Thursday, November 30, 2023

திருக்குறள் - என்ன செய்தாலும் புகழ மாட்டேன் என்கிறார்களே..

 திருக்குறள் -  என்ன செய்தாலும் புகழ மாட்டேன் என்கிறார்களே..


என்ன செய்தாலும், பாராட்டி ஒரு வார்த்தை கிடையாது. என்ன செய்தாலும், அதில் ஏதாவது ஒரு குறை கண்டு பிடித்து, நம்மை குறை சொல்வதையே எல்லோரும் வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி இதுதான் வழக்கமாக இருக்கிறது. இதில் எங்கிருந்து புகழ் பெறுவது. 


ஒருவருக்கும் பாராட்டும் மனம் இல்லை. இவர்கள் மத்தியில் புகழ் பெறுவது என்பது நடவாத காரியம்....


இது எல்லோருக்கும் நடப்பதுதான். செஞ்சு செஞ்சு அலுத்துப் போய், புகழும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று விட்டு விடத் தோன்றும். 


வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 


பாடல் 


புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_30.html


(please click the above link to continue reading)


புகழ்பட = புகழ் கிடைக்கும்படி 


வாழாதார் = வாழ்க்கையை நடத்தாதவர்கள் 


தம்நோவார் தம்மை = தன்னைத் தான் நொந்து கொள்ளாமல் 


இகழ்வாரை  = தம்மை இகழ்பவர்களை 


நோவது எவன் = குறை சொல்வது எதனால் ?


நீ புகழ் அடையாமல் இருப்பதற்கு காரணம் நீ தான், இதற்கு எதற்கு மற்றவர்களை குறை சொல்கிறாய் என்று வள்ளுவர் கேட்கிறார். 


ஏன் மற்றவர்கள நம்மை குறை சொல்லப் போகிறார்கள்?  அவர்களுக்கு வேறு வேலை இல்லையா என்றால், அதற்கு பரிமேலழகர் பதில் தருகிறார். 


புகழ் அடைய ஆயிரம் வழிகள் இருக்கிறது. அப்படி இருக்க, ஒன்றையும் செய்யாமல், புகழ் இல்லாமல் வாழ்பவனை உலகம் ஏசத்தான் செய்யும். 


முயன்றால் எந்த வழியிலும் புகழ் அடையலாம். 


புகழ் என்றால் ஏதோ ஜனாதிபதி கையால் பரிசு வாங்க வேண்டும், மெடல் வாங்க வேண்டும் என்று இல்லை. 


வகுப்பில் முதலாவதாக வருவதும் புகழ்தான். 


அட, இன்னைக்கு காப்பி சூப்பர் என்று பாராட்டு பெறுவதும் புகழ்தான்.


அவங்க வீட்டுக்குப் போய் இருந்தேன். வீட்டை என்னமா அழகா வச்சிருக்கு அந்த பொண்ணு...என்று சொல்லப் படுவதும் புகழ்தான். 


குப்பை போல வீடு, எப்பவும் போல ஒரே மாதிரி சாப்பாடு, ஏதோ படித்தோம், தேர்ச்சி பெற்றோம் என்று படிப்பு என்று இருந்தால், உலகம் இகழத்தானே செய்யும். 


அதற்கு காரணம் யார்? அவர்கள் இல்லை, நாம் தான். 


எதையும், சிறப்பாகச் செய்ய வேண்டும், மற்றவர்கள் புகழும்படி செய்ய வேண்டும், நல்ல பேர் எடுக்க வேண்டும். 


ஆங்கிலத்தில் "your job is not done until you get the wow effect" என்று. 


சமையல் செய்வது ஒரு கலை என்றால் அதை பரிமாறுவதும் ஒரு கலைதான். பொரியல் நன்றாக இருக்கிறது என்று அதைச் செய்த இருப்புச் சட்டியோடு கொண்டு வந்து பரிமாறினால் எப்படி இருக்கும்?  அதை இன்னொரு அழக்கான பாத்திரத்தில், கொஞ்சமாக எடுத்து, அதற்கு என்று ஒரு தனிக் கரண்டி போட்டு, பரிமாறினால் அழகாக இருக்கும் அல்லவா. 


நல்ல துணி என்றாலும், அழுக்காக, சுருக்கம் சுருக்கமாக அதை அணிந்து கொண்டால் எப்படி இருக்கும்?  


எதையும், நேர்த்தியாக, அழுகுபட செய்தால், புகழ் கிடைக்கும். அது நம் கையில் தான் இருக்கிறது. 


வள்ளுவரும், பரிமேலழகரும் இவ்வளவு மெனக்கெட்டதை, ஔவை கிழவி  மூன்றே வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய் விட்டாள். 


"செய்வன திருந்தச் செய் "



அவ்வளவுதான். 


முயல்வோம்.


Wednesday, November 29, 2023

நாலடியார் - வயதான காலத்தில்

 நாலடியார் - வயதான காலத்தில் 


ஒருவன் அல்லது ஒருத்தி எவ்வளவு பாடுபட்டு உழைத்து கணவன்/மனைவி/பெற்றோர், பிள்ளைகள், உறவு, நட்பு என்று எல்லோரையும் அரவணைத்துச் சென்றாலும், வயதான காலத்தில், அவர்களுக்கு மதிப்பு குறைவது என்பது இயல்பு. 


"கிழத்துக்கு வேற வேலை இல்லை, எதையாவது பிதற்றிக் கொண்டே இருக்கும்"


"காதும் கேக்குறது இல்ல, சும்மா இருன்னு சொன்னாலும் இருக்கிறது இல்ல"


"உனக்கு ஒண்ணும் தெரியாது, பேசாம வாய மூடிகிட்டு சிவனேன்னு இறேன்"


இது போன்றவற்றை கேட்க வேண்டி இருக்கும். நேரடியாக முகத்துக்கு நேரே சொல்லாவிட்டாலும், பின் புறம் பேசுவார்கள். 


என்ன செய்யலாம்?


வயதாகி, படுக்கையில் விழும் முன், நமக்கு எது நல்லதோ, அதைச் செய்து கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நல்லது செய்கிறேன், எனக்கு வேண்டியதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால், அந்த அப்புறம் வரும் போது உடலில் வலு இருக்காது. 


அப்போது வருந்திப் பயன் இல்லை. என்ன செய்தாலும், முதுமை வந்தே தீரும். உடலும், மனமும், மூளையும் செயல் குறையும். அதெல்லாம் இப்ப வராது, வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பது அறிவீனம். 


பாடல் 


மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை

ஊக்கி அதன்கண் முயலாதான் - நூக்கிப்

புறத்திரு போகென்னும் இன்னாச்சொல் இல்லுள்

தொழுத்தையாற் கூறப் படும்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_29.html


(pl click the above link to continue reading)


மூப்பு = வயதாகுதல் 


மேல் வாராமை = மேல் வரும் நாட்களில் வருவதை, அல்லது உண்டது வாய் வழியும், மூக்கு வழியும் வருவது. வயதான காலத்தில் வாயில் நீர் வழிவது இயற்கை. 


முன்னே = அதற்கு முன்னே 


அறவினையை = அறம் சார்ந்த செயல்களை 


ஊக்கி = முயன்று செய்து 


அதன்கண் = அச்செயல்களை 


முயலாதான் = செய்ய முயற்சி செய்யாதவன் 


நூக்கிப் = தள்ளி வைத்து, நீக்கி வைத்து 

 

புறத்திரு = புறத்து இரு. வெளிய போய் இரு 


போ = இருந்து என்ன செய்யப் போற. போ(ய் தொலையேன்) 


கென்னும் = என்று சொல்லும் 


இன்னாச்சொல் = கொடிய சொற்களை 


 இல்லுள் = சொந்த வீட்டில் 


தொழுத்தையாற் = வேலைக்காரர்களால்  


கூறப் படும். = கூறப் படுவீர்கள் 


வீட்டில் உள்ள மனைவி, மகன், மருமகள், பேரப் பிள்ளைகள் அல்ல, வீட்டில் வேலை செய்பவர்கள் கூட வயதானவர்களை  மதிக்க மாட்டார்கள். 


அப்படிச்செய்து இருக்கலாம், இப்படிச் செய்து இருக்கலாம் என்று வயதான காலத்தில் வருத்தப் பட்டு பலன் இல்லை. 


இப்போதே அறவினைகளை செய்யத் தொடங்க வேண்டும். 




Sunday, November 26, 2023

திருக்குறள் - புகழோடு தோன்றுக

 திருக்குறள் - புகழோடு தோன்றுக 


இன்று நாம் காண இருக்கும் குறள் நாம் பலமுறை கேட்டு, குழம்பிய குறள். 



தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று


தோன்றினால் புகழோடு தோன்ற வேண்டும். இல்லை என்றால் தோன்றாமல் இருப்பது நல்லது என்பது நேரடியான பொருள். 


இதற்கு, பிறந்தால் புகழோடு பிறக்க வேண்டும், இல்லை என்றால் பிறக்காமலே இருப்பது நல்லது என்று பொருள் எடுக்கலாம். 


பிறப்பது நம் கையில் இல்லை. பிறந்து, வளர்ந்து, புகழ் அடையலாம். அது சாத்தியம். பிறக்கும் போதே எப்படி புகழோடு பிறப்பது? குழப்பமாக இருக்கிறது. 


சிலர், தோன்றில் என்ற சொல்லுக்கு, ஒரு துறையில் நுழைதல் என்று பொருள் கொண்டு. எந்த ஒரு வேலையில் இறங்கினாலும், அதை சிறப்பாக செய்து, அதில் நல்ல பேரும் புகழும் பெற வேண்டும். இல்லை என்றால் ஏதோ நானும் செய்தேன் என்று ஒரு செயலை செய்வதை விட, செய்யாமல் விடுவதே நல்லது என்று பொருள் சொல்கிறார்கள். கேட்க சரியாகத்தான் இருக்கிறது. 


படிக்கப் போகிறாயா, அகில இந்திய அளவில் முதல் மாணவனாக வர வேண்டும்.  ஓடப் போகிறாயா, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்க வேண்டும். என்று உயர்ந்த புகழ் அடையும் நோக்கத்தில் எந்தத் துறையிலும் இறங்கு என்று சொல்லுவதாக பொருள் சொல்கிறார்கள். 


ஆனால், பரிமேலழகர் அப்படிச் சொல்லவில்லை. 


பரிமேலழகர் உரை தவறாக இருக்க வாய்ப்பு இல்லை. அவ்வளவு நுண்ணியமாக படித்தவர். அவர் என்ன சொல்கிறார் என்றால், 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_26.html


(pl click the above link to continue reading)


"மக்களாய் பிறப்பதாய் இருந்தால் புகழோடு பிறக்க வேண்டும். இல்லை என்றால் விலங்காகப் பிறப்பது நல்லது"


என்கிறார். 


சிக்கல்தான். 


எப்படி அவர் இந்த மாதிரி பொருள் சொல்ல முடியும் என்று அவரே விளக்குகிறார். 


"அஃதிலார்" - அப்படி இல்லாதவர்கள் என்பது உயர் திணை. எனவே, தோன்றுதல் என்பது மனிதர்களைக் குறிக்கும் என்கிறார். 


மக்களாக பிறக்காவிட்டால், விலங்காகப் பிறக்க வேண்டும் என்றும் பிரித்துக் கொள்கிறார். 


மக்களாக பிறக்காவிட்டால், பிறக்காமலேயே இருந்து விடலாம் என்று அல்ல. பிறப்பது என்பது வினைப் பயன்.  அதைத் தடுக்க முடியாது. மக்களாய் பிறக்காவிட்டால், விலங்காகப் பிறக்க வேண்டும். அது நல்லது என்கிறார். 


ஏன் நல்லது?


விலங்குகள் படிக்கவில்லை, தான தர்மம் செய்யவில்லை, அன்பு செலுத்தவில்லை, பொருள் தேடவில்லை என்று யாரும் குறை சொல்ல மாட்டார்கள். "அது ஒரு சரியான முட்டாள் மாடு" என்று யாரும் ஒரு மாட்டை இழித்துச் சொல்ல மாட்டார்கள். அது படிக்காவிட்டாலும், அதன் மேல் பழி விழாது. ஆனால், மக்கள், முட்டாளாக இருந்தால், "அதோ போகிறான் பார், சரியான மர மண்டை " என்று இகழ்வார்கள். 


அப்படி என்றால் என்ன சொல்ல வருகிறார்?


புகழ் இல்லையா, நீ விலங்கை விட கேவலம் என்கிறார். புகழ் இல்லாத விலங்கு ஒன்றும் பாதகம் இல்லை. புகழ் இல்லாத மனிதன், பழி சுமக்க வேண்டி வரும். 


