Sunday, August 30, 2015

இராமாயணம் - பரதன் - பழி வந்தால் போகாது

இராமாயணம் - பரதன் - பழி வந்தால் போகாது 


தீய செயல்களை, பழி தரும் செயல்களை செய்வதில் உள்ள சிக்கல் என்ன என்றால் ஒரு தரம் பழி வந்துவிட்டால் அது எக்காலத்தும் போகாது. பழிச் செயலை செய்தவன் ஆயுளுக்குப் பின்னும் அந்த பழிச் சொல் அவனை விடாது.

நாம் செய்யும் நல்லவைகளை உலகம் எளிதாக மறந்து விடும். ஆனால், நாம் செய்யும் தீய செயல்களை ஒரு போதும் மன்னிக்காது.

இராமன் எவ்வளவோ நல்லது செய்தான். ஆனால் அவன் வாலியை மறைந்து நின்று கொன்றான் என்ற பழிச் சொல் இன்றுவரை போகவில்லை. போகாது.

எனவே தான் வள்ளுவரும்

ஈன்றாள் பசிக் காண்பான் ஆயினும் செய்யற்க ஆன்றோர் பழிக்கும் வினை 

என்றார். சட்ட புத்தகம் ஆயிரம் சொல்லலாம், சாட்சிகள் இல்லாமல் போகலாம், நீதிபதி சரியாக நீதி வழங்காமல் போகலாம்.  சான்றோர் பழிக்கும் வினையைச் செய்யக் கூடாது.

நாம் மறைந்தாலும் நம் பழிச் செயல் மாறாது.

"மாயா வன் பழி தந்தீர்" என்றான்.  பழி மாயாது. என்றும் நிலைத்து நிற்கும்.

கைகேயிடம் பரதன் கூறுகிறான்.....

"நீ நோய் அல்ல, உன் கணவனின் உயிரை உண்ட பேய். நீ இன்னமும் உயிருடன் இருக்கிறாயே.  எனக்கு என்றும் போகாத பழியைத் தேடித் தந்தீர். முலை தந்தீர், பழி தந்தீர். இன்னும் என்னென்ன தரப் போகிறாயோ "

பாடல்

‘நோயீர் அல்லீர்; நும் கணவன்தன்
    உயிர் உண்டீர்;
பேயீரே! நீர் இன்னம் இருக்கப்
    பெறுவீரே?
மாயீர்! மாயா வன் பழி தந்தீர்!
    முலை தந்தீர்!
தாயீரே நீர்? இன்னும் எனக்கு
    என் தருவீரே?

பொருள்

‘நோயீர் அல்லீர் = நீ நோய் அல்ல

நும் கணவன்தன் = உன் கணவனின்

உயிர் உண்டீர் =  உயிரை உண்டாய்

பேயீரே! = பேய் போன்றவள் நீ

நீர் இன்னம் இருக்கப் பெறுவீரே? = இன்னும் உயிரோடு இருக்கிறாயே

மாயீர்! = சாகவில்லையே இன்னும்

மாயா வன் பழி தந்தீர்! = தீராத கொடுமையான பழியைத் தந்தீர்

முலை தந்தீர்! = என்னை பாலூட்டி வளர்த்தாய்

தாயீரே நீர்? = நீயெல்லாம் ஒரு தாயா ?

இன்னும் எனக்கு என் தருவீரே? = இன்னும் எனக்கு என்னவெல்லாம் தரப் போகிறாயோ ?

பரதன் ஒரு குற்றமும் செய்யவில்லை. வரம் கேட்டது கைகேயி. தந்தவன் தசரதன். உயிர் விட்டவன் தசரதன். கானகம் போனவன் இராமன். இதில் பரதன் எங்கே வந்தான்.

இருந்தாலும், தாய் கேட்ட வரத்தால் தனக்கு ஒரு நன்மை வரும் என்றால், அந்த வரத்தின்  தீமையும் தன்னையே சாரும் என்று அவன் நினைக்கிறான்.

திருட்டுப் பொருளை வாங்குவது மாதிரித்தான். நான் திருடவில்லை என்று சொன்னால்   உலகம் ஏற்றுக் கொள்ளாது.

தவறான வழியில் வரும் செல்வம் தீராத பழியைக் கொண்டு சேர்க்கும் என்று அவன் நினைத்தான்.

அப்படி ஒவ்வொருவரும் நினைத்தால் இந்த உலகம் எப்படி  இருக்கும் ?

உலகம் மாறுகிறதோ இல்லையோ, நாம் மாறுவோமே...



Saturday, August 29, 2015

இராமாயணம் - பழிக்கு அஞ்சிய பரதன்

 இராமாயணம் - பழிக்கு அஞ்சிய பரதன் 


கைகேயி பெற்ற வரத்தால் பரதனுக்கு அரசு கிடைத்தது. ஆண்டு அனுபவிக்க வேண்டியதுதானே.

என்ன ஆகி விடும் ? சக்ரவர்த்தியை எதிர்த்து யார் என்ன சொல்ல முடியும் ?

பரதன் கவலைப் படுவது அவன் வாழ்ந்த காலத்தில் உள்ள மக்களைப் பற்றி அல்ல. பின்னாளில் வருபவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று எண்ணி வருந்துகிறான்.

முன்பொரு நாள் அரச குல தர்மத்தை பரதன் சிதைத்தான் என்று வருங்கால சந்ததி பேசுமே என்ற பழிக்கு அஞ்சினான்.

வள்ளுவர் சொல்லுவார்,

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால் 
கலந்தீமை யாற்றிரிந் தற்று.

நல்ல பண்பில்லாதவன் பெற்ற பெரிய செல்வம், சரியாக சுத்தப் படுத்தாத பாத்திரத்தில் இட்ட நல்ல பால் போன்றது என்று.

பாத்திரம் சரி இல்லை என்றால், பால் கெட்டுப்  போகும். அந்தப் பாலை உட்கொள்ள முடியாது.  அப்படியே உண்டாலும் அது உண்டவனுக்கு தீமை செய்யும்.  அது போல, பண்பில்லாதவன் பெற்ற செல்வத்தை அவனால் அனுபவிக்க  முடியாது, அப்படியே அனுபவித்தாலும் அது அவனுக்கு தீமையே செய்யும்.

தான் அந்த அரசை பெறுவது ஒரு பண்பில்லாத செயல் என்று எண்ணினான் பரதன்.

தான் வாழும் காலத்திற்கு மட்டும் அல்ல, இன்னும் வரும் காலத்தில் உள்ள மக்கள் என்ன நினைப்பார்களோ என்று பழிக்கு அஞ்சியவன் பரதன்.

பாடல்

‘ “சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால்,
வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து, ஒரு
பழி உடைத்து ஆக்கினன், பரதன் பண்டு” எனும்,
மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ?


பொருள்

‘ “சுழியுடைத் = கெட்ட எண்ணம் கொண்ட

தாயுடைக் = தாயின்

கொடிய சூழ்ச்சியால் = கொடிய சூழ்ச்சியால்

வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து = வழி வழியாக கட்டிக் காத்த மரபை கொன்று

ஒரு பழி உடைத்து ஆக்கினன் = ஒரு பழியை செய்தான்

பரதன் = பரதன்

பண்டு” = அந்தக் காலத்தில்

எனும் = என்ற

மொழி உடைத்து ஆக்கலின் = பழிச் சொல்லை ஆக்குவதைத் தவிர

முறைமை வேறு உண்டோ? = வேறு என்ன இருக்கிறது

அரசை ஆள்வதில் உள்ள சுகம் அவனுக்குத் தெரியவில்லை.

அதிக்கரம், செல்வம், பணம், பகட்டு, ஆள் , அம்பு, சேனை ஒன்றும் அவன் கண்ணுக்குத் தெரியவில்லை.

அதனால் வரும் பழி மட்டும் அவனுக்குத் தெரிகிறது.

மற்றவர்களாய் இருந்தால், சக்கரவர்த்தி பதவியின் சுகம் மட்டும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். கொஞ்சம் பழி வந்தால் என்ன, ஏதாவது சொல்லி  சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார்கள்.

பரதன் இராமனை விட உயரக் காரணம், அவன் மனம் உயர்ந்ததனால். அவனுடைய பழிக்கு அஞ்சிய குணமும் அவன் மனம் உயர ஒரு காரணம்.

நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மை மகிழ்விக்க, நாம் செய்யும் தவறை சுட்டி காட்டாமல்  போகலாம். நமக்கு கீழே இருப்பவர்கள், நமக்கு பயந்து நம் தவறுகளை  நமக்கு எடுத்துச் சொல்லாமல் போகலாம்.

நமக்குத் தெரிய வேண்டும்....நல்லது எது , கெட்டது எது என்று. அப்படி அறிந்து அதன் படி   நின்றதால் உயர்ந்தான் பரதன்.



Friday, August 28, 2015

இராமாயணம் - பரதன் - மாளவும் , மீளவும், ஆளவும்

இராமாயணம் - பரதன் - மாளவும் , மீளவும், ஆளவும் 


வாழ்கையை எப்படி இன்பமாக, வெற்றிகரமாக வாழ்வது ?

ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் வாழ்வில் உயர முடியும்.

நான் தினமும் காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்கிறேன், தினமும் பல் விளக்குகிறேன், நடை பயிற்சி செய்கிறேன்...யார் பொருளையும் இதுவரை திருடியது கிடையாது ...நான் முன்னேற முடியுமா என்று கேட்கலாம்.

ஒழுக்கம் என்றால் என்ன என்று அறியாதவர்கள் சொல்வது இது.

ஒழுக்கம் என்றால் என்ன ?

ஒழுக்கம் என்றால் ஒழுகுவது.

வீட்டின் மேல் உள்ள தண்ணீர் தொட்டியில் ஏதாவது கீறல் விழுந்தால் அதில் இருந்து நீர் ஒழுகிக் கொண்டே இருக்கும்.

அதாவது மேலிருந்து கீழே வருவது ஒழுகுதல்.

அது, போல உயர்ந்தவர்கள், சான்றோர்கள், படித்தவர்கள் , செய்வதை கண்டு அதன் படி வாழ்வது ஒழுக்கம்.

மேலும், ஒழுக்கம் என்பது துளி போல் விட்டு விட்டு விழுவது அல்ல. விடாமல், தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஒழுக்கமும் விடாமல் கடை பிடிப்பது.

பெரியவர்கள் செய்த நல்ல செய்கைகளை விடாமல் கடை பிடித்தால் அது ஒழுக்கம் எனப்படும்.

அப்படி வாழ்ந்தால் , வாழ்க்கையில் கட்டாயம் முன்னேற முடியும் அல்லவா ?

அந்த ஒழுக்கத்தை வாழ்வில் கடை பிடித்தவன் பரதன்.

எப்படி ?

பாடல்

‘மாளவும் உளன் ஒரு மன்னன் வன்சொலால்
மீளவும் உளன் ஒரு வீரன்; மேய பார்
ஆளவும் உளன் ஒரு பரதன் ஆயினால்
கோள் அலது அறநெறி; குறை உண்டாகுமோ?

