Tuesday, April 30, 2013

புறநானூறு - இறப்பதன் முன், நினைத்ததை செய்


புறநானூறு - இறப்பதன் முன், நினைத்ததை செய் 


நிறைய நல்ல விஷயங்களை தள்ளிப் போட்டு கொண்டே போகிறோம். ரிடையர் ஆனபிறகு படிக்க, பார்க்க என்று பல விஷயங்களை வைத்திருக்கிறோம்.

அது வரை இருக்க வேண்டுமே ? இறப்பு என்பது நம் கையிலா இருக்கிறது ? அல்லது அது சொல்லிக் கொண்டு வருமா ?

எது செய்ய வேண்டும் என்று நினைகிறீர்களோ, அதை செய்யுங்கள். தள்ளிப் போடாதீர்கள்

பாடல்

இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்தம்                   

நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை; வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு  

வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பிலாஅ அவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈயப்பெற்று
நிலங்கல னாக விலங்குபலி மிசையும் 

இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.


பொருள் 

இராமானுஜ நூற்றந்தாதி - காமமே சிறந்தது ....


இராமானுஜ நூற்றந்தாதி - காமமே சிறந்தது ....


அறம் , பொருள், இன்பம், வீடு என்ற நான்கை சொல்லுகிறார்கள் பெரியவர்கள்.

அற வழியில் பொருள் ஈட்டி, அதன் மூலம் இன்பம் துய்த்து, பின் அதை கடந்து வீடு பேற்றை அடைய வேண்டும் என்பது பொருள்.

இந்த நான்கில் இன்பம், அதாவது காமமும் காதலும் மிக சக்தி வாய்ந்தது.

வலுவானது. காமத்தை வெல்லுவது கடினம்.

அது மனிதனின் இயற்கையோடு ஒன்றியது. அதை அடக்க நினைப்பதும் சிறந்தது அல்ல. அடக்க அடக்க மேலும் பொங்கி வருவது காமம்.

காமத்தை வெல்ல அமுதனார் எளிய வழி சொல்லுகிறார்.

காமம் அப்படியே இருக்கட்டும். அதை அப்படியே கண்ணன் மேல் திருப்பி விடுங்கள். அவ்வளவுதான்.

ஆயர் பாடி கோபிகைகள் அத்தனை பேரும் கண்ணன் மேல் மோகம் கொண்டார்கள் என்று கூறுவது ஒரு  உவமை - ஒரு உருவகம்.

உள் அர்த்தம், உலக மக்களே உங்கள் காமத்தை, இறைவன்பால் திருப்புங்கள் என்பதே.

அப்படி திருப்பும் போது துன்பம் செய்யும் காமம் சீரிய நல்  காமமாக மாறி விடுகிறது. அந்த காமமே நன்மை செய்யும்.

அறம் , பொருள், இன்பம் இந்த மூன்றும் கண்ணன் மேல் காமம் கொள்வதற்குத் தான் என்று கூறினார் இராமனுசர்.

பாடல்

சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம்பொருள் வீடிதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண்மிசையே


பொருள் 

திருக்குறள் - காதலில், எது பெரிது ?


திருக்குறள் - காதலில், எது பெரிது ?


காதலில் மிகுந்த சுவை தரக் கூடியது எது ?

காதலியை சந்திப்பது, அவளுக்காக காத்திருப்பது, அவளுக்கு பரிசு வாங்கித் தருவது, அவளோடு பைக்கில் ஊர் சுற்றுவது, ஒரே இளநியில் இரண்டு ஸ்ட்ரா போட்டு குடிப்பது, ஓடாத படத்திற்கு ஓர டிக்கெட் போடுவது  என்று பல கூறுகள் இருந்தாலும் இது எல்லாவற்றையும் விட சிறந்தது என்று வள்ளுவர் ஒன்றை கூறுகிறார்...

அது சைட் அடிக்கும் காதலியின் கண்கள்

என்னது, பெண்கள் சைட் அடிப்பார்களா ? அதுவும் திருவள்ளுவர் காலத்து பெண்கள் சைட் அடிப்பார்களா ?  என்று நீங்கள் கேட்கலாம் ? ஆச்சரியப் படலாம்....

எனக்கு என்ன தெரியும்....வள்ளுவர் சொல்கிறார்....படியுங்கள்....அப்புறம் நீங்களே சொல்லுங்கள்....

பாடல்



கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற் 
செம்பாக மன்று பெரிது.


பொருள்


இராமாயணம் - தருமமும் தகவும்


இராமாயணம் - தருமமும் தகவும் 


தூரத்தில் வரும் இராம இலக்குவனர்களை அனுமன் காண்கிறான். முதலில் அவர்களை கண்ட சுக்ரீவன் தன்னை கொல்ல வாலிதான் அவர்களை அனுப்பி இருக்கிறான் என்று எண்ணி ஓடி ஒளிந்து கொண்டான். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே அது போல.

அனுமன் அவர்களை எடை போடுகிறான்.

சில பேருக்கு தர்மம் செய்ய மனம் இருக்கும், வசதி இருக்காது. 

சில பேருக்கு நிறைய பணம் இருக்கும், தர்மம் செய்ய மனம் இருக்காது. 

இரண்டும் சேர்ந்து வருவது இனிமையானது. 

இராம இலகுவனர்களைப் பார்த்தால் தருமமும் தகவும் இவர்களிடம் ஒன்றாக வந்தது போல இருக்கிறது. தருமமும், தகவும் இவர்களின் சொத்து. (தக்கார், தகவிலார் அவர் அவர்தம் எச்சத்தால் காணப்படும் என்பார் வள்ளுவர். தகவு என்றால் தகுதி)

தருமம் என்ற சொல்லுக்கு அறம் , நீதி வழி நிற்றல், தர்ம வழி நிற்றல் என்றும் பொருள் சொல்லலாம். 

சுக்ரீவன் நினைப்பது போல இவர்கள் வாலி அனுப்பி சுக்ரீவனை கொல்ல வந்தவர்கள் அல்ல. 

உங்களிடம் மிக மிக அறிய ஒரு மருந்து இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உயிர் காக்கும் மருந்து என்றால் அதன் மகத்துவம் புரியும். அந்த மருந்து ஒரே ஒரு பாட்டில் தான் இந்த உலகில் உள்ளது. அது இல்லாவிட்டால் உங்களுக்கு ரொம்ப கஷ்டம். அந்த மருந்தை, வைத்த இடத்தில் காணவில்லை. அதை எப்படி முழு மூச்சுடன் தேடுவீர்கள். அது இல்லாமல் முடியாது. கடையில் போய் வாங்கிக் கொள்ளலாம் என்றால் கிடைக்காது. அந்த மருந்து கிடைத்தால் தான் உண்டு. வெளி நாடு போபவர்களுக்கு இது புரியும். முக்கியமான சில மருந்துகளை எடுத்துச் செல்வார்கள். திடீரென்று ஒரு நாள் அந்த மருந்து பெட்டியில் வைத்த இடத்தில் இருக்காது. பெட்டியை கவிழ்த்து போட்டு உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள். 

அப்படி ஒரு மருந்தை தேடுபவர்களை போல் இவர்கள் எதையோ இழந்து விட்டு எல்லா பக்கமும் தேடி கொண்டு வருகிறார்கள் 

என்று இராம இலக்குவனர்களை எடை போடுகிறான் அனுமன். 

கண்டவுடன் மனிதர்களை எடை போடுவது அறிவின் ஒரு கூறு. 

பாடல் 


தருமமும், தகவும், இவர்; தனம் எனும் தகையர், இவர்;
கருமமும் பிறிது ஒர் பொருள் கருதி அன்று; அது கருதின்,
அரு மருந்து அனையது, இடை அழிவு வந்துளது; அதனை,
இரு மருங்கினும், நெடிது துருவுகின்றனர், இவர்கள். 

பொருள் 

Monday, April 29, 2013

இராமாயணம் - அந்தரங்கத்தை வெளியே சொல்லக் கூடாது


இராமாயணம் - அந்தரங்கத்தை வெளியே சொல்லக் கூடாது 


மந்தரை கொஞ்சம் கொஞ்சமாக கைகேயின் மனத்தை மாற்றி விட்டாள் . 

"சரி, நான் என்ன செய்ய வேண்டும் " என்று கேட்கிறாள் கைகேயி. 

"அப்படி கேள் சொல்கிறேன்...சம்பாசுர யுத்தத்தில் வென்ற போது உனக்கு இரண்டு வரம் தருகிறேன் என்று தசரதன் சொன்னான் அல்லவா...அவற்றை இப்போது கேள்" என்றாள் உள்ளமும் வளைந்த கூனி 

பாடல் 


நாடி ஒன்று உனக்கு உரைசெய்வென்;
     நளிர் மணி நகையாய்!
தோடு இவர்ந்த தார்ச் சம்பரன்
     தொலைவுற்ற வேலை
ஆடல் வென்றியான் அருளிய வரம்
     அவை இரண்டும்
கோடி’ என்றனள், உள்ளமும்
     கோடிய கொடியாள்.


பொருள் 

அபிராமி அந்தாதி - அழியா முத்தி ஆனந்தமே


அபிராமி அந்தாதி - அழியா முத்தி ஆனந்தமே 


உண்மை எது ? உண்மை என்பதை வரையறத்து கூற முடியுமா ? அப்படி கூற முடிந்தால் நேரடியாக சொல்லிவிடலாமே. எதற்கு இத்தனை வேதம், உபநிடதம், புராணம், இதிகாசம் எல்லாம் ? இத்தனை இருந்தும் இன்னும் உண்மை எது என்று அறிந்தபாடில்லை. 

உண்மை என்பது வார்த்தைகளுக்குள் அடங்காத ஒன்று. எத்தனை ஆயிரம் புத்தகங்கள் படித்தாலும் அதை அறிந்து கொள்ள முடியாது. வார்த்தையாலோ, எழுத்திலோ அதை கூற முடியாது. 

இனிப்பு என்ற சுவையை எழுதிக் காட்ட முடியாது.

மனைவியின் கண்ணோரம் கசியும் காதலை வார்த்தைக்குள் அடக்க முடியாது. 

பக்தியும், இறை உணர்வும் அப்படித்தான்...

அவள், "எழுதா மறையின் அரும் பொருள்". மறை என்றால் வேதம். எழுதா மறை என்றால் எழுதப் படாத மறை பொருள் அவள். அவள் வார்த்தைகளில் சிக்க மாட்டாள். யாரோ கண்டு உங்களிடம் சொல்ல முடியாது. நீங்களே தான் அவளை நேரடியாக அறிய வேண்டும்.

அவளை அறிந்து கொண்டால், உணர்ந்து கொண்டால்....எல்லாம் அவளாகத் தெரியும்.....நிற்பதும், இருப்பதும், கிடப்பதும், நடப்பதும் எல்லாம் அவளாகத் தெரியும். 

இன்னொரு பொருள், நிற்கும் போதும், இருக்கும்போதும் படுத்து கிடக்கும்போதும், நடக்கும்போதும், அவள் நினைவாகவே இருக்கும். 