மனிதர்களுக்கு என்று கடமைகள் இருக்கிறது. அவற்றைச் சிறப்பாக செய்ய வேண்டும். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


நாம் செய்யும் நல் வினை, தீ வினைகள் புண்ணிய, பாவங்களாக மாறி அடுத்த பிறவியில் நமக்கு அவற்றின் பலன்களைத் தரும். 


பரிமேலழகர் உரை செய்யும் போது, "புகழ்" என்பதற்கு "புகழ் அடைவதற்கான குணங்களோடு" என்று உரை செய்கிறார். 


பிறக்கும் போதே புகழ் அடையும் குணங்களோடு பிறக்க வேண்டும். 


அது எப்படி வரும்? முற்பிறவியில் செய்த நல்வினையால் வரும். 


எனவே, அடுத்த பிறவி மனிதப் பிறவியாக இருக்க வேண்டும் என்றால், இப்போது நல்லது செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், அடுத்த பிறவியில், புகழுக்கு உரிய நற் குணங்களோடு பிறப்போம். புகழும் அடைவோம்.


எனவே, இப்போது நல்லது செய்ய வேண்டும். 


புகழ் ஒரு பிறவியில் வருவது அல்ல. 


"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் , மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்"


என்பார் மணிவாசகப் பெருந்தகை. 


அவ்வளவு பிறவி வேண்டி இருக்கிறது.




Saturday, November 25, 2023

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இத்தனை நாளா இது தெரியாம போச்சே

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - இத்தனை நாளா இது தெரியாம போச்சே 


அயல்நாட்டுக்கோ அல்லது ஒரு அழகிய மலை பாங்கான இடத்துக்கோ, அல்லது ஒரு அழகிய கடற்கரைக்கோ சுற்றுலா போகிறோம். அந்த இடம் மிக அழகாக இருக்கிறது. இரசிக்கிறோம். 


"அடடா, இப்படி ஒரு இடம் இருப்பது இத்தனை நாளா தெரியாம போச்சே...தெரிஞ்சுருந்தா முன்னாலேயே வந்திருக்கலாமே ..." என்று மனம் நினைக்கும் அல்லவா?  


"இத்தனை நாளா இதை miss பண்ணிவிட்டோமே" என்று மனம் வருந்தும் அல்லவா?


அது போல,


திருமங்கை ஆழ்வார் சொல்கிறார் "பெருமாளே உன் திருவடிகளை வந்து அடைந்து விட்டேன். இது தெரியாமல் இத்தனை நாள், இந்த பெண்கள், உலக இன்பங்கள் என்று அலைந்து திருந்தி என் வாழ் நாளை வீணடித்து விட்டேனே" என்று  வருந்துகிறார். 


பாடல் 



சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து,

புலம்படிந்துண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினைவாளா,

அலம்புரிதடக்கையாயனே மாயா!  வானவர்க்கரசனே!, வானோர்

நலம்புரிந்திறைஞ்சுன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.


சீர் பிரித்த பின் 


சிலம்பு அடி உருவில் கரு நெடுங் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து,

புலம் படிந்து உண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா,

அலம் புரி தடக்கையாயனே மாயா!  வானவர்க்கு அரசனே!, வானோர்

நலம் புரிந்து இறைஞ்சு உன் திருவடி அடைந்தேன்  நைமிசாரணியத்து உள் எந்தாய்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_25.html


(pl click the above link to continue reading)


சிலம்பு அடி = கொலுசு அணிந்த கால்கள் 


உருவில் = அவர்கள் மேல் 


கரு  = கருமையான 


நெடுங்  = நீண்ட 


கண்ணார் = கண்களை உடைய பெண்கள் 


திறத்தனாய் = அவர்கள் பின்னே போய் 


அறத்தையே மறந்து = அற நெறிகளை மறந்து 


புலம் படிந்து = புலன்களின் பின்னால் 


 உண்ணும் போகமே  = போகத்தை அனுபவித்து 


பெருக்கிப் = அவற்றையே பெரிது என்று எண்ணி 


போக்கினேன் = வீணாக போக்கினேன் 


பொழுதினை வாளா = என் வாழ்நாளை வீணாக 


அலம் புரி = பக்தர்கள் போதும் போதும் என்று கூறும் அளவுக்கு அள்ளி அள்ளித் தரும் 


தடக்கையாயனே  = நீண்ட  கைகளை உடையவனே 


மாயா!  = மாயவனே 


வானவர்க்கு அரசனே!, = தேவர்களுக்கு அரசனே 


வானோர் = வானவர்களுக்கு 


நலம் புரிந்து = நன்மை பல புரிந்து 


இறைஞ்சு = வேண்டும் 


உன் திருவடி அடைந்தேன் = உன் திருவடிகளை அடைந்தேன் 


 நைமிசாரணியத்து = நைமிசாரண்யத்தில் 


உள் எந்தாய் = உள்ள என் தந்தையே 


ஒரு வழியாக உன் திருவடிகளை அடைந்து விட்டேன். இதற்கு முன் பெண்கள், புலன் இன்பங்கள் பின்னால் அலைந்து கொண்டிருந்தேன். இறுதியில் உன் திருவடிகளை அடைந்து விட்டேன்.


எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம் உண்டு. 


ஆண் பெண் ஈர்ப்பு என்பது ஒரு இயற்கையான விடயம்தானே. அதை ஏன் இவ்வளவு பெரிய விடயமாக்க வேண்டும். ஆன்மீகத்தில் உள்ள எல்லா பெரியவர்களும் மனைவி, பெண் ஆசை என்பதை ஏதோ பஞ்ச மா பாதகம் போல் ஏன் சித்தரிக்கிறார்கள். 


அது ஒரு புறம் இருக்க,


இந்தப் பாடல்களை படிக்கும் பெண்கள் மனநிலை எப்படி இருக்கும். 


நான், என் கணவரின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறேனா ? என்ற எண்ணம் ஒரு பெண்ணின் மனதை பாதிக்காதா?


ஒரு பெண், ஆணின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறாள் என்றால் ஒரு ஆண், பெண்ணின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடையாக இருக்க மாட்டானா?  


இது பற்றி யாரும் பேசுவதே கிடையாது. 


ஏன் ?







 



Thursday, November 23, 2023

திருக்குறள் - வித்தகர்க்கு அல்லால் அரிது

 திருக்குறள் - வித்தகர்க்கு அல்லால் அரிது



புகழ் அடைவது என்பது எளிதான காரியம் அல்ல. மிகுந்த முயற்சி தேவை. பண விரயம், கால விரயம், உடல் உழைப்பு என்று நிறைய தியாகம் செய்ய வேண்டி இருக்கும். 


வள்ளுவர் கேட்கிறார், நிலையில்லாதனவற்றை கொடுத்து நிலையானதைப் பெற்றுக் கொள்வதில் என்ன சிக்கல் என்று. 


இந்த செல்வம், இளமை (உடல்), ஆயுள் எல்லாம் நாம் என்ன செய்தாலும், செய்யாவிட்டாலும் நம்மை விட்டு ஒரு நாள் போய் விடும். அப்படி போவதை, நல்ல காரியத்துக்காக செலவழித்து அதன் மூலம் புகழ் அடைவது அல்லவா சிறப்பு. 


வாழ்நாள் எல்லாம் வெட்டிப் பொழுதாக கழித்து, இருக்கின்ற பணத்தை ஏதோ கொஞ்சம் செலவழித்து, கொஞ்சம் சேமித்து வைத்து, இறுதியில் கண்டது என்ன?  


இதை அறிந்தவன் என்ன செய்வான்?  பணத்தையும், நேரத்தையும், உடல் உழைப்பையும் புகழ் அடைய செலவழிப்பான். முதலில் அதை அறிய வேண்டும். அந்த அறிவு பெரும்பாலானோருக்கு இருப்பது இல்லை. எனவே, அப்படி செய்வது அறிவுள்ளவர்களுக்கு மட்டும் தான் முடியும் என்கிறார். 


பாடல் 


நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_23.html

(please click the above link to continue reading)


நத்தம்போல் = ஆக்கம் தரும் 


கேடும் = கேடும் 


உளதாகும் = தக்கவைக்கும் 


சாக்காடும் = சாக்காடு (இறப்பு) 


வித்தகர்க்கு = அறிஞர்களுக்கு 


அல்லால் அரிது = தவிர மற்றவர்களால் முடியாது 


கொஞ்சம் சிக்கலான குறள்.


ஆக்கம் தரும் கேடும் 


உள்ளது ஆக்கும் சாக்காடு 


அது என்ன ஆக்கம் தரும் கேடு, உளது ஆக்கும் சாக்காடு?


எப்படி கேடும், சாக்காடும் நல்லது ஆகும்? அதுவும் அது அறிஞர்களால் மட்டுமே முடியும் என்கிறாரே. 


ஒரே குழப்பாக இருக்கிறது அல்லவா?


நத்தம் என்றால் ஆக்கம், சிறப்பு, உயர்வு. ஆக்கம் தரும் கேடு எது என்றால், பசித்தவனுக்கு நாம் பொருளுதவி செய்கிறோம். நம்மிடம் இருந்த பொருள் குறைந்து விட்டது. நிறைய பேருக்கு அப்படி செய்தால் செல்வம் மிகுவாக குறையும். செல்வம் குறைவது கேடுதான். ஆனால், அந்தக் கேடு ஆக்கத்தைத் தரும். புகழ் என்ற ஆக்கத்தைத் தரும். 


ஒரு தாய் தன் இளமை, அழகு எல்லாம் இழந்து பிள்ளையை வளர்க்கிறாள். அவளது இளமைக்கும், அழகுக்கும் அது கேடுதான். இருப்பினும், ஒரு தாய் அதை மகிழ்ந்து செய்கிறாள். காரணம், அந்த இழப்பு, அவளுக்கு ஒரு குழந்தையைத் தருகிறது. அந்த ஆக்கம் , அவளது இழப்பை விட உயர்ந்தது. 


அது போல, தானம் செய்வது, பிறருக்கு உழைப்பது எல்லாம் ஒரு விதத்தில் கேடுதான், ஆனால் அந்தக் கேடு மிகப் பெரிய புகழைத் தரும்.


எப்படி சாக்காடு சிறப்பு ஆகும்?


இந்த பூத உடல் இறந்து போகும். ஆனால், புகழுடம்பு என்றும் நிலைத்து நிற்கும். உடம்புக்கு அழிவு கட்டாயம் வரும். அந்த அழிவில் இருந்து என்ன கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும். 


நிலையில்லா இளமையையும், செல்வத்தையும் கொடுத்து நிலையான புகழைப் பெற வேண்டும் என்பது கருத்து. 




Tuesday, November 21, 2023

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவடி அடைந்தேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவடி அடைந்தேன் 


நைமிசாரண்யம் என்ற திருத்தலத்தில் உள்ள பெருமாள் மேல் திருமங்கை ஆழ்வார் பத்துப் பாசுரங்கள் மங்களாசாசனம் செய்து இருக்கிறார். 


அற்புதமான பாடல்கள். 


இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று நினைப்பது நம் அறிவின் குறைபாடு. உருவம் இல்லா ஒன்றை நம்மால் சிந்திக்க முடியாது. ஏதோ ஒரு உருவத்தைப் பற்றிக் கொள்கிறோம். சிக்கல் என்ன என்றால், அதை விடுத்து மேலே போவது இல்லை. அதுவே சதம் என்று இருந்து விடுகிறோம். 


நம் மதம், அதில் இருந்து விடுபட பல வழிகளைச் சொல்லித் தருகிறது. 


பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன், விக்ரகத்தை கடலில் கரைத்து விடுகிறார்கள். ஏன்?  வேலை மெனக்கெட்டு செய்வானேன், பின் அதைக் கொண்டு கடலில் போடுவானேன்?


காரணம் என்ன என்றால்,


உருவமாய் இருந்தது, இப்போது அருவமாகி விட்டது. பிள்ளையார் வடிவில் இருந்த அந்த உருவம், இப்போது கடலில் கரைந்து விட்டது. இப்போது கடலைப் பார்த்தால், அதில் அந்த உருவம் இருக்கிறது என்று தெரியும். ஆனால், அதை காண முடியாது. அடுத்த கட்டம், கடலையும் தாண்டி, இந்த உலகம் பூராவும் அந்த சக்தி நிறைத்து கரைந்து நிற்கிறது என்று உணர்வது. 


இதை ஏன் சொல்கிறேன் என்றால், 


நைமிசாரண்யம் என்பது ஒரு காடு. அந்த காட்டையே இறைவானாகக் கண்டார்கள். திருவண்ணாமலையில், அந்த மலையே சிவன் என்று கொண்டாடுவார்கள். 