பொருள் 

‘மாளவும் உளன் ஒரு மன்னன் = தன் வாக்கை காப்பாற்றவும், அரச நெறியை காக்கவும் உயிரையே கொடுத்தான் ஒரு மன்னன் (தசரதன்)

வன்சொலால் = கொடிய சொல்லால் (வரத்தால் )

மீளவும் உளன் ஒரு வீரன் = பதினாலு வருடம் கானகம் போய் மீண்டு வர உள்ளான் ஒரு வீரன்

மேய பார் ஆளவும் உளன் ஒரு பரதன் = பரந்த இந்த உலகை ஆள உள்ளான் பரதன்

ஆயினால் = ஆகையால்

கோள் அலது அறநெறி; =   அறநெறிக்கு ஒரு குற்றம் இல்லை

குறை உண்டாகுமோ? = ஒரு குறையும் இல்லை


நான் இந்த அரசை ஆண்டால் அது அறநெறிக்கு புறம்பானது, குற்றம் உள்ளது என்கிறான்.

தசரதன், இராமன் என்ற இரண்டு பெரியவர்களை எதுத்துக் கொள்கிறான் பரதன்.

சொன்ன சொல்லைக் காக்கவும், அரச நெறியைக் காக்கவும் உயிரைக் கொடுத்து உயர்ந்தவன்  தசரதன்.

தந்தையின் சொல்லை காப்பாற்ற கானகம் போய் தனை உயர்த்திக் கொண்டவன்   இராமன்.


அவர்களை தன் வாழ்வுக்கு உதாரணமாகக் கொள்கிறான் பரதன்.

நம்மை விட வாழ்வில் உயர்ந்தவர்களை , அவர்களின் வாழ்கை முறைகளை கடை பிடிக்க வேண்டும்.

தசரதனும், இராமனும் தங்கள் செயல்கள் உயர்ந்தவர்கள்.

செயற்கரிய செய்வார் பெரியார்,  சிரியர் செயற்கரிய செய்கலாதார் என்று வள்ளுவன்  சொன்னது போல, செயற்கரிய செயல்களை செய்து பெரியவர்களாக  உயர்ந்தவர்கள் தசரதனும், இராமனும்.


அவர்களின் வாழ்கையை முன் உதாரணமாகக் கொண்டு வாழ்ந்து உயர்ந்தவன்  பரதன்.

பரதன் உயர்ந்தது இருக்கட்டும்....

நீங்கள் உயர, யாரை முன் உதாரணமாகக் கொண்டிருக்கிறீர்கள் ?

சிந்திப்போம்.



இராமாயணம் - தீயவற்றில் ஒரு சுவை

இராமாயணம் - தீயவற்றில் ஒரு சுவை 


இன்று இராமாயணம் பேசும் சிலர் , "பரதன் பாட்டன் வீட்டில் இருந்து கொண்டு , தாயை ஏவி விட்டு அரசைப் பெற்றுக் கொண்டான்" என்று கூறுகிறார்கள். இவர்களுடைய கீழ்மையை உயர்ந்த பாத்திரங்களின் மேல் ஏற்றுகிறார்கள்.

பரதன் அப்படிப் பட்டவானா ?

தசரதன் தனக்குத் தந்த இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கு அனுப்பி உனக்கு அரசையும் பெற்றுத் தந்தேன் என்று கைகேயி சொல்லி முடிக்கும் முன், தன் தலைக்கு மேல் கூப்பிய கைகளை கீழே கொண்டு வந்து இரண்டு காதுகளையும் இறுக பொத்திக் கொண்டான் பரதன்.

பாடல்

சூடின மலர்க் கரம், சொல்லின் முன், செவி
கூடின; புருவங்கள் குனித்துக் கூத்து நின்று
ஆடின; உயிர்ப்பினோடு, அழல் கொழுந்துகள்
ஓடின; உமிழ்ந்தன, உதிரம் கண்களே!


பொருள்


சூடின மலர்க் கரம் = தலை மேல் கூப்பிய கரங்கள்

சொல்லின் முன் = கைகேயி சொல்லி முடிக்குமுன்

செவி கூடின;  = அவனின் இரு காதுகளின் பக்கம் வந்து கூடின

புருவங்கள் குனித்துக் = புருவங்கள் வளைந்து

கூத்து நின்று ஆடின = கூத்து ஆடின

உயிர்ப்பினோடு = உயிருடன்

அழல் கொழுந்துகள் ஓடின = நெருப்பு ஆறு ஓடியது

உமிழ்ந்தன = வடித்தன

உதிரம் கண்களே! = கண்கள் இரத்தத்தை

ஒரு இடத்தில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  சில நாள் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை  கொல்கிறார்கள். சில நாள் , காவல் படையும், இராணுவமும் சேர்ந்து தீவிரவாதிகளை  கொல்கின்றன. பத்திரிகைகளும், மற்ற ஊடகங்களும் இவற்றை  நாளும் எடுத்துச் சொல்கின்றன.

இன்று யாரை, யார் கொன்றார்கள் என்று கணக்குத் தருகின்றன.

இவற்றை தினமும் படித்துக் கொண்டிருந்தால், நமக்கு என்ன தோன்றும் ?

நாளடைவில்,  இது ஒரு பெரிய செய்தாகப்  படாது.  நாலைந்து பேர் இறந்தார்கள் என்றால்  , சரி என்று அடுத்த பக்கத்தை புரட்டப் போய் விடுவோம்.

என்ன ஆகிறது என்றால், தீமைகள் மரத்துப் போகிறது நமக்கு. இதெல்லாம் சாதாரணம், எப்போதும் நடப்பதுதான் என்று எடுத்துக் கொண்டு விடுகிறோம்.

தவறுகளுக்கு, தீமைகளுக்கு மனம் பழகி விடுகிறது.

இதற்கு அடுத்த கட்டம், அதிகமான தீமையை தவற்றை எதிர்பார்ப்பது.

ஆயிரம் இரண்டாயிரம் இலஞ்சம் வாங்கினான் என்றால் யாரும் கண்டு கொள்வது இல்லை.  பெரிதாக எதிர் பார்க்கத் தொடங்கி விடுகிறது.

சின்ன இலஞ்சம் வாங்கின யாரையாவது கைது பண்ணினால், "அவனவன் இலட்சம் கோடினு   வாங்கிறான்...அதை விட்டு விட்டு ஆயிரம் ரூபாய் வாங்கினவனை போய்   பிடிச்சிகிட்டு" என்று நமக்கு ஒரு சலிப்பு வந்து விடுகிறது.

இதில் அடுத்த கட்டம் என்ன என்றால், எல்லாரும் தான் வாங்குகிறார்கள், நாமும்  வாங்கினால் என்ன என்று தோன்றும்.

பொய்யில்,  தீமையில்,தவறில் ஒரு சுவாரசியம் வந்து விடுகிறது. ஒரு சுவை வந்து  விடுகிறது.

தவறு செய்வதில் ஆர்வமும், நல்லது செய்பவனை பார்த்தால் ஒரு இளக்காரமும் வந்து  விடுகிறது.

தீயவைகளை காது கொடுத்துக் கூட கேட்கக் கூடாது. கேட்டால் அதில் ஒரு ஆர்வமும், சுவையும் வந்து  விடும்.

கைகேயி சொன்னதை பரதன் முழுதாகக் கூட கேட்கவில்லை.

என்ன வரம், அதன் சாரம் என்ன, அதில் என்ன ஓட்டை இருக்கிறது, எப்படி கேட்டாய், எங்கு கேட்டாய், என்றெல்லாம் அவன் கேட்கவில்லை.

ஒரு தவறை முற்றுமாகக் கூட அவனால் கேட்க முடியவில்லை என்றால் அவன்  மனம் எவ்வளவு மென்மையானதாக இருந்திருக்க வேண்டும் ?

பேருந்தில் ஒரு பெண் மானபங்கப் படுத்தப் பட்டாள் என்றால், அதை விலாவாரியாக  விவரிப்பதும், அதை ஒரு வார்த்தை விடாமல் படிப்பதும் கூட ஒரு  வக்கிரம் தான்.

தீயாரை காண்பதுவும் தீதே , அவர் சொல் கேட்பதுவும் தீதே என்றாள் அவ்வை.

பொய் சொல்வதை கேட்பது, புரணி சொல்வதை கேட்பது,  புறம் சொல்வதை கேட்பது,  தவறுகளை விவரித்துக் கூறுவதை கேட்பது ....இவற்றை தவிர்க்க வேண்டும்.

தீயவற்றை மனதுக்குள் போட்டால் அது அங்கேயே தங்கி விடும். அகற்ற வழி இல்லை.

குழந்தைகளை தீயனவற்றை பார்க்கவோ, கேட்கவோ அனுமதிக்காதீர்கள்.

மனம் உயர அது ஒரு வழி.

தீயவற்றை கேட்க்கக் கூசினான் பரதன்.

மேலும் பார்ப்போம்.

 

Wednesday, August 26, 2015

திருவருட்பா - ஒன்றும் இல்லை என்று சொல்லும் கயவர்கள்

திருவருட்பா - ஒன்றும் இல்லை என்று சொல்லும் கயவர்கள் 


இறைவன் இல்லை.

பாவ புண்ணியம் இல்லை.

பக்தியும் முக்தியும் சும்மா கட்டுக் கதைகள்.

தவமும், விரதமும் வெட்டி வேலை.

இதையெல்லாம் விட்டு விட்டு, வாழ்க்கையை அனுபவிக்க வாருங்கள்....நன்றாக உண்டு, நல்ல உடை உடுத்து, பெண்களோடு சேர்ந்து கலந்து இன்பம் அனுபவிப்பதுதான் வாழ்க்கை. இது தான் மாம் வாழ்வில் கை மேல் கண்ட பலன். மற்றவை எல்லாம் வெறும் கற்பனை என்று சொல்லும் கயவர்களின் பால் சேராமல் இருக்க எனக்கு அருள் செய்வாய் என்று முருகனிடம் வேண்டுகிறார் வள்ளலார்.

எல்லாம் பொருளால் ஆனது. பொருள்களைத் தாண்டி எதுவும் இல்லை என்று கூறுபவரக்ளை கயவர்கள் என்கிறார் வள்ளலார்.

இந்த உலகில் பொருள்களைத் தாண்டி வேறு பல விஷயங்களும் இருக்கின்றன. அவற்றை எல்லாம் அறிய வேண்டும். அப்படி அறியாமல், உலக இன்பமே பேரின்பம் என்று அலையும் கயவர்களோடு என்ன கூட்டு இனியே என்கிறார் வள்ளலார்.

பாடல்

 பரமேது வினைசெயும் பயனேது பதியேது 
         பசுவேது பாச மேது 
         பத்தியேது அடைகின்ற முத்தியேது அருளேது 
         பாவ புண்ணியங்க ளேது 
    வரமேது தவமேது விரதமேது ஒன்றுமிலை 
         மனம்விரும் புணவுண்டு நல் 
         வத்திர மணிந்துமட மாதர்தமை நாடிநறு 
         மலர் சூடி விளையாடி மேற் 
    கரமேவ விட்டுமுலை தொட்டு வாழ்ந்தவரொடு 
         கலந்து மகிழ்கின்ற சுகமே 
         கண்கண்ட சுகமிதே கைகண்ட பலனெனுங் 
         கயவரைக் கூடா தருள் 
    தரமேவு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர் 
         தலமோங்கு கந்த வேளே 
         தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி 
         சண்முகத் தெய்வ மணியே. 

