Showing posts with label thanippaadal. Show all posts
Showing posts with label thanippaadal. Show all posts

Sunday, January 21, 2024

தனிப்பாடல் - பலபட்டடைச் செக்கநாதப் புலவர்

 

தனிப்பாடல் - பலபட்டடைச் செக்கநாதப் புலவர்

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_21.html



தமிழில் பல புலவர்கள் பாடிய பாடல்கள், ஒரு தனிப்பட்ட நூலாக அல்லாமல் தனிப்பாடல் திரட்டாக இருக்கின்றன. மிகவும் சுவையான, எளிமையான பாடல்கள். 


அதில் பலபட்டடைச் செக்கநாதப் புலவர் என்பவர் என்பவர் பாடிய ஒரு அழகான பாடல். 


ஒரு பெரிய ஆளிடம் காரியம் ஆக வேண்டும் என்றால், அந்த வீட்டு அம்மாவைப் பிடித்து, "ஐயாகிட்ட நீங்க தான் எப்படியாவது எடுத்துச் சொல்லி, இதை நடத்திக் கொடுக்கணும்" என்று சிலர் வீட்டுத் தலைவி மூலம் காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பார்கள். 


அவ்வளவு ஏன், பையன் கொஞ்சம் பணம் வேண்டும் என்றால், அம்மாவிடம் சொல்லி,  "அப்பா கிட்ட சொல்லி எனக்கு பணம் வாங்கித்தா" என்று கேட்பது இல்லையா? 


அம்மாவுக்கு இளகிய மனது. அப்பாவுக்கு கொஞ்சம் கரடு முரடான மனது. 


சொக்கநாத புலவர் பார்வதியிடம் கூறுகிறார்....


"முத்துப் பந்தலின் கீழ் மென்மையான பஞ்சனை மேல் உன் அருகில் வந்து "எனக்கு ஒரு முத்தம் தா " என்று உன் கணவன் உன்னைக் கொஞ்சும் போது, நீ அவரிடம் என் குறைகளை மெல்ல மெல்ல எடுத்துச் சொல்லேன். சொன்னால் உன் வாய் முத்து உதிர்ந்து விடுமா ?"


பாடல் 

 


"ஆய்முத்துப் பந்தரின் மெல்லணை மீது,

     உன் அருகு இருந்து,

"நீ முத்தம் தா" என்று அவர் கொஞ்சும்

     வேளையில், நித்தம் நித்தம்

வேய்முத்தரோடு என் குறைகள் எல்லாம்

     மெல்ல மெல்லச் சொன்னால்,

வாய்முத்தம் சிந்திவிடுமோ?

     நெல்வேலி வடிவன்னையே."



பொருள் 

"ஆய்முத்துப்  = ஆராய்ந்து எடுக்கப்பட்ட முத்துக்கள் கோர்த்த 


பந்தரின் = பந்தலின் கீழ் 


மெல்லணை = மெல்லிய படுக்கை 


மீது  = மேல் 


உன் அருகு இருந்து = உனது அருகில் வந்து 


"நீ முத்தம் தா"  என்று = நீ முத்தம் தா  என்று 


 அவர் கொஞ்சும் = அவர் உன்னைக் கொஞ்சும் போது 


வேளையில் = அந்த வேளையில் 


நித்தம் நித்தம் = தினமும் 


வேய்முத்தரோடு = மூங்கில் முத்து போன்ற சிவனிடம் 


என் குறைகள் எல்லாம் = என்னுடைய குறைகள் எல்லாம் 


மெல்ல மெல்லச் சொன்னால் = மெல்ல மெல்ல சொன்னால் 


வாய்முத்தம் = உன் வாயில் உள்ள முத்தம் 


சிந்திவிடுமோ? = சிந்தி விடுமோ ?



     நெல்வேலி வடிவன்னையே."


Sunday, July 7, 2019

தனிப்பாடல் - உலகை உண்டுறங்குவான்

தனிப்பாடல் - உலகை உண்டுறங்குவான்


பயம்.

பயம் என்பது ஒரு நல்ல உணர்வு. பயம் நம்மை ஆபத்தில் இருந்து காப்பாற்றும். பயம் என்று ஒன்று இல்லாவிட்டால் நாம் முட்டாள் தனமாக ஏதாவது செய்து ஆபத்தில் சிக்கிக் கொள்வோம்.

வண்டிக்கு brake இருப்பது போல, குதிரைக்கு கடிவாளம் இருப்பது போல, பயம் நம்மை கட்டுப் படுத்தி ஒரு எல்லைக்குள் நிறுத்துகிறது.

