+ 2 படிக்கும் போது, நான் வாசித்து ரொம்ப உணர்ச்சி வசப் பட்ட பாசுரம் இது.
காதலுக்கு ஒரு பெண்ணின் மன நிலை ரொம்பவும் சௌகரியம் என்று தோன்றுகிறது. ஒரு ஆணால் இந்த அளவு உருக முடியுமா ?
இந்த பாடலுக்கு பின்னால் இருக்கும் மனம் புரியாவிட்டால், இந்த பாடல் புரியாது.
ஒரு தாய், காதல் வசப்பட்ட தன் மகளைப் பற்றி பாடுவதாக அமைந்த பாடல்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
கங்குலும் பகலும் கண் துயி லறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்,
சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும் தாமரைக் கண் என்று தளரும்,
எங்ஙனே தரிக்கே னுன்னைவிட்டு என்னும் இருநிலம் கைதுழா விருக்கும்,
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய். இவள்திறத் தெஞ்செய்கின் றாயே
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள், கண்ண நீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்., தாமரை கண் என்று தளரும்
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு என்னும், இரு நிலம் கை துழாவி இருக்கும்
செங் கயல் பாய் நீர் திருவரங்கத்தாய் ! இவள் திறத்து என் செய்கின்றாயே ?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
சொற் பொருள்;
கங்குலும் = இரவும்
பகலும் = பகலும்
கண் துயில் அறியாள், = தூங்க மாட்டேன்கிறாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும் = கண்ணில் இருந்து தாரை தாரை தாரையாய் கண்ணீர் வழிகிறது. அதை இரண்டு கைகளாலும் இறைக்கிறாள். அவ்வளவு தண்ணீர்.
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்., = எப்போதும் சங்கு , சக்கரங்கள் என்று
கை கூப்புகிறாள்
தாமரை கண் என்று தளரும் = தாமரை கண்கள் என்று சொல்லி சொல்லி தளர்ந்து போகிறாள்
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு என்னும், = உன்னை பிரிந்து எப்படி இருப்பேன்
என்று புலம்புகிறாள்
இரு நிலம் கை துழாவி இருக்கும் = தரை எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாமல், அதை தடவி தடவிப் பார்க்கிறாள்
செங் கயல் = நல்ல மீன்கள்
பாய் நீர் திருவரங்கத்தாய் ! = பாயும் நீர் நிலைகளை கொண்ட திருவரங்கத்தை
உடையவனே
இவள் திறத்து என் செய்கின்றாயே ? = இவளை நீ என்ன செய்யப் போகிறாய்