நைமிசாரன்யத்துள் உறை பெருமாளே, உன்னிடம் சரண் அடைந்தேன் என்று உருகுகிறார் திருமங்கை.


"இந்த பெண்ணாசையில் கிடந்து நீண்ட நாள் உழன்று விட்டேன். அது தவறு என்று உணர்ந்து கொண்டேன். இந்த பிறவி என்ற நோயில் இருந்து விடுபட எண்ணம் இல்லாமல், இந்த உலக இன்பங்களில் மூழ்கிக் கிடந்தேன். இப்போது அதையெல்லாம் அறிந்து வெட்கப் படுகிறேன். உன் திருவடியே சரணம் என்று வந்துவிட்டேன் " என்று உருகுகிறார். 


பாடல்   


வாணிலா முறுவல் சிறுனுதல் பெருந்தோள் மாதரார் வனமுலைப் பயனே


பேணினேன் அதனைப் பிழையெனக் கருதிப் பேதையேன் பிறவி நோயறுப்பான்,


ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க் கலவியிந் திறத்தை


நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_21.html


(please click the above link to continue reading)



வாணிலாமுறுவல் = வான் + நிலா + முறுவல் = வானில் உள்ள நிலவைப் போல ஒரு புன்முறுவல்  


சிறுனுதல் = சிறிய நெற்றி 


பெருந்தோள் = பெரிய தோள்கள் 


மாதரார் = பெண்கள் 


வனமுலைப் = வனப்பான மார்பகங்களே 


பயனே = அதுதான் இன்பம் என்று 



பேணினேன்  = போற்றினேன் 


அதனைப் = அப்படி போற்றியதை 


பிழையெனக்கருதிப் = தவறு என்று உணர்ந்து 


பேதையேன் =  அறிவில்லா பேதையான நான் 


பிறவிநோயறுப்பான் = பிறவி என்ற நோயை நீக்கும் ,


ஏணிலேனிருந்தேன் = ஏண் இலேன் இருந்தேன் = ஒரு எண்ணமும் இல்லாமல் இருந்தேன் 

 


னெண்ணினேன் = எண்ணினேன் (யோசித்துப் பார்த்தேன்)  


னெண்ணி = எண்ணிய பின் 


இளையவர்க் = அறிவில் சிறியவர்களின் 


கலவியிந்திறத்தை = கலவியின் திறத்தை = அவர்களோடு சேர்ந்து இருப்பதை 



நாணினேன் = வெட்கப்பட்டேன் 


வந்துந் = உன்னிடம் வந்து 


திருவடியடைந்தேன் = உன்னுடைய திருவடிகளை அடைந்தேன் 


 நைமிசாரணியத்துளெந்தாய் = நைமிசாரண்யம் என்ற இடத்தில் எழுந்து அருளி இருக்கும் என் தந்தை போன்றவனே 


ஒரு தவறில் இருந்து மீள வேண்டும் என்றால், முதலில் தவறை ஒத்துக் கொள்ள வேண்டும். 


Alcoholic Anonyms என்று ஒரு இயக்கம் இருக்கிறது. மது, போன்ற போதை பொருள்களுக்கு அடிமையாகி அதில் இருந்து மீள நினைப்பவர்களுக்கு உதவும் ஒரு அமைப்பு.  அந்த அமைப்பில் உள்ளவர்கள் முதலில் சொல்லுவது...


"I am so-and-so and I am an addict"


என்று ஆரம்பிப்பார்கள். 


காரணம், எது தவறு என்று தெரிந்தால் தானே அதில் இருந்து விடுபட முடியும். 


தவறு செய்து பழகி விட்டால், அதைச் செய்வதற்கு ஒரு ஞாயம் கற்பிக்கத் தொடங்கி விடுவோம். 


முதலில் ஆழ்வார், இதெல்லாம் நான் செய்த தவறுகள் என்று பட்டியலிடுகிறார். 


- பெண்ணாசையில் மூழ்கிக் கிடந்தது 

- சிறியோர் தொடர்பு 

- பிறவி பற்றி எண்ணம் இல்லாமல் இருந்தது 


அது மட்டும் அல்ல , அதை ஏன் செய்தேன் தெரியுமா என்று அதை நியாயப் படுத்த முயலவில்லை. 


"நாணினேன்", வெட்கப் படுகிறேன் என்கிறார். 


சரி, இதெல்லாம் தவறு என்று தெரிகிறது. திருத்தி என்ன செய்வது?


"அதெல்லாம் எனக்குத் தெரியாது...உன்னிடம் வந்து விட்டேன்...இனி உன்பாடு' என்று பெருமாளிடம் விட்டு விடுகிறார்.   


பாசுரத்தை மீண்டும் படித்துப் பாருங்கள். ஏதோ பெருமாளிடம் நேரில் பேசுவது போல இருக்கும். 



Monday, November 20, 2023

திருக்குறள் - புலவரைப் போற்றாது

 திருக்குறள் - புலவரைப் போற்றாது 


நமது வாழ்வில் இன்பமும் துன்பமும் விரவிக் கிடக்கிறது. நமக்கு மட்டும் அல்ல, பொதுவாகவே இந்த உலகில் இன்பமும் துன்பமும் கலந்தே நிற்கிறது. 


இந்த உலகில் இன்பமும் துன்பமும் கலந்து நிற்கிறது. இப்படி கலக்காமல் தனித் தனியே இருக்கும் உலகம் இருக்குமா? 


இருக்கிறது என்கிறார்கள். 


இன்ப அனுபவம் மட்டுமே உள்ள உலகம் சுவர்க்கம் எனப்படுகிறது. 


துன்ப அனுபவம் மட்டுமே உள்ள உலகம், நரகம் எனப்படுகிறது. 


சுவர்க்கம் என்பதை புத்தேள் உலகு இன்று குறித்தார்கள் அந்த நாட்களில். 


அது அப்படி இருக்கட்டும் ஒரு புறம். 


யார் இந்த புத்தேள் உலகுக்குப் போவார்கள்? அங்கே போனாலும் என்ன மரியாதை இருக்கும் ?  மகாத்மா காந்தியும் போகிறார், நானும் போகிறேன் என்றால் யாருக்கு மதிப்பு அதிகம் இருக்கும்?  


ஒரு ஞானியும், ஒரு இல்லறத்தானும் புத்தேள் உலகம் போனால், அங்குள்ள தேவர்கள் யாரை அதிகம் மதிப்பார்கள்?  ஞானியையா? அல்லது இல்லறத்தானையா?  


பாடல் 


நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு


பொருள் 



(pl click the above link to continue reading)


நிலவரை = நிலத்தின் எல்லை வரை. அதாவது, இந்த பூ உலகம் நிற்கும் வரை 


நீள்புகழ் = நீண்ட புகழை 


ஆற்றின் = ஒருவன் பெறுவானானால் 


புலவரைப் = ஞானியரை 


போற்றாது = சிறப்பாக நினைக்காது 


புத்தேள் உலகு = சொர்க்கம் 


ஞானியை விட இல்லறத்தில் இருந்து புகழ் பெற்றவனுக்குத் தான் மதிப்பு அதிகம். 


ஞானியாரைப் போற்றாது புத்தேள் உலகு.


ஏன் போற்றாது? இல்லறத்தில் இருப்பவன் எப்படி ஞானியை விட சிறந்தவனாக முடியும்?


இருவருமே புத்தேள் உலகம் போக வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.


ஞானி, ஒரு தனி மனிதனாக, தன் முன்னேற்றத்தை பார்த்துக் கொண்டு போகிறான். 


ஆனால், இல்லறத்தில் இருப்பவனோ, தான், பிள்ளை, மனைவி, மக்கள், சுற்றம், நட்பு, விருந்து என்று எல்லோரையும் அணைத்துக் கொண்டு சிறப்பாக இல்லறம் நடத்தி, இங்கும் புகழ் பெறுகிறான், மேலே சென்று அங்கும் புகழ் பெறுகிறான். 


ஒருவன் சிறப்பாக இல்லறத்தை நடத்தினான் என்றால், அவன் புகழ் இந்த வையம் இருக்கும் வரை நிற்கும்.  அவனுக்கு இங்கும் சிறப்பு, அங்கும் சிறப்பு. 


சொர்க்கம் போக வேண்டுமா, இல்லறத்தை சிறப்பாக நடந்த்துங்கள். அது போதும். 


அது என்ன சிறப்பான இல்லறம் என்றால், இதுவரை நாம் பார்த்த அனைத்து குறள் வழியும் நின்றால் போதும். அதுதான் சிறந்த இலல்றம். 


அறன் , வாழ்க்கைத் துணை நலம், புதல்வர்களைப் பெறுதல், அன்புடைமை, செய்நன்றி அறிதல், நடுவு நிலைமை, விருந்தோம்பல்....என்று படித்ப் படியாக வளர்ந்து பின் ஒப்புரவு, ஈகை, அண்ட் ஆகி இறுதியில் புகழ் என்பதில் வந்து நிற்கும் இல்லறம். 


சொர்க்கம் போக short-cut ... 




Friday, November 17, 2023

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - புறத்துப் போக்கினான்

 கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - புறத்துப் போக்கினான் 


இராவணனின் மந்திர ஆலோசனை சபை கூட்டம் தொடங்கப் போகிறது. சபை கூடுமுன் என்னவெல்லாம் செய்தான் என்று பார்த்துக் கொண்டு இருக்கிறோம். 


அமைச்சர்கள், நீண்ட காலம் அரச சேவையில் இருப்பவர்கள் என்ற சிலரை வைத்துக் கொண்டு மற்றவர்களை வெளியேறச் சொன்னான் என்று முந்தைய பாடலில் பார்த்தோம். 


மேலும், 


அரசவையில் பல திறமைசாலிகள் இருப்பார்கள், போரில் வல்லவர்கள் இருப்பார்கள், நண்பர்கள் இருப்பார்கள். ஆனால், ஒரு பெரிய முடிவு எடுக்க வேண்டும் என்றால் எல்லோரையும் வைத்துக் கொண்டு முடிவு எடுக்க முடியாது. ஆட்கள் அதிகம் ஆக ஆக குழப்பம்தான் மிஞ்சும். மேலும், எது சரி எது தவறு என்று நினைப்பவர்கள் ஒரு புறம். தனக்கு எது நல்லது என்று சிந்திப்பவர்கள் ஒரு புறம். தனக்கு நன்மை தருவதை பற்றி சிந்திப்பவர்கள் தனக்கு நெருங்கிய சுற்றத்தார் மற்றும் உறவினர்கள். எனவே,அவர்களை வைத்துக் கொண்டு மற்றவர்களை வெளியேற்றினான். 




பாடல்  


ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண் தொழிற்கு

ஏன்றவர் நண்பினர் எனினும் யாரையும்

வான் துணைச் சுற்றத்து மக்கள் தம்பியர்

போன்றவர் அல்லரைப் புறத்துப் போக்கினான்.



பொருள் 



(pl click the above link to continue reading)

ஆன்று = ஆழமாக 


அமை = அமைந்த 


கேள்வியர் = கேள்வி அறிவு உடையவர் 


எனினும் = என்றாலும் 


ஆண் தொழிற்கு = போர்த் தொழிலுக்கு 


ஏன்றவர் = பொருந்தியவர், சரியானவர் என்ற


நண்பினர் = நண்பர்கள் 


எனினும் = என்றாலும் 


யாரையும் = அவர்கள் அனைவரையும் 


வான் = நீண்ட 


துணைச் = துணையாக உள்ள 


சுற்றத்து  மக்கள் = சுற்றத்தார் 


தம்பியர் = தன் தம்பிகள் 


போன்றவர் அல்லரைப் = அவர்கள் போன்றவர் அல்லாதவரை   


புறத்துப் போக்கினான். =  வெளியில் அனுப்பினான் 


இந்தப் பாடல் நமக்குச் சற்று நெருடலான பாடல். 


சொந்தக்காரர்களை, தம்பிகளை வைத்துக் கொண்டான், ஆழ்ந்த அறிவு உள்ளவர்கள், போர்த் தொழிலில் திறமையானவர்களை விலக்கி விட்டான் என்று சொன்னால், அது நமக்குச் சரியாகப் படாது. 


ஆங்கிலத்தில் nepotism என்று சொல்லுவார்கள். தன் உறவினர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது. 


இன்றைய அரசியல், நிர்வாக முறைப்படி அது தவறாகத் தெரியும். 