பொருள்

 பரமேது = பரம் ஏது ? பரம் என்றால் ஆதி என்று பொருள். பரம்பரை என்றால் ரொம்ப காலமாய் வருவது. பரம சிவன். பர பிரும்மம்.

வினைசெயும் பயனேது = நல் வினை, தீ வினை இவற்றால் விளையும் பயன் ஏது ?

பதியேது = பதி ஏது  ? எல்லாவற்றிற்கும் தலைவன், ஆண்டவன் ஏது  ?

பசுவேது = பசு என்றால் அடிமை. ஆண்டான் அடிமை ஏது  ? கடவுள் , பக்தன் என்பதல்லாம் ஏது  ?

 பாச மேது  = பதிக்கும், பசுவுக்கும் இடையில் உள்ள பாசம் ஏது ?

பத்தியேது  = பக்தி என்றால் என்ன

அடைகின்ற முத்தியேது = அதன் மூலம் அடையும் முக்தி என்றால் என்ன ?

அருளேது = இறைவன் அருள் என்றால் என்ன ?

பாவ புண்ணியங்க ளேது  = பாவ புண்ணியங்கள் என்றால் என்ன ?

வரமேது தவமேது விரதமேது  = வரம், தவம், விரதம் என்றால் என்ன ?

ஒன்றுமிலை = இவையெல்லாம் ஒன்றும் இல்லை

மனம் விரும் புணவுண்டு = மனம் விரும்பும் உணவு உண்டு

 நல் வத்திர மணிந்து = நல்ல துணிகளை அணிந்து

மட மாதர்தமை நாடி = பெண்களை நாடி

நறு மலர் சூடி = வாசனையான மலர்களை சூடி

விளையாடி = விளையாடி

மேற் கரமேவ விட்டு = கையை அவர்கள் மேல் படர விட்டு

முலை தொட்டு  = அந்தப் பெண்களின் மார்புகளைத் தொட்டு

வாழ்ந்தவரொடு = வாழ்ந்து அவரோடு

கலந்து மகிழ்கின்ற சுகமே = கலந்து மகிழ்கின்ற சுகமே 
       
கண்கண்ட சுகமிதே  = கண் கண்ட சுகம் இதே

கைகண்ட பலனெனுங் = இதுவே கை கண்ட பலன் என்று சொல்லும்

கயவரைக் கூடா தருள் = கயவர்களை கூடாமல் இருக்க அருள்

தர = தருவதற்கு

மேவு = இருக்கும்

சென்னையிற் = சென்னையில்

கந்த கோட்டத்துள் = கந்த கோட்டத்தில்

வளர் = வளரும், அல்லது உறையும்

தலமோங்கு கந்த வேளே  = அதற்கு பெருமை செய்யும் கந்த வேளே

 தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
         சண்முகத் தெய்வ மணியே.  =  தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
         சண்முகத் தெய்வ மணியே.

உணவு, உடை, ஆண் பெண் உறவு இவற்றைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லையா ?

சிந்திக்க வேண்டிய விஷயம்.

Tuesday, August 25, 2015

இராமாயணம் - போக்கினேன், ஆக்கினேன் - பாகம் 2

இராமாயணம் - போக்கினேன், ஆக்கினேன் - பாகம் 2 


"என்னது என் தந்தை தசரதன் இறந்து போனானா? என் அண்ணன் கானகம் போனானா ? ஏன் ? எப்படி நடந்தது இது ?" என்று அதிர்ச்சி அடைந்த  பரதன் கைகேயிடம் கேட்டான்.

அதற்கு கைகேயி

தசரதனை "அவன்" என்று குறிப்பிடுகிறாள்.

"அவன் தந்த இரண்டு வரத்தினால் இராமனை கட்டுக்கு அனுப்பினேன், உன்னை நாட்டுக்கு அரசனாக்கினேன், அது பொறுக்காமல் அவன் உயிரை விட்டு விட்டான்"

என்று ஏதோ தன் பேரில் ஒரு குற்றமும் இல்லாத மாதிரி  மிகச் சாதரணமாக சொல்லி முடிக்கிறாள்.

பாடல்

‘வாக்கினால் வரம் தரக் கொண்டு, மைந்தனைப்
போக்கினேன், வனத்திடை; போக்கி, பார் உனக்கு
ஆக்கினேன்; அவன் அது பொறுக்கலாமையால்,
நீக்கினான் தன் உயிர், நேமி வேந்து’ என்றாள்.

  பொருள்

‘வாக்கினால் வரம் தரக் கொண்டு = தசரதன் முன்பு வரம் தந்தான். அதை, நிறைவேற்றுவதாக இப்போது வாக்கு தந்தான். அதன்  மூலம்

மைந்தனைப் போக்கினேன், வனத்திடை; = இராமனை காட்டுக்கு அனுப்பினேன்

போக்கி = அனுப்பி விட்டு

பார் உனக்கு ஆக்கினேன்; = இந்த உலகை உனக்கென்று ஆக்கினேன்

அவன் = தசரதன்

அது பொறுக்கலாமையால் = அதைப் பொறுக்காமல்

நீக்கினான் தன் உயிர் = உயிரை விட்டு விட்டான்

நேமி வேந்து’ என்றாள் = அதிகார சக்ரத்தை  செலுத்தும் அரசன் என்றாள்

இந்த பாட்டில் நிறைய ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு.

அவற்றை நாளை பார்ப்போம்.

============== பாகம் 2 =================================================

கைகேயி  மிக நல்லவள். இராமனை தன் மகனாக நினைத்து வளர்த்தவள்.  கூனியின் வார்த்தைகளை கேட்டு தலைகீழாக மாறினாள்.

நம் எல்லோருக்குள்ளும் நல்லதும் கெட்டதும் கலந்து கிடக்கிறது.

நல்லதைப் படித்து, நல்லவர்களோடு சேர்ந்து இருந்தால் நமக்குள் இருக்கும் நல்லவைகள் சுடர் விட்டு எழும்.

கெட்டவர்களோடு சேர்ந்து, கெட்டதைப் படித்தால் கெட்டவைகளே மேலெழுந்து நிற்கும்.

கைகேயி , கூனியொடு சேர்ந்தாள். அவளுக்குள் கிடந்த சாத்தான் உயிர் பெற்றெழுந்தான்.

அவள் பேச்சில் ஆணவம் சொட்டுகிறது....

மைந்தனைப் போக்கினேன்
பார் உனக்கு ஆக்கினேன்

என்று தான் செய்ததாகக் கூறுகிறாள்.

இராமன் வனம் போனான்.  தசரதன் வானம் போனான்.

காரணம் என்ன ?

கைகேயி சொல்கிறாள், "என் பேரில் என்ன தப்பு...நான் ஒரு தவறும் செய்யவில்லை"....

அவன் வரம் தந்தான்

அவன், அந்த வரங்களை நிறைவேற்றுவதாக வாக்கு தந்தான் ....இது தசரதனின் பிழை. என் மேல் ஒரு குற்றமும் இல்லை என்பது போல பேசுகிறாள்.


கூனியின் நட்பு அவளை அப்படி பேச வைத்தது...

தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
   தீயார்சொற் கேட்பதுவுந் தீதே-தீயார்
   குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ
   டிணங்கி யிருப்பதுவுந் தீது.

தீயாரோடு இணங்கி இருந்தாள். தீயவளாகிப் போனாள்.

அப்போது கூட, அவளின் அடிப்படை நல்ல குணம் போகவில்லை.

இராமனை போக்கினேன் என்று கூறவில்லை.

"மைந்தனைப் போக்கினேன்" என்று கூறுகிறாள்.  அப்போதும் , இராமன் மேல் உள்ள பாசம் போகவில்லை.

மகனே மகனே என்று சொல்லி வளர்ந்த நாக்கு  தவறியும் மாற்றிச் சொல்லவில்லை.

சொல்லு நா நமச்சிவாயவே என்று சுந்தரர் கூறியது போல...கைகேயியின் நாக்கு, இராமனை கானகம் அனுப்பிய பின்னும், "மைந்தன்" என்றே கூறியது.

நல்லதை பழக்கப் படுத்தி வையுங்கள். அது உங்களை நல்ல வழியில் இட்டுச் செல்லும்.

 சரி,இதைக் கேட்டவுடன் பரதன் என்ன செய்தான் ?









Monday, August 24, 2015

இராமாயணம் - போக்கினேன், ஆக்கினேன்

இராமாயணம் - போக்கினேன், ஆக்கினேன் 


"என்னது என் தந்தை தசரதன் இறந்து போனானா? என் அண்ணன் கானகம் போனானா ? ஏன் ? எப்படி நடந்தது இது ?" என்று அதிர்ச்சி அடைந்து பரதன் கைகேயிடம் கேட்டான்.

அதற்கு கைகேயி

தசரதனை "அவன்" என்று குறிப்பிடுகிறாள்.

"அவன் தந்த இரண்டு வரத்தினால் இராமனை கட்டுக்கு அனுப்பினேன், உன்னை நாட்டுக்கு அரசனாக்கினேன், அது பொறுக்காமல் அவன் உயிரை விட்டு விட்டான்"

என்று ஏதோ தன் பேரில் ஒரு குற்றமும் இல்லாத மாதிரி  மிகச் சாதரணமாக சொல்லி முடிக்கிறாள்.

பாடல்

‘வாக்கினால் வரம் தரக் கொண்டு, மைந்தனைப்
போக்கினேன், வனத்திடை; போக்கி, பார் உனக்கு
ஆக்கினேன்; அவன் அது பொறுக்கலாமையால்,
நீக்கினான் தன் உயிர், நேமி வேந்து’ என்றாள்.

  பொருள்

‘வாக்கினால் வரம் தரக் கொண்டு = தசரதன் முன்பு வரம் தந்தான். அதை, நிறைவேற்றுவதாக இப்போது வாக்கு தந்தான். அதன்  மூலம்

மைந்தனைப் போக்கினேன், வனத்திடை; = இராமனை காட்டுக்கு அனுப்பினேன்

போக்கி = அனுப்பி விட்டு

பார் உனக்கு ஆக்கினேன்; = இந்த உலகை உனக்கென்று ஆக்கினேன்

அவன் = தசரதன்

அது பொறுக்கலாமையால் = அதைப் பொறுக்காமல்

நீக்கினான் தன் உயிர் = உயிரை விட்டு விட்டான்

நேமி வேந்து’ என்றாள் = அதிகார சக்ரத்தை  செலுத்தும் அரசன் என்றாள்

இந்த பாட்டில் நிறைய ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு.

அவற்றை நாளை பார்ப்போம்.



Sunday, August 23, 2015

சீவக சிந்தாமணி - சைட் அடித்த பெண்கள்

சீவக சிந்தாமணி - சைட் அடித்த பெண்கள் 

(வயது வந்தவர்களுக்கு மட்டும். ஆண் பெண் ஈர்பை கேட்டு முகம் சுளிப்பவர்கள் மேலே படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்)

பெண்கள் , ஆண்களை விரும்பி பார்ப்பார்களா. பார்ப்பார்கள் என்கிறது சீவக சிந்தாமணி.

அப்படி அவர்கள் பார்க்கும் போது , ஆண்களும் தங்கள் அழகை இரசிக்க வேண்டும் என்று நினைத்து அலங்காரம் பண்ணிக் கொண்டு வருகிறார்களாம்.