எபோதும் வணங்குவது அவளுடைய மலர் போன்ற திருவடிகளை. எதை வணங்கினால் என்ன, எல்லாம் அவள்தானே. 

நமக்கு வாழ்க்கையில் கிடக்கும் இன்பங்கள் எல்லாம் அழியக் கூடிய இன்பங்கள். ஒரு சமயம் இன்பமாய் இருக்கும். சிறிது நேரம் இருக்கும். நாள் ஆக நாள் ஆக அதில் உள்ள இன்பம் குறையும். மனம் சலிப்புறும். உடல் சலிப்புறும். பின் அதுவே கூட துன்பமாய் மாறும் 

அபிராமி அப்படி அல்ல.

அவள் அழியாத ஆனந்தம் தருபவள். 

உமா என்றால் ஒளி  என்று பொருள். ஒளி  அநாதியானது. என்று பிறந்தவள் என்று அறிய முடியாத அன்று பிறந்தவள் அவள்.. 

பாடல் 

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, 
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின் 
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து 
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

பொருள் 

Sunday, April 28, 2013

திருக்குறள் - நோயும் மருந்தும்


திருக்குறள் - நோயும் மருந்தும் 


தலைவியை பார்த்து, அவள் அழகில் மயங்கி , அவளை அன்போடு நோக்குகிறான் தலைவன்.

அவளும், அவனை நோக்குகிறாள்.

அவளின் பார்வைக்கு அவனுக்கு அர்த்தம் தெரியவில்லை. ஒரு சமயம் அன்பாக பார்ப்பது மாதிரி இருக்கிறது. இன்னொரு சமயம் கோபமாய், வெறுப்பாய் பார்ப்பது மாதிரி இருக்கிறது.

அவனால் அறிய முடியவில்லை.

துன்பம் தருவதும் அவள் கண்கள் தான்.. அந்த துன்பத்திற்கு மருந்து தருவதும் அவள் பார்வைதான்...

பாடல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு 
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

பொருள்


முத்தொள்ளாயிரம் - பழி ஒருபக்கம் பாவம் ஒரு பக்கம்


முத்தொள்ளாயிரம் - பழி ஒருபக்கம் பாவம் ஒரு பக்கம் 


அவனைப் பார்த்தது என் கண்கள்.

அவனோடு கலந்தது என் நெஞ்சம்.

தவறு செய்தது எல்லாம் இந்த கண்ணும் தோளும்...ஆனால் தண்டனை பெறுவது என்னவோ மெலியும் என் தோள்கள்.அது என்ன பாவம் செய்தது ?

தவறு செய்தவர்களை விட்டு விட்டு தவறு செய்யாதவர்களை தண்டிப்பது இந்த உறையூர் வளவனுக்கு முறை போலும்

பாடல்

கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம்
தண்டப் படுவ தடமென்தோள்-கண்டாய்
உலாஅ மறுகில் உறையூர் வளவற்
கெலாஅ முறைகிடந்த வாறு.


பொருள்


Saturday, April 27, 2013

திருக்குறள் - கண்டாலும் மகிழ்வு தரும் காதல்


திருக்குறள் - கண்டாலும் மகிழ்வு தரும் காதல் 



உண்டார்கண் அல்ல தடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

சரக்கு அடிச்சாதான் கிக்கு வரும். காதல் பார்த்தாலே கிக்குதான்.

அதுதான் மேலோட்டமான அர்த்தம்.

வள்ளுவராவது ஏழு வார்த்தைகள் உபயோகப் படுத்தி இத்தனை கொஞ்சம் அர்த்தம் தருவதாவது.


கொஞ்சம் உள்ள போய்  பாப்போம்.


உண்டார் கண் அல்லது அடு நறா காமம் போல் 
கண்டார் மகிழ் செய்தல் இன்று 

நறா என்றால் - பழங்கள், இனிப்புகள், கொஞ்சம் மருந்துப் பொருள்கள் எல்லாம் சேர்த்து காய்ச்சி வடிக்கும் ஒரு பானம். உடலுக்கு நல்லது. நாவுக்கு இனிமை தருவது. கொஞ்சம் மயக்கமும் தருவது. நல்ல மணம் இருக்கும். மூக்குக்கும் இனிமை.

அந்த நறா உண்டால் தான் சுகம் தரும். இந்த லவ்சு இருக்கே, அனுபவிக்கனுனு இல்ல, பார்த்தாலே சுகம் தரும்.

அது ஒரு அர்த்தம்.

ஒரு ஆணும் பெண்ணும் முதல் முதலில் பார்க்கிறார்கள். மனதிற்குள் ஒரு குறுகுறுப்பு. அது காதால் தானா என்று கூட அவர்களுக்குத் தெரியாது.

கண்ணால் கண்டார்கள். அவ்வளவு தான். அதுவே அவ்வளவு சுகம்.

அவள் தானா....நான் தேடிய செவந்திப் பூ இவள்தானா என்று முதல் பார்வையே மனதை  கொள்ளை கொண்டு சென்று விடும்.

தொட வேண்டும் என்றல்ல....பட வேண்டும் என்றல்ல...தூரத்தில் அவள் நடந்து வருவதைப் பார்த்தால் கூட போதும்...  அவன் மனதில் நந்தவனம் பூ பூப்பூக்கும்...சில பல மேகங்கள் சாரல் தூவி விட்டு செல்லும் ..தென்றல் கவரி வீசும்....தெருவோரப் புற்களும் பாதம் வருடும்....


காதல் அப்புறம் வரும்....அதற்க்கு முன்பே என்ப வெள்ளம் அள்ளிக் கொண்டு போகும்  ....

கண்டார் மகிழ் செய்யும் காதல்....

இதை படிக்கும்போது, உதட்டோரம் புன்னகை கசிந்தால், நீங்கள் காதல் தேவதையால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்....



சிலப்பதிகாரம் - பெண் என்னும் வள்ளல்


சிலப்பதிகாரம் - பெண் என்னும் வள்ளல் 


வேலை நிமித்தமாய் வெளிநாடு போய்  இருக்கிறான் கணவன். புது இடம். புது மக்கள். புது சூழ்நிலை. வேறு உணவு. வேறு கால நிலை.  வேலைக்குப் போன இடத்தில் ஆயிரம் பிரச்சனை. அலுப்பு, எரிச்சல், கோபம், ஏமாற்றம் எல்லாம் உண்டு.

என்னடா வாழ்க்கை என்று வெறுப்பு வருகிறது.

இடையிடையே மனைவியின் நினைவு வருகிறது. அவள் புன்னகை, அவளின் இனிமையான தோற்றம், அவளின் மென்மையான குரல்...எல்லாம் வந்து வந்து போகிறது.

அவளை காண வேண்டும் ஏக்கம் எழுகிறது.....

சிறிது நாள் கழித்து வேலை முடிந்து வீடு வருகிறான்.

மனைவியை பார்க்கப் போகிறோம் என்று ஆவல்.

அவளுக்கும் அவனை ரொம்ப நாள் கழித்து பார்க்கப் போகிறோம் என்று ஆவல்.

அதிகாலையிலேயே எழுந்து, ஷாம்பூ போட்டு குளித்து, அப்படியே கொஞ்சம் சாம்பிராணி போட்டு, கூந்தலை அப்படியே அலை பாய விட்டு இருக்கிறாள்....

இராத்திரி எல்லாம் தூக்கம் இல்லை...மணிக்கொரு தரம் எழுந்து மணி பார்க்கிறாள்...தூக்கம் இல்லாததால் கண் எல்லாம் சிவந்து இருக்கிறது....

இதோ வந்து விட்டான்...

அவளைப் பார்க்கிறான்...

வாவ் ...என்று வியக்கிறான்..அலை பாயும் குழல், அதற்க்கு கீழே வளைந்த கரிய புருவம், இன்னும் கொஞ்சம் கீழே சிவந்த கண்கள்...அந்த கண்ணில் காதல், அன்பு, பாசம் எல்லாம் ததும்புகிறது...

வேலைக்கு போன இடத்தில் தூது வந்ததும், அதை காண வேண்டும் என்று என்னை பாடாய் படுத்தியதும் இந்த கண்கள் தான், அந்த துன்பத்திற்கு மருந்து தருவதும் அதே கண்கள் தான்....

என்னங்க, இது எல்லாம் சிலப்பதிகாரத்தில் இருக்கிரதா என்று நீங்கள் கேட்பது புரிகிறது...

பாடலைப் பாருங்கள், அப்புறம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்....

பாடல்


அகிலுண விரித்த அம்மென் கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ்
மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து
சிதரரி பரந்த செழுங்கடைத் தூதும்
மருந்தும் ஆயதிம் மாலையென் றேத்த


பொருள்



Friday, April 26, 2013

இராமாயணம் - கை ஏந்திய கருணைக் கடல்


இராமாயணம் - கை ஏந்திய கருணைக் கடல்

இறைவனிடம் இல்லாதது எது ? எல்லாம் இருக்கிறது அவனிடம்.

இருந்தும், மானிடப் பிறவி எடுத்ததால், மனிதர்கள் போல் வாழுந்து அவர்களுக்கு ஒரு உதாரணமான வாழ்க்கை வாழ்ந்து காட்டுகிறான்.

இராவணன், சீதையை கவர்ந்து சென்று விட்டான்.  சீதை இருக்கும் இடம் இலங்கை தெரிந்தது. அங்கு போக வேண்டும் என்றால் கடலை கடக்க வேண்டும்.

வருண பகவானை வேண்டுகிறான் இராமன்....சீதையை மீட்க்க ஒரு வழி தர வேண்டும் என்று தர்ப்பை புல்லில் அமர்ந்து வேண்டினான். ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல ஏழு நாட்கள்.

பாடல்

'தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக !' என்னும்
பொருள் நயந்து, நல் நூல் நெறி அடுக்கிய புல்லில்,
கருணைஅம் கடல் கிடந்தனன், கருங் கடல் நோக்கி;
வருண மந்திரம் எண்ணினன், விதி முறை வணங்கி.

பொருள்


பகவத் கீதை - புது ப்ளாக்

பகவத் கீதை - புது ப்ளாக் 


கீதை இந்து சமயத்தின் ஒரு முக்கியமான நூல்.  

கீதைக்கு பல பெரியவர்கள் உரை எழுதி இருக்கிறார்கள்....ஆதி சங்கரர் , மத்துவர், ஸ்ரீ ராமானுஜர், இராதா கிருஷ்ணன், ஆசார்ய வினோபாபாவே போன்ற எண்ணற்ற பெரியோர்கள் உரை எழுதி இருக்கிறார்கள். 

ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது.. ஒன்றுக்கு ஒன்று மிகுந்த வேறுபாடு உள்ளதாக இருக்கிறது. 

மதக் கோட்பாடுகளை அதிகம் சேர்க்காமல், எளிய தமிழில் பகவத் கீதையை,  ஒரு ஆற்றொழுக்கான போக்கில் எனக்கு தெரிந்த வரை எழுதி வருகிறேன் -இந்த ப்ளாகில் - படித்துப் பாருங்கள்.