ஆனால், அன்று இருந்தது ஜனநாயகம் அல்ல. அரசன் தான் எல்லாம். அவனை இறைவனுக்குச் சமமாக மக்கள் கருதினார்கள். 


அவனுக்கு எது நல்லதோ அது எல்லோருக்கும் நல்லது என்று நம்பினார்கள். 


எனவே, இராவணன், தனக்கு நல்லது நினைப்பவர்களை மட்டும் வைத்துக் கொண்டான். 


ஆனால், தனக்கு எது நல்லது என்று இராவணனுக்குத் தெரியாமலேயே போய் விட்டது. யார் சொன்னதையும் அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை எல்லாம் பின்னால் சிந்திக்க இருக்கிறோம். 


 


Thursday, November 16, 2023

திருக்குறள் - பொன்றாது நிற்பது

 திருக்குறள் - பொன்றாது நிற்பது 


பெரிய பெரிய அரசர்கள் உலகை கட்டி ஆண்டார்கள். பெரிய அரசியல் தலைவர்கள் உலகே வியக்கும்படி சாதனைகள் செய்தார்கள். அவர்கள் வாழ்ந்த வீடு, அவர்கள் பரம்பரை, அவர்கள் சொத்து, என்று எது இருக்கிறது இப்போது?


இராஜராஜ சோழன் பரம்பரை எங்கே, அவன் கட்டிய அரண்மனைகள் எங்கே?  அசோக சக்ரவர்த்தியின் வாரிசுகள் யார்? 


ஒன்றும் தெரியாது. 


மிஞ்சி நிற்பது அவர்கள் பேரும் புகழும் மட்டும்தான். 


என்றோ வாழ்ந்த அதியமான், சிபிச் சக்கரவர்த்தி, கர்ணன் என்று அவர்கள் புகழ் இன்றும் நிற்கிறது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நிற்கும். 


முந்தைய பாடல்களில் வறியவர்க்கு ஒன்று ஈவதே ஈகை என்றும் பாடும் புலவர்கள் பாடுவது எல்லாம் அவர்கள் புகழைத்தான் என்றும் பார்த்தோம். 


வள்ளுவர் ஒரு படி மேலே போகிறார். 


ஒருவனுக்கு பசிக்கிறது. உணவு அளித்தோம். புகழ் வந்து விடுமா?  


படிப்பு செலவுக்கு, திருமண செலவுக்கு என்று ஒருவன் நம்மிடம் உதவி கேட்கிறான். ஒரு ஐந்து ஆயிரமோ, பத்து ஆயிரமோ கொடுக்கிறோம். புகழ் வந்து விடுமா?  காலகாலத்துக்கும் நம் புகழ் நிற்குமா?


நிற்காது. பின் என்ன செய்தால் நீண்ட புகழ் வரும்?


வள்ளுவர் கூறுகிறார் 


"இணையில்லாத உலகில் சிறந்த புகழ் அல்லது நிலைத்து நிற்பது வேறு எதுவும் இல்லை"


என்று.


பாடல் 


ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்

பொன்றாது நிற்பதொன்று இல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_16.html



(please click the above link to continue reading)


ஒன்றா = ஒப்பிட்டு கூற முடியாத, இணை இல்லாத, 


உலகத்து = உலகில் 


உயர்ந்த புகழ் = சிறந்த புகழ் 


அல்லால் = தவிர 


பொன்றாது = நிலைத்து 


நிற்பதொன்று இல் = நிற்பது வேறு எதுவும் இல்லை 


புகழ் போல நிலைத்து நிற்பது வேறு ஒன்றும் இல்லை என்கிறார். 


சரி, புரிகிறது. ஆனால் இதில் வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார். 


இது சாதாரண விடயம். எல்லோருக்கும் தெரிந்ததுதானே. இதைச் சொல்ல வள்ளுவர் வேண்டுமா?


அப்படி அல்ல. 


பரிமேலழகர் இல்லை என்றால், இதில் ஒன்றும் இல்லை என்று மேலே சென்று விடுவோம். 


பரிமேலழகர் சொற்களை இடம் மாற்றிப் போடுகிறார். 


ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்  உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்


என்று. 


இணையில்லாத உலகம் அல்ல, இணையில்லாத புகழ் அல்லது இந்த உலகில் நிலைத்து நிற்பது வேறு ஒன்றும் இல்லை.


இணையில்லா என்ற அடைமொழியை புகழுக்குச் சேர்க்கிறார். உலகத்துக்கு அல்ல. 


சரி, அதனால் என்ன. இணையில்லாத உலகம், இணையில்லாத புகழ். புரிகிறது. 


அதனால் என்ன பெரிய அர்த்த மாற்றம் வந்து விடும்?


இணையில்லாத புகழ் எப்படி வரும்?


நான் ஒருவனுக்கு ஒரு வேளை உணவு அளிக்கிறேன் என்றால். அதே போல் இன்னொருவனும் செய்ய முடியும். அதை விட அதிகமாகக் கூட செய்ய முடியும். ஒரு வேளை என்ன ஒரு வேளை, இரு வேளை, மூன்று வேளை...ஒரு ஆள் என்ன ஒரு ஆள், பத்து பேர், நூறு பேருக்கு அன்னதானம் செய்கிறேன் என்று மற்றவர்கள் ஆரம்பிக்க முடியும். அப்போது, என் புகழ் மங்கிவிடும். 


இணையில்லாத புகழ் எப்போது வரும்? நான் செய்ததை மற்றவன் செய்ய முடியாத போது எனக்கு அந்த புகழ் வரும் அல்லவா?


அது என்ன செயல்?


ஒருவன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். அவசரமாக இரத்தம் தேவைப் படுகிறது. நான் இரத்தம் கொடுத்து உயிரை காப்பாற்றுகிறேன். அதை எல்லோராலும் செய்ய முடியாது. 


அப்படி கூட சொல்ல முடியாது. இரத்த தானம் செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். 


அப்படி என்றால் அதைவிட சிறந்தது எது?


இங்குதான் பரிமேலழகர் உச்சம் தொடுகிறார். 


யாராலும் கொடுக்க முடியாத ஒன்று உயிர், உடல் உறுப்புகள். 


உயிரைக் கொடுப்பது என்பது நடவாத காரியம். நாட்டுக்காக, குடும்பத்துக்காக ஒருவன் உயிரை தியாகம் செய்கிறான் என்றால், அதுதான் பொன்றாப் புகழ். யாரால் முடியும்?


உடல் உறுப்பு? முடியுமா?  புறாவுக்காக தொடையை அரிந்து கொடுத்தான் சிபிச் சக்ரவர்த்தி. அவனைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. அவன் புகழ் இன்றளவும் நிற்கிறது. 


கண்ணை எடுத்து கொடுத்தான் கண்ணப்பன். அந்த வேடனின் புகழ் இன்றும் நிற்கிறது. 


தன்னிடம் உள்ள மிகச் சிறந்த ஒன்றை ஒருவன் கொடுக்கும் போது, பொன்றா புகழ் பெறுகிறான் என்கிறார் வள்ளுவர். 


வேறு யாராலும் செய்ய முடியாத ஒன்றை செய்யும் போது, நிலைத்த புகழ் வரும்.


தன் உயிரை, உடல் உறுப்புகளை (organ donation ), நேரத்தை, இன்பத்தை தானம் செய்வது இருக்கிறதே, அதுவே நீண்ட புகழைத் தரும். 


ஒரு வார்த்தையை இடம் மாத்திப் போட்டால் எவ்வளவு பெரிய அர்த்தம் வருகிறது. 


எப்படியெல்லாம் எழுதி இருக்கிறார்கள். 


எப்படி எல்லாம் சிந்தித்து அதற்கு உரை எழுதி இருக்கிறார்கள்.


தலை தாழ்த்தி வணங்குவோம். 



Wednesday, November 15, 2023

பழமொழி - உப்புக் கடல் போல

பழமொழி - உப்புக் கடல் போல 


ஏன் தீயவர்கள் சகவாசம் கூடாது என்று சொல்லுகிறார்கள்?


தீயவர்களோடு சேர்ந்தால், ஒன்று அவர்கள் நல்லவர்களாக வேண்டும், அல்லது அவர்களோடு சேர்ந்து நாமும் தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு விடுவோம். 


எது நடக்க சாத்தியம் அதிகம்?


மலையின் மேல் உள்ள பனி உருகி, பளிங்கு போல நதி நீர் வரும். வரும் வழியில் உள்ள மூலிகைகள், பூக்களின் நறுமணம் எல்லாம் கொண்டுவரும். அத்தனை சுவையாக இருக்கும் அந்த நதி நீர். 


அதே நீர் கடலில் சேர்ந்து விட்டால், என்ன ஆகும்?


கடல் நீர் நல்ல நீராககுமா அல்லது நதி நீர் உப்புக் கரிக்குமா?


ஆயிரகணக்கான ஆண்டுகள் நதி நீர் கடலில் சேர்ந்த வண்ணமாக இருக்கிறது. இருந்தும், கடல் நீர் மாறவே இல்லை. மாறாக, நதி நீர்தான் உப்பு நீராகிறது. 


அது போல தீயவர்களோடு (கடல்) சேர்ந்த நல்லவர்களும் (நதி) அந்தக் கடல் நீர் போல் மாறிப் போவார்கள் என்கிறது இந்த நாலடியார். 


பாடல் 




 மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்

உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க

இனநலம் நன்குடைய வாயினும் என்றும்

மனநலம் ஆகாவாம் கீழ்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_15.html


(please click the above link to continue reading)


மிக்குப் = மிகுதியாக 


பெருகி = பெருகி வந்து 


மிகுபுனல் = அதிகமான நீர் 


பாய்ந்தாலும் = ஆற்றில் பாய்ந்தாலும் 


உப்பொழிதல் = உப்பு + ஒழிதல் = ஒருகாலும் உப்பை விடாத 


செல்லா ஒலிகடல்போல் = இருக்கின்ற கடல் போல 


மிக்க = நல்ல 


இனநலம் = சேரும் இனத்தின் குணம்  


 நன்குடைய வாயினும் = நல்லதாக இருந்தாலும்


என்றும் = எப்போதும் 



மனநலம் = நல்ல மனம் உடையவாக 


ஆகாவாம் = ஆகாது 


கீழ் = கீழான மனம் உடையவர்கள்.


நம்மைவிட உயர்ந்தவர்களைச் சார்ந்தால், நாமும் உயர்வோம்.


நம்மைவிட தாழ்ந்தவர்களைச் சார்ந்தால், நாமும் தாழ்வோம்.




Tuesday, November 14, 2023

திருக்குறள் - உரைப்பார் உரைப்பவை எல்லாம்

 திருக்குறள் - உரைப்பார் உரைப்பவை எல்லாம் 


பலர், பல விதங்களில் புகழ் அடைகிறார்கள். கல்வியில், கேள்வியில், விளையாட்டில், நிர்வாகத்தில், வீர தீர செயல்களில், இலக்கியம் படைப்பதில், கவிதை எழுதுவதில், என்று பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். 


அப்படி ஒரு துறையில் திறமையானவர்களை புகழ்ந்தாலும், எல்லா புகழும் ஒன்றையே குறித்து நிற்கிறது என்கிறார் வள்ளுவர். 


அது எது என்றால், வறியவர்க்கு ஒன்று தானமாக கொடுப்பதையே எல்லா புகழும் சுட்டி நிற்கிறது என்கிறார். 


ஒரு நடிகர் இருக்கிறார். அவர் மிக நன்றாக நடிக்கிறார். அவரை புகழ்ந்து பரிசுகள், பட்டங்கள் தருகிறார்கள். அது எப்படி வறியவர்க்கு கொடுப்பதை குறிக்கும் புகழாகும்?  குழப்பமாக இருக்கிறது அல்லவா?


எல்லா புகழும் வறியவர்க்கு கொடுப்பதை பாராட்டும் புகழ் என்றால் சரியாகப் படவில்லையே என்று தோன்றும். 


மேலோட்டமாக பார்த்தால் அப்படித்தான் தோன்றும். 


பாடல் 


உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_14.html


(pl click the above link to continue reading)

\

உரைப்பார் = சொல்லுபவர் 


உரைப்பவை = சொல்லியவை 


எல்லாம் = எல்லாம் 


இரப்பார்கொன்று = இரப்பார்க்கு + ஒன்று = யாசிப்பவர்களுக்கு ஒன்று 


ஈவார்மேல் = கொடுப்பவர்கள் பற்றி 


நிற்கும் புகழ் = நிற்கின்ற புகழ் பற்றியே ஆகும்.


நம் குழப்பம் தீரவில்லை. 


நீங்களும், நானும், சாகித்ய அகடமியும், ஒலிம்பிக் குழுவும் பாராட்டுவதை இங்கே அவர் குறிப்பிடவில்லை. 