ஆண்கள் தங்களை எப்படி இரசிக்கிறார்கள், அப்படி தங்களை இரசிக்கும் ஆண்களை பெண்கள் எப்படி எப்படி இரசிக்கிறார்கள் ....

வாள் போன்ற கூர்மையான கண்களைப் பார்த்து, நாளும் வளரும் மார்புகளைப் பார்த்து, அழகு பொங்கும் இடுப்பை நோக்கி, பண் பாடும் வண்டுகள் வட்டமிடும் மலர்களை சூடிய கூந்தலை நோக்கும் அந்த ஆண்களை பார்த்து விருப்போடு நின்றார்கள் வளை அணிந்த அந்தப் பெண்கள்



பாடல்

வாண்மதர் மழைக்க ணோக்கி
வருமுலைத் தடமு நோக்கிக்
காண்வர வகன்ற வல்குற்
கண்விருப் புற்று நோக்கிப்
பாணுவண் டாற்றுங் கோலச்
சிகழிகைப் படியு நோக்கி
யாண்விருப் புற்று நின்றா
ரவ்வளைத் தோளி னாரே.

சீர் பிரித்த பின்

வாள் மதர் மழைக் கண் நோக்கி 
வரு முலைத்  தடமும் நோக்கிக்
காண் வரவு அ கன்ற அல்குல் 
கண் விருப்புற்று நோக்கிப்
பாணு வண்து ஆற்றும் கோலச்
சிகழிகைப் படியும்  நோக்கி
ஆண் விருப்புற்று நின்றா
அவ் வளைத் தோளினாரே.

பொருள்

வாள் = வாள் போன்ற கூர்மையான

மதர் = மதர்ப்பு என்ற சொல்லுக்கு செழிப்பு, இறுமாப்பு, உள்ளக்களிப்பு; ஆசைப்பெருக்கம்; அழகு; வலிமை; மிகுதி; புலவி என்று பல பொருள்கள் உண்டு. உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள்.

மழைக் கண் நோக்கி = மழை போன்ற குளிர்ச்சியான கண்களை நோக்கி, மழை தரும் மேகம் போன்ற கரிய கண்களை நோக்கி, நீரில் மிதக்கும் கண்களை நோக்கி

வரு முலைத்  தடமும் நோக்கிக் = வரு முலை  - வினைத்தொகை. வந்த, வருகின்ற, வரும். அந்தப் பெண்களின் மார்புகளை நோக்கி

காண் = காணக் கூடிய அழகான

வரவு அகன்ற அல்குல் = பரந்த இடுப்பு (அவ்வளவு தான் சொல்ல முடியும்)

கண் விருப்புற்று நோக்கிப் = கண்ணால் விருப்புடன் நோக்கி

பாணு = பண் பாடும்

வண்டு  ஆற்றும் = வண்டு ஆடும்

கோலச் சிகழிகைப் படியும்  நோக்கி = அழகிய முடியையும் நோக்கி

ஆண் விருப்புற்று நின்றார் = ஆண்கள் விரும்பும்படி நின்றார் . ஆண்கள்மேல் விருப்புற்று நின்றார்

அவ் வளைத் தோளினாரே. = அந்த வளையல் அணிந்த தோள்களை கொண்ட பெண்களே

சொல்லித் தெரியாது காமம்
சொன்னாலும் புரியாது தர்மம்




இராமாயணம் - பரதன் - தீயன இராமனே செய்யுமேல்

இராமாயணம் - பரதன் - தீயன இராமனே செய்யுமேல்


நான் பெற்ற இரு வரத்தால், இராமன் கானகம் போனான், உன் தந்தை வானகம் போனான்,  நீ அரசு பெற்றாய் என்றாள் கைகேயி பரதனிடம்.

பரதனுக்குப் புரியவில்லை. இராமன் ஏன் கானகம் போனான் என்று. தசரதன் ஏன் இராமனை கானகம் அனுப்பினான் ? அவன் என்ன தவறு செய்தான் ? இராமன் தவறு செய்ய மாட்டானே. அப்படியே அவன் தவறு செய்து இருந்தாலும், அது ஒரு தாய் அவளுடைய பிள்ளைக்கு செய்யும் தீமை போல அல்லவா இருக்கும்.

ஒரு தாய், தன் பிள்ளைக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்றால், அதை பிடித்து இழுத்து, தன் கால்களுக்கு இடையில் அமுக்கி, அதன் வாயை வலு கட்டாயாமாகத் திறந்து மருந்தைப் புகட்டுவாள் . வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவள் ஏதோ கொடுமை செய்வது போலத் தெரியும். பிள்ளை குணமாக வேண்டுமே என்று அவள் அப்படிச் செய்வாள். அது போல, இராமன் தீமையே செய்திருந்தாலும், அது நல்லதற்கே அன்றி வேறு ஒன்றும் அதில் தீமை இருக்காது என்று பரதன் நம்பினான்.

பாடல்

‘தீயன இராமனே செய்யுமேல், அவை
தாய் செயல் அல்லவோ, தலத்துளோர்க்கு எலாம்?
போயது தாதை விண் புக்க பின்னரோ?

ஆயதன் முன்னரோ? அருளுவீர்’ என்றான்.

பொருள்

‘தீயன = தீமையை

இராமனே செய்யுமேல் = இராமனே செய்திருந்தாலும்

அவை = அவை

தாய் செயல் அல்லவோ = ஒரு தாயின் செயல் போன்றது அல்லவா

தலத்துளோர்க்கு எலாம்? = இந்த பூ உலகில் உள்ளவர்களுக்கு எல்லாம்

போயது  = இராமன் கானகம் போனது

தாதை விண் புக்க பின்னரோ? = தந்தையாகிய தசரதன் வானகம் போன பின்பா


ஆயதன் முன்னரோ?  = அல்லது அதன் முன்பா

அருளுவீர்’ என்றான் = அருள் கொண்டு சொல்லுங்கள் என்று கைகேயி பரதன்  கெஞ்சிக் கேட்கிறான்.

இன்று பிள்ளைகள் பெற்றோரோ ஆசிரியரோ, மற்ற பெரியவர்களோ ஏதாவது  கண்டித்துச்  சொன்னால், அவர்களை அந்த பிள்ளைகள் விரோதிகளைப் போல பார்க்கிறார்கள். அவர்கள் தங்களது நன்மைக்குத் தான் சொல்கிறார்கள் செய்கிறார்கள்  என்ற நம்பிக்கை இல்லை.

பெரியவர்கள் மேல், பெற்றவர்கள் மேல், ஆசிரியர்கள் மேல் பிள்ளைகளுக்கு நம்பிக்கை இல்லை.

நீ என்ன சொல்வது. நான் என்ன கேட்பது என்று இருக்கிறார்கள்.

எது சொன்னாலும் காரணம் கேட்கிறார்கள். சந்தேகம், நம்பிக்கை இன்மை பெரிதும் வளர்ந்து  விட்டது.

இராமன் மேல் பரதனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. இராமன் தவறு செய்ய மாட்டான். அப்படியே அவன் செய்தது தவறு போலத் தோன்றினாலும், அது  தவறாக இருக்காது.  அது ஒரு நன்மைக்காகத்தான் இருக்கும் என்று நம்புகிறான்.

இப்படி ஒரு நம்பிக்கை பெற்றவர்கள் மேலும், ஆசிரியர்கள் மேலும், பெரியவர்கள் மேலும்  பிள்ளைகளுக்கு இருந்தால் அவர்கள் உயர்வார்களா இல்லையா ?

பரதன் உயர்ந்தான் என்று வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் கம்பன் சொல்கிறான்.

பிள்ளைகள் மனதில் நம்பிக்கையை வளர்க்க பரதன் கதை உதவும்.

சொல்லி வையுங்கள்.

விதை போடுவது உங்கள் வேலை. போடுங்கள்.

வளரும் , பலன் தரும் என்று நம்புங்கள்.

பரதன் நம்பினான். நீங்களும் நம்புங்கள்.

நம்புவதைத் தவிர வேறு என்னதான் வழி இருக்கிறது ?





Saturday, August 22, 2015

பிரபந்தம் - மூப்பு வருமுன்

பிரபந்தம் - மூப்பு வருமுன் 




மூப்பு என்பது ஏதோ ஒரு நாளில் வருவது இல்லை. நாம் ஒவ்வொரு நாளும் மூப்பு அடைந்து கொண்டே இருக்கிறோம்.  கொஞ்சம் கொஞ்சமாக வயது எறிக் கொண்டே போகிறது.

அங்கங்கே சில பல நரை முடிகள். கண்ணாடியின் வலிமை (பவர்) ஏறிக் கொண்டே போகும். காது கொஞ்சம் கொஞ்சம் கேட்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பல்லில் பிரச்னை. 

இருந்தும், ஏதோ மூப்பு என்பது பின்னாளில் வரும் ஒன்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

இதைப் படிக்கும் இந்த நேரத்திலும் உங்கள் வயது ஏறிக் கொண்டிருக்கிறது. 

மூப்பு வருவதற்கு முன் எல்லாவற்றையும் செய்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது என்ன ஒரு நாளில் வரும் ஒன்றா என்ன. 

மேலும், மூப்பு வந்த பின், நம் உடல் நம் வசம் இருக்காது.  நட என்றால் கால்கள் நடக்காது. முட்டு வலிக்கும். பேசலாம் என்றால் இருமல் வந்து தடுக்கும். பிறர் சொல்வது காதில் சரியாக விழாது. 

தள்ளிப் போடாதீர்கள். கை கால்கள் மற்றும் ஏனைய புலன்கள் நன்றாக இருக்கும் போது நல்ல விஷயங்களை செய்து விடுங்கள். 

திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்.....

பாடல்  

முற்றமூத்துக்கோல்துணையா முன்னடிநோக்கிவளைந்து,
இற்றகால்போல்தள்ளி மெள்ள இருந்தங்கிளையாமுன்,
பெற்றதாய்போல்வந்த பேய்ச்சி பெருமுலையூடு, உயிரை
வற்றவாங்கியுண்ட வாயான் வதரிவணங்குதுமே.

சீர் பிரித்த பின் 

முற்ற மூத்துக் கோல் துணையாக  முன்னடி நோக்கி வளைந்து,
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன் ,
பெற்ற தாய் போல்வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு, உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே.

பொருள் 

முற்ற மூத்துக் = ரொம்பவும் வயதாகி 

கோல் துணையாக = கோலைத் துணையாகக் கொண்டு 

முன்னடி நோக்கி வளைந்து = முதுகு காலை பார்க்கப் போவது போல வளைந்து 

இற்ற கால் போல் = உடைந்த காலால் நடந்தால் எப்படி இருக்குமோ அப்படி 

தள்ளி = தள்ளித் தள்ளி நடந்து 

மெள்ள இருந்து = கொஞ்ச தூரம் நடந்தவுடன், மேலே நடக்க முடியாமல் ஓய்வு எடுத்து 

அங்கு = அன்று 

இளையா முன் = மூச்சு இரைத்து வலிமை குன்றும் முன் 
,
பெற்ற தாய் போல்வந்த = பெற்ற தாய் போல வடிவு கொண்டு வந்த 

பேய்ச்சி = பூதகி என்ற அரக்கியின் 

பெரு முலை ஊடு = பெருத்த முலைகளின் ஊடே 

உயிரை = அவளின் உயிரை 

வற்ற வாங்கி = ஒட்ட உறிஞ்சி வாங்கி 

உண்ட வாயான் = உண்ட வாயை கொண்ட கண்ணனை 

வதரி வணங்குதுமே = பத்ரி நாத்தில் வணங்குவோமே 


மூப்பை அறிந்து கொள்ளுங்கள். அது என்றோ வருவது இல்லை.  நாளும் வருவது. ஒவ்வொரு நொடியும் வருவது. 