பிடிக்கும் என்று நம்புகிறேன்.  

http://bhagavatgita.blogspot.in/2013/04/blog-post.html

நேரம் இருப்பின், உங்கள் கருத்துகளை "comments box "இல் எழுதுங்கள். நீங்கள் உங்கள் பெயரையும், ஈ மெயில் போன்ற விவரம் தரவேண்டிய அவசியம் இல்லை. அனாமதேயமாகவும் (annonymus ) நீங்கள் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம்.

If you can fill in your e mail ID, in the subscribe box, you will be immediately notified whenever I post a blog. I will not be knowing who are all subscribed and their e mail id. You need not worry about privacy.

If you like it, please click g+ at the bottom of each blog.


நன்றாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இதை சொல்லுங்கள்.

நன்றி

இராமாயணம் - அவன் பின்னால் போன மனம்


இராமாயணம் - அவன் பின்னால் போன மனம்

இராமனை முதன் முதலாகப் பார்த்த பின், சீதையின் மனம் அவளிடமே இல்லை. அவன் பின்னாலேயே போய் விட்டது.

சீதைக்கு ஆதங்கம் தாங்கவில்லை. இத்தனை நாள் என்கூடவே இருந்தது என் மனம். இன்னைக்குத் தான் அவனை பார்த்தது. நாளைக்கு திருமணம். அதுவரை கூட பொறுக்க  முடியாதா ? அதுக்குள்ள, அவன் பின்னாலேயே போய் விட்டது. இனிமேல் நாளை அவன் வரும்போது அவன் கூடத் தான் வரும்.

இப்படி கூட நடக்குமா ? வரட்டும் என் மனம், அது கிட்ட பேசிக்கிறேன்

பாடல்

கரு நாயிறு போல்பவர் காலொடு போய்,
வரு நாள், அயலே வருவாய்; -மனனே! -
பெரு நாள், உடனே, பிரியாது உழல்வாய்;
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ?

பொருள்


திருக்குறள் - நெற்றி


திருக்குறள் - நெற்றி 


திருக்குறளில் தவறா ? திருக்குறளில் பிழையா ? வள்ளுவர் தவறு செய்வாரா ?

நம்ம ஹீரோ பயங்கர சண்டியர். களத்ல இறங்கிட்டர்னா இரண்டுல ஒண்ணுல   பாத்துருவார். பயம்னா என்னனே தெரியாது.

இவரு பேரை கேட்டாலே எதிரிங்க ஓடிருவாங்க. இவர் கூட சண்டை போடவே யாரும் வரமாட்டாங்க. அப்படி பின்னி பெடல் எடுக்கிறவர்.

என்ன செய்ய, தலைவிய பார்த்தவுடன் ஆள் அம்பேல்.

சோலையில் அவளைப் பார்த்தார்.

தேவதையோ, மயிலோ, மனிதப் பெண்ணோ என்று வியந்தார் பின்
அவளை கொஞ்ச கொஞ்சமாய் இரசிக்கிறார்...கண்ணு , புருவம் என்று ஒவ்வொன்றாய் இரசிக்கிறார் என்று இதற்க்கு முந்தைய குறள்களில் பார்த்தோம் ...

இப்ப கொஞ்சம் அப்புல (up ) சூடுறார்....நெற்றி...

அறிவு ஒளி  பொருந்திய நெற்றி...

பெண்ணுக்கும் நெற்றியும் ஒரு அழகு..பெண்ணிடம் எதுதான் அழகு இல்லை ....

குகனிடம் சொல்லும்போது இராமன் சொல்லுவான்

"இந்நன்நுதல் இவள் நின் கேள்
இந் நளிர் கடல் உலகெல்லாம் உன்னுடையது 
நான் உன் தொழில் உரிமையில் உள்ளேன்"

இந்த அழகிய நெற்றியை கொண்ட சீதை உன் உறவினள் என்று கூறுவான்.


வள்ளுவர் சொல்கிறார் அறிவு ஒளி பொருந்திய நெற்றி கொண்ட இந்த பெண்ணை பார்த்தவுடன், போர் களத்திற்கு வராதவர்கள் கூட நடுங்கும் என் வீரம் உண்டைந்து போய் விட்டதே என்று ரொம்ப பீல் பண்ணுகிறார்

ரொம்பதான் பீலிங்கு....

பொண்ணு அழகு மட்டும் அல்ல ...படித்த பொண்ணு....அறிவு முகத்தில் தெரியுது .....

பாடல்

ஒள்நுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு.



பொருள்


Thursday, April 25, 2013

திருக்குறள் - துகில்


திருக்குறள் - துகில் 


இந்த ப்ளாக் வயது வந்தவர்களுக்கு மட்டும் - உடலால் மட்டும் அல்ல உள்ளத்தாலும்.

தேவதையோ, மயிலோ, மனிதப் பெண்ணோ என்று சந்தேகம் தெளிந்து, அருகில் செல்கிறார் ஹீரோ.

அவளின் கண்ணைப் பார்க்கிறார். முடியல. உயிர் உண்ணும் கண்கள்.

அதை விடுத்து கொஞ்சம் மேலே புருவத்தை பார்க்கிறார்...அதுவும் முடியல...உயிரை நடுங்க வைக்கும் கண்களுக்கு அந்த புருவங்கள் துணை போகின்றன.

கொஞ்சம் பார்வையை கீழே இறக்குகிறார்....

அது அப்படியே நிற்கட்டும்.....

போருக்குச் செல்லும் யானைகளின்  முகத்தில் ஒரு பெரிய கவசத்தை போர்த்தி இருப்பார்கள்.

அந்த கவசத்திற்கு பல உபயோகங்கள் உண்டு.

முதலாவது, எதிரிகள் வீசும் ஈட்டி, அம்பு இவற்றில் இருந்து அது அந்த யானையை காக்கும்

இரண்டாவது, அந்த கவசத்தில் சில கூர்மையான பாகங்கள் இருக்கும். பலமான கோட்டை கதவுகளை முட்டி திறப்பதற்கு உதவும்

மூன்றாவது, அந்த யானை சுற்றி நடக்கும் போரின் குழப்பங்களை கண்டு மிரண்டு போய்  விடாமல் பாகன் நடத்தும் வழி செல்ல உதவும்.

தன்னை காக்க வேண்டும், எதிரிகளை தாக்க வேண்டும்.

இதை பார்த்த வள்ளுவருக்கு....வள்ளுவருக்கு ... ஒன்று தோன்றுகிறது.

பெண்கள் தங்கள் மார்பை மறைக்க உடுத்தும் துகில் நினைவுக்கு வருகிறது.

பெண்களின் மானத்தை, கற்பை அந்த துகில் காக்கிறது.

ஆண்களின் மனத்தை தாக்குகிறது.

பாடல்  

கடாஅக் களிற்றின்மேல் கண்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.


பொருள்


இராமாயணம் - நெறியின் புறம் செல்லா


இராமாயணம் - நெறியின் புறம் செல்லா


இராமாயணம் படிப்பவர்களும், சொல்பவர்களும் பொதுவாக அதன் கதை போக்கு, கதை மாந்தர் பற்றி படிப்பார்கள், சொல்லுவார்கள்.

ஊர் வர்ணனை பற்றி யாரும் அதிகமாக கவனம் எடுத்துக் கொள்வது இல்லை. என்ன வர்ணனை தானே, அதை படிக்காவிட்டால், சொல்லாவிட்டால் என்ன ஆகிவிடும்....கதையின் போக்குக்கு இவை ஒரு முட்டு கட்டை என்று நினைப்பாரும் உண்டு.

ஊர் வர்ணனை, அங்கு ஓடும் ஆறு, குளம், ஏறி, வீடு வாசல்கள், பொது மக்கள் இவை பற்றிய குறிப்புகள் மிக சுவாரசியமானவை.

இன்னும் சொல்லப் போனால் கதையின் சில சூட்சுமங்கள் இவற்றில் அடங்கி இருக்கின்றன.

என்ன, கொஞ்சம் பொறுமையும், நேரமும் வேண்டும்....நிதானமாக படிக்க வேண்டும்.

கோசல நாடு.

கோசலம் என்றால் மயில். மயில்கள் நிறைய உள்ள நாடு. மயில் நிறைய இருக்கிறது என்றால், மழை நன்றாக பெய்கிறது என்று அர்த்தம். மழை பெய்தால், பயிர் விழையும், பசி இருக்காது, கலையும் பக்தியும் நிறைந்து இருக்கும். சண்டை சச்சரவு இருக்காது.

அந்த ஊரில், சில விஷயங்கள் நெறி பிறழாமல் இருக்கின்றன.

அவை எவை ?

மனிதர்களை குற்றங்களுக்கு உட்படுத்துவது புலன்கள். அவை தூண்டும் ஆசைகள். கோசலத்தில் சலனம் தரும் ஐம்புலன்களும் நெறியில் நின்றன.

எல்லை தாண்டாமல் ஒரு கட்டுக்குள் இருந்தன.

புலன்கள் அதற்குரிய பொருளை பார்த்துவிட்டால் உடனே அம்பு போல் பாயும்.  பாய்கின்ற அம்பு  இலக்கை தைக்கும். விட்ட அம்பை திருப்பி பிடிக்க முடியாது. ஐம்பொறிகளை அம்பு என்கிறார் கம்பர். தைப்பதால். விட்டால், பிடிக்க முடியாது என்பதால். வேகமாக செல்வதால்.

எல்லோருக்கும் ஐம்புலன்களும் சலனம் தந்தாலும், பெண்களுக்கு கண்கள் ஒரு படி மேலே. அலை பாயும். மயக்கும். ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டும். உயிர் உண்ணும் கண்கள் என்பார் வள்ளுவர்.

பெண்களின் கண்களும் ஒரு நெறியில் நின்றன. பெண்களின் கண்கள் நெறியில் நிறக்கா விட்டால், ஆண்களின் ஐம்பொறிகளும் நிலையில் நில்லாது.



பாடல்

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்:

பொருள்


Wednesday, April 24, 2013

நளவெண்பா - தெரிந்ததும் தெரியாததும்

நளவெண்பா - தெரிந்ததும் தெரியாததும் 



நான் சில பல  ஊர்களில் கடைத் தெருவில் பார்த்திருக்கிறேன்...ஏதேதோ கடைகள் இருக்கும்...ஒரு நல்ல புத்தக கடை இருக்காது....இருந்தாலும் ஏதோ பேருக்கு சில புத்தகங்கள் இருக்கும்.

என்ன அர்த்தம்...ஊரில் புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு.


நள சக்கரவர்த்தி ஆளும் ஊரை வர்ணிக்கிறார் புகழேந்தி.


அந்த ஊரில் தெரிவது எல்லாம் புத்தகங்களும், படிப்பவர்களும் தான். எங்கு பார்த்தாலும் ஒரே புத்தகங்கள்.

தெரியாதது ஒன்று இருக்கிறது அந்த ஊரில்...அது பெண்களின் இடையாம்.....தேடினாலும் கிடைக்காது....அவ்வளவு சின்ன இடை.

அந்த ஊரில் இல்லாதாது ஒன்று உண்டு - பிச்சைகாரர்கள். பிச்சைக்காரர்களே கிடையாது.

