Showing posts with label Seevaga Sindhaamani. Show all posts
Showing posts with label Seevaga Sindhaamani. Show all posts

Sunday, August 23, 2015

சீவக சிந்தாமணி - சைட் அடித்த பெண்கள்

சீவக சிந்தாமணி - சைட் அடித்த பெண்கள் 

(வயது வந்தவர்களுக்கு மட்டும். ஆண் பெண் ஈர்பை கேட்டு முகம் சுளிப்பவர்கள் மேலே படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்)

பெண்கள் , ஆண்களை விரும்பி பார்ப்பார்களா. பார்ப்பார்கள் என்கிறது சீவக சிந்தாமணி.

அப்படி அவர்கள் பார்க்கும் போது , ஆண்களும் தங்கள் அழகை இரசிக்க வேண்டும் என்று நினைத்து அலங்காரம் பண்ணிக் கொண்டு வருகிறார்களாம்.

ஆண்கள் தங்களை எப்படி இரசிக்கிறார்கள், அப்படி தங்களை இரசிக்கும் ஆண்களை பெண்கள் எப்படி எப்படி இரசிக்கிறார்கள் ....

வாள் போன்ற கூர்மையான கண்களைப் பார்த்து, நாளும் வளரும் மார்புகளைப் பார்த்து, அழகு பொங்கும் இடுப்பை நோக்கி, பண் பாடும் வண்டுகள் வட்டமிடும் மலர்களை சூடிய கூந்தலை நோக்கும் அந்த ஆண்களை பார்த்து விருப்போடு நின்றார்கள் வளை அணிந்த அந்தப் பெண்கள்



பாடல்

வாண்மதர் மழைக்க ணோக்கி
வருமுலைத் தடமு நோக்கிக்
காண்வர வகன்ற வல்குற்
கண்விருப் புற்று நோக்கிப்
பாணுவண் டாற்றுங் கோலச்
சிகழிகைப் படியு நோக்கி
யாண்விருப் புற்று நின்றா
ரவ்வளைத் தோளி னாரே.

சீர் பிரித்த பின்

வாள் மதர் மழைக் கண் நோக்கி 
வரு முலைத்  தடமும் நோக்கிக்
காண் வரவு அ கன்ற அல்குல் 
கண் விருப்புற்று நோக்கிப்
பாணு வண்து ஆற்றும் கோலச்
சிகழிகைப் படியும்  நோக்கி
ஆண் விருப்புற்று நின்றா
அவ் வளைத் தோளினாரே.

பொருள்

வாள் = வாள் போன்ற கூர்மையான

மதர் = மதர்ப்பு என்ற சொல்லுக்கு செழிப்பு, இறுமாப்பு, உள்ளக்களிப்பு; ஆசைப்பெருக்கம்; அழகு; வலிமை; மிகுதி; புலவி என்று பல பொருள்கள் உண்டு. உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள்.

மழைக் கண் நோக்கி = மழை போன்ற குளிர்ச்சியான கண்களை நோக்கி, மழை தரும் மேகம் போன்ற கரிய கண்களை நோக்கி, நீரில் மிதக்கும் கண்களை நோக்கி

வரு முலைத்  தடமும் நோக்கிக் = வரு முலை  - வினைத்தொகை. வந்த, வருகின்ற, வரும். அந்தப் பெண்களின் மார்புகளை நோக்கி

காண் = காணக் கூடிய அழகான

வரவு அகன்ற அல்குல் = பரந்த இடுப்பு (அவ்வளவு தான் சொல்ல முடியும்)

கண் விருப்புற்று நோக்கிப் = கண்ணால் விருப்புடன் நோக்கி

பாணு = பண் பாடும்

வண்டு  ஆற்றும் = வண்டு ஆடும்

கோலச் சிகழிகைப் படியும்  நோக்கி = அழகிய முடியையும் நோக்கி

ஆண் விருப்புற்று நின்றார் = ஆண்கள் விரும்பும்படி நின்றார் . ஆண்கள்மேல் விருப்புற்று நின்றார்

அவ் வளைத் தோளினாரே. = அந்த வளையல் அணிந்த தோள்களை கொண்ட பெண்களே

சொல்லித் தெரியாது காமம்
சொன்னாலும் புரியாது தர்மம்




Thursday, July 2, 2015

சீவக சிந்தாமணி - கனை கடல் செல்வன்

சீவக சிந்தாமணி - கனை கடல் செல்வன் 


சிந்தாமணி என்பது ஒரு உயரிய மணி வகையைச் சார்ந்தது. காமதேனு, கற்பக விருட்சம், என்பதனோடு சேர்த்து கொள்ளத் தக்கது இது. சீவகன் இந்த காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன். அவன் பெயரையும் சேர்த்து சீவக சிந்தாமணி என்று குறிப்பிடப்படுகிறது.

எழுதியவர் திருத்தக்க தேவர். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை கொண்டது.

இன்பச்சுவை (காமச் சுவை) சற்று அதிகமாக உள்ள காப்பியம். பின்னாளில், அநபாய சோழன் இதைப் படித்து, அந்த நூலின் சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்த போது அவனை மாற்ற தெய்வப் புலவர் சேக்கிழார் பெரிய புராணம் பாடியதாக வரலாறு.

அதில் இருந்து சில சுவையான பாடல்கள்....

கடல் பார்த்திருப்போம்.

நீண்ட கடற்கரை. அங்கங்கே சிறு சிறு மணல் குன்றுகள். அலை அடிக்கும் கரை. இவ்வளவுதானே ?

திருத்தக்க தேவருக்கு வேறு என்னவெல்லாமோ தோன்றுகிறது.

கடல் ஒரு காதலன் போலத் தெரிகிறது.

நுரை கொண்ட அலைகள் அவன் கழுத்தில் உள்ள மாலை போலத் தெரிகிறது.

அந்த மாலையை யார் போட்டது ?

கரை என்ற மங்கை. அங்கங்கே காணும் சிறு சிறு மணற்குன்றுகள் அவள் உடலில் உள்ள மேடு பள்ளங்கள் போலத் தெரிகிறது அவருக்கு.

பாடல்

திரைபொரு கனைகடற் செல்வன் சென்னிமே
னுரையெனு மாலையை நுகரச் சூட்டுவான்
சரை1 யெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக்
குரைபுனற் கன்னிகொண் டிழிந்த தென்பவே.

பொருள்

திரை பொரு = அலை பொருந்தும்

கனை கடற் = ஆராவாரம் மிக்க கடல்

செல்வன்  = என்னும் செல்வன்

சென்னிமேல் = தலையின் மேல்

நுரையெனு மாலையை = நுரை என்ற மாலையை

நுகரச் சூட்டுவான் = அவன் அனுபவிக்கும் படி சூட்டுவாள்

சரை1 யெனும் பெயருடைத் = சரை என்ற பெயருடைய

தடங்கொள் = மணல் மேடாகிய

வெம்முலைக் = அழகான மார்பு

குரை புனற் = ஒலிக்கும் நீராகிய

கன்னி = கன்னிப் பெண்

கொண் டிழிந்த தென்பவே. = கொண்டு வந்து சூட்டினாள்

என்ன ஒரு கற்பனை.

அடுத்த முறை கடற்கரையில் நிற்கும் போது , சீவக சிந்தாமணியை நினைக்க வேண்டும் !