புலன்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே நல்லதைச் செய்யுங்கள். 

Friday, August 21, 2015

இராமாயணம் - பரதன் - ஆண்டனனே அன்றே அரசை ஆசையால்?

இராமாயணம் - பரதன் - ஆண்டனனே அன்றே அரசை ஆசையால்?


பாட்டனார் வீட்டில் இருந்து வருகிறான் பரதன். அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது. நேராக வந்து தாயைப் பார்க்கிறான்.

தான் கேட்ட வரத்தால் தசரதன் மாண்டான், இராமன் கானகம் போனான், நீ அரசு பெற்றாய் என்று சர்வ சாதாரணமாகச் சொல்கிறாள் கைகேயி.

அதைக் கேட்ட பரதன் துடித்துப்  போகிறான்.

"உன் சூழ்ச்சியினால் என் தந்தை இறந்து போனான், என் அண்ணன் கானகம் போனான்,  என்ற சொல்லைக் கேட்ட பின்னும், உன் வாயைக் கிழிக்காமல் இருக்கிறேனே...உலகில் உள்ளவர்கள் என்ன சொல்லுவார்கள் ...பரதனுக்கும் இந்த அரசை ஆள வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் போல என்று தானே சொல்லுவார்கள் " என்று நினைத்து துடிக்கிறான்.


பாடல்

‘மாண்டனன் எந்தை என் தன்முன் மாதவம்
பூண்டனன் நின் கொடும் புணர்ப்பினால் என்றால்
கீண்டில் என் வாய்; அது கேட்டும் நின்ற யான்
ஆண்டனனே அன்றே அரசை ஆசையால்?


பொருள் 

‘மாண்டனன் எந்தை = என் தந்தை இறந்தான்

என் தன்முன்  = எனக்கு முன் பிறந்தவன்

மாதவம் = பெரிய தவம் செய்ய

பூண்டனன் = தவ வேடம் பூண்டு கானகம் சென்றான்

நின் கொடும் புணர்ப்பினால் = உன்னுடைய பெரிய சூழ்ச்சியால்

என்றால் = என்று

கீண்டில் என் வாய் = கிழிக்க வில்லையே உன் வாயையை

அது கேட்டும் நின்ற யான் = இவற்றை கேட்டும் ஒன்றும் செய்யாமல் இருந்த நான்

ஆண்டனனே அன்றே அரசை ஆசையால்? = இந்த அரசை ஆசையால் ஆண்டதற்கு சமம் என்று ஆகும் அல்லவா ?

ஒரு தவற்றை நாமே செய்ய வேண்டும் என்று இல்லை.  நமக்காக மற்றவர்கள் செய்யும் போது அதை தட்டிக் கேட்காமல் இருந்தாலே அந்தத் தவற்றை நாமே செய்தது போலத்தான்.

ஒரு அலுவலகம், ஒரு நிறுவனம், ஒரு அரசு நடக்கிறது என்றால் அதன் தலைமையில் உள்ளவர்கள் மட்டும் நேர்மையாக இருந்தால் போதாது. அவர்களுக்கு கீழே உள்ளவர்களும் ஒழுங்காக இருக்கிறார்களா என்று அந்த தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அப்படி செய்யவில்லை என்றால் அங்கு நடக்கும் தவறுகள் அவர்களே செய்தது மாதரித்தான்.

பிரதம மந்திரி நல்லவராக இருந்தால் மட்டும் போதாது. அவருக்கு கீழே உள்ள மந்திரிகளும்  நல்லவர்களாக இருக்க வேண்டும்.

அது மட்டும் அல்ல, யாரோ ஒரு தவறைச் செய்து அதன் மூலம் நமக்கு ஒரு பலன்  கிடைக்கும் என்றால், அதையும் விலக்க வேண்டும்.

 பரதன் சொல்லிச்  வரம் கேட்கவில்லை கைகேயி

இருந்தாலும், அந்த வரத்தால் வரும் நன்மை தனக்கு வேண்டாம் என்று ஒதுக்குகிறான் பரதன்.

யார் செய்த தவறில் இருந்தும் நமக்கு ஒரு நன்மை வரும் என்றாலும், அது வேண்டாம் என்றே  வைக்க வேண்டும்.

இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள்.

ஏன் பரதன் கோடி இராமர்களை விட உயர்ந்தான் என்று தெரிகிறதா ?

இன்னும் வரும்


இராமாயணம் - பரதன் - தவறான வழியில் வந்த செல்வம்

இராமாயணம் - பரதன் - தவறான  வழியில் வந்த செல்வம் 


தவறான வழியில் வரும் செல்வத்தை வெறுத்து ஒதுக்க வேண்டும். 

இன்று சிக்கல் என்ன என்றால் தவறு செய்ய யாருக்கும் கூச்சமோ தயக்கமோ இல்லை. மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் கொஞ்சம் இருக்கிறது. மத்தபடி தவறான வழியில் செல்வம் சேர்க்க நிறைய பேர் தயார்தான்.

ஓட்டுக்கு காசு என்றால் வாங்காதவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்துபவர்களை பார்க்கலாம். 

உழைக்காமல், இலவசமாக ஏதாவது கிடைக்கிறது என்றால் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் அதைப் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் நிற்கிறார்கள். 

தவறு செய்வதில் சுகமும் சுவையும் வந்து விட்டது. 

இலஞ்சம் கொடுப்பதும், பெறுவதும் ஒரு கலை என்றே ஆகி விட்டது இந்த நாட்டில். 

எப்படி சாமர்த்தியமாக கொடுப்பது, எப்படி மாட்டிக் கொள்ளாமல் வாங்குவதில்  போட்டி நிலவுகிறது. 

இதற்கு வேறு வேறு பெயர்கள் - அன்பளிப்பு, capitation fee , நன்கொடை ,lobby என்று. 

தனக்கு சொந்தமில்லாத ஒன்றை யார் கொடுத்தாலும், எப்படி கொடுத்தாலும் தொடக் கூடாது. 

அயோத்தியின் அரசாட்சி பொறுப்பை கைகேயி கேட்ட வரத்தால் தசரதன் பரதனுக்கு கொடுத்தான். 

அதை, பரதன் ஏற்றுக் கொண்டிருந்தால் யாரும் அவன் மேல் குறை காண முடியாது. 

தனக்கு சொந்தமில்லாத ஒன்றை யார் தந்தாலும் எடுத்துக் கொள்ளக் கூடாது அதை "தீ வினை" என்று ஒதுக்கி விட்டான் பரதன். நாம் என்றால் "தீ வினை" செய்வது போல அதை எடுத்துக் கொண்டிருப்போம். தீ வினையை யார் ஒதுக்கிறார்கள் ?

சற்று நேரம் யோசித்துப் பார்ப்போம். 

பதவி என்றால் ஏதோ சாதாரண பதவி இல்லை. சக்கரவர்த்தி பதவி. முடி சூடிக் கொண்டால், பரதனை எதிர்த்து யார் பேச முடியும். அளவற்ற செல்வத்துக்கு அதிபதி ஆகி இருக்கலாம். 

 பரதனுக்கு தகாத வழியில் வரும் செல்வத்தின் மேல் துளியும் ஆசை இல்லை. அதை வெறுத்தான்.

எல்லோரும் அப்படி இருந்தால், இந்த நாட்டில் கறுப்பு பணம் இருக்குமா, கொள்ளை, திருட்டு, இலஞ்சம், ஏமாற்று, பித்தலாட்டம், கோர்ட்டு, வாய்தா, வக்கீல் என்று இதெல்லாம் இருக்குமா ? தனக்கு சொந்தமில்லாத ஒன்றின் மேல் ஆசை வைக்காமல் இருக்கும் ஒரு நல்ல குணம் ஒன்று இருந்தால் எவ்வளவு  நன்மை என்று யோசித்துப் பாருங்கள்.


‘தாய் உரைகொண்டு தாதை உதவிய
     தரணிதன்னை,
‘‘தீவினை” என்ன நீத்து,
     சிந்தனை முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்!
     தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ,
     தெரியன் அம்மா!


பொருள்

‘தாய் உரைகொண்டு = தாயின் வரத்தினால்

தாதை உதவிய = தந்தை கொடுத்த

தரணி தன்னை,= இந்த உலகை

‘‘தீவினை” என்ன நீத்து = தீவினை என்று விலக்கி

சிந்தனை முகத்தில் தேக்கி = யோசனையை முகத்தில் தேக்கி

போயினை என்றபோழ்து, = சென்றாய் என்ற பொழுது

புகழினோய்! = புகழ் உடையவனே

தன்மை கண்டால், = உன் தன்மையைப் பார்த்தால்

ஆயிரம் இராமர்= ஆயிரம்  இராமர்கள்

நின் கேழ் ஆவரோ, = உனக்கு உவையாவரொ ?

தெரியன் அம்மா! = எனக்குத் தெரியவில்லை

மனத் தூய்மை என்றால் அது பரதன் தான் !

Thursday, August 20, 2015

இராமாயணம் - பரதன் - எண் இல் கோடி இராமர்கள் உனக்கு இணையா?

இராமாயணம் - பரதன் - எண் இல் கோடி இராமர்கள் உனக்கு இணையா?


பதினான்கு ஆண்டுகள் கழித்து வருவேன் என்று சொல்லிச் சென்றான் இராமன்.

பதினான்கு ஆண்டுகள் முடியப் போகிறது. கடைசி நாள். இராமன் வந்தபாடில்லை.

இராமன் வராததால் பரதன் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் விடுவேன் என்று கூறி தீயில் விழத் துணிகிறான்.

கோசலை ஓடி வருகிறாள்.

"நின்னும் நல்லன் என்றே" என்று இராமனைப் பார்த்து கூறிய கோசலை என்று பரதனைப் பார்த்துக்

"எண்ணிக்கையில் அடங்க முடியாத கோடிக் கணக்கான இராமர்களை ஒன்று சேர்த்தாலும், அண்ணல், உன் அருளுக்கு அருகில் கூட வர முடியாது. புண்ணியமே வடிவான உன் உயிர் பிரிந்தால் இந்த உலகில் ஒரு உயிரும் வாழாது "

என்று கூறினாள்


பாடல்

‘எண் இல் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?


பொருள் 

‘எண் இல் = எண்ணிக்கை இல்லாத, எண்ணிக்கையில் அடங்காத

கோடி இராமர்கள் என்னினும் = கோடி இராமர்கள் சேர்ந்தால் கூட

அண்ணல் = அண்ணலே

நின் அருளுக்கு = உன்னுடைய அருளுக்கு

அருகு ஆவரோ? = அருகில் வர முடியுமா ?

புண்ணியம் எனும் = புண்ணியமே வடிவனான

நின் உயிர் போயினால் = உன் உயிர் போய் விட்டால்

மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ? = மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ

பரதனின் அருளை நோக்கின்னால் அது ஆயிரம் இராமர்களின் அருளை விட அதிகமாக  இருக்கும் என்று இராமனைப் பெற்ற கோசலை கூறுகிறாள்.