அந்த ஊர் மக்கள்  ஒன்றே ஒன்று மட்டும் கற்றுக் கொள்ளவில்லை - அது தான் வஞ்சம்.

பாடல்  



தெரிவனநூல் என்றும் தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே - ஒருபொழுதும்
இல்லா தனவும் இரவே இகழ்ந்தெவரும்
கல்லா தனவும் கரவு.



பொருள்


திருக்குறள் - புருவம்


திருக்குறள் - புருவம் 


துன்பங்கள் பலவகை.

உடல் உபாதை, பணக் கஷ்டம், மனக் கஷ்டம் என்று பல துன்பங்கள். இவற்றை கண்டு நாம் நடுங்குவது இல்லை. ஆனால், அவளோட கண்கள் இருக்கே, அதைப் பார்த்தால் நடுக்கம் வருகிறது. உடல் உதறுகிறது.

கூற்றுவனை நேரில் பார்த்தால் நடுக்கம் வருமா, வராதா ?

அவளோட கண்ணை நேருக்கு நேர் பார்க்க முடியாது. உயிரை உண்டு விடும் கண்கள் அவை.

அவளின் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் பார்வையை சற்று விலக்கி   மேலே பார்க்கிறேன்.

அந்த புருவம். ஐயோ. அது அந்த கண்ணை விட கொடியதாய் இருக்கிறதே.

நல்லது செய்யணும் என்ற எண்ணமே கிடையாது அந்த புருவங்களுக்கு.

 நல்லது செய்ய வேண்டும் என்றால் எப்படி இருக்க வேண்டும் ? நேராக இருக்க வேண்டும், வளையாமல் இருக்க வேண்டும். அந்த புருவம் இருக்கிறதே என்னமா வளைந்து இருக்கிறது. பாத்தாலே தெரியுது, இது ஒண்ணும் சரி இல்லை என்று.

இந்த புருவம் மட்டும் வளையாமல் நேரா இருந்திருந்தா, இவளோட கண்கள் இப்படி நான் நடுங்கும் துன்பத்தை தந்து இருக்காது.

அவளுடைய புருவத்தில் நிறைய முடி இருக்கிறது. ஆனால் எல்லாம் குட்டி குட்டியா இருக்கு. இன்னும் கொஞ்சம் நீளமாக வளர்ந்து, அவளுடைய கண்ணை கொஞ்சம் மறைத்தால், எனக்கு இந்த நடுக்கம் குறையும்ல....

மொத்தத்தில் அவளுடைய கண்ணும் புருவமும் சேர்ந்து என்னை ஒரு வழி பண்ணுகின்றன என்கிறார் வள்ளுவர்


பாடல்

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.


பொருள்


Tuesday, April 23, 2013

நள வெண்பா - எங்கட்கு இறை


நள  வெண்பா - எங்கட்கு இறை 


வெண்பாவிற்கு ஒரு புகழேந்தி என்பார்கள். வெண்பா என்ற பா வடிவம் புகழேந்தியிடம் அப்படி விளையாடுகிறது

புகழேந்தி பாடிய நளவெண்பாவில் இருந்து சில பாடல்கள் ....

முதலில் யாரும் அழைக்காமலே தானே பன்றியாக வந்து  அவதரித்தான்.

பிரகலாதன் என்ற சிறுவன் அழைத்ததற்காக தூணில் நரசிம்மமாகத் தோன்றினான்

அவ்வளவு ஏன், ஒரு யானை ஆதி மூலமே என்று கூப்பிட்ட உடன் ஏன் என்று கேட்டான் எங்கள் இறைவன் என்று திருமாலை கொண்டாடுகிறார் புகழேந்தி. யானை கூப்பிட்டபோது வந்தவன், நீங்கள் கூப்பிட்டால் வரமாட்டானா ?



பாடல்


ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்நிற்னான் வேழம் முதலே எனஅழைப்ப
என்என்றான் எங்கட் கிறை.

பொருள்


பிரபந்தம் - மூப்பு வரு முன்


பிரபந்தம் - மூப்பு வரு முன் 


மூப்பு என்பது ஏதோ ஒரு நாள் வரப்போகிறது என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வரும்போது பார்த்துக் கொள்ளலாம். நான் இப்போது திடமாகத்தானே இருக்கிறேன் என்று எல்லோரும் நினைக்கிறார்கள்

 அது என்ன ஒரு நாளில் வருவதா ?

அடுத்த வரும், ஜனவரி மாதம் இருபதாம் தேதியில் இருந்து  நீ வயதானவன் ஆகிவிடுவாய் என்று யாரவது சொல்லுவார்களா நம்மிடம் ?

இல்லை.

மூப்பு என்பது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் வயதானவர்கள் ஆகிக் கொண்டே இருக்கிறோம்.

மூப்பு ஒரு நாளில்  நிகழ்வது இல்லை...வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பதற்கு.


 பாடல்

முற்றமூத்துக்கோல்துணையா முன்னடிநோக்கிவளைந்து,
இற்றகால்போல்தள்ளி மெள்ள இருந்தங்கிளையாமுன்,
பெற்றதாய்போல்வந்த பேய்ச்சி பெருமுலையூடு, உயிரை
வற்றவாங்கியுண்ட வாயான் வதரிவணங்குதுமே.(968)


 பொருள்


அபிராமி அந்தாதி - பெண் எனும் சீதனம்


அபிராமி அந்தாதி - பெண் எனும் சீதனம் 


பெண் கொண்டு வருவது அல்ல, அவளே ஒரு சீதனம்.

அவளை விடவா இன்னொரு பெரிய சீதனம் இருக்க முடியும் ?

திருமணம் முடித்து, முதன் முதலாய் மனைவியின் கை பிடித்து நடக்கும் போது  எப்படி இருக்கும் ?

இவள் என்னவள். எனக்கே உரியவள் என்ற சந்தோஷம் உடல் எல்லாம் படரும் அல்லவா. 

இவ்வளவு அழகானவள், இவ்வளவு இனிமையானவள் என் மனைவியா. சில சமயம் நம்ப முடியாமல் கூட இருக்கும்....

சின்ன நெற்றி, அதில் புரளும் ஓரிரண்டு முடி கற்றைகள், குழந்தை போன்ற மொழி, சில்லென்ற கை விரல்கள்....இவள் என் மனைவியா...என்னோடு இருக்கப் போகிறவளா...என்று மீண்டும் மீண்டும் மனதில் அலை அடிக்கும் அல்லவா....

அபிராமியை கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு. 

பட்டுச் சேலை, கன்னத்தில் வெட்கம், காதில் கம்மல்...புகுந்த வீடு போகிறாள்....

நடந்தது என்றோ...அபிராமி பட்டர் நினைத்துப் பார்க்கிறார்...

பாடல் 

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன் 
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த 
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம், 
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே


பொருள் 

Monday, April 22, 2013

இராமாயணம் - நான் இல்லாமல் ஜாலியா இருக்கலாம்னு....


இராமாயணம் - நான் இல்லாமல் ஜாலியா இருக்கலாம்னு....



எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம். இந்த S  P  பாலசுப்ரமணியம், யேசுதாஸ் இவர்கள் எல்லாம் கோவித்து திட்டினால் எப்படி இருக்கும் என்று ? அப்ப கூட அவங்க குரல் இனிமையாகத் தானே இருக்கும் ? அந்த திட்டு கூட இனிமையாகத் தானே இருக்கும் ? இன்னும் கொஞ்சம் சத்தம் போட மாட்டார்களா என்று தானே இருக்கும் ? அதுக்கு பேரு கோபமா ?


குயில் கோபித்து கூவியது மாதிரி என்கிறான் கம்பன், சீதையின் கோபக் குரலை


இராமன், "நீ இங்கேயே இரு, நான் கானகம் போகிறேன்" என்று சொன்னவுடன், சீதை தேம்பி தேம்பி அழுகிறாள். உயிர் உமிழா நின்றாள் என்பான் கம்பன்.

அழுகை பெண்களின் முதல் அஸ்திரம். இராமன் அசையவில்லை.

அடுத்து பிரமாஸ்திரத்தை எடுக்கிறாள் சீதை...

"நான் கூட இருந்தால் உனக்கு துன்பம்....என்னை விட்டு விட்டு போனால், கானகத்தில் உனக்கு இன்பமாய் இருக்குமா ?" என்று கேட்கிறாள்...

என்ன சொல்லுவான் இராமன்....

"உன்னை பிரிந்து இருப்பது ஜாலி " என்றும் சொல்ல முடியாது.

"நீ கூடவருவது என் இன்பத்திற்கு இடைஞ்சல் " என்றும் சொல்ல முடியாது.

இராமன் நினைத்தது சீதை கானகத்தில் வந்து துன்பப்படக் கூடாதே என்று.

பெண்கள், எப்படி, அப்படியே ஒரு வாதத்தை மாற்றி விடுகிறார்கள்.

இதுக்கு மேலேயும் இராமன் நீ வராதே என்று எப்படி சொல்ல முடியும் ? 


பாடல்


கொற்றவன் அது கூறலும், கோகிலம்
செற்றது அன்ன குதலையள் சீறுவாள்,
'உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே?
என் துறந்த பின், இன்பம் கொலாம்?' என்றாள்.


பொருள்


Sunday, April 21, 2013

இராமாயணம் - செவி சுடச் தேம்புவாள்


இராமாயணம் - செவி சுடச் தேம்புவாள்

வார்த்தைகள் கம்பனிடம் கை கட்டி ஊழியம் பண்ணுகின்றன. அவன் நினைக்கும் போது என்னை எடுத்துக்கொள், என்னை எடுத்துக்கொள் என்று ஒவ்வொரு வார்த்தையும் வந்து வரிசையில் நிற்கும் போல இருக்கிறது.

தன் கணவன் பெரிய மன்னாதி மன்னனாகப் போகிறான் என்று நினைத்து இருந்தவளிடம், அரசு கிடைக்காதது மட்டும் அல்ல, கானகம் வேறு போக வேண்டும் என்று சொல்கிறான் இராமன்.

நீ வரவேண்டாம்.இங்கேயே இரு....நான் போய் வருகிறேன் என்றான்.

சாதாரண பெண்ணாய் இருந்தால் அரச பதவி போச்சே என்று வருத்தப் பட்டிருப்பாள்.

சீதை அரசு போனதற்காக வருந்தவில்லை. இராமனை விட்டு பிரியப் போகிறோமே என்று வருந்தினாள் . அதுவும் எப்படி தேம்பி தேம்பி அழுகிறாள். சின்ன குழந்தைகள் எப்படி நினைத்து நினைத்து தேம்புமோ அப்படி தேம்பி அழுகிறாள்.


சுடு  சொல் என்று கேட்டு இருக்கிறோம். சுடு சொல் என்றால் தீமையான சொல் என்று பொருள் சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

கம்பன் சொல்கிறான், "நீ இங்கேயே இரு" என்று இராமன் சொன்ன சுடு சொல் சீதையின்  செவியை சுட்டதாம்.

சொல் சுடும். வள்ளுவனும் சொல்லுவான் "தீயினார் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினார் சுட்ட வடு" என்று.