இவ்வளவு செய்யலாம், இதற்கு மேல் செய்யக் கூடாது என்று நம்மை அறிவுறுத்துவது பயமே.

ஆனால், அந்த பயமே அளவு கடந்தால், வாழ்க்கை நரகமாகிவிடும். எதற்கு எடுத்தாலும் பயந்து கொண்டே இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.

அதே போல், ஒன்றும் செய்ய முடியாததற்கு பயந்தால் வாழ்க்கை துன்பமயமாகி விடும்.

மரணம் கட்டாயம் வரும். அதில் இருந்து யாரும் தப்ப முடியாது. அதற்கு பயந்தால் பின் எப்படி வாழ்வது.

மரணம் பற்றிய பயம்.

மீண்டும் என்னவாக பிறப்போமோ என்று பயம்.

கணவன்/மனைவி/பிள்ளைகளை விட்டு விட்டு போகிறோமே என்ற பயம்

வரும் நாட்களில் முதுமை வந்து என்ன பாடு படுத்துமோ என்ற பயம்.

தனித்து விடப் படுவோமோ என்ற பயம்.

இந்த பயத்தில் இருந்து எல்லாம் எப்படி விடுபடுவது?

பயமற்ற வாழ்க்கை எப்படி வாழ்வது?

ஒரு தனிப்பாடல் சமீபத்தில் படித்தேன். பெரிய கருத்தாழம், சொல் ஆழம் உள்ள பாடல் இல்லைதான்.  இருந்தும் அதில் ஒரு எளிமையான அழகு இருப்பதைக் கண்டேன்.

ஒரு அலங்காரமும் இல்லாமல் சிலர் அழகாக இருப்பதைப் போல...


பாடல்

“ நாவுண்டு நீயுண்டு நாமம் தரித்தோதப்
பாவுண்டு நெஞ்சே பயமுண்டோ - பூவுண்டு
வண்டுறங்கும் சோலை மதிலரங்கத் தேஉலகை
உண்டுறங்கு வான்.ஒருவன் உண்டு “ 


பொருள்


“ நாவுண்டு = என்னுடைய நாக்கு உண்டு

நீயுண்டு = (பெருமாளே) நீ உண்டு

நாமம் = உன்னுடைய திரு நாமத்தை

தரித்தோதப் = நாக்கில் ஏற்றுக் கொண்டு ஓத

பாவுண்டு = நல்ல பாடல்கள் உண்டு

நெஞ்சே = என்னுடைய நெஞ்சே

பயமுண்டோ = நமக்கு பயம் என்று ஒன்று உண்டா ?

பூவுண்டு = நல்ல மலர்கள் உண்டு , பூவை உண்டு அதாவது பூவில் தேனை உண்டு

வண்டுறங்கும் = வண்டுகள் உறங்கும்

சோலை  = சோலைகள் நிறைந்த

மதிலரங்கத் தே = நீண்ட மதில்களை கொண்ட திருவரங்கத்தில்

உலகை = இந்த உலகத்தை

உண்டு = வாயில் போட்டு உண்டு

உறங்கு வான்.ஒருவன் உண்டு  = உறங்குவான் (பள்ளி கொண்டான்) ஒருவன் உண்டு

கற்பனை பண்ணிப் பாருங்கள். இன்றைக்கு சுமார் 300 அல்லது 400 ஆண்டுகள் பின் நோக்கி போய் விடவேண்டும்.

அதி காலை நேரம். சூரியன் இன்னும் முழுவதும் வெளி வரவில்லை.

மின்சாரம் கிடையாது.  பெட்ரோல் டீசல் கிடையாது. பெரிய வண்டிகள் கிடையாது. செல் போன் கிடையாது.  டிவி கிடையாது.

இவ்வளவு மக்கள் தொகை கிடையாது.

திருவரங்கம். சின்ன கிராமம். 200 அல்லது 300 பேர் இருக்கலாம். நிறைய திறந்த வெளி.  ஊரின் ஓரம் காவிரியும், கொள்ளிடமும் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஊரில் நிறைய தோட்டங்கள். சோலைகள்.

சோலையில் நிறைய மலர்கள். அதில் நிறைய தேன் . அந்த தேனை குடித்த மயக்கத்தில் வண்டுகள்  தூங்குகின்றன.

ஸ்ரீரங்கத்தில், பெருமாள் அமைதியாக பள்ளி கொண்டிருக்கிறார். எங்கும் அமைதி.