பரதனால் நாடிழந்த இராமனின் தாய் கோசலை கூறுகிறாள் என்றால் அவன் அருள் அவ்வளவு  இருந்திருக்க வேண்டும்.

முதலில் இராமனுக்கு இணையாக இருந்தவன், பின் இராமனை விட நல்லவனாக மாறினான்  ("நின்னினும் நல்லன் "), பின் இராமனை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தான் ("ஆயிரம் இராமர் நின் கேழ்வர் ஆவரோ") பின் கோடி இராமனை விட உயர்ந்தான் (எண்ணில் கோடி இராமர்).

அப்படி அவன் என்னதான் செய்து விட்டான் ?

அவன் மனத்தால் உயர்ந்தான்.

மனம் உயர் வாழ்வு உயரும். வெள்ளத்தனையது மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்து அனையது  உயர்வு.

எப்படி பரதன் மனதால் உயர்ந்தான் என்று பார்ப்போம்.



Monday, August 17, 2015

திருவாசகம் - நீ செய்தது சரிதான்

திருவாசகம் - நீ செய்தது சரிதான் 


நமக்கு வாழ்க்கையில் எவ்வளவோ நல்லவை கிடைதிருகின்றன.

நல்ல நாடு - போர் இல்லாத நாடு, மக்களாட்சி உள்ள நாடு, அதிகம் இல்லாவிட்டாலும் போதுமான அடிப்படை வசதிகள் உள்ள நாடு...

நல்ல பெற்றோர், பிள்ளைகள், கணவன் அல்லது மனைவி, அருமையான பிள்ளைகள், சுகமான சூழ்நிலை, நல்ல படிப்பு, தகுதிக்கு தக்க வேலை என்று எவ்வளவோ நல்லது நமக்கு கிடைத்திருக்கிறது.

இவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்கிறோம் ? என்ன சாதித்து இருக்கிறோம்.

உண்பதும், உடுத்துவதும், சில பல இன்பங்களை தூய்பதுமாய் வாழ்நாள் கழிந்து கொண்டிருகிறது.

மாணிக்க வாசகர் உருகுகிறார்.....

எனக்கு என்னவெல்லாம் நடந்ததோ, அது எனக்கு வேண்டியதுதான். நான் மீண்டும் பிறந்தது, சரிதான்.  கிடைத்தற்கரிய இந்த பிறவி கிடைத்த பின்னும், என்ன செய்து கொண்டிருக்கிறேன் ? பெண்ணின் துடிக்கும் உதடுகளையும், அவளின் நெகிழ்ந்து விலகிக் கிடக்கும் உடைகளையும், அவள் முகத்தில் துளிர்க்கும் வியர்வைத் துளிகளையும் பார்த்து இரசித்துக் கொண்டு என் காலத்தை போக்கிக் கொண்டிருக்கிறேன்....எனக்கு நல்லது எங்கே நடக்கப் போகிறது.

என்னை விட்டுவிட்டு, உன் அடியார்களுக்கு நீ அருள் தந்தாய், அதுவும் சரிதான்.

 பாடல்

முடித்தவாறும் என்றனக்கே தக்கதே, முன் அடியாரைப்
பிடித்தவாறும் சோராமல் சோரனேன் இங்கு ஒருத்தி வாய்
துடித்தவாறும் துகில் இறையே சோர்ந்தவாறும் முகம் குறுவேர்
பொடித்தவாறும் இவை உணர்ந்து கேடு என்றனக்கே சூழ்ந்தேனே!

 பொருள்

தக்கதே என்ற சொல்லை

"முடித்தவாறும் என்றனக்கே"

"முன் அடியாரைப் பிடித்தவாறும்"

என்ற இரண்டு தொடர்களுக்கும் பின்னால் சேர்த்து

முடித்தவாறும் என்றனக்கே  தக்கதே என்றும்

முன் அடியாரைப் பிடித்தவாறும் தக்கதே என்றும் படிக்க வேண்டும்.

முடித்தவாறும் என்றனக்கே = எனக்கு என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று நீ நினைத்து முடித்து வைத்தாயோ

தக்கதே = அது சரியானதுதான்

முன் அடியாரைப் = முன்னால் அடியவர்களை

பிடித்தவாறும் = நீ சென்று பிடித்தவாறும் (தக்கதே)

சோராமல் = சோர்வில்லாமல், விடாமல்

சோரனேன் = சோரம் போன நான், கெட்டவனான நான்

இங்கு = இங்கு

ஒருத்தி = ஒருத்தி

வாய் துடித்தவாறும் = உதடுகள் துடிப்பதையும்

துகில் = உடை

இறையே = இரைந்து கிடப்பதும் (சிதறி கிடப்பதும்)

சோர்ந்தவாறும் = நெகிழ்ந்து (சோர்ந்து) கிடப்பதையும்

முகம் = முகத்தில்

குறுவேர் = சின்ன சின்ன வேர்வை

பொடித்தவாறும் = பொடிப் பொடியாக துளிர்பதையும்

இவை உணர்ந்து = இவற்றை உணர்ந்து

கேடு என்றனக்கே சூழ்ந்தேனே! = எனக்கு கேடே சூழ்ந்தது

சிற்றின்பத்தை மணிவாசகர் சொன்ன மாதிரி யார் சொன்னார்கள் !




Saturday, August 15, 2015

இராமாயணம் - ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ ? - பரதன் 3

இராமாயணம் - ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ ? - பரதன் 3 


நின்னும் நல்லன் என்று கோசலை , இராமனிடம், பரதனைப் பற்றிச் சொன்னதை முந்தைய ப்ளாகில் பார்த்தோம்.

கோசலை பரதனின் பெரியம்மா. அவள் அப்படி பாராட்டியது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை நாம் நினைக்கலாம்.

பரதனை முன் பின் பார்த்திராத குகன் சொல்லுகிறான் "தாயின் வரத்தினால் தந்தை வழங்கிய உலகை "தீ வினை" என்று விலக்கி , நீ இங்கு வந்த தன்மை நோக்கினால், ஆயிரம் இராமர்களை சேர்த்தாலும் உன்னோடு ஒப்பிட முடியாது "

பாடல்

‘தாய் உரைகொண்டு தாதை உதவிய
     தரணிதன்னை,
‘‘தீவினை” என்ன நீத்து,
     சிந்தனை முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்!
     தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ,
     தெரியன் அம்மா!

பொருள்

‘தாய் உரைகொண்டு = தாயின் வரத்தினால்

தாதை உதவிய = தந்தை கொடுத்த

தரணி தன்னை,= இந்த உலகை

‘‘தீவினை” என்ன நீத்து = தீவினை என்று விலக்கி

சிந்தனை முகத்தில் தேக்கி = யோசனையை முகத்தில் தேக்கி

போயினை என்றபோழ்து, = சென்றாய் என்ற பொழுது

புகழினோய்! = புகழ் உடையவனே

தன்மை கண்டால், = உன் தன்மையைப் பார்த்தால்

ஆயிரம் இராமர்= ஆயிரம்  இராமர்கள்

நின் கேழ் ஆவரோ, = உனக்கு உவையாவரொ ?

 தெரியன் அம்மா! = எனக்குத் தெரியவில்லை

இதில் குகன் என்ன சிறப்பை கண்டு விட்டான் ? தனக்கு உரிமை இல்லாத ஒன்றை உரியவனிடம் ஒப்படைப்பது என்ன அவ்வளவு பெரிய நல்ல குணமா ?

அது பெரிய குணம், ஆயிரம் இராமர்கள் அந்த குணத்திற்கு ஈடாக மாட்டார்கள் என்று   சொன்னால், அது ஏதோ இராமனை குறைத்து மதிப்பீடு செய்வது போல உள்ளது அல்லவா ?

பரதனில் அப்படி என்ன சிறப்பு ?

பார்ப்போம்


Friday, August 14, 2015

இராமாயணம் - நின்னும் நல்லன் - பரதன் 2

இராமாயணம் - நின்னும் நல்லன் - பரதன் 2


கைகேயின் சூழ்ச்சியால், பரதனுக்கு பட்டம் என்றும் இராமனுக்கு கானகம் என்றும் தசரதன் வரம் தந்து விடுகிறான்.

இதை, தாய் கோசலையிடம் வந்து இராமன் சொல்கிறான்.

அதைக் கேட்ட கோசலை கூறுகிறாள்

"மூத்தவன் இருக்க இளையவனுக்கு முடி சூட்டுவது என்பது ஒரு சரியான முறை இல்லை. அதை விட்டு விட்டுப் பார்த்தால், பரதன்  நிறைந்த குண நலன்கள் உடையவன்.  இராமா, உன்னை விட நல்லவன் "


அப்படி கூறியவள் யார் ?

நான்கு பிள்ளைகளிடமும் குற்றம் இல்லாத அன்பை செலுத்தும் கோசலை.

அப்படி சொன்னதின் மூலம், அவர்களுக்குள் உள்ள வேற்றுமையை மாற்றினாள் என்கிறான் கம்பன்.

பாடல்

‘முறைமை அன்று என்பது ஒன்று
     உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்;
     நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்’ எனக்
     கூறினள் - நால்வர்க்கும்
மறு இல் அன்பினில்,
     வேற்றுமை மாற்றினாள்.

பொருள்

‘முறைமை அன்று = சரியான அரச தர்மம் இல்லை

என்பது = என்ற

ஒன்று உண்டு = ஒரு சிக்கல் இருக்கிறது

மும்மையின் நிறை குணத்தவன் = மூன்று மடங்கு உயர்ந்த குணம் உள்ளவன்; அல்லது மூன்று பேரை விட உயர்ந்த குணம் உள்ளவன்

நின்னினும் நல்லனால் = உன்னை விட நல்லவன்

குறைவு இலன்’ = ஒரு குறையும் இல்லாதவன்

எனக்      கூறினள் = என்று கூறினாள்

நால்வர்க்கும் =நான்கு பிள்ளைகளிடமும்

மறு இல் அன்பினில்  = குற்றம் இல்லாத அன்பினால்

வேற்றுமை மாற்றினாள். = அவர்களுக்குள் இருந்த வேற்றுமையை மாற்றினாள்

இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன.

நம் வீட்டில் சில சமயம், நம் பிள்ளைகள் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று சோர்ந்து வரலாம், விளையாட்டில் அல்லது வேறு ஏதாவது போட்டியில் பங்கெடுத்து பரிசு எதுவும் பெறாமல் வரலாம், நமக்கு மிகுந்த எதிர்பார்ப்பு  இருந்திருக்கும். அவர்களும் ஆசையோடு இருந்திருப்பார்கள். ஆனால், நினைத்தது நடக்கவில்லை.

மதிப்பெண் cut off வை விட குறைவாக வந்திருக்கும்.

பொதுவாக என்ன நடக்கும் "நான் அப்பவே சொன்னேன், எங்க ஒழுங்கா படிக்கிற? எந்நேரமும் tv , இல்லேனா cell phone" என்று பிள்ளைகளை குறை கூறுவோம்.

"நீ ஒண்ணுக்கும் லாயக்கு இல்லை, மாடு மேய்க்கத் தான் லாயக்கு " என்று திட்டுவதும் சில வீடுகளில் நிகழ்வது உண்டு.