சொல் சுடும்.

அசோக வனத்தில் சீதை சொல்லுவாள் ...

""எல்லை நீத்த இந்த உலகம் யாவையும் என் சொல்லினால் சுடுவேன் , அது தூயவன்  வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன் " என்று.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சொல் சுட்டுவிடும்.


பாடல்


நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்,
மேய மண் இழந்தான் என்றும், விம்மலன்;
'நீ வருந்தலை; நீங்குவென் யான்' என்ற
தீய வெஞ் சொல் செவி சுடத் தேம்புவாள்.


பொருள்


Saturday, April 20, 2013

தேவாரம் - பெண்ணோடு தனிமையில் பேச


தேவாரம் - பெண்ணோடு தனிமையில் பேச 


மனைவியிடம் கொஞ்சம் தனியாக பேச  என்றால், அக்கம் பக்கம் யாரும் இருக்கக் கூடாது.அமைதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் மென்மையாக பேச முடியும்.

அது அப்படி இருக்கட்டும்.

அது ஒரு அழகிய கிராமம். ஊருக்கு வெளியே சில மலைகள். அந்த மலைகைளில் இருந்து அருவி நீர் விழுகிறது. அது விழும் போது வரும் வழியில் சில பல மரங்களை இழுத்துக் கொண்டு வந்திருக்கிறது. அந்த அருவியில் நீர் திவலைகள் தெறிக்கும் போது, அதில் ஒளி  பட்டு  அது முத்து பவளம் போல ஜொலிக்கிறது.

அது ஊரு நிலவரம்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

மனைவியை கட்டி அணைக்க  வரும்போது இன்னொரு பெண்ணையும் கூடவே கூட்டி வந்து இருக்கிறார். பத்தா குறைக்கு கழுத்தில கைல சத்தம் போடும் ஆபரணம் வேற.

இதை எல்லாம் வைத்துக் கொண்டா மனைவியை கட்டி அணைப்பார்கள் ?

என்று சிவனை பார்த்து கேட்க்கிறார் ஞான சம்பந்தர்.....



மரவஞ்சிலை தரளம்மிகு  மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புனலுடனாவது மோரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.


பொருள்


திருக்குறள் - உயிருண்ணும் கண்கள்


திருக்குறள் - உயிருண்ணும் கண்கள் 


தலைவியை மொத்தமா பார்த்த தலைவர் இன்னும் கொஞ்ச கிட்ட போறார்....கண்ணை பார்க்கிறார்....

அவளோட குரலை இன்னிக்கு எல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம்...அவ்வளவு இனிமை.

சிரிச்சா சில்லறை சிதறுகிற மாதரி அப்படி ஒரு கல கலப்பு.

விரல்களோ அவ்வளவு மேன்மை...

அலை பாயும் கூந்தல்..

எல்லாம் நல்லாத்தான் இருக்கு...அவளிடம் எல்லாமே இனிமை தான் ஆனால் இந்த கண்ணு இருக்கே ...கண்ணு...அது தான் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு.....

உயிரை அப்படியே சுருட்டி எடுத்துக்கொண்டு போய் விடும்.....எப்படி இந்த கண்ணு மட்டும் இப்படி இருக்கு...பாக்க என்னமோ வெகுளியாத்தான் தெரியுது...இருந்தாலும்...அப்பப்ப இதய துடிப்பை நிறுத்தி விடுகிறதே ...

பாடல்

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக் கமர்த்தன கண்.

பொருள்



திருக்குறள் - கற்க

திருக்குறள் - கற்க 


பொதுவாக மாணவர்கள் மதிப்பெண்களை நினைத்தே படிக்கிறார்கள். நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும், பள்ளியில், மாநிலத்தில், நாட்டில் முதலாவதாக வரவேண்டும் என்று நினைத்தே கல்வி கற்கிறார்கள். அப்படி படிக்கும் படிப்பு வெகு சீக்கிரம் மறந்தும் போய் விடும்.

வள்ளுவர் அப்படி படிக்க சொல்லவில்லை.

கற்றதனால் ஆய பயன் என் கொல் அவயத்து முந்தி நிர்க்காவிடில் என்று சொல்லவில்லை.


கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக


நீங்கள் அறிந்த குறள்தான்.

கற்பவை கற்க கசடறக் = கற்க வேண்டியவற்றை ஐயம் இன்றி கற்க. அது என்ன ஐயம் ? சந்தேகம் என்று ஒரு பொருள். பரிமேல் அழகர் ஒரு படி மேலே போகிறார். எதை கற்றாலும், சில விபரீத அர்த்தங்கள் தோன்றலாம். சில பேருக்கு மூளை குதர்க்கமாகவே சிந்திக்கும். விபரீத அர்த்தங்களை விடுத்து நல்லவற்றை அறிந்து கொள்ள வேண்டும். இராமாயணம் படித்துவிட்டு, அதில் இருந்து என்ன தெரிந்து கொண்டாய் என்றால், அப்பா அம்மா   பேச்சை கேட்டால் துன்பம்தான் மிஞ்சும்   என்று அறிந்து கொண்டேன் என்று சொல்வதைப் போல. சரி, எது விபரீத அர்த்தம் எது நல்ல அர்த்தம் என்று எப்படி அறிந்து கொள்வது ? இதற்குதான், கற்றறிந்த அறிஞர்களின் துணை வேண்டும். பெரியவர்கள் சொன்னதை கேட்க்க வேண்டும். சில சமயம், நாமே எல்லாவற்றையும் படித்து அறிந்து கொள்வோம் என்பது நடக்காது. திருக்குறளுக்கு  பரிமேல் அழகர் போன்றோர் உரை வேண்டி இருப்பது போல.

எதை கற்க வேண்டும் ? கற்க வேண்டியவற்றை கற்க வேண்டும். எது கற்க வேண்டியது ? அறம் , பொருள், இனபம் , வீடு இவற்றை தருவதை கற்க வேண்டும்.

கற்ற பின் நிற்க அதற்க்கு தக - கற்றபின், அதை உள்வாங்கி, காலம் இடம் அறிந்து அதற்க்கு ஏற்றாற்போல், தகுந்த மாதிரி நடந்து கொள்ளவேண்டும். கற்றவற்றை அப்படியே நடைமுறை படுத்தச் சொல்லவில்லை.




கல்வி என்பது தனி மனிதனுக்காகவா ? சமுதாயத்திர்காகவா ? பொதுவாக, நாம் கல்வி என்பது நமக்கு மட்டும் என்று இருக்கிறோம். நல்ல வேலை கிடைக்க, நிறைய பணம் சம்பாதிக்க, சமுதாயத்தில் ஒரு நல்ல மதிப்பை பெற...இதற்குத்தான் கல்வி என்று பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்

வள்ளுவர் அப்படி நினைக்கவில்லை. ஒருவன் கல்வி கற்பது, தனக்காக மட்டும் அல்ல, சமுதாயத்திற்காகவும் என்று சொல்ல வருகிறார்.

மருத்துவம் படிக்கும்போது - மதிப்பெண் பெற வேண்டும் என்று நினைத்து படிக்கக் கூடாது ....மக்களின் வலியை தீர்க்க நான் உதவுவேன் , மக்கள் உயிர் காக்க உதவுவேன்  என்ற நினைவோடு படிக்க வேண்டும். அப்படி படிக்கும் போது, நல்லபடியாக படிக்க வேண்டும், நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும், என்னை நம்பி சில உயிர்கள் இருக்கின்றன என்ற பொறுப்போடு படிக்கத் தோன்றும்

பொறியியல் (Engineering ) படிக்கும் போது , நான் கட்டும் பாலத்தால், அணையால், வீட்டால் மக்கள் பயன் பெற வேண்டும் என்ற கனவோடு படிக்க வேண்டும்.

இதனால் தான் கல்வி என்ற இந்த அதிகாரத்தை பொது வாழ்க்கையை பற்றி பேசும் அரசியலில் வைத்து இருக்கிறார் வள்ளுவர்.

சமுதாய  சின்தனையோடு கல்வி கற்க வேண்டும்.

அப்படி ஒரு கல்வி முறை வந்தால் சமுதாயம் மேம்படும், கல்வி என்பது பொருள் சேர்க்கும் வழி என்பது மாறி உதவி செய்யும் கருணை உள்ளம் பிறக்கும் , ஏமாற்று குறையும்,...நிறைய நல்லது நடக்கும்....

யோசித்துப் பாருங்கள் ... எவ்வளவு உயர்ந்த சிந்தனை என்று ....


திருவாசகம் - நெஞ்சம் உருகாதால்


திருவாசகம் - நெஞ்சம் உருகாதால் 


ஒரு புரியாத பொருளை, அறியாத பொருளை புரியவைக்க ஒரு தெரிந்த பொருளை, அறிந்த பொருளை சுட்டிக்காட்டி அது இது போல இருக்கும் என்று சொல்லி விளங்க வைக்கலாம்.

அம்மாவும், சகோதரியும் போய் பெண் பார்த்துவிட்டு வருவார்கள்...பையன் கேட்பான்..."அம்மா, பொண்ணு எப்படி இருக்கானு"

அம்மா: நல்லாத்தான் இருக்கா ?

அவன்: நல்லா இருக்கானா எப்படி இருக்கா ? கருப்பா சிவப்பா ? என்ன நிறம் ?

அம்மா: ம்ம்ம்ம்...வந்து...கறுப்பு நு சொல்ல முடியாது, அதுக்காக சிவப்பும் இல்ல...ஒரு புது நிறம்டா ...

அவன்: உயரமா ? குள்ளமா ?

அம்மா: ரொம்ப உயரமும் இல்ல, குள்ளமும் இல்ல...

அவன்: என்னமா...இப்படி போட்டு படுத்துற....யாரு மாதிரி இருப்பான்னு சொல்லு ?


அம்மா: என்னத்த சொல்றது...நம்ம அக்கம் பக்கத்துல யாரு மாதிரியும் இல்ல....அடுத்த வாரம் நீ தான் பாக்க போறியே...அப்ப பாத்துக்கோ ....

என்று சொல்லிவிட்டு போய் விடுவாள்....

இந்த பொண்ணுக்கே இந்த பாடு என்றால்....இறைவனை எதை காட்டி அவன் இப்படி இருப்பான் என்று சொல்லுவது ?

இப்படி எதை காட்டியும் சுட்ட முடியாமல் இருப்பதைத் தான் "சுட்டறுத்தல்" என்று சொல்லுவார்கள்.

இறைவன் நீங்கள் அறிந்த எது மாதிரியும் இருக்க மாட்டான்....அவனுக்கு உதாரணம் சொல்ல முடியாது...

சுட்டறுத்தல் என்பதன் கீழ் மாணிக்க வாசகர் அருளிய ஒரு பாடல்

பாடல்

வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே யெனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மேல் ஆகப்
பதைத்துருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்
குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சங் கல்லாம்
கண்ணிணையும் மரமாந்தீ வினையி னேற்கே.