தூரத்தில் யாரோ நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுகிறார்கள். இன்னொரு பக்கம் சுப்ரபாதம் கேட்கிறது.

இதற்கு  மேல் என்ன வேண்டும்.

எதைப் பற்றி பயம்?

வாழ்க்கையை இரசியுங்கள். ஒவ்வொரு கணத்தையும் முழுவதுமாக  அனுபவியுங்கள். எதிர் காலத்தை பற்றி பயந்து கொண்டே இருக்காதீர்கள். இந்த கணம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்று அனுபவியுங்கள்.

பாடலை இன்னொரு முறை படித்துப் பாருங்கள்.

பயம் ஓடி விடும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_7.html

Wednesday, May 8, 2013

தனிப் பாடல் - வைகை ஏன் கடலில் கலக்கவில்லை ?


தனிப் பாடல் - வைகை ஏன் கடலில் கலக்கவில்லை ?



நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும் வைகை கடலில் கலக்காமல் ஒரு பெரிய ஏரியில் போய் கலக்கும் விஷயம்.

ஏன் வைகை நதி கடலில் கலக்கவில்லை ?

பாற்கடலை கடைந்த போது, அந்த கடல் சிவனுக்கு நஞ்சை கொடுத்தது. அந்த பாற் கடலுக்கு இந்த கடல் எல்லாம் உறவுதானே என்று நினைத்து, இப்படி பட்ட கடலுக்கு நாம் ஏன் நீர் தரவேண்டும் என்று வைகை நதி தன்னிடம் உள்ள நீரை எல்லாம் வரும் வழியில் இரு புறமும் உள்ள வயல்களுக்குத் தந்து விட்டு மீதி உள்ள கொஞ்ச நீரை ஒரு ஏரியில் கொண்டு செலுத்தி விடுவதாக புகழேந்திப் புலவர் கற்பனை செய்கிறார்.....

பாடல்

நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.



பொருள் 

Monday, April 8, 2013

தனிப்பாடல் - மரண பயம் நீங்க


தனிப்பாடல் - மரண பயம் நீங்க 


ஒரு நாள் நீங்க காரில் போகும்போது சீட் பெல்ட் போடாமல் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். போலீஸ்காரர் உங்களை பிடித்து விடுகிறார். தப்புதான்....அவர் உங்களிடம் கொஞ்சம் தெனாவெட்டாக பேசிக்கொண்டு இருக்கிறார் ..."என்ன சார், படிச்சவங்களே இப்படி வந்தா மத்தவங்கள என்ன சொல்றது ..." என்று லெக்சர் அடிக்க தொடங்கி விடுகிறார்...

அப்போது உங்கள் நண்பர், போலீஸ் - இல் ஒரு மிகப் பெரிய உயர் அதிகாரி அந்தப் பக்கம் வருகிறார் ...

"என்ன சார், இந்த பக்கம்" என்று உங்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு சென்று விடுகிறார்.

அப்ப அந்த டிராபிக் ஆபீசர் எப்படி நடுங்குவார் உங்களைப் பார்த்து ? "என்ன சார், அவர் உங்க நண்பர்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதான்னு " உங்களை பார்த்து கூழை கும்பிடு போடுவார் இல்லையா ?

நமக்கு ஒருவரால் பிரச்சனை என்றால், அந்த ஒருவரின் மிக மிக உயர் அதிகாரியின் நட்பு இருந்தால் அந்த நபரால் ஒன்றும் செய்ய முடியாது அல்லவா ? பிரச்சனை செய்த நபரே நம் காலில் வந்து விழுந்து விடுவார் இல்லையா ?

நமக்கு யாரால் மிகுந்த பயம், தொல்லை ?

எமனால்...எப்ப வந்து உயிரை எடுப்பானோ என்று...அவனுடைய உயர் அதிகாரி யார் ? மீனாட்சி. அவளோடு நாம் நட்பு கொண்டாள், இந்த சுண்டக்காய் எமன் என்ன செய்ய முடியும் ?

பலபடை சொக்கநாத புலவர் பாடிய பாடல்   

கான் தெண்டனிட்ட கருங்குழலாலை என் கண்மணியை 
தேன் தொண்டை வாய்ச்சியை தென் கூடலில் சிறு பெண்பிள்ளையை 
யான் தெண்டனிட்ட பொழுதே இயமன் எனக்கும் அடி 
யேன் தெண்டனிட்ட விண்ணப்பம் என்று ஓலை எழுதுவனே 
 
பொருள்