நினைத்தது நடக்காமல் பிள்ளை சோர்ந்து வரும்போது, ஒரு தாய் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கோசலை பாடம் நடத்துகிறாள் ....

இந்த பாடல் நிகழ்ந்த சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள்.

சகரவர்தியாக முடி சூட்டப் போனவன், அது இல்லை என்று வந்து நிற்கிறான். அது மட்டும் அல்ல, 14 ஆண்டுகள் கானகம் வேறு போக வேண்டும் என்று கட்டளை வேறு.

கோசலை என்ன சொல்லுகிறாள்...

"பரவாயில்லடா....அரச முறை என்று ஒன்று உள்ளது, அதைத் தவிர்த்துப் பார்த்தாள் பரதன் உன்னை விட நல்லவன் அரசை அவனுக்கே தரலாம் " என்று இராமனை தேறுதல் செய்கிறாள்.

பிள்ளைகள் தோல்வி அடைந்து வந்தால் திட்டாதீர்கள்.அவர்களுக்கு தேறுதல் சொல்லுங்கள். வாழ்கை மிக நீண்டது. ஒரு தோல்வி வாழ்வை தீர்மானித்து விடாது.

அடுத்தது,

பரதன் இதுவரை சாதித்தது என்ன  ? ஒன்றும் இல்லை.

இருந்தும் கோசலை சொல்கிறாள் "நின்னினும் நல்லன்" என்று. பரதன்  இராமனை விட   உயர்ந்து நிற்கிறான்.

எப்படி அவன் உயர்ந்தான் ?

பார்ப்போம்...



Wednesday, August 12, 2015

இராமாயணம் - பரதன் பிறந்த போது

இராமாயணம் - பரதன் பிறந்த போது 


இராமன், இலக்குவன் , பரதன் மற்றும் சத்ருகன் பிறந்த போது அவர்களுக்கு பெயர் வைத்தவன் வசிட்டன்.

மற்றவர்களுக்கு அவன் பெயர்  வைத்ததை விட்டு விடுவோம்.

பரதனுக்கு அவன் பெயர்  இட்டதை பாப்போம்.

பாடல்

கரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறைப் பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன். உதித்திடு மற்றைய ஒளியை.
‘பரதன்’ எனப் பெயர் பன்னினன் அன்றே.

பொருள் 

கரதலம் உற்று = கரம் என்ற தலத்தில் (கையில்) உள்ள

ஒளிர் நெல்லி கடுப்ப = நெல்லிக் கனியைப் போல

விரத = விரதம் பூண்டு

மறைப் பொருள் = வேதங்களின் பொருள்

மெய்ந்நெறி = உண்மையான வழியை

கண்ட = கண்ட

வரதன் = வரதன் (வசிட்டன்)

உதித்திடு மற்றைய ஒளியை. = தோன்றிய இன்னொரு ஒளியை. முதல் ஒளி இராமன். இன்னொரு ஒளி பரதன்.

‘பரதன்’ எனப் பெயர் பன்னினன் அன்றே = பரதன் என்று பெயர் தந்தான்.

இது பரதன் பிறந்த போது உள்ள நிலை. எல்லா குழந்தைகளுக்கும் பெயர் தந்தாயிற்று.

இனி, பரதன் எப்படி உயர்கிறான் என்று பார்ப்போம்.


Monday, August 10, 2015

இராமாயணம் - வாழ்வில் முன்னேற

இராமாயணம் - வாழ்வில் முன்னேற 


வாழ்வில் முன்னேற வேண்டும் என்று விரும்பாதார் யார் ? எல்லோரும் முன்னேறுவதையே விரும்புவார்கள்.

ஆனால், எப்படி முன்னேறுவது ?

கடின உழைப்பு, இறைவன் அருள், ஆன்றோர் ஆசீர்வாதம், பெற்றவர் மற்றும் உற்றாரின் அரவணைப்பு, நண்பர்களின் அரவணைப்பு அப்புறம் கொஞ்சம் அதிர்ஷ்டம் அல்லது விதி  இதெல்லாம் வேண்டும் அல்லவா வாழ்வில் உயர ?

இல்லை. இது எதுவும் வேண்டாம் என்கிறார் வள்ளுவர்.

வாழ்வில் உயர இவை அல்ல வேண்டுவது.

என்னது ? உழைப்பும், நேர்மையும், கடவுள் கிருபையும், பெரியவர்களின் ஆசியும் இல்லாமல் வாழ்வில் முன்னேற முடியுமா ?

இதை எல்லாம் விட வேறு ஒன்று நாம் வாழ்வில் உயர வழி செய்யுமா ? அது என்ன ?

வெள்ளத்து அனையது மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு

என்கிறார் வள்ளுவர்.

நீர் நிலையின் மேல் தாமரை மிதக்கும். அந்த தாமரை மலரை கொஞ்சம் உயரச் செய்ய என்ன செய்ய வேண்டும் ?

கொஞ்சம் பிடித்து இழுக்கலாமா (உழைப்பு )
பூஜை செய்யலாமா (கடவுள் அருள் )

என்ன செய்தாலும் உயராது. அந்த நீர் நிலையில் உள்ள நீரின் மட்டம் உயர்ந்தால் தாமரை தானே உயரும்.

அது போல, நாம் வாழ்வில் உயர வேண்டும் என்றால், நம் மனம் உயர வேண்டும்.

மனம் உயராமல், வாழ்வில் உயரவே முடியாது. மனம் உயர்ந்தால் வாழ்வில் உயரலாம்.

அது எல்லாம் கேக்க நல்லா இருக்கு. அப்படி மனம் உயர்ந்ததால் வாழ்வில் உயர்ந்தவர்கள்  யாராவது இருக்கிறார்களா ? ஒரு உதாரணம் காட்ட முடியுமா ?

காட்ட முடியும்.

இராமாயணத்தில், இராமன் ரொம்ப கஷ்டப் பட்டான், சண்டை போட்டான், தந்தை பேச்சை கேட்டு நல்ல பிள்ளையாக கானகம் போனான், அரக்கர்களை அழித்தான்.

அவனுக்கு எப்போதும் துணையாக இருந்தான் இலக்குவன். இரவு பகல் பாராமல்   பணிவிடை செய்தான்.

அந்த இராமனை விட, அவ்வளவு தொண்டு செய்த இலக்குவனை விட ஒன்றுமே செய்யாத பரதன் உயர்ந்தான்.

எப்படி ?

பரதன் ஏதேனும் சண்டை போட்டானா ? இல்லை.

பெற்றோரை மதித்தானா ? இல்லை. பெற்ற தாயை பேய் என்று இகழ்ந்தான்.

இராமனுக்கு அல்லும் பகலும் பணிவிடை செய்தானா ? இல்லை.

பின் எப்படி அவன் உயர்ந்தான் ?

அவன் உயர்ந்தான் என்பதற்கு என்ன சான்று இருக்கிறது ?

பரதனைப் பற்றி நாம் விரிவாகப் பார்ப்போம்.

பரதன் பிறந்தவுடன் அவனுக்கு பெயர் இடுகிறார் வசிட்டர் ....



கரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறைப் பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன். உதித்திடு மற்றைய ஒளியை.
‘பரதன்’ எனப் பெயர் பன்னினன் அன்றே.

பொருள் - அடுத்த ப்ளாகில்


இராமாயணம் - உன் பிள்ளைக்கு வரும் நல்லததைத் தடுக்காதே

இராமாயணம் - உன் பிள்ளைக்கு வரும் நல்லததைத் தடுக்காதே 


என் வேள்வியைக் காக்க உன் மகன் இராமனை எனக்கு துணையாக அனுப்பு என்று விசுவாமித்திரன் தசரதனிடம் கேட்டான்.

"அவன் சின்னப் பிள்ளை, போர் தந்திரங்கள் அறியாதவன், நானே வருகிறேன்" என்றான் தசரதன்.

நம் வாழ்விலும் இந்த மாதிரி சந்தர்பங்கள் வரும். பிள்ளையை வெளி நாடு அனுப்பி படிக்க வைக்க வேண்டும், பெண்ணை அயல் நாட்டில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற சிக்கல்கள் வரும் போது நாம் பயப்படுவோம். என்னத்துக்கு risk என்று உள்ளூரிலேயே ஒரு கல்லூரியிலேயோ, அல்லது ஒரு வரனையோ பார்த்து முடித்து விடுவோம்.

மற்றவர்களிடம் யோசனை கேட்கலாம். ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்வார்கள். அதில் எவன் நல்லவன், எவன் , நாம் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கட்டும் என்று நினைப்பவன் என்று தெரியாது.

எனவே தான்,  அந்தக் காலத்தில் மன்னர்கள் கற்ற துறவிகளை எப்போதும் அருகில் வைத்து இருந்தார்கள். மன்னர்கள் கேட்காத போதும் அவர்கள் நல்லதையே எடுத்துச் சொன்னார்கள்.

விச்வாமித்ரரை பார்த்து வசிட்டன் சொன்னான் "நீ இதை பொறுத்துக் கொள்" . தசரதன் பிள்ளைப் பாசத்தில் ஏதோ சொல்கிறான். நீ இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதே. கொஞ்சம் பொறுமையாக இரு என்று சொல்லி விட்டு.

தசரதனைப் பார்த்து , "உன் மகனுக்கு அளவிட முடியாத நன்மைகள் வரப் போகிறது. அதை ஏன் நீ தடுக்கிறாய் " என்று கூறினான்.


பாடல்


கறுத்த மா முனி கருத்தை உன்னி ‘நீ
பொறுத்தி’ என்று அவன் புகன்று ‘நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ? ‘எனா வசிட்டன் கூறினான்.

பொருள்

கறுத்த மா முனி = கோபத்தால் முகம் கறுத்த விஸ்வாமித்திரனின்

கருத்தை உன்னி  = கருத்தை எண்ணி

‘நீ பொறுத்தி’ என்று அவன் புகன்று = நீ இதை பொறுத்துக் கொள்வாயாக என்று கூறி

‘நின் மகற்கு = உன் மகனுக்கு

உறுத்தல் ஆகலா = எல்லை அற்ற

உறுதி = நன்மைகள்

எய்தும் நாள் = அடையும் நாள்

மறுத்தியோ?  = மறுப்பாயா ?

‘எனா வசிட்டன் கூறினான். = என்று வசிட்டன் கூறினான்

வசிட்டன் போல படித்த, உங்கள் நலனில் அக்கறை உள்ள எத்தனை பேர் உங்களுக்கு  அறிவுரை சொல்லும் இடத்தில் இருக்கிறார்கள் ?

அப்படி நீங்கள் எத்தனை பேருக்கு இருக்கிறீர்கள் ?


படித்த நல்லவர்களை எப்போதும் உடன் வைத்து இருங்கள். அதற்கு இணையான செல்வம்  எதுவும் கிடையாது. 

பின்னாளில் , இராமன் முடி சூட்டும் நாள் குறித்த பின், வசிட்டன் சில புத்திமதிகளை  இராமனுக்குச் சொல்வான். அதில் முதல் அறிவுரை "படித்த நல்லவர்களை  உடன் வைத்துக் கொள்" என்பதுதான். 

இன்று வரை இல்லாவிட்டாலும், இனியேனும் கண்டு பிடியுங்கள்.

அப்படி ஒருவராக நீங்களும் இருக்க முயற்சி செய்யுங்கள். 