பொருள்


Friday, April 19, 2013

கம்ப இராமாயணம் - உயிர் உமிழா நின்றாள்


கம்ப இராமாயணம் - உயிர் உமிழா நின்றாள் 


இராமன் தான் மட்டும் கானகம் போகிறேன், நீ இங்கேயே இரு என்று சீதையிடம் கூறுகிறான்.

சீதைக்கு வருத்தம் தாங்கவில்லை. கானகம் போக வேண்டுமே என்று அல்ல, தன்னை இங்கேயே இரு என்று சொல்லிவிட்டானே என்று.

பாற்கடலில் இருந்து அயோத்தி வரை ஒன்றாக வந்து விட்டேன், இதோ இருக்கிறது கானகம் அங்கே வரமாட்டேனா என்று வருந்துகிறாள் ?

அவங்க அப்பா அம்மா சொன்னதை கேட்டு கானகம் போகத் துணிந்தது நல்ல காரியம்தான்...என்னை என்னை ஏன் இங்கேயே இரு என்று சொன்னான் என்று நினைத்து நினைத்து உயிரை வெளியே துப்பி விடாமல் இருந்தாள்....

வாயில் போட்டவுடன், ரொம்ப கசந்தது என்றால் உடனே துப்பி விடுவோம்...இராமன் அப்படி சொன்னவுடன், அவளுக்கு தன்  உயிரே கசந்து விட்டதாம்....உமிழ்ந்திருக்க வேண்டும்...அப்படி செய்யவில்லை....மெல்லவும் முடியவில்லை...விழுங்கவும் முடியவில்லை...அப்படி ஒரு சங்கடம்....  

பாடல்


அன்ன தன்மையள், 'ஐயனும், அன்னையும்,
சொன்ன செய்யத் துணிந்தது தூயதே;
என்னை, என்னை, "இருத்தி" என்றான்?' எனா,
உன்ன, உன்ன, உயிர் உமிழா நின்றாள்.

பொருள்


திருவாசகம் - கெடுதலிலும் நன்மை


திருவாசகம் - கெடுதலிலும் நன்மை 


ஏதாவது கெட்டுப் போனால் நாம் சந்தோஷப் படுவோமா ?

மாணிக்க வாசகர் சந்தோஷம் மட்டும் அல்ல தோள் கொட்டி ஆடுகிறார்....

இந்த உலகம் ஒரு நாள் மறைந்து போகும்...இந்த சூரியன், விண்மீன்கள் எல்லாம் ஒளி இழந்து, வெப்பம் இழந்து, இருக்கும் இடம் தெரியாமல், வெட்ட வெளியாகப் போகும்.

அந்த வெட்ட வெளி கூட மறைந்து போகும்...எல்லாம் மறைந்தாலும் இறைவன் மறைவது இல்லை....

என் உடல் கெட்டு, உயிர் கெட்டு , உணர்வு கெட்டு , உள்ளமும் போய் , நான் என்ற எண்ணமும் போய் மறையும் ...அந்த மறைவை கொண்டாடுவோம் என்கிறார் வாசகர்.....

என்னுடைய உடல், என்னுடைய உயிர், என் மனம் என்ற அகங்காரம் மறையும்....

எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூபதியே என்பார் அருணகிரிநாதர். எல்லாம் இழப்பது நலம்.

பாடல்


வான்கெட்டு மாருத மாய்ந்தழல்நீர் மண்கெடினுந்

தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்
கூன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டேன் உள்ளமும்போய்
நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.

பொருள்

புற நானூறு - பரிசு கிடைக்காத சோகம்


புற நானூறு - பரிசு கிடைக்காத சோகம்

அந்த காலத்தில் புலவர்கள் ரொம்ப துன்பப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வரும் ஒரே வருமானம் அரசர்கள் தரும் பரிசு தான். அரசனுக்கு ஆயிரம் வேலை இருக்கும். நிர்வாகம், போர், வரி வசூல், வாரிசு சண்டைகள், உள்நாட்டு குழப்பங்கள் என்று. இதற்க்கு நடுவில் நேரம் ஒதுக்கி, புலவர் பாடும் பாடல்களை கேட்டு, அதற்க்கு பொருள் புரிந்து, பாராட்டி பரிசு தரவேண்டும்.

இங்கு ஒரு புலவர்....

புலவருக்கு கையில் காசு இல்லை. வறுமை. இதில் இவர் திருமணம் வேறு செய்து கொண்டு, பிள்ளை வேறு. இவரை நம்பி யார் பொண்ணு குடுப்பார்களோ தெரியவில்லை. பாவம் அந்த பெண். பிள்ளை பாலுக்கு அழுகிறது.. அவளிடம் பால் இல்லை தருவதற்கு. புலவர் பரிசு பெற்று வந்தால், உணவு சமைக்கலாம் என்று காத்து இருக்கிறாள். வீட்டில் சாப்பிட ஒன்றும் இல்லை. உணவை தேடி தேடி வீட்டில் உள்ள எலிகள் கூட இறந்து போய்விட்டன. 

அரசன் பரிசு தருவாதாய் இல்லை. பாட்டை மட்டும் கேட்டு இரசித்து விட்டு, கடைசி வரை பரிசு தரவே இல்லை. ஏன் என்று தெரியவில்லை. பரிசை கட்டி இருக்கிறான், ஆனால் தரவில்லை.  அவனுக்கு என்ன பொருளாதார நெருக்கடியோ. அல்லது, வேறு எதுவும் பிரச்சனையில் அவன் மனம் கிடந்து உழன்றதோ தெரியாது.

புலவர் புறப்பட்டுவிட்டார். ...எனக்கு பரிசு தரவில்லையே, உனக்கு வெட்கமே இல்லை என்று போகும் போது நாசுக்காக திட்டிவிட்டு போகிறார்.

பாடல்:


அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு
அணங்குடை அரவின் அருந்தலை துமிய
நின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக்
குன்றுதூவ எறியும் அரவம் போல
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று
அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல்!நின்
உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென்
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்எனக்
கொள்ளா மாந்தர் கொடுமை கூறநின்
உள்ளியது முடிந்தோய் மன்ற; முன்னாள்
கையுள் ளதுபோல் காட்டி வழிநாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும் நாணக் கூறி என்
நுணங்கு செந்நா அணங்க ஏத்திப்
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின்
ஆடுகொள் வியன்மார்பு தொழுதெனன் பழிச்சிச்
செல்வல் அத்தை யானே; வைகலும்
வல்சி இன்மையின், வயின்வயின் மாறி
இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்
பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து
முலைக்கோள் மறந்த புதல்வனொடு
மனைத்தொலைந் திருந்தவென் வாள்நுதற் படர்ந்தே.


பொருள்:

Thursday, April 18, 2013

சித்தர் பாடல் - அறம் செய்ய


சித்தர் பாடல் - அறம் செய்ய 


அறம் செய்வது, பசித்தவருக்கு அன்னம் இடுவது, ஏற்பவருக்கு இடுவது என்பது தமிழ் இலக்கியத்தில் எங்கும் பரவிக் கிடக்கிறது.

எங்காயினும் வரும் ஏற்பவருக்கு இட்டது என்பார் அருணைகிரி

பொருள் கொடுக்க முடியாவிட்டால் நாலு நல்ல சொல்லாவது தாருங்கள் என்பார் திருமூலர்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் பற்றி வள்ளுவரும் கூறுகிறார்

நாம் ஏன் தானம் செய்வது இல்லை ? அல்லது தான தர்மம் செய்வது ஏன் கடினமாக இருக்கிறது ?

இந்த பொருள் எல்லாம் என்னுடையது, நான் சம்பாதித்தது என்ற எண்ணம் இருக்கும் போது கொடுக்கும் மனம் வராது.

இவை எனக்கு என்னை விட ஒரு பெரிய சக்தியால் தரப் பட்டது என்று நினைத்தால் கொடுப்பது எளிதாகும்.

இருந்த சொத்தை எல்லாம் ஒரே இரவில் தானம் செய்த பட்டினத்தார் சொல்கிறார் ....

பாடல்


பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை  பிறந்துமண்மேல் 
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடைநடுவில் 
குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்த தென்று கொடுக்கறியாது 
இறக்குங் குலாமருக்கென் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே.

சீர் பிரித்த பின்

பிறக்கும் போது கொண்டு வந்தது இல்லை பிறந்து மண் மேல் 
இறக்கும் போது கொண்டு போவது இல்லை இடை நடுவில் 
குறிக்கும் இந்த செல்வம் சிவன் தந்தது என்று கொடுக்க அறியாது 
இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே 

(குலாமர்  = உலோபி, கஞ்சன்)



அபிராமி அந்தாதி - மகிழ்நன்


அபிராமி அந்தாதி - மகிழ்நன் 

கண் போன்றவன் என்பதால் கணவன். கண் அவன் என்பதால் கணவன். மனைவியோடு கூடி என்றும் மகிழ்ச்சியாக இருப்பதால் மகிழ்நன் என்றொரு புதிய வார்த்தையை தருகிறார் அபிராமி பட்டர். அபிராமி போல ஒரு பெண்ணை மனைவியாக பெற்றால் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன குறை ?


அம்மா, என் உயிர் மத்திடை பட்ட தயிர் போல தளர்கிறது. இப்படி தளர்வு அடையும் என் உயிருக்கு ஒரு நல்ல கதியை நீ தான் தர வேண்டும். தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் (படைத்தல்), அயனும் (காத்தல்), நிலவை தலையில் கொண்ட மகிழ்நன் (உன் கணவன் சிவன் - அழித்தல்) இந்த மூவரும் வணங்கும் சிறந்த அடிகளை கொண்டவளே, சிவந்த திலகம் அணிந்தவளே, சுந்தரியே 

 பாடல் 


ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர் 
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும், 
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும் 
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.


பொருள் 


Wednesday, April 17, 2013

திருக்குறள் - பெண் எனும் கூற்று


திருக்குறள் - பெண் எனும் கூற்று 


கூற்றுவன் என்றால் எமன். கூறு போடுபவன் கூற்றுவன். உயிரையும் உடலையும் கூறு போடுபவன் என்பதால் அவன் கூற்றுவன். இருப்பவர்களிடம் இருந்து (உயிர்) இல்லாதவர்களை பிரிப்பதால் அவன் கூற்றுவன். 

கூற்றுவன் தன்னோடு நம் உயிரை கொண்டு சென்று விடுவான். யாராவது எமனை பார்த்து இருக்கிறார்களா ? 

இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணை காதலித்தவர்கள் எல்லோரும் எமனை பார்த்து இருக்கிறார்கள். 

அவள் போகும் போது அவன் உயிரை கையோடு கொண்டு சென்று விடுகிறாள். உயிரை கொண்டு செல்பவந்தானே கூற்றுவன். அப்படி என்றால் அவளும் எமன் தானே. 

பெண்ணுக்கு ஆயிரம் குணங்கள்  உண்டு. காலம் காலமாக நாம் பெண்களுக்கு வஞ்சனை செய்து வருகிறோம் ...அவர்களுக்கு அச்சம், மேடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கே குணங்கள்தான் உண்டென்று சொல்லி.