"உரைப்பார்"...உலகத்துக்கு ஒன்று சொல்லுபவர்கள் என்று உரை எடுக்கிறார் பரிமேலழகர். நீங்களும், நானும் ஒருவரை பாராட்டுகிறோம் என்றால் அது நமக்கு பிடித்து இருக்கிறது, பாராட்டுகிறோம். நாம் உலகத்துக்கு அதன் மூலம் ஒரு செய்தியை சொல்ல வரவில்லை. மனைவி நன்றாக சமைத்து இருக்கிறாள். அதை பாராட்டினால் அதில் ஒன்றும் உலகத்துக்கு செய்தி இல்லை. 


உரைப்பார் என்றால் உலகத்துக்கு ஒரு நல்ல செய்தி சொல்லும் பெரியவர்கள் என்று கொள்ள வேண்டும். அறிஞர்கள், கவிஞர்கள் சொல்லுவது எல்லாம். 


"உரைப்பவை" அவர்கள் சொல்லுவது எல்லாம்.


உலகில் உள்ள பெரியவர்கள், சான்றோர்கள் சொல்லியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது, இரப்பவர்க்கு ஒன்று ஈவார் பற்றிய புகழ் ஒன்றுதான். வேறு எதுவும் இல்லை. 


மற்ற எல்லா புகழும் ஒரு திறமையை, வீரத்தை, காட்டி பெறுவது. அதில் தனி மனிதனுக்கு நன்மை இருக்கிறது. 


வறியவர்க்கு ஒன்று கொடுப்பதில் தீரம், வீரம், எல்லாம் இல்லை. அன்பு, கருணை, மனிதாபிமானம் மட்டுமே இருக்கிறது. அந்த ஈகைக்கு பலம் தேவை இல்லை, பொருள் கூடத் தேவையில்லை, மனதில் அன்பும் கருணையும் இருந்தால் போதும். 


அந்தக் கருணைதான் உலகில் மிகச் சிறந்தது என்கிறார் வள்ளுவர். 


இல்லறத்தின் உச்சம் ஈகையும், அதனால் வரும் புகழும். 


மனைவி மேல் அளவு கடந்த காதலும், பிள்ளைகள் மேல் பேரன்பும், சுற்றமும், நட்பும் தழுவி இல்லறம் நடத்தும் ஒருவன், வறுமையில் வாடி தன்னை நாடி வருபவனுக்கு இல்லை என்று சொல்லாமல் ஏதாவது கொடுப்பான். அவன் அன்பில், முதிர்ச்சி பெற்று இருக்கிறான். இல்லறம் அவனுக்கு அன்பை போதித்து இருக்கிறது. 


அப்படி கொடுக்கவில்லை என்றால், அவன் இல்லறத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். சரியாக நடத்தவில்லை என்று அர்த்தம். 


இல்லறத்தை எப்படி நடத்த வேண்டும் என்று பாடம் சொல்லி தந்துவிட்டு, இப்போது பரீட்சை வைக்கிறார். 


வறியவர்க்கு ஈந்து புகழ் அடைகிறாயா, நீ பாஸ். இல்லை என்றால் பெயில் என்று. 


நமக்கு எவ்வளவு மதிப்பெண் வரும்?




Monday, November 13, 2023

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - இராவணன் மந்திர ஆலோசனை - வரவு மாற்றினான்

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - இராவணன் மந்திர ஆலோசனை - வரவு மாற்றினான் 


ஒரு நிர்வாகத் தலைமையில் உள்ளவன் எப்படி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று கம்பன் காட்டுகிறான். 


You are as good as your team என்று சொல்லுவார்கள். 


உன் நண்பன் யார் என்று சொல், உன்னை யார் என்று சொல்கிறேன் என்று தமிழில் ஒரு வழக்கு உண்டு. 


யார் யாரை எல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு பட்டியல் தருகிறான் கம்பன். 


நமக்கு ஒரு சிக்கல் என்றால் நாம் யாரிடம் சென்று ஆலோசனை கேட்போம்? நம் நண்பர்கள், உறவினர்கள் என்று சென்று கேட்போம். அவர்கள் ஒன்றும் நம்மை விட அறிவில் சிறந்தவர்கள் என்று சொல்ல முடியாது. அவர்களிடம் சென்று கேட்டு என்ன பலன்?


நம்மை விட அறிவில், அனுபவத்தில், திறமையில், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். 


இராவணன் யார் யாரை வைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினான்?



பாடல்  


பண்டிதர், பழையவர், கிழவர், பண்பினர், 

தண்டல் இல் மந்திரத் தலைவர், சார்க!' எனக்

கொண்டு உடன் இருந்தனன்-கொற்ற ஆணையால்

வண்டொடு காலையும் வரவு மாற்றினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_13.html


(pl click the above link to continue reading)

பண்டிதர் = கல்வி அறிந்து நிறைந்தவர்கள் 


பழையவர் = நீண்ட நாள் தொடர்பில் உள்ளவர்கள். நம்மை பற்றி நன்கு அறிந்தவர்கள் 


கிழவர் = தலைவர்கள். (முருகன் குறிஞ்சிக் கிழவன் என்றால் குறிஞ்சி நிலத்தின் தலைவன்)


பண்பினர் = உயர்ந்த பண்பினை உள்ளவர்கள் 


தண்டல் இல் = பிரிதல் இல்லாத. சில மந்திரிகள் தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறுவது போல் இல்லாமல், என்றும் உடன் இருப்பவர்கள். 


மந்திரத் தலைவர் = ஆலோசனை கூறும் தலைமை பண்பு மிக்கவர்கள் 


சார்க!' = இருங்கள் 


எனக் கொண்டு = என்று கொண்டு 


உடன் இருந்தனன் = அவர்களோடு இருந்தான் 


கொற்ற ஆணையால் = தன்னுடைய அரச ஆணையால் 


வண்டொடு = வண்டுகளையும் 


காலையும் = கால் என்றால் காற்று. காற்றையும் 


வரவு மாற்றினான் = உள்ளே வருவதை நிறுத்தினான். 


ஒரு ஈ காக்க உள்ளே நுழையக் கூடாது என்று சொல்லுவோம் அல்லவா. 


காற்று கூட உள்ளே நுழையக் கூடாது என்று ஆணையிட்டான். 


முந்தைய பாடலில் சிலரை வெளியேற்றினான்.


இந்தப் பாடலில் சிலரை சேர்த்து வைத்துக் கொண்டான். 


எப்படி முன்னேற்பாடுகள் செய்கிறான். 


யுத்த காண்டம் தானே, என்ன சண்டை போட்டு இருப்பார்கள் என்று தள்ளிவிட்டுப் போனால், இதெல்லாம் கிடைக்குமா?






Thursday, November 9, 2023

திருக்குறள் - புகழ் - உயிர்க்கு ஊதியம்

 திருக்குறள் - புகழ் - உயிர்க்கு ஊதியம் 


ஒருவன் நன்றாக படித்து, நான் படித்து விட்டேன் என்று சொன்னால், "அப்படியா, எங்க நாலு கேள்வி கேக்குறேன், பதில் சொல்லு பார்க்கலாம்" என்று தானே உலகம் சொல்லும். 


படித்து, அறிந்து இருந்தாலும், தேர்வு எழுதி, அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, பள்ளியோ, கல்லூரியோ சான்றிதழ் வழங்கினால்தான் உலகம் ஏற்றுக் கொள்ளும். 


இவர் முதல் வகுப்பில் தேர்வு பெற்றார், இவர் இரண்டாம் வகுப்பு என்று மற்றவர் சொல்ல வேண்டும். நமக்கு நாமே சொல்லிக் கொண்டால் உலகம் நம்பாது. 


வாழ்க்கை என்பதும் ஒரு தேர்வுதான். அதில் நாம் தேர்வு பெற்றோமா இல்லையா என்று உலகம் சொல்ல வேண்டும். அந்த உலகம் சொல்வதுதான் "புகழ்".


"அவர் நல்ல மனிதர், ஏழைகளுக்கு உதவி செய்வார், ஒருத்தரை ஒரு வார்த்தை கடிந்து பேச மாட்டார், நல்ல படித்த மனிதர், சிறந்த நடிகர், வள்ளல், " என்றெல்லாம் ஒருவரை உலகம் பாராட்ட வேண்டும். 


அந்த பாராட்டுதல்தான் புகழ் என்பது. 


ஒருவன் இல்லறத்தை செம்மையாக நடத்துகிறான் என்பதற்கு சான்று, அவன் பெறும் புகழ். 


நல்ல மனைவியைப் பெற்று, இல்லற கடமைகளை சரிவர செய்து, விருந்தோம்பி, நடுவுநிலை தவறாமல் இருந்து, செய்நன்றி மறவாமல் இருந்து, இனியவை பேசி, அடக்கமாய் இருந்து, பொறாமை போன்ற குணங்கள் இல்லாமல் இருந்து, ஊருக்கும், தனி மனிதர்களுக்கும் தன்னால் ஆன உதைவிகளை செய்து ஒருவன் சிறப்பான இல்லறம் நடத்தினால், அவனுக்கு நல்ல பேர் கிடைக்கும். 


எனவே, புகழ் என்ற இந்த அதிகாரத்தை இல்லறத்தின் முடிவில் வைத்தார். 


வள்ளுவர் சொன்ன ஒவ்வொன்றையும் சரியான படி செய்து வந்தால், புகழ் தானே வரும். 


வள்ளுவர் கூறுகிறார், 


"வாழ்வின் நோக்கம் என்ன? இந்த வாழ்க்கை வாழ்வதின் பலன் என்ன? எதுக்காக நாம் வாழ்கிறோம். எப்படி வாழ வேண்டும் என்று கேட்டால், மற்றவர்களுக்கு உதவி செய்வதும், புகழோடு வாழ்வதும், இந்த இரண்டைத் தவிர வாழும் உயிர்களுக்கு வேறு ஒரு பயனும் இல்லை"


பாடல் 


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_9.html


(please click the above link to continue reading)



ஈதல் =  வறியவர்களுக்கு உதவுதல் 


இசைபட = அதனால் வரும் புகழோடு 


வாழ்தல் = வாழ்தல் 


அதுவல்லது = அதைத் தவிர 


ஊதியம் = பயன் ஏதும் 


இல்லை உயிர்க்கு = இல்லை இந்த உயிர்களுக்கு 


ஈதல், இசைபட வாழ்தல் என்று இரண்டு விடயங்களைக் கூறி இருக்கிறாரே, உதவி செய்யாமல், வேறு விதத்தில் புகழ் வந்தால் பரவாயில்லையா?


ஒலிம்பிக்கில் மெடல் வாங்கி, நாட்டிலேயே முதல் மாணவனாக தேர்வு பெற்று, சிறந்த நடிகர்/எழுத்தாளர்/பாடகர் என்றெல்லாம் புகழ் அடைந்தால் போதாதா?  என்றால் போதாது. 


காரணம் இலக்கணம். 


ஈதல், இசைபட வாழ்தல் "அது" அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்றார். 


அது என்பது ஒருமை. 


மாறாக, 


ஈதல், இசைபட வாழ்தல் "அவை" அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்று சொல்லி இருந்தால், "அவை" என்பது பன்மை. எனவே ஈதல் அல்லது இசை பட வாழ்தல் என்று பொருள் சொல்லலாம்.


ஆனால் வள்ளுவர் அபப்டிச் சொல்லவில்லை,


அது என்றதால், இங்கே ஒரு செயல் தான். ஈதல் மூலம் வரும் புகழ் தான் வாழ்வின் பயன். வேறு விதத்தில் வரும் புகழ்கள் அல்ல என்று அறிந்து கொள்ள வேண்டும். 


ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம். 


பெரிய நடிகராக இருப்பார். கோடி கோடியாக பணம் சேர்த்து இருப்பார். அவர் நடித்து வெளிவரும் படம் என்றால் கோடிக்கணக்கில் விற்பனை ஆகும். ஊரில் ஒரு வெள்ளம், மக்கள் துன்பப்படுகிறார்கள் என்றால் ஒரு மிக மிக சொற்பமான தொகையை நன்கொடையாகத் தருவார். 


நடிகராக அவர் புகழ் பெற்று இருக்கலாம். 


அது அல்ல முக்கியம் என்பது வள்ளுவர் கருத்து. 


"உயிர்க்கு" என்று பொதுவாகச் சொன்னாலும், இது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். விலங்குகள், தன்னை விட வறுமையில் உள்ள மற்ற விலங்குகளுக்கு உதவி செய்வதில்லை. எனவே, உயிர் என்றது மனித உயிர்கள் என்று கொள்ள வேண்டும் என்கிறார் பரிமேலழகர். 