Tuesday, August 4, 2015

கம்ப இராமாயணம் - இடையூருக்கு இடையூறு

கம்ப இராமாயணம் - இடையூருக்கு இடையூறு

நான் செய்யும் வேள்வியைக் காக்க இராமனை துணைக்கு அனுப்பு என்று விஸ்வாமித்திரன் தசரதனிடம் கேட்கிறான்.

இராமனை விட்டு பிரிய மனம் இல்லாமல் தசரதன் மிகுந்த துன்பப்பட்டு சொல்கிறான்

"முனிவரே, இராமன் சின்னப் பிள்ளை. அவனுக்குப் போர் பயிற்சி எல்லாம் கிடையாது. உங்களுக்கு என்ன நல்ல துணை வேண்டும் அவ்வளவு தானே ? நான் வருகிறேன். புறப்படுங்கள். உங்கள் வேள்விக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் யார் தடையாக வந்தாலும் நான் அவர்களுக்குத் தடையாக நின்று உங்கள் வேள்வியை காப்பேன் ...வாருங்கள் போவோம்"

பாடல்

தொடை ஊற்றில் தேன் துளிக்கும் நறும்
    தாரான் ஒரு வண்ணம் துயரம் நீங்கிப்
‘படையூற்றம் இலன்; சிறியன் இவன்; பெரியோய்!
    பணி இதுவேல், பனி நீர்க் கங்கை
புடை ஊற்றும் சடையானும் நான்முகனும்
    புரந்தரனும் புகுந்து செய்யும்
இடையூற்றுக்கு இடையூறு ஆ, யான் காப்பென்
    பெரு வேள்விக்கு எழுக ‘என்றான்.


பொருள் 

தொடை = தேன் அடை அல்லது தேன் கூடு

ஊற்றில் = ஊற்றுப் போல்

தேன் துளிக்கும் = தேன் சிதறும்

நறும் = நறுமணம் மிக்க

தாரான் = மாலை அணிந்தவன் (தார் என்றால் மாலை )

ஒரு வண்ணம் துயரம் நீங்கிப் = ஒரு வழியாக துயர் நீங்கி

‘படையூற்றம் இலன்;= படை நடத்தும் அனுபவம் இல்லாதவன்

சிறியன் இவன் = சின்னப் பையன்

 பெரியோய்! = பெரியவரே (விச்வாமித்ரரே)

பணி இதுவேல், = வேலை இதுதான் என்றால் (யாகத்தை காப்பது தான் பணி என்றால்)

பனி நீர்க் கங்கை = சில்லென்று நீரை கொண்ட கங்கை

புடை ஊற்றும் சடையானும்= நான்கு புறமும் தெறிக்கும் சடை கொண்ட சிவனும்

நான்முகனும் = பிரமாவும்

புரந்தரனும் = உலகைக் காக்கும் திருமாலும்

புகுந்து செய்யும் = இடையில் புகுந்து  செய்யும்

இடையூற்றுக்கு இடையூறு ஆ, = இடையூறுகளுக்கு இடையூறாக

யான் காப்பென் = நான் காவல் செய்வேன்

பெரு வேள்விக்கு எழுக ‘என்றான். = பெரிய வேள்வி செய்ய புறப்படுங்கள் என்றான்.

இது பாட்டும், அதன் அர்த்தமும்.

அதில் பொதிந்துள்ள செய்தி என்ன ?

நம் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து இருக்கும். ஆனால், அந்த கல்லூரி நாம் இருக்கும் இடத்தை விட்டு ரொம்ப தள்ளி இருக்கும் . ஏன், வெளி நாட்டிலே கூட இருக்கலாம்.

"இந்த சின்ன பிள்ளை அங்க போய் எப்படி சமாளிக்குமோ, பேசாம அக்கம் பக்கத்தில்  ஏதாவது நல்ல கல்லூரியில் சேர்ப்போம் " என்று நாம் நினைக்கலாம். அப்படி நினைத்து, பிள்ளைகளின் எதிர் காலத்தை நாம் பாழடித்து விடக் கூடாது.

அதே போல, பெண்ணுக்கு ஒரு நல்ல தரம் வந்திருக்கும். மாப்பிள்ளை அயல்நாட்டில் வேலை  பார்ப்பவராய் இருப்பார். எதுக்கு அவ்வளவு தூரத்தில் போய்  பெண்ணைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து உள்ளூரில் ஏதோ ஒரு வேலையில் உள்ள பையனுக்கு கட்டி கொடுத்து அந்த பெண்ணின் வாழ்வின்  முன்னேற்றத்திற்கு நாமே தடைக் கல்லாக இருந்து விடக் கூடாது.

Hostel இல் போய் என் பெண்ணோ பிள்ளையோ எப்படி இருப்பார்கள் ? அவர்களுக்கு பழக்கமே இல்லையே என்று நாம் பாசத்தில் தவிப்போம். "அப்படி ஒண்ணும் என் பிள்ளை கஷ்டப் பட வேண்டாம், ...இதோ உள்ளூரிலேயே நல்ல  கல்லூரி இருக்கிறது " என்று ஏதோ ஒரு கல்லூரியில் சேர்த்து  விடும் பெற்றோர்கள் நிறைய பேர் உண்டு.


பாசம் கண்ணை மறைக்கக் கூடாது.

அப்பேற்பட்ட இராமனை பற்றி தசரதன் என்ன நினைக்கிறான் ?

சின்னப் பையன், படை நடத்தும் அனுபவம் இல்லாதவன்....அவனை அனுப்பக் கூடாது என்று நினைக்கிறான்.

அப்படி அவன் அனுப்பாமல் இருந்திருந்தால், என்ன ஆகி இருக்கும் ? யோசித்துப் பாருங்கள்.

நாம் நம் பிள்ளைகளை குறைவாக மதிப்பிடுகிறோம். அவர்களின் திறமை, சாமர்த்தியம்  எல்லாவற்றையும் குறைத்து மதிப்பிட்டு நாமே அவர்களின் வளர்ச்சிக்கு  தடையாக இருந்து விடுகிறோம்.

அப்படி இருக்கக் கூடாது என்று சொல்கிறது இந்தப் பாடல்.

பிள்ளைகளை வேலை செய்ய விட வேண்டும். பாவம், அவனுக்கு என்ன தெரியும், சின்ன பிள்ளை என்று பொத்தி பொத்தி வளர்க்கக் கூடாது. தசரதன் சொல்கிறான், "அவன் விட்டு விடுங்கள்...நான் வருகிறேன் " என்று.

நாம் செய்வது இல்லையா.

கொஞ்சம் எச்சரிக்கை உணர்வை தளர்த்தி, கொஞ்சம் பாசத்தை குறைத்து, குழந்தைகளை, சவால்களை எதிர் கொள்ள அனுப்புங்கள். நீங்கள் நினைப்பதை விட  உங்கள் குழந்தைகள் அதிகமாகவே செய்வார்கள்.

சரி, இப்படி ஒரு குழப்பம் வரும்போது என்ன செய்யவேண்டும்.

அயல் நாட்டுக்கு பெண்ணையோ பிள்ளையையோ அனுப்ப முடியாமல் தவிக்கும் போது என்ன செய்ய வேண்டும் ?


தசரதன் என்ன செய்தான் ? 

அதை அடுத்த ப்ளாகில் பார்ப்போம். 


Monday, August 3, 2015

கம்ப இராமாயணம் - மகனின் பிரிவு

கம்ப இராமாயணம் - மகனின் பிரிவு 


பிரிவு என்றுமே சோகத்தைத்தான் தருகிறது.

பிரிவு வரும் என்று தெரிந்தாலும், அது வரும்போது மனதை ஏனோ பிசையத்தான் செய்கிறது.

இராமனை தருவாய் என்று தசரதனிடம் கேட்கிறான் விஸ்வாமித்திரன்.

துடித்துப் போகிறான் தசரதன். அவன் வலியை கம்பன் பாட்டில் வடிக்கிறான்.

மார்பில் வேல் பாய்ந்து புண்ணாகி இருக்கிறது. அந்த புண்ணில் தீயை வைத்து சுட்டால் எப்படி இருக்குமோ அப்படி துன்பப் பட்டான் தசரதன்.

விச்வாமித்ரனின் அந்த சொல்லைக் கேட்டு தசரதனின் உயிர் அவன் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் போவதும் வருவதுமாக இருக்கிறது. உயிர் ஊசலாடியது.

கண் இல்லாதவன் , கண்ணைப் பெற்று பின் அதை இழந்தால் எப்படி இருக்குமோ அது போல பிள்ளை இல்லாமல் பின் இராமனைப் பெற்று இப்போது அவனை இழப்பது அப்படி இருந்தது தசரதனுக்கு.


பாடல்

எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல்
   மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தா
   லெனச் செவியில் புகுதலோடும்.
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த.
   ஆர் உயிர் நின்று ஊசலாட.
‘கண் இலான் பெற்று இழந்தான்’ என உழந்தான்
   கடுந் துயரம் - கால வேலான்.


பொருள்

எண் இலா  = எண்ணிக்கை இல்லாத

அருந் தவத்தோன் = அரிய தவங்களைச் செய்த (விஸ்வாமித்திரன்)

இயம்பிய சொல் = "இராமனைத் தா"என்று சொல்லிய சொல்

மருமத்தின் = மார்பில்

எறி வேல் பாய்ந்த புண்ணில் ஆம் = எறிந்த வேல் பாய்ந்த புண்ணில்

பெரும் புழையில் = பெரிய துவாரத்தில்

கனல் நுழைந்தாலெனச் = தீயை வைத்து சுட்டதைப் போல


செவியில் புகுதலோடும். = காதில் நுழைந்தது. அது மட்டும் அல்ல

உள் நிலாவிய துயரம் = உள்ளத்தில் இருந்த துயரம்

பிடித்து உந்த.= பிடித்துத் தள்ள

ஆர் உயிர் நின்று ஊசலாட = அருமையான உயிர் நின்று ஊசலாட
.
‘கண் இலான் பெற்று இழந்தான்’ என உழந்தான் = கண் இல்லாதவன் , அதைப் பெற்று பின் இழந்தவனைப் போல துன்பப்பட்டான்

கடுந் துயரம் = கடுமையான துயரத்தில்

கால வேலான். = எதிரிகளுக்கு காலனைப் போல உள்ள அவன்.

மகனை , முனிவரோடு அனுப்ப இப்படி கிடந்து சங்கடப் படுகிறானே இவன் ஒரு  கோழையோ என்று தோன்றலாம். இல்லை, அவன் மிகப் பெரிய வீரன் என்று  கட்டுகிறான் கம்பன். எதிரிகளுக்கு காலனைப் போன்றவன் அவன்.

என்றோ ஒரு நாள் இராமன் தன்னை விட்டுப் போகப் போகிறான் என்று தசரந்தனுகுத் தெரியும் . சிரவணன் என்ற அந்தணச் சிறுவனை அறியாமல் கொன்று, அதன் மூலம் சிரவணனின் பெற்றோர் தசரதனுக்கு ஒரு சாபம் இட்டார்கள்   " நாங்கள் எப்படி புத்திர சோகத்தில் இறக்கிறோமோ , நீயும் அப்படியே இறப்பாய் " என்று சாபம் இட்டு விடுகிறார்கள்.

அந்த சோகம் தசரதனின் உள்ளத்தில் நின்று உலாவியது.