அவளின் அன்பு, காதல், கோபம், செல்ல சிணுங்கல், தன்னவன் மற்றவளை பார்கிறானோ என்ற சந்தேகம், பரிவு, தயை, கருணை, தியாகம் என்று ஆயிரம் குணங்கள் அவளுக்கு 

குணங்களின் குன்று அவள்...

அழியாத குணக் குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே. என்று உருகுவார் அபிராமி பட்டர். 


பாடல் 

பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன் 
பெண்டகையாற் பேரமர்க் கட்டு.

சீர் பிரித்த பின் 

பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன் 
பெண் தகையால் பேரமர் கட்டு 

பொருள் 

பண்டு = முன்பு. அவளைப் பார்பதற்கு முன்பு 

அறியேன் = அறியவில்லை 

கூற்று என்பதனை = கூற்று என்ற எமனை. கூற்றுவன் என்று சொல்லிவிட்டால் அது ஆண் பாலாகிவிடும். இவளோ பெண். எனவே "கூற்று" என்று சொல்லி நிறுத்தி விட்டார்.

இனி அறிந்தேன் = இப்போ தெரியுது அது யாருன்னு 
 
பெண் தகையால் = பெண் தன்மையால். தகை என்றால் அழகு செய்தல், அன்புடன் இருத்தல். 

பேரமர் கட்டு  = பெரிய அழகிய கண்களை கொண்டது என்று. அமர் என்றால் போர் களம். அவள் மட்டும் அல்ல தன் படைகளான கண், போன்ற மற்ற அவயங்கள், அவளின் வெட்கம் போன்ற குணங்கள் என்னும் படை பலத்தோடு போர் களத்திற்கு வந்திருக்கிறாள் 

வெல்வது மட்டும் அல்ல, இந்த போர் களத்தில் இருந்து உயிரையும் எடுத்துக் கொண்டு சென்று விடுவாள்.... 

திருக்குறள் - லுக்கு


திருக்குறள் - லுக்கு 


பெண்ணின் கண்ணை நேருக்கு நேர் பார்த்து இருக்கிறீர்களா ? ரொம்ப கஷ்டம்.

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்பன் கம்பன். 

கண்ணோடு கண் கலத்தல் உடலோடு உடல் சேர்வதை விட அதிக இன்பம் தருவது.

அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.

 தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா 
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா 
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே-- 
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே,

என்று அபிராமியின் கடை கண்களை பார்த்து உருகுவார் அபிராமி பட்டர்.

தெய்வப் பெண்ணோ, மயிலோ, என்று மயங்கிய ஹீரோ கடைசியில் அவள் கம்மல் அணிந்த மானிடப் பெண்தான் என்று அறிந்து கொண்டதை முந்தைய பாடலில் பார்த்தோம்.

தலைவர் இன்னும் கொஞ்சம் கிட்ட போறார்.  

அவளை பார்க்கிறார். அவளும், போகிற போக்கில் அவன் மீது ஒரு பார்வையை வீசிப் போகிறாள். 

இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை மறந்தது...

தலைவருக்கு பயம்..ஒரு வேளை நம்மை தப்பா எடுத்துக் கொண்டிருப்பாளோ என்று. ...அவள் பார்வை இவன் மனதில் கலவரத்தை உண்டு பண்ணுகிறது....என்ன செய்வது என்ற குழப்பம். திருப்பியும் பார்க்கலாமா ? அவள் பார்வையை தாங்க முடியுமா என்ற பயம் வேற....

அவளின் வெகுளியான (innocent ) முகம், பயந்த சுபாவம், வெட்கம் கலந்த பார்வை எல்லாம் என்னமோ செய்கிறது. 

தானே போராடி வெல்லக் கூடிய ஒருவன் , பெரிய படையையும் துணைக்கு கூட்டிக் கொண்டு வந்தால் எப்படி இருக்கும்.

அவள் தனி ஆளே என்னை வென்று விடுவாள்..இதோடு அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்ற படையையும் கூட்டிக்  கொண்டு வந்து இருக்கிறாள்...நான் எப்படி அவளை வெல்ல முடியும்....

 

பாடல் 

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

சீர் பிரித்த பின் 

நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு 
தானை கொண்டு அன்ன உடைத்து 


பொருள் 

நோக்கினாள் = என்னை பார்த்தாள் 

நோக்கு எதிர் நோக்குதல் = என் பார்வைக்கு அவளின் எதிர் பார்வை 

தாக்கு அணங்கு = தானே தாக்கி வெல்லும் ஒரு தெய்வப் பெண் 
 
தானை = படை 

கொண்டு அன்ன உடைத்து = கொண்டு வந்ததைப் போல இருக்கிறது ..

 

Tuesday, April 16, 2013

திருக்குறள் - கண்டவுடன் காதலா ?

திருக்குறள் - கண்டவுடன் காதலா ?


இன்பத்துப் பால்....வள்ளுவர் 25 அதிகாரம், 250 பாடல் எழுதி இருக்கிறார்.

அத்தனையும், காதல் சொட்டும் பாடல்கள். 8 வார்த்தையில் காதலை இவ்வளவு அழுத்தமாய் சொல்ல முடியுமா என்று உதட்டோரம் புன்னகையை வரவழைக்கும் பாடல்கள்.

அதிகாரங்களை வரிசைப் படுத்துவதில் ஆகட்டும், அதிகாரத்திற்குள் பாடல்களை வரிசைப் படுத்துவது ஆகட்டும் ...அதிலும் ஒரு அழகு சேர்த்திருக்கிறார் வள்ளுவர்.

முதல் பாடல்....தலைவன் முதன் முதலாக தலைவியை சந்திக்கப் போகிறான். அவள் தான் அவன் தேடிய காதலி என்று அவனுக்குத் தெரியாது. அவளுக்கும் தெரியாது இன்று அவள் அவளின் காதலனை காணப் போகிறாள் என்று.

அவள் பாட்டுக்கு சோலையில் உலவிக் கொண்டு இருக்கிறாள்.

அவன், அந்த சோலைக்கு வருகிறான். அவள் இருப்பாள் என்று இவனுக்குத் தெரியாது. அவன் வருவான் என்று இவளுக்கும் தெரியாது. இருவரும் ஒருவரை ஒருவர் இதுவரி பார்த்துக் கொண்டது கூட தெரியாது.


வள்ளுவர் காமிரா கோணம் வைக்கிறார் ...கதாநாயகன் பார்வையில் இருந்து.

ஒரு லாங் ஷாட். தூரத்தில் அவள் இருக்கிறாள்.

நடக்கிறாளா , மிதக்கிறாளா என்று தெரியவில்லை.  காற்றோடு கை கோர்க்கும் `கூந்தல், அலைபாயும் மேலாடை...தேவதை மாதிரி இருக்கிறாள்....ஒரு வேளை உண்மையாவே தேவதையோ என்று சந்தேகம் கொள்கிறான்...

அணங்கு கொல் ?

இன்னும் கொஞ்சம் கிட்ட போகிறான். கொஞ்சம் க்ளோஸ் அப் ...இல்லை...தேவதை இல்லை...அவள் அசைந்து வருவது தெரிகிறது...அழகான மயில் போல் இருக்கிறாள்...

ஆய் மயில் கொல் ?

இன்னும் கொஞ்சம் கிட்ட போகிறான்...இன்னும் கொஞ்சம் க்ளோஸ் அப் ....

இல்லை, மயில் இல்லை...காதில் கம்மல் போட்டு இருக்கிறாள்...மயில் கம்மல் போட்டு இருக்குமா ? இவள் மானுடப்  பெண் தான்

மாதர் கொல்  ?

பாடல்

அணங்கொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொன் மாலுமென் னெஞ்சு.


கொஞ்சம் பொருள் பிரிக்கலாம்

அணங்கு கொல் ஆய் மயில் கொல்லோ கனங் குழை
மாதர் கொல்  மாலும் என் நெஞ்சு


பொருள்


திருக்குறள் - ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்


திருக்குறள் - ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்

ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப்படும். 


உலகிலேயே மிக உயர்ந்த பொருள் எது என்று கேட்டால் யாரும் தயங்காமல் சொல்லும் பதில் அவர்களுடைய உயிர் தான். அதை விட சிறந்த பொருள் ஒன்று இருக்கிறது என்கிறார் வள்ளுவர். 

அது தான் ஒழுக்கம்.

ஒழுக்கம் உயர்ந்தது. சிறந்தது. அது எவ்வளவு சிறந்தது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் அது உயிரை போன்றது. ஏன் என்றால் போனால் வராது. 

சரி, ஒழுக்கம் உயிரை போன்றது என்று சொல்லி இருக்கலாமே , அது ஏன் உயிரினும் என்று உம்மை சேர்த்து சொல்லி இருக்கிறார் வள்ளுவர் ? 

காரணம் இருக்கிறது. 

உயிர் போன பின் நமக்கு வலி இல்லை. ஒரு வேளை போகும் போது வலிக்கலாம். ஆனால் ஒழுக்கம் போன பின்பும் நாம் வாழ வேண்டி இருக்கும். அது மிகுந்த வேதனையை தரும். எனவே, ஒழுக்கம் உயிரினும் மேலானாதாகக் கருதப்படும். 

அது என்ன விழுப்பம் ? 

விழுப்பம் என்றால் சிறந்தது, உயர்ந்தது என்று பொருள். 
 
வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் என்பார் மணிவாசகர். வேதத்தின் சிறந்த பொருள் அவன் என்ற அர்த்தத்தில். (முழுப் பாடலும் கீழே) 

ஒழுக்கம் சிறப்பை தரும். உயிர் சிறப்பை தராது. எத்தனையோ பேர் உயிரோடு இருக்கிறார்கள். யாருக்குத் தெரியும் ? 

உயிர் இருக்கும் வரை தான் நமக்கு பேர், வணக்கம், மரியாதை எல்லாம். உயிர் போய் விட்டால் "பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு " என்று பட்டினத்தார் கூறியது போல நாம் பிணம். ஆனால் ஒழுக்கத்தோடு இருந்தால், உயிர் போன பின்னும், நம் பேர் நிலைத்து நிற்கும். வாழும் காலம் மட்டும் அல்ல, அதற்க்கு பின்னும் நமக்கு சிறப்பை தருவதால், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் 

வீடு தீபிடித்துக் கொண்டால், போட்டது போட்டபடி உயிரை காத்துக் கொள்ள வெளியே ஓடுவோம். உயிரை விட எதுவும் பெரியது அல்ல. எனவே, மற்றவை போனாலும் பரவாயில்லை, உயிரை காத்துக் கொள்ள ஓடுகிறோம்.

உயிரா ஒழுக்கமா என்ற கேள்வி வந்தால் ? வள்ளுவர் விடை தருகிறார் ...ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 

ஓம்புதல் என்றால் பாதுகாத்தல். உயிரை பாதுகாக்க வேண்டும். உயிரினும் ஓம்பப்படும் என்று கூறியதால், அதைவிட கவனமாக, உயிரை விட கவனமாக ஒழுக்கத்தை காக்க வேண்டும்.. 