Wednesday, November 8, 2023

கம்ப இராமாயணம் - அவையை எப்படி நடத்த வேண்டும் - பாகம் 1

 கம்ப இராமாயணம் - அவையை எப்படி நடத்த வேண்டும் - பாகம் 1 


இதுவரை இராமன் தென் கரையில் நின்று கொண்டிருந்ததை படம் படித்த கம்பன், இப்போது காமிராவை தூகிக் கொண்டு இலங்கைப் போகிறான். அங்கே என்ன நடக்கிறது என்று படம் பிடிக்கிறான். 


ஒரு தேர்ந்த இயக்குனரைப் போல, ஒரு காட்சியை cut பண்ணி வேறு ஒரு காட்சியை கொண்டு வருகிறான். வாசிப்பவர்களுக்கு ஒரு சலிப்பு இருக்காது. 


காமிரா இலங்கை போனாலும், வாசகன் நினைப்பு இராமன் மேலும் இருக்கும். அங்கே என்ன ஆச்சோ என்ற ஒரு எதிர்பார்ப்பும் இருக்கும்.


இலங்கையில், இராவணன் அவையை கூட்டி இருக்கிறான். ஆலோசனை செய்ய.


ஒரு சந்திப்பு (மீட்டிங்) எப்படி நடக்க வேண்டும் என்று கம்பன் காட்டுகிறான். 


மிக மிக ஆச்சரியமான நுணுக்கமான விவரிப்பு. ஒரு அவைக் கூட்டம் எப்படி நடத்த வேண்டும், எப்படி நடந்தது என்று இன்றைய மேலாண்மை (management) யில் கூறுவதற்கு ஒரு படி மேலே போய் காட்டுகிறான். 


இதை எல்லாம் படித்து இருந்தால் நம் பிள்ளைகளும் நாமும் எவ்வளவு அறிவில் சிறந்தவர்களாக சிறு வயதிலேயே ஆகி இருப்போம் என்று எண்ணத் தோன்றுகிறது. 


முதலில், சபையில் ஆலோசனைக்கு தேவை இல்லாத ஆட்களை வெளியே அனுப்புகிறான். 


பாடல் 


'முனைவரும், தேவரும், மற்றும் உற்றுளோர

எனைவரும், தவிர்க!' என ஏய ஆணையான்,

புனை குழல் மகளிரோடு இளைஞர்ப் போக்கினான்-

நினைவுறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/1.html



(pl click the above link to continue reading)


'முனைவரும் = முனிவர்களும் 


தேவரும் = தேவர்களும் 


மற்றும் = மேலும் 


உற்றுளோர எனைவரும் = அவர்களைப் போன்ற அனைவரையும் 


, தவிர்க!' = வெளியில் செல்லுங்கள் 


என = என்று 


ஏய ஆணையான் = ஆணையிட்டான் 


புனை குழல் = அழகு செய்யப்பட்ட கூந்தலை கொண்ட 


மகளிரோடு = பெண்களோடு 


 இளைஞர்ப் போக்கினான் = அறிவில் முதிராத இளையவர்களையும் நீக்கினான் 


நினைவுறு காரியம் = மனதில் நினைத்த காரியத்தை 


 நிகழ்த்தும் நெஞ்சினான் = நிகழ்த்திக் காட்டும் மனம் கொண்ட இராவணன் 


தேவர்கள் அரக்கர்களுக்கு எதிரிகள். அவர்களை நீக்கினான். 


முனிவர்கள் - விருப்பு வெறுப்பு இல்லாதவர்கள். அவர்களிடம் அரசாங்க யோசனை கேட்டு பலன் இல்லை. எனவே அவர்களையும் நீக்கினான். 


பெண்கள் - அங்கே பணி செய்யும் பணிப்பெண்கள். பெண்களிடம் இரகசியம் தங்காது என்பது ஒரு பொதுவான சிந்தனை. அதைக் கருத்தில் கொண்டு பெண்களை நீக்கினான். 


இளையவர் - கத்து குட்டிகள் இருப்பார்கள். அவர்களுக்கு யோசனை சொல்லும் அளவுக்கு அறிவு இருக்காது. எனவே அவர்களையும் நீக்கினான். 


தேவை இல்லாதவர்களை எல்லாம் வெளியேற்றிவிட்டான். 


நினைத்ததை முடிப்பவனான இராவணன். நினைத்ததை சாதித்து முடிப்பவர்கள், இப்படித்தான் இருப்பார்கள் என்று கம்பன் பாடம் நடத்துகிறான். 





அடுத்து என்ன செய்தான்?




Tuesday, November 7, 2023

திருக்குறள் - சாவதை விட சிறந்தது

திருக்குறள் - சாவதை விட சிறந்தது 


ஒருவனுக்கு மிகவும் துன்பம் தரக் கூடியது எது என்றால் மரணம் தான். மரணத்தை விட கொடிய துன்பம் எது இருக்க முடியும்? இருக்கின்ற செல்வம், சுற்றம், உறவு, இந்த உலகம், அதி இருந்து கிடைக்கும் அனுபவங்கள் இதை எல்லாம் விடுவது என்றால் எளிதான காரியமா? 


எவ்வளவு வறுமையில் இருந்தாலும், எவ்வளாவு தோல்விகள் வந்தாலும், எவ்வளவு வலி இருந்தாலும், வாழ்க்கை இனிக்கத்தான் செய்கிறது. இவ்வளவு துன்பம் இருக்கிறதே, இருந்து என்ன பலன், உயிரை விடுவோம் என்று எவ்வளவு பேர் நினைப்பார்கள். 


வள்ளுவர் சொல்கிறார், அந்த மரணத்தை விட துன்பம் தரக்கூடியது ஒன்று இருக்கிறது. அது என்ன என்றால், நம்மிடம் ஒருவன் வந்து  ஒரு உதவி கேட்டு அதை நாம் கொடுக்க முடியாமல் இருப்பது. அதைப் போல பெரிய துன்பம் எதுவும் இல்லை. அது மரணத்தை விட கொடிய துன்பம் என்கிறார். 


பாடல் 


சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_7.html


(please click the above link to continue reading)


சாதலின் = இறப்பதைவிட 


இன்னாதது = துன்பம் தருவது 


இல்லை = வேறு எதுவும் இல்லை 


இனிததூஉம் = இனிது + அதுவும் = அது கூட இனியதுதான். எப்போது என்றால் 


ஈதல் = கொடுத்தல், உதவுதல் 


இயையாக் கடை = முடியாத போது 


இராமயணத்தில், கூனி எவ்வளவோ சொல்லி கைகேயின் மனதை மாற்றப் பார்க்கிறாள். கைகேயி மனம் மாறவில்லை. 


கடைசியில் ஒன்று சொல்கிறாள், கைகேயி தலைகீழாக மாறி விடுகிறாள். 


"ஏய் கைகேயி, நாளை இராமன் முடி சூடிக் கொள்ளப் போகிறான். அனைத்து செல்வமும் அவனிடம் போய் விடும். உன்னிடம் யாராவது வறியவர்கள் வந்து உதவி கேட்டால் நீ என்ன செய்வாய்? நீ போய் கோசலையிடம் போய் கையேந்தி நிற்பாயா?  அவளிடம் பொருள் பிச்சை வாங்கி வந்து நீ மற்றவர்களுக்கு உதவுவாயா? ஒருவேளை அவள் தரவில்லை என்றால் என்ன செய்வாய்? கோபிப்பாயா? துக்கத்தால் விம்மி உயிரை விடுவாயா? இல்லை உதவி என்று வந்தவர்களுக்கு உதவி செய்யமாட்டேன் என்று மறுத்து திருப்பி அனுப்பி விடுவாயா?"


என்று கேட்கிறாள். 


'தூண்டும் இன்னலும், வறுமையும், தொடர்தரத் துயரால்

ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு, இரு நிதி, அவளை

வேண்டி ஈதியோ? வெள்குதியோ? விம்மல் நோயால்

மாண்டு போதியோ? மறுத்தியோ? எங்ஙனம் வாழ்தி? 


கைகேயி திகைத்துப் போகிறாள். அவளால் அந்த நிலையை சிந்தித்துக் கூட பார்க்க முடியவில்லை. 


என்ன ஆனாலும் சரி, அப்படி ஒரு நிலை எனக்கும் என் மகன் பரதனுக்கும் வரக் கூடாது என்று முடிவு எடுக்கிறாள். பின் நடந்தது உங்களுக்குத் தெரியுமே. 


உதவி செய்ய முடியவில்லை என்றால் சாவது மேல். உயிரை விடுவது இனியது என்று நம்ம்பியது நம் பரம்பரை. 


எந்த நிலையில் இருந்து சிந்தித்து இருக்கிறார்கள் என்று பாருங்கள். 


ஏதோ வள்ளுவர் அறிவுரை சொல்லிவிட்டுப் போகவில்லை. இராமாயணமும் அதையே பேசுகிறது. கர்ணன் மூலம் பாரதமும் அதைப் பேசியது. 


துறவிகளை கொண்டாடியதைப் போல, வள்ளல்களையும் கொண்டாடியது நம் பாரம்பரியம். 


பருந்துக்காக தன் தொடையை அரிந்து கொடுத்தான் சிபிச் சக்கரவர்த்தி என்று இன்றும் கொண்டாடுகிறோம். ஒரு அரசன் நினைத்து இருந்தால் நொடியில் எவ்வளவோ மாமிசம் வாங்கித் தந்திருக்க முடியும். கேட்டவுடன் கொடுக்க வேண்டும். மயிலுக்கு போர்வை தந்தவன், கொடிக்கு தேரைத் தந்தவன் என்று அந்த வள்ளல்களை இன்றும் போற்றுகிறோம். 


ஈந்துவக்கும் இன்பம் அறிந்து வாழ்ந்தவர்கள் நாம். 


இந்தக் குறளோடு, ஈகை என்ற இந்த அதிகாரம் முற்றுப் பெறுகிறது.


அடுத்து....

Monday, November 6, 2023

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என் நிலையைப் போய் சொல்

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - என் நிலையைப் போய் சொல் 


பெண்கள் மனதை புரிந்து  கொள்வது சாதாரண காரியம் அல்ல. 


அவர்களுக்கு ஒரு பொருளின் மேல் உள்ள ஆசையை விட, அந்தப் பொருளை கணவனோ, காதலனோ தங்களுக்காக கஷ்டப்பட்டு பெற்றுத் தர வேண்டும் என்பதில் ஆசை அதிகம். எனக்காக அவன் அதைச் செய்தான் என்பதில் அவர்கள் மனம் நெகிழும். 


உனக்கு வேண்டியது பொருள்தானே, அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னால் முடியாது. நீ வாங்கிக் கொண்டு வந்து, என்னிடம் தர வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். 


சில உதாரணங்கள் பார்ப்போம். 


சீதை பொன் மானை விரும்புகிறாள். இலக்குவன் தான் போய் பிடித்துக் கொண்டு வருகிறேன் என்கிறான். யார் கொண்டுவந்தால் என்ன? அவளுக்கு வேண்டியது பொன் மான் தானே. 


இல்லை, அவளுக்கு இராமன் பிடித்துத் தர வேண்டும். 


"நீங்க எனக்கு அதை பிடித்துத் தர மாட்டீங்களா" என்று கொஞ்சுகிறாள். இராமனால் மறுக்க முடியவில்லை. மான் பிடிக்கப் போகிறான். 


"நாயக, நீயே பற்றி நல்கலை போலும்"  என்று கொஞ்சுகிறாள். 


ஆயிடை, அன்னம் அன்னாள், அமுது உகுத்து அனைய செய்ய

வாயிடை மழலை இன்சொல் கிளியினில் குழறி மாழ்கி,‘

நாயக! நீயே பற்றி நல்கலை போலும் ‘என்னாச்

சேய் அரிக் குவளை முத்தம் சிந்துபு, சீறிப் போனாள்.



கணவன் அன்போடு பூ வாங்கிக் கொண்டு வருகிறான். அதை அவள் கையில் கொடுத்தால் எப்படி, "இங்க வா, கொஞ்சம் திரும்பு என்று அவளை தொட்டுத் திருப்பி அவள் தலையில் அவனே பூ வைத்து விட்டால் எப்படி". ஒரு மனைவிக்கு எது பிடிக்கும்?  


ஆண்டாள் சொல்கிறாள் 


"மலரிட்டு நாம் முடியோம்" என்று. நாங்களே எதுக்கு எங்க தலைமேல பூ வச்சுக்கணும். கண்ணன் வந்து வச்சுவிடணும் என்று அவள் ஆசை. 


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத்துயின்ற பரமன் அடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


காதலின் ஒரு படி மேலே சென்று....


கண்ணுக்கு நான் மை வைத்துக் கொள்ள மாட்டேன். அவன் வந்து மை தீட்டி விடட்டுமே என்று அவள் இருக்கிறாள். 


அவனுக்கு மை தீட்டி பழக்கம் இல்லை. அவள் கண் இமையை மெல்ல கீழே இறக்கி, கண் மையை தொட்டு அவள் கண்களில் பட்டும் படாமல் மெல்லமாக இடுகிறான். அவ்வளவு நெருக்கம். கையில் நடுக்கம். கண்ணில் பட்டு விடுமோ என்று. அவளின் நெருக்கம், இதயம் பட பட வென்று அடிக்கிறது. 


அனுமன் சீதையை அசோகவனத்தில் பார்க்கிறான். எல்லாம் பேசிய பின், "இன்னும் ஒரு  மாதம் உயிரோடு இருப்பேன். அதுக்குள்ள வந்து இராமன் கூட்டிக் கொண்டு போகா விட்டால், உயிரை விட்டு விடுவேன்" என்று போய் சொல் என்கிறாள். 


இன்னும் ஈண்டு ஒரு   திங்கள் இருப்பல் யான்

நின்னை நோக்கிப் பகர்ந்தது நீதியோய்

பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் அந்த

மன்னன் ஆணை இதனை மனக்கொள் நீ.


அனுமன் பார்த்தான். இது என்னடா புது வம்பா இருக்கு. இனி நான் போய் இராமனிடம் சொல்லி, அவன் இங்கு வந்து, சண்டை போட்டு, இராவணனை வென்று....அதெல்லாம் ஒரு மாதத்தில் நடக்கிற காரியமா என்று நினைத்து, 


சீதையிடம் சொல்கிறான்...


ஒரு மாசம் எல்லாம் வேண்டாம். இப்பவே என் தோளில் ஏறிக் கொள். இப்பவே உன்னை கொண்டு போய் இராமனிடம் சேர்பித்து விடுகிறேன்.மத்ததை எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று. 


'வேறு இனி விளம்ப உளதன்று; விதியால், இப்

பேறு பெற, என்கண் அருள் தந்தருளு; பின் போய்

ஆறு துயர்; அம் சொல் இள வஞ்சி! அடியன் தோள்

ஏறு, கடிது' என்று, தொழுது இன் அடி பணிந்தான். 


"அடியன் தோள் ஏறு கடிது"  என்றான்.


அப்போது சீதை சொல்கிறாள்,


"இந்த இலங்கை மட்டும் அல்ல, இந்த உலகம் அனைத்தையும் என் சொல்லினால் சுடுவேன். அது இராமனின் வில்லுக்கு இழுக்கு என்று செய்யாமல் இருக்கிறேன்" 


அதாவது, என்னால் இந்த சிறையில் இருந்து மீள முடியும். ஆனால், அவன் வந்து சிறை மீட்க வேண்டும். 


அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?

எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்

சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்

வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்.


திருமங்கை ஆழ்வார், தன்னை ஒரு காதலியாக வரித்துக் கொண்டு, வண்டை பெருமாளிடம் தூது விடுகிறார். 


"மலரில் உன் துணையோடு மதுவை அருந்தும் வண்டே, என் நிலையை அவனுக்குச் சொல்" 


என்று. 


அதாவது, அவனை வரச் சொல் என்று சொல்லவில்லை. அவனை கூட்டிக் கொண்டு வா என்று சொல்லவில்லை. என் நிலையைச் சொல். என் நிலை உணர்ந்து அவனே என்னைத் தேடி வருவான். வர வேண்டும். அப்போதுதான் அவளுக்கு மகிழ்ச்சி. 


பாடல் 


தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே,

பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே,

தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி,

ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_57.html


(pl click the above link to continue reading)



தூவிரிய = உன்னுடைய சிறகுகள் விரியும்படி 


மலருழக்கித் = மலர்களை போட்டு உழக்கி எடுத்து 


துணையோடும் = உன்னுடைய துணையோடு (ஜோடி) 


பிரியாதே = பிரியாமல் 


பூவிரிய = பூவின் இதழ்களை விரித்து 


மதுநுகரும் = தேனை உருசிக்கும் 


பொறிவரிய சிறுவண்டே = வரிகளை மேலே கொண்ட வண்டே 


தீவிரிய = தீ மேலே எழுபடி 


மறைவளர்க்கும் = வேதம் ஓதி அவற்றை வளர்க்கும் 


புகழாளர் = சிறந்தவர்கள் 


திருவாலி = (வாழும்) திருவாலி என்ற திருத்தலத்தில் 


ஏவரி = எதிரிகள் அஞ்சும்படி 


வெஞ் சிலையானுக் = கொடிய வில்லை கையில் ஏந்தியவனிடம்


கென்னிலைமை = என்னுடைய நிலையை 


யுரையாயே = சொல்வாயாக 


அவன் வீரன் தான். அவனைப் பார்த்தால் எதிரிகள் நடுங்குவார்கள். ஆனால், என்னிடம் அன்பாக இருப்பான். நீ போய் சொல்லு. அவன் வர்ரானா இல்லையா பாரு என்பது போலச் சொல்கிறாள். 


அவளுக்கு கார் கதவை திறந்து உள்ளே ஏறத் தெரியும். இருந்தும், கணவன் கார் கதவை திறந்து விட்டால், அதில் அவளுக்கு ஒரு பெருமை. 


அவளுக்கு நாற்காலியை இழுத்துப் போட்டு அமரத் தெரியும். இருந்தும், கணவன் அந்த நாற்காலியை அவள் அமர வசதியாக நகர்த்திக் கொடுத்தால், அதில் அவளுக்கு ஒரு மகிழ்ச்சி. 


பெண்ணின் மனம். 



நாலடியார் - புல்லின் மேல் பனி

 நாலடியார் - புல்லின் மேல் பனி 


சிறு வயதில், ஏன் சில பேருக்கு வயதான பின் கூட, சில அறிவற்றவர்களிடம் பழக்கம் இருக்கும். சின்ன வயசில் இருந்தே பழக்கம். நீண்ட நாள் நட்பு, உறவு என்று அறிவு இல்லா மூடர்களோடு சேர்ந்து திரிவார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய குறிக்கோள் இருக்காது, நோக்கம் இருக்காது. நாம் நல்லது செய்ய முயற்சி செய்தாலும், ஏதாவது சொல்லி குழப்பி விடுவார்கள். 


அவர்களோடு சேர்ந்து நமக்கும் சில கெட்ட பழக்கங்கள் தொற்றிக் கொள்ளும். புகை பிடிப்பது, சூதாடுவது, வெட்டிப் பேச்சு பேசுவது, அரட்டை அடிப்பது போன்ற பழக்கங்கள்.


இதில் இருந்து எப்படி விடுபடுவது?


எப்படி நம் வாழக்கையை சிறப்பாக ஆக்கிக் கொள்வது?


நாலடியார் சொல்கிறது 


"அறியாத சிறுவயதில் அடக்கம் இல்லாதவர்களோடு சேர்ந்து தவறான பாதையில் போனாலும், நல் வழி செல்லும் சான்றோரோடு சேர்ந்துவிட்டால், புல்லின் மேல் உள்ள பனி எப்படி சூரியன் வந்தவுடன் ஆவியாகிப் போகிறதோ, அது போல பழைய கெட்ட பழக்கங்கள் எல்லாம் போய் விடும்" 


என்று. 


பாடல் 


அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி

நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த

நற்சார்வு சாரக்கெடுமே வெயில்முறுகப்

புற்பனிப் பற்றுவிட் டாங்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_6.html


(pl click the above link to continue reading)


அறியாப் பருவத்து = அறியாத பருவத்தில் 


அடங்காரோடு = அடக்கம் இல்லாமல் திரிபவர்களோடு 


ஒன்றி = சேர்ந்து இருந்து 


நெறியல்ல = நெரியலாதவற்றை , தவறானவற்றை 


செய்தொழுகி யவ்வும் = செய்து வந்ததும் 


நெறியறிந்த = நல் வழி அறிந்த 


நற்சார்வு  = நல்லவர்களோடு கொண்ட  தொடர்பு 


சாரக்கெடுமே = சேர்ந்திருக்க அந்த பழைய பழக்கங்கள் நம்மை விட்டுப் போய் விடும். எப்படி என்றால் 


வெயில்முறுகப் = வெயில் ஏற ஏற 


புற்பனிப் = புல்லின் மேல் பனி 


பற்று = பிடித்து இருந்த பற்று  


விட் டாங்கு. = விட்டதைப் போல 


புல் ஒன்றும் செய்ய வேண்டாம். சூரியன் வந்தால், பனி தானே விலகிவிடும். அது போல், பெரியவர்கள் நட்பு, தொடர்பு கிடைத்தால், நம் பழைய தீய எண்ணங்கள், பழக்கங்கள் தானே நம்மை விட்டுப் போய் விடும். 


கவனிக்க வேண்டியது என்ன என்றால்:


நம் நல்ல பழக்கங்களும், தீய பழக்கங்களும் நம்மை சேர்த்தவர்களைப் பொறுத்தே அமைகிறது. யாரோடு சேர்கிறோமோ, அவர்களின் குணம் நம்மை சேரும். 


இரண்டாவது, பாடல் "இளம் வயதில்" என்று கூறவில்லை. அறியா பருவத்தில் என்று கூறுகிறது. சிலருக்கு அறியாப் பருவம் என்பது நீண்ட நாள் தொடரும். அவர்கள் கெட்டவர்களோடு தொடர்பில் இருக்கிறார்கள் என்று அவர்கள் அறிய மாட்டார்கள். 


உங்கள் பணத்தை ஒருவன் திருடிக் கொண்டு போகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனோடு தொடர்பில் இருப்பீர்களா?


திருடவில்லை, உங்களை ஏமாற்றி உங்கள் பொருளை ஒருவன் பறித்துக் கொள்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனோடு நட்பில் இருப்பீர்களா?


ஒருவன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனை?  நாம் நேரத்தை பெரிதாக நினைப்பது இல்லை. உங்களிடம் தேவையில்லாதவற்றை பேசுபவர்கள், அரட்டை அடிப்பவர்கள், புறம் சொல்லுபவர்கள், என்று உங்கள் நேரத்தை வீணடிப்பவர்கள் உங்கள் வாழ்கையை வீணடிப்பவர்கள்.  அந்த நேரம் இருந்தால் அதை நல்ல வழியில் செலவழிக்க முடியும்.  


அதே சமயம் உங்கள் நேரத்தை பயனுள்ளதாக ஆக்குபவர்கள், அவற்றின் மூலம் உங்களுக்கு பல நன்மைகள் வரும்படி செய்பவர்கள், அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். அவர்கோளோடு இருந்தால், நாளடைவில், முன் சொன்னவர்களின் தொடர்பு தானே கழலும். 


சுற்றி முற்றி பாருங்கள். 


உங்கள் சுற்றம் மற்றும் நட்பில், உங்களை நாளும் உயர்த்துபவர்கள் யார், உங்கள் நேரத்தை வீணடிப்பவர்கள் யார் என்று. 


Friday, November 3, 2023

திருக்குறள் - தாமே தமியர் உணல்

திருக்குறள் - தாமே தமியர் உணல் 


மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எல்லோரும் விரும்புவார்கள். யாருக்கும் ஒன்றும் உதவி செய்யக் கூடாது என்று யார் நினைப்பார்கள்? இருந்தும் பெரும்பாலானோர் உதவி செய்வது இல்லை. 


ஏன்?


கொஞ்சம் சேமிக்க ஆரம்பிக்க உடன், முதலில் ஒரு இலட்சம் சேமிக்க வேண்டும் என்று ஆசை வரும். அதை சேர்த்தவுடன் பத்து இலட்சம், அப்புறம் ஒரு கோடி என்று ஆசை வளர்ந்து கொண்டே போகும். 


இதற்கு இடையில் ஒரு சிறிய வீடு வாங்க வேண்டும், ஒரு கார், என்று செலவும் கூடிக் கொண்டே போகும். குறித்த அளவு சேமிக்க நாள் ஆகும். அதுவரை பணத்தை யாருக்கும் கொடுக்காமல் மேலும் மேலும் சேமிக்க மனம் நினைக்கும். 


