

 மென்சினை யாஅம் பொளிக்கும் 

 அன்பின தோழியவர் சென்ற வாறே. 



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_89.html

(please click the above link to continue reading)



நசை = அன்பு 


பெரி துடையர் = அதிகம் உடையவர் (உன்பால்) 


நல்கலு நல்குவர்  = அந்த அன்பை உன்னிடம் தருவார் 


 பிடி = பெண் யானை 


பசி களைஇய = பசியைப் போக்க 


பெருங்கை வேழம்  = பெரிய தும்பிக்கையை உடைய ஆண் யானை 


மென்சினை = மெல்லிய கிளையை 


யா = யா மரத்தின் 


அம் பொளிக்கும்  = உடைத்து, பியித்து 


அன்பின = அன்பை வெளிப்படுத்தும் 


தோழியவர் = தோழி, அவர் 


சென்ற வாறே.  = சென்ற வழி 


அவர் செல்கிற வழியில் இதை எல்லாம் பார்ப்பார். அப்போது அவருக்கு உன் நினைவு கண்டிப்பாக வரும். உன்னைக் காண சீக்கிரம் வந்து விடுவார் என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். 


எவ்வளவு மென்மையான உணர்வுகள். அதை எவ்வளவு அழகாக வெளிப் படுத்தி இருக்கிறார்கள். 



Thursday, July 25, 2019

குறுந்தொகை - குருகும் உண்டு

குறுந்தொகை - குருகும் உண்டு 



காதலில் பெண் மிக எச்சரியாகவே இருக்க வேண்டி இருக்கிறது. ஒரு இழை கோடு தாண்டினாலும், பெண் தான் அந்த பளுவை தூக்கிச் சுமக்க வேண்டி இருக்கிறது.

காதலும், ஊடலும், கூடலும் ஒரு அந்தரங்க அனுபவம். சாட்சிக்கு யாரையும் வைத்துக் கொண்டா காதலிக்கு முத்தம் கொடுக்க முடியும்?

ஆண் துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு கிளம்பி விடலாம். இயற்கை, பெண்ணுக்கு அதிகம் சுமையை தந்திருக்கிறது.


"கர்ப்பம் ஆனால் என்ன? வேண்டாம் என்றால் கலைத்து விட்டு போவது. இன்று மருத்துவம் எவ்வளவோ முன்னேறி விட்டது. கற்பு கத்திரிக்காய் எல்லாம் அந்தக் காலம்" என்று சொல்லுபவர்களும் இருக்கலாம். அவர்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

அறிவியலும், மருத்துவமும் எவ்வளவு வேகமாக முன்னேறினாலும், பண்பாடு, கலாச்சாரம் என்பவை அவ்வளவு சீக்கிரம் மாறிவிடுவது இல்லை.

எது நமது பண்பாடு, கலாச்சாரம் என்றால் நம் இலக்கியங்களை புரட்டி பார்த்தால் தெரியும். எப்படி நம் முன்னவர்கள் வாழ்ந்தார்கள்? எது அவர்களுக்கு முக்கியம் என்று பட்டது? எதை முதன்மை படுத்தி அவர்கள் வாழ்ந்தார்கள்  என்று நாம் அறியலாம்.

இலக்கியம் ஒரு காலக் கண்ணாடி.

"அவள் எவ்வளவோ மறுத்தால். அவன் எங்கே கேட்கிறான். அவளை வற்புறுத்தி சம்மதிக்க வைத்துவிட்டான். காரியம் முடிந்த பின், இப்போது அவளை அவ்வளவாக அவன் கவனிப்பது இல்லை. அல்லது, அவளுக்கு அப்படி ஒரு பயம் வந்திருக்கிறது. யோசிக்கிறாள்.அன்று நடந்த அந்த கூடலுக்கு, சாட்சி யாரும் இல்லை. அவன் அப்படி எல்லாம் எங்களுக்குள் ஒன்றும் இல்லை என்று பொய் சொன்னால், நான் என்ன செய்ய முடியும்?

யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. அந்த ஓடைக்கு பக்கத்தில், செடிகளுக்கு பின்னால் ஒரு குருகு (பறவை) ஒன்று அங்கு நடந்ததை பார்த்துக் கொண்டிருந்தது"

என்று சொல்கிறாள் தலைவி.

எவ்வளவு வெகுளி (innocent)


பாடல்

“யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே!”

பொருள்

“யாரும் இல்லை;  = யாரும் இல்லை

தானே கள்வன்; = அவன் தான் களவாணிப் பயல்

தான் அது பொய்ப்பின் = அவன் (அன்று அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று) பொய் சொன்னால்

யான் எவன் செய்கோ? = நான் என்ன செய்ய முடியும் ?

தினைத்தாள் அன்ன = திணையின் ஓலை போல

சிறுபசுங் கால = பசுமையான கால்களை கொண்ட

ஒழுகுநீர் = நீர் ஒழுகும்

ஆரல் = ஆரல் என்று ஒரு வகை மீனைப்

பார்க்கும் = பிடிக்க பார்த்து இருக்கும்

குருகும் உண்டு = குருகு (ஒரு வித நீர் பறவை). நாங்கள் மட்டும் தனித்து இருந்தோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லை, ஒரு குருகும்  இருந்தது. குருகு"ம்".

தான் மணந்த ஞான்றே!” = அவன் என்னை சேர்ந்த நாளில்

பாடலில் பல நுண்ணிய உணர்ச்சிகள் பொதிந்து கிடக்கிறது.

அவனுக்கோ, அவளைக் கூடுவதில் ஆசை, ஆர்வம், பதற்றம். வேறு ஒன்றைப் பற்றியும் கவலை இல்லை. ஆனால், அவளோ பயப் படுகிறாள். யாரவது  வந்து விடுவார்களோ,  பார்த்து விடுவார்களோ என்று சுத்தி முத்தும் பார்த்துக் கொண்டே இருக்கிறாள். அப்படி பார்க்கும் போது , செடி மறைவில் உள்ள குருகு அவள் கண்ணில் படுகிறது. "சீ, இந்த குருகு நம்மையே பார்க்கிறதே" என்று  நாணுகிறாள்.

அப்புறம் நினைக்கிறாள். குருகுக்கு என்ன தெரியும். அது நம்மை ஒன்றும் பார்க்கவில்லை,  அது ஆரல் மீனை பிடிக்க காத்திருக்கிறது. என்னை ஒன்றும் இந்தக் கோலத்தில் அது பார்க்கவில்லை என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொள்கிறாள்.


மேலும் அவள் மனதில் ஓடுகிறது, ஒருவேளை அந்த ஆரல் மீனின் கதிதானோ தனக்கும் என்று.

எல்லாம் முடிந்து விட்டது.

நாட்கள் கொஞ்சம் நகர்ந்து விட்டன.

"ஐயோ, அன்று நடந்ததற்கு ஒரு சாட்சியும் இல்லையே. அவன் மறுத்து விட்டால் நான்  என்ன செய்வேன்"

என்று ஒரு பெண்ணாக பரிதவிக்கிறாள்.  அவன் கள்வன், பொய் சொல்லிவிட்டால் நான் என்ன செய்வேன்  என்று மறுகுகிறாள்.

உதடு துடிக்க, சொல்லவும் முடியாமல், மனதுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியாமல், கண்ணில் நீர் தளும்ப "நான் என்ன செய்வேன்" என்று சொல்லி நிற்கும்  ஒரு இளம் பெண் நம் கண் முன்னே வருகிறது அல்லவா?

"பார்த்த சாட்சி யாரும் இல்லை, ஒரே ஒரு குருகுதான் இருந்தது அந்த இடத்தில்"  என்று சொல்லும் போது "ஐயோ, இந்த வெள்ளை மனம் கொண்ட பெண்ணை, அவன் கை விட்டு விடுவானோ" என்று நம் மனம் பதறுகிறது.

"கவலை படாதடா, அப்படி எல்லாம் ஒண்ணும் நடக்காது. அவன் வருவான்" என்று அடி வயிறு கலங்க அவளுக்கு ஆறுதல் சொல்லக் தோன்றுகிறது.

சம்மதிக்காவிட்டால், அவன் அன்பை இழக்க நேரிடலாம். அவனுக்கு கோபம் வரும். "என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா...இவ்வளவுதானா உன் காதலின் வலிமை "  என்று அவன் அவளுடைய காதலை பந்தயம் வைக்கலாம்.

சம்மதித்து விட்டால், பின்னால் கை விட்டு விட்டால், எதிர் காலமே ஒரு கேள்விக் குறியாகிவிடும்.

பெண்ணுக்கு இரண்டு புறமும் சிக்கல்தான்.

பெண்ணின் நிலைமையை தெளிவாக படம் பிடிக்கும் அதே நேரத்தில் , மற்ற பெண்களுக்கும்   "எச்சரிக்கை ...இந்த நிலை உனக்கு வரலாம் " என்று பாடமும் சொல்கிறது இந்தப் பாடல்.

பாடலை ரசிப்போம். பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_25.html

Sunday, May 12, 2019

குறுந்தொகை - நாணும் சிறிதே

குறுந்தொகை - நாணும் சிறிதே 


பெண்ணுக்கு நாணம் வரும். எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

ஆணுக்கு நாணம் வருமா? வந்தால் எப்படி இருக்கும்? வெட்கப்படும் ஆண் மகனை பார்த்து இருக்கிறீர்களா?

குறுந்தொகை அப்படி ஒரு ஆண் மகனை, அவன் வாயிலாகவே காட்டுகிறது.

அவனுக்கு அவள் மேல் காதல். அவள் வீட்டில் அந்த காதலுக்கு தடை விதிக்கிறார்கள்.  அவனுக்கோ அவள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது.

என்ன செய்வது ?

அந்தக் காலத்தில் மடல் ஏறுதல் என்று ஒன்று உண்டு.

ஒரு பெண்ணின் மேல் காதல் கொண்ட ஆண் மகன், ஒரு துணியில் அந்தப் பெண்ணின் படத்தையும், தன் படத்தையும் வரைந்து, கொடி போல் பிடித்துக் கொண்டு, பனை மரக் கட்டையில் செய்த ஒரு குதிரை போன்ற ஒரு உருவத்தின் மேல் அமர்ந்து கொண்டு, ஊரில் உள்ள சின்ன பையன்களை அந்த குதிரையை இழுத்துக் கொண்டு செல்லச் சொல்லி, அந்த பெண்ணின் வீட்டின் முன்னால் அமர்ந்து கொள்வான். அதைப் பார்த்து ஊரில் உள்ளவர்கள், பெண் வீட்டாரிடம் பேசி, திருமணம் முடித்து வைத்து வைப்பார்கள்.

இதற்கு மடல் ஏறுதல் என்று பெயர்.

அந்தப் பையன் சொல்கிறான். இப்படி எல்லாம் அழிச்சாட்டியம் பண்ணி அவளை திருமணம் செய்து கொள்வேன்.  அவள் மிக நல்லவள். எனக்குத் தெரியும்.

திருமணத்திற்கு பின், நாங்கள் இனிமையாக வாழ்வோம். எனக்கும் வயதாகிவிடும். அப்பா ஆகி, தாத்தா ஆகி விடுவேன்.  அப்போது நான் ஊருக்குள் போதும் போது, என் காது பட சொல்லுவார்கள் "இந்தா போறாரே பெரிய மனுஷன்...அவர் அந்தக் காலத்தில், அவருடைய காதலியை மணக்க என்னவெல்லாம் பண்ணார் தெரியுமா " என்று. அதை கேட்கும் போது எனக்கே கொஞ்சம் நாணம் வரும் என்கிறான்.



பாடல்

அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த 
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப் 
பெறுகதில் லம்ம யானே பெற்றாங் 
கறிகதில் லம்மவிவ் வூரே மறுகில் 
நல்லோள் கணவ னிவனெனப் 
பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே.்  

பொருள்

அமிழ்துபொதி = அமுதத்தை பொதிந்து வைத்த

செந்நா = சிவந்த நாக்கு

அஞ்ச = = அஞ்சும்படி

வந்த = முளைத்த

வார்ந்திலங்கு = வார்த்து எடுத்தது போல நேராக விளங்குகின்ற

வையெயிற்றுச் = கூர்மையான பற்களையும்

சின்மொழி = சிறிய மொழி

யரிவையைப்  = அரிவையை , பெண்ணை, மனைவியை

பெறுகதில் = பெறுவேனாக

அம்ம = அம்ம

யானே = யானே

பெற்றாங்கு = பெற்ற பின்

அறிகதில் = அறிவார்களாக

அம்ம  இவ்வூர் = இந்த ஊரில் உள்ளவர்கள்

மறுகில்  = வீதியில்

நல்லோள்  = நல்லவளான  அவளின்

கணவ னிவனெனப்  = கணவன் இவன் என

பல்லோர் = பலர்

கூற = கூற

யா  = நான்

நாணுகஞ் சிறிதே.்   = சிறிது நாணம் கொள்வேன்

யார் யாரெல்லாம், என்ன எல்லாம் கூத்து அடித்தார்களோ அவர்கள் இளமை காலத்தில். யோசித்துப் பார்த்தால், இதழோரம் ஒரு புன்னகை அரும்பாமலா போகும்?

நாணுகஞ் சிறிதே....

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_83.html


Wednesday, May 8, 2019

குறுந்தொகை - நாணம் இல்லாத கண்ணே

குறுந்தொகை - நாணம் இல்லாத கண்ணே



புதிதாக திருமணம் ஆனவர்கள் அவர்கள். ஏதோ வேலை நிமித்தம் அல்லது வேறு ஏதோ தவிர்க்க முடியாத காரணம், அவளை விட்டு அவன் பிரிந்து கொஞ்ச காலம் போக வேண்டி இருக்கிறது. அவளுக்கு அவனை விட்டு பிரியவே மனம் இல்லை. துக்கம் தொண்டையை அடைக்கிறது. அதே சமயம், போகும் நேரத்தில் அபசகுனமாக அழுது கொண்டிருந்தால் அது நல்லா இருக்காது என்று எண்ணி, மனதை திடப்படுத்திக் கொண்டு அவனை வழி அனுப்புகிறாள்.

அவனும் ஊர் போய், செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு ஊர் திரும்புகிறான்.

அவனை கண்டதும் ஓடோடி வந்து அவனை கட்டித் தழுவிக் கொள்கிறாள். உணர்ச்சிகளை கட்டுப் படுத்த முடியவில்லை. கண்ணீர் பொங்கி பொங்கி வருகிறது. அடக்க முடியாமல் அழுகிறாள்.

கண்ணைத் துடைத்துக் கொண்டு, மெல்லச் சிரிக்கிறாள். வெட்கம் வருகிறது. ஐயோ, நான் ஏன் இப்படி அழுகிறேன்...அவர் தான் வந்து விட்டாரே , எதுக்கு அழுகிறேன். அழுவதாய் இருந்தால் அவர் போகும் போது அழுதிருக்க வேண்டும். அழுது, அவர் போவதை நிறுத்தி இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இப்போது ஏன் அழுகிறேன் என்று நினைத்து தனக்குத் தானே வெட்கப் படுகிறாள். "இந்த கண்ணுக்கு ஒரு நாணம் இல்லை. அழ வேண்டிய நேரத்தில் அழாமல் இப்போது அழுகிறேதே " என்று தன்னைத் தானே வியக்கிறாள்.


பாடல்

நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
நுண்ணுறை யழி துளி தலைஇய
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே.

பொருள்

நாணில = நாண் + இல்லை = நாணம் இல்லை

மன்ற = மற்ற

வெங் கண்ணே = என் கண்ணே

நாணேர்பு = நாள் + ஏற்பு = அவர் சென்ற நாளை ஏற்றுக் கொண்டு. அவர் பிரிந்து போவதை ஏற்றுக் கொண்டு

சினைப் = கரு கொண்ட

பசும்  = பச்சை

பாம்பின் = பாம்பின்

சூன் = சூல் , கரு

முதிர்ப் பன்ன = முதிர்ந்த போது. பச்சை பாம்பின் வயிற்றில் இருக்கும் கரு போல

கனைத்த = வளர்ந்த

கரும்பின் = கரும்பின்

கூம்பு = தோகை

பொதி யவிழ = விரித்து நிற்க

நுண்ணுறை = நுண்ணிய

யழி துளி = மழை துளி

தலைஇய = பெய்ய



தண்வரல் வாடையும்  = குளிர்ந்த வாடை காற்று 

பிரிந்திசினோர்க் = பிரிந்து வாழும் தலைவருக்கு 

கழலே. = அழுவதால் 

பிரிந்த போது அழாமல், சேரும் போது அழுவதால், இந்த கண்களுக்கு ஒரு நாணம் இல்லை. 

மழைச் சாரல், குளிர்ந்த சூழ் நிலை.  ஊரெல்லாம் ஒரே பச்சை பசேலென இருக்கிறது. கரும்பு முற்றி வளர்ந்து அதன் தோகை அசைந்து ஆடுகிறது. 

பிரிந்தவர் வந்திருக்கிறார். 

அப்புறம் என்ன?....

சங்க காலப் பாடல். 

மனித மனம், மனிதனின் உணர்ச்சிகள் எப்படி நிலத்தோடும், கால சூழ் நிலையாலும் பாதிக்கப் படுகிறது என்பதைக் காட்டுகிறது. 

நாம் அவ்வளவாக நேரடியாக அறிவது இல்லை. நாம் வாழும் சூழ்நிலை நம் எண்ணங்களை, நம் சிந்தனைகளை பாதிக்கிறது என்பதை. 

வீட்டைப் பெருக்கி , பொருள்களை ஒழுங்காக அடுக்கி வைத்து, அழகாக வைத்திருங்கள்....மனம் சந்தோஷமாக இருக்கும். 

வீட்டை குப்பை கூளமாக வைத்து இருங்கள். மனமும் குழப்பத்தில் இருக்கும். 

தமிழர்கள் வாழ்க்கையை அகம் புறம் என்று பிரித்தார்கள். 

அகம் , புறத்தை பாதிக்கிறது. 

புறம், அகத்தை பாதிக்கிறது. 

அகமும் புறமும் ஒன்றான ஒரு கூட்டு கலவைதான் நம் வாழ்க்கை. 

சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_8.html

Wednesday, March 20, 2019

குறுந்தொகை - செம்புலப் பெயனீர் போல

குறுந்தொகை - செம்புலப் பெயனீர் போல 


எங்கேயோ பிறந்து, வளர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்கிறார்கள். முன்ன பின்ன தெரியாது. காதலித்து திருமணம் செய்தாலும் அதே நிலை தான். என்ன திருமணத்துக்கு முன் சில காலம் காதலித்து இருக்கலாம். அதற்க்கு முன் அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்ததே இல்லை.

இப்படி இந்த உறவு சாத்தியமாகிறது ?

கணவனுக்காக, மனைவி உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறாள். மனைவியை காப்பாற்ற கணவன் வாழ்நாள் எல்லாம் பாடு படுகிறான். எப்படி இது முடிகிறது?

திருமணம் ஆனவுடன் எங்கிருந்து இந்த அன்பும், கற்பும், அக்கறையும், கரிசனமும் வந்து விடுகிறது?

ஆச்சரியமாக இல்லை?

அவர்களுக்குள் காதல். ஒருவர் மேல் மற்றொருவர் உயிரையே வைத்து இருந்தனர். இருந்தாலும், அவன் அடிக்கடி வெளியூர் போக வேண்டிய நிர்பந்தம். அவளை விட்டு விட்டுப் போய் வருகிறான். அவன் பிரிவு ஒரு பக்கம். இன்னொரு பக்கம், ஒரு வேளை அவனுக்கு நம்மை பிடிக்கவில்லையோ, நம்மை மறந்து விடுவானோ, வேறு யார் மேலும் அவனுக்கு அன்பு இருக்கிறதோ என்ற பெண்மைக்கே உண்டான சந்தேகம் அவளுக்குள் எழுகிறது.

அவனிடம் கேட்டேவிட்டாள். "என் மேல் உனக்கு உண்மையிலேயே அன்பு இருக்கிறாதா? என்னை கை விட்டு விடுவாயா ? " என்று கேட்டாள்.

அவன் பதறிப் போனான்.

அவளுக்கு ஆறுதல் கூறுகிறான்

"உன் தாயும், என் தாயும் யாரோ எவரோ. உன் தந்தையும் என் தந்தையும் எந்த விதத்தில் உறவு? ஒரு உறவும் இல்லை. சரி அதாவது போகட்டும், நீயும் நானும் எந்த விதத்தில் ஒன்று பட்டவர்கள். ஒன்றும் இல்லை. இருந்தும் செம்மண் நிலத்தில் பெய்த மழை நீரும், அந்த செம்மண்ணும் எப்படி ஒன்றோடு ஒன்று கலந்து விடுகிறதோ அது போல கலந்து விட்டோம். இனிமேல் நமக்குள் பிரிவு என்பதே இல்லை "

பாடல்




யாயு ஞாயும் யாரா கியரோ 
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே. 


பொருள்


யாயு ஞாயும் = உன் தாயும், என் தாயும்

யாரா கியரோ  = யாரோ எவரோ

எந்தையு = என் தந்தையும்

நுந்தையு  = நுன் (=உன்) தந்தையும்

மெம்முறைக் = எந்த முறையில்

கேளிர் = உறவு ?

யானு = நானும்

நீயு = நீயும்

மெவ்வழி யறிதும் = எந்த வழியில் ஒன்று பட்டவர்கள் ? நான் அறிய மாட்டேன்

செம்புலப் = சிவந்த மண்ணில்

பெயனீர் = பெய்த நீர் (மழை)

போல = போல

அன்புடை  = அன்புள்ள

நெஞ்சந்  தாங் = நெஞ்சம் தான்

கலந் தனவே. = கலந்தனவே

கேள் என்றால் உறவினர்.

இராமயணத்தில், கங்கை ஆற்றை கடந்து செல்ல வேண்டும். இராமனும், இலக்குவனும், சீதையும் தயாராகி விட்டார்கள். குகனுக்கு அவர்களை விட்டு பிரிய மனம் இல்லை. "நானும் உங்களுடனேயே வருகிறேன்" என்று அடம் பிடிக்கிறான்.

அவனை சமாதனம் சொல்லி இருக்கப் பண்ணுகிறான் இராமன்.

"நீ இந்த கடற் கரைக்கு அரசன். நீ தான் இந்த குடி மக்களை பாதுக்காக வேண்டும். இந்த சீதை இருக்கிறாளே அவள் உன் உறவினள். நான் உன் அரசுக்கு கட்டுப் பட்டு இருக்கிறேன்.


அன்னவன் உரை கேளா,
    அமலனும் உரை நேர்வான்,
என் உயிர் அனையாய் நீ;
    இளவல் உன் இளையான்; இந்
நல் நுதலவள் நின் கேள்;
    நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன்
    தொழில் உரிமையின் உள்ளேன் 

"நல் நுதல் அவள் நின் கேள்"....அழகிய நெற்றியை உடைய சீதை உன் உறவினள் என்கிறான் இராமன். 

கேள் என்றால் உறவு.

மீண்டும் குறுந்தொகைக்குப் போவோம். 

"என்னை விட்டு பிரிந்து விடுவாயா " என்று கேட்ட அவளுக்கு அவன் சொன்ன பதில், நாம் ஒருவரோடு ஒருவர் கலந்து விட்டோம். இனி பிரிவென்பது ஏது என்பதுதான்.

பெண்ணின் ஏக்கம், பயம், சந்தேகம், காதல், கவலை என்று அனைத்தையும் ஒன்றாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் பாடல். அவள் சொல்வதாக ஒன்றுமே இல்லை இந்தப் பாடலில். இருந்தும், நீர் ததும்பும் அவள் விழிகளை, துடிக்கும் அவள் இதழ்களை, விம்மும் அவள் நெஞ்சை நாம் உணர முடிகிறது அல்லவா.

Monday, February 18, 2019

குறுந்தொகை - இனியவோ ?

குறுந்தொகை - இனியவோ ?


காரிலோ, பஸ்ஸிலோ, விமானத்திலோ ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போகலாம். ஆனால், ஒரு காலத்தில் இருந்து இன்னொரு காலத்துக்குப் போக முடியுமா ? ஆயிரம் ஆண்டுகள் முன்னோ பின்னோ போக முடியுமா ? அப்படி போக இதில் ஏறிப் போக வேண்டும்? அதற்கு ஒரு வாகனம் இருக்கிறதா என்ன?

இருக்கிறது. அதன் பெயர் இலக்கியம்.

இலக்கியம் படைக்க மட்டும் அல்ல, படிக்கவும் நிறைய கற்பனை வளம் வேண்டும்.  இலக்கியங்கள் காலத்தால் மிக முந்தியவை. அதிலும் குறிப்பாக தமிழ் இலக்கியம் காலத்தால் மிக முந்தியது. இலக்கியங்கள் நம்மை வேறு ஒரு கால கட்டத்திற்கு மிக எளிதாக கொண்டு செல்லும் வல்லமை வாய்ந்தவை. நாமும் கொஞ்சம் ஒத்துழைத்தால். அந்த வண்டியில் போக கற்பனை என்ற டிக்கெட் வாங்க வேண்டும். அவ்வளவுதான்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

என்றாவது சாப்பாட்டில் உப்பு இல்லாமலோ, அல்லது மிகக் குறைவாகவோ போட்டு சாப்பிட்டு இருக்கிறீர்களா? எப்படி இருக்கும்? வாயில் வைக்க விளங்காதல்லவா? உப்பு இல்லா பண்டம் குப்பையிலே என்று சொல்லுவார்கள்.

நமக்கு உப்பு மிக எளிமையாக கிடைத்து விடுகிறது.

ஆயிரம்    ஆண்டுகள் பின்னோக்கி போங்கள். பெட்ரோல் கிடையாது. டீசல் கிடையாது. லாரி , டெம்போ வேன் கிடையாது. மின்சாரம் கிடையாது. கம்ப்யூட்டர் கிடையாது. உப்பு எங்கோ ஒரு கடற்கரையில் உருவாகும். அது கடற்கரையை விட்டு தள்ளி இருக்கும் ஒரு ஊருக்கு எப்படி வரும்? யோசித்துப் பாருங்கள் ?

உப்பு விற்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்தது. அவர்களுக்கு உமணர்கள் என்று பெயர்.   அவர்கள், கடற்கரையில் இருந்து உப்பு வாங்கிக் கொண்டு ஊர் ஊராய் சென்று    விற்பார்கள்.

அப்படி போகும் வழியில், ஹோட்டல் எல்லாம் கிடையாது. அக்கம் பக்கம் ஊர் ஒன்றும் இருக்காது. ஊர் வேண்டும் என்றால், நீர் வேண்டும், விவசாயம் வேண்டும், அதெல்லாம் இருந்தால் தான் ஊரு உருவாகும். தண்ணி இல்லாத காட்டில்  ஊர் ஏது ? ஒரே வறண்ட நிலமாக இருக்கும்.

அவர்களே ஏதாவது பாழடைந்த ஒரு வீட்டின் நிழலிலோ அல்லது மரங்களின் நிழலிலோ தங்கி, கற்களை கூட்டி, அடுப்பு செய்து உணவு ஆக்கி உண்பார்கள். உண்ட பின், அவற்றை அப்படியே போட்டு விட்டுப் போய் விடுவார்கள். கருகிய விறகும், சாம்பலும், அந்த கூட்டு கற்களும் அங்கே கிடக்கும்.

அந்த வழியாக தலைவன் சென்று வேறு ஒரு ஊருக்குச் சென்று பொருள் தேடப் போகிறான். அவளும், அவன் கூட வருவேன் என்று மல்லுக்கு நிற்கிறாள். அவன் இதை எல்லாம் எடுத்துச் சொல்லி..."வேண்டாண்டா...உன்னால முடியாது. ரொம்ப கஷ்டம். நீ பேசாம, இராஜாத்தி மாதிரி இங்க இரு.  நான் போய் சம்பாதித்து பொருள் கொண்டு வருகிறேன் "  என்று எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான். அவள் சம்மதிக்கவில்லை.

அவளுடைய தோழியிடம் சென்று சொல்கிறாள் "என்ன விட்டு விட்டு அவன் மட்டும் தனியா போறேன்னு சொல்றான். நானும் கூடப் போறேன். அவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. சரியான மர மண்டையா இருக்கான்....நீயாவது அவனிடம் சொல்லேன் " என்று. தோழி "சரி...சரி..நீ அழாத, நான் பேசுறேன்" என்று சொல்லிவிட்டு, அவனிடம் சென்று பேசுகிறாள்

" நீ சொல்வதெல்லாம் சரி தான். ஆனா உனக்கு ஒண்ணு புரிய மாட்டேங்குது. அது தான் பெண்ணின் மனசு. நீ இல்லாமல் அவள் இங்கே சந்தோஷமா இருப்பான்னு நினைக்கிறியா  ?" என்று ஒரு போடு போடுகிறாள்.

பாடல்

உமணர் சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை
ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்கா
டின்னா வென்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே

பொருள்

உமணர் = உப்பு விற்பவர்கள். உப்பு விற்பவர்கள் என்று குறிப்பாக சொன்னாலும், விற்பவர்கள், வியாபாரிகள் என்று பொதுவாக பொருள் கொள்வது நன்றாக இருக்கும்.

சேர்ந்து = ஒன்றாகச் சேர்ந்து

கழிந்த = விற்று முடித்தவுடன் விலகி சென்ற பின்

மருங்கின் = இடத்தின்

அகன்தலை = விலகிய இடத்தில்

ஊர் பாழ்த்தன்ன = பாழ் பட்ட, வெறிச்சோடிப் போன ஊர் போல

ஓமை = ஒரு விதமான மரம். (tooth brush tree என்று பொருள் சொல்கிறார்கள். ஒரு வேளை சவுக்கு மரமாக இருக்குமோ ?)

அம் பெருங்காடு = ஊருக்கு வெளியே உள்ள அந்த பெரிய காடு

இன்னா = கொடியது

என்றிர் ஆயின் = என்று நீ சொன்னால்

இனியவோ = இனிமையானதா ?

பெரும = பெரியவனே

தமியர்க்கு மனையே = தனித்து நிற்கும் எங்கள் வீடே

நீ இல்லாத வீடு வெறிச்சோடிப் போய் இருக்கும். தனியாக அவள் என்ன செய்யவாள். அதை எல்லாம் நீ சிந்தித்துப் பார்க்க வேண்டாமா என்று கூறுகிறாள்.

சொன்னது பாதி. சொல்லாமல் விட்டது மீதி.

ஒருவேளை அவர்களுக்கு சமீபத்தில் திருமணம் ஆகி இருக்கலாம். குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம். குழந்தைகள் இருந்தால் அவைகளையும் தூக்கிக் கொண்டு வருவேன் என்று சொல்லுவாளா?  கணவனும் இல்லை. பிள்ளைகளும் இல்லை என்றால், தனிமையில் அவள் என்ன செய்வாள்?

பெண்களின் சங்கடங்களை ஆண்கள் புரிந்து கொள்வதே இல்லை போலும், சங்ககாலம் தொட்டு.

கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள். காலம் கடந்து, இன்னொரு உலகத்துக்கு உங்களை இந்த இலக்கியங்கள் கொண்டு செல்லுவதை நீங்கள் உணரலாம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_18.html


Saturday, February 16, 2019

குறுந்தொகை - நோமென் நெஞ்சே

குறுந்தொகை - நோமென் நெஞ்சே 


வீட்டில் பிள்ளைகள் சில சமயம் சொன்ன பேச்சு கேட்காமல் ஓடி ஆடி கீழே விழுந்து முட்டியை சிராய்த்துக் கொண்டு வந்து நிற்பார்கள். ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் "வேணும், சொன்னா கேட்டாத்தான...இப்படி ஒரு தடவை காயம் பட்டுக்கிட்டு வந்தா தான் உனக்கு புத்தி வரும் " என்று அவர்கள் மேல் நாம் கோபம் கொள்வதும் உண்டு.  என்ன தான் கோபம் வந்தாலும், பிள்ளை பாசம் போகுமா. "வா இங்க...எப்படி அடி பட்டுக்கிட்டு வந்திருக்க பாரு...பாத்து விளையாடக் கூடாதா" என்று ஆறுதலும் சொல்லுவம், அடி பட்ட இடத்துக்கு மருத்துவமும் செய்வோம்.

காதலன் அவளை விட்டு பிரிந்து விட்டான். ஒரேயடியாக இல்லை. என்னமோ கொஞ்ச நாளா பேச்சே இல்லை. அவளுக்கு வருத்தம் தாங்கவில்லை. அழுகிறாள். யாரிடம் சொல்ல முடியும் ?

அவள் நெஞ்சிடம் கூறுகிறாள்


"நல்லா அழு. இவ்வளவு கண்ணீர் விட்டு அழுதாலும் வராத காதலர் நமக்கு அமைந்திருக்கிறார். அதை நினைத்து நல்லா அழு. எனக்கென்ன " என்று தன் நெஞ்சோடு நொந்து கொள்கிறாள் அவள்.

பாடல்

நோமென்  னெஞ்சே  நோமென்  னெஞ்சே 
இமைதீய்ப்  பன்ன  கண்ணீர்  தாங்கி 
அமைதற்  கமைந்தநங்  காதலர் 
அமைவில  ராகுத  னாமென்  னெஞ்சே.


சீர் பிரித்த பின்


நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே
இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே

பொருள்


நோம் = நொந்து கொள்

என் நெஞ்சே = என் மனமே

நோம் = நொந்து கொள்

என் நெஞ்சே = என் மனமே

இமை = இமைகள்

தீய்ப்பு அன்ன = தீய்ந்து போகும் அளவுக்கு

கண்ணீர் தாங்கி = கண்ணீர் தாங்கி

அமைதற்கு அமைந்த = இருக்கும்படி நமக்கு கிடைத்த

நம் காதலர்  = நம்முடைய காதலர்

அமைவிலர் ஆகுதல் = நமக்கு சரியாகவில்லை என்றால்

நோம் என் நெஞ்சே  = நொந்துகொள் என் நெஞ்சே

சூடான கண்ணீர். அது கண்ணிலேயே தங்கி விட்டது. கண்ணீர் காயவே இல்லை. அந்த சூட்டில் கண் தீய்ந்து விடும் போல் இருக்கிறது.

என்ன அழுது என்ன பயன்? அவன் தான் வரவே மாட்டேன் என்கிறானே.

"நீ வருத்தப் பட்டுக் கொள் . வேறு என்ன செய்ய "

நம் முன்னவர்கள் உருகி உருகித்தான் காதலித்து இருக்கிறார்கள்.

அவர்களின் மரபணு நம்மிடமும் இருக்கும் அல்லவா. எங்கே போகும்?

அந்த காதல் என்ற  ஜீவ நதி அன்றில் இருந்து வரை , வற்றாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த மண், அதனால் தான் இன்னமும் ஈரமாகவே இருக்கிறது.

அவள் அன்று அழுத கண்ணீர் இன்னமும் காயவில்லை. இந்த பிளாகின் மூலம் இன்றும் கசிந்து கொண்டே இருக்கிறது.

தமிழ் நாட்டில், ஏதோ ஒரு கிராமத்தில், என்றோ அவள் அழுத கண்ணீர், காலம் பல கடந்து, இன்று இன்டர்நெட்டில் , கண்டம் விட்டு கண்டம் போய் கொண்டிருக்கிறது.

அவள் இல்லை.  அவன் இல்லை. அந்த கண்ணீர் மட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறது.


https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_16.html

Monday, July 30, 2018

குறுந்தொகை - நீரோரன்ன சாயல்

குறுந்தொகை - நீரோரன்ன சாயல்


ஆண் எப்போதுமே கொஞ்சம் முரடு தான். ஒரு மென்மை , நளினம் கிடையாது. ஆக்கிரமிக்கும் மனம், தான் தான் பெரியவன் என்ற ஆளுமை, எதையும் வலிமையால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, போர், போட்டி, வெற்றி, தோல்வி என்று ஒரு போராட்டம் நிறைந்ததாக இருக்கிறது ஒரு ஆணின் வாழ்க்கை.

களங்கள் மாறி விட்டன. யுத்த களம் போய் , விளையாட்டு, வணிகம், பணம் சேர்ப்பது, பெரிய வீடு, பெரிய கார் என்று நாடு பிடிக்கும் ஆசை வேறு விதங்களில் பரிணமிக்கத் தொடங்கி இருக்கிறது.

ஆணின் இந்த முரட்டுத் தனத்தை மென்மை படுத்துபவள் பெண்.

முரடு, கடினம், சூடு, வெப்பம் இவற்றை மாற்றி பூ போன்ற மென்மை , நீர் போன்ற குளிர்ச்சி என்று தருபவள் பெண்.

குறுந்தொகையில் ஒரு காட்சி.

அவன் பெரிய வீரன். சண்டியர். முரடன். அவனின் காதலியோ மென்மையானவள். அவன் சொல்கிறான்

"நீர் போன்ற அந்த சின்னப் பெண் என் வலிமையை எல்லாம் மாற்றி என்னையும் மென்மையாக மாற்றி விட்டாளே " என்று.

பாடல்


மால் வரை இழி தரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்,
சிறு குடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்,
நீரோரன்ன சாயல்,
தீயோரன்ன என் உரன் வித்தன்றே.


பொருள்


மால் வரை = வரை என்றால் மலை. மால் வரை என்றால் பெரிய மலை. சொல்ல சொல்ல கற்பனை செய்து கொண்டே வாருங்கள். பெரிய கரிய மலை.

இழி தரும் = கீழே இறங்கி வரும்

 தூ வெள் அருவி = தூய்மையான வெள்ளை நிற அருவி . கரிய  முரட்டு மலை. அதில் இருந்து பட்டுப் போல இறங்கி வரும் தூய்மையான வெண்மையான அருவி.


கல் முகைத் = மலை குகை. அந்த மலையில் அங்கங்கே குகைகள் இருக்கின்றானா.

ததும்பும் = நிறைந்து இருக்கும்

பன்மலர்ச்  = பல விதமான மலர்களைக் கொண்ட

சாரல் =  மலைச் சரிவு

சிறு குடிக் குறவன் = சிறிய குடிசையில் வாழும் குறவன்

பெருந்தோள் = பெரிய தோள்களை உடைய அவனின்

குறுமகள் = சின்னப் பெண்

நீரோரன்ன = நீர் போன்ற

சாயல் = சாயலை உடையவள்

தீயோரன்ன = தீய குணங்கள் கொண்ட

என் = என்னுடைய

உரன்  = வலிமையை

வித்தன்றே = அவித்தன்றே. குறைத்து விட்டாள்


பாறைகள் நிறைந்த கரடு முரடான பெரிய மலை.

அதில் உள்ள குகைகள். அங்கே பூத்து குலுங்கும் பல வித மலர்கள். அங்குள்ள சிறிய குடிசையில் வாழும் பெரிய தோள்களை உடைய குறவன். அவனின் சின்னப் பெண். அந்தப் பெண், முரடனான என் வலிமையை குறைத்து விட்டாள் என்கிறான்.

மலை, பாறை, குகை - ஆணின் இயல்பு.

மலர், தூய்மை, வெண்மை, நீர் - பெண்ணின் இயல்பு.

அப்படி என்று பாடல் ஆசிரியர் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் இன்றைய பெண்ணிய (feminist ) வாதிகள் சண்டைக்கு வருவார்கள். ஏன், பெண்களிலும்  முரடு இல்லையா, நாங்களும் சண்டை போடுவோம்.

பாடல் ஆசிரியர் சொலல்வில்லை. என் கற்பனை அது.


ஆணை, மென்மைப் படுத்தி, அவனை நெறிப் படுத்தும் இயல்பு இயற்கையாகவே பெண்ணிடம் இருக்கிறது.



ஒரு பெண்ணிடம் தான் வலு இழந்ததைக் கூட ஒரு ஆண் பெருமையாகச் சொல்கிறான் என்றால் அது பெண்ணின் பெருமை.  அவளிடம்  தோற்றவன் பெருமைப் படுகிறான்.

பெண்ணின் பெருந்தக்க யாவுள ?

http://interestingtamilpoems.blogspot.com/2018/07/blog-post_30.html

Friday, June 8, 2018

குறுந்தொகை - இனிது என்று கணவன் உண்டலின்

குறுந்தொகை - இனிது என்று கணவன் உண்டலின் 


உணவு என்பது உடலுக்கு சக்தி தரும் பொருள் மட்டும் அல்ல. அது உணர்வு சம்பந்தப் பட்டது.

பல வீடுகளில், உணவு சமைக்கப் பட்டு, மேஜையின் மேல் வைத்து விடுவார்கள். அவரவர் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் போட்டு சாப்பிட்டு விட்டு போவார்கள்.

மாட்டுக்கு வைக்கோல் போடுவதைப் போல, போட்டு விட்டுப் போய் விட வேண்டியது. மாடு எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்பது மாதிரி.

ஒன்றாக இருந்து உண்ண வேண்டும்.

இது ஒரு புறம் இருக்க, பல வீடுகளில் கணவனும் சரி பிள்ளைகளும் சரி போட்டதை சாப்பிட்டுவிட்டு போவார்கள். சாப்பாட்டைப் பற்றி ஒரு நல்ல வார்த்தை சொல்வது கிடையாது. மணிக்கணக்கில் சூட்டில் நின்று சமைத்ததை, ஏதோ கடனே என்று அள்ளிப் போட்டுக் கொண்டு போவது நல்லாவா இருக்கு. இரசித்துச் சாப்பிட வேண்டும். உணவு தயார் செய்த அம்மாவை, மனைவியை பாராட்ட வேண்டும். உணவு ருசியாக இருந்தால், "இன்னிக்கு இது ரொம்ப பிரமாதம் ..உன் கை பக்குவமே அலாதி தான் " என்று உளப் பூர்வமாக சொல்ல வேண்டும்.

அவ்வளவு நேரம் பட்ட பாடெலாம் அந்த ஒரு வார்த்தையில் கரைந்து போகும்.

அவள் அப்போதுதான் திருமணம் ஆகி வந்திருக்கிறாள். கணவனும் மனைவியும்  மட்டும் இருக்கிறார்கள். அவனுக்கு நல்ல உணவு தயாரிக்க வேண்டும் என்று அவளுக்கு ஆசை. புதுப் பெண். உணவு தயாரித்து பழக்கம் இல்லை. நல்ல சேலை ஒன்றை உடுத்திக் கொண்டு சமையல் ஆரம்பிக்கிறாள்.  அடுப்பில் ஏதோ கொதித்துக் கொண்டிருக்கிறது. அதற்குள் தயிர் சாதம் செய்து விடலாம் என்று தயிர் சாதம் பிசைந்து கொண்டிருக்கிறாள். அந்த நேரத்தில் அடுப்பில் வைத்த உணவு கொதித்து விட்டது. தயிர் சாதம் பிசைந்த கை. வெளியில் போய் கழுவி விட்டு வர நேரம் இல்லை. கையை அப்படியே அந்த நல்ல சேலையில் துடைத்துக் கொள்கிறார்கள். அடுப்பில் இருந்த உணவை கவனிக்கிறாள். புகை அடிக்கிறது. அந்தக் காலத்தில் gas அடுப்பு ஏது. நெற்றியில் வழியும் வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொள்கிறாள்.

எல்லாம் தயார் ஆகி விட்டது.

கணவனும் வந்து விட்டான். உணவு பரிமாறுகிறாள்.

மனைவியைப் பார்க்கிறான். சற்றே கலைந்த தலை. தயிர் படிந்த சேலைத் தலைப்பு. புகை படிந்த முகம். இருந்தும் அவனுக்கு உணவு செய்து விட்டோம் என்ற  சந்தோஷம் மற்றும் காதல்.

அவனுக்கும் மனதில் காதல் பொங்குகிறது. உன் சமையல் பிரமாதம் என்கிறான். அவளுக்கு ஒரே மகிழ்ச்சி. முகம் பிரகாசமாக மாறி விடுகிறது.

குறுந்தொகை காட்டும் காட்சி.

பாடல்


முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண் கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
‘இனிது’ எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள் நுதல் முகனே!

பொருள்

முளிதயிர் = கட்டித் தயிர்

பிசைந்த = பிசைந்த

காந்தள் = காந்தள் மலர் போன்ற

மெல் விரல் = மெல்லிய விரல்களை

கழுவுறு = துடைத்துக் கொண்ட

கலிங்கம் = சிறந்த ஆடை சேலை)

கழாஅது உடீஇ = மாற்றாமல் அதையே உடுத்துக் கொண்டு

குவளை உண் கண் = குவளை மலரைப் போன்ற குவிந்த கண்கள்

குய்ப்புகை கழுமத் = புகை நிறைந்த

தான் துழந்து = அவள் கையில் பிசைந்த

அட்ட தீம் புளிப் பாகர் = லேசாக புளித்த தயிர் சாதம்

‘இனிது’ எனக் = நன்றாக இருக்கிறது என்று

கணவன் உண்டலின் = சொல்லி கணவன் உண்டதைக்

நுண்ணிதின் = நுண்ணிய

மகிழ்ந்தன்று = மகிழ்ந்த

ஒள் நுதல் முகனே! = ஒளி நிறைந்த முகம் உடையவள்

முகத்தில் ஒளி வருமா ? சந்தோஷம் நிறைந்து இருத்தால், மனதில் அன்பு நிறைந்து இருந்தால் ஒளி உண்டாகும்.

அந்தக் காலத்தில் ப்ரதீப மஹாராஜா என்று ஒருவர் இருந்தார். இராமரின் முன்னோர். அவர் உடம்பில் இருந்து ஒளி வீசிக் கொண்டிருக்குமாம்.

இராமர் கறுப்புதான். இராமர் உடம்பில் இருந்து ஒளி வீசியதாம். கரிய உடலில் இருந்து ஒளியா ? அதுவும் எப்படி பட்ட ஒளி? சூரியனை மிஞ்சும் ஒளியாம்.

கம்பர் சொல்கிறார்.


வெய்யோன் ஒளிதன் மேனியின் விரி சோதியில் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறி கடலோ மழைமுகிலோ
ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்.

சூரிய ஒளி, இராமரின் மேல் இருந்து வரும் ஒளியில் மறைந்து விட்டதாம். அவ்வளவு ஒளி பொருந்திய உடல்.

மனைவியை பாராட்டிப் பாருங்கள். அவள் மகிழும் போது, அவள் நாணும் போது ஒளி விடுவதைக் காண்பீர்கள். 

கணவனுக்கு அருகில் இருந்து உணவு பரிமாறிப் பாருங்கள். உறவு பலப்படும். 

இலக்கியங்கள் நம் வாழ்வை மெருகூட்டும். மேலும் சிறப்படையச் செய்யும். 

அன்பு பலப்படட்டும். குடும்பங்கள் சிறக்கட்டும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/06/blog-post_8.html

Monday, September 25, 2017

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில்

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில் 


வான் பொய்ப்பதும், பஞ்சம் வருவதும் என்றும்  உள்ளது தான்.

அது ஒரு வானம் பார்த்த பூமி. மழை வந்தால் , வாழ்க்கை.

ஏனோ தெரியவில்லை இரண்டு மூன்று ஆண்டுகளாய் கோபம் கொண்ட காதலியாய் வானம் முகம் திருப்பிக் கொண்டு போய் விட்டது. ஒரு புல் பூண்டு கூட இல்லை. பூமி கட்டாந்தரையாக போய் விட்டது. பஞ்சம் பிழைக்க ஊர் மக்கள் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக ஊரை காலி செய்து விட்டு போய் விட்டார்கள். செத்தாலும் இந்த மண்ணிலேலேயே சாவோம் என்று ஒரு சில வயதானவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அந்த ஊரில் இருக்கிறார்கள். மரங்களில் விளையாடும் அணில் சுதந்திரமாக வீடுகளுக்குள் சென்று வருகிறது. வீட்டை காலி பண்ணி விட்டு சென்றவர்கள் விட்டுச் சென்ற நெல் மணிகள், தானியங்கள், என்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் இப்படி தின்கின்றன. வீடு திறந்து கிடக்கிறது. உள்ளே என்ன இருக்கிறது பூட்டி வைக்க ? அணில் தொட்டி முத்தத்தில் விளையாடுகிறது.  மற்றபடி ஊரில் உயிர் இல்லை.

இன்றுதான் அப்படி.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் , இந்த கிராமம் எப்படி இருக்கும் தெரியுமா ? தேரும் திருவிழாவும், ஆட்டமும் பாட்டமும், குதூகலமாய் இருந்தது. மாடு கன்னு ஒரு புறம், வண்டிகள் அசைத்து செல்வது ஒருபுறம், தெருவோரக் கடைகளும், பாடும் கூத்துமாய் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.

இன்று, எல்லாம் கனவாய் பழங்கதையாய் போய் விட்டது.

அவளுக்கு அந்த ஊர் சொந்த ஊர் அல்ல. ஆனால் அந்த ஊருக்கு வந்து போனவள். சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்ததையும் பார்த்து இருக்கிறாள். இப்போது வெறிச்சோடிப் போன ஊரையும் பார்க்கிறாள்.

அவள் காதலன் அவளை விட்டு விட்டு வெளியூர் போயிருக்கிறான் - பொருள் தேட.

அவனில்லாத வெறுமை அவளை வாட்டுகிறது.

ஒரு விதத்தில் இந்த ஊர் போலத்தான் தன் வாழ்வும் என்று நினைக்கிறாள்.

அவன் இருந்த போது சந்தோஷமும், மகிழ்ச்சியாக இருந்தாள்.

அவன் இல்லாத போது வெறுமை சூழ்ந்து , சோகத்தில் இருக்கிறாள்.

அந்த கிராமம் போல.

பாடல்


காதலர் உழையராகப் பெரிதுவந்து
சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற;
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே.


பொருள் 

காதலர் = காதலர்

உழையராகப் = உடன் இருந்த போது

பெரிதுவந்து = பெரிது உவந்து

சாறுகொள் = சாரம் நிறைந்த

ஊரின்  = ஊரில்

புகல்வேன்  = புகுந்தது போல இருந்தது

மன்ற = ஆனால்

அத்தம் நண்ணிய = பாலை நில வழி சென்ற

அங்குடிச் = அந்த குடிமக்கள் நிறைந்த

சீறூர் = சிறந்த ஊர்

மக்கள் போகிய = மக்கள் எல்லாம் போன பின்

அணிலாடு முன்றில் = அணில் ஆடும் முன் இல். இல்லத்தின் முன்னே, திண்ணையில் அணில் விளையாடும்

புலப்பில் = புலப்பு + இல் = தனிமையான இல்லம்

 போலப் = போல

 புல்லென்று = பொலிவு இழந்து

அலப்பென் தோழி = வருத்தம் கொள்வேன் தோழி

 அவர் அகன்ற ஞான்றே = அவர் என்னை விட்டு பிரிந்த பொழுது .

யாருக்காக வருந்துவது ? பிறந்து வளர்ந்த ஊரை விட்டு பஞ்சம் பிழைக்க எங்கோ சென்ற  அந்த மக்களை நினைத்தா ? சொந்த வீட்டை திறந்து போட்டு விட்டு, இனிமேல் திரும்பி வரும் எண்ணமே இல்லாமல் , இறுதியாக  விலகிப் போன  அந்த மக்களை நினைத்தா அல்லது

காதலனைப் பிரிந்து வாடும் அந்த இளம் பெண்ணை நினைத்தா ?

எத்தனையோ நூற்றாண்டுகள் கழித்தும் அந்த ஊரின் சோகம், அதன் தனிமை, அந்த மக்களின் சோகம் மனதுக்குள் என்னவோ செய்கிறது என்பது உண்மை.

http://interestingtamilpoems.blogspot.in/2017/09/blog-post_47.html




Monday, April 24, 2017

குறுந்தொகை - நல்லை அல்லை

குறுந்தொகை - நல்லை அல்லை 



காதல், அது காலங்களை கடந்து மட்டும் அல்ல, காலங்களுக்கு முன்னாலும் நின்றிருக்கிறது.

குறுந்தொகை காலம்.

இரவு நேரம். நிலவு பால் போல் பொழிகிறது. தலைவி , கானகத்தில் காத்து இருக்கிறாள். தலைவன் வர வேண்டும். வருவான், வருவான் என்று காத்து இருக்கிறாள். நிலவு , பகல் போல் எங்கும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அவள் நினைத்துப் பார்க்கிறாள்.

தலைவன் வரும் வழியில் பெரிய வேங்கை மரங்கள் இருக்கும். அந்த மரத்தில் இருந்து பூக்கள் உதிர்ந்து கிடக்கும் . அந்த மரத்தின் அடியில் சில பல பாறைகள் இருக்கும். அந்த பாறைகளின் மேலும் ஒரு சில பூக்கள் உதிர்ந்து இருக்கும். தூரத்தில் இருந்து பார்த்தால், பாறையும், அதன் மேல் இருக்கும் பூக்களும் நிலவொளியில் ஏதோ ஒரு புலிக் குட்டி இருப்பது போலத் தெரியும். தலைவன் அதைக் கண்டு தயங்கலாம் . ஒரு வேளை புலியாக இருக்குமோ என்று நிறுத்தி நிதானித்து வரலாம். அதனால் கால தாமதம் ஆகிறதோ என்று நினைக்கிறாள்.

அது மட்டும் அல்ல, இந்த நிலவு இப்படி வெளிச்சம் போட்டு காண்பித்தால்  தங்கள் களவு ஒழுக்கம் வெளிப்பட்டு விடுமே என்று அஞ்சுகிறாள். யாருக்கும் தெரியாமல் , தலைவன் பதுங்கி பதுங்கி வர வேண்டும். அதனால் கால தாமதம் ஆகிறதோ என்றும் நினைக்கிறாள்.

நிலவே, நீ ஏன் இப்படி பிரகாசமாக ஒளி வீசுகிறாய். நீ ஒன்றும் நல்லவள் இல்லை என்கிறாள்.

பாடல்

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் 
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை 
எல்லி வருநர் களவிற்கு 
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. 


பொருள்

கருங்கால் = கரிய கால்களைக் கொண்ட மரத்தின் அடி வேர்)

வேங்கை = புலி

வீயுகு = (மலர்கள் ) வீழ்ந்த

துறுகல் =உறு கல் = பெரிய கல்

இரும்புலிக் = கொடிய புலி

குருளையிற் = குட்டியைப் போல

றோன்றுங் = தோன்றும்

காட்டிடை  = காட்டில்

எல்லி = இரவில்

வருநர் = வரும் அவர்

களவிற்கு = களவு ஒழுக்கத்துக்கு

நல்லை யல்லை = நல்லது அல்லை . நல்லவள் அல்லை

நெடு = நீண்ட

வெண் ணிலவே = வெண் நிலவே


அது நிலவுக்குச் சொன்னாலும், தலைவனுக்கும் சொன்னது தான்.

காடு  பயங்கரமான இடம். உண்மையிலேயே புலி இருந்தாலும் இருக்கும். யாரும் பார்த்து விடலாம். காலா காலத்தில் திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்லாமல்  சொன்னது.

அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

எனக்கு இந்த பாடலை படிக்கும் போது ஒரு லேசான பதற்றமும், பரிதாப உணர்ச்சியும் வருகிறது.

காட்டில் ஒரு இளம் பெண்ணை வரச் சொல்லி விட்டு , கால தாமதம் செய்யும் தலைவன். நினைத்துப் பார்த்தால் , பதறத்தான் செய்கிறது மனம்.  கள்ளர் பயம், புலி பயம் அந்த பெண்ணுக்கு மட்டும் இருக்காதா ?

அவளுக்கு அவன் மேல் எவ்வளவு காதல் இருந்தால், இத்தனை ஆபத்தையும் பொருட்படுத்தாமல் இரவில் வந்து அவனுக்காக காத்திருப்பாள் ?

அது மட்டும் அல்ல, காலம் தாழ்த்தி வரும் அவன் மேல் அவளுக்கு கோபம் இல்லை. நல்லை இல்லை என்று நிலவை சாடுகிறாள்.

எந்தக்  காலத்தில் பெண்ணின் தவிப்பு ஆணுக்கு புரிந்திருக்கிறது ?

சங்க காலம் தொட்டு , இன்று வரை, பெண்ணை புரிந்து கொள்ளாமலே தான் ஆண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.




Thursday, January 19, 2017

குறுந்தொகை - அருளும் அன்பும் துறந்து

 குறுந்தொகை - அருளும் அன்பும் துறந்து 


பெண்கள் எதையும் நேரடியாகத் சொல்வது இல்லை. கொஞ்சம் சுத்தி வளைத்துத்தான் சொல்லுவது வழக்கம்.

பொருள் தேடி வெளியூர் போகப் போகிறான் தலைவன். மனைவியைப் பிரிந்து , அவள் தரும் அன்பை பிரிந்து பொருள் தேடுவதுதான் உயர்ந்தது என்று செல்லும் அவர்தான் அறிவுள்ளவர் என்றால் அவர் அறிவுள்ளவராகவே இருந்து விட்டு போகட்டும். நான் முட்டாளாகவே இருந்திவிட்டுப் போகிறேன்.

மனைவி மற்றும் உறவுகளை விட்டு விட்டு அயல் நாட்டுக்குப் போகாதே. அது முட்டாள்தனம் என்று நேராகச் சொல்லி விடலாம். சொல்லவில்லை.

அப்படிச் செய்ற நீதான் புத்திசாலி. நான் முட்டாளாவே இருந்துவிட்டுப் போகிறேன் என்கிறாள் இந்த குறுந்தொகை கால மனைவி.

பெண்கள் அன்றிலிருந்து இன்றுவரை இப்படித்தான் போல....

பாடல்

அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்
உரவோ ருரவோ ராக
மடவ மாக மடந்தை நாமே. 


சீர் பிரித்த பின்

அருளும் அன்பும் நீங்கி துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோராயின்
உரவோர் உரவோராக
மடவமாக மடந்தை நாமே.

பொருள்


அருளும் = அருளும்

அன்பும் = அன்பும்

நீங்கி = விட்டுப் பிரிந்து

துணை = மனைவியைத்

துறந்து = விட்டு விலகி

பொருள்வயிற் = பொருள் தேடி

பிரிவோர் = பிரிந்து செல்வோர்

உரவோராயின் = வலிமை உள்ளவர் என்றால்  (உரம் = வலிமை). இங்கே புத்திசாலி, அல்லது அறிவாளி

உரவோர் = புத்திசாலி

உரவோராக = புத்திசாலியாகவே இருந்துவிட்டு போகட்டும்

மடவமாக = மடத்தனம் கொண்ட

மடந்தை நாமே = பெண்கள் நாமே

இதில் உள்ள நுணுக்கமான செய்திகளை பார்க்க வேண்டும்.

அன்பு என்பது நம்மிடம் உறவு உள்ளவர்களிடம் தோன்றும் இரக்கம்.

அருள் என்பது நம்மிடம் உறவு இல்லாதவரிடத்தும் தோன்றும் இரக்கம்.


அருளும் அன்பும் நீங்கி ....

என்கிறாள். மனைவி என்ற அன்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு பெண் துன்பப படுகிறாளே  என்ற அருளாவது இருக்க வேண்டாமா என்பது அவள் கேள்வி.


"துணை துறந்து  பொருள்வயிற் பிரிவோர்....."

பணம் சேர்ப்பது ஒன்றுதான் வாழ்வின் குறிக்கோளா ? பணம் வேண்டும்தான். அதற்காக எதையெல்லாம் நாம் தியாகம் செய்கிறோம் என்று  சிந்திக்க வேண்டும் ?

ஆரோக்கியம் ? அன்பு ? உறவு ? அறிவு தேடல் ? என்று எத்தனையோ நல்ல விஷயங்களை  இழந்து விடுகிறோம்.

அயல் நாடு தான் போக வேண்டும் என்று இல்லை.

வீட்டையும், உறவுகளையும் , உடல் ஆரோக்கியத்தையும் பற்றி கவலைப் படமால் பணம் பணம்   என்று ஓடி ஓடி சம்பாதிப்பது அறிவான செயல்தானா ?

பொருள் அவசியம் தேவைதான். அதற்காக கொடுக்கும் விலை என்ன என்று யோசிக்கச் சொல்கிறாள். பணம் எல்லாம் சம்பாதித்து விட்டு வந்து பார்த்தால் வயது போயிருக்கும். பிள்ளைகள் படிப்பு வேலை என்று போயிருப்பார்கள். ஆரோக்கியம் போயிருக்கும். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது ?

அவள் முடிக்கும் போது , "நான் முட்டாளாவே இருந்துவிட்டுப் போகிறேன்" என்று சொல்லவில்லை.

"மடவமாக மடந்தை நாமே"

நாமே என்று சொல்கிறாள். யார் இந்த "நாம்" ? எல்லா பெண்களும் அப்படித்தான்  நினைப்பார்கள்.

அருளும், அன்பும், துணையும் அவர்களுக்கு பணத்தை விட முக்கியம்.

அப்படி நினைக்கும் எங்களை உலகம் முட்டாகள் என்று சொல்கிறது. அப்படியே இருந்து விட்டு  போகட்டும். நீங்கள் எல்லாம் புத்திசாலியாகவே இருங்கள் என்கிறாள்.

யார் புத்திசாலி ? யார் முட்டாள் ?

விவாதம் தொடர்கிறது. இன்று வரை விடை கிடைக்கவில்லை.

கொஞ்சம் நிறுத்தி , யோசிப்போம். 


Wednesday, September 28, 2016

குறுந்தொகை - இனித்த வேப்பங்கட்டி

குறுந்தொகை - இனித்த வேப்பங்கட்டி 


காதல் என்பது இனிமையான விஷயம் தான். காதல் புரியும் போது காதலர்கள் இருவரும் மிக மிக இனிமையாக பேசுவார்கள். நன்றாக உடுத்துவார்கள். ஒரு எதிர்பார்ப்பு  இருந்து கொண்டே இருக்கும்.

இவளோடு வாழ் நாள் எல்லாம் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற அவனுக்கு ஒரு கற்பனை. இவனோடு வாழ் நாள் எல்லாம் இருந்தால் எப்படி இருக்கும்  அவளுக்கு ஒரு கற்பனை.

உணர்ச்சிகள் தூண்டப் பட்ட நிலையில் இருவரும் இருப்பார்கள்.

கதைகள் கற்பனைகள், சினிமாவில் பார்த்தது, என்று எல்லாம் கலந்து கலர் கலராக கனவுகள் வரும்.

கவிதை வரும். படம் வரையத் தோன்றும். உலகம் அழகாகத் தெரியும். காரணம் இல்லாமல் சிரிப்பு வரும். தூக்கம் போகும். மண்ணிலே விண் தெரியும். கால்களுக்கு சிறகு முளைக்கும்.

கடைசியில் திருமணம் ஆகும்.

திருமணம் ஆன சிறிது நாளிலேயே , பெரும்பாலான காதல் கசக்கத் தொடங்கும். பொருளாதார நெருக்கடி. எதிர்பார்ப்புகள் தீர்ந்த பின் ஒரு ஏமாற்றம் -  இவ்வளவுதானா என்று.  இதற்கா இவ்வளவு அலைந்தோம் என்று ஒரு வெறுப்பு.

பெண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி காதலுக்கு முன் இருந்த அந்த பாசம், நேசம், பிரியம், அன்யோன்யம் திருமணத்திற்கு பின்னும் அப்படியே தொடர்வதில்லை - பெரும்பாலான நேரங்களில்.

இது ஏதோ இன்று நேற்று நடக்கும் நிகழ்வு அல்ல.

சங்க காலம் தொட்டே இப்படித்தான் இருக்கிறது.

குறுந்தொகை பாடல்.

தலைவனிடம் , தோழி சொல்லுகிறாள்...

"அந்தக் காலத்தில் (காதல் செய்யும் காலத்தில்) தலைவி வேப்பங் காயைத் தந்தாலும் வெல்லக் கட்டி என்று சொல்லி அதை சுவைத்தாய். இப்போது அவளே குளிர்ந்த இனிய நீரைத் தாந்தாலும் சுடுகிறது , கசக்கிறது என்கிறாய் ...எல்லாம் அன்பு குறைந்ததனால் வந்தது " என்று சொல்லுகிறாள்.

அந்த கசக்கும் உண்மையை படம் படித்து காட்டும் பாடல்

வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
தேம்பூங்கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே’


பொருள்


வேம்பின் =  வேப்ப மரத்தின்

பைங்காய் = பசுமையான காய். வேப்பம் பழம் இனிக்கும். காய் வாயில் வைக்க முடியாது.

என் தோழி தரினே = என் தோழி (தலைவி) தந்த போது

தேம்பூங்கட்டி = இனிமையான வெல்லக் கட்டி

என்றனிர் = என்று கூறினாய்

இனியே = இன்றோ

பாரி பறம்பிற் =பாரியின் இந்த மலையில்

பனிச்சுனைத் = பனி போல சில் என்று இருக்கும், ஊற்றின்

தெண்ணீர் = தெளிந்த நீரை

தைஇத் திங்கள் = தை மாதமான இந்த மாதத்தில்

தண்ணிய = குளிர்ந்த அவள்

தரினும் = தந்தாலும்

வெய்ய = சூடாக இருக்கிறது

உவர்க்கும் = உப்பு குறிக்கிறது

என்றனிர் = என்று கூறுகிறீர்கள்

ஐய = ஐயனே

அற்றால் = அற்று விட்டதால்

அன்பின் பாலே = அன்பு மனதில்

மார்கழி அடுத்து வரும் தை மாதம் குளிர்ந்த மாதம். மலையில் இருக்கும் நீர் மிக சுவையாக இருக்கும். அதில் உப்பு வர வழியில்லை.

இருந்தும், அவன் சொல்கிறான்.

சூடா இருக்கு, உப்பு கரிக்கிறது என்று.

அன்பு இருந்தால்  குளிரும்,இனிக்கும்.

அன்பு இல்லாவிட்டால் சுடும், கசக்கும்,  கரிக்கும்.

வாழ்க்கை எரிச்சலாக இருக்கிறதா. கசக்கிறதா, கரிக்கிறதா, அன்பைக் கொண்டு  வாருங்கள். கசப்பு கூட இனிக்கும்.

வாழ்வின் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் மனதில் அன்பு இல்லாமையே.

அன்பை கொண்டு வாருங்கள். வசந்தம் வரும்.

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post_28.html







Saturday, September 17, 2016

குறுந்தொகை - அது கொல் தோழி காம நோயே

குறுந்தொகை - அது கொல் தோழி காம நோயே 




அது ஒரு கடற்கரையை அடுத்த சின்ன கிராமம். எப்போதும் அலை ஓசை கேட்டுக்கொண்டிருக்கும். புன்னை மரங்கள் நீர் பரப்பின் ஓரத்தில் இருக்கும். அங்கே கொஞ்சம் பறவைகள், அந்த மரத்தின் நிழலில் படுத்து உறங்குகின்றன.

அந்த ஊரில் ஒரு பெண். மிக மிக இளம் பெண். அந்த வயதுக்கு உரிய நாணம், குறுகுறுப்பு எல்லாம் உள்ள பெண். அவள் காதல் வயப்பட்டிருக்கிறாள். பேசி மகிழ்ந்த அவளுடைய காதலன் பிரிந்து சென்று விட்டான். அவளுக்கு தவிப்பு. தூக்கம் வரவில்லை.

இந்த அனுபவம் அவளுக்குப் புதியது. ஏன் இப்படி ஆனோம் என்று அவளுக்குப் புரியவில்லை. தவிக்கிறாள்.

யாரிடம் சொல்லுவாள் ?

தன் தோழியிடம் கேட்கிறாள்

"ஏண்டி, இது தான் காதல் என்பதா ? தூக்கம் வரலடி" என்று வெகுளியாக கேட்கிறாள்.

பாடல்

அது கொல் தோழி காமநோயே!
வதிகுறு உறங்கும் இன்நிழல் புன்னை
உடை திரைத் திவலை அரும்பும் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்இதழ் உண்கண் பாடு ஒல்லாவே” 

பொருள்

அது கொல் = அதுவா ?

தோழி = தோழியே

காமநோயே! = காம நோயே !

வதிகுறு உறங்கும் = (தன்னிடம்) வந்து உறங்கும் குறுகு (பறவை)

இன்நிழல் = இனிய நிழலைத் தரும்

புன்னை = புன்னை மரம்

உடை = உடைக்கின்ற

திரைத்  திவலை = திரண்டு வரும் நீர் துளிகள்

அரும்பும் = மொட்டும் போல் அரும்பும்

தீநீர் = இனிய நீர்

மெல்லம் புலம்பன் = புலம்பு என்றால் கடற்கரை. புலம்பன் என்றால் கடற்கரையை உடையவன். மெல்லம் புலம்பன் என்றால் மென்மையான கடாரகரையை உடையவன் (தலைவன்)

பிரிந்தெனப் = பிரிந்த பின்

பல்இதழ் = பல இதழ்களை கொண்ட தாமரை மலரைப்

உண்கண் = போன்ற என் கண்கள்

பாடு ஒல்லாவே = உறங்காமல் இருக்கின்றன


" பாரு இந்த சின்ன குருவி எப்படி நிம்மதியா தூங்குது...எனக்குத் தான்  தூக்கம் வரல"  என்று புலம்புகிறாள்.

தனக்கு ஏன் தூக்கம் வரவில்லை என்று அவளுக்குப் புரியவில்லை.

இது தான் காதல் நோயா என்று தோழியிடம் கேட்கிறாள்.

கடல் நீர் உப்பு தான். ஆனாலும், அது அவளுக்கு இனிய நீராக இருக்கிறது.

தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா  என்று பாரதி சொன்னது போல, உப்புத் தண்ணியும் தித்திக்கிறது அவளுக்கு .

சங்க கால காதல்.

அந்த ஈரமான உப்பு காற்றும், கண் மூடி தூங்கும் அந்த குருவியும்,  தூங்காத அந்த பெண்ணும், அவள் தோழியும் இன்னமும் அந்த பாடலுக்குள்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post_24.html



Monday, August 1, 2016

குறுந்தொகை - கை இல்லாத இதயம்

குறுந்தொகை - கை இல்லாத இதயம் 




அவர்களால் சந்திக்க முடியவில்லை. தங்கள் காதலை whatsapp லும் ,  குறுஞ் செய்திகள் (S M S ) மூலமும் பரிமாறிக் கொள்கிறார்கள். என்ன இருந்தாலும் ,நேரில் சென்று அவள் கை பிடிப்பது போல வருமா ? கட்டி அணைக்கும் சுகம் கை பேசி தகவல் பரிமாற்றத்தில் வருமா.

வராது.

இதயம் , நினைத்த மாத்திரத்தில் அவளிடம் போய் விடுகிறது. போய் என்ன செய்ய ? கை கோர்க்க, கட்டி அணைக்க கை வேண்டாமா ? அது தெரியாமல் இந்த இதயம் ஊருக்கு முந்தி அவளிடம் சென்று விடுகிறது.

இது இன்றைய நிலை. குறுந்தொகை காலத்திலும் இதே கதை தான்.

பொருள் தேடி காதலன்  வெளி நாடு சென்று திரும்பி வருகிறான்.  அவளை பார்க்கப் போகிறோம் என்ற ஆவல். எத்தனை வருடம் ? அவன்  போவதற்குள் அவன் இதயம் அவளிடம் ஓடிப் போய் விட்டது.

காதலன் , தன்னுடைய தேர் பாகனிடம் சொல்கிறான்....

"நாம் நம் தலைவியின் இருப்பிடம் நோக்கிச் செல்கிறோம். போகிற வழியோ ஆபத்து நிறைந்தது. புலிகள் நிறைந்த காட்டுப் பாதை. கடல் ஆரவாரித்து எழுவது போல அந்த கொலை நோக்கம் கொண்ட புலிகள் பாய்ந்து வரும். இடைப்பட்ட தூரமோ அதிகம். என் இதயம் இருக்கிறதே , அது என்னை கேட்காமல் அவளைக் காண ஓடி விட்டது. போய் என்ன செய்யப் போகிறது ? அவளை கட்டி பிடிக்க முடியுமா அதனால் ? நான் எதை நினைத்து வருந்துவேன் " என்று மயங்குகிறான் காதலன்.

காதலியைத் தேடும் அவன் ஆர்வத்தை, அவனுக்கு முன்னால் சென்ற அவன் இதயத்தை, புலி நிறைந்த கானகத்தின் சாலைகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் பாடல்....

பாடல்


அஞ்சுவ தறியா தமர்துணைதழீஇய 

நெஞ்சுநப் பிரிந்தன் றாயினு மெஞ்சிய 
   
கைபிணி நெகிழினஃ தெவனோ நன்றும் 
    
சேய வம்ம விருமா மிடையே 

மாக்கடற் றிரையின் முழங்கி வலனேர்பு  
    
கோட்புலி வழங்குஞ் சோலை 
    
எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே.

பொருள் 


அஞ்சுவ தறியா = அஞ்சுவது அறியாமல்

தமர்துணைதழீஇய = நாம் விரும்பும் தலைவியை தழுவும் பொருட்டு

நெஞ்சு = என் நெஞ்சானது

நப் பிரிந்தன் றாயினு = என்னை பிரிந்து அவளை காண சென்றாலும்

எஞ்சிய = மீதியுள்ள
 
கைபிணி = கையால் பிணித்தல் (கட்டித்த தழுவுதல்)

நெகிழினஃ தெவனோ = நெகிழ்ந்து விடுமாயின் , தவறி விட்டால். நெஞ்சத்தால் எப்படி கட்டி தழுவ முடியும் ?

நன்றும் சேய  = சேய்மை என்றால் தூரம். மிக தொலைவில்

அம்ம விருமா மிடையே = எங்களுக்கு இடையில் உள்ள தூரம்

மாக்கடற் றிரையின் = மா + கடல் + திரையின் = பெரிய கடலின் அலை போல

முழங்கி = சப்த்தம் செய்து

வலனேர்பு  =வலமாக எழுந்து
 
கோட்புலி = கொலை நோக்கம் கொண்ட புலி

வழங்குஞ் சோலை =  இருக்கின்ற சோலைகள்
 
எனைத்தென் றெண்ணுகோ = எத்தனை என்று எண்ணுவேன் ?

முயக்கிடை = அவளை கட்டி அணைக்க

மலைவே = தடைகள்

காலங்கள் மாறலாம். மனித உணர்ச்சிகள் அப்படியேதான் இருக்கின்றன.

காலங்கள் கடந்தாலும் காதல் தாகம் தீர்ந்தபாடில்லை.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_99.html





Sunday, February 15, 2015

குறுந்தொகை - தச்சன் செய்த தேர்

குறுந்தொகை - தச்சன் செய்த தேர் 


கவிதையின் அழகு அது சொல்வதில் அல்ல...அது சொல்லாமல் விடுவதில்.

தலைவி தலைவனை பிரிந்து இருக்கிறாள். தன் சோகத்தை தோழியிடம் சொல்கிறாள்.

"தச்சன் செய்த சிறு தேரை சிறுவர்கள் கையில் இழுத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடி இன்புறுவதைப் போல தலைவனோடு சேர்ந்து இன்பகமாக இல்லாவிட்டாலும் அவனோடு மனிதனால் கொண்ட நட்பால் நான் நன்றாக இருக்கிறேன் (என் வளையல் கழலாமல் இருக்கிறது ") என்கிறாள்.

பாடல்

தச்சன் செய்த சிறுமா வையம்      
ஊர்ந்தின் புறாஅ ராயினுங் கையின்     
ஈர்த்தின் புறூஉ மிளையோர்     
உற்றின் புேறெ மாயினு நற்றேர்ப் 
பொய்கை யூரன் கேண்மை     
செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே. 

சீர் பிரித்த பின் 

தச்சன் செய்த சிறு மாவையம்      
ஊர்ந்து இன்பம் உராராயினும் கையின்     
ஈர்த்து இன்பம் உறும் இளையோர்     
உற்று இன்பம் உறேமாயினும்  நற்றேர்ப் 
பொய்கை ஊரன்  கேண்மை     
செய்து இன்புற்ற என் நெஞ்சு செறிந்தன வளையே. 

பொருள்

தச்சன்  = மர வேலை செய்யும் தச்சன்

செய்த =செய்த

சிறு மாவையம் = சிறிய தேர்
     
ஊர்ந்து = மேல் ஏறி சென்று

இன்பம் உராராயினும் = இன்பம் அடையா விட்டாலும்

கையின் = கையில்
   
ஈர்த்து = இழுத்து

இன்பம் உறும் = இன்பம் அடையும்

இளையோர் = சிறுவர்களைப் போல
   
உற்று இன்பம் = தலைவனை அடைந்து  இன்பம்

உறேமாயினும் = அடையாவிட்டாலும்

 நற்றேர்ப் = நல்ல தேர்

பொய்கை = சிறந்த நீர் நிலைகளைக் கொண்ட

ஊரன் = தலைவன்

கேண்மை = நட்பு
   
செய்து = செய்து

இன்புற்ற என் நெஞ்சு = இன்புற்ற என் நெஞ்சு

செறிந்தன வளையே = கையோடு இருக்கிறது என் வளையல்கள்

பாடல் இது.

கவிதை எது தெரியுமா ?

தேர் என்பது அதில் அமர்ந்து ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சுகமாக செல்வதற்கு உருவாக்கப் பட்டது.

ஆனால், சிறுவர்களோ, தேரை கையில் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்.

காதல் என்பது, தலைவனும் தலைவியும் ஒருவரோடு ஒருவர் கூடி இன்பம் அனுபவிக்க  ஏற்பட்டது. ஆனால், இவளோ பழைய நட்பை நினைத்து வாழ்கிறாள். பொம்மை தேரைப் போல.


மேலும், சிறுவர்கள் தேரை இழுத்துக் கொண்டு திரிவார்கள். ஒரு காலம் வரை. அதற்குப் பிறகு பொம்மை தேரை தூக்கி போட்டு விட்டு உண்மையான தேரை செலுத்த தொடங்கி விடுவார்கள். பெரிய ஆளான பின்னும் பொம்மை தேரை இழுத்துக் கொண்டு திரிந்தால் எப்படி இருக்கும் ?

காதல் கண்ணில் தொடங்கும், அப்பப்ப ஒரு சிறு புன் முறுவல், முடிந்தால் ஒரு சில கடிதங்கள், பின் நேரில் தனிமையில் சந்திப்பு, கொஞ்சம் விரல் பேசும், வியர்வை நீர் வார்க்க, வெட்கம் பூ பூக்கும்...இப்படியாக காதல் வளரும். வாழ் நாள் எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும் ? (next step கு போடா ).

அது போல, இன்னும் அவன் மேல் கொண்ட நட்பை எண்ணி வாழ்கிறேன் என்கிறாள். காதல் வளரவில்லை. தேரை இழுத்துக் கொண்டு அலைகிறாள்.


சிறுவர்கள் சிறிய தேரை இழுத்துக் கொண்டு அலைகிறார்கள். அவன் பெரிய தேரில் செல்கிறான் என்று இரண்டையும் சேர்த்தும் படிக்கலாம் நாம். 

தலைவன் ஏன் பிரிந்தான் ?  கவிஞர் அதைச் சொல்லவில்லை.

ஒரு வேளை பரத்தையிரடம் போய் இருக்கலாம்.

எப்படி தெரியும் ?

பாடல் சொல்கிறது, அவன் பெரிய பணக்காரன் என்று. அவனிடம் தேர் இருக்கிறது, நீர் நிலைகள்  நிறைந்த ஊருக்குத் தலைவன். பெரிய ஆள் தான். தலைவியை மறந்து விட்டான்.

இன்னும் சொல்லப் போனால், கவிதை , தலைவன் மறந்து விட்டான் என்று கூடச் சொல்ல வில்லை.

அவன் நட்பை நான் மறக்க மாட்டேன் என்கிறாள். எனவே அவன் மறந்து விட்டான் என்று நாம் அறியலாம்.


 



Tuesday, January 20, 2015

குறுந்தொகை - அவள் வருவாளா ?

குறுந்தொகை - அவள் வருவாளா ?



வாழ்க்கையின் சிக்கல்களை இலக்கியம் படம் பிடிக்கிறது. நமக்கு ஒரு சிக்கல் வரும் போது , இலக்கியத்தைப் படித்தால், அட இது ஒண்ணும் புதிதல்ல,  இதற்கு முன் எத்தனையோ பேர் இந்த சிக்கலை, இந்த துன்பத்தை அனுபவித்து இருக்கிறார்கள் என்று தோன்றும். வாழ்கையின் மேல் உள்ள வெறுப்பு  குறையும்.

கணவனுக்கு வெளி நாடு செல்ல வேண்டும். சென்றால் நல்ல  சம்பளம். மேலும் பிற்காலத்தில் பதவி உயர்வு கிடைக்க நல்ல வாய்புகள் வரும்.

ஆனால், மனைவியை அழைத்துக் கொண்டு செல்ல முடியாத சிக்கல். விசா கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

என்ன செய்வது ? பெரிய சிக்கல்.

 அன்பான,அழகான மனைவியை விட்டு பிரியவும்  முடியவில்லை.

அதே  சமயம்,வெளி நாடு செல்லும் வாய்ப்பை உதறவும்  மனமில்லை.

தவிக்கிறான்  கிடந்து.

அவன் தவிப்பை இந்த பாடல் படம் பிடிக்கிறது.

பாடல்

ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்  
செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக்  
கம்மா வரிவையும் வருமோ 
எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே  

சங்கப் பாடல், கொஞ்சம் சீர்  பிரிப்போம்.

ஈதலும்  துய்த்தலும் இல்லோர்க்கு இல்லென   
செய் வினை கைம்மிக எண்ணுதி  அவ்வினைக்கு   
அம்மா அரிவையும் வருமோ ?
எம்மை உய்த்தியோ உரைத்திசி நெஞ்சே 

பொருள்

ஈதலும் = தானம் தருவதும்

துய்த்தலும் = அனுபவித்தலும்

இல்லோர்க்கு = இல்லை என்று தம்மிடம் வருவோர்க்கு

இல்லென = இல்லை என்று சொல்லாமல் தருவதும்
 
செய் வினை = செயல் செய்ய

கைம்மிக எண்ணுதி = அதைப் பற்றி மிகுதியாக எண்ணுவாய்

அவ்வினைக்கு = அந்த வினைக்கு   

அம்மா  = அம் + மா = அந்த பெரிய, அல்லது சிறந்த

அரிவையும் = பெண்ணும்

வருமோ ? = வருவாளோ

எம்மை உய்த்தியோ = என்னை மட்டும் அனுப்புகிறாயே

உரைத்திசி நெஞ்சே = சொல் என் நெஞ்சே

அவன், தன் நெஞ்சிடம்  சொல்கிறான்.

என்னை மட்டும் போ போ என்று  பிடித்துத் தள்ளுகிறாயே...அவளையும் வரச் சொல்  என்று சொல்கிறான்.

காதல் பாடல்  தான். பிரிவு சோகம் தான். அதிலும் அறத்தைப் பாடுகிறான்   தமிழ்  புலவன்.

பாடலை உற்று நோக்கினால் பாடலின் பின்னே உள்ள அறம் விளங்கும்.


ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்  


நாமெலாம் , நம் செலவு போக, எதிர் கால தேவை போக மீதியை கொஞ்சம் தானம்  செய்வோம். 

முதலில் நாம் அனுபவிப்போம், பின் தானம் செய்வோம். 

இந்தப் பாடலில் , முதலில், ஈதல் பின் துய்த்தலை பற்றி பேசுகிறான் புலவன். 

தானம் தந்தது போக மீதி உள்ளது நமக்கு என்று வாழ நினைத்த மனம். 

நம்மிடம் ஒரு பிச்சைகாரன் வந்து பிச்சை கேட்டால்,  "ஒண்ணும் இல்லை, அங்க போய்  கேளப்பா " என்று அவனை விட பெரிய பிச்சைகாரனாக நாம் மாறி விடுவோம். 

இங்கே, தலைவன் தன்னிடம் இல்லை என்று வருவோர்க்கு தானும் இல்லை என்று  சொல்லாமல் தர வேண்டுமே என்று நினைத்து பொருள் தேடச் செல்கிறான். 

பொருள் சேர்ப்பது தான் அனுபவிக்க இல்லை. ஈவதற்கும், இல்லை என்று யாசகம்  வேண்டி வருவோருக்கு தருவதற்கும். 

இதற்கு இடையில் மனைவியை விட்டு பிரிய மனம் இல்லை. 

தவிக்கிறான். 

இதுதான் வாழ்க்கை.

சுயநலத்துக்கும் பொது நலத்துக்கும் இடையில் கிடந்து ஊசலாடுகிறது....


Sunday, January 11, 2015

குறுந்தொகை - அருளும் அன்பும் நீங்கி

குறுந்தொகை - அருளும் அன்பும் நீங்கி 


நாலு வரிக்குள் காதலின் பிரிவை, தவிப்பை, ஏக்கத்தை பிரதிபலிக்கும் பாடல் இது.

தலைவன் , பொருள் தேடி தலைவியை விட்டு பிரிந்து சென்று விட்டான். அவனை எல்லோரும் பெருமையாக  பேசுகிறார்கள்.வலியவன், அறிவாளி என்று. இப்படி கட்டிய மனைவியை விட்டு பிரிந்து செல்பவன் பெரிய அறிவாளி என்றால், அவனை விட்டு பிரிய முடியாமல் தவிக்கும் நாம் முட்டாளாகவே இருந்து விட்டு போவோம் என்று அலுத்து சலித்துக்  கொள்கிறாள்.

பாடல்

அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து  
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்  
உரவோ ருரவோ ராக  
மடவ மாக மடந்தை நாமே. 

சீர் பிரித்த பின்

அருளும் அன்பும்  நீக்கித் துணை துறந்து  
பொருள் வயிற் பிரிவோர் உரவோராயின்   
உரவோர்  உரவோர் ஆக  
மடவம ஆக மடந்தை நாமே. 

பொருள்

அருளும் = அருளும்

அன்பும் = அன்பும்

 நீக்கித் = நீங்கி

துணை துறந்து = துணையான என்னை துறந்து
 
பொருள் வயிற் = பொருள் வேண்டி

பிரிவோர் = பிரிந்து சென்றவர்

உரவோராயின் = பெரிய அறிவுடையவராயின்
 
உரவோர்  உரவோர் ஆக = அவர் பெரிய அறிவாளியாகவே இருந்து விட்டுப் போகட்டும்
 
மடவம்  ஆக மடந்தை நாமே.= அறிவற்ற மடந்தையரான நாம் மடந்தையாரகவே இருந்து விட்டு போவோம்

சற்று ஆழமாக சிந்தித்தால் மேலும் சில அர்த்தம் தோன்றும்.  இரசிக்கலாம்.

அன்பு என்பது நம்முடன் தொடர்புள்ளவர்களிடம்  வருவது.

அருள் என்பது தொடர்பு இல்லாதவர்களிடம் கூட வருவது.

நான் ஒரு பெண் என் மேல் அருள் கொண்டு  இருக்கலாம்.

அவரது மனைவி என்று என் மேல் அன்பு கொண்டு இருக்கலாம். 

இரண்டும் இல்லாமல் என்னை விட்டு விட்டு சென்று விட்டார்.

எதற்கு ?

பொருள் சேர்க்க.

குடும்பத்தை விட, பொருள் பெரிதாகப் போய் விட்டது அவருக்கு. 

அவரைப் போய் இந்த உலகம்   நல்லவன்,வல்லவன் என்று சொல்கிறது. 

அப்படிப்பட்ட உலகம் , அவரை போக வேண்டாம் என்று சொன்ன என்னை என்ன சொல்லும் ?

முட்டாள் என்று தானே சொல்லும். 

சொல்லி விட்டு போகட்டும். நான் முட்டாளாகவே இருந்து விட்டு போகிறேன் என்று நொந்து கூறுகிறாள் அவள். 

அவனும்  புரிந்து கொள்ளப்  போவதில்லை. அவனைப் பற்றி யாரிடமாவது சொல்லலாம் என்றால் அவர்களும் அவனுக்கு பரிந்து கொண்டுதான்  பேசுவார்கள். எனக்கு என்று பேசுவதற்கு யாரும் இல்லை என்று அவள் தனிமையில்   புலம்புகிறாள்.

காலம் கடந்தும் அவள் சோகம் இன்றும் நம் மனதை ஏதோ செய்கிறது. 




Saturday, January 3, 2015

குறுந்தொகை - புது நலன் இழந்த - பாகம் 3

குறுந்தொகை - புது நலன் இழந்த - பாகம் 3




சங்க காலப் பாடல்களில், அவை சொல்வதை விட சொல்லாமல் விட்டவை சுவாரசியமானவை.


தோழி, தலைவனிடம் சொல்கிறாள்.

"இதோ நிற்கிறாளே இவள், நீ சொன்னதைக் கொண்டு நான் சொன்னவற்றை கேட்டு, தன்னுடைய நலன்களை இழந்து, வருத்தத்தில் இருக்கிறாள். நீ இதை நினைக்க வேண்டும். அதோ அது தான் எங்கள் சின்ன நல்ல ஊர்"

இவ்வளவுதான் பாட்டின் நேரடி அர்த்தம். ஆனால், அது சொல்லாமல், குறிப்பால் உணர்த்தும் அர்த்தங்கள் கோடி.

முதலில் பாடலைப் பார்ப்போம்.

இவளே, நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்  
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப் 
புதுநல னிழந்த புலம்புமா ருடையள் 
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும் 
நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் 
கடலுங் கானலுந் தோன்றும் 
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே. 

படிக்கவே சற்று கடினமான பாடல் தான்.

கொஞ்சம் சீர் பிரிப்போம்.


இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி   
பசு நனை ஞாழற் பல் சினை ஒரு சிறை  
புது நலன் இழந்த புலம்புமாரு உடையள்  
உதுக்காண் எய்ய உள்ளல் வேண்டும் 
நிலவும்  இருளும்  போலப் புலவுத் திரைக் 
கடலும்  கானலும்  தோன்றும் 
மடல் தாழ்  பெண்ணை எம் சிறு நல் ஊரே .

பொருள்

இவளே = இதோ நிற்கிறாளே இவள்

நின் சொல் = நீ சொன்ன சொற்களை

கொண்ட =கேட்டு

என் சொல் = நான் அவளிடம் சொன்னவற்றை

தேறி = ஏற்றுக் கொண்டு

பசு நனை = பசுமையான அரும்புகளை கொண்ட

ஞாழற் = ஒரு மரம்

பல் சினை = பல கிளைகளில்

ஒரு சிறை = ஒரு கிளையின் அடியில்

புது நலன் = புதியதாய் கொண்ட அழகினை

இழந்த = இழந்து

புலம்புமாரு = புலம்பும் அல்லது வருந்தும் தன்மையை

உடையள்  = கொண்டு இருக்கிறாள்

உதுக்காண் = அதோ அங்கே இருக்கிறது பார்

எய்ய = அசை நிலை

உள்ளல் வேண்டும் = நினத்துப் பார்க்க வேண்டும்

நிலவும்  இருளும்  போலப் = நிலவும் இருளும் போல

புலவுத் = மாமிச வாடை வீசும்

திரைக் = அலை பாயும்

கடலும் = கடலும்

கானலும் = அதை அடுத்த கரையும்

தோன்றும் = இருக்கும்

மடல் தாழ் = மடல் தாழ்ந்து இருக்கும்

பெண்ணை =  பனை மரங்களை கொண்ட

எம் சிறு நல் ஊரே = எங்களுடைய சின்ன நல்ல ஊரே

இதன் உள் அடங்கி அர்த்தத்தை நாளை பார்ப்போம்.

கொஞ்சம் இலக்கணமும் சேர்த்துப் பார்ப்போம். இலக்கணம் அறிந்தால் இந்த பாட்டின் சுவை  மேலும் கூடும்.
------------------------------- பாகம் 2 -----------------------------------------------------------------------------

1. தமிழ் இலக்கணத்தில் சுட்டுப் பொருள் என்று ஒன்று உண்டு. ஒன்றை சுட்டிக் காட்டி  கூறுவது.  இதில் அண்மைச் சுட்டு, சேய்மை சுட்டு என்று இரண்டு உண்டு.  அண்மை சுட்டு என்றால் அருகில் உள்ளதை சுட்டிக் காட்டி கூறுவது. சேய்மை என்றால்  தூரத்தில் உள்ளதை சுட்டிக் காட்டிக் கூறுவது.

சேய்மை சுட்டு 'அ ' என்ற எழுத்தில் தொடங்கும். அது, அவன், அவள், அங்கே என்பது போல.

அண்மை சுட்டு 'இ ' என்ற எழுத்தில் தொடங்கும். இது, இவன், இவள், இங்கே என்பது போல.

அண்மையும் அல்லாமல், சேய்மையும் அல்லாமல் நடுத்தரமாக இருப்பதை சுட்டுவதும்  இருக்கிறது. அது 'உ' என்ற எழுத்தில் தொடங்கும். உது, உவன், உவள்,  என்பது போல. இப்போது அதை அதிகமாக யாரும் உபயோகப் படுத்துவது இல்லை.

இறைவன் எங்கே இருக்கிறான் என்று கேட்டால், அவன் அங்கே இருக்கிறான் என்று ஆகாயத்தை  காட்டுவார்கள், கைலாய மலையில் இருக்கிறான், பாற்கடலில் இருக்கிறான்  என்று சொல்லுவார்கள்.

இங்கே இருக்கிறான் என்று யாரும் சொல்லுவது இல்லை. இறைவனை அண்மைச் சுட்டில்   யாரும் சொல்லுவது இல்லை.

திருஞான சம்பந்தரிடம் அவருடைய தந்தை கேட்டார் "வாயில் பால் வழிகிறதே,  யார் கொடுத்தது " என்று .

ஞான சம்பந்தர் சொன்னார்

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே


பெம்மான் இவன் அன்றே என்று  கூறினார்.இதோ இங்கே நிற்கிறானே இவன் தான்  என்று இறைவனை அண்மைச் சுட்டில்  காட்டினார்.

பெம்மான் அவன் அன்றே என்று கூறி இருக்கலாம். இலக்கணம் ஒன்றும் தப்பாது. அவன் என்று சொல்லாமல் இவன் என்று கூறினார்.

சரி, பாடலுக்கு வருவோம்.

இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி   


இவளே என்று ஆரம்பிக்கிறது பாடல்.  இவள், என்றால் அருகில் நிற்பவள். தலைவி  அங்கே நிற்கிறாள்.  அவளை முன்னே வைத்துக் கொண்டு யாரோ யாரிடமோ  எதுவோ சொல்லுகிறார்கள். யார், யாரிடம் என்ன சொன்னார்கள் என்பதை  பாடல் மெதுவாக பூ மலர்வது போல சொல்கிறது. 

நின் சொல் கொண்ட என் சொல் தேறி


உன்னுடைய சொற்களை கொண்ட என் சொற்களை கேட்டு 

இங்கே நாம் ஒன்றை அனுமானித்துக் (guess ) கொள்வோம். பின்னால் அது சரியாக இருக்கிறதா என்று பார்ப்போம். 

தோழி தலைவனிடம் சொல்வதாக நினைத்துக் கொள்வோம். 

தோழி சொல்கிறாள், "நீ என்னிடம் பலவற்றை சொன்னாய். அவற்றை கேட்டு நானும்  அதை தலைவியிடம் சொன்னேன். அவளும் அதை ஏற்றுக் கொண்டாள் " 

 அதாவது, தலைவன் நேரடியாக தலைவியிடம் சொல்லவில்லை. தோழியிடம் சொல்லி  , தோழி போய் தலைவியிடம் சொல்லி இருக்கிறாள். தோழி சொன்னதை  தலைவி ஏற்றுக் கொண்டாள் . 

இதில் இழையோடும் சிலவற்றை நாம் யூகிக்க முடியும். 

தோழி சொல்கிறாள் "நீ சொன்னதைத்தான் நான் சொன்னேன்" நானாக எதுவும் சொல்லவில்லை என்பது புலப் படும்.   ஏதோ ஒரு சந்தேகம். ஒரு வேளை தலைவன்  சொன்னது எல்லாம் தவறாக இருக்குமோ ? இவன் சொன்னதைக் கேட்டு  நாமும் தலைவியிடம் எதை எதையோ சொல்லி விட்டோம். அவளும் அவற்றை  நம்பி விட்டாள். நாளை அவை தவறாகப் போனால், தலைவி என்னைத்தானே குறை  கூறுவாள் என்று எண்ணி தோழி , தலைவியை வைத்துக் கொண்டு  தலைவனிடம் கூறுகிறாள் "நீ சொன்னதைத்தாம்பா நான்  சொன்னேன் "  (எனக்கு ஒண்ணும் தெரியாது என்பது தொக்கி நிற்கிறது ).

மெல்லிய பதற்றம் நமக்குப் புரிகிறது. 

அது மட்டும் அல்ல, தலைவன் நேரடியாக தலைவியிடம் ஒன்றும் கூறவில்லை. ஒரு வேளை தலைவியின் நாணம் தடுத்து இருக்கலாம்.....அல்லது....தலைவி தன்னை ஏற்றுக்  கொள்ளா விட்டால் என்ன  செய்வது என்ற தலைவனின்  பயம் காரணமாக இருக்கலாம்....தோழியை தூது போகச் சொல்லி இருக்கிறான். அவளும் பக்குவமாக எடுத்துச் சொல்லி  தலைவியின்  காதலை பெற்றுத் தந்திருக்கிறாள்.



அவர்கள் காதலித்தார்கள் ? எங்கே எப்படி என்பதை நாளை பாப்போம். 



==================== பாகம் 3 ============================================

பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப் 
புதுநல னிழந்த புலம்புமா ருடையள்

அது ஒரு பெரிய மரம். பல கிளைகளைக் கொண்டது. கடற் கரையில் அமைந்த  மரம். மரத்தடியில் அமர்ந்து பார்த்தால் கடல் தெரியும். நீண்ட மணல் பரப்பு.  அதைத் தாண்டி  கடல். 

அந்த மரத்தடியில் அமர்ந்து அவர்கள் காதல் புரிந்தார்கள். 

பசு நனை = பசுமையான அரும்புகளைக் கொண்ட 
ஞாழற் = ஒரு வகை மரம் 
பல் சினை = பல கிளைகள் 
ஒரு சிறை = அதில் ஒரு கிளையின் கீழே 
புது நலன் இழந்த = புதியதாய் பெற்ற அழகை (நலன்) இழந்த. ஒரு பெண் பருவம்  அடையும் போது புது அழகைப் பெறுகிறாள். உடலில் சில மாற்றங்கள், மனதில் ஒரு சிலிர்ப்பு, ஒரு புன்னகை...அந்த அழகை இழந்தாள் என்று  சொல்லி நிறுத்துகிறது கவிதை. 

ஏன் இழந்தாள் , எப்படி இழந்தாள் என்று சொல்லவில்லை. அங்குதான் கவிதை நிற்கிறது. 

நலனை இழந்தது மட்டும் அல்ல, புலம்புகிறாள். இழந்ததை நினைத்து புலம்புகிறாள். 

முதலில் - இவளே என்று அருகில் இருந்த பெண்ணைச் சுட்டிக் காட்டி பாடல் ஆரம்பித்தது. 

அடுத்து, அருகில் இருக்கும் மரத்தைக் காட்டியது. 

அடுத்து, 


உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும் 

உது என்ற சுட்டுச் சொல். அது, இது, உது. அருகிலும் இல்லை, தூரத்திலும் இல்லை, இரண்டுக்கும் நடுவில்.  "உது".

உதுக் காண் = அதைப் பார் (உதைப் பார் என்று சொல்ல வேண்டும் )

எய்ய = எய்யாமல், மறைந்து விடாமல், மறந்து போய் விடாதே. நீ எப்போதும் வேண்டும். எய்ய என்றால் அடைய. 

எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

 என்பார் மணிவாசகர் 

 

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

உள்ளல் வேண்டும் = நினைக்க வேண்டும். 



 
நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் 
கடலுங் கானலுந் தோன்றும் 
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே. 


நிலவும் இருளும் போல . நல்லதும் கெட்டதும் எங்கும் இருக்கும். அவளிடம் சிறு  குறைகள் இருக்கலாம். உன்னிடமும் சிறு சிறு குறைகள் இருக்கலாம். நிலவும்  இருளும் போல இருக்கிறது எங்கள் ஊர் என்கிறாள். அது ஊருக்கு மட்டும் சொன்னது அல்ல.  

புலவு திரை  = மாமிச மணம் வீசும் கரை. மீனும், நண்டும் இறந்து கிடக்கும். அதனால்  அவற்றின் உடலில் இருந்து வாடை வீசும்.  தலைவியின் சோகத்தை  விளக்குகிறாள் தோழி. நிலவு போல பளிச்சென்று இருக்கும் கடற்கரைதான்  என்றாலும், இப்போது மாமிச மணம் வீசுகிறது. 

கடலும் கானமும் = கடலும், அதை அடுத்த கரையும். 

மடல் தாழ் பெண்ணை = தாழ்ந்த மடல்களைக் கொண்ட பனை மரங்கள்.

பனை மரம் உயர்ந்து வளரும்.  ஆனால், மடல் தாழ்ந்த பனை மரம் என்கிறாள். தலைவி  எவ்வளவுதான் பெரியவளாக இருந்தாலும், உன்னிடம் வரும்போது எப்படி இருப்பாள் என்று சொல்லாமல் சொல்கிறாள். 

இப்படி நாங்கள் வந்து உன்னிடம் பேசுவதால், ஏதோ நாங்கள் நல்லவர்கள் இல்லை என்று  நினைத்து விடாதே. 

சிறு நல் ஊரே = சின்ன ஊர் என்றாலும், நல்ல ஊர் எங்கள் ஊர்.