திருவெம்பாவை பாடல் 


ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தென்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

(திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார் )


Monday, April 15, 2013

இராமாயணம் - எனக்கு நீ செய்யத்தக்க கடன் எல்லாம்

இராமாயணம் - எனக்கு நீ செய்யத்தக்க கடன் எல்லாம்


ஒரு முறை ஒரு பெரிய பணக்காரன் ஒரு ஜென் துறவியிடம் ஆசீர்வாதம்   வாங்கச் சென்றான்.

அந்த ஜென் துறவி "முதலில் நீ சாவாய் , அப்புறம் உன் மகன் சாவான், அப்புறம் உன் பேரன் சாவான்" என்று ஆசீர்வாதம் பண்ணினார்.

பணக்காரனுக்கு ரொம்ப கோவம்." என்ன குருவே இப்படி சொல்றீங்க ... ஆசீர்வாதம் வாங்க வந்தால் எல்லோரும் சாக வேண்டும் என்று சொல்கிறீர்களே " என்றான்.

அதற்கு அந்த ஜென் துறவி சொன்னார்..."யோசித்துப் பார், முதலில் உன் பேரன் இறந்து , அப்புறம் உன் மகன் இறந்து, அதற்குப் பின் நீ இறந்தால் எப்படி இருக்கும் என்று "

உலகிலேயே மிக மிக துக்ககரமான நிகழ்வு பிள்ளைகள் பெற்றோருக்கு முன் இறப்பது.

இந்திரஜித்து இறந்து விட்டான். இராவணன் களம் வந்து மகனின் சடலத்தை தேடுகிறான் . தேடி கண்டு பிடித்து அழுகிறான், புலம்புகிறான்...

அவன் பத்து தலையும் எப்படி அழுதது என்று கம்பன் பத்து பாட்டு எழுதி இருக்கிறான். இரசிகமணி டி கே சி சொல்லுவார், அடடா இராவணனுக்கு நூறு தலை  இல்லையே, இருந்திருந்தால் இன்னுமொரு தொண்ணூறு பாடல் கிடைத்திருக்குமே என்று.

இராவணன் புலம்பல், நெஞ்சை உருக்கும் பாடல்கள். தரசதன் புலம்பினான், தரசதன் இறந்ததை கேட்ட இராமன் புலம்பினான், வாலி இறந்த பின் தாரை புலம்பினாள், மண்டோதரி புலம்பினாள் இராவணன் இறந்த பின்....எல்லாவற்றையும் விட சோகம் ததும்பும் பாடல்கள் இராவணன் புலம்பல்...எப்பேர்பட்ட  வீரன்... அவன் புலம்புகிறான் ....மகன் இறப்பதற்கு தானே காரணம் என்ற எண்ணம் அவனை மேலும் வாட்டுகிறது....

பாடல்



சினத்தொடும் கொற்றம் முற்ற, இந்திரன் செல்வம் மேவ,
நினைத்தது முடித்து நின்றேன்; நேரிழை ஒருத்தி நீரால்,
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி,
உனக்கு நான் செய்வதானேன்! என்னின் யார் உலகத்து உள்ளார்?' 




பொருள்



Sunday, April 14, 2013

அபிராமி அந்தாதி - அறிவில் நிறைந்த அமுதம்


அபிராமி அந்தாதி - அறிவில் நிறைந்த அமுதம்




ஆகாய விமானத்தில் போய் இருக்கிறீர்களா ? போகும் போது வெளியே பார்த்து இருக்கிறீர்களா ? பஞ்சு பஞ்சாய் மேகம் மிதக்கும். அதன் மேல் சூரிய ஒளி பட்டு வர்ண கலவையாக மாறிக் கொண்டே இருக்கும்....ஒரு புறம் மிதந்து செல்லும் மேகம், மறு புறம் இடம் மாறிக் கொண்டே இருக்கும் சூரியன்...கண் முன்னே இனிய காட்சி மாறிக் கொண்டே இருக்கும்.விமானத்தில் இருந்து ஒரு எட்டு வெளியே போய் அந்த மேகங்களின் மேல் நடக்க ஆசையாய் இருக்கும், அதை தொட்டு பார்க்க ஆசையாய் இருக்கும்....

பறவைகள் சிறகடித்து பறக்கும் வானம், மழை மேகம் வட்டமிடும் வானம், மின்னல் கோலம் போடும் வானம்...

சூரியன், நிலவு, கோள்கள், நட்சத்திரங்கள், பரந்து விரிந்த இந்த பால் வெளி (milky way) ....விரிந்து கொண்டே போகும் இந்த வானம் ஒரு அற்புத காட்சி...

அபிராமியின் அழகுக்கு பறந்து விரிந்து அந்த வானம் கூட ஒரு எல்லை இல்லை. எல்லை இல்லாத இந்த பரந்த வெளி கூட அவளின் அழகுக்கு இணை இல்லை.

"வான் அந்த மான வடிவு உடையாள் " (அந்தம் முடிவு, எல்லை. வேதாந்தம் - வேதத்தின் முடிவு )

புலன்களுக்கு இன்பம் சேர்பவை அறிவுக்கு இன்பம் சேர்பவையாய் இருக்காது.  அறிவுக்கு இன்பம் சேர்ப்பவை புலன்களுக்கு இன்பம் சேர்பவையாய் இருக்காது. இரண்டும் சேர்ந்து கிடைப்பது அபூர்வம்.

அபிராமி "ஆனந்தமாய் அறிவாய் " இருக்கிறாள். மனதுக்கும் அறிவுக்கும் சுகம், இனிமை சேர்ப்பவள்.

அமுதம் உடலையும் உயிரையும் இணைப்பது. அதனால் தான் நாம் உண்ணும் உணவுக்கு அமுது என்று பெயர்.

அபிராமி "அமுதமாய்" இருக்கிறாள்.


எந்த புத்தகத்தை படித்தாலும், இறுதியில் அது என்ன சொல்ல வருகிறது என்று அறிய வேண்டும். ஏதோ நோக்கத்திற்காகத் தான் புத்தகங்கள் எழுதப் படுகின்றன.

நான்கு வேதங்களும் இறுதியில் சொல்லும் அர்த்தம் அபிராமி. "மறை நான்கினுக்கும் தான் அந்தமான வடிவு உடையாள்".  நான்கு வேதங்களுக்கும் அவளே முடிவு.

அப்படி பட்ட அபிராமியின் பாதம், சரணார விந்தம், இருக்கும் இடம் எது தெரியுமா ?

சுடுகாடு சாம்பல் பூத்து இருக்கும். அதற்கு தவள நிறம் என்று பெயர். அந்த காட்டை நடன அரங்கமாய் கொண்டு  நடனம் இடுபவன் சிவன். அந்த சிவனின் தலையில் அவளின் பாதம் இருக்கிறது.

அன்பின் உச்சம்...மனைவி தாயாகத், தெய்வமாகத் தெரியும் அன்பின் உச்சம்.

அன்பின் உச்சம்...கணவன் குழந்தையாகத் தெரியும் பரிவு.

அன்பின் உச்சம் ... நெற்றியில் மட்டும் அல்ல, பாதத்திலும் முத்தமிட தோன்றும்....


பாகு கனி மொழி மாது குற மகள் பாதம் வருடிய மணவாளா என்பார் அருணகிரி நாதர். எனக்காக இந்த காடு மேடு எல்லாம் அலைந்தாயா என்று அவளின் குற வள்ளியின் பாதங்களை வருடி விட்டாராம் முருகன் 


நாள் எல்லாம் ஓடி ஆடி களைத்து போன மனைவியின் பாதம் பிடித்துப் பாருங்கள்...அன்பின் இன்னொரு பரிணாமம் தெரியும்....


பாடல் 



ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.


பொருள்



Saturday, April 13, 2013

திருக்குறள் - தீயதும் இல்லாததும்


திருக்குறள் -  தீயதும் இல்லாததும் 


தீமை செய்பவர்கள் எல்லோரும் ஏதேனும் ஒரு காரணம் வைத்து இருப்பார்கள். பெரும்பாலானோர் கூறுவது வறுமை, மற்றும் ஏழ்மை. என்னிடம் ஒன்றும் இல்லை எனவே திருடினேன், கொள்ளை அடித்தேன், பணம் தருகிறேன் என்று சொன்னதால் கொலை செய்தேன், பொய் சாட்சி சொன்னேன், ஆள் கடத்தினேன் என்று சொல்லுவார்கள்.

பசி வர பத்தும் பறந்து போகும் என்று சொல்லுவார்கள்.

வள்ளுவர் சொல்கிறார், நீ இல்லை என்று தீமை செய்யாதே. உன்னிடம் பொருள் இல்லாமல் இருக்கலாம், உன்னிடம் ஒழுக்கம் இருக்கிறது, இதுவரை பிறர் பொருளை விரும்பாத நல்ல குணம் இருக்கிறது, ஞாயம் அநியாயம் அறியும் அறத்தின் பாற்பட்ட அறிவு இருக்கிறது.

இல்லை என்று தீயவை செய்தால், இந்த பொருள் மட்டும் அல்ல இந்த நல்ல குணங்களும் இல்லாமல் போகும்.

நல்ல பெயர் போய் விட்டால் அதை சம்பாதிப்பது மிக மிக கடினம். எனவே வறுமை காரணமாக தீமை செய்து இன்னும் வறுமையை சம்பாதித்துக் கொள்ளாதே.


பாடல்

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.


பொருள்



இராமாயணம் - போனானை காத்து போனான்


இராமாயணம் - போனானை காத்து போனான் 


இராமன் பதினாலு ஆண்டு கழித்து வருவேன் என்று சொல்லிவிட்டு போனான். சொன்ன பதினான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது. இராமன் வரவில்லை. ஏதோ தாமதம். இராமன் வரும் வரை நாம் இன்னும் கொஞ்ச நாள் ஆளலாமே என்று பரதன் நினைக்க வில்லை. இராமன் கானகம் போகும் போதே பரதன் சொல்லி இருந்தான்..."நீ பதினாலு ஆண்டில் வரவில்லை என்றால் தீக் குளிப்பேன்" என்று.

சத்ருக்கனா, நீ இந்த ஆட்ச்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள். நான் உயிரை விடப் போகிறேன் என்று பரதன் கூறினான்.

சத்ருக்கனன் துடித்துப் போனான்....

இந்த அரசை விட்டு, காட்டை ஆள போனவனை காத்து அவன் பின்னால் போனவனும் ஒரு தம்பி. அண்ணன் வர தாமதம் ஆகி விட்டது என்று உயிரை விடத் துணிந்தவனும் ஒரு தம்பி. 
இவர்களுக்கு இடையில், இந்த அரசை ஏற்று நடத்த நான் ஒரு தம்பி...நல்லா இருக்கு இந்த கதை....


பாடல் 

'கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் 
போனானைக் காத்து, பின்பு 
போனானும் ஒரு தம்பி; ''போனவன் 
தான் வரும் அவதி போயிற்று'' என்னா, 
ஆனாத உயிர் விட என்று அமைவானும் 
ஒரு தம்பி; அயலே நாணாது, 
யானாம் இவ் அரசு ஆள்வென்? என்னே, 
இவ் அரசாட்சி! இனிதே அம்மா!

பொருள்