வள்ளுவர் சொல்கிறார், 


"ஒருவரிடம் சென்று எனக்கு பொருள் கொடு என்று கேட்பது மிக இழிவானது. துன்பம் தருவது. அதை விட துன்பம் தரும் ஒன்று இருக்கிறது. அது என்ன என்றால் கேட்டவனுக்கு கொடுக்காமல் தாமே தனித்து உண்பது"


பாடல் 


இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_3.html

(please click the above link to continue reading)


இரத்தலின் = மற்றவர்களிடம் சென்று தான் வரியன் உதவி கேட்பதை விட 


இன்னாது = இனிமை இல்லாதது, துன்பம் தருவது 


மன்ற = நிச்சயமாக 


நிரப்பிய = அனைத்தையும் 


தாமே = தான் மட்டும் 


தமியர் உணல் = தனியாக உண்பது 


அது எப்படி உதவி செய்ய மாட்டேன் என்று சொல்லுவது தவறாகும்?


எனக்கு உதவி செய்ய வசதி இல்லை,  உதவி செய்ய மனம் இல்லை அதனால் என்ன?  உதவி செய்தே ஆக வேண்டுமா?


வள்ளுவர் சொல்கிறார்,


ஏன் உதவி செய்யமாட்டேன் என்கிறாய்?  ஏதோ ஒரு அளவு சொத்து சேர்க்க வேண்டும் நினைத்துதான் அல்லவா? 


அப்படி நினைக்கும் போது என்ன ஆகும்?


முதலாவது, கஞ்சத்தனம் வந்து விடும். மனைவி மக்கள் ஏதாவது ஆசையாகக் கேட்டால் கூட வாங்கித் தர மனம் வராது.   "எதுக்கு அனவாசிய செலவு"  என்று அவர்கள் ஆசையை மறுக்க வேண்டி வரும்.  அவனுக்கு ஒரு குறித்த அளவு சொத்து சேர்க்க வேண்டும். அது வரை வாழ்க்கையை அனுபவிக்க மாட்டான். சரி, அந்த இலக்கை அடைந்தவுடன் செல்வழிப்பானா என்றால், இல்லை. அடுத்த இலக்கு வந்து விடும். மூன்று படுக்கை அறை உள்ள வீடு வேண்டும், வில்லா வேண்டும், பெரிய கார் வேண்டும் , அதற்கு சேமிக்க வேண்டும் என்று ஆரம்பித்து விடுவான். ஒரு நாளும் சந்தோஷமாக  இருக்க மாட்டான். எனவே, அது "இன்னாது". 


இரண்டாவது, பொருள் இல்லாதவன், உதவி கேட்பது ஒரு முறை. ஒரு சிலரிடம் கேட்பான். யாராவது உதவி செய்து விடுவார்கள்.  பொருள் கிடைத்து விடும். அதன் மூலம் தன் பிரச்சனையை அவன் தீர்த்து, நிம்மதி பெருமூச்சு விடுவான். மகிழக் கூடச் செய்வான். ஆனால், பொருள் சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் இருப்பவன் ஒரு காலும் அந்த பொருள் மூலம் வரும் இன்பத்தை அனுபவிக்க மாட்டான். ஒவ்வொரு முறையும் passbook ஐ பார்த்து பார்த்து, இன்னும் சேர்க்க வேண்டும், இன்னும் சேர்க்க வேண்டும் என்று கவலைப் பட்டுக் கொண்டே இருப்பான். ஒருக்காலும் நிம்மதியும், சந்தோஷமும் இருக்காது. எனவே அது "இன்னாது". 


இவ்வளவு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விட்டால், தான் சேர்த்த பொருளை தானும் அனுபவித்து, மற்றவர்களுக்கும் கொடுக்கும் எண்ணம் வரும். 


சிந்தித்துப் பார்ப்போம். 


 




Thursday, November 2, 2023

பழமொழி - சொல்லவே இல்லை

 பழமொழி - சொல்லவே இல்லை 


நம் நெருங்கிய நண்பர்களையோ, உறவினர்களையோ சிறிது இடைவெளிக்குப் பின் சந்திக்க நேர்ந்தால், அவர்கள் சிலவற்றைச் சொல்லுவார்கள். நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இதெல்லாம் சொல்லவே இல்லையே நம்மிடம் என்று என்று அதிசயப் படுவோம். 


உதாரணமாக, "...அங்க ஒரு வீடு வாங்கினேன்...நல்ல விலைக்கு வந்தது" என்பார்கள். "அடப் பாவி, வீடு வாங்கினதைக் கூட என்னிடம் சொல்லவில்லையே. சொல்லி இருந்தால் நானும் கூட அங்கேயே வாங்கி இருப்பேனே..." என்று உள்ளுக்குள் நினைப்போம். 


அதே போல, பெண்ணுக்கோ, பையனுக்கோ வரன் அமைந்து இருக்கும். வெளியே சொல்லாமல் முடித்து இருப்பார்கள். 


இப்படி ஒவ்வொருவர் வாழ்விலும் பல விடயங்கள் நடக்கும். எல்லாவற்றையும், எல்லோருடமும் சொல்லிக் கொண்டு இருக்கமாட்டார்கள். அவங்களுக்கு எது நல்லதுன்னு படுதோ அதை அவர்கள் செய்வார்கள். எவ்வளவு நெருங்கிய நட்பாக இருந்தாலும் சரி, உறவாக இருந்தாலும் சரி, அப்படித்தான் செய்வார்கள். 


அதற்காக வருத்தப்படக் கூடாது. 


இப்படி வாழ்வின் எதார்த்தங்களை புட்டு புட்டு வைப்பது பழமொழி என்ற நூல்.  


ஒவ்வொரு செய்யுளும் நாலு அடி, அதில் கடைசி அடி, ஒரு பழமொழியாக இருக்கும். சில பழமொழிகள் நாம் கேட்டு இருக்க மாட்டோம். இருந்தாலும் மிக உபயோகமான பாடல்கள். 



பாடல் 


சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை

அற்றத்தால் தேறார் அறிவுடையார் - கொற்றப்புள்

ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்

சீர்ந்தது செய்யாதா ரில்.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_2.html


(pl click the above link to continue reading)


சுற்றத்தார் = உறவினர்கள் 


நட்டார் = நண்பர்கள் 


எனச்சென் றொருவரை =  என்று சென்று ஒருவரை 


அற்றத்தால் = மறைத்து செய்யும் காரியங்களைக் கொண்டு


தேறார் = எடை போட மாட்டார் 


அறிவுடையார் = அறிவு உள்ளவர்கள் 


 கொற்றப்புள் = புள் என்றால் பறவை. கொற்றப் புள் என்றால் சிறந்த பறவை, அதாவது கருடன் 


ஊர்ந்துலகம் = மேல் ஏறி உலகம் 


தாவின = தாவி அளந்த 


அண்ணலே யாயினும் = திருமாலே என்றாலும் 


சீர்ந்தது = தனக்கு சிறந்தது என்று நினைப்பதை 


செய்யாதா ரில் = செய்யாதவர்கள் யாரும் இல்லை 


எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு இருக்க மாட்டார்கள். அப்படி சொல்லவில்லையே என்று அவர்கள் மேல் வருத்தம் கொள்ளக் கூடாது. அவங்களுக்கு பிடிச்சதை அவங்க செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். 


அதுதான் யதார்த்தம். 


அது மட்டும் அல்ல, உங்கள் வாழ்வில் நடக்கும் எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை. சொல்லாமல் செய்தால் அவர்கள் இப்படி நினைப்பார்களோ, தவறாக நினைப்பார்களோ, என்றெல்லாம் நினைக்க வேண்டும். உங்களுக்கு நல்லது என்று படுகிறதா, எதைப் பற்றியும் கவலைப் படாமல் செய்யுங்கள். அது தான் உலக வழக்கு. 





Wednesday, November 1, 2023

கம்ப இராமாயணம் - அலை எனும் கை நீட்டி

கம்ப இராமாயணம் - அலை எனும் கை நீட்டி 


வானரப் படைகளோடு தென் கடற்கரையில் இராமன் நிற்கிறான். 


கம்பன் இரசித்து, நிறுத்தி, நிதானமாக கவிதைகளப் படைக்கிறான். 


"சீதை சிறைகியிருக்கிறாள். அவளை மீட்டு அவள் துயரைத் துடைக்க வேண்டும். அப்படி என்றால் இராவணனை கொல்ல வேண்டும். இராவணன் கொல்லப் பட்டால் தேவர்களின் துயரும் தீரும். இப்படி சீதை மற்றும் தேவர்களின் துயர் தீர வில் ஏந்தி வந்து நிற்கும் இராமனை தன் அலை என்ற கைகளால் வா வா என்று அந்தக் கடல் வரவேற்பது போல இருந்ததாம்".


பாடல் 


கொங்கைக் குயிலைத் துயர் நீக்க, இமையோர்க்கு உற்ற குறை முற்ற,

வெங் கைச் சிலையன், தூணியினன், விடாத முனிவின் மேல்செல்லும

கங்கைத் திரு நாடு உடையானைக் கண்டு, நெஞ்சம் களி கூர,

அம் கைத் திரள்கள் எடுத்து ஓடி, ஆர்த்தது ஒத்தது-அணி ஆழி.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post.html


(pl click the above link to continue reading)


கொங்கைக் குயிலைத் = மார்பகங்களை கொண்ட குயில் போன்ற சீதையின் 


துயர் நீக்க = துன்பம் நீங்க 


இமையோர்க்கு = தேவர்கள். தேவர்கள் கண் சிமிட்ட மாட்டார்கள். இமை மூடாது. எனவே, இமையோர் 


உற்ற = உள்ள 


குறை முற்ற = துன்பம் நீங்க 


வெங் கைச் சிலையன் = பயத்தைத் தரும் வில்லை கையில் கொண்டவன்  


தூணியினன் = அம்புகள் நிறைந்த அம்புராத் துணியை கொண்டவன் 


விடாத முனிவின் = நீங்காத கோபம் கொண்டவன் 


மேல்செல்லும = அந்தப் பகைவர்கள் மேல் படை எடுத்துச் செல்லும் 


கங்கைத் திரு நாடு உடையானைக் = கங்கை பாயும் கோசல நாட்டின் தலைவனை 


கண்டு = பார்த்து 


நெஞ்சம் களி கூர = மனம் மகிழ்ந்து 


அம் = அந்த 


கைத் = கை போன்ற 


திரள்கள் = அலையை 


எடுத்து ஓடி = எடுத்துக் கொண்டு ஓடி வந்து 


ஆர்த்தது = பொங்கி வந்ததை 


ஒத்தது = போல 


அணி ஆழி= அழகிய கடல் 


ரொம்ப நாள் கழித்து நமக்கு வேண்டியவர்கள் வந்தால், எப்படி இரண்டு கைகளையும் விரித்து ஓடி சென்று அவர்களை தழுவி வரவேற்போமோ, அது போல இராமனைக் கண்டு மகிழ்ந்து, அலை எனும் கை நீட்டி ஆராவராத்தோடு அந்த கடல் பொங்கி வந்ததது போல இருந்ததாம். 


என்ன ஒரு கற்பனை!


எனக்கு நீண்ட நாளாகவே ஒரு சந்தேகம் உண்டு. 


இராமன் அவதாரம் எடுத்தது இராவணனை அழிக்க. அவன் தவறு செய்தான், தேவர்கள் முறையிட்டார்கள். திருமாலும் ஒத்துக் கொண்டுவிட்டார். 


நேரே சென்று அழிக்க வேண்டியதுதானே. 


கதைப்படி, இராமன் தேவர் துயர் தீர்கவில்லை. தன் மனைவியை சிறைப் பிடித்தவனை கொன்று மனைவியை மீட்டான். 


ஒரு வேளை இராவணன் மனம் மாறி, சீதையை விட்டிருந்தால், இராமன் அவளை கூட்டிக் கொண்டு அயோத்தி வந்திருப்பான். இராவணன் அவன் பாட்டுக்கு அவன் வேலையை பார்த்துக் கொண்டு இருந்திருப்பான். 


அப்படி நடந்திருக்காது என்று  சொல்ல முடியாது. 


பின்னால் ஒருவர் மாத்தி ஒருவர் சொல்கிறார்கள் - வீடணன், இந்திரசித்து, கும்பகர்ணன் - எல்லோரும் சொல்கிறார்கள். சீதையை விட்டு விடு. இராமன் மன்னித்து விடுவான் என்று. நீ சீதையை சிறை விட்டாலும், இராமன் உன்னை கொல்லாமல் விடமாட்டான் என்று யாரும் சொல்லவில்லை. 


பின் அவதார நோக்கம் என்ன ஆயிற்று?  


அவதார நோக்கம் என்பது சீதையை சிறை மீட்பதாக முடிந்து இருக்கும